வியாழன், 8 மார்ச், 2018

மாற்றம் பெற வேண்டியது யார்?

நம்மைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தை மாற்ற முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல.. திருந்த வேண்டியது நாம் தான்.

ரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்னியாசி வந்தார். அவர் செல்வந்தனை வந்து பார்த்தார். அவனுக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்றும், அதைக் குணப்படுத்த பச்சை நிறத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாது என்றும் கூறி விட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டை விட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே!

பச்சைப் பெயிண்டையும், பிரஷ்ஷையும் வாங்கிக் கொடுத்து, பல வேலையாட்களை வைத்து அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிக்கச் சொல்லிவிட்டான். கொஞ்ச நாளில் அவன் போகும் வழியில் எல்லாம் பச்சை நிறமாக காட்சியளித்தன.

சில மாதம் கழித்து சன்னியாசி அந்த ஊருக்குத் திரும்பி வந்தார். செல்வந்தனின் ஆட்கள் அவருக்கும் பச்சை நிற பெயிண்டை அடிக்கப் போனார்கள். அவர், ‘உங்கள் முதலாளியிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்றார். அவர்களும் அழைத்துச் சென்றனர்.

செல்வந்தன் சன்னியாசியை மகிழ்ச்சியோடு வரவேற்றான்.

‘இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?’ என்று சன்னியாசி கேட்டார்.

‘நீங்கள் தானே நான் பச்சை நிறத்தைத் தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாது என்றீர்கள். அதனால் தான் அப்படிச் செய்தேன்’ என்றான் செல்வந்தன்.

சன்னியாசி சிரித்து விட்டு, ‘ஒரு நூறு ரூபாய் கொடுத்து, பச்சைக் கண்ணாடி வாங்கி அணிந்திருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருட்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இருக்காது. உலகம் முழுமைக்கும் உன்னால் பச்சை பெயிண்ட் அடிக்க முடியுமா?’ என்றார்.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் செல்வந்தனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக, உலகத்தை மாற்ற முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல.. திருந்த வேண்டியது நாம் தான்.