சனி, 22 ஜனவரி, 2011

உலக தொழுநோய் ஒழிப்பு நாள்

உலக தொழுநோய் ஒழிப்பு நாள் - தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கைகள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தொழுநோய் ஒழிப்பு தினத்திலும், இந்நோயால் பாதிக்கப்பட்டோரிடையே ஒருங்கிணைப்புக்கு புனிதமான அணுகுமுறையை உறுதி செய்யவும் வலியுறுத்தப்படும்.

தொழுநோய் ஏற்பட்டவர்களுக்கு முகம் பாதிப்புக்குள்ளாவதுடன் தோல், நரம்புகளும் பாதிக்கப்படுவதால் அகோரமான தோற்றம் ஏற்படுகிறது.

சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவரை கண்கள், கைகளும் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய் தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை சமுதாயத்தில் இருந்து புறக்கணிக்கும் நிலை உள்ளது. எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்நோய் ஏற்பட்டவர்கள் சிறப்பு உடைகளை அணிவதுடன் பொதுமக்கள் புழங்கக்கூடிய சந்தை, கோயில்கள் போன்ற இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், இந்நோயை குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் கை, கால்கள் ஊனம் அடைவதில் இருந்து தடுக்கலாம்.

உலக அளவில் தொழுநோய் பரவு விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 விழுக்காடு குறைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழுநோய் குறித்து மக்கள் உடனடியாக தெரிவிப்பதுடன், இந்நோயை விழிப்புணர்வுடன் இருந்தால் குணப்படுத்தலாம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

தொழுநோயைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், அரசும் பல தடுப்பு மற்றும் குணப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொழுநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் நோய் குறித்த பிரசாரம் செய்வதுடன் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவதற்கும் விழிப்புணர்வு அவசியமாகிறது.

தொழுநோயை ஒழிக்க நடவடிக்கைகள்:

தொழுநோய் என்பது ஒரு பொது சுகாதார பிரச்சினையாக உள்ள ஊரகப் பகுதிகளில் அரசின் ஆதரவுடன் இந்நோயை ஒழிக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு தொழுநோயாளிக்கும் சிகிச்சை கிடைப்பதற்கு முழு அளவிலான ஒருங்கிணைப்பு தேவை. இதன்மூலம் இந்நோயை முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

தொழுநோயை முற்றிலுமாக போக்குவதற்கு, ஆதரவு குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டியது அவசியம்.

தொழுநோய் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவிப்பதோடு, விரைவான சிகிச்சை எடுத்துக் கொள்தல் வேண்டும். தொழுநோய் குறித்த கருத்து உலக அளவில் மட்டுமல்லாது, உள்ளூர் நிலையிலும் மாற வேண்டும்.

தொழுநோயை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதற்குரிய புதிய சூழ்நிலை நோயாளிகளுக்கு ஏற்பட வேண்டியதும் அவசியம்.

மல்டி டிரக் தெரபி சேவைகள் அனைத்து தொழுநோயாளிகளுக்கும் தடையற்ற வகையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். எளிதான, நட்புரீதியான மருந்து டெலிவரியும் அவசியமாகிறது.