வியாழன், 8 மார்ச், 2018

உலகைச் சுற்றி... 8.3.2018

* ஈரான் தனது ஏவுகணை உற்பத்தியை 3 மடங்காக உயர்த்தி இருப்பதாக அதன் மூத்த ராணுவ தளபதி ஒருவர் தகவல் வெளியிட்டு உள்ளார்.

* வியட்நாம் போருக்கு பின்னர் இப்போது முதன்முறையாக அமெரிக்காவின் விமானம்தாங்கி போர்க்கப்பல், வியட்நாமுக்கு சென்று உள்ளது. இது சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா கூறுகிறது.

* இலங்கையில் பெரும்பான்மை புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையேயான மோதல் காரணமாக நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு மத்தியிலும் அங்கு மசூதிகள் மீதும், இஸ்லாமியர்களின் வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் நடந்து உள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து கண்டி மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால், அணு ஆயுதங்களை கை விடத்தயார் என்கிற அளவுக்கு வடகொரியா இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் வெளியிட்டு உள்ளது. வடகொரியா உண்மையான ஈடுபாட்டுடன் இப்படி கூறுகிறது என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.

* அமெரிக்காவில் இந்திய என்ஜினீயர் சீனிவாஸ் குச்சிபோட்லா, இனவெறி தாக்குதலில் கொல்லப்பட்டதில் கைதான அந்த நாட்டின் கடற்படை முன்னாள் வீரர் ஆதம் புரிண்டன், தன் மீதான குற்றச்சாட்டை கன்சாஸ் கோர்ட்டில் நேற்று ஒப்புக்கொண்டார். அவரது தண்டனை விவரம், மே மாதம் 4–ந் தேதி அறிவிக்கப்படும். அவருக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.