வெள்ளி, 31 மே, 2019

எங்கே... எப்படி... எப்போது... ஆரோக்கியத்தின் முதல் எதிரியான புகையிலை வளர்ந்த கதை!

புகையிலை குறித்த ஒரு விளம்பரம் எல்லோருக்கும் நினைவிருக்கும். ``நான்தான் முகேஷ். ஒரு வருஷமா குட்கா தின்னேன், இப்போ வாய் கேன்சருக்கு ஆபரேஷன் செய்யப் போறாங்க” என்கிற முகேஷின் குரலைத் தொடர்ந்து ஒலிக்கும் மருத்துவத்தின் குரல்  ``சோகம் என்னன்னா முகேஷை எங்களால காப்பாத்த முடியல. அவருக்கு வயசு 24” .

போன நூற்றாண்டில் சிகரெட்  புகைப்பது ஒரு வித குற்ற சம்பவமாகப் பார்க்கப்பட்டது. மக்கள் மறைந்தே சிகரெட்டை புகைத்தார்கள். 21-ம் நூற்றாண்டில் நாகரிக வளர்ச்சியின் காரணமாக  சிகரெட், தனிமனித  ஸ்டைல் ஆனது. திரைப்படங்களில் நாயகர்கள் சிகரெட்டோடு தோன்றி சிகரெட் குறித்த ஒரு ஈடுபாட்டை மக்களின் மீது தெரிந்தோ தெரியாமலோ திணித்திருந்தார்கள். 

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த சிகரெட் எப்படி உலகமெங்கும் வந்தது என்பதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே புகையிலை பயன்பாடு இருந்து வருவதாக வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். ஐரோப்பிய மக்கள் புகையிலையை கடவுளின் கொடை என நினைத்திருந்தார்கள். வலி நிவாரணியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். காயங்கள், பல்வலி, இன்னபிற உபாதைகளுக்கும் மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பண்டமாற்று முறையில் புகையிலையைக் கொடுத்து பொருள்களை வாங்கியிருக்கிறார்கள். புகையிலையை ஆபத்தான பொருள் என அப்போது யாரும் உணரவில்லை. புகையிலை சத்தமில்லாமல் பல காரியங்களை ஆதிகாலத்திலிருந்து நிகழ்த்தியிருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால் புகையிலை பல நாடுகளை உருவாக்கியிருக்கிறது, பணக்காரர்களை உருவாக்கியிருக்கிறது. வல்லரசுகளை உருவாக்கியிருக்கிறது.
கிபி 1492-ம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஐரோப்பாவின் சான் சால்வடார் தீவுக்கு வருகை புரிந்த பொழுது, அம்மக்கள் இலை போன்ற ஒன்றை மருந்தாக எடுத்துக்கொள்வதைப் பார்க்கிறார். அந்த இலையைப் பயன்படுத்தியதும் மக்கள் குடிகாரர்களைப் போல நடந்து கொள்வதை கவனிக்கிறார். புகையிலையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு அதன் விளைவுகளைக் கண்டறிந்தார். உலகில் முதன் முதலில் புகையிலை என்பதைக் கண்டறிந்தவர் கொலம்பஸ். ஆனால், பெரும்பாலான ஐரோப்பியர்கள் 16-ம் நூற்றாண்டின் மத்தியில் புகையிலையின் முதல் சுவையைப் பெறவில்லை, பிரான்சின் ஜீன் நிகோட் போன்ற சாகசக்காரர்களும், தூதர்களும் புகையிலையின் பயன்பாட்டை மற்ற நாடுகளுக்குப் பிரபலப்படுத்தத் தொடங்கினார்கள். புகையிலை 1556-ல் பிரான்சிற்கும், 1558-ல் போர்ச்சுக்கல், 1559-ல் ஸ்பெயினிலும் அறிமுகப்படுத்தப்பட்டது, 1565-ல் தொடக்கத்தில்  இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
அதன் பிறகான காலகட்டத்தில் அதாவது 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் புகையிலை உலகம் முழுமைக்கும் பரவ ஆரம்பித்தது. லண்டனைச் சார்ந்த கிங் ஜேம்ஸ் என்கிற ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட வெர்ஜீனியா என்கிற கம்பனி தன்னுடைய காலனியை ஜேம்ஸ் டவ்னில்  நிறுவியது. (தற்போது அந்த நாடு வெர்ஜீனியா என்றே அழைக்கப்படுகிறது.) அங்கு கண்ணாடிப் பொருள்கள், துணி உற்பத்தி போன்ற தொழில்களில் ஈடுபட்டது. ஆனால், அதற்கான லாபத்தை அந்த நிறுவனத்தால் பெற முடியவில்லை. லாபமில்லாமல் இயங்கிய வெர்ஜீனியா நிறுவனத்துக்கு 1612-ம் ஆண்டு ஜான் ரொபைல் என்கிற ஆங்கிலேயர் தென் அமெரிக்காவில் இருந்து புகையிலை விதைகளைக் கொண்டு வந்து வெர்ஜினியா மூலமாக உற்பத்தி செய்கிறார். அந்தக் காலகட்டத்தில் புகையிலைப் பொருள்களை உற்பத்தி செய்கிற உரிமையை ஐரோப்பாவின் ஸ்பானிஷ் நாடு வைத்திருந்தது. ஸ்பானிஷ் அல்லாத வேறு யாரும் புகையிலை விதைகளை வாங்க முடியாது. அப்படி மீறி புகையிலை விதைகளை ஸ்பானிஷ் அல்லாதோருக்கு விற்பனை செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்குக் கட்டுப்பாடுகளை வைத்திருந்தது. ஜான் ரொபைல் மூலமாகப் பெற்ற விதைகளை வெர்ஜீனியா நிறுவனம் தங்களுடைய காலனியான ஜேம்ஸ் டவுனில் பயிரிடுகிறது. அப்போதும் கூட அவர்களால் புகையிலை உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியாமல் போகிறது. 1619-ம் ஆண்டு அடிமைகளாகக் கொண்டு வந்த மக்களைப் பயன்படுத்தி உற்பத்தியை மீண்டும் தொடங்குகிறது. ஜேம்ஸ் டவுன், வெஜினியா, ஓல்ட் யூரோப்பியன் செட்டில்மென்ட் ஆகிய இடங்களில் புகையிலை உற்பத்தியை விரிவாக்குகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில் புகையிலை உற்பத்தியில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்த தொடங்குகிறது. 1660-ம் ஆண்டுக்குப் பிறகு  மிக அதிகமான புகையிலையை வெர்ஜீனியா உற்பத்தி செய்தது. வெர்ஜினா, மேரிலேண்ட், கரோலினா ஆகிய மாகாணங்கள் முழுவதுமாக புகையிலை காலனி என்றே அழைக்கப்பட்டது. 

1600 களின் முற்பகுதியில் இருந்து கச்சா வடிவத்தில் இருந்த சிகரெட்டுகள், உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமெரிக்காவில் பரவலாக பிரபலமடைந்தன.  1800 களின் முற்பகுதி வரை சிகார்கள் பிரபலமடையவில்லை. அப்போது 'சுவிங்கம்' வடிவிலான புகையிலை சந்தையில் அதிக வரவேற்பைப் பெற ஆரம்பித்தது. சிகார் மற்றும் சிகரெட்டுகள் கைகள் மூலமே தயாரிக்கப்பட்டு வந்தன. 1881 ஜேம்ஸ் புச்சனான்  (James Buchanan)  என்பவர் “ BONSACK MACHINE” என்னும் சிகரெட் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் சிகரெட்டுகளின் உற்பத்தி பல மடங்காக உயர்ந்தது. ஜேம்ஸ் புச்சானான் நிறுவனம் முதல் சிகரெட்  DUKE OF DURHAM  என்கிற பெயரில் விற்பனைக்குக் கொண்டு வந்தது.  DUKE  நிறுவனம் 1882-ம் ஆண்டு 9.8 மில்லியன் சிகரெட்டுகளை உற்பத்தி செய்தது. 1884-ம் ஆண்டு DUKE நிறுவனம் மேலும் இரண்டு புதிய சிகரெட் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கியது. இதில் ஒரு இயந்திரம் 10 மணி நேரத்துக்கு 1,20,000 சிகரெட்டுகளை தயாரித்தது. அந்த வருடம் DUKE நிறுவனம் 744 மில்லியன் சிகரெட்டுகளைத் தயாரித்தது. இது 1883-ம் ஆண்டு அமெரிக்காவின் ஒட்டுமொத்த சிகரெட் உற்பத்தியின் அளவைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. புகையிலை இருந்தால் மட்டும் போதும் சிகரெட்டுகளை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என்பதால் சிகரெட் உலகின் நம்பர் ஒன் புகையிலை தயாரிப்பாக மாறியது. முதல் உலகப் போரின் பொழுது சிகரெட்டுகள் ராணுவ வீரர்களுக்கு சோல்ஜர்ஸ் ஸ்மோக் என்கிற பெயரில் விநியோகிக்கப்பட்டது. 2-வது உலகப் போரின்போது சிகரெட் பாக்கெட்டுகள் ராணுவ வீரர்களுக்கு ரேஷன் முறையில் வழங்கப்பட்டன. 
சிகரெட் பாதிப்புகள் குறித்து 19-ம் நூற்றாண்டு வரை பெரிய விழிப்பு உணர்வுகளோ, விளம்பரங்களோ வராமலே இருந்தது. 1900-ம் ஆண்டு சுமார் 4.4 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  19-ம் நூற்றாண்டில்தான் பல நிறுவனங்கள் சிகரெட் தயாரிப்பில் இறங்கின.  20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இன்றைக்கு சிகரெட் தயாரிப்பில் உலகின் முதல் நிறுவனமாக இருக்கக் கூடிய இம்பீரியல் நிறுவனம் உருவாக்கப்பட்டது. சுமார் 13 நிறுவனங்களைச் சேர்த்து ஒரு நிறுவனமாக வளர்ந்தது. இதை அப்போது முன்னணியில் இருந்த Buck Duke  நிறுவனம் எதிர்த்தது. ஆனாலும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் இரண்டு நிறுவனமும் இணைந்து தங்களுடைய சிகரெட் பொருள்களை  British American Tobacco Company என்கிற பெயரில் வெளிநாடுகளில் விற்பனை செய்வதென ஒப்பந்தம் செய்துகொண்டனர். தொழில் போட்டியைச் சமாளிக்க 1902-ம் ஆண்டு  பிலிப்ஸ் மோரிஸ் நிறுவனம் இப்போது முன்னிலையில்  இருக்கிற மார்ல்போரோ சிகரெட்டை தனி பிராண்டாகஅறிமுகப்படுத்தியது. 

பல நூற்றாண்டுகளாக `நிக்கோடின்' மருந்துப் பட்டியலில் இருந்து வந்தது. 1906-ம் ஆண்டின் ஃபெடரல் உணவு மற்றும் போதைப்பொருள் சட்டம், கலப்பின உணவுகள் மற்றும் மருந்துகளின் விற்பனையைத் தடை செய்தது. மேலும் புகையிலை, நிகோடின் மருந்து பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டன. 1914-ம் ஆண்டு யு.எஸ். பார்மகோபீயா பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகள் மற்றும் தயாரிப்புகளை ஒரு மருந்து வரையறையைக் கொண்டு வந்தது. அதில் நோயைக் குணப்படுத்தவோ, குறைக்கவோ அல்லது தடுக்கவோ பயன்படுத்தும்போது மட்டும் புகையிலை சேர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியது. 20-ம் நூற்றாண்டில் சிகரெட் குறித்த விழிப்பு உணர்வுகளைப் பல நாடுகளும் நடத்தத் தொடங்கின. ஜெர்மன் அரசு உதவியுடன் 1930 இருந்து 1940 வரை விழிப்பு உணர்வு குறித்த விஷயங்கள் நடைபெற்றன. ஆனால் மக்கள் சிகரெட் குறித்த விழிப்பு உணர்வுகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 1940-ம் ஆண்டு ஜெர்மன் மருத்துவர்கள் சிகரெட் புகைப்பதால் நுரையீரல் புற்று நோய் வரும் என மருத்துவ ரீதியாக அறிவித்தார்கள். இதன் மூலம் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதை பல அரசுகளும் தடை செய்தன. 1950-ம் ஆண்டு ஆங்கிலோ அமெரிக்கன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஜெர்மன் மருத்துவர்கள் கூறியதை உறுதி செய்தனர். ஆனால், சிகரெட் உற்பத்தியும், சிகரெட் புகைப்பதும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாமல் போனது. சிகரெட் குறித்த விளம்பரங்கள் தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்டன. சிகரெட் மற்றும் புகையிலையின் விளைவுகளை உணர்ந்த பிரிட்டன் அரசு 1965-ம் ஆண்டு சிகரெட் குறித்த எந்த விளம்பரங்களையும் ஒளிபரப்பக் கூடாது என்று தடை விதித்தது. இதைத் தொடர்ந்து 1971-ம் ஆண்டு அமெரிக்காவும் தொலைக்காட்சி விளம்பரங்களைத் தடை செய்தது. 1986-ம் ஆண்டு கியூபா அதிபர் பிடல் கேஸ்ட்ரோ சிகார் புகைப்பதைக் கைவிட்டார். அவர் கியூபாவில் தயாரிக்கப்பட்ட கியூபா சிகார் என்கிற பிராண்டை பயன்படுத்தினார். 1988-ம் ஆண்டு ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் 7,10,000 பேர் புதிதாக  புகை பிடிக்க ஆரம்பிக்கிறார்கள் என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது. 1988-ம் ஆண்டு கனடா நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் தொடங்கப்பட்டு 40-வது  ஆண்டு தினத்தில் 1987 ஏப்ரல் மாதம் 7 தேதி உலகின் முதல் புகையிலை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டது. 1988-ம் ஆண்டு முதல் மே மாதம் 31-ம் தேதி ஒவ்வொரு வருடமும் புகையிலை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2001 வருடம் இந்திய அரசு பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்தது. 

புகைப்பழக்கத்தை விட்டால் 10 ஆண்டுகள் கூடுதல் ஆயுள் கிடைக்கும்!


இந்தியாவில் புகையிலை 17-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய புகையிலையானது உலகம் முழுவதிலும் சுவை மற்றும் மென்மையான தன்மைக்குப் பிரபலமானது; தவிர, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் இந்திய புகையிலைக்கு பெரும் தேவை இருக்கிறது. இந்தியாவில் ஆண்டு உற்பத்தி சுமார் 830,000 மெட்ரிக் டன்கள்; உலகம் முழுவதும் வருடத்துக்கு 5 மில்லியன் மக்கள் சிகரெட் மற்றும் புகையிலையால் இறக்கிறார்கள்.  சிகரெட் மற்றும் புகையிலை குறித்த விளைவுகளை உணர்ந்த நாடுகள் ஒன்றின் பின் ஒன்றாகப் புகையிலை பொருள்களைத் தடை செய்தன. ஆனாலும் இன்றைய அளவில் புகையிலையை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்துகொண்டேதானிருக்கின்றன. 
இன்றைய தேதியில் உலக புகையிலை உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் இருக்கிற நாடுகள் 
சீனா...
பிரேசில்...
இந்தியா......
பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையிலும் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இதை எப்படி தடுத்து நிறுத்துவது? நம் ஒவ்வொருவரும் புகையிலைப் பொருள்களை எடுத்துக்கொள்ள மாட்டோம் என உறுதிமொழி எடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும். 

செய்வீர்களா... ?
 

வியாழன், 30 மே, 2019

புகைப்படத்துக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகு - உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகிறது

‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகை, ஸ்டீவ் பைரோ தத்ரூபமாக எடுத்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.
டொராண்டோ:

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஸ்டீவ் பைரோ. இயற்கை சார்ந்த இடங்கள் மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர் அண்மையில் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருந்தார். அவர் அங்குள்ள பறவைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்தார். அப்போது, ‘புரூஸ்’ என பெயரிடப்பட்ட கழுகு ஒன்றை புகைப்படம் எடுக்க தயார் ஆனார்.

பொதுவாக இதுபோன்ற புகைப்படங்களை எடுக்கிறபோது, பறவைகள் அந்த இடத்தில் இருந்து பறந்து சென்றுவிடும் அல்லது அப்படியே இருக்கும். ஆனால் ‘புரூஸ்’ கழுகு, ஸ்டீவ் பைரோ தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்தது, அவரை நோக்கி பறந்து வந்தது. நேர்கொண்ட பார்வையுடன், 2 இறக்கையும் தண்ணீரில் உரசியபடி‘போஸ்’ கொடுப்பது போல நேர்த்தியாக பறந்து வந்தபோது, ஸ்டீவ் பைரோ அதனை தத்ரூபமாக படம் பிடித்தார். அதன் பின்னர் அவர் அந்த படத்தை ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைத் தளங்களில் பதிவிட்டார்.

தற்போது அந்த படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் ஸ்டீவ் பைரோவுக்கு பெரும் பெயரும், புகழும் கிடைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “இந்த புகைப்படம் மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்பதை நான் இன்னும் அறியவில்லை” என்றார்.

திங்கள், 27 மே, 2019

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, ராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

பிரெக்சிட் விவகாரத்தில், பிரிட்டன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற முடியாததால் அந்நாட்டு பிரதமர் தெரசா மே,  ஜூன் 7-ம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் அரசு வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மூன்று முறை கொண்டு வரப்பட்ட ஒப்பந்தம் தோல்வியை தழுவியதால், பிரதமர் தெரசா மே ராஜினாமா முடிவை எடுத்துள்ளார். 

இது தொடர்பாக லண்டனில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமராக பணியாற்ற இருமுறை கிடைத்த வாய்ப்பை வாழ்நாளின் கவுரவமாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். தான் எவ்வித கவலையும் இல்லாமல் நன்றியுணர்வோடு விடைபெற விரும்புவதாக கண்ணீர் மல்க தெரிவித்த தெரசா மே, புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பதவியில் நீடிப்பேன் எனவும் தெரிவித்தார்.

எவரெஸ்ட் சிகரத்தில் 24ஆவது முறையாக ஏறி நேபாள மலையேற்ற வீரர் சாதனை...!

எவரெஸ்ட் சிகரத்தில் 24ஆவது முறையாக ஏறி நேபாள மலையேற்ற வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

கமி ரீட்டா ஷெர்பா என்ற அந்த வீரர், இதுவரை 23 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியிருந்த நிலையில், தற்போது 24ஆவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு நேபாள தலைநகர் காத்மண்டுவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதனிடையே எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயற்சித்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் பெயர் ராபின் ஹெய்னஸ் எனவும், ஆக்சிஜன் பற்றாக்குறைவாலும், உடல் சோர்வு காரணமாகவும் அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 23 மே, 2019

போயிங் விமான விபத்தில் கணவர் பலி - ரூ.1,925 கோடி இழப்பீடு கேட்டு பெண் வழக்கு

பாரீஸ்:

எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால், நாடு முழுவதும் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.


இந்த நிலையில், எத்தியோப்பியாவில் நடந்த விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,925 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம்) இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர கோர்ட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 மே, 2019

சண்டையிட விரும்பினால் ஈரான் முடிந்து விடும் - டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா, விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து  அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இதையடுத்து அணு ஆயுத ஒப்பந்தத்தில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது. இதில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது என்று சமீபத்தில் கூறியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.


சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகணை அமைப்புகளையும், போர் கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்தது. வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் இரு  நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா? என்ற அச்சம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் கதை  முடிந்து விடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். டிரம்ப் தனது டுவிட்டரில்,   'ஈரான் எங்களுடன் சண்டையிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும். அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது' என பதிவிட்டுள்ளார். 

எவரெஸ்ட் சிகரத்தில் 24வது முறை ஏறிய நேபாள வீரர்- தனது உலக சாதனையை தானே முறியடித்தார்

நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

காத்மாண்டு:

நேபாளத்தின் சொளுகும்பு மாவட்டம், தாமே கிராமத்தைச் சேர்ந்தவர் காமி ரீட்டா ஷெர்பா (வயது 50). பிரபல மலையேற்ற வீரரான இவர், இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8,848 மீட்டர்) இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார். கடந்த 15-ம் தேதி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

இந்நிலையில், இன்று மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் ஷெர்பா. இதன்மூலம் 24 முறை எவரெஸ்டில் ஏறி, தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

செவன் சமிட் டிரக்ஸ் என்ற நிறுவனத்தில் மலையேற்ற வழிகாட்டியாக பணியாற்றி வரும் காமி ரீட்டா ஷெர்பா, இந்த முறை இந்தியாவைச் சேர்ந்த போலீஸ் குழுவிற்கு வழிகாட்டியாக எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்றார். எவரெஸ்ட் உச்சியை வெற்றிகரமாக அடைந்த பின்னர், அவர்கள் அனைவரும் பத்திரமாக அடிவார முகாம்களுக்கு திரும்பினர்.


1994ம் ஆண்டில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரும் ஷெர்பா, 1995ல் மலையேறவில்லை. அந்த ஆண்டில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் உயிரிழந்ததால், மலையேறும் முயற்சியை கைவிட்டார். ஆனால் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட அவர், தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார். குறைந்தது 25 முறையாவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பதே இவரது விருப்பம்.

பழங்குடியின மக்களான ஷெர்பாக்கள் மலையேறுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால், மலையேற்ற வீரர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

சிகரெட் புகையை விட ஆபத்தானதா அகர்பத்தி?

பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் பூஜை செய்யும் நேரங்களில் அகர்பத்தி பொருத்திவைப்பது வழக்கம். நல்ல மணம் மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சியை தருவதால் அகர்பத்தியை வீடுகள் மற்றும் கோயில்களில் ஏற்றி வைக்கின்றனர். 

ஆனால், அகர்பத்தியில் இருந்து வரும் புகையை சுவாசிப்பது உடலில் பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2015ம் ஆண்டு சீனாவின் Springer's journal Environmental Chemistry, அகர்பத்தி புகையை சிகரெட் புகையுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்மூலம், அகர்பத்தியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் பல இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சிகரெட்டில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் அகர்பத்தியிலும் இருப்பது தெரியவந்துள்ளது.

காற்றோட்டம் இல்லாத அறைகளில், அதிக அளவில் அகர்பத்திகளை ஏற்றுவது DNAவில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், mutagenic, genotoxic, cytotoxic போன்ற நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் பொருட்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் பல அகர்பத்தியில் இருப்பதால், அதனை மிக கவனமாக பயன்படுத்தவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள், புகையிலை, சிகரெட் போன்றவற்றை விட ஆபத்தானதா என்பது குறித்து இன்னும் தெளிவாக கூறவில்லை.

மாணவர்களின் ரூ.278 கோடி கல்விக்கடனை ஏற்பதாக அறிவித்த கோடீஸ்வரர்! 

கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த விருந்தினர் ஒருவர் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் ரூ.278 கோடி கல்விக் கடனையும் ஏற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் தலைநகரான அட்லாண்டாவில் உள்ளது புகழ்பெற்ற Morehouse கல்லூரி. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக Robert F Smith அழைக்கப்பட்டிருந்தார். Vista Equity Partners என்ற பங்குச்சந்தை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார். இவர் கருப்பினத்தை சேர்ந்தவர் ஆவார்.

விழாவில் உரையாற்றிய Robert F Smith, இந்த நாட்டில் 8 தலைமுறைகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம், எங்கள் குடும்பத்தின் சார்பாக உங்களது வாழ்வில் சிறிய அளவில் எரிபொருளை நாங்கள் தர உள்ளோம். உங்கள் அனைவரின் கல்விக் கடனையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், நீங்கள் கல்விக் கடனை செலுத்தத்தேவையில்லை என்று அதிரடியாக அறிவித்தார்.

ஸ்மித்தின் பேச்சை கேட்ட மாணவர்களும், பெற்றோர்களும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். சிலர் சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.

அந்த கல்லூரியில் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் கல்விக் கடன் இந்திய மதிப்பில் சுமார் 278 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த major aaron என்ற மாணவர் இந்த விழாவிற்கு சிறிது நாட்களுக்கு முன்னர் நான் எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு கடனை வங்கிக்கு செலுத்த வேண்டும் என ஒரு கணக்கு போட்டுப் பார்த்தேன். எனது கடன் தொகையான $2,00,000-யினை பாதி சம்பளப் பணத்தைக் கொண்டு 25 ஆண்டுகள் செலுத்த வேண்டும் என்பதை அறிந்தேன். ஆனால் இப்போது ஒரே நொடியில் எனது கடன் அனைத்தையும் ஸ்மித் அடைத்துவிடுவதாக பொறுப்பேற்றுள்ளார். என்னால் உணர்ச்சியை அடக்க முடியாமல் அழுதுவிட்டேன் என்றார்.

முன்னதாக இதே கல்லூரிக்கு 1.5 மில்லியன் டாலர்கள் அளவிற்கு ஸ்மித் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.