சனி, 10 மார்ச், 2018

‘ஏலியன்’களை நேரில் சந்தித்தால் என்ன செய்வது?

மனிதன் உள்பட இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும் என்பதுதான் இதுவரையிலான உலக நியதி.

மனிதன் உள்பட இந்த மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறந்தே தீர வேண்டும் என்பதுதான் இதுவரையிலான உலக நியதி. இந் நிலையில், கடந்த வருடம் பிப்ரவரி மாதத்தில், பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், ‘இன்னும் ஆயிரம் வருடங்களில் பூமியும், அதிலுள்ள மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினமும் அழியும்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

அந்த கணிப்பு வெளியான ஒரு வருடத்துக்குள்ளாக, ‘இன்னும் 100 வருடங்களில் பூமி அழியும்’ என்ற ஒரு அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

பூமி எப்படி அழியும் என்று ஹாக்கிங் இன்னும் விவரிக்காத நிலையில், ‘1000 வருடங்களை திடீரென்று பத்து மடங்கு குறைத்து, 100 வருடமாக குறைக்கும் அளவுக்கு இந்த ஒரு வருடத்தில் பூமியில் அப்படி என்ன நிகழ்ந்துவிட்டது?’ என்று உலகின் பல அறிவியலாளர்கள் யோசித்து வருகிறார்கள்.

புவி வெப்பயமாதல் உள்ளிட்ட ஆபத்தான பருவநிலை மாற்றங்கள், மனித இனத்தை அழித்துவிடும் ஆபத்துகள் நிறைந்த செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மற்றும் பூமியின் மீதான ஏலியன் தாக்குதல் ஆகியவற்றை பூமி அழிவுக்கான காரணங்களாக ஹாக்கிங் குறிப்பிடுவார் என்று கருதப்படுகிறது.

இவற்றில் பருவநிலை மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு எந்திரங்கள் மூலமான ஆபத்துகளை இதுவரையிலான ஆய்வுகள் மூலமாக நம்மால் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஏலியன் என்ற ஒரு இனம் இருக்கிறதா? அப்படி இருக்கும் பட்சத்தில் ‘ஹியூமனாய்டு ரோபாட்டுகள்’ போல இருக்குமா? அல்லது முற்றிலும் பரிச்சயமில்லாத வேறு வடிவத்தில் இருக்குமா? அடுத்து, அவை எப்படி இருந்தாலும், அவற்றை நண்பர்களாக பார்ப்பதா அல்லது எதிரிகளாக பாவிப்பதா? இப்படி ஏலியன்கள் தொடர்பான பல கேள்விகள் நம்மிடம் உள்ளன. இது தவிர, ஸ்டார் வார்ஸ் போன்ற திரைப்படங்களில் உள்ள கற்பனை ஏலியன்களை மட்டும்தான் நம்மில் பலருக்கும் தெரியும்.

அமெரிக்காவின் நாசா மற்றும் ஏலியன் ஆய்வு நிறுவனமான எஸ்.இ.டி.ஐ. (SETI Search for Extra Terrestrial Intelligence) ஆகியவற்றின் கடந்த பல வருட ஏலியன் ஆய்வுகளில் ஏலியன்களின் மொழியாகக் கருதப்படும் சில ரேடியோ அலைகள் மற்றும் ஏலியன் இருப்பதைக் குறிக்கும் சில மூலக்கூறுகள் என சொற்ப ஆதாரங்களே நம்மிடம் இருக்கின்றன.

இந்நிலையில், ஏலியன் ஆதாரங்கள் என்று சேகரிக்கப்படும் தகவல்களை நான்கு விதிகளைக் கொண்டு 1 முதல் 10 வரையிலான எண்ணிக்கை மூலம் உறுதி செய்யும் ‘ரியோ ஸ்கேல்’ (Rio Scale) எனும் அளவுகோல் ஒன்றை கண்டறிந்துள்ளனர் எஸ்.இ.டி.ஐ.யின் ஆய்வாளர்கள்.

அதெல்லாம் சரி, இந்த அளவுகோலின் அடிப்படையில் 5 அளவு கொண்ட ஒரு ஏலியனை திடீரென்று எதிர்கொள்ள நேர்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன செய்வது?

பூங்கொத்து ஒன்றைக் கொடுத்து ‘வாங்க ஏலியன் ஐயா, வாங்க! நல்லாயிருக்கீங்களா? என்ன சாப்பிடுறீங்க? டீயா இல்ல காபியா?’ என்று வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் செய்ய வேண்டுமா? அல்லது ஏலியனை சந்தித்த உடனே முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, ‘யார் நீ? யாரைக் கேட்டு பூமிக்குள் அடியெடுத்து வைத்தாய்? இப்போது உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று விரட்டி அடிக்க வேண்டுமா? என்பது குறித்து தற்போது வரை ஒரு தெளிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும், ‘ஏலியனீஸ்’ எனும் ஒரு மொழியில் பூமி மற்றும் மனிதர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் பூமியின் வரைபடம் மற்றும் ஆகியவை கொண்ட பயோனியர் விண்கலத்தை தூரத்து நட்சத்திரங்களுக்கு நாசா அனுப்பியுள்ளது. ஆனால் ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்ட சில விஞ்ஞானிகள் இம்மாதிரியான ஏலியன் தொடர்பு முயற்சிகள் நன்மையை விட ஆபத்தையே ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர்.

ஏனென்றால், செயற்கை நுண்ணறிவை விட பல மடங்கு சக்திவாய்ந்த தொழில்நுட்பங்களை கைவசம் வைத்திருப்பதாகக் கருதப்படும் ஏலியன்கள், நாம் பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளை அற்பமாகப் பார்ப்பது போலவே, நம்மை துச்சமாக எண்ணி துடைத்தெறியக் கூடும் என்று அச்சப்படுகின்றனர். எது எப்படி இருந்தாலும், நாசாவின் கார்ல் செக்கன் உள்ளிட்ட உலகின் பெரும்பாலான விஞ்ஞானிகள் ஏலியன் ஆய்வுகள் மனித குலத்துக்கு நன்மையையே ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.