வியாழன், 24 பிப்ரவரி, 2011

மாற்றங்களின் நிதர்சனம்

உலக சரித்திர வரலாற்றில் பல அத்தியாயங்கள் நிகழ்கால உலகின் பற்பல மாற்றங்களுக்கு வழிகோலியுள்ளது. மாற்றங்களின் காலக்கணிப்புக்கள் நிமிடங்களாக இருக்கலாம் அல்லது மணித்தியாலங்களாக இருக்கலாம் நாட்கள் மாதங்கள் ஏன்? பல வருடங்களாகக் கூட இருக்கலாம்.

மாறிவரும் உலக ஒழுக்குகளின் சாதக பாதக விடயங்களை நாங்கள் எங்கள் ஏழாவது அறிவுடன் பேசிப்பார்ப்பது இந்த வலைப்பதிவில் நான் எழுதுவது காலக்கிரமத்தின் அடிப்படையில் சிறப்பானது என்று என்னுகின்றேன்

கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் பாரம்பரிய ஆட்சிமுறைகள் மனித உறவு முறைகள், மதவழிபாட்டு அனுஷ்டானங்கள், அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வடிவங்கள் என்பன இந்த மாற்றங்களுக்கூடான வழிமுறையில் உலக ஒழுக்கின் பாதையில் விபத்துக்குள்ளாகி சிக்கி சின்னாபின்னாமாகியன நிதர்சனம்.

ஜரோப்பிய சரித்திரத்தை நோக்கும் போது தற்போதைய மாற்றங்கள் அன்று மறுமலர்ச்சி காலமாக நோக்கப்பட்டது.அன்றைய மறுமலர்ச்சி பல புதிய தலைமுறைக்கான தேர்ந்த களமாக அன்றைய காலச்சூழல் ஒத்துழைத்திருந்தது. அரசாட்சி முறைகள் மதரீதியான அடக்குமுறைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டமை பிரபுக்களுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான பாரிய வேறுபாடுகள் ஜாதி இன மொழிப் பாகுபாடுகள் என்பன மக்கள் சக்தி மூலம் பாரிய சக்தி வடிவமாக வெளிக்கொணரப்பட்டு மறுமலர்ச்சி என்ற பதத்திற்கு அர்த்தத்தை உருவாக்கி புதிய உலக ஒழுக்கிற்கு வழிகோலியது.

இதுபோல் உலக வாரலாற்றில் பல மாற்றங்களுக்கு பல கால சூழல்கள் தத்தமது பாதைகளை திறந்துவிட்டிருக்கின்றன...

விசேடமாக உலக யுத்தங்களின் பின்னரான பூகோள வரைபடங்களின் மாற்றங்களும் நடவடிக்கைகளும் சர்வதேச கட்டமைப்புக்களில் புதிய கள முனைகளையும் திறந்து விட்டன.

பல்தேசியக் கம்பனிகளின் கூட்டுக்களை போல் ஜக்கிய நாடுகளின் சபை உருவாக்கப்பட்டது வரவேற்கப்பட்டது....அன்று! எழுதியது - Friday, November 13, 2009 (http://amalathaselroyleslee.blogspot.com/2009/11/blog-post.html)


.....................................இன்று........................................
பெய்ஜிங்: துனீசியா, எகிப்தில் தொடங்கிய மக்கள் புரட்சி இப்போது பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் தொடங்கிய இப்புரட்சி லிபியாவிலும் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டமாக வலுத்துள்ளது.

இந்நிலையில் அண்டை நாடான சீனாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் உருவானது. ஆனால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். கம்யூனிஸ ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரில் திரண்டனர். பெய்ஜிங் நகரில் மெக்டொனால்ட் விடுதிக்கு எதிரில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

இணையதளம் மூலமாக பரப்பப்பட்ட இப்போராட்ட தகவலின் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு திரண்டனர். வர்த்தகப் பகுதியான வாங்புஜிங் தெருவில் ஒரு சில நிமிஷங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு காவல்துறையினர் கூட்டத்தினரை விரட்டியடித்தனர். மேலும் சிலரைக் கைது செய்தனர்.

சீன அரசு எதிர்ப்புக் குழு தலைவரான லியு ஜியோபோ-வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பரிசைப் பெற ஆஸ்லோ செல்லவும் அவரை அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து பெய்ஜிங்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்த தகவல் முதலில் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா-வில் வெளியானது. பிற்பகல் 2.10 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்களில் 2 பேரை மட்டுமே ரோந்து காவல்துறையினர் கைது செய்து வேனில் கொண்டு சென்றதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல ஷாங்காய் நகரில் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டனர். யுனான் ஷோங் சாலை மற்றும் ஹன்கோ சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தை காவல்துறையினர் தடியடி கலைத்தனர். கூட்டத்திலிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். "மல்லிகைப் புரட்சி' என்று இந்த போராட்டத்துக்கு பெயரிட்டு அதற்காக மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டதை அரசு ஓரளவு யூகித்திருந்தது. ஆனால் அது எப்படி நடக்கும் என்பதை தீர்மானிக்கும் முன்பாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை மிரளச் செய்துவிட்டனர்.

இத்தகைய போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்ய பயன்படும் இணையதளத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை அரசு தடை செய்தது. ஆனால் அமெரிக்காவிலிருந்து செயல்படும் மற்றொரு இணையதளம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு ஒன்று திரண்டனர். சீனாவில் 45 கோடி பேரிடம் இணையதள இணைப்பு உள்ளது. 5 கோடிக்கும் அதிகமான பிளாக்-குகள் இங்குள்ளன. ஆனால் அதிகாரபூர்வமற்ற வகையில் 10 கோடி பிளாக்-குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உலகில் மாற்றம் ஒன்றுமட்டுமே மாறிக்கொண்டு இருக்கும்...

நிலமெல்லாம் ரத்தம்

இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரபு தேசங்கள் என்று தனித்தனியே நாடுகள் கிடையாது. சுமார் 1350 வருடங்கள் ஒட்டாமான், துருக்கியப் பேரரசின் அங்கங்களாகவே இன்றைய அரபு தேசங்கள் அனைத்தும் இருந்தன. அதாவது, அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம். பாலஸ்தீன், ஈராக், ஈரான், லெபனான், சிரியா என்று துண்டு தேசங்கள் உருவானதெல்லாம் இரண்டாம் உலகப்போருக்கும் பிரிட்டன் விடை பெற்றதற்கும் பிறகுதான். அதற்கு முன் ஒரே பேரரசு. அதன்கீழ் பல சிற்றரசுகள். அவ்வளவுதான்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களை ஒட்டி பல்வேறு அரேபிய தேசங்கள், ஒட்டாமான் சாம்ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சுதந்திர தேசங்களாயின. பாலஸ்தீனும் அப்படியரு சுதந்திர தேசமாக ஆகியிருக்க வேண்டியதுதான். ஆகமுடியாமல் போனதன் காரணம், பிரிட்டன் உதவியுடன் யூதர்கள் அங்கே ஊடுருவி இடத்தை நிரப்பியதுதான்.

இந்தக் கோபம்தான் அரேபியர்களுக்கு. நியாயமான கோபமே என்றாலும் வேறு வழி இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கமிட்டியின் பரிந்துரையின் பேரில் ஐ.நா அறிவித்த பாலஸ்தீன், இஸ்ரேல் எல்லைப் பிரிவு நடவடிக்கையை மனத்துக்குள் ஒருவாறு ஏற்றுக்கொள்ளத் தயாராகித்தான் இருந்தார்கள். தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய யுத்தத்தைத் தொடங்குவது, முடிவு எப்படியானாலும் ஐ.நா. பிரித்துக்கொடுத்த நிலம் எப்படியும் இருக்கத்தானே போகிறது என்று அப்பாவி அரேபியர்கள் நினைத்தார்கள்.

கவனிக்கவும். இவர்கள் புரட்சிக்காரர்கள் அல்லர். கலகக்காரர்கள் அல்லர். அக்கம்பக்கத்து அரபு தேசங்களின் துணையுடன் யுத்தத்தில் பங்குபெறக் களம் சென்றவர்கள் அல்லர். மாறாக, படிப்பறிவோ, அரசியல் எண்ணமோ, வாழ வழியோகூட இல்லாத அடித்தட்டு வர்க்கத்து அரேபியர்கள். இவர்கள்தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லவோ, வழிநடத்தவோ, அறிவுரைகள் கூறவோ அன்றைக்கு யாரும் இருக்கவில்லை. அரபு இனத்தலைவர்கள் என்று அறியப்பட்ட ஒரு சிலர் யுத்தம் குறித்துச் சிந்திக்கப் போய்விட்டார்கள். இளையவர்கள் எல்லாரும் கிடைத்த ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு, ‘யூதர்களை ஒழிக்காமல் வரமாட்டேன்’ என்று டெல் அவிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டார்கள். நோயாளிகள், வயதானோர், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்தப் பெரும்பான்மை அரபுக்கள், தாம் வசித்து வந்த மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளில் வீட்டுக்குள் பதுங்கியபடியே என்ன ஆகுமோ என்று தமக்குள் எண்ணியெண்ணிப் பயந்துகொண்டிருந்தார்கள்.

பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்னையின் நவீனகால வரலாறு என்பது இந்த இடத்தி¢ல்தான் தொடங்குகிறது.

ஒரு பக்கம் அரபுகள் என்னவாகுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், இதே அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இஸ்ரேல் யூதர்களும் இதே போலத்தான் அஞ்சிக்கொண்டிருந்தார்கள். என்ன ஆகுமோ?

பெரும்பான்மை மக்களின் இந்த அச்சத்துக்கும் சிறுபான்மை வீரர்கள் மற்றும் புரட்சிக்காரர்களின் கோபம் மற்றும் துவேஷத்துக்கும் நிறைய இடைவெளி இருந்தது. எப்படி அரேபியப் புரட்சிக்காரர்கள், தமது பெரும்பான்மை மக்களின் மனநிலை என்ன என்பதைக் கேட்டறிந்துகொள்ள விரும்பவில்லையோ, அதே போலத்தான் பெரும்பான்மை யூத மக்களின் கருத்தையும் இஸ்ரேலிய அரசோ, இஸ்ரேல் ராணுவமோ அந்தத் தருணத்தில் பொருட்படுத்தவில்லை.

யுத்தம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

எகிப்து, லெபனான், ஜோர்டன், ஈராக் மற்றும் சிரியாவின் படைகள் ஒரு பக்கம் பாலஸ்தீனப் போராளிகளுக்கு ஆதரவாக நின்றன. எதிர்ப்பக்கம் இஸ்ரேல். அன்று பிறந்த இஸ்ரேல். அதற்கு முன் அவர்கள் தனியொரு தேசத்தைக் கண்டதில்லை. தனியொரு ராணுவத்தை வைத்துப் பயிற்சியளித்துப் பெரும் யுத்தங்களைச் சந்தித்ததுமில்லை. போர்க்கால நடவடிக்கைகள் என்றால் என்ன என்பதையே அந்தப் போரின் இறுதியில்தான் அவர்கள் அறியப்போகிறார்கள்.

யோசித்துப் பாருங்கள். மே 14, 1948 அன்று இஸ்ரேல் பிறந்தது. மறுநாள் அதாவது மே 15-ம் தேதி இந்த யுத்தம் ஆரம்பிக்கிறது. அதுவும் ஒரு நாள், ஒருவார, ஒரு மாத கால யுத்தமல்ல. ஒரு முழு வருடத்தை விழுங்கப்போகிற யுத்தம்.

இத்தனை தேசங்கள் தம்மை ஆதரிப்பதால் எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை, பாலஸ்தீன் போராளிகளுக்கு இருந்தது. தமது குறைந்த போர்த்திறமை, சரியான தலைமை இல்லாமை, வியூகம் வகுக்கத் தெரியாதது போன்ற அத்தனை குறைகளுமே ஒரு பொருட்டில்லாமல் போகும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஒட்டுமொத்த அரபு சமுதாயமும் இஸ்ரேலுக்கு எதிராகத் திரண்டு நிற்கும்போது நேற்று முளைத்த சுண்டைக்காய் தேசத்தால் என்ன செய்துவிட முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது இஸ்ரேலை யுத்தத்தில் தோற்கடிப்பது, ஒரு யூதர் விடாமல் அத்தனை பேரையும் பாலஸ்தீனை விட்டு ஓட ஓட விரட்டுவது. இதுதான் அரேபியர்களின் திட்டம்.

யூதர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தமது ஆண்டாண்டு காலக் கனவான தனிநாடு என்பதை அடைந்துவிட்டிருந்த மகிழ்ச்சி மேலோங்கியிருந்ததால், யுத்தம் குறித்த பயம் அவர்களிடையே பெரிதாக இல்லை. ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. தமது தேசம் தமக்கு உண்டு என்கிற எண்ணம்தான் அவர்களிடம் இருந்தது. ஒருவேளை யுத்தத்தில் தோற்க நேரிட்டால் இஸ்ரேலின் சில பகுதிகளை இழக்க நேரிடலாம். இருக்கவே இருக்கிறது ஐ.நா. சபை. ‘நீங்கள் வகுத்தளித்த நிலத்தை அபகரித்துவிட்டார்கள்; திரும்ப வாங்கிக்கொடுங்கள்’ என்று கேட்கவும் அவர்கள் சித்தமாக இருந்தார்கள்.

இதென்ன குழந்தைத்தனமாக இருக்கிறதே என்று தோன்றலாம். உண்மை அதுதான். இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற டேவிட் பென் குரியனிடம் அவரது அமைச்சரவை சகா ஒருத்தர் இந்த மாதிரியே சொல்லியிருக்கிறார்.

ஆயிற்று. மே 15-ம் தேதி யுத்தம் தொடங்கிவிட்டது. முதல் குண்டு டெல் அவிவ் நகரில் வந்து விழும்போது மணி காலை 9.15. வீசியது ஒரு பாலஸ்தீனப் போராளி. எங்கிருந்து அவர்கள் ஊருக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதே முதலில் இஸ்ரேல் ராணுவத்துக்குப் புரியவில்லை. தெற்கிலிருந்து எகிப்துப் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தன. வடக்கிலிருந்து லெபனான் மற்றும் சிரியாவின் படைகள். மேற்கில் டிரான்ஸ்ஜோர்டன் ராணுவம். வடமேற்கிலிருந்து ஈராக் ராணுவம். கிழக்குப் பக்கம் பற்றிக் கவலையே இல்லை. மத்திய தரைக்கடலைக் காட்டிலும் எந்த ராணுவத்தின் பலம் அதிகமாக இருந்துவிட முடியும்?

இஸ்ரேல் முதலில் தற்காப்பு நடவடிக்கைகளாகத்தான் மேற்கொண்டது. முதலில் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்தினார்கள். ராணுவத்தின் ஒரு பகுதியைப் பிரித்து எல்லைக் காவலுக்கு அனுப்பிவிட்டு, இன்னொரு பகுதியை டெல் அவிவிலேயே வைத்துக்கொண்டார்கள். மூன்றாவதாக ஒரு பிரிவைத்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தினார்கள்.

இந்த யுத்தத்தில் இஸ்ரேல் எப்படிச் செயல்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம். அமெரிக்கா முதல் பிரிட்டன் வரை, பிரான்ஸ் முதல் பெல்ஜியம் வரை அத்தனை தேசங்களும் அதைத்தான் கவனித்துக்கொண்டிருந்தன. எந்தச் சமயத்திலும் யார் வேண்டுமானாலும் உதவிக்கு வரலாம் அல்லது மௌன சாமியாராகவே இறுதிவரை கூட இருந்துவிடலாம்.

ஆனால் இஸ்ரேல் யுத்தத்தில் வெற்றி பெற்றுவிடுமானால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இஸ்ரேல் விஷயத்தில் சற்று அக்கறையுடன் நடந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை அவசியம் வரும். பொருட்படுத்தத்தக்க தேசமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள இந்த யுத்தம் ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்தார் பென் குரியன். இஸ்ரேல் ராணுவத்தின் வியூகம், அவரது இந்த எண்ணத்தைத்தான் பிரதிபலித்தது.

யுத்தம் சூடுபிடித்தது. இரு புறங்களிலும் மிகக் கடுமையாக தாக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீன் போராளிகளைப் பொறுத்தவரை அது வாழ்வா சாவா யுத்தம். ஆகவே தமக்கு ஓரளவு நன்கு தெரிந்த கெரில்லா போர்ப்பயிற்சி முறையையே அவர்கள் அதிகமாகக் கையாண்டார்கள். எதிர்பாராத நேரத்தில், இடத்தில் தாக்குதல் நடத்துவது. கையில் இருப்பது ஒரேயொரு நாட்டு வெடிகுண்டேயானாலும் குறைந்தது ஐம்பது பேரையாவது கொல்லும் வகையில்தான் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியுடன் இருந்தார்கள்.

உதவிக்கு வந்த படைகளைப் பொறுத்தவரை எகிப்தின் ராணுவம் இருந்தவற்றுக்குள்ளேயே சற்று கட்டுக்கோப்பான ராணுவம் என்று சொல்லவேண்டும். இஸ்ரேல் பயந்ததும் அதற்குத்தான்.

குண்டுகளை வீணாக்காமல் மிகவும் சாமர்த்தியமாக அவர்கள் யுத்தம் செய்தார்கள். அரசுக் கட்டடங்களைத் தாக்குவது, காவல் நிலையங்கள், ராணுவ முகாம்கள், மருத்துவமனைகள் கண்ணில் பட்டால் உடனே அவற்றைத் தாக்கி அழிப்பது என்பதே எகிப்து ராணுவத்தின் முதல் இலக்காக இருந்தது.

ஈராக் படையினர் கண்மூடித்தனமாக முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஒரு பயிற்சி பெற்ற ராணுவம் போல் அல்லாமல், கலவரக்காரர்கள் போல் அவர்கள் தாக்குதலில் ஈடுபட விரும்பினார்கள். சிரியா, லெபனான், ஜோர்டன் படைகள் எப்படியாவது டெல் அவிவ் நகருக்குள் புகுந்து கைப்பற்றிவிட மிகவும் விரும்பி, அதனை ஒட்டியே தமது வியூகத்தை வகுத்திருந்தன.

மறுபுறம், இஸ்ரேல் ராணுவத்தின் ஆள்பலம் குறைவாக இருந்தாலும் யுத்த நேர்த்தி அவர்களுக்கு மிக இயல்பாக வாய்த்திருந்தது. யுத்தங்களைக் கையாளும் முறை, வியூகம் வகுப்பது, ஒற்றறிதல் போன்றவற்றில் இஸ்ரேலியர்கள் இயல்பான திறமை பெற்றிருந்தார்கள். இழப்புகள் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். இதனைத் தற்காப்பு யுத்தம் என்று சொல்வார்கள். ஓரெல்லை வரை தற்காப்பு யுத்தம் செய்வது, சந்தர்ப்பம் கிடைக்குமானால் புகுந்து புறப்பட்டுவிடுவது.

வானம் புகை மண்டலமாகவும் பூமி செந்நிறமாகவும் ஆனது. யுத்தம் அதன் முழு உக்கிரத்தை அடைந்திருந்தது. நடுக்கடலில் கப்பல்களை குண்டுவீசி அழித்தார்கள். போர் விமானங்கள் தாக்கி வீழ்த்தப்பட்டன. ராணுவ முகாம்களில் எறிகுண்டுகள் வீசி திகுதிகுவென்று எரியச் செய்தார்கள். கொலைவெறி ஒன்று மட்டுமே மேலோங்கியிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேலுக்கு இருந்த பயம் விலகிவிட்டது. அவர்கள், தலைநகரை அரவணைத்து நின்று போரிடுவதை விட்டுவிட்டு வெளியேறி, முன்னேறி வந்து படைகளை அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஐ.நா. போட்டுக்கொடுத்த எல்லைக் கோடுகளெல்லாம் புழுதிக்கோடுகளாகி, மறைந்தே போயின. எங்கு பார்த்தாலும் குண்டுகள் வெடித்தன. எங்கு பார்த்தாலும் பீரங்கிகள் முழங்கின. எங்கெங்கும் மனிதர்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.

இஸ்ரேலிடம் இத்தனை வீரத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அரபு தேசங்கள் சற்று பயந்துபோயின என்றே சொல்லவேண்டும். எங்கிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வருகின்றன, யார் போர் யுக்திகளை வகுத்துத் தருகிறார்கள் என்பது புரியவில்லை. நேற்று உருவான இஸ்ரேலிய ராணுவத்துக்கே இத்தனை திறமை இயல்பாக இருக்கும் என்று யாரும் நம்பத்தயாராக இல்லை.

ஏதோ ஒரு பெரிய கை உதவுகிறது என்பது மட்டும் புரிந்தது. அது எந்தக் கை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

யுத்தம் அதன் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது ஐ.நா. தலையிட்டது. திரைப்படங்களின் இறுதியில், எல்லாம் முடிந்தபிறகு வரும் போலீஸ்காரர் மாதிரி. போர் நிறுத்தம். அமைதி ஒப்பந்தம். இத்தியாதிகள்.

அந்த அமைதி ஒப்பந்தத்தில்தான் இருக்கிறது விஷயம்.

போர் நிறுத்தம் சரி. ஆனால் எங்கே நிறுத்துவது? நவீன உலகில், எந்த தேசத்தில் எப்போது யுத்தம் நடந்தாலும் இந்த விஷயத்தை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

போர் நிறுத்தம் என்று வந்து, அதை இரு தரப்பினரும் ஒப்புக்கொள்வார்களேயானால், அந்த வினாடி வரை அவர்கள் எதுவரை முன்னேறி வந்திருக்கிறார்களோ, அந்த இடம் வரை சம்பந்தப்பட்ட தேசத்துக்குச் சொந்தம் என்பதுதான் விதி. இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த முதல் யுத்தத்தின்போது இதன் அடிப்படையில்தான் முஸஃபராபாத் உள்ளிட்ட கில்கிட்டைச் சுற்றிய வடபகுதி முழுவதும் பாகிஸ்தான் வசம் போனது. இன்றுவரை நாம் அதை பாகிஸ்தான் அபகரித்த காஷ்மீர் என்றும் அவர்கள் அதனை சுதந்திர காஷ்மீர் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


இதே மாதிரிதான் அரபு – இஸ்ரேல் முதல் யுத்தத்தின் போதும் ஓர் ஏற்பாடு ஆனது. யுத்தத்தில் முன்னேறி வந்த எகிப்து, அப்போது காஸா பகுதியில் இருந்தது. ஆகவே, காஸா எகிப்துக்கு என்றானது. டிரான்ஸ்ஜோர்டன் ராணுவம், மேற்குக் கரை முழுவதும் வியாபித்திருந்தது. ஆகவே வெஸ்ட்பேங்க் பகுதி ஜோர்டனுக்குச் சொந்தம். இஸ்ரேல் ராணுவமும் ஐ.நா. தனக்கு வகுத்தளித்த பூமிக்கு வெளியே பல இடங்களில் வியாபித்திருந்ததால், அந்தப் பகுதிகளெல்லாம் இஸ்ரேலுடையதாகிவிட்டது.

ஆக, காஸா போயிற்று. மேற்குக் கரையும் போயிற்று. மிச்சமிருந்த கொஞ்சநஞ்சப் பகுதிகளை இஸ்ரேல் விழுங்கிவிட்டது. எனில், பாலஸ்தீன் என்பது என்ன?

அப்படியொரு தேசமே இல்லை என்று ஆனது இப்படித்தான்! நிலமெல்லாம் ரத்தம்

சனி, 12 பிப்ரவரி, 2011

இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.(falklands war)

இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.(falklands War)
பூமிப்பந்தின் தென் பகுதியின் தென் அட்லாண்டிக் ஆழியில் மிதக்கும் முத்துக்கள்போல ஆர்ஜென்ரீனாவுக்கு கிழக்காக உள்ள, இரு பெரியதீவுகளையும், பல சிறு தீவுக்கூட்டங்களையும் கொண்ட தீவுகளே போக்லண்ட் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

சொரசொரப்பான மெதுமையான மண்ணியல் தன்மைகளையும், பெரிய இலைகளைக்கொண்ட, இளம்பச்சை தாவரங்களையும், வர்ரஜ் என்ற நரியினம், ஸ்ராரா, ரிட்டரா போன்ற பறவை இனங்களை தன்னகத்தே தனித்துவமாக கொண்டுள்ள தீவுக்கூட்டங்கள் இவை. வெதுவெதுப்பான காலநிலை, குளிர்க்காலநிலை என இரு பெரும் காலநிலைகளின் தாக்கங்கள் இந்த தீவுக்கூட்டங்களில் உண்டு.

1880களில் இந்த தீவுக்கூட்டங்கள் பிரித்தானிய ஆளுகைக்குள் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து தென் பிராந்திய யுத்தங்களின்போது பிரித்தானிய “ரோயல்” கடற்படையினரின் முக்கிமான ஒரு வலையத்தளமாக இந்த போக்லண்ட் தீவுகள் பயன்படுத்தப்பட தொடங்கின.
குறிப்பாக ஸ்கொடிஸ் இன மக்கள் இந்த தீவுகளில் குடியேறி பிரித்தானிய முடியாட்சியின்கீழ் வாழ்ந்துவரத்தொடங்கினார்கள்.
ஆனால் ஆர்ஜென்ரீனாவின் எண்ணங்கள், தமது சுதேச நில ஆளுகைகளை எண்ணி விம்மலுடனேயே இருந்து வந்தன. பல சந்தர்ப்பங்களில் இந்த நிலத்திற்கு உரிமை கோரும் வெளிப்பாடுகளை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே ஆர்ஜென்ரீனா வெளிப்படுத்த தொடங்கிவிட்டது.

இரண்டு உலக யுத்தங்களும் முடிவடைந்து, பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடுகள் சுதேசிகளிடமே கையளிக்கப்பட்டு, உலகம் தொழிநுட்பம், விஞ்ஞானம் என்பவற்றில் அதிஉச்சமாக பயணித்துக்கொண்டிருந்த 1980களின் ஆரம்பங்கள்.
உலகம் முழுவதுமே, அதிநுட்ப இலத்திரனியலில் இலகித்துக்கொண்டிருந்த காலங்கள். நாடுகாண் பயணங்களை முடித்துக்கொண்ட மனிதஇனம், கிரகம்காண் பயணங்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருந்த காலங்கள்.
1982 மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்து ஆர்ஜென்ரீன கடற்படையினரின் கடல்ரோந்துகள், இந்த தீவு பகுதிகளில் அதிகரிக்கத்தொடங்கின. அந்த ரோந்துகள் மெல்மெல்ல சவுத் ஜோர்ஜியா தீவுகளை தரைதட்டி கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு சென்றன.

எப்போதுமே நிதானமாக அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டு கண்ணுக்குள் எண்ணை விட்டு கவனித்துகொண்டிருக்கும் வெள்ளைக்காரப்புத்தி இதை கவனிக்காமல் இருக்கவில்லை. மிக நிதானமாக கவனித்துகொண்டுதான் இருந்தது.
மறுபக்கம் 1982ஆம் ஆண்டு, ஏப்ரல் 02ஆம் நாள் ஆர்ஜென்ரீனா மேற்படி போக்லண்ட் தீவுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை முழுமையாக அரங்கேற்றியது.
தீவுகள் தொடர்பான அதிகார உரிமம் தொடர்பான நூற்றாண்டு சர்ச்சைகளின் உச்சமாக இந்த நடவடிக்கைகள் அமைந்தன. ஆர்ஜென்ரீனா திடீர் என எடுத்த இந்த கைப்பெற்றல் நடவடிக்கையினால் போக்லண்ட், சவுத் ஜோர்ஜியா ஆகிய தீவுகள் ஆர்ஜென்ரீனாவின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டன.
இதை தொடர்ந்து ஆர்ஜென்ரீன வான்படை, மற்றும் கப்பல் படைகளை மேற்படி பிரதேசங்களில் எதிர்த்து முதல் நடவடிக்கையாக பிரிட்டன் பெரும் வான்தாக்குதலை தொடங்கியது.

அப்போது உலகம் இரண்டு வல்லரசுகளின் கைகளில் இருந்தது என்பது அறிந்ததே. இந்த விதத்தில் இந்த நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆர்ஜென்ரீனா இதை இராஜதந்திர ரீதியில் அணுகமுன்வரவேண்டும் என்றும், யுத்தம் சரியான முடிவாக இருக்கமுடியாது. இதில் பாதிக்கப்படபோவது ஆர்ஜென்ரீனாவே எனவும், அமெரிக்கா அழுத்தமாக கூறி, ஆர்ஜென்ரீனாவை சமரை நிறுத்திவிட்டு பேச்சுக்களுக்கு வரவேண்டும் என அமெரிக்கா வலியுறத்தியது. ஆனால் ஆர்ஜென்ரீனா அதை மறுத்துவிட்டது.
தமக்கே உரிமையான தமது நிலத்தின்மேல் உள்ள பிரித்தானிய ஆளுகைக்கு எதிரான போர் இது என உலகத்திற்கு ஆர்ஜென்ரீனா அவசரமாக வியாக்கியானம் செய்தது.
மறு கரையில் சோவியத் யூனியன் ஆர்ஜென்ரீனாவின் இந்த நடவடிக்கைகளை மறுத்துவிட்டது. இராஜதந்திர ரீதியிலேயே இதை அணுகப்படவேண்டும் என சோவியத் யூனியனும் உறுதியாகச் சொல்லிவிட்டது.

ஏப்ரல் 05ஆம் நாள் “ரோயல்” கப்பற்படை என்பது எத்தனை எல்லமையானது என்பதை கண்டு ஆர்ஜென்ரீனா மட்டும் அல்ல முழு உலகமும் திடுக்கிட்டது. அட்லாலாண்டிக் சமுத்திரத்தை கிழித்துகொண்டு, பிரிட்டன் ரோயல் கடற்படையினரின் கப்பல்கள், விமானம்தாங்கி கப்பல்கள், ஏவுகணை, நாகசாகி கப்பல்கள் என வந்த கடற்படைகள், தென் சமுத்திரம் தொடங்கும் இடத்தில் இரு பிரிவாக பிரிந்து போக்லண்ட் தீவுகளையும், சவுத்ஜோர்ஜியாத் தீவுகளையும், ஆளுகைக்குட்படுத்திய ஆர்ஜென்ரீன படைகள் மீது தாக்குதல்களை நடத்தியவாறே துரப்புக்களை மள மளவென தரையிறக்கம் செய்தன. அதேவேளை பி.எம்கே, மிராஜ் 3, சொனிக், போன்ற அதிநவீன ரோயல் யுத்த விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியை கொடுத்துகொண்டிருந்தன.

1880களின் பின்னர் பிரிட்டன் ஒரு நாட்டின்மீது தனித்து நின்று யுத்தம் செய்த ஒரு வரலாறாக இது பொறிக்கப்பட்டது. அடிக்கு உடனடியாக பெரும் பதிலடி கொடுத்து தான் இரும்புச்சீமாட்டிதான் என்பதை நிரூபித்துக்காட்டினார் அப்போதைய பிரிட்டன் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர்.
இந்த யுத்தம் பற்றி இரு நாடகளுமே எந்தவிதமான முன்னறிவிப்பையும் விடவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. அடுத்ததாக முக்கிமான விடயம் இது எந்த நிலத்திற்காக யுத்தமோ அந்த நிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. அதை தவிர நாடுகளின் குரோதங்களை இரு நாடுகளுமே இரு நாடுகளின் வேறு பகுதிகளை தாக்கி காட்டவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டியதே.

ஒரு கட்டம் வரை எதிர்த்த ஆர்ஜென்ரீனாவால் பிரிட்டனின் தொடர்ந்த ஓயாத அதிரடி நடவடிக்கைகளை தாங்கமுடியவில்லை. அத்தோடு பெருமளவிலான ஆர்ஜென்ரீன படையினர் பிரிட்டனின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டனர்.
ஆர்ஜென்ரீன படைகள் சரணடைவதாக அறிவித்த உடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான ஆர்ஜென்ரீன முப்படையினரும் பிரிட்டன் படைகளிடம் சரண்புகுந்தன.
1982 ஜூன் மாதம் 17ஆம் நாள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
74 நாள் யுத்தம் என வர்ணிக்கப்படும் இந்த யுதத்தத்தில் 257 பிரித்தானிய முப்படையினரும், 647 ஆர்ஜென்ரீன முப்படையினரும், மூன்று சிவிலியன்களும் இறந்தனர். ஆனால் இங்கு இடம்பெற்ற யுத்தத்தின் தன்மைகள், யுத்தத்தின் மூர்க்கம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் இறந்தவர்கள்தொகை குறைவானதே.

மீண்டும் போக்லண்ட் தீவுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிரிட்டன் இப்போ நீங்கள் இதை படிக்கும்வரை அதை தனது நிர்வாகத்தின்கீழேயே வைத்திருக்கின்றது. போக்லண்ட் தீவுகளில் வசிப்பவர்கள், பிரிட்டன் பிரஜைகளாகவே கருதுப்பட்டுவருகின்றார்கள். அதேவேளை அவர்கள் ஆர்ஜென்ரீன குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கும் தகுதியும் உள்ளவர்கள்.
போக்லண்ட் யுத்தத்தின் பின்னர் இரு நாட்டு கலாச்சாரத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. முக்கியமாக ஆர்ஜென்ரீன நாட்டு மக்களின் கலாச்சாரம் பெரும் மாற்றத்தை அடைந்தது. அந்த யுத்தத்தின் தாக்கம் பெரிதும் மக்களால் உணரப்பட்டது. இந்த யுத்தம் தொடர்பான திரைப்படங்கள், பாடல்கள், விபரணங்கள் என்பன பெரிதும் வெளிவரத்தொடங்கின.
இன்றும் போக்லண்ட் தீவுகளில் வாழும் மக்களிடையே இந்த யுத்தம் பற்றிய பேச்சு உண்டு.

இந்த யுத்தின் பின்னர் இதுவரை ஆர்ஜென்ரீன இந்த நிலத்தின் உரிமம் தொடர்பான அறிவுப்புக்களை கொண்டுவரவில்லை. ஆனால் இந்த யுத்த வெற்றிமூலம் அதிக அரசியல் லாபம் மட்டும் அடைந்தவராக அன்றி, பிரித்தானிய மக்களால் போற்றப்பட்டார் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வெற்றிக்கு அவருக்கு இந்த போக்லண்ட் யுத்தம் பெருமளவில் கைகொடுத்தது.
ஆனால் மறுகரையில் பிரித்தானிய – ஆர்ஜென்ரீன நாடுகளின் இராஜதந்திர உறவில் கரும்புள்ளி விழுந்தது. இருந்தாலும் 1989ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் சீர்அமைக்கப்பட்டன.
ஒரு குடையின் கீழான மாநாடு என்ற தொணியில் முக்கியமான மாநாடு ஒன்றும் இடம்பெற்றது.

இன்று போக்லண்ட் தீவுகள், பெருமளவில் அபிவிருத்தி கண்டு, பிரபலமான உல்லாசவிடுதிகள், உல்லாச மையங்களை கொண்டுள்ளன. உல்லாசப்பிரயாணம், மற்றும் நவீன மீன்பிடி என்பன இந்தப்பிரதேசத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இன்று இந்த பிரதேசத்துடன் ஆர்ஜென்ரீனா மிகவும் சினேகிதமாகவே உள்ளது என்பதும் இந்த கட்டுரையை முடிக்க ஒரு சுபமாக உள்ளது.- janavin

புதன், 9 பிப்ரவரி, 2011

வைரத்தின் வரலாறு - 2

சாலிடேர்(Solitaire) என்றால் என்ன ?

சாலிடேர் என்பது ஒற்றை வைரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை, 33 சென்ட் மற்றும் அதற்கு அதிகமான எடையுள்ள வைரங்களைத்தான் சாலிடேர் என்று குறிப்பிடுவார்கள்.

விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ?

விவிஎஸ் (VVS) என்றால் very very small inclusions என்கிற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது மிகச் சிறிய, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத, லென்ஸை வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய வைரத்தின் உள்ளேயே இணைந்து வளர்ந்துள்ள கனிம, அல்லது வேதிப் பொருளின் (மிகச்சிறிய) துகள்களோ, துணுக்குகளோ ஆகும். இதனால் வைரத்தின் ஜொலிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது தவிர இன்னும் பெரிய துகள்களை VS1, VS2 என்பார்கள்.

அதன் உள்ளே உள்ள துகள்களின் அளவை பொறுத்து குறியீடுகளும் மாறிக் கொண்டே போகும்.

பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா?

இல்லை. 40-50 சதவீதம் வைரங்கள் மட்டுமே நகை செய்யப்பயன்படும். அவை 4Cs என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தரம் குறைந்த மற்ற வைரங்கள் தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படும். இவை Industrial Diamonds எனப்படும்.

Industrial Diamonds – என்றால் என்ன ?

நகை செய்யப் பயன்படாத வைரங்கள் பலவித தொழிற்சாலை உபகரணங்களுக்கு பயன்படும். ஏனென்றால் அந்த வைரத்தின் தன்மை என்றுமே மாறாது. அவை சாணைக்கல்லில் அடைப்புகளை நீக்கும் கருவிகள் (Dressing Tools), கண்ணாடிகள் வெட்டும் கைக்கருவிகள் (Glass Cutter), லேத்மெஷினில் ஸ்டீல் பாகங்களை வெட்டும் கருவிகள் (Cutting Tools), அறுவை சிகிச்சை செய்யும் கைக்கருவிகள் (Operation Instruments), இன்னும் பலவற்றில் உபயோகிக்கப்படுகிறது. இதன் துகள்களை சாணைக்கல்லில் பதித்து வைரத்தை பட்டை தீட்ட பயன்படுத்தலாம். இப்படி பலவற்றில் பயன் படுத்தலாம்.

4Cs என்றால் என்ன?

பல நாடுகளில் வைரங்களின் தரத்தைக் குறிப்பிட வெவ்வேறுவிதமான வார்த்தைகளை குறிப்பிட்டு வந்தார்கள். உலகளவில் ஒரே தர நிர்ணயம் செய்வதற்காக (நிமிகி) ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடிட் ஆப் அமெரிக்கா 4சி என்கிற முறையை அறிமுகப்படுத்தியது. அது பின்வருமாறு.

1.CLARITY, 2. COLOUR, 3. CAROT, CUT

1.CLARITY (தெளிவு)

வைரத்தை மேலிருந்து உள்ளே பரிசோதித்து பார்க்கும் போது ஏதேனும் வேதிப் பொருள்களோ கனிமப் பொருள்களோ உள்ளடங்கி இருக்கிறதா என்பதை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். அது எந்தவிதத்திலாவது அதன் ஜொலிப்பை பாதித்தால் வைரத்தின் விலை குறையும்.

2. COLOUR (நிறம்)

வைரம் சுத்த வெள்ளையாக அதாவது நிறமற்றதாக (தெளிந்த நீரோடை போல்) இருந்தால் நல்ல தரமானது. நிறம் சற்றே மாறுபட்டு கொஞ்சம் பழுப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக இருந்தால் தரம் குறைவாகும். தெளிவான கற்களே சிறந்தவை.

3. CAROT (எடை)

100 சென்ட் = 1 கேரட் இது வைரத்தின் எடையை குறிக்கிறது. வைரக் கல்லின் எடையை பொறுத்து அதன் விலை நிர்ண யிக்கப்படும்.

4. CUT (பட்டை தீட்டப்பட்டுள்ள முறை)

வைரக்கல் எந்த முறையில் பட்டை தீட்டப்பட்டுள்ளதோ அதை பொறுத்து விலை நிர்ணயிக்கப் படும். பட்டை சரியாக தீட்டப் படாமல் இருந்தால் வைரத்தின் விலை குறைந்து விடும்.

இந்த நான்கு C க்கள் (4 Cs ) வைரம் தேர்வு செய்வதற்கான அடிப்படையாகும்.

தங்கக் கேரட் வைரக் கேரட் இரண்டும் ஒன்றுதானா ?

வைரத்தில் கேரட் (CAROT) என்கிற வார்த்தை அதன் எடையைக் குறிக்கும். தங்கத்தில் கேரட்(Karatage) என்கிற வார்த்தை தங்கத்தின் தரத்தைக் குறிக்கும்.

உ.ம் 24 கேரட் என்றால் 100$ சுத்தத் தங்கம் அதே 24 கேரட் வைரம் என்பது அதன் எடையைக் குறிக்கும் இரண்டும் வேறு வேறு பொருள் (Meaning) கொண்டவை.

வைரத்தில் `ரத்தப்பந்து` என்றால் என்ன?

வைரம் வளரும் போது ஆயிரத்தில் ஏதாவது ஒரு கல்லில் அதனோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் (மாதுளம் பழத்தின் முத்து நிறத்தில்) கார்னெட் (Garnet) என்கிற ஒருவகை ரத்தின கல்லும் சேர்ந்தே வளரும். வைரத்தை பட்டை தீட்டிய பிறகு இந்த சிவப்பு நிறம் நன்றாக தெரியும். இதை நம் ஊர் வியாபாரிகள் `ரத்தப்பந்து` என்பார்கள்.

டீபியர்ஸ் (De Beers) வைரங்கள் என்றால் என்ன?

1876ம் ஆண்டு ஜோஹன்னாஸ் டீபியர்ஸ் மற்றும் ஆர்ணால்டஸ் டீபியர்ஸ் சகோதரர்களுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் ஏராளமான வைரங்கள் கிடைத்தன. ஆப்பிரிக்காவில் இந்த இடத்தை ஸெஸில் ரோட்ஸ் (Cecil Rhodes) என்பவர் வாங்கி வைரங்களை தோண்டி எடுத்து பெரும் செல்வந்தர் ஆனார்.அந்த நிறுவனத்துக்கு டீபியர்ஸ் மைனிங் கம்பெனி என்று பெயரிட்டார். இது 1880 ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி துவங்கப்பட்டது.

இன்று உலக வைர வியாபாரத்தில் 75சதவீதத்திற்கும் மேலாக இந்த நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால் De Beers சகோதரர்கள் இங்கிருந்து வைரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்த நிலத்தை சுமார் 500 டாலருக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

ஹார்ட்ஸ் ஆரோஸ் வைரம் (Hearts and Arrows Diamonds) என்றால் என்ன?

சிறந்த பொறியியல் நுணுக்கத்துடன் ஒவ்வொரு பட்டையையும் குறிப்பிட்ட விகிதத்தில் சிறப்பாக தீட்டப்பட்ட வைரத்தை டைமண்ட் ஸ்கோப் என்ற கருவியின் மூலமாக பார்த்தால், அதனுள்ளே இருதயம் போலவும், அம்பு போலவும் துல்லியமாகத் தெரியும். இந்த வைரங்கள் அதிக ஜொலிப்புடன் விளங்கும் அதைத்தான் மேற் கண்டவாறு குறிப்பிடுக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

தென் ஆப்பிரிக்காவில் 1866ல் எராஸ்மஸ் ஜேக்கப் என்ற சிறுவனும் அவன் தங்கையும் ஆரஞ்சு நதியின் கரையில் விளையாடும் போது ஒரு பளபளப்பான கல்லைப் பார்த்து, அதை வீட்டுக்கு விளையாட எடுத்துச் சென்றனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த போயர் என்ற ஆங்கிலேயர் அவர்களது தாயாரிடம் அந்த கல்லை விலைக்குத் தருவீர்களா? என்று கேட்க, அவளோ பணமெல்லாம் வேண்டாம் என்று இலவசமாகவே கொடுத்துவிட்டாள். பிற்பாடு அதை (Boer)பரிசோதித்ததில் அது மிக அருமையான வைரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டைத் தீட்டாத கல்லின் எடை 21.23 காரட் இருந்தது. பட்டை தீட்டியபின் 10.73 காரட்டில் அருமையான வைரமாய் ஜொலித்தது. இதற்கு “யுரேகா” என்று பெயரிட்டனர். (அதாவது புதிய கண்டுபிடிப்பு என்று பொருள்). இது தான் ஆப்பிரிக்காவின் வைரக் கண்டுபிடிப்புக்கு ஆரம்பம் இந்த வைரம் தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லி மிசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விலைஉயர்ந்த வைரங்கள் வாங்கும் போது தரத்தை எப்படி அறிந்து கொள்வது?

இதற்கென்றே சில சட்ட திட்டங்கள், தரக்கட்டுப்பாடு முதலியவற்றை வகுத்து. அதை தர உறுதி செய்து சர்டிபிக்கேட் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட கல்லும் முழுவதும் சீல் செய்யப்பட்டிருக்கும். அதில் கல்லுடைய எடை, நிறம், பட்டையின் விகிதம் முதலிய எல்லாமே குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்காக பல அமைப்புகள் உலக முழுவதுமுள்ளன. சான்றிதழ் பெற்ற கல்லை நகையில் வைத்து பதித்த பிறகு, அது அதே கல்தானா, என்று எப்படி அறிவது?

இதற்கும் ஒரு முறை உள்ளது. அந்தக் கல்லின் பட்டையின் மேல் பகுதியும், கீழ்பகுதியும் சந்திக்கும் இடத்தை கர்டில் (GIRDLE)என்று குறிப்பிடுவோம். அந்த இடத்தில் லேசர் கதிரின் (LASER) மூலமாக ஒரு அடையாள நம்பரை எழுதி விடுவார்கள். அதை அழிக்கவே முடியாது. லென்ஸ் வைத்து பார்த்தால் தெரியும்.

தேடல் சாதனங்களில் இது அரசன்

ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனை www.searchko.in என்ற முகவரியில் பெறலாம்.
இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழில் ஒரு தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் கீகளை அழுத்தி, தேடலுக்கான சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை கிளிக் செய்து, அதன் மூலம் சொற்களை டைப் செய்தும் தேடலாம். (கீ போர்டு வழக்கமான கீ போர்டாக இல்லாமல் சற்று மாற்றாக உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்)
தேடல், மருத்துவம், இலக்கியம் எனப் பெரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானததைத் தேர்ந்தெடுத்து நாம் தேடும் தகவல்களைப் பெறலாம். தினமலர் உள்பட மூன்று தமிழ் தினசரி செய்தித் தாள்களுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.
இந்த தளத் தேடலில், இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் என இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ÷ஷாபா கூறினார்.
ஆங்கிலம்–தமிழ் மற்றும் தமிழ்–ஆங்கிலம் அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திச் சொற்களுக்குப் பொருள் தேடிப் பெறலாம்.
இலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளம் இன்னும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது. பிழை திருத்தி போன்றவை விரைவில் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
சரி, அது என்ன “சர்ச் கோ’ என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். இங்கு “”கோ” என்பது தமிழ்ச் சொல். அரசன் என்ற பொருளைத் தரும். தேடல் சாதனங்களில் இது ஒரு அரசனாக இயங்கும் என்று பொருள் தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் கொண்டு வந்துள்ள இந்த முயற்சியை வரவேற்போம். Thank - (Searchko)

திங்கள், 7 பிப்ரவரி, 2011

உலக கிண்ண கிரிக்கெட் : ஹாட்ரிக் சாதனையாளர்கள்


1975-ல் தொடங்கி 2007 வரையிலான 9 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியாவின் சேத்தன் சர்மா, பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக், இலங்கையின் சமிந்தா வாஸ், அவுஸ்திரேலியாவின் பிரட் லீ, இலங்கையின் லசித் மலிங்கா ஆகியோரே அந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். அதிலும் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியவர் என்ற பெருமை இந்தியாவின் சேத்தன் சர்மாவையேச் சாரும்.

1987-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நாகபுரியில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்த போது, சேத்தன் சர்மாவை பந்துவீச அழைத்தார் கபில்தேவ். அப்போது பேட்டிங் செய்த ரூதர் போர்டை கிளீன் போல்டு ஆக்கி வெளியேற்றினார் சர்மா.
அதன் பிறகு வந்த இயன் ஸ்மித்தை கிளீன் போல்டு ஆக்கவே, சேத்தன் ஹாட்ரிக் வாய்ப்பை நெருங்கினார். அடுத்த பந்திலும் விக்கெட் வீழ்த்தி சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவாரா என்று எதிர்பார்ப்பில் இந்திய ரசிர்கள் உறைந்துபோயிருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

அடுத்து வந்த இவென் ஷட்பீல்டையும் கிளீன் போல்டு ஆக்கி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார் சர்மா. இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக் சாதனையைப் படைத்து இந்தியாவுக்கு அவர் பெருமை சேர்த்தார். மூன்று விக்கெட்டுகளையும் போல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்த ஒரே வீரர் சேத்தன் சர்மா மட்டுமே.

சக்லைன் முஷ்டாக்: 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

40-வது ஓவரை வீசிய சக்லைன் முஷ்டாக், அந்த ஓவரின் முதல் பந்தில் ஹென்றி ஓலங்காவையும், இரண்டாவது பந்தில் ஹக்கிளையும், மூன்றாவது பந்தில் பங்வாவையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதில் ஓலங்கா, ஹக்கிள் ஆகியோர் அப்போதைய பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் மொயின்கானால் ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர். பங்வா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.