ஞாயிறு, 11 ஜூலை, 2010

உலக நண்பர்கள் தினம்

அன்புள்ள நண்பனே!
அன்புள்ள நண்பியே!

நாம் நண்பர்கள் என்பதால் தான்
இந்த நாள் நமக்கு
நாம் இந்த நாளுக்கு,

இந்த நட்புக் கடலுக்குள்
உன் படகும் என் படகும்
சங்கமிக்கட்டும்,

நம் நட்புக் கலந்த
இனிய வாழ்க்கை
சிறந்து விளங்கட்டும்.

எம் நட்பு உறவுக்குள்
நானில்லை, நீயில்லை.
நாம் என்று ஒருமித்து,
நாம் என்றும் பயணிப்போம்

நான் உன் வானமாக,
நீ என் சுவாசமாக,
என்னை நீயும்
உன்னை நானும்
தேடும் போது, நாம் அங்கே
ஒருவர்க்கொருவர் தெரிவோம்

சூரியக் கதிரின் சுடரொளியாய்
நம் சிரிப்பு, நம்மை நிறைக்கட்டும்

துன்பம் உன்னைத் தொடும் போது
என் நெஞ்சில் ஈரம் நிறையட்டும்

எம் நல்ல நாட்களை நாம்
ஒன்றாய் கொண்டு தொடங்குவோம்

இறைவன் வரும் படி கேட்டால்
நாம் ஒன்றாய் பயணம் தொடருவோம்

நட்புக்கு இலக்கணம் நாம் என்று
நல்ல மனிதர்கள் கூறட்டுமே!
அதை நாம் காதாரக் கேட்காவிடிலும்,
இந்த உலகம் அதனை உணரட்டுமே!

உலக தாய்ப்பால் வாரம்


உலக தாய்ப்பால் வாரம்.
தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம். பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எல்லா உயிரினங்களும் தங்கள் குழந்தைகளைப் பாலூட்டிப் பராமரிக்கின்றன. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்மீகத்தையும் ஒவ்வொரு இளம் தாய்க்கும் உணர்த்தும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் “தாய்ப்பால் ஊட்டுவது பேரிடரிலும் இன்றியமையாதது - நீங்கள் தயாரா?” என்பதை இந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கோஷமாக உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) வரையறுத்துள்ளது.

பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். ஒரு குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்கு தாயின் பாலை ஊட்டுவது இயற்கையானது. குறிப்பிட்ட காலம்வரை குழந்தைக்கு தாய்ப் பாலை ஊட்ட வேண்டிய கடமை தாய்க்குண்டு.

இந்த நவீன இலக்ரோனிக் யுகத்தில் தாய்ப்பால் கொடுப்பது தொடர்பாக பல்வேறுபட்ட சிரம நிலைகள் கூறப்பட்டாலும்கூட,வளர்ச்சியடைந்த நாடுகளிலும் சரி, வளர்முக நாடுகளிலும் சரி தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டின் உறுதித்தன்மையில் மாத்திரம் மாற்றங்களே வரவில்லை. விஞ்ஞானம் வளர்ச்சிடைய வளர்ச்சியடைய தாய்ப்பாலின் முக்கியத்துவம் விஞ்ஞான ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டே வருகின்றது.

வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால் தாய்ப்பாலூட்டுவது இன்று ஒரு பெரும் பிரச்சினையாக மாறி வருகின்றது. இந்நிலையைக் கருத்திற் கொண்டு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் சரி, அபிவிருத்தியடைந்துவரும் பெரும்பாலான நாடுகளிலும் சரி ‘சிசு” பராமரிப்பைக் கருத்திற் கொண்டு பிரசவத்தின் பின்பு தாய்க்கு நீண்டகால விடுமுறை வழங்கப்படுகின்றது. அது தவிர, பாலூட்டும் காலம்வரை சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. ஆனாலும், சில தாய்மார் குறிப்பாக தொழில் செய்யும் தாய்மார் இது விடயத்தில் ஓரளவுக்கு அசட்டைத்தனம் காட்டுவதும் தமது பிரசவ விடுமுறை முடிவதற்கு முன்பு குழந்தைக்கு வேறு ஏதாவது ஒரு பாலைப் பழக்கி விடவேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் காணமுடிகின்றது. எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்த பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப்படுத்துகின்றனர். எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்ட ஒரு தாய் தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தினையே இவ்வாண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின் தொனிப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளதன் ஊடாக இத்தகைய தாய்மாரின் மனோநிலைகளும் போக்குகளும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக தோன்றுகின்றது.

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையே முக்கிய பணியாகக் கருத வேண்டும். குழந்தை அழும்போதெல்லாம் அதற்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அடிக்கடி பாலூட்டும்போது தான் போதுமான அளவு பால் சுரக்க வழி ஏற்படுகிறது. பேறு கால மருத்துவ விடுப்பு முடிந்து, குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் வேலைக்குச் செல்லும் நிலையிலும் தாய்ப்பால் கொடுக்க முடியும். காலையில் வேலைக்கு புறப்படும் முன்பு, எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை முறை கொடுக்கலாம். வேலைக்குக் கிளம்புவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு, தாய்ப்பாலை ஒரு கிண்ணத்தில் சேகரித்து வைத்து வீட்டில் உள்ளோர் மூலம் பாலாடை மூலம் அதைக் கொடுக்கலாம். அதற்குத் தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி கொடுக்கச் சொல்லி விட்டு பணிக்குச் செல்லவும்.

சாதாரண வெப்பநிலையில் 12 மணி நேரமும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 24 மணி நேரமும் தாய்ப்பால் கெடாமல் இருக்கும். பணியிலிருந்து வீட்டிற்கு திரும்பியவுடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும். பால் புளித்திருக்கும் போது கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் முற்றிலும் தவறானது.

அத்துடன் மார்பகக் காம்பில் விரிசல் ஏற்பட்டு தாய்க்கு வலி ஏற்படின் தாய்ப்பாலை கறந்து கிண்ணத்தில் வைத்து தேக்கரண்டி அல்லது பாலாடை மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும். மார்பகக் காம்பு அளவுக்கதிகமாக நீண்டு இருந்தாலும் குழந்தையால் பால் குடிக்க முடியாது. குழந்தையின் தொண்டையில் அடைத்துக் கொள்வதால் மூச்சு திணற ஏதுவாகும்.

பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதுமானது தாயின் பாலாகும். இதை பாமரத் தாய்மார்கள முதல், படித்த தாய்மார் வரை நன்கு தெரிந்து வைத்தே உள்ளனர். கர்ப்பத்தில் தாய்க்கும் சேய்க்குமுள்ள தொப்புள்கொடி உறவைத் தொடர்ந்து தாய்ப்பால் ஊட்டுவதினூடாகவே தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவு நெருக்கமாக்கப்படுவதாக பெரியவர்கள் கூறுவார்கள்.

இயற்கையின் படைப்புகளில், விந்தைகளில், நியதிகளில் தாய்ப்பால் ஊட்டுவதும் ஒன்று. உலகிலுள்ள ஏறத்தாழ 4500 வகையான பாலுட்டும் உயிரினங்களில் ஒன்றாக மனித இனமும் காணப்படுகின்றது. ஆனால், ஆறறிவு படைத்த மனித இனத்தில் மட்டுமே தாய்ப்பால் ஊட்டுவதில் பல்வேறு பிரச்சினைகள் உண்டாவது விந்தைக்குரியதே. பொதுவாக அந்தந்த உயிரினங்களுக்கு அதனதன் பாலே உணவாகிறது. ஐயறிவு படைத்த ஜீவராசிகள் கூட தமது குட்டிகளுக்கு தமது பாலையே ஊட்டும். இது தவிர, பிற மிருகங்களின் பாலை ஊட்ட எத்தனிக்காது. இது இயற்கை. இந்த எல்லா உயிரினங்களிலும் நாம் மட்டுமே மற்ற விலங்குகளின் பாலை விலை கொடுத்து வாங்கிக் குடிக்கின்றோம். குறிப்பாக அந்தந்த இனத்தின் தேவைக்கேற்ப அந்தந்தப்பால் அமைந்துள்ளது என இயற்கை விதியினை மறந்து புறக்கணிக்கின்றோம்.

தாய்ப்பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டிற்கே பொருளாதாரப் பொக்கிஷம். குழந்தைகளை நோய்களிலிருந்து தாய்ப்பால் காப்பதுடன் குடும்பச் செலவுகளையும் குறைக்கின்றது. தாய்ப்பால் எளிதில், வெதுவெதுப்பான சூட்டில் தேவைப்படும் போதெல்லாம் குழந்தைக்குக் கிடைக்கக் கூடியது. கலப்படம் செய்ய முடியாதது. உயர்தரப் புரதம், கொழுப்பு, அமினோஅமிலங்கள், தாது உப்புக்கள் மற்றும் லேக்டோ பேசிலஸ் பைபிடஸ்பேக்டர் போன்ற தடுப்புப் பொருட்கள் இவை அனைத்தையும் கொண்ட குழந்தையின் முதல் மூன்று மாதங்களுக்கான ஒரு முழுமையான உணவு.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் எண்ணற்ற பயன்கள் உள்ளன. தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்படுகிறது. தாய்க்கு மகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் தருகிறது. குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் வரை, தாய் மீண்டும் கருவுறும் வாய்ப்புக் குறைகிறது. கருவுற்ற காலத்தில் கொழுப்பு மற்றும் எடை, தொடர்ந்து பால் கொடுக்கும் போது சிறிது சிறிதாகக் குறைகிறது.
குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும், இயக்கத்திற்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் சரியான அளவில் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளது. பிற பால்களை விட தாய்ப்பால் எளிதில் சமிபாடடையும். தாய்ப்பாலில் உள்ள “நோய் எதிர்க்கும் சக்தியை உடைய புரதப் பொருள்’ (Immuno Globulin) குழந்தையை கொடிய நோய்கள், மார்புச் சளி (நிமோனியா), தோலில் ஏற்படும் ஒவ்வாமை (அலர்ஜிக்) போன்ற பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. மருந்துகளே கிடைக்க வழியில்லாத குக்கிராமங்களில்கூட கிருமிகளினால் ஏற்படும் வாந்தி, பேதியை தாய்ப்பால் மட்டும் கொடுத்து குணப்படுத்தலாம். தாய்ப்பாலில் புரதம், கொழுப்புச் சத்து மற்றும் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமில, கொழுப்பு அமிலங்கள் ஆகியவை இருப்பதால் குழந்தை சீராக உடல் வளர்ச்சி மற்றும் மன வளர்ச்சி பெற்று வளரும்.

தாய்ப்பால் அருந்தி வளரும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் இரத்தநாள அடைப்பு நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தாய்ப்பாலில் நோய்க் கிருமிகள் இருப்பதில்லை. பிறவகை பால்களில் கிருமிகளை அகற்ற விசேஷ கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சில நோய்களுக்கும் மருந்தெனவும் சித்த வைத்தியம் குறிப்பிடுகின்றது. அதாவது எல்லாவிதமான தோல் நோய்களுக்கும் சிறந்த மருந்து, ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு தாய்ப்பாலை தடவி வந்தால் விரைவில் குணமாகி விடும், கண்களில் ஏற்படும் எல்லாவித எரிச்சல், உறுத்தல், கண் வலி நோய் போன்றவற்றிற்கு கண்களில் தாய்ப்பாலை ஒரு சொட்டு விட்டு உடனடி நிவாரணம் பெறலாம், இரத்த சோகை: இந்த நோயினால் மிகவும் உடல் வலுவின்றிக் காணப்படுவோர் நாள்தோறும் ஒரு சிறிய தேனீர் குவளை அளவு தாய்ப்பாலினைப் பருகி வர நல்ல பலன் தெரியும், கொசுக்கடி, எறும்பு மற்றும் பூச்சிக்கடியினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட இடத்தில் தாய்ப்பாலைத் தடவலாம், குழந்தைகளின் உடல் சூடு மற்றும் வயிற்று வலிகளுக்கு தாய்ப்பாலினை குழந்தைகளின் வயிறு, உச்சித் தலை மற்றும் உள்ளங்கால் பகுதிகளில் தடவி வரலாம், சளி, இருமலுக்கும் சிறந்த மருந்து, தொண்டை கரகரப்பு, மூக்கடைப்புக்கும் ஏற்றது, காது வலிக்கு காதில் ஒரு சொட்டு விட்டால் போதும்….

புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி , பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

தாய்ப்பால் ஊட்டுவதினூடாக தனது அழகு சீர்குலைந்துவிடுமென சில தாய்மார் கருதுகின்றனர். ஆனால், விஞ்ஞான ரீதியான விளக்கப்படி தாய்ப்பால் ஊட்டுவதினுடாக தாயின் மனநலம் பாதுக்கப்படுகின்றது. இங்கு தாயின் அழகு கூடுமே தவிர குறையாது;. கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் தாய்க்கு வருவது தடுக்கப்படுகிறது.தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் நிலையில், 98 சதவீத அளவுக்கு கர்ப்பம் ஆவது தடுக்கப்படுகிறது. மேலும் தாயின் கர்ப்பப்பை சுருங்கி பழைய நிலைக்குத் திரும்ப தாய்ப்பால் உதவுகிறது. குழந்தை பிறந்த பின் ஏற்படும் அதிக இரத்தப் போக்கும் தடுக்கப்படுகிறது.

குழந்தையை அடிக்கடி பாலூட்ட அனுமதிக்காத தாய்மார்களுக்கு மார்பகத்தில் தாய்ப்பால் கட்டி வேதனை எடுக்க ஆரம்பிக்கும். இம்மாதிரி நிலை, அளவுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரந்திடும் தாய்மார்களுக்கும் ஏற்படுகிறது. இதனால் குளிர் காய்ச்சல் ஏற்பட்டு தாய்மார் அவதிப்படுவது உண்டு. சில நேரங்களில் மார்பகத்தில் கட்டியுள்ள பால் சீழாக மாறும் நிலை ஏற்பட்டு, அதனை அறுவைச் சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். தாய் தன் பாலைக் கொடுக்க முடியாத நேரத்தில், மற்றொரு தாயின் பாலைக் கொடுப்பதில் தவறில்லை.

ஒரு பெண் தாய்மை அடையும்போது இயற்கையாகவே பெண்களின் உடல் அமைப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன கருவான குழந்தையை தட்ப வெப்ப சூழ் நிலைகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக காப்பதற்கு உதவியாக கருவறை என்னும் கருப்பையில் அக் குழந்தைக்கு தேவையான, காற்று , நீர், மற்றும் அதற்கு தேவையான உணவு, அத்தனையும் தாயின் தொப்புள் கொடி வழியாக செலுத்தப்படும் பிறந்த குழந்தைக்கு இந்த உலகில் வந்தவுடன் உணவுப் பொருளாக தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கிறது

குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் கண்டிப்பாக ஒவ்வொரு தாயும் தாய்ப்பால் கொடுத்திட வேண்டும். சிசேரியன் பிரசவம் எனில் மயக்க நிலையிலிருந்து தாய் வெளிவந்த உடன் பாலூட்டத் தொடங்கிவிடலாம். குழந்தை பிறந்த உடனே பாலூட்டத் தொடங்கினால்தான் பால் சுரப்பு அதிகமாக இருக்கும். அதுவும் குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மஞ்சள் நிற - நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்த சீம்பாலை கட்டாயம் குழந்தைக்கு தாய் கொடுக்க வேண்டும். பிரசவம் ஆகிய முதல் மூன்று நாட்கள் இந்த ‘கொலஸ்ட்ரம்” என்ற சீம்பால் - வெளிர் மஞ்சள் நிற பால் சுரக்கும். இவற்றில் நோய் எதிர்ப்பு அணுக்களும் புரதச் சத்தும் நிறைந்திருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் அல்லது வயது முதிர்ந்தவர்களிடம் இந்த மஞ்சள் நிற சீம்பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அந்தப் பாலை பீய்ச்சி வெளியேற்றிவிட வேண்டும் என்றும் கூறுவர். உண்மையிலேயே இது மிகவும் தவறான கருத்தாகும். விஞ்ஞான விளக்கங்களின்படி இந்த சீம்பாலிலே குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்திகள் கூடவே காணப்படுகின்றது. பாலூட்டும் போது கடைசியில் வரும் பாலில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். இது குழந்தைகளுக்கு அதிகப்படியான சக்தியை அளிக்கும்.

சில தாய்மாருக்கு தனது பிள்ளைக்கு தேவையான அளவு பால் சுரப்பதில்லை என்று ஒரு ஆதங்கம் காணப்படுவதுண்டு. சிலருக்கு முதல் ஒன்றிரண்டு நாட்கள் பால் சுரக்கும் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால், குழந்தை உறிஞ்சிக் குடிக்கக் குடிக்க பால் சுரக்கும் அளவும் அதிகமாகும். அத்தாய் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலம் உள்ள நிலையில் காணப்படின் தாய்க்கு தடையின்றி தாய்ப்பால் உறுதியாகச் சுரக்கும். இது இயற்கையானது. அதேநேரம், மனோ ரீதியானதும்கூட. எனவே, தனக்குப் போதிய அளவு தாய்ப் பால் இல்லையே என்ற மனநிலையைத் தவிர்த்து தனது குழந்தைக்கு “நிச்சயம் பால் கொடுப்பேன்’ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தாலே போதும்; அதிகபட்சம் 500 மில்லி லிட்டர் தாய்ப்பால் ஒரு நாளைக்குச் சுரக்கும் என்பதை ஒவ்வொரு தாயும் உணர வேண்டும். சில தாய்மாருக்கு மார்பகங்கள் சிறிதாக இருந்தால் குறைந்த அளவுதான் பால் சுரக்கும் என நினைப்பது முற்றிலும் தவறானது. மார்பகத்தின் அளவிற்கும் பால் சுரக்கும் தன்மைக்கும் தொடர்பே கிடையாது. இதனை ஒவ்வொரு தாயும் புரிந்து கொள்ள வேண்டும்.

சில தாய்மாருக்கு சில பாரதூரமான நோய்கள் காணப்படின் உதாரணமாக, காச நோய், மலேரியா மற்றும் டைபாய்டு காய்ச்சல் போன்ற நோய்கள் இருக்கும்போது குழந்தைக்குத் தாய்ப் பால் ஊட்டலாமா? என்ற ஐயப்பாடும் ஏற்படுவதுண்டு. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் தங்கள் டாக்டருடன் கலந்துரையாடி தாய்ப்பாலைக் கொடுக்கலாம். மேலும், குழந்தைக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் சில தாய்மார் பாலூட்டுவதை நிறுத்த எத்தனிப்பர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் அதிலுள்ள நோய் எதிர்க்கும் சக்தியான “இம்னோ குளோபிலின்’ என்ற புரதச்சத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி வயிற்றுப் போக்கினைக் குணப்படுத்த பெதும் உதவுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

குழந்தைக்கு எவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதில் சில கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் நிலையில், தண்ணீர்கூட கொடுக்கத் தேவை இல்லை. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது என்ற உறுதியான முடிவை ஒவ்வொரு தாயும் எடுக்க வேண்டும். புட்டிப்பாலை இயன்றவரை தவிர்க்க வேண்டும். தாய்ப்பாலுக்குப் பகரமாக வேறெந்த மாற்றுவகைத் தயாரிப்புகளான பால் மாவினை தவிர்க்க வேண்டும். 4 மாதங்கள் முதல் டாக்டர் அல்லது பிரதேச வைத்திய ஆலோசகரின் ஆலோசனைப்படி சில உணவு வகைகளைக் கொடுக்கலாம்.

மூன்றாம் உலக நாடுகளில் தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பாகவும், தாய் சேய் தொடர்பாகவும் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எமது இலங்கையில் இத்தகைய செயற்றிட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப் பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தது. இலங்கையில் சுமார் 75 சதவீதமான தாய்மார் தமது குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதகாலத்திற்கு தாய்பாலை மட்டுமே உணவாகக் கொடுப்பதாகவும் இது ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அண்மைய ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.

கடந்த ஏழு வருடங்களில் மாத்திரம் இந்த நிலைமை சுமார் 25 சதவீதத்தினால் அதிகரித்திருப்பதாகவும், இதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், இலங்கை சுகாதார அமைச்சின் தாய்/சேய் நலன்பிரிவு உள்ளிட்ட பல அமைப்புக்களினதும் கடுமையான பிரச்சாரமே காரணம் என்றும் கருதப்படுகிறது.

நாங்கள் வாழும் காலகட்டம் வர்த்தகமயமாக்கப்பட்ட ஒரு காலகட்டமாக காணப்படுகின்றது. எனவே, குழந்தைகள் பால்மா தொடர்பான பல்வேறுபட்ட விளம்பரங்கள் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கைப் போன்ற சில நாடுகளில் இத்தகைய விளம்பரங்கள் தடைசெய்யப்பட்டுமுள்ளன. விளம்பரங்களால் கவரப்பட்டு தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு பால்மா வகைகளை எமது தாய்மார் கொடுக்க விளைவதையும் காணுகின்றோம். உண்மையிலேயே இது பெரும் தவறாகும். இறைவன் எமக்கருளிய வளத்தினை எமது குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளின் உரிமைகளையும் பேண வேண்டியது தாய்மாரின் கடமையாகும். அதாவது, தாய்ப்பால் ஒரு குழந்தையின் உரிமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மறந்து செயற்படுவது இயற்கைக்கும் எமது குழந்தைக்கும் நாம் செய்யும் துரோகமாகும்.

இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள்


உலகின் 6 கண்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

கால்பந்து விளையாட ஆரம்பித்து 76 ஆண்டுகளுக்குப்பின் முதன்முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது ஸ்பெயின். 1974-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனியிடமும்இ 1978-ம் ஆண்டு ஆர்ஜென்டீனாவிடமும் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து கோப்பையை தவறவிட்ட நெதர்லாந்து அணி தற்போது மூன்றாவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் உலகக் கோப்பையை வெல்லும் துடிப்போடு இறுதி ஆட்டத்தில் களமிறங்குகின்றன. 11.07.2010

உலக மக்கள் தொகை நாள் ( World Population Day)


உலக மக்கள் தொகை தினம்
உலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. “பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு’ என்பது இவ்வாண்டின் தொனிப் பொருளென ஐ.நா. சனத் தொகை நிதியம்(UNFPA) பிரகடனப்படுத்தியுள்ளது.

(UNFPA) நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அஹ்மத் ஒபெய்ம் உலக மக்கட் தொகை தினம் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில்; “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் மரண வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின் மையாக விளங்குகின்றது. என்றிருந்தார்.

1987ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் திகதியை (World Population Day, recognized by the UN ) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி 2009 ஜூலை 10 ம் தேதி உலகின் மக்கள் தொகை 6,770,073,396 (00:51 GMT (EST+5) Jul 10, 2009) அதாவது 677 கோடியாகும். சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு 2,160,000 பேர் என்ற வேகத்தில் அதிகரித்து வருவதாக மதிப்பீட்டின் பிரகாரம் கூறப்படுகின்றது.

உலக சனத்தொகை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகைக் கல்வி நிறுவகத்தின் அறிக்கை பிரகாரம் கி.பி. 01இல் உலக சனத்தொகை சுமார் 20 மில்லியன்களாக காணப்பட்டது. இத்தொகை கி.பி. 1000ஆம் ஆண்டில் 275 மில்லியனாகவும், கி.பி. 1500ஆம் ஆண்டில் 455 மில்லியனாகவும், 1650ஆம் ஆண்டில் 500 மில்லியனாகவும், 1750ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் காணப்பட்டது. இவ்வாறு அதிகரித்த மக்கள் தொகை 1804ஆம் ஆண்டில் 1 பில்லியனாகவும், 1850ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாகவும், 1900 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாகவும், 1927ஆம் ஆண்டில் 2 பில்லியனாகவும், 1950ஆம் ஆண்டில் 2.55 பில்லியனாகவும், 1960ஆம் ஆண்டில் 3 பில்லியனாகவும், 1975ஆம் ஆண்டில் 4 பில்லியனாகவும், 1987ஆம் ஆண்டில் 5 பில்லியனாகவும் உயர்ந்தது. இத்தொகை 1990ஆம் ஆண்டில் 5.3 பில்லியனாகவும், 1995ஆம் ஆண்டில் 5.7 பில்லியனாகவும், 1999ஆம் ஆண்டில் 6பில்லியனாகவும், 2006ஆம் ஆண்டில் 6.5பில்லியனாகவும் உயர்ந்து தற்போது (2009 ஜுலை) 6.76 பில்லியனாக ஆகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 7 பில்லியனாகவும், 2020ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 8.8பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக பல மடங்குகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடியும்.

இன்று உலகளாவிய ரீதியில் அதிக சனத்தொகைக் கொண்ட 15 நாடுகளை எடுத்துக் கொள்ளுமிடத்து மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி பின்வருமாறு அமைந்துள்ளது.

1. சீனா 1,331,630,000 (19.67%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
2. இந்தியா 1,165,930,000 (17.22%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
3. ஐக்கிய அமெரிக்க 306,829,000 (4.53%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
4. இந்தோனேசியா 230,512,000 (3.4%) ஜுன் 24, 2009 மதிப்பீட்டின்படி
5. பிரேசில் 191,437,000 (2.83%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
6. பாக்கிஸ்தான் 166,826,000 (2.46% ) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
7. பங்களாதேஸ் 162,221,000 (2.4%) ஐ.நா மதிப்பீட்டின்படி
8. நைஜீரியா 154,729,000 (2.29%) ஐ.நா மதிப்பீட்டின்படி
9. ரஸ்யா 141,832,000 (2.1%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
10. ஜப்பான் 127,580,000 (1.89%) மே 1, 2009 மதிப்பீட்டின்படி
11 மெக்சிகோ 109,610,000 (1.62%) ஐ.நா மதிப்பீட்டின்படி
12. பிலிப்பைன்ஸ் 92,226,600 (1.36%) ஜனவரி 1, 2009 மதிப்பீட்டின்படி
13. வியட்னாம் 88,069,000 (1.3%) ஐ.நா. மதிப்பீட்டின்படி
14. ஜெர்மனி 82,062,200 (1.21%) ஜனவரி 1, 2009 ஐ.நா. மதிப்பீட்டின்படி
(15) எத்தியோப்பியா 79,221,000 (1.17%) ஜுலை 5, 2008 மதிப்பீட்டின்படி ஆகியன அமைந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட அட்டவணைப்படி உலக சனத்தொகையில் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் ஆகியன கூடிய சனத்தொகைக் கொண்ட நாடுகளாக இருப்பதை அவதானிக்கலாம். 2009ஆம் ஆண்டு ஜுலை 05ம் திகதியின் மதிப்பீட்டின் பிரகாரம் இப்பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1 ஆகவும், பிறப்புவீதம் 1000 பேருக்கு 17.9 வீதமாகவும், இறப்பு வீதம் 1000 பேருக்கு 6.6 வீதமாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் 2001 ஆம் ஆண்டு குடித்தொகை கடிகாரத்தின் பிரகாரம் 18,797,257 தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20,010,000 தொகையாகவும் இருந்த குடித்தொகை தற்பொழுது 2009ஆம் ஆண்டு மதிப்பின் படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக்கும் போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் கருவளவீதமானது 1965 ஆம் ஆண்டில் 5.19 வீதமாகவும், 1975 ஆண்டில் 3.6 வீதமாகவும், 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு குறைவடையும் போக்கானது, பெண்கள் கல்வியில் ஈடுபாடு, திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.

உலகளாவியரீதியில் தற்பொழுது வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது, குடித்தொகைக் கடிகாரத்தின் 2009 ஆண்டு கணிப்பின் படி, குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது. எனினும் 2050 ஆம் ஆண்டில், குடித்தொகை வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகின்ற பொழுதிலும், உலக சனத்தொகையானது 900 கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்லுமாயின் 2075 ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும் 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணங்களாக பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பன அமைந்துள்ளன. உலக மக்கள் தொகை நிர்ணயப்படி பிறப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் கருவலம் பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கின்றது. இனப்பெருக்க திறன்கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ‘கருவலம்” எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். நாடுகளின் பிறப்பு வீதமானது உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் பிரிக்கும்போது வருகின்றது. பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது, மதம், கல்வி நிலை, பொருளாதார நிலை, இருப்பிடம் போன்றன அமைகின்றன.

குறித்தொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எண்ணிக்கை ‘இறப்பு வீதம்” என்பர். நாடுகளின் இறப்பு வீதம் எனும்போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுக்கும்போது பெறப்படும் எண்ணிக்கையாகும். பொதுவாக இறப்பு வீதத்தைவிட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகைப் பெருக்கத்திற்கான காரணமெனலாம். நவீன காலத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் பெருமளவுக்கு இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.

பூமியில் உள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக இரண்டு லட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.

பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.மனித இனத்தின் பெருக்கம் பூமியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பையும் அதிகரிக்க வகை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தியடையாத நாடுகளிலே அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக வெறும் 20 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் அபிவிருத்தியடையாத நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதம்.

ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந்தாலும் குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் வளம் வறண்டு விடும். வாழ்வு வீழ்ந்து விடும். அளவோடு பெற்றால் தான் வளமோடு வாழ முடியும். வீட்டுக்குப் பொருந்தும் இந்த நியதி நாட்டுக்கும் பொருந்தும்.

ஜூன் 2009இல் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ரஸ்யா, இங்கிலாந்து ஆகிய ஜி.8 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ‘உலக வறுமையும், பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது உலகில் உள்ள ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகிறார். உலகில் 6 விநாடிக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கிறது. ஆப்பிரிக்க மண்டல நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர் கொள்ள முழுமையாக நன்கொடைகளையே நம்பியுள்ளோம்.” என்றார். இக்கருத்து இவ்விடத்தில் ஆழமாக ஆராயப்படல் வேண்டும்.
2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியைத் தாண்டி விடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும். 2010 - 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.

ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் தெரிவித்துள்ளார். 2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியில்லை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என்ற உறுதியாகச் சொல்லலாம்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவளம் அருகி, மண் அரிப்பு பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. கான்கிரீட் காடுகளின் வளர்ச்சியால் பயிர் காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகிறது. கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச் சூழல் சீர் கெடுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறைஇ போக்குவரத்து நெரிசல், மருத்துவமனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நகரங்கள் நரகங்களாகின்றன.

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை நேரடியாக நோக்குவோம். அவை அடிப்படையில் உணவுப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, வதிவிடப் பிரச்சினை என வகுக்கலாம். கல்வி வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி முதலிய சமூக நலச் சேவைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளென பல குடித்தொகை பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன. இவற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுவன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே.

குடிசனப் பெருக்கத்தினால் இன்றைய உலகம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை உணவுப் பிரச்சினையாகும். அதிகரித்துவிட்ட மக்களுக்கு போதிய உணவுமில்லை. ஊட்டமான உணவுமில்லை. உலகில் மக்கள் தொகை மூன்றிலொரு பங்கினர் உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கின்றனர். மூன்றிலொரு பங்கினருக்கு மாத்திரமே போதுமானளவு உணவு கிடைக்கின்றது. அத்துடன், வேலையில்லாப் பிரச்சினை குறைவிருத்தி நாடுகளில் அதிகளவில் தலைதூக்கியுள்ளன. அதனால்தான் அண்மைய ஆண்டுகளில் பலவிதமான தொழில்களை நாடி இலங்கை, இந்திய மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் இடம்பெயர்கின்றனர். மூளைசாலிகள் வெளியேறுவதும், மனிதவலு வேளியேறுவதும் ஒரு நாட்டின் ஏற்பட்டிருக்கும் வேலையில்லாமையினாலும் ஊதியக் குறைவினாலுமாகும். பொதுவாக பயிர்ச்செய்கை பொருளாதாரத்திலேயே தொழில் பிரச்சினை அதிகளவு காணப்படுகிறது. அதிகரிக்கும் மக்கட் தொகைக்கு வேலை வழங்கும் திறன் பயிர்ச்செய்கைக்கு இல்லை. அதனால்தான் குறைவிருத்தி நாடுகள் இன்று கைத்தொழில் ஆக்கங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்று முக்கியமாக நகர்ப்புறங்களில் வதிவிடப் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மக்கள் தொழில் நாடி நகரங்களில் குடிபெயருவதால் நகரங்களில் இருப்பிடமின்மை உருவாகின்றது. நியுயோர்க், லண்டன், ஹொங்கொங், பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் மாத்திரமன்றி கொழும்பு போன்ற சிறிய நகரங்களிலும் வதிவிடப் பிரச்சினைகள் உருவாகுகின்றன. அதனால்தான் வானளாவிய மாடிக்கட்டடங்கள் இந்த நகரங்களில் கட்டப்பட்டு வருகின்றன. பண்டைய காலம் முதலே குடித்தொகைப் பிரச்சினை பொருளாதார புவியியல் அறிஞர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. இப்பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து அறிஞர்கள் மக்கள் தொகைக் கோட்பாடுகளை விஞ்ஞானபூர்வமாக உருவாக்கியுள்ளனர்.

மேலும், சனத்தொகை பிரச்சினை உக்கிரமடைய உலகக் குடிப்பரம்பலும் ஒரு காரணமாக அமைகின்றது. கிழக்காசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் வடக்கில் அமெரிக்க நாடுகளிலும் சனத்தொகை பரம்பல் அதிகரிப்புக்கான காரணங்களாக பயிர்ச்செய்கைக்கு உகந்த விளைநிலங்கள் காணப்படுவதும், உகந்த காலநிலை காணப்படுவதும் பிரதான காரணிகளாக அமைகின்றன. அதேநேரம், அதிகக் குளிர்ப் பிரதேசங்கள், அதிக வெப்பப் பிரதேசங்கள்ää அதிக ஈரழிப்பான பிரதேசங்கள், அதிக உயரமான பிரதேசங்களில் சனத்தொகைப் பரம்பல் மிக ஐதாகக் காணப்படுகின்றது.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து இரு வேறு கருத்துக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ‘பிறக்கும் குழந்தை வயிரோடு மட்டும் பிறக்கவில்லை. உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது’ இது சமவுடமைவாதிகளின் கருத்தாகும். அதாவதுää பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சமவுடமைவாதம் மூலதனமாகவே கருதுகின்றது. மறு சாரார். ‘கரங்கள் உழைப்பது சில காலம்தானேஇ ஆனால் காலம் முழுக்க வயிற்றுக்கு சோறிட வேண்டுமே’ என்று வேதனை கொள்கிறது இது முதலாளித்துவவாதத்தின் அடிப்படை. ‘ஒரு ஜோடிக் கரங்கள் பல ஜோடி வயிற்றுக்கு காலமெல்லாம் காப்பாற்றுமே’ என்ற நம்பிக்கையை பின்னைய கருத்து ஏற்படுத்துகின்றது. இதை வேறுவிதமாகக் கூறும்போது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமையாகவே கொள்ளப்படுகின்றது.

அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும்.

அதே போல மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட மக்கள் தொகை குறைந்துவிட்டால் அது பேராபத்தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மகளின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொருளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது. இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும். சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது இருக்கிறது என்பதே உண்மை. அதன் பொருட்டே சிறுகுடும்ப நெறியை பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் அளிக்கிறது.