வெள்ளி, 2 அக்டோபர், 2020

உலகின் 4 இடங்களில் அண்டை நாடுகளுக்கு இடையே மோதல்- உலகப் போர் வெடிக்குமா..?

உலகின் நான்கு இடங்களில் அண்டை நாடுகளுக்கு இடையே தற்போது மோதல்கள் நிலவுவதால் உலகப் போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில், உலகின் நான்கு இடங்களில் அண்டை நாடுகளுக்கு இடையே தற்போது மோதல்கள் நிலவுவதால் உலகப் போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் போரில் ஈடுபட்டுள்ளன, இது ரஷ்யாவுக்கு மிகப் பெரிய போர்க்களம் மாறும்.
இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எதிராக ஏவுகணைகள் மற்றும் டாங்கிகள் பயன்படுத்துகின்றன, முஸ்லீம் பெரும்பான்மை உள்ளஅஜர்பைஜான் இப்போது ஆர்மீனியாவை குறிவைக்க டரோனைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா ஆகியவை நேரடிப் போரில் ஈடுபட்டிருந்தாலும், உலகின் வேறு சில நாடுகளுக்கு இடையிலான பதற்றமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ரஷ்யா மற்றும் துருக்கி இருவரும் அஜர்பைஜான்-ஆர்மீனியா போரில் வெளிப்படையாக ஈடுபடக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, துருக்கி அஜர்பைஜானுக்கு தனது ஆதரவை பகிரங்கமாக அறிவித்துள்ளது, ஆனால் ரஷ்யா இன்னும் ஆர்மீனியாவுக்கு ஆதரவாக முன்வரவில்லை, ஆனால் அஜர்பைஜான் படைகளுக்கு எதிராக ரஷியா முடிவு எடுக்கும் நேரம் இது.அதே நேரத்தில், ஆர்மீனியாவுக்கு எதிராக அஜர்பைஜானை ஆதரித்ததற்காக பாகிஸ்தான் மற்றும் துருக்கிக்கு எதிராக ரஷியா பெரிய நடவடிக்கை எடுக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான போருக்கு முக்கிய காரணம் நாகோர்னோ-கராபாக் பகுதி. அஜர்பைஜான் இந்த பிராந்தியத்தின் மலைப் பகுதியை அதன் சொந்தம் என்று விவரிக்கிறது, அதே நேரத்தில் ஆர்மீனியா அதை ஆக்கிரமித்துள்ளது. 1994 ல் சண்டை முடிவடைந்ததிலிருந்து இப்பகுதி ஆர்மீனியாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. 2016 ஆம் ஆண்டில், இந்த பகுதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு யுத்தம் ஏற்பட்டது, இதில் 200 பேர் கொல்லப்பட்டனர். இப்போது மீண்டும் இரு நாடுகளும் நேருக்கு போரிட உள்ளன. இரு நாடுகளும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

ஆர்மீனியாவின் ஏவுகணை தாக்குதல்களில் அஜர்பைஜான் இராணுவத்தின் பல டாங்கிகள் அழிக்கப்பட்டுள்ளன. ஆர்மீனிய படைகள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை நடத்த அஜர்பைஜான் ட்ரோனைப் பயன்படுத்துகிறது. துருக்கியில் இருந்து வாங்கிய ட்ரோன்களை அஜர்பைஜான் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜர்பைஜான் துருக்கியில் இருந்து பேபர்கர் டிபி 2 ட்ரோனை வாங்கியது.

அஜர்பைஜானுக்கு எதிராக அணு ஆயுதங்களைக் கொண்ட ரஷிய இஸ்கந்தர் ஏவுகணையைப் பயன்படுத்தும் என ஆர்மீனியா அச்சுறுத்தியுள்ளது. இஸ்கந்தர் ஏவுகணை என்ற பாலிஸ்டிக் ஏவுகணை ஒரு நவீன ஆயுதம் இந்த ஏவுகணையின் உள்நாட்டு மாறுபாடு 400 கி.மீ தூரத்தைக் கொண்டுள்ளது, மேலும் இது 700 கிலோகிராம் போர்க்கப்பலைக் குறிவைக்கும் திறன் கொண்டது. இஸ்கந்தர் ஏவுகணை ரேடரைத் தாக்கும் திறன் கொண்டது, அத்துடன் எதிரி ஏவுகணைகளின் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அதே வேளையில் இலக்கை அழிக்கும்.

அது போல் கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் குறைந்தது. ஆனால் லடாக் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதவில்லை என்று கூறி சீனா எரியும் தீக்கு எரிபொருளை சேர்த்து உள்ளது.

சமீப காலங்களில் சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சவூதி அரேபியா சமீபத்தில் பத்து ஈரானிய பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது, இது ஈரானுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான பதற்றமும் சமீபத்தில் அதிகரித்துள்ளது, இரு தரப்பினரும் ஒரு படி பின்வாங்கி பேச்சுவார்த்தை மூலம் தங்கள் வேறுபாடுகளைத் தீர்க்க விரும்பவில்லை.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

மூணாறு

கேரள மாநிலத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய இடுக்கி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றிய 23 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் பெருமழை காரணமாக, கடந்த 07-08-2020 அன்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் உறங்கிகொண்டிருந்தபோதே வீடுகளோடு புதையுண்டு அதில் பலரும் உயிரிழந்தனர். இதுவரை 49 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது; இன்னும் பலரது நிலை என்னவென்றே தெரியாமல் இருப்பதுதான் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அந்த அற்புதமான நிலத்திற்காகவும், மக்களுக்காகவும் பிராத்திக்கின்றேன்.

தெரிந்து கொள்வோம்

#மூணாறு, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஒரு மலைவாசஸ்தலம், வருகைத் தருவதற்கும், அறிந்து கொள்வதற்கும் அனுபவிப்பதற்குமான இயற்கை அழகினைக் கொண்டிருக்கும் ஒரு ரம்மியமான இடமாகும். முதிரப்புழா, நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும் மூன்று மலை நீரோடைகளின் சங்கம இடத்தில் அமைந்துள்ளது - மேலும், ”மூணாறு” என்ற வார்த்தையும் மலையாளத்தில் மூன்று ஆறுகள் என்று பொருள்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் அமைத்துள்ள மலைவாசஸ்தலம் காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை ஓய்விடமாக இருந்தது. ஆங்கில கன்ட்ரி காட்டேஜ்களின் வடிவத்தில் மூணாறு நகரத்தில் காலனிய சுவடுகள் இன்னும் உயர்ந்து நிற்கின்றன. கன்னிக்காடுகள், வனாந்தரங்கள், உருட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் மூணாறில் பயணியருக்கு கிடைக்கும் சிறந்த விடுமுறை அனுபவத்தின் பகுதிகளாகும். மூணாறு நீலக்குறிஞ்சிக்குப் பெயர் பெற்ற ஒன்று. அரிய மலர் வகையான இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே மலரும். மூணாறில் ”குறிஞ்சிப்பருவம்” ஒரு கண்கொள்ளாக்காட்சி, நீலக்குறிஞ்சி மலர்களால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்திருக்கும்.


அற்புதமான மனிதர்களையும், ரம்மியமான இயற்கை  சூழ்நிலையும் அமைய பெற்ற இந்த மலைவாசல்தளம் மலை ஏற்ற வீரர்களின் சொர்க்கம். நான் அலைந்து திரிந்த இந்த இடத்தில்  ஏற்பட்டிருக்கும் இயற்கை அனர்த்தம் கவலைகொள்ள செய்கின்றது.

மூணாறு மீண்டும் துளிர் கொள்ளட்டும். 🌱⛰ #Munnar

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

எதிர்பாராத திசையில், எதிர்பாராத அதிர்ச்சி..!

எனது கணிப்பு சரியாக இருந்தால்

ஒரே நாளில் ராணுவம் Pruthivinager நகரிலிருந்து tentulia வரை கடக்கும். Mahananda river ஆற்றோரம் எல்லையாக கொள்ளப்படும். 

பௌதிகம் சார் போர் உபாயம்.

©️Amalathas Elroy

புதன், 8 ஜூலை, 2020

" கோ எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே,"

" கி.மு 262 ஆண்டு மௌரியச் சக்ரவர்த்தி அசோகர் கலிங்கப் போர்புரிந்து இருக்கக்கூடாது. 

யுத்தம் ஒரு கொடுமையான வன்முறை என்பதை அவர் உணர்ந்து இருக்கக்கூடாது.

அவர் மனம் மாறி மாறி பௌத்த மதத்தை தழுவி இருக்கக்கூடாது. 

அயல்நாட்டுக்கு மஹிந்த, சங்கமித்தை போன்ற  தர்ம மஹா மாத்ராக்கள் எனும்  தூதுவர்களை அனுப்பி பௌத்த மதத்தைப் பரப்பி இருக்கக்கூடாது. 

அதை  சைவ மன்னனாகிய தீசன் வரவேற்று இருக்கக்கூடாது.

>>> இதெல்லாம் நடந்து விட்டால் இவ்வாறான பிதற்றல்களை எங்கள் காதுகளில் கேட்கின்ற நிலை எங்களுக்கு ஏற்பட்டிருக்காது. பண்டைய மதத்தவர்கள்  அனைவர்களுக்கும் மன உளைச்சலையும் இது ஏற்படுத்தி இருக்காது.

வடுக்களை விதைப்பவர்கள் புத்தர் கண்ட நான்கு உண்மைகளையும், எட்டு நெறிமுறைகளையும் முறையாக கடைபிடித்தாலே போதும். நாடு வளம் பெறும்..

( தேவநம்பிய தீசனின் ஆட்சிக்காலம் வரை இலங்கையில் இந்துமத வழிபாடுகளும், நம்பிக்கைகளும் வலுவாக நிலைகொண்டிருந்தன. மக்களிடையே லிங்கவழிபாடு பிரதானமாக இருந்ததுடன், நாகதீபம் உள்ளிட்ட பகுதிகளில் சமணம் மற்றும் பழந்தமிழ் வழிபாடான ஆசிர்வகமும் வழக்கத்தில் இருந்தன. பூர்வீக்குடிகளான நாகர்கள் நாகவழிப்பட்டையும், இயக்கர்கள் ஆவி வழிபாட்டையும் மேற்கொண்டு வந்தனர்..)

“கோ எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே” என்பதற்கு பொருந்தி தீசனின் தனிப்பட்ட முடிவினால் இலங்கையின் முழுவரலாறும் மாற்றி அமைக்கப்பட்டது.   வலிகளும், உயிர் பலிகளும் வரலாறுகளின் மேல் கட்டி அமைக்கப்பட்டது..

நவீனத்துவத்தில் பிரபஞ்சத்தில் மனிதப் வரலாறுகளை ஆய்வு செய்வதை விடுத்து, நிகழ்ச்சி நிரல்கள் அடங்கிய மத வரலாறுகளை ஆய்வுக்கு உட்படுத்துவதால் எந்த காலத்திலும் இந்த தேசம் மீட்சி பெறாது."

அ. எல்றோய்

ஞாயிறு, 31 மே, 2020

தமிழர்களின் ஆன்மா மீது தொடுக்கப்பட்ட கொடிய வன்முறை! நடந்தது என்ன..?


இலங்கை தமிழ் மக்களை மாத்திரமின்று உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது இந்த நிகழ்வு. அறிவின் ஆன்மா இலக்கு வைக்கப்பட்ட நாள் இன்று..!

தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்திய கொடுஞ்செயல்! யாழ்.நூலகம் எரிப்பு! 39 வருட நிறைவு 31.5.2020

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தோராம் ஆண்டு ஆனி மாதம் முதலாம் நாள் நள்ளிரவு. ஊரடங்கு உத்தரவையும் மீறி அந்தக் கொடூரம் மிக்க துயரச் செய்தி யாழ் நகரரெங்கும் பரவியது. செவியுற்ற கல்விமான் பலர் நெஞ்சை இறுகப் பிடித்துக்கொண்டனர். இச்செய்தியைச் செவியில் கேட்ட மறுகணமே உயிர் நீத்தார் தாவீது அடிகள்.

எங்கும் சாம்பல் படிந்திருந்த அந்த அதிகாலைப் பொழுதில் ஊரடங்கு உத்தவை மீறியும் சிலர் கூடிக் கதறினர். ஊரடங்கு தளர்த்தப்பட பலநூறு மக்கள் அங்கு குழுமிக் குமுறினர். அந்தக் கோரக் காட்சியைக் கண்டு கண்ணீர் உகுத்தனர்.

அங்கே தமிழரது பண்பாட்டு நகரத்தின் மையத்தில் வெண்ணிறமான அழகிய மாடங்களோடு அறிவின் களஞ்சியமாய் உயர்ந்து நின்ற யாழ் பொது நூலகம் கருகிச் சிதைந்து கிடந்தது. அறிவூட்டியவையும் அறிவூட்டக் காத்திருந்தவையுமான ஆயிரக்கணக்காக நூல்கள் கருகிச் சாம்பாலாகக் காற்றில் கலந்துவிட்டிருந்தன.

அரச நிர்வாகத்தில் இயங்கிவந்த அரச நூலகத்தை அதே அரசு எரித்தழித்த துயரம் உலகில் முதற்றடவையாக நடந்து முடிந்திருந்தது.

யார் மீது யாருக்கு இந்தக் கொலைவெறி?

ஸ்ரீலங்கா தமிழருக்கு எதிராக மேற்கொண்டிருந்த அடக்குமுறைகளுக்கெதிரான ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடைந்திருக்காத காலம் அது.

அக்கால ஜெயவர்த்தன அரசில் அமைச்சர்களாக இருந்தவர்களும் இந்த நூலக அழிப்பின் பின்னணியில் செயற்பட்டடோர் எனக் கருதப்பட்டவர்களுமான திரு காமினி திசநாயக்காவுக்கும் திரு அத்துலத் முதலிக்கும் தமிழரது விடுதலைப் போராட்டம் பெரும் தொல்லைகள் எதையும் கொடுத்திராத காலம் அது.

ஆயினும் இரவோடிரவாகச் சீருடை அணியாத சிங்கள இனம் சார்ந்த காவல்துறை தமிழரது அறிவுக் களஞ்சியத்தை வேரோடு அழிக்க முயன்றதன் காரணம் என்ன?

பேரினவாதிகளின் கோபம் தமிழினத்தின் மீதானதாக மட்டும் இருக்கவில்லை. பிரித்தானியர் காலத்திலிருந்தே அரச நிர்வாகத் துறைகளிலும் ஏனைய தொழிகளிலும் தமிழர் சிறந்து விளங்கக் காரணமாக இருந்த தமிழது அறிவின் மீதும் ஆற்றிலின் மீதும் பேரினவாதிகள் கொண்டிருந்த நீண்டகால வெறுப்பின் விளைவே இந்த நூலக எரிப்புக்கான முதன்மைக் காரணமாகும்.

தமிழரது அறிவூற்று அவரது கடுமையான உழைப்பிலிருந்தே தோன்றுகின்றது என்ற உண்மையை அறியாத மடமைத்தனம் கொண்டதாகவே அன்றும் பேரினவாதம் இருந்தது.

பேரினவாதம்  எண்பத்தொன்றில் நடத்திய யாழ் நூலக எரிப்பும், எண்பத்து மூன்றில் மேற்கொண்ட இனவழிப்புமே பின்னாளில் ஆயுதம் போராட்டம் வலிமையடைய வலுவான காரணங்களாக அமைந்தன என்பதை சிங்களம் இன்றளவிலும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

யாழ் நூலக எரிப்பு தொடர்பாக உலகளாவிய வகையில் எழுந்த கடுங் கண்டனங்களுக்குப் பின்னரும் தன் வரலாற்றுத் தவறை சிங்களம் உணரவில்லை என்பதற்குச் சான்றுகளாக 1984 இல் சிங்களம் மேற்கொண்ட ஹாட்லிக் கல்லூரி நூலக எரிப்பும் பின்னாளில் தமிழர் கல்வி மையங்கள் மீது தொடர்ந்த தாக்குதல்களும் உள்ளன.

யாழ் நூலகம்

அரும்பெரும் நூல்களைக் கொண்ட களஞ்சியமாக, முதியோரின் ஓய்விடமாக, அறிவுப் பசிக்கு விருந்தூட்டும் மண்டபமாக மட்டுமே இது திகழவில்லை. மத ஆலயங்கள் யாவற்றிலும் பெரிதாக, சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஈழத்தமிழர்களின் பெருங்கோவிலாக இந்நூலகம் திகழ்ந்தது.

யாழ்ப்பாண நூல்நிலையம் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் எஸ். பொ. இவ்வாறு குறிப்பிடுகின்றார். “ஈழத்தமிழர்களினது மான உணர்வுகளினதும் தனித்துவ அடையாளங்களினதும் அறிவுத் தாகத்தினதும் விடுதலை வேட்கையினதும் சமூக வாழ்க்கையினதும் ஆன்மீக உபாசனையினதும் தெய்வீகக் குறியீடாக இந் நூலகம் திகழ்ந்தது” என்கின்றார்.

யாழ்ப்பாணப் பிரதேசத்தின் நூலக வரலாறு குறித்துச் சுருக்கமாக நோக்கியவாறு யாழ் நூலக வரலாற்றை அணுகுவோம்.


பதின்மூன்றாம் நூற்றாண்டில் யாழ்ப்பாண அரசை ஆட்சி புரிந்தவர் ஆரியச் சக்கரவர்த்தி என்பார் ஆவர். இவர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சரஸ்வதி மகால் என்பதுவே வடக்கு ஈழத்தின் நூலக வரலாற்றின் தோற்றுவாய் எனக் கொள்ளலாம் என யாழ்ப்பாண நூல் நிலையம் என்ற ஆவண நூல் தெரிவிக்கின்றது.

ஆரியச் சக்கரவர்த்திகளின் வழியில் தோன்றிய பரராசகேகரம், செகராசகேகரன், அரசகேசரி என்போர் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றினர். செகராசசேகரன் காலத்தில் காலத்தில்தான் செகராசகேகரம் என்ற மருத்துவ நூலும் சேகராசசேகர மாலை என்ற சோதிட நூலும் வெளிவந்தன. இவர் காலத்தில் தமிழ்ப்புலவர் சங்கம் ஒன்று நல்லூரில் இயங்கி வந்ததாகத் தெரிகின்றது. இக்காலத்தில் சரஸ்வதி மகால் பெரும் எண்ணிகையில் நூல்களைக் கொண்டிருந்ததாகவும் புலவர் பெருமக்கள் அவற்றைப் பயன்படுத்தியதாகவும் இந்த ஆவண நூல் தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாணத் தமிழரசின் வீழ்ச்சிக்குப் பின் பல நூல்களும் நூல்நிலையங்களும் அழிந்து போயின. போத்துக்கேயர, ஒல்லாந்தர் போன்றோர் சுதேசிகளின் மொழி, மதம், பண்பாடு என்பவற்றை அழித்து தமது மொழி ,மதம் போன்றவற்றைத் திணிப்பதிலேயே முனைப்பாக இருந்தனர்.

பிரித்தானியர் ஆங்கிலம், கிறித்தவம் போன்வற்றைப் பேணியபோதும் தமிழரது மொழி மதம் சார்ந்த பேணல்களுக்கும் உதவினர். நூலகங்களை அமைத்தும் நூல்களை வெளியிட்டும் உதவினர். இந்திய மொழிகளிலேயே அச்சேறிய முதல் மொழியாகத் தமிழும் அச்சடிக்கப்பட்ட முதல் தமிழ்த் தாளாக இலங்கை வர்த்தமானியும் திகழ்ந்தன. இலங்கையில் வெளியாகும் அனைத்து வெளியீடுகளும் பிரித்தானிய அருங்காட்சியகத்திலும் இலங்கை அருங்காட்சியகத்திலும் இருக்க வேண்டும் என்ற விதியை 1885ம் ஆண்டு ஏற்படுத்தினர்.

இதன் விளைவாக வெளியான அனைத்து நூல்களினது விபரங்களும் வர்த்தமானியின் ஐந்தாவது பக்கத்தில் இடம்பெற்றன.

இந்த வெளியீட்டு விபரத் திரட்டைத் தொடர்ந்து நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்றது. ஆட்சி மன்றங்கள் யாவும் மக்களின் வரிப்பணத்தில் நூலகங்களை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இவ்வாறுதான் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் நூலகங்கள் தோன்றத் தொடங்கியிருந்தன.

அப்போதிருந்த யாழ்ப்பாண பட்டினசபையும் (ருனுஊ) தமக்கென பொது நூலகமொன்றை ஏற்படுத்தியது. அதுவே பின்னாளில் வளர்ந்து பெரு நூலகமானது.

இந்த நூலகத் தோற்றத்துக்கு முன்பாக ஆயிரத்து எண்ணூற்றி நாற்பத்தியிரண்டாம் ஆண்டு (1842) பொதுமக்கள் நூல்நிலையம் என்ற பெயரோடு ஒரு நூல்நிலையம் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டிருந்தது. எவ்.சி. கிறினியர் என்ற ஒரு நீதிமன்றப் பணியாளர் இந்த வாசகசாலையைத் தோற்றுவித்திருந்தார். இந்நூலகம் பெருமளவில் பயன்படுத்தப்படவில்லை. காலப்போக்கில் அழிந்துபோய்விட்டது.


யாழ் நூலகத் தோற்றத்துக்கு வித்திட்ட க. மு. செல்லப்பா

அச்சுவேலியைச் சேர்ந்த திரு. க. மு செல்லப்பா என்பார் யாழ் நீதிமன்றப் பணியாளராகக் கடமையாற்றியவராவர். இவர் தான் வாடகைக்குத் தங்கியிருந்த கந்தர்மடப் பகுதியில் ‘முன்னேற்ற நூற்றுவர் கழகம்’ ( வுhந pசழபசநளளiஎந hரனெசநன)  என்ற அமைப்பைத் தோன்றுவித்து இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஊட்டினார்.

பொது நூலகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் நெஞ்சில் தீயாகக் கனன்றுகொண்டிருந்தது. நூலகத்தை அமைக்க வேண்டுமானால் கணிசமான நிதி வேண்டும். மக்களிடத்தே பணம் திரட்டுவதென முடிவு செய்து அதற்கான விண்ணப்பங்களை அச்சிட்டு எங்கும் வழங்கினார். ‘யாழ்ப்பாணத்துக்கு ஒரு மத்திய வாசகசாலையும் நூற்கழகமும்’ (யு ஊநவெசயட குசநந வுயஅடை டுiடிசயசல in துயககயெ) என்பதே விண்ணப்பத்தின் தலைப்பாக இருந்தது.

நூலகம் ஒன்றுக்கான தேவையை தமிழர் இருக்குமிடம் யாவும் சென்று உணர்த்தினார். உருக்கம் மிக்க வேண்டுகோள் பலவற்றைத் தொடர்ச்சியாக விடுத்தார். இவரது கடும் உழைப்பு பல கல்விமான்களைத் தூண்டிவிட்டது.

நூல்நிலையம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முனைப்போடு ஒன்றிணைந்த பல அறிஞர், ஆர்வலர் என்போர் மத்திய கல்லூரி மண்டபத்தில் ஆனி 9, 1934 அன்று கூடினர். அங்குதான் முதன்முதலில் நூலக சபை உருவானது. இச்சபையின் தலைவராக திரு சி. குமாரசுவாமி அவர்களும் துணைத் தலைவராக வணபிதா. கலாநிதி ரி. ஐசாக் தம்பையா அவர்களும் தெரிவாயினர். இணைச் செயலாளர்களாக வழக்கறிஞர் சி. பொன்னம்பலம் அவர்களும் நீதிமன்றச் சக்கடத்தார் க.மு. செல்லப்பா அவர்களும் பொறுப்பேற்றனர்.

இக் கூட்டத்தில் முடிக்குரிய வழக்கறிஞர் திரு கனகசபை அவர்கள் நூலக உருவாக்கத்தைப் பிரேரணை ஒன்றின் மூலம் முன்மொழிந்தார்.

“வுhயவ ய உநவெசயட கசநந வுயஅடை டுiடிசயசல யளளழஉயைவழைn டிந கழசஅநன றiவா வாந ழசபைiயெட ளரடிளஉசiடிநசள யனெ ழவாநசள றாழ யசந pசநளநவெ யவ வாளை அநநவiபெ யள ழசபைiயெட அநஅடிநசள ழக வாந யளளழஉயைவழைn.”

இதுவே நூலகத் தோற்றத்துக்கு வித்திட்ட முதற் பிரேரணையாகும்.

இக் கூட்டத்தில் கணக்கு அறிக்கையோடு நூலகத்தினது நோக்கங்களையும் வெளியிட்டார் க.மு செல்லப்பா அவர்கள். மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கம் எனப் பெயர் பெற்றிருந்த இந்த நூலக சபையின் அன்றைய நோக்கங்களைத் தெரிந்து கொள்ளுதல் நூலக வரலாற்றை அறிய விழைவோருக்கு அவசியமானது.

1. தமிழ்க்கல்வியை மறுமலர்ச்சி செய்து ஊக்கப்படுத்தி வளர்த்தல்

2. பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தல்

3. பழைய ஓலைச்சுவடிகளான ஏடுகளை விலை கொடுத்து வாங்கி பக்குவப்படுத்தி பயன்செய்தல்

4. தமிழ்மொழி சம்பந்தமான ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்கப்படுத்தி வசதி வாய்ப்பு நல்குதல்.

5. தமிழ்மொழியில் உள்ள நூல்களை வேறு மொழிகளில் பெயர்;;த்து எழுதியும் பிற மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் பெயர்த்து எழுதியும் பயன் செய்தல்.

6. யாழ்ப்பாணத்தில் ஒரு மத்திய இலவச தமிழ் நூலகத்தையும் வாசகசாலையையும் அமைத்து நடத்துதல். நூலகம் உடனுதவும் தன்மையில் பிரதானமாகத் தமிழ் நூல்களைக் கொண்டதாகவும் ஓரளவு ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், பாளி நூல்களைக் கொண்டதாகவும் இயங்குதல்.

இச்சங்கம் இவ்வாறான முதன்மையான ஆறு நோக்களைத் தொடக்கத்திலேயே கொண்டிருந்தது.

இருபத்தியொரு வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலாரும் மாதமொன்றுக்கு 25; சதம் செலுத்தி அங்கத்தவராகலாம் எனவும் இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இவற்றோடு பல துணை விதிகளும் இணைக்கப்பட்டு நூலக வாசகசாலை  நிர்வாக யாப்பு உருவாக்கப்பட்டு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பலரது கடும் உழைப்பினால் நூல்கள் சேகரிக்கப்பட்டன. சி. என். இராசரத்தினம் என்பார் சேகரிக்கப்பட்ட நூல்களைப் பட்டியலிட்டுத் தொகுத்து நேர்த்தியாக அடுக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய இலவச தமிழ்நூல் நிலையச் சங்கத்தினரின் நிர்வாக சபைக் கூட்டம் 27-8-1934 அன்று நடைபெற்றது. அங்கு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முதன்மையானது,

‘ஆஸ்பத்தி வீதியில் மின்சார நிலையத்துக்குத் தென் பகுதியில் ஒரு கடையை வருடாந்தம் முந்நூறு ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து 1-8-1934 முதல் பயன்படுத்த வேண்டும்’ என்பதாகும்.

திட்டமிட்டபடி மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கத்தால் தொடங்கப்பட்ட நூலகம் பலரது ஆதரவோடு சிறப்பாக இயங்கத் தொடங்கியது.

நூலகத்தை யாழ் நகரசபை பொறுப்பேற்றல்

மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கத்தினர் நூலகத்தை உருவாக்கி நடத்தும் வேளையில் யாழ் நகரசபையும் நூலக உருவாக்கம் பற்றிச் சிந்திக்கத்  தொடங்கியிருந்தது. தொடர்ச்சியாக நூல்நிலைத்தைப் பேணி வளர்க்க வேண்டுமெனில் வலுவான பின்னணி வேண்டும் என்ற கருத்து சங்கத்தாரிடமும் இருந்தது.

அவ்வேளை நகரசபை உறுப்பினராக இருந்த திரு சுப்பிரமணியம் என்பார் மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கம் நடத்தும் நூலகத்தை நகரசபை பொறுப்பேற்க வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டுவந்தார்.
அதேவேளை நூலகத்தை நகரசபையிடம் ஓப்படைக்கலாம் என்ற என்ற பிரேரணை மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கத்தாலும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய 1;-1;-1935இல் இந்த நூலகத்தை யாழ்ப்பாண நகரசபை பொறுப்பேற்றது. அவ்வேளை நூலகத்தில் 844 நூல்கள் இருந்துள்ளன. நகரசபை பொறுப்பேற்ற பின் நூலகராகப் பதவியேற்றவர் ஏற்கனவே அனுபவம் பெற்றிருந்த திரு சி. என். இராசரத்தினம் ஆவர். இவர் அப்போது பெற்ற மாத ஊதியம் நாற்பது ரூபாய். இவர் நூலக வளர்ச்சிக்குப் பெரும் பணி ஆற்றினார்.

நூலகம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கை இலக்காகக் கொண்டு அதனைத் தொடங்கி நகரசபையிடம் ஒப்படைத்த பின் தம் பணி முடிந்ததென மத்திய இலவச தமிழ்நூல் வாசகசாலைச் சங்கம் கருதியது. 1935ம் ஆண்டு வைகாசி மாதமளவில் இச்சங்கம் கலைக்கப்பட்டது.

அங்கத்தவர் மற்றும் நூல்களின் பெருக்கம் காரணமாக நூல்நிலையம் கச்சேரியின் ஒரு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய இடமும் பொருத்தமாக அமையவில்லை. நகரசபைக்குச் சொந்தக் கட்டடம் ஏதும் இல்லாததால் வாடகைக்கே வேறு இடம் தேட வேண்டியிருந்தது.

பிரதான வீதியில் இருந்த அபூபக்கர் கட்டடத்தில் விலாசமான முகப்புக் கடையொன்றை வாடகைகுப் பெற்று நூலகத்தை மீண்டும் இடம் மாற்றினர். இதற்கு மாதாந்தம் 35 ரூபாய் வாடககையாகச் செலுத்தப்பட்டது. இந்த இடம் விலாசமாக இருந்த போதும் சத்தம் சந்தடி நிறைந்தாக இருந்தமை நூலகப’ பயன்பாட்டுக்கு இடையூறாக இருந்தது.

நூலகத்துக்கான அமைதியான சூழலை மீண்டும் தேடத் தொடங்கிய நகரசபையார் வாடி வீட்டுக்கருகில் புதிய இடமொன்றைக் கண்டுபிடித்தனர். அவ்விடத்தில் இருந்த புத்தூர் மழவராயர் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த கட்டடத்தின் மேல் மண்டபத்தை மாதம் அறுபத்தைந்து ரூபாவுக்கு வாடகைக்குப் பெற்றனர்.

பெரிதாகவும் அமைதியாகவும் இருந்த இந்த மண்டபத்தில் 1936 முதல் நூலகம் நல்ல முறையில் நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் நூலகம் நல்ல வளர்ச்சி கண்டது எனலாம்.

நூல்களை இரவல் கொடுக்கும் முறை இங்கு கொண்டுவரப்பட்டது. அங்கத்துவ விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டு, இருவரது நட்சாட்சிப் பிணையொப்பம் பெறப்பட்ட பின்னர் அங்கத்தவருக்கு அங்கத்துவ இலக்கம் வழங்கப்பட்டது.

நூலக வளர்ச்சியில் விடுமுறையே எடுக்காது ஒப்பற்ற பணியாற்றிய திரு சி.என் இராசரத்தினம் 1947 இல் ஓய்வு பெற்றார். தொடர்ந்து திரு கந்தையா நாகரெத்தினம் என்பார் நூலகராகப் பொறுப்பேற்றார்.

தொடர்ந்து வந்த காலப்பகுதியில் பலவாயிரம் நூல்கள் நூலகத்திற்காகச் சேகரிக்கப்பட்டன. வணபிதா கலாநிதி ஐசாக் தம்பையா அவர்களின் நூற் பங்களிப்பு மகத்தானது. 6000க்கு மேற்பட்ட நூல்களை இவர் மட்டுமே வழங்கியுள்ளார்.


புதிய நூலகக் கட்டடம்

பிரித்தானியர்1865 முதல் மாநகரசபை என்னும் தகுதியைக் கொழும்பு, கண்டி, காலி ஆகிய நகரங்களுக்கு மட்டுமே வழங்கியிருந்தனர். யாழ்ப்பாணம் 1931ம் ஆண்டிற்தான் பட்டினசபை (ரசடியn னளைவசiஉவ உழரnஉடை) என்னும் தகுதியைப் பெற்றது. 1938இல் நகரசபையாக வளர்ச்சி கண்டு 1949ம் ஆண்டிற்தான் மாநகரசபையாகத் தரமுயர்ந்தது.

பிரித்தானிய வரைபுகளுக்கமைய மாநகர முதல்வர் ர்ளை றுழசளாipகரட வுhந ஆயலழச எனப்பட்டார். யாழ் மாநகரசபையின் முதல் முதல்வராகத்  தெரிவு செய்யப்பட்டவர் திரு சாம் சபாபதி அவர்கள் ஆவர்.

தன் கடமைகளோடு நூலகத்தை மேம்படுத்தும் பொறுப்பும் இவருக்கிருந்தது. இலங்கை பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து உலக அரசியல் போக்குகள் மாற்றமடைந்தன. மக்களின் வாழ்வும் இன, மொழி சார் உணர்வுகளும் மேலோங்கின. இந்நிலையில் தமிழர்களுக்கெனத் தனித்துவமான பண்பாட்டுப் பின்னணியோடு கூடிய பாரிய நூலகம் ஒன்று அமைதல் வேண்டும் எனத் திரு சாம் சபாபதி அவர்கள் கருதினார்.

சாம் சபாபதி அவர்களின் இக்கருத்தோடு  சம்பத்தரிசியார் கல்லூரியின் முதல்வராக இருந்த வணபிதா  லோங் அடிகளாரும் கச்சேரியின் செயலராக இருந்த திரு முருகேசம்பிள்ளையும் உடன்பட்டனர். யாழ்ப்பாணக் கல்விமான் பலரும் உற்சாகத்துடன் இக்கருத்தை வரவேற்றனர்.

தன் கருத்துக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட திரு சாம் சபாபதி அவர்கள் 16-6-1952 இல் பகிரங்கக் கூட்டம் கூட்டிக் கலந்து பேசினார்.

மிகச் சிறந்த நூலகம் ஒன்று அமைக்கப்பெற வேண்டும் என்ற கருத்து கூட்டத்தில் வலிமை பெற்றது. தனித்துவமான கட்டடம் அமைத்து நூலகத்தைப் பேணுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. அக்கூட்டத்திலேயே யாழ்ப்பாண மத்திய நூல்நிலைய சபை என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. சபையின் தலைவராகச் சாம் சபாபதி அவர்களும் துணைத்தலைவராக லோங் அடிகளார் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அக் கூட்டத்தில் லோங் அடிகளார் “நாம் அமைக்கப்போகும் இந்த நூல்நிலையம் தென்கிழக்காசிய நாடுகளுக்கே ஒளியூட்டும் தரம் உள்ளதாகும்” என்று கூறிய கூற்று நினைவு கொள்ளத்தக்கது.

எரியூட்டப்பட்ட நூலகத்தின் உருவாக்கத்துக்குப் பின்னால் லோங் அடிகளார் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. அவர் எப்போதுமே அதிகம் பேசுவதில்லை. ‘குயவாநச டுழபெ ளாயடட டிந ளாழசவ’ என்றுதான் பலரும் கூறுவர். அவர் செயலூடாகவே பெரிதும் வெளிப்படுவார். நூலக சபை மேற்கொண்ட முடிவுகளை உடனடியாகவே செயற்படுத்தத் தொடங்கினார அடிகளார்;.
உலகளாவிய வகையில் நூலக நிபுணர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். பரந்த நூலக முன்னறிவைப் பெற்றார். டெல்லி பல்கலைக்கழக நூலகர் பேராசிரியர் கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து ஆலோசனை பெற்றார்.

நூலகக் கட்டடத்தை எங்கு கட்டுவது என்பது குறித்து நூலக சபைக்குள் பல்லேறு கருத்துகள் நிலவின. சபையினரால்; ஒருமனதாக ஓரிடத்தைக் கண்டறிய முடியாதிருந்தது.

இறுதியில் நகர் நிர்மாண நிபுணர் திரு வீரசிங்கா அவர்களின் ஆலோசனையைப் பெறுவதென சபை முடிவு செய்தது. வீரசிங்கா அவர்கள் யாழ் நகரை நன்கு ஆய்வு செய்தபின் நகரின் மையத்தில் முனியப்பர் கோவிலுக்குக் கிழக்கே இருந்த முற்றவெளியே நூலகம் அமைக்கச் சிறந்த இடம் எனத் தெரிவித்தார். கட்டடக்கலை நிபுணர் திரு நரசிம்மனும் இதுவே சிறந்த இடம் என்றார்.

யாழ். நூலகக் கட்டட அமைப்பைத் திட்டமிட்டவர் கட்டடக் கலைஞர் திரு நரசிம்மன் ஆவர். தமிழ்ப் பண்பாடு இந்துப் பண்பாடு என்பவற்றை மனதிற்கொண்டு பொறியியல் தொழில் நுட்பத்தோடு வரைகலையூடாகக்  கட்டிடத்தை வடிவமைத்தார். அமையப்போகும் நூலகத்தின் மாதிரி வடிவமைப்பை 16-10-1953 அன்று நூலக சபையிடம் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செயல்வீரரான சாம் சபாபதி உடனடியாக கட்டட வேலைகளைத் தொடங்கினார். 23-3-1954 அன்று இந்து சமய முறைப்படி இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் பிரித்தானிய தூதுவர் சேர் செசில் சையெஸ், அமெரிக்கத் தூதுவர் எச். இ. பிலிப் குறோவ், இந்திய தூதுவரின் முதற் செயலாளர் சித்தாத்த சாரி போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அவ்வேளை கட்டிட நிதியாக அமெரிக்கா 22000 டொலரையும் இந்தியா 10000 ரூபாயையும் வழங்கியது.

இக்கட்டடம் முடிக்கப்படும்வரை நூலகம் மழவராயர் மண்டபத்திலேயே சிறப்பாக இயங்கி வந்தது. பயனாளரின் கருத்துகளை அறிவதற்காக குறிப்பேடு ஒன்றை அங்கு வைக்க ஏற்பாடு செய்தார் சாம் சபாபதி அவர்கள். அந்தக் குறிப்புகளைத் தவறாது வாசித்து ஆவன செய்யவும் அவர் தவறவில்லை.

நூலகரான திரு க. நாகரெத்தினம் அரிய நூல்களையும் சஞ்சிகைகளையும் சேகரித்தார். அவரது பணி நூலக வளர்ச்சிக்குப் பெரும் துணை செய்தது.
கட்டடப் பணிகளைத் தொடங்க வேண்டுமெனில் முதலில் ஐந்து இலட்சம் ரூபாய் கையிருப்பில் இருக்க வேண்டும் எனச் சாம் சபாபதி கருதினார். லோங் அடிகளாரின் அனுபவம் மிக்க ஆலோசனைக்கிணங்க நிதி திரட்டுவதற்காக களியாட்ட விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தக் களியாட்டவிழா 1952. 1954, 1959, 1963 ம் ஆண்டுகளில் நான்கு தடவைகளாக நடத்தப்பட்டு நிதி சேகரிப்;பட்டது. சாம் சபாபதி அவர்களின் திட்டமிடலில் அதிட்ட இலாப சீட்டிழுப்பும் நடத்தப்பட்டது. அப்போதே பரிசுகளாக மூன்று கார்களைச் சில நிறுவனங்கள் வழங்கியிருந்தன.

கட்டடப் பணிகள் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபுறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த மழவராயன் மண்டபத்தில் இயங்கிய நூலகம் 17-10-58 முதல் யாழ்ப்பாண பொதுசன நூல்நிலையம் எனப் பெயர் பெற்றது.

சாம் சபாபதி அவர்கள் நூலக உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய போதும் மாநகர முதல்வராக அவர் பணியாற்றிய காலத்தில் கட்டடப் பணிகள் நிறைவடையவில்லை.

சாம் அவர்களைத் தொடர்ந்து அல்பிரட் துரையப்பா அவர்கள் மாநகர முதல்வராகப் பொறுப்பேற்றார். தன் முன்னோர் காட்டிய வழியில் அவரும் நூலக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். கட்டட நிதிக்காக 1959 இல் நடத்தப்பட்ட களியாட்ட விழாவைத் துரையப்பா அவர்களே முன்னின்று நடத்தினார்.

இந்த நிதி திரட்டலுக்குப் பின் கட்டடப் பணிகளைத் துரிதப்படுத்திய துரையப்பா அவர்கள் நில மண்டபத்தின் ஒரு பகுதி வேலைகள் முற்றுப்பெற பெரிதும் உதவினார். பழைய நூலகத்தின் இட நெருக்கடி காரணமாக புதிய கட்டிடத்துக்குக் குடிபுகும் ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றன.

11-10-1959 அன்று திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்துக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

நூலகம் புதிய கட்டடத்தில் குடிபுகுந்த காலத்தில் பதினாறாயிரம் நூல்களும் நூற்றைம்பது வகையான சஞ்சிகைகளும் இருந்தன.

கட்டடத்தின் நில மண்டபத்தில் புதிய பொலிவோடு நூலகம் இயங்கலாயிற்று. அக்காலத்தே பலரும் நூலக வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தனர். இவர்களில் கோப்பாய் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வன்னியசிங்கம், வவுனியாவைச் சேர்ந்த பண்டிதர் இராசஐயனார், வெள்ளவத்தை முதலியார் குல. சபாநாதன் போன்றோர் முதன்மையானோராவர்.

நூலகர் வே. இ. பாக்கியநாதன்

சிறந்த கல்விமானும் அமெரிக்காவில் உள்ள அட்லாண்ரா பல்கலைக்கழகத்தில் நூலகத்துறையில் முதுமானிப் பட்டம் பெற்றவருமான திரு வே.இ. பாக்கியநாதன் 28-8-1964 அன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தின் நுலகராகப் பொறுப்பேற்றார். அதுவரை நூலகராகப் பணிபுரிந்த திரு நாகரெத்தினம் துணை நூலகராகப் பணியைத் தொடர்ந்தார்.

பாக்கியநாதன் அவர்களின் உயரியநோக்கு நூல்கள் சேகரிப்பதாகவே இருந்தது.  நூல்களோடு பழைய பனைஓலை ஏடுகளையும் தேடிப் பாதுகாத்துப் பயன்படுத்த முயன்றார். முன்னாள் உள்ளுராட்சி அமைச்சராகவிருந்த திரு மு. திருச்செல்வம் அவர்கள் பல மருத்துவ ஏடுகள் நூலகத்துக்குக் கிடைக்க வழி செய்தார்.

தொடர்ச்சியாக, இந்த நூல்நிலையம் எவ்வாறெல்லாம் நிர்வகிக்கப்பட வேண்டும், எத்தகைய இலக்குகளை எட்ட வேண்டும் என்ற விளக்கங்கள் அடங்கிய ஓர் அறிக்கையைத் தயார் செய்து அப்போது மாநகர முதல்வராவிருந்த எஸ்.சி. மகாதேவா அவர்களிடம் கையளித்தார். அந்த அறிக்கை தொடர்பான கூட்டம் 8-10-1964 அன்று நடைபெற்றது.

மிகச் சிறந்த நூலகத்துக்காக நடைமுறைகளைப் பரிந்துரை செய்த அந்த அறிக்கை பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதெனலாம். பல பகுதிகளைக் கொண்ட அந்த அறிக்கையின் ஏழாம் பகுதி கட்டடத்தை முழுமையாகக் கட்டி முடிப்பதாகும். இவ்வாறான மாற்றங்களுடன் பெருஞ் சிறப்புற்றுத் திகழ்ந்தது யாழ் நூலகம். நூற்றுக்கணக்கானோர் என்பதைக் கடந்து ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் பெரு நூலகமாக யாழ் நூலகம் தோற்றங்கண்டது.

திரு எஸ்.சி. மகாதேவா காலத்தில் முதல் மாடியைக் கட்;;ட பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆணையாளராகவிருந்த டி. டி. ஜெயசிங்க அவர்களும் பின்னர் விசேட ஆணையாளராகப் பொறுப்பேற்றிருந்த திரு மாணிக்கவாசகர் அவர்களும் கட்டடப் பணிகள் நிறைவடைய உதவினர். கட்டடப் பொறியியலாளர்களான திரு நடேசன், திரு வைத்தியிலிஙகம் என்போரும் தமிழ்ப்பண்பாட்டுடன் மிளிரும் கையில் கட்டட வடிவமைப்புக்கு மெருகூட்டினர்.

திரு பாக்கியநாதன் அவர்களின் மற்றுமொரு பணி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அக்காலப்பகுதியில் நான்காம் குறுக்குத் தெருவில் அமெரிக்க அரசின் ஆதரவில் ஒரு தகவல் நூல் நிலையம் இயங்கி வந்தது. அங்கு அருமையான தகவற் களஞ்சியங்கள் இருந்தன. சிறந்த தளவாடங்கள், கருவிகள், படச்சுருள்கள், திரைப்படக் கருவிகள் என்பனவும் பயன் தரும் வகையில் இருந்தன.

இந்த நூலகத்தைப் பாராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொண்ட அமெரிக்க அரசினர் இலங்கை அரசிடம் கையளிக்க முயன்றனர். இதை அறிந்த சிலர் இப் பொருட்களைக் கண்டிக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.

இந்த நூலகம் யாழ்ப்பாண நூலகத்துடனேயே இணைய வேண்டும் எனத் துடியாய்த் துடித்து, ஆணையாளர் திரு மாணிக்கவாசகர் மூலமாக இந்த அமெரிக்க நூலகத்தை யாழ்ப்பாண பொதுசன நூலகத்துடன் இணைத்தார். அமெரிக்க நூலகம் நூலகத்தின் மேல்மாடியின் வடக்குப் பக்க மண்டபத்தில் இயங்கத் தொடங்கியது. இந்த இணைப்பு நிகழ்வில் கலந்து கொண்ட அமெரிக்கத் தூதுவர் அன்ட்ரு கொரி பேசுகையில் “அமெரிக்க யாழ்ப்பாண உறவுக்கு நூலறிவே காரணம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

முழுமைத்துவம் பெற்ற நூலகம்

முழுமைத்துவம் பெற்று இயங்கி வந்த இந்த நூலகத்தில் 33 பேர் பணியாற்றினர். மொத்தம் 15,910 சதுரஅடி பரப்பளவைக் கொண்ட இந்நூலகம் கொழும்பு மாநகரசபையின் பழைய நூலகத்தை விடப் பெரிது. புதிய நூலகத்துக்கு அடுத்தபடியாக இது உள்ளது.

வடமகாணத்தில் இயங்கிய அனைத்து நூலகங்களுக்கும் இதுவே தலைமை நூலகமாகத் திகழ்ந்தது. இந்நூலகத்தில் பின்வரும் அங்கங்கள் சிறப்புற இயங்கின.

நூல் இரவல் வழங்கும் பகுதி
புதிய ஏடுகளையும் சஞ்சிகைகளையும் கொண்ட வாசகசாலை
சிறுவர் நூலகம்
உசாத்துணை நூலகம்
கருத்தரங்கக் கூடம்
கலாபவனம்
காரியாயலமும் நூற்சேமிப்பு அறையும்

எரிப்பிற்கு முன்னால் ஏறக்குறைய 95,000 நூல்களைக் கொண்டிருந்த இந்த நூலகத்தைப் மாணவர் பெரியோர் என பல்லாயிரக்கணக்காணோர் பயன்படுத்தி வந்துள்ளனர். 17,000 பேர் அங்கத்தவர்களாக பதிவு பெற்ற பயனாளிகள் ஆவர்.

இரவலுக்கு வழங்கப்படாத உசாத்துணைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட நூல்கள் 29,000 ஆகும். இவை எளிதில் எங்கும் பெற முடியாத அரிய நூல்களாகும். இவை அனைத்துமே கருகிப் போயின என்பது வரலாற்றுத் துயரமாகும்.

இந்த நூலகத்தின் சிறுவர் பகுதி தனிச்சிறப்பு மிக்கது. திரு பாக்கியநாதன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட மிகச் சிறந்த பகுதி இது. இங்கு 8995 சிறுவர் நூல்கள் இருந்திருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி அறிவைமேம்படுத்தியோர் இன்று உலகெங்கும் வாழக் கூடும். ஆனால் அந்த நூல்களில் ஒன்று கூட எஞ்சியிருக்கவில்லை.

கல்விமான்களும் ஆர்வலரும் ஐம்பது ஆண்டுகளாகச் சிறுகச் சிறுக இட்ட பேருழைப்பு இந்த நூலகம். தமிழர் தலைநகரின் மையத்தில் தலைநிமிர்ந்து நின்ற பண்பாட்டுக் கோபுரம். ஈழத்தின் இணையற்ற கலைக்கோவில்.

1983 இல் பொன்விழா கொண்டாடியிருக்க வேண்டிய பொழுதில் தமிழர் நெஞ்செங்கும் துயரமே பொங்கிக் கிடந்தது.


1981 மே 31ம் நாள் நடந்தது என்ன?

அது யாழ்ப்பாண மாவட்டசபைத் தேர்தல் பரப்புரைகள் உச்சம் தொட்டிருந்த காலம். தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காகச் சிங்களக் காவலரும் படையினரும் பணியாளர்களும் தெற்கிலிருந்து மேலதிகமாக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

1981 மே 31ம் நாளன்று நாச்சிமார் கோவிலுக்கருகில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரது பரப்புரைக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவ்வேளை இங்கு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு சிங்களக் காவலர் கொல்லப்பட மற்றொருவர் காயமடைந்தார்.

இந்த சம்பவத்தினால் கொதிப்படைந்த சிங்களத் தரப்பினர் மிக மோசமான வன்முறைகளில் ஈடுபட்டனர். சீருடை அணியாத காவலர், படையினர், சிங்களப் பணியாளர் பலரும் பெருந்திரளாக வந்து பல இடங்களுக்குத் தீ மூட்டினர். அவ்வேளை நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் வெறியருக்குப் பெரு வாய்ப்பாக இருந்தது.

நாச்சிமார் கோவில் தேரைச் சிதைக்க முற்பட்டனர். தேர்க் கொட்டகை,{ கோபுரக் கொட்டகை போன்றவற்றை எரித்தனர். கோவிலையும் சேதமாக்க முயன்றனர். புத்தகக் கடைகள் எரிக்கப்பட்டன. ஈழநாடு நாளிதழ் அலுவலகம் முற்றாக எரிக்கப்பட்டது.  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அப்போதைய யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அவருடைய வாகனமும் எரிக்கப்பட்டது. ஆறுக்கும் அதிகமான பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் இந்த வன்முறைகள் நடைபெற்ற வேளை ஸ்ரீலங்கா அமைச்சர்களான திரு காமினி திசநாயக்கா திரு அத்துலத் முதலி என்போர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தனர். அவ்வேளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த ஓர் அமெரிக்கச் செய்தியாளர் தன் பதிவொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவர்கள் உத்தரவிலும் மேற்பார்வையிலுமே இந்த வன்முறைகள் இடம்பெற்ற என்ற கூற்றை மறுப்பதற்கில்லை.

மறுநாள் யூன் முதலாம் திகதியும் சிங்கள இனவாதிகளின் வன்முறைகள் தொடர்ந்தன. தமிழரது அறிவூற்றான நூலகம் அவர்கள் கண்களை உறுத்தியது. இரவுப் பொழுதிற்காகக் காத்திருந்த காடையர் வேளை வந்ததும் யாழ் நூலகத்துக்குள் நுழைந்தனர். தடுத்து நிறுத்திய காவலாளியை நெட்டித் தள்ளினர். கைவசம் கொண்டுவந்த எரிபொருட்களைக் கொண்டு நூலகத்தின் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துப் பார்த்துத் தீவைத்தனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் சில சாட்சியங்கள் இருக்கின்றன.

நூலகத்தின் மேற்கு மூலை பகுதிதான் முதலில் எரியத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக நூலகத்தின் அடுத்தடுத்த பகுதிகளும் எரியத் தொடங்கின.

நூலகம் எரிந்துகொண்டிருக்கும் செய்தி மாநகரசபை ஆணையாளர் சிவஞானத்துக்குக் கிடைத்தது. பதறித் துடித்த அவர், உடனடியாக தீயணைப்பு வீரர்களையும் மாநகரசபை ஊழியர்களையும் நூலகத்துக்கு அனுப்பினார். தீயை அணையுங்கள், ஆவணங்களைக் காப்பாற்றுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படி நூலகத்தை நெருங்கிய தீயணைப்பு வீரர்களைத் தடுத்து நிறுத்தினர் சிங்களக் காவலர்.

நூலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் அழிந்துகொண்டிருந்தது.

அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 95,000க்கு மேற்பட்ட நூல்கள் கருகிச் சிதைந்தன. மருத்துவம், இலக்கியம், சோதிடம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த நூல்கள், ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் சாம்பலாகின. கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி, சி. வன்னியசிங்கம் நூற்தொகுதி, ஐசாக் தம்பையா நூற்தொகுதி, கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி, அமெரிக்காவில் இருந்து நன்கொடையாக வந்திருந்த நூற்தொகுதிகள் ஆகியன அழிந்து போன அறிவுக் களஞ்சியங்களில் அதிமுக்கியமானவையாகும்.

மீள் கட்டமைப்பு

1981 மே மாதம் 31ம் நாள் நள்ளிரவுக்குப் பின் எரியூட்பட்ட நூலகத்தை மீண்டும் கட்டுமானம் செய்யும் பணிகள் உடனடியாகவே தொடங்கப்பட்டன எனலாம்.

பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர். கல்லூரி முதல்வர், உலகெங்கும் வாழ்ந்த தமிழர,; பல்வேறு நிறுவனங்கள், மாநகரசபை போன்றோர் கொடுத்த நெருக்கடியால் இலங்கை அரசு திருத்த வேலைகளுக்காக இருபது இலட்ச ரூபாயை ஒதுக்கியது. அப்போது மாநகர முதல்வராக இருந்த இராசா விசுவநாதன் மீள்கட்டுமான முயற்சிகளை முன்னெடுத்தார்.

மீள்கட்டுமானப் பணிகளுக்கான பொறியியலாளராகத் திரு நடேசன் நியமிக்கப்பட்டார். பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டன.  நூல்களும் மீண்டும் சேகரிக்கப்பட்டன. கிடைத்த ஓரளவான நூல்களுடன் 1984ம் ஆண்டு யூன் மாதம் 4ம் நாள் நூலகம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது. திரு அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார்.

கட்டடம் திருத்தப்பட்டாலும் நூல்களால் இப்போதும் நிறைவடையாத நூலகமாகவே இது இருந்து வருகின்றது. அரிய சிறந்த நூல்களின் வருகைக்காக இது இப்போதும் காத்திருக்கின்றது.

எரிக்கப்பட்ட ஹாட்லி கல்லூரி நூலகம்

பேரினவாதிகளின் வெறித்தனத்தை வெளிப்படுத்திய மற்றுமொரு நூலக அழிப்பு ஹாட்லிக் கல்லூரி நூலகம் முற்றாக எரியூட்டப்பட்ட நிகழ்வாகும்.
1984 செப்ரெம்பர் 16ம் நாள் ‘திக்கம்’ பகுதியில் ஒரு காவலர் கொல்லப்பட்டதை அடுத்து அரச படையினர் ஆறுக்கு மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றதுடன் பல கடைகளுக்கும் தீ மூட்டினர். தமிழரது அறிவின் மீது தீரா வெறுப்புக் கொண்டிருந்த பேரினவாதம் ஹாட்லிக் கல்லூரி கட்டிடங்களுக்குத் தீ மூட்டியது. அவர்களது பிரதான இலக்கு நூலகமாகவே இருந்தது.

இத் தீ மூட்டலையடுத்து ஆயிரக்கணக்கான நூல்கள் எரியுண்டதுடன் பழமை வாய்ந்த ஹாட்லிக் கல்லூரியின் மீளப் பெறமுடியாத ஆவணங்கள் பலவும் எரிந்து போயிருந்தன. அவற்றுடன் பெறுமதியான அறிவியல் ஆய்வு கூடக் கருவிகளும் அழிந்து போயின.

கனடா ரொரான்ரோவில் தமிழர் வகைதுறை வளநிலையம் நடத்தி வந்த தேடகம் என்ற சிறு நூலகம் இனந்தெரியாதோரால் 1994 மே 23ம் நாள்; எரியூட்டப்பட்டது. நூற்றுக்கணக்கான நூல்கள் இதில் எரியுண்டன.

2009 இல் வன்னிப் பகுதியில் ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது சிறியதும் பெரியதுமான பல நூலகங்கள் அழிவுற்றிருந்தன. அவற்றில் பேரழிவைச் சந்தித்தது கிளிநொச்சி பொதுசன நூலகமே. இந்நூலகம் இந்த யுத்தத்தின் போது பலவாயிரம் நூல்களை இழந்துள்ளது.

தமிழரது போராட்டத்தினது அடிப்படைகளை விளங்கிக் கொள்ளாது தமிழரது அறிவு மையங்களை அழிக்க முயன்ற இனவெறிச் செயல்களே பின்னாளில் தமிழரது போராட்டங்களை வலிமைப்படுத்தின.


உலக வரலாறில் அழிக்கப்பட்ட நூலகங்கள்.

யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைப் போன்றே உலக வரலாற்றில் பல நூலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன. எதிரியைப் பழி தீர்க்க முயல்கின்ற  பகைவர் கல்வி நிலையங்களையும் நூலகங்களையும் அழிக்க முயல்கின்ற கொடூரம் உலக வரலாறுகளிலும் இடம் பெற்றுள்ளன. சில வரலாற்று அழிவுகள் கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன.



Name of Library
Country
Date of Destruction
Perpetrator
Xianyang Palace and State Archives
Qin China
206 BC
Xiang Yu
Ancient library Alexandria
Ancient Egypt
48 BC
Disputed
Library of Antioch
Ancient Syria
364 AD
Emperor Jovian[8]
Egypt Alexandria Pompeys Pillar.
Ancient Egypt
392 AD
Theophilus of Alexandria
Library of Ctesiphon
Ancient Persia
651 AD
Arab Invaders
Library of al-Hakam II
Al-Andalus
976 AD
Al-Mansur Ibn Abi Aamir & religious scholars
Library of Rayy
Persia
1029 AD
Sultan Mahmud of Ghazni
Library of Ghazna
Ghurid empire
1151 AD
'Ala ad-Din Husain
Library of Nishapur

1154 AD
Oghuz Turks
Nalanda University India ruins.
India
1193 AD
Muhammad bin Bakhtiyar Khilji
Imperial Library of Constantinople
Byzantine Empire
1204 AD
The Crusaders
House of Wisdom
Iraq
1258 AD
Mongol Invaders
Granada madraza2.jpg
Granada
1499 AD
Crown of Castile
Bibliotheca Corviniana
Ottoman Empire
1526 AD
Troops of the Ottoman Empire.
Glasney College
England
Royal officials
1548 AD
Dresden Codex p09.jpg
Yucatán
1562-07-12 AD
Mexico and Guatemala
Raglan Castle Gatehouse and library
Raglan Castle
1646 AD
Wales
BurningofWashington1814.
Washington, D.C.
1814 AD
United States
University of Alabama
United States
1865-05-04 AD
Troops of the Union Army
Third Anglo-Burmese War A.
Mandalay Palace
1885 - 1887 AD
Burma
Hanlin Academy Library
China
1900-06-23/4
international defending forces.
Louvain Library WWI.jpg
Leuven
1914-08-25
Belgium
Four Courts Conflagration.jpg
Ireland
1922 AD
Provisional Government forces
1933-may-10-berlin-book-burning
Berlin
1933-05-??
Nazi Germany
Institut für Sexualwissenschaft
Nazi Germany
1933-05-??
Members of the Deutsche Studentenschaft
National University of Tsing Hua, University Nan-k'ai,
Institute of Technology of He-pei, Medical College of He-pei, Agricultural College of He-pei,
University Ta Hsia, University Kuang Hua, National University of Hunan
China
1937 – 1945 AD
World War II Japanese Troops
Louvain Library WWI.jpg
Leuven
Belgium
1940-05-?? AD
Bombed National Library Belgrad.JPG
Belgrade
Yugoslavia
1941-04-06 AD
SS. Cyril and Methodius National Library
Bulgaria
Allied bombing Allied air forces
1943-1944 AD
Lebanese National Library
Lebanon
1975
Lebanese Civil War
National Library of Cambodia
Cambodia
1976 – 1979 AD
The Khmer Rouge[22]
Tamilnet.com picture of burned Jaffna Library
Jaffna
1981-06-01 AD
Sri Lanka
Picture of burned Sikh Reference Library
Punjab
1984-06-07 AD
India
Libraries of Fisheries and Oceans Canada
Canada    
2013 AD
Government of Canada headed by prime minister Stephen Harper




தற்போது கிளர்ச்சிகள் செய்துவரும் ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய தீவீரவாத இயக்கம் நூலகங்களையும் கல்வி நிலையங்களையும் கடந்த இரு ஆண்டுகளாகப் பெருமளவில் அழித்து வருகின்றது.

இன்னும் பல நூலகங்களும் கல்வி நிறுவனங்களும் அழிக்கப்பட்ட குறிப்புகள் இருப்பினும் விரிவு கருதி சில தகவல்கள் மட்டுமே மேலே தரப்பட்டுள்ளன.

உலகலாவிய வகையில் மனிதகுல மேம்பாட்டுக்கும் வரலாற்றுப் பேணல்களுக்கும் புதிய ஆய்வுகளுக்கும் தளமாகவும் களமாகவும் இருப்பன நூலகங்களே. ஒரு நூலகத்தின் அழிவானது மனிதகுல வளர்ச்சியை சில நூற்றாண்டுகளுக்கே பின்தள்ளி விடும் அபாயங் கொண்டவையாகும். எதிர்காலத் தலைமுறையினருக்கான பேரறிவுப் பெட்டகங்கள் இந்த நூலகங்களிலேயே பேணப்படுகின்றன.

யுத்தங்கள் எவ்வகையான கொடுமைகளைக் கொண்டிருந்த போதும் அறிவு மையங்களின் அழிவு என்பது எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டிதொன்றாகும். ஐ.நாவின் போர் விதிகளும் இதை வலியுறுத்துகின்றன.

உலகெங்கும் தனித்துவமான இனங்கள் பல தமது நிலம், மொழி, கலை, மதம், பண்பாடு சார்ந்த அனைத்து வரலாறுகளையும் ஆவணங்களாகவும் நூல்களாகவும் குறித்த சில நூலகங்களிலேயே பாதுகாத்து வருகின்றன. போரோ அல்லது இயற்கை அழிவுகளோ அவற்றைப் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே அவற்றைப் பாதுகாக்கப் புதிய தொழில் நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றைக் கையாளுதல் வேண்டும்.

பிற்குறிப்பு:

இக்கட்டுரையை எழுதுவதற்கு எனக்குப் பெரிதும் துணை புரிந்த நூல் “யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம்” என்ற நூலாகும். இதில் இடம் பெற்ற பல கடடுரைகளை எழுதியவர் யாழ்ப்பாண பொதுசன நூலகத்துடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த மூதறிஞர் திரு க.சி. குலரத்தினம் அவர்கள். இக்கட்டுரையில் நான் குறிப்பிட்ட தகவல்கள் பெரும்பாலானவை இவர் குறிப்பிட்டவையே. அத்துடன் வரைகலைக் கலைஞர் கருணா இக்கட்டுரைக்கு உதவவல்ல பல இணையத்தளங்களைக் கண்டறிந்து உதவினார். இருவருக்கும் என் நன்றி.

உதவிய நூல்களும் இணையத் தளங்களும்:

                            “யாழ்ப்பாண நூல் நிலையம் ஓர் ஆவணம்” - திரு க.சி. குலரத்தினம்

வியாழன், 28 மே, 2020

மாறுதல் காலப் பயங்கரங்கள்

மாறுதல் காலப் பயங்கரங்கள் (Horrors of Transition)
உலக அளவிலான தனித்தனி நிலங்களும் சமூகங்களும் அரசுகளும் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டு, கலக்கப்பட்டு, குழப்பப்பட்டு புதிய வகையான அரசுகள், ஆட்சிப் பரப்புகள் உருவாக்கப்பட்ட காலனிய கால மாறுதல்கள் என்பவை உலக வரலாற்றில் பயங்கரங்கள் நிறைந்த பல புதிய அத்தியாயங்களைத் தோற்றுவித்தன. நில ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, இன மேலாதிக்கம் என்பவற்றின் மூலம் நிலவியல்சார் பண்பாட்டுச் சமூகங்கள் அடிமை நிலைக்குத்  தள்ளப்பட்டன. தமக்கு முற்றிலும் அன்னியமான ஒரு நாடு, இனம், அரசு தம்மீது ஆதிக்கம் செய்தல் என்பதன் புதிர் பல சமூகங்களில் அச்சத்தையும், உள்ளார்ந்த பயங்கரம்சார் உளவியலையும் தோற்றுவித்தன.

இந்தக் காலகட்டத்தின் மாற்றங்கள் அனைத்தும் உலகின் நிலம்சார் சமூகங்களின் மீது அவற்றின் அனுமதி இல்லாமலேயே தாக்கத்தை ஏற்படுத்தியதுடன்  பல கட்டமைப்பு மாற்றங்களையும் உண்டாக்கின. நவீன அரசுகளும் நவீன அறிவமைப்புகளும் நவீன மதிப்பீடுகளும்  நவீன நிறுவனங்களும் ஒவ்வொரு சமூகத்தையும் அவற்றின் மயக்க நிலையூடாகவே  ஊடுறுவி அடிப்படைகளைத் திருத்தி அமைத்துவிட்டன.

இந்த மாறுதல்களை உலக ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தியதன் பின்னணியில் உள்ள பயங்கரங்களும், கொடூரங்களும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் வரலாற்று நினைவுகளாக இருப்பது ஒரு புறம்,  தம்மை ஒடுக்கிய சமூகங்களின் அறிவும், அமைப்புகளும்  தமக்குள் ஊடுருவி இயக்கிக் கொண்டிருப்பதன் முரண் மறுபுறம் என்ற ஒவ்வாமை மற்றும் பொருந்தாமை  அடிமைப்பட்ட நிலங்களின்  ஊனமுற்ற உளவியலாக மாறியிருந்தது.  இந்த மாறுதல்காலப் பயங்கரங்களை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக எதிர் கொண்டு தனதாக்கம் செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அதில் ஒன்றுதான் நிலங்களுக்குள்ளான உள்மோதல்கள். சுயச்சமூக குற்றச்செயல்கள், தன்னழிவுச் செயல்பாடுகள், சமூகப் பொருத்தமின்மை, தனிமனிதர்களை உள்ளடக்காமை என வெவ்வேறுவித வன்முறை வடிவங்களும் இந்த மாறுதல்காலப் பயங்கரங்களில் அடங்கும். அவ்வகையான மாறுதல் கால பயங்கரங்களின் ஒரு பகுதியாகவே இலங்கை மண்ணில் நிகழ்ந்த ஈழப்போர் என்பதும் அமைந்து விட்டது.  நவீன கால ஓருலக அமைப்பில் தன் அடையாளத்தை முதன்மைப்படுத்தி தனக்கான மொழி, நிலம், நாடு என்பதை வடிவமைத்துக்கொள்ள முயன்ற ஒரு மக்கள் தொகுதியின் துயரமாக  அது இருந்து வந்தது.

தன்னை நவீனப்படுத்திக்கொள்ள உலக சமூகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வெறு  உத்திகளை வெவ்வெறு  செயல்வடிவங்களைக் கைக்கொள்கின்றன, போர் என்பதும் அவற்றில் ஒன்று. புராதனமானதும் அதே சமயம் புதிய உத்திகளை உள்ளடக்கியதுமான இந்தச்செயல் மாறுதல்காலப் பயங்கரங்களில் அதிக  பலம் மிக்கதாகவும், அதிக வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. இதனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இலங்கை மண்ணின் தமிழ்ச் சமூகம் நேரடியாக ஒரு நவீனத் தன்மையை அடைந்து விடுகிறது. மாறுதல் காலப் பயங்கரத்திற்கு உட்படும் ஒரு சமூகம் என்ற நிலையிலிருந்து பயங்கரத்தில் பங்கெடுக்கும் சமூகமாக அது மாற முயற்சிக்கிறது.  இதன் மூலம் உலக அரசியலில் தனது அடையாளத்தை அது வலிந்து உருவாக்கிக் கொள்கிறது.

இலங்கை அரசு சிங்கள மொழி-இன அடையாளத்தை மையப்படுத்தித் தன் நிலத்தை, வரலாற்றை வரையறை செய்வதற்கான அடிப்படைகளை உருவாக்கிய உடனேயே தமிழ்ச் சமூகமும் தனது மொழி-இன அடையாள அரசியலுக்கு அதிக அழுத்தம் தரத் தொடங்கிவிடுகிறது.  இந்த  எதிர்மைகள் இலங்கை அரசியல் மற்றும் சமூக இயக்கத்தில் ஒவ்வொருவரையும் ஆயுதமயப்படுத்தும் செயலின் முதல் கட்டமாக அமைந்து விட்டன. மதம், மொழி, இனம் என வேறுபாட்டு அடையாளங்களின் போர்க்குணம் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களைத் தொடங்கியவுடன் வெளிப்பட்டு உறுதி செய்யப்படுகிறது. இது இரண்டு இனங்களுக்குமே மாறுதல் காலப் பயங்கரத்தை நிகழ்த்தும் பாத்திரத்தை ஏற்கும் நிலையை உருவாக்கி  விடுகிறது. சிங்களர் இனம், மொழி,  பௌத்தமதம்  என்பவை அரசால் பிரதி நிதித்துவப்படுத்தப்பட்ட நிலையில் ‘தமிழ்’ என்பது  அரசற்ற போர்க்  குழுக்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது. இங்கு சிங்கள அரசும் இராணுவமும் தமிழ் மக்களை உள்ளடக்காமல் அடிமை நிலையில் வைத்து பணிந்து வாழும்  மக்களாக அவர்களை உறுதிப்படுத்தும் செயல்முறைகளைக் கையாண்டதன் மூலம் போராளிகளின் நேரடி எதிர்க்களமாக தம்மை நிறுத்திக் கொண்டன.  மாறுதல்காலப் பயங்கரத்தின்  மிக   அவலமான பகுதி  இது.

இந்நிலையில் தமிழ்நிலம், தமிழ்த்தேசம் என்பவை உயிர் வாழ்க்கையுடன் மட்டுமின்றி மனித அடையாளத்தின் ஒரு பகுதியாக உறுதி செய்யப்பட்டுவிடுகிறது. இவை அனைத்துமே உருவகச் செயல்பாடுகள் என்றாலும் போர் என்பதை நேரடி உத்தியாக முன்வைத்த ஒரு அரசின் முன் கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற நிகழ்வியல் துயரமாக மாறிவிடுகிறது. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தலைவர்களுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மதிக்கப்படாத நிலையிலும் மீறப்பட்ட நிலையிலும் உருவக நிலைகள் உடைந்து உடல் அழிப்பு நிலையை அடைந்து விட்டது. (1957-இன் பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தம், 1965-இன் டட்லி- செல்வநாயகம் ஒப்பந்தம் ஆகியவை அவமதிக்கப்பட்டன.)

1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தமிழர்களை, தமிழ்க் குழுக்களை போர் இயந்திரங்களாக மாற்றி விடுகின்றன. இலங்கை அரசு தன்னை தமிழர்களுக்கானதாக வைத்துக்கொள்ள முடியாததுடன் தமிழர் அழிப்புக்கான நிறுவனமாகவும் தன்னை மாற்றிக்கொள்கிறது. அரசியல் பேச்சுவார்த்தைகளால், உள்ளடக்கும் அரசியல் ஒப்பந்தங்களால், ஆட்சிப் பகிர்வுகளால் தமிழர்களிடையே அடையாள உறுதியையும், உயிர்வாழும் உரிமையையும் பலப்படுத்தி இருக்க வேண்டிய இலங்கை அரசு ஆயுதங்களையே மையப்படுத்திய பொழுது தமிழர்களின் குழுக்களும் அதே உத்தியைக் கைக்கொள்ள வேண்டியிருந்து.

இந்தப் போர்ச் சூழல் ‘இடைநிலை அரசியல் சொல்லாடல் எதனையும் உருவாக்க முடியாமல் போனதால் போராளிகள் என்போர் தம்மை அரசுக்கு இணையாக எதிர்நிலைப் படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உருவானது. அர்த்தம் அற்ற, வெற்றடக்கம் கொண்ட, பணிந்து போகும் ஒரு உயிரியாக இருப்பதை விடவும் ஒரு போராளியாக  இருப்பது அர்த்தமுடையதாக, பெருமை தருவதாக, அதிகாரத்தை வழங்கக் கூடியதாக தோற்றம் தரத் தொடங்கியது.

இதற்கு முன்பே உலக அளவில் புரட்சிகள் என்பவை மனித நிலைமாற்றங்களின் களமாக கொண்டாடப்பட்ட நிலையில் ஆயுதம் தாங்கிய தனிமனிதர்கள் குழுக்களாகவும் படைகளாகவும் மாறும்போது கோட்பாட்டு வலிமை உடைய, அர்த்தம் நிறைந்த மனிதத் தொகுதிகளாக வடிவம் பெறுகின்றனர்.   இது அரசுகளுக்கு இணையான ஒரு தோற்றத்தை தரக்கூடியது. தனிமைப்பட்ட, சிதறுண்ட மனிதர்களுக்குப் பதிலாக ஒன்றிணைந்த, தொகுதியான,  செயலுடைய, மகிமைப்பட்ட உறுப்பினர்களின் உருவாக்கம் இங்கு நிகழ்கிறது.

அரசு ராணுவங்களில் இடம் பெறுவோர் தேசபக்தி, தியாகம், புனிதக் கடமை என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் பெறும் நிலையில் போராளிகளாகத் தம்மை மாற்றிக் கொண்டோர் இலட்சியம், புனித இலக்கு, விடுதலைக்கான  தியாகம் என்ற அடையாளங்களுடன் உயர்வாக்கம் அடைகின்றனர்.  இது தாமே உருவாக்கிக் கொண்ட உயர்வாக்கம்  என்பதைவிட தமக்குப்பின் உள்ள மக்களால் தமக்கு வழங்கப்பட்ட சிறப்பு அடையாளம் என அர்த்தப்படுத்திக் கொள்ள போராடச் சூழல் அவர்களுக்கு இடம் ஏற்படுத்தித் தருகிறது. இந்த அடையாளம் ஒரு வகையில் மீறப்படவோ, மீள இடம்அளிக்கவோ முடியாத நிலையை அடையக் கூடும். இந்தச் சிக்கல்தான் ஈழப் போராட்டத்தின் ஒரு கட்டத்தில் பின் திரும்பிப்போக முடியாத நிலையை உருவாக்கியது.

மாறுதல் காலப் பயங்கரங்கள் என்பவை ஒவ்வொரு சமூகத்தையும் வெவ்வேறு வகையில் பாதிப்பதுண்டு. அரசு, நிர்வாகம், நீதித்துறை, பொருளாதாரக் கட்டுமானம் என்பவை மாறிவிட அதற்குட்பட்ட மக்களோ வேறு வகை  சமயநம்பிக்கை, பண்பாட்டு நடத்தைகளைக் கொண்டவர்களாகவே இருந்தால், இவ்வகை பயங்கரம் வெளித்தெரியாத உள்ளடங்கிய உடைவுகளை ஏற்படுத்தும்.  பிரஞ்சு புரட்சி போல ஒரே அமைப்புக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடுகள் மோதி உடைத்துக் கொண்டு மாற்று வடிவம் பெற முயற்சிக்கும் போது ஏற்படும் பயங்கரங்கள் வெளிப்படையான நிகழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கும். அந்த அமைப்புக்குள்ளாகச் சில பகுதிகளை உடைத்து நீக்கி மாறுதல்களைச் செய்வதன் மூலம் கோட்பாட்டு அடிப்படைகள் மாறும்.  ‘விஞ்ஞானச் செயல் திட்டங்கள்’ ஒரு சமூகத்தின் மீது கவிழும் போது அவற்றின் மீதான புரிதல் இன்றியே அவற்றிற்கு உட்பட்டு பிறகு அம்மாற்றங்களைத்  நமதாக்கிக் கொள்ள  நேரலாம். இந்தச் சூழலிலும் கூட மாறுதல் காலப் பயங்கரங்கள்  உள்ளார்ந்து நிகழவே செய்யும்.

ஈழப் போராட்டம் என்பது நவீன தேசம், அரசு, நிர்வாகம், ஆட்சி என்ற மாறிய வடிவங்களால் சூழப்பட்ட ஒரு சமூகத்திற்குள் நிகழ்ந்த மாறுதல்கால அமைதியின்மை, சமநிலைக் குலைவு.  அதனை இலங்கை அரசு பொறுப்பற்ற வகையில் கையாண்டதும், வன்முறையால் அதனை புதைத்துவிடலாம்  என்று முடிவு செய்ததும் மாறுதல் கால பயங்கரத்தை போர்க்கால பயங்கரம் நோக்கித் தள்ளியது.  அதே வன்முறை அதனை பயங்கரமானதும் துயர் நிரம்பியதுமான ஒரு முடிவுக்குக் கொண்டு செலுத்தியது.  தற்போது மீண்டும் ஒற்றைத் தேசிய அரசு, பலமான நிர்வாகம், வலிமையான இராணுவம், ஒன்றுப்பட்ட நாடு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடையில் எல்லாவற்றையும் இழந்த மக்கள்    தற்போது ‘உயிர்வாழ்க்கை’        என்பதை மட்டும் பெற்றவர்களாக   அரசின் கருணையின் கீழ்  வாழ வேண்டியவர்களாகி   உள்ளனர்.

இதுவரை கொல்லப்பட்ட  தமிழர்கள், போராளிகள், அரசுப் படையினர் எல்லோரும் இந்த மாறுதல்காலப் பயங்கரத்திற்கு பலியானவர்களாகின்றனர். கொல்லப்பட்டத் தமிழர்கள், போராளிகள் என்ற வகையில் இனி நினைவு கடந்த மறதிக்குள் புதைந்தால் தவிர மீந்திருப்பவர்கள் உயிர்வாழ முடியாது. இந்த நிலைகடந்த வலி, துயரம், இழப்பு, என்பவை ஒரு மரத்துப் போன நிலையை, பேதலித்த கூட்டு மனநிலையை உருவாக்கக்கூடியது.

இந்த மன நிலையின் வெளிப்பாடுகள் இனி தம் கடந்த காலப்போராட்டம் பற்றிய கசப்புணர்வாக வெளிப்படும். போராளிகள் மீதான வெறுப்பாக, தாம் கண்ட கனவின் மீதான அச்சமாக, தம்மைப் பற்றியே ஏதும் சொல்லமுடியாத மௌனமாக, செயலற்ற  ஒப்படைப்பாக  வெவ்வெறு வகைகளில் வெளிப்படும். எல்லா இலட்சியங்களின் அடிப்படையிலும்  எளிய மனித உணர்வுகளே  உள்ளன, இந்த எளிய அடிப்படை  உணர்வுகளே  எல்லா வரலாற்று  நிகழ்வுகளுக்குப் பிறகும் மீந்து நிற்பவை. தற்போது  “மீந்து நிற்கும்” இலங்கைத் தமிழர்களிடம் இருப்பவை அச்சங்கள், எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த  வெற்று மனித   நிலை.  இந்த  ‘வெற்றுமனித’  நிலையைக்    கூட ஒரு அரசு தனக்கு   வெளியில் உள்ள ஒரு மக்கள் தொகுதியின் அரசியலுடன் அடையாளப்படுத்தியே  அணுகும்  என்பதுதான்  இதில் உள்ள அவலம்.

அவர்கள் வெற்று மனித நிலை அடைந்த ‘தமிழர்கள்’ என்ற அடையாத்தையோ, அவர்கள் வரலாற்றின் ஒரு கட்டத்தில் தமக்கெனத் தனிநாடு கேட்ட ஒரு நிலப்பகுதியின் மக்கள் என்பதை அரசும் ராணுவமும் மறக்கப் போவதில்லை. இந்த அடையாளத்துடனேயே அவர்களுக்கான எதிர்காலம் திட்டமிடப்படும். அவர்களின் ஒவ்வொரு அசைவும் மற்றொரு விடுதலைப் போரின் தொடக்கமாக அமைந்து விடலாம் என்ற எச்சரிக்கையுடனேயே கவனிப்புக்குள்ளாகும். இந்நிலை  இன்னும் ஒரு வகையான மாறுதல் காலப் பயங்ரகங்களைக் கொண்டதாக இருக்கும்.  அதற்கும் தமிழ்ச் சமூகம் தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ள வேண்டிய காலம் இது.

புதன், 20 மே, 2020

கொரோனா வைரஸால் யார் இறப்பார்கள் என்பதை இதயம் மூலம் கணிக்க முடியும்!!!

கொரோனா வைரஸால் யார் இறப்பார்கள் என்பதை இதயம் மூலம் கணிக்க முடியும். வலது இதய அறைகள் விரிவடைந்து இருந்தால் கொரோனா நோயாளிகள் தொற்றுநோயால் கொல்லப்படுவதற்கு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
நியூயார்க்

கொரோனா வைரஸால் யார் இறப்பார்கள் என்பதை இதயம் மூலம் கணிக்க முடியும்.  வலது இதய அறைகள் விரிவடைந்து இருந்தால் கொரோனா நோயாளிகள் தொற்றுநோயால் கொல்லப்படுவதற்கு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.

கொரோனா வைரஸ் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் மற்றும் நுரையீரலைத் தாக்குகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய அறைய மூலம் கொரோனாவின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளில் ஒன்றால் தொற்றுநோயால் யார் இறப்பார்கள் என்று கணிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

நியூயார்க்கில் உள்ள மவுண்ட் சினாய் பல்கலைக்கழக இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் 110 கொரோனா வைரஸ் நோயாளிகளின் நிலைமைகளையும் அவர்களின் முந்தைய மருத்துவ பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் அவர்களின் ஈகேஜி எனப்படும் எக்கோ கார்டியோகிராபி (Electrocardiographyயை ஆய்வு செய்தனர்.

ஈகேஜிக்கள் வழங்கப்பட்ட நோயாளிகளில் முப்பது சதவீதம் பேர் ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்தனர், வென்டிலேட்டர்கள் மூலம் சுவாசித்து வந்தனர். 

31 சதவீத நோயாளிகளுக்கு 'வலது வென்ட்ரிகுலர் டைலேஷன்' இருப்பதை ஈகேஜி வெளிப்படுத்தியது, அதாவது ஒவ்வொரு இதயத்தின் கீழ் வலது அறை இயல்பை விட பெரியதாக உள்ளது.

அதில் விரிவாக்கப்பட்ட வலது வென்ட்ரிக்கிள்( இதய அறைகள்) கொண்ட 41 சதவீத நோயாளிகள் இறந்து உள்ளனர். இதய அறைகளில் மாற்றங்கள் இல்லாதவர்கள் 11 சதவீதம் தான் மரணம் அடைந்து உள்ளனர்.

பெரிதாக்கப்பட்ட வலது வென்ட்ரிக்கிள் நோயாளிகளில் கிட்டத்தட்ட 62 சதவிகிதம் - ஆக்ஸிஜன் இல்லாத இரத்தத்தை நுரையீரலுக்கு செலுத்தும் இதயத்தின் அறை உள்ளவர்கள் மரணம் அடைந்து உள்ளனர். 

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு 19 சதவீதம் இதய பிரச்சினைகள் இருப்பதாக சீனாவின் ஆரம்பகால தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் இது அமெரிக்கா முழுவதும் உள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் இதயங்கள் கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்பதற்கான அறிகுறிகளை மருத்துவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.

செவ்வாய், 19 மே, 2020

1917 திரைவிமர்சனம்

"இது ஒரு புதிய வழி, புதிய முறை, சினிமா படைப்பாளர்களும், ஆர்வலர்களும், ஒளிப்பதிவாளர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
இந்த வருட ஆரம்பத்தில் தலைநகர் கொழும்பில் One Galle Faceல் திரையரங்கில் காத்திருந்து நான் பார்த்த திரைப்படம். 1917.  உலக சினிமாவின் புதிய பரிமாணம்.." 

போர்க்களத்தில் ஒரு  திகில் பயணம்...💥💣

உலகப் போரை அடிப்படையாகக் கொண்டு ஹாலிவுட்டில் நூற்றுக்கணக்கான படங்கள் வந்துவிட்டாலும் அவற்றுக்கான வரவேற்பு என்றுமே குறைவதில்லை. இதற்கு 'ஷிண்டர்ஸ் லிஸ்ட்’, 'சேவிங் ப்ரைவேட் ரையான்’, 'தி பியானிஸ்ட்', 'டன்கிர்க்’ உள்ளிட்ட பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஸ்பீல்பெர்க் தொடங்கி நோலன் வரை பலரும் மென்று துப்பிய களம் அது. ஆனால், அந்தக் களத்தை வைத்துக் கொண்டு அரைத்த மாவையே அரைக்காமல் ஒரு புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர் சாம் மென்டஸ்.
அமெரிக்கன் பியூட்டி, ஜேம்ஸ் பாண்ட் படங்களான 'ஸ்கைஃபால்’, ‘ஸ்பெக்ட்ரே’ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் சாம் மென்டஸ்.

முதல் உலகப்போரின் போது யுத்தமுனைக்கு அவசரச் செய்தி ஒன்றினை கொண்டு செல்லும் இரண்டு ராணுவ வீரர்களின் பயணமே திரைப்படம். பத்து வரிக்குள் அடங்கிவிடும் கதையது. ஆனால் அதைப் படமாக்கிய விதம் மிகப்பிரம்மாண்டமாக உருமாறியுள்ளது.

முதலாம் உலகப் போரின் கொந்தளிப்பின் மத்தியில் பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மன் துருப்புக்களைப் பிரிக்கும் வடக்கு பிரான்சிலுள்ள No mans land சுற்றியே கதை நடைபெறுகிறது. இரண்டு இளம் ராணுவ வீரர்களான பிளேக் மற்றும் ஸ்கோஃபீல்ட் எதிரிகளின் பிரதேசத்தின் வழியாக மேற்கொள்ளும் ஒரு பயணமே படத்தின் கதைச்சரடு.
ஹாலிவுட்டில் ஆண்டுத் தோறும் ஏதோவொரு யுத்த பின்புலப்படம் கவனம் பெறுவது வழக்கம். பெரும்பாலும் அது பிரிட்டன் அல்லது அமெரிக்க ராணுவம் குறித்த களமாகவே இருக்கும். இந்த வகைத் திரைப்படங்களுக்கு என ஒரு டெம்பிளேட் உள்ளது. அதைக் கச்சிதமாக ஹாலிவுட் உருவாக்குவது வழக்கம். ஆனால் 1917 இந்த டெம்பிளேட்டிலிருந்து விலகிய திரைக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. பெரிய திருப்பங்கள். தியாகங்கள். தேசபக்தி முழக்கங்கள் இதில் கிடையாது.
ஒட்டு மொத்த திரைப்படத்தையும் தனது ஒளிப்பதிவின் மூலம் தூக்கி நிறுத்தியிருப்பவர் ரோஜர் டீகன்ஸ். உலகின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான டீகன்ஸ் தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஓவியரை முதன்மையான வழிகாட்டியாகக் கொள்ளக்கூடியவர்.
ஒவியக்கல்லூரியில் பயின்ற ரோஜர் ஓவியங்களில் இருந்தே தனது வண்ணத்தையும் ஒளியமைப்பையும் உருவாக்குபவர். வெவ்வேறு ஜானர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். குறிப்பாகக் கோயன் சகோதரர்கள், சாம் மென்டிஸ் மற்றும் டெனிஸ் வில்லெனுவே ஆகியோரின் படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர். அமெரிக்க ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (A.S.C.) வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.
The Shawshank Redemption, Fargo, A Beautiful Mind, Fargo Kundun No Country for Old Men The Assassination of Jesse James Skyfall, Sicario, and Blade Runner 2049, போன்றவை அவர் ஒளிப்பதிவு செய்த முக்கியப் படங்கள்.
சிம்பொனி இசைக்கோர்வையைப் போலவே கச்சிதமான ஒருங்கிணைப்பும் நேர்த்தியும் கொண்டதாக ஒளிப்பதிவு செய்பவர் ரோஜர் டீகன்ஸ். யுத்தகாலப் படங்களில் முன்னதாகப் பணியாற்றியிருக்கிறார். ஆகவே 1917 படத்தினை உருவாக்கும் போது பார்வையாளரை யுத்தகளத்தில் ஒருவராக உணரச் செய்ய வேண்டும் என்பதிலே கவனம் கொண்டிருக்கிறார்.

படத்தின் துவக்க காட்சியில் இரண்டு ராணுவ வீரர்களும் சோர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ராணுவத் தலைமை அதிகாரி அழைப்பதாகச் செய்தி வருகிறது. எழுந்து நடக்க ஆரம்பிக்கிறார்கள். கேமிரா அவர்களைப் பின்தொடரத் துவங்குகிறது. இங்கிருந்து படத்தின் கடைசிக் காட்சி வரை கேமிராவோடு நாமும் அவர்களைப் பின்தொடர்கிறோம்.
படத்தின் மையக்கதை படம் துவங்கிய மூன்றாவது நிமிசமே ஆரம்பமாகி விடுகிறது. திரைக்கதை எழுதும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமது. படம் எதை நோக்கிச் செல்கிறது என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் அந்த இலக்கை அடைவார்களாக எனப் பார்வையாளர்கள் காத்திருக்கத் துவங்குவார்கள். அது தான் இயக்குநர் கொண்டுள்ள விருப்பம்.
வழக்கமான யுத்த பின்புலத் திரைப்படங்களைப் போலத் திடீர் திருப்பங்கள். சாகச நிகழ்வுகள் இந்தப் படத்தில் இல்லை. பிளாஷ் பேக். பிளாஷ் கட் என எங்கேயும் படம் பின்னோக்கிப் போகவில்லை. நேர்கோட்டில் கதையின் நாயகர்களைப் பின்தொடர்ந்து செல்கிறது.
யுத்தவெளி தான் படத்தின் முக்கிய மையம். எரிந்து போன உடல்கள். கைவிடப்பட்ட இடிபாடுகள். ஆள் அற்ற பதுங்கு குழிகள். இறந்து கிடக்கும் குதிரையின் மீது மொய்க்கும் ஈக்கள். செத்துப்போன நாயின் உடல். வெறித்த பார்வையுடன் செல்லும் ராணுவ வீரர்கள். நதியில் மரக்கட்டைகளைப் போல ஒதுங்கி கிடக்கும் மனித உடல்கள். பற்றி எரியும் நகரம் என யுத்தம் எவ்வளவு பெரிய அழிவை, உயிரிழப்பை உருவாக்குகிறது என்பதைப் படம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.
இந்த இடிபாடுகளுக்குள், அழிவிற்குள் ஆங்காங்கே காட்டப்படும் சில அபூர்வ காட்சிகளாகக் காலியான படுக்கை ஒன்றில் ஒட்டப்பட்டுள்ள சிறுவனின் புகைப்படம். ராணுவ வீரன் தன்னோடு வைத்துள்ள அம்மாவின் புகைப்படம், செர்ரி மலர்கள் பூத்துள்ள இடம், வீடு திரும்புவதைப் பற்றிய ராணுவ வீரனின் பாடல். பற்றி எரியும் தேவாலயத்தின் பின்புலத்தில் அறியாக் குழந்தையின் கைவிரல்களைப் பற்றிக் கொண்டு பேசும் காட்சி எனப் படம் உணர்ச்சிகளைக் கட்டுக்குள்ளாகவே வெளிப்படுத்துகிறது.

ரோஜர் டீக்கன்ஸின் ஒளிப்பதிவில் வெளிப்படுவது வீடியோ கேமில் வெளிப்படும் விளையாட்டு சாகசத்திற்கும் நிஜமான யுத்தகள அனுபவத்திற்கும் இடைப்பட்ட நிலை. சில காட்சிகளில் நாம் ஒரு துர்கனவின் வெளிப்பாட்டினை போலக் காட்சிகளைக் காணுகிறோம். குறிப்பாகத் தேவாலயம் ஒன்று தாக்குதலில் தீப்பற்றி எரியும் காட்சியில் வானத்தில் ஒளி பீறிடுவதும் முற்றிலும் இருண்டு மறைவதுமாக இருப்பது ஊழிக்காலத்தின் தோற்றம் போலவே அடையாளப்படுத்தப்படுகிறது
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் போலப் படத்தொகுப்பில் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதே படத்தின் சிறப்பு.
படத்தின் இறுதி காட்சியில் ஸ்கோஃபீல்ட் தாக்குதலில் தப்பியோடி பாதாள அறைக்குள் நுழைகிறான், அங்கு ஒரு குழந்தையுடன் ஒரு இளம் பெண்ணைக் கண்டுபிடிக்கிறான். அந்த அறையின் மூலையில் ஒரு கொதிகலனிலிருந்து வெளிப்படும் வெளிச்சமும் அந்தப் பெண் கன்னிமேரியின் சாயலுடன் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதும் அற்புதம்
படத்தின் ஒரு காட்சியில் இந்திய வீரன் ஒருவன் ராணுவ வாகனத்தில் பயணிக்கிறான். முதல் உலகப்போரில் இந்தியர்களும் கலந்து கொண்டார்கள் என்பதன் அடையாளம் போலவே இக்காட்சி வெளிப்படுகிறது.
ஸ்கோஃபீல்டு நதியில் நீந்திச் சென்று உயரத்திலிருந்து தாவி விழும் போது கேமிரா கூடவே சுழலுகிறது. நீரின் ஓட்டத்துடன் கேமிரா இணைந்து பயணிக்கிறது.
கடைசியில் பிளேக்கின் சகோதரனைச் சந்தித்து ஸ்கோஃபீல்ட் உரையாடும் காட்சி மறக்கமுடியாதது.
படத்தின் இசை மற்றும் ஒலியமைப்பு மிகச்சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. அதுவும் ஐமாக்ஸ் அரங்கில் திரைப்படத்தைக் காணும் போது ஒலியமைப்பின் நேர்த்தியை முழுமையாக உணர முடிகிறது.

ஆந்த்ரே தார்கோவஸ்கியின் Ivan’s Childhood படம் பாருங்கள். அதிலும் யுத்தகளமே பின்புலம். ஆனால் அதை எவ்வளவு மகத்தான கலைப்படைப்பாகத் தார்கோவஸ்கி உருவாக்கியிருப்பார் என்பது புரியும். 1917 அது போன்ற கலைப்படைப்பாக வெளிப்படவில்லை. வணிகச் சுவாரஸ்யங்களின் எல்லைக்குள் நின்றுவிட்டது. அது தான் 1917க்கும் Ivan’s Childhoodக்குமான இடைவெளி.
1917 மிகச்சிறந்த படமில்லை. ஆனால் அது படமாக்கப்பட்டிருக்கும் விதம் வியக்க வைக்கக்கூடியது. #Roger_Deakins இப்படத்திற்காக மீண்டும் ஒரு ஆஸ்கார் விருது பெறக்கூடும் என்றே தோன்றுகிறது.

கடைசிவரை திரையரங்கு இருக்கை நுனிவரை என்னை அழைத்துச் சென்று ஒரு வீடியோ கேம் விளையாடுவது போன்ற உணர்வை கொடுத்த இந்த திரைப்படத்தை நீங்களும் பார்க்க தவறாதீர்கள்..

#1917 - ‘One Shot’ #யுத்தம்..🔥

👇உங்கள் கருத்துக்களும், விமர்சனங்களும் இங்கே வரவேற்கப்படுகின்றன. தொடர்ச்சியாக தரம்வாய்ந்த சினிமாவை பற்றி நாங்கள் அலசி ஆராயலாம்... நன்றி 🙏🎬

திங்கள், 18 மே, 2020

சிறுவர்களை வேலைத்தளங்களில் வேலைக்கு அமர்த்தாதீர்கள்.

'சிறுவர்களை வேலைத்தளங்களில் வேலைக்கு அமர்த்தாதீர்கள். மாறாக, அவர்களின் எதிர்கால வாழ்வின் கனவுகள் நனவாக வழி விடுங்கள்'.

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கின்றன.

குழந்தைகள் உங்களுக்கு பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல'என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துவதனூடாக சிறுவர் தொழிலாளர்களை அதிலிருந்து விடுபடுவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கல்வியானது எதிர்காலத்தில் சிறப்பான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான சாதனமாகும். அதன் அவசியத்தை அறியாத நிலையில் உள்ளவர்களாக பலர் காணப்படுகின்றார்கள். இன்றய சூழலின் கல்வியின் அவசியம் யாது? எதிர்காலத்தில் கல்வி அறிவு இன்மையால் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை உணராத நிலையில் உள்ள பெற்றோர் காணப்படுகின்றமையால் சிறுவர்களை கற்றலில் ஈடுபடச் செய்யாமல் சுயதேவையை பூர்த்தி செய்யும் வகையில் வேலைக்கு அனுப்புகின்ற நிலை காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரசகட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய,சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பவங்கள்,கடத்தல்கள்,சிறுவர்களை வேலைக்கமர்த்துதல்,பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும்,வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. பெருந்தோட்டங்கள்,கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட்டு செல்வந்த வீடுகளுக்கும்,கடைகள்,ஹோட்டல்கள், கராஜ்கள் போன்ற பல இடங்களுக்கும் வேலைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே அரும்பாகி பருவகாலங்களில் மலர வேண்டிய மலர்களை அரும்பிலேயே கசக்கி கருக்கும் சிறுவர் தொழில் சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். உலகெங்கும் வாழும் சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கும் சூழலும், வறுமை இல்லாது வாழும் சூழலும் உருவாக மக்கள் ஒன்றுபட்டு உழைக்க ​வேண்டும்.

எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும்..!

“வையகம் காப்பவரேனும் – சிறு
வாழைப்பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யகலத்தொழில் செய்தே – பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர். என்று #சமத்துவத்தையும்,

“உடன் பிறந்தார்களைப் போல – இவ்வுலகில்
மனிதரெல்லாருக்கும் இடம் பெரிதுண்டு வையத்தில் – இதில்
எதுக்கு சண்டைகள் செய்வீர்? என்றும் சமாதானம் கோருகிறான்.

“காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான். 

நம் #பாரதி, #மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?

பாரதியை ஒரு சார்புடையவனாக சித்தரிக்கும் சதியோ என்று வினவத் தோன்றுகிறது. பாரதி ஒரு மகாகவி என்னும் வெற்று பெருமை பேசி பயனில்லை, அவனை உலகமுழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் இனப் பெருமை என்பது வெற்று உணர்ச்சி முழக்கமாக, இனவெறி தூண்டுவதற்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு, பாரதியே கூறியதுபோல்,

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
       இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
       நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
       வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
       தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
       பரவும் வகை செய்தல் வேண்டும்.

- நாம் அதற்கு உழைப்போம்.

புதியதோர் உலகம் செய்வோம்

நாள்தோறும் ஊற்றெடுக்கும் கிணறுகளின் தண்ணீரே பயன்படுகிறது. இடையீடில்லாது ஓடிக்கொண்டேயிருக்கிற ஆறே ஜீவநதி; மனிதகுலத்துக்குப் பயன்படுவது. புண்ணிய தீர்த்தங்களாகக்கூட இடையீடில்லாது ஓடிக் கொண்டேயிருக்கின்ற ஆறுகளே அங்கீகரிக்கப்படுகின்றன.

அறிவின் வளர்ச்சிக்குப் புத்தம் புதிய நூல்களைக் கற்கவேண்டும். இலக்கியங்கள், புராணங்கள் மிகப் பழமையானவைகளைக் கற்கவேண்டும். அப்படிக் கற்பது வாழ்நிலையின் அடித்தளத்தை வலுப்படுத்தும்-வேர்கள் மரத்தை வலுப்படுத்துவது போல!
 
அறிவியல், அனுபவம் வளர வளர வளரும் தன்மையுடையது. அறிவியல் முற்றாக உலகியலை, உடலியலைச் சார்ந்தது. இந்த அறிவியல் உலகந்தழி இயது என்றுகூடக் கூறலாம்.
 
கலாச்சாரம், பண்பாடு முதலியன நாடுகள் தோறும் மாறும். இவை தலைமுறை தலைமுறையாக வருவன. இப்படி வழி வழி வரும் கலாச்சாரம், பண்பாடு ஆகியன வளரும் புதிய சமுதாயத்திற்கு மாறுபடாது. சென்ற கால வரலாற்றில் மாறுபட்டதில்லை.
 
ஒரு பழமை, புதுமையை ஈன்றுதர மறுக்குமாயின் அந்தப் பழமையில் ஏதோ குறையிருப்பதாகத்தான் பொருள். ஒரே வழி பழமைவாதிகள் தங்களுடைய அறியாமையை மறைத்துக்கொள்ளப் புதிய சிந்தனையை புதியவற்றை எதிர்ப்பார்கள்.
 
➡️ கிரேக்க ஞானி சாக்ரட்டிஸ், கலீலியோ, ஏசு பெருமான், அப்பரடிகள், வள்ளலார் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்றாகும். ஆனாலும் அவர்கள் கண்ட புதுமைதான் வென்றது.
 
அறிவு வளரும்போதே, ஆன்மாவும் ஒருங்கிணைந்து வளரவேண்டும். ஆன்மாவை வளர்த்துப் பேணிக்காக்கும் அறிவே, அறிவு. ஆன்மாவுக்குத் தொடர்பில்லாத அறிவு, வளர்ச்சிக்குத் துணை செய்யாது; மாற்றங்களுக்கும் காரணமாக அமையாது.
 
சிந்தனையில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, அறிவியலில் வளர்ச்சி, வாழ்நிலையில் வளர்ச்சி, சமூகத்தில் வளர்ச்சி இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் நிகழுமாயின் மாற்றங்கள் ஏற்படும்.
 
வளர்ச்சியும் மாற்றங்களுமே மனிதகுல மேம்பாட்டுக்கு உந்துசக்திகள். மனிதன் பழக்கங்களுக்கும், வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.
 
நாளும் மனிதன், புத்துயிர்ப்புப் பெறவேண்டும்; புது மனிதனாகப் பிறப்பெடுக்க வேண்டும். மனிதன் உழுதாலிலேயே உழுது கொண்டிருக்கும் வரை, நிலம் வளம் அடையாது.
 
🔅 அதுபோலவே படித்த சுலோகங்களையும் கோஷங்களையும் திரும்பத் திரும்பப் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி பாதிப்பு அடைந்தபின், மாற்றங்களும் ஏற்படாது.
 
அதனால், சாதி, சம்பிரதாய, மூடப் பழக்கங்களும் நிறைந்து வறுமையில் கிடந்துழலும் கூட்டமாக மக்கள் மாறுவர். இது நாட்டுக்கு ஏற்றதல்ல.
 
ஆதலால், ஒவ்வொரு நாளும் சென்ற காலத்திலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, நாளையை நோக்கி தடைபோட வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல; பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதுவும்" அல்ல, எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதுதான் முன்னேற்றம், வளர்ச்சி; மாற்றம்...! 

ஆதலால், நமக்கும் சரி, அடுத்த தலைமுறையினருக்கும் சரி, எதிர்கால நம்பிக்கை வேண்டும். வளர்ச்சியுடன் கூடியமாறுதல் தேவை. சென்ற காலத்தை விட எதிர்காலம் விழுமிய சிறப்புடையதாக இருக்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். ”இனி எதிர்காலத்தின் சிறப்பும்” என்பார் சேக்கிழார். பாவேந்தன் பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான்.

மத நிறுவனங்கள் அனுட்டானத்தை விட, பிரச்சாரப் புயலில் சிக்கித் தவிக்கின்றன. நாடோ, ஊரோ, வீடோ இன்று ஒன்றாக-ஒருருவாகவில்லை. கிராமத்தின் எல்லையில் நம்மை வரவேற்பது பசுமையும், இலைகளும், பூக்களும் நிறைந்த மரங்கள் அல்ல. கட்சிக் கொடிகளே வரவேற்கின்றன. அரசியற்கட்சிகளின் கொடிகளும் அல்ல.

உள் அமைப்பு ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும், மாற்றத்தையும் உத்தியாகக் கொள்ளாது தேக்கமடைந்ததால் ஏற்பட்ட கோபதாபங்களால் பிரசவிக்கப் பெற்றவைகளே இன்றுள்ள பெரும்பான்மையான கட்சிகள்..👈

'ஆகவே சிந்தியுங்கள்.' வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய பாதையில் செல்ல அடியெடுத்து வைப்போம் நடப்போம்! தொடர்ந்து நடப்போம்!

பகுத்தறிவு அவன் சொல்கேட்டு நடக்கும் ஒரு புத்திசாலியான அடிமை...!

அரசியலில் உணர்வுக்கும் பகுத்தறிவிற்கும் இடையேயான மோதலில், உணர்வுகளே எப்பொழுதும் வெல்கின்றன என்கிறார் 'வெசுடன்'. அரசியலில் உணர்வுகள்தான் முக்கியம், உண்மையோ அல்லது ஆதாயமோ அவ்வளவு முக்கியமல்ல.

“In politics, when reason and emotion collide, emotion invariably wins.”

மனிதர்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து முடிவெடுப்பதாக இருந்தால், அரசியல்வாதிகள் பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. எல்லாம் வெட்டிப் பேச்சாகவே இருக்கும். உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அரசியல்வாதிகள் மக்களை பகுத்தறிவினால் பேசி ஈர்ப்பதில்லை,  மாறாக அவர்களின் அடையாளம் (சாதி, மதம்) , சித்தாந்தம்,  வெறுப்பு,  பயம், காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் அடிப்படியில் உணர்வுகளைத் தூண்டி ஈர்க்கிறார்கள்.

பொதுவாக ஒருவர் எந்த அரசியலை ஆதரிக்கிறார் என்பதை அறிய அவருக்கு என்ன ஆதாயம் என்று பார்க்கக் கூடாது, மாறாக அவர் எது மாதிரியான பாரபட்சங்களைக, விருப்பு, வெறுப்புக்களைக்  கொண்டுள்ளார், எது உணர்வுகளைத் தூண்டும் என்று பார்க்கவேண்டும்.  ஒருவர் தனக்கு முக்கியம் என்று கருதுவது எதுவும் உணர்வுகளுடன் தொடர்புடையது. முக்கியமானதை இழந்தால் உணர்வுகள் வருத்தத்தை அளிக்கும்.  நாம் இழந்தால்  வருத்தப்படாத ஒன்றை முக்கியமாகக் கருதமுடியாது.

ஏன் உணர்வுகள் இவ்வளவு முக்கியமானதாக செயல்படுகிறது  என்பதற்கு நமது மூளையின் வடிவமைப்புதான் அடிப்படைக் காரணம். பகுத்தறிவு என்பது பரிணாம வளர்ச்சியில் மூளையில் உருவான கடைசி அடுக்கு, அது உணர்வுகளை உருவாக்கும் அடுக்கின் மீது கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக  உணர்வுகளின் வழியாகப் பகுத்தறிவு செயல்படுவதால், உணர்வுகளுக்கு பகுத்தறிவு அடிமையாக இருக்கிறது. பகுத்தறிவு இல்லாவிட்டால் நாம் விலங்குபோல அறிவின்றி  செயல்படுவோம். உணர்வுகள் இல்லாவிட்டால், ஒரு சமூகத்தில்  மனிதனாக செயல்படவே முடியாது. சில உளநோய் (psychopath) உள்ளவர்கள் கொடிய கொலைகள் புரிவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு உணர்வுகள் இல்லாததுதான். உணர்வும் அறிவும் இனைந்துதான் செயல்படுகின்றன. நாம் உணர்வுகள் காட்டும் திசையில் பகுத்தறிவு செயல்படுகிறது. பகுத்தறிவு என்பது ஒரு வக்கீல் போன்றது. உணர்வு எதை சரி என்று சொல்கிறதோ, அதை நியாயப்படுத்தும் ஒரு வக்கீல்தான் பகுத்தறிவு என்கிறது உளவியல் ஆராய்ச்சிகள். உதாரணமாக தொலைக்காட்சி  அல்லது முகநூல் விவாதங்களில், யாரவது “நீங்கள் சொல்வது சரி”  என்று பகுத்தறிந்து கட்சி தாவி பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அனைவரும் உணர்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு சாதகமாக ஒரு வக்கீலைப் போல நியாயம் கற்பிக்கிறார்கள். உணர்வுகளே அனைத்து முடிவையும் எடுப்பதில்லை. சில விடயங்களில் உணர்வுகள் பகுத்தறிவின் கையில் முடிவெடுக்கும் பொறுப்பை  கொடுத்து விடும். உணர்வுகள் என்பது ஒரு முட்டாள் எசமானான் போல.. "பகுத்தறிவு அவன் சொல்கேட்டு நடக்கும் ஒரு புத்திசாலியான அடிமை...!"

"நீ நீயாக இரு.."

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.

மன எழுச்சியடைந்துள்ள இளைஞர்கள் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். 

'அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.'🪔🙏