புதன், 15 மே, 2019

மனித செயல்பாடுகளால் புவியின் பல்லுயிர்த்தன்மையில் ஏற்படும் பாதிப்பினால் மனித இனத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகிறது என்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.

மனித இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்றை ஐநா வெளியிட்டிருக்கிறது. மனித இனம் அழிவை நோக்கிச் செல்வதற்கான காரணங்களாக பருவ நிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். 

தண்ணீர் தண்ணீர் என தகிக்கும் கோடை வெப்பத்திற்கு மக்கள் குடிநீர் தேடி அழையும் சூழல் கூட பருவ நிலை மாற்றத்தினால் தான் உருவானது. பருவமழை பொய்த்ததாலும், நீர் நிலை ஆக்கிரமிப்பு, வெயிலில் வறண்டு போகும் நதிகள் என மக்களுக்கு போதிய நீர் கிடைப்பத்தில்லை.  

தமிழகத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் காவிரி வறண்டு வருவதற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் அரசின் வளர்ச்சி திட்டங்களால் காடுகள் அழிந்து வருவது ஒரு முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். உலகில் உள்ள 35 பல்லுயிர் மண்டலங்களில் பாதுகாக்க வேண்டிய பகுதியாக மேற்கு தொடர்ச்சிமலை உள்ளது. இந்த இயற்கை மாசுபாடு உலகை அழிவுக்கே கொண்டு போகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  

பல்லுயிர் மற்றும் சூழலியல் தொடர்பான அரசங்கங்களுக்கு இடையேயான அறிவியல் கொள்கை மன்றம் சார்பாக 50 நாடுகளை  சேர்ந்த 145 சூழலிய ஆய்வாளர்கள் ஜக்கிய நாடுகள் கூட்டமைப்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ததனர். அந்த ஆய்வு முடிவுகள் நாம்  உலகம் அழிவின் விளிம்பில் இருப்பதாக சொல்கிறது. அதாவது இப்போது நடைபெறும் இயற்கை சுரண்டல் தொடருமேயானால் இன்னும் 150 ஆண்டுகளில் சுமார் 75% உயிரினங்கள் அழிந்துவிடும் என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 

இது சூழலில் உள்ள பல்லுயிர்த்தன்மையை பாதித்து மனிதர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதற்கு முன்னால் 5 முறை உயிர்களின் பேரழிவும் மனித இனம் தோன்றுவதற்கு முன்னர் நடைபெற்றது. இந்த பேரழிவின் காரணமாக அறிஞர்கள் சொல்வது தீவிர பனிக்காலம், ஆக்சிஜன் பற்றாக்குறை, விண்கற்கள் மோதல் மற்றும் எரிமலை வெடிப்பு. ஆனால் இம்முறை ஏற்பட உள்ள உயிர்கள் பேரழிவுக்கு மனிதர்கள் தான் காரணமாக இருப்பார்கள் என்கின்றனர் அறிஞர்கள். 

மனிதர்கள் ஊடுருவலால் நிலம் மற்றும் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம், உயிரினங்கள் வேட்டை மற்றும் கடத்தல், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசுப்பாடு மற்றும் அந்த சூழல் மண்டலத்தை சாராத அன்னிய உயிரினங்கள் இந்த  ஐந்து காரணிகளால் உயிரிபல்வகைமை பாதிப்புக்கு உள்ளாகிறது என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த அழிவில் இருந்து தற்காத்து கொள்ள முடியும் என ஆய்வாளர்கள்  குறிப்பிடுகின்றனர். 

கடந்த 50 ஆண்டுகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்காக இயற்கையின் நுகர்வு அதிகரித்து உள்ளது நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இயற்கை வளத்தை பண்டமாக மதிப்பிடுவது அதன் வளத்திற்கு ஊறுவிளைவிக்கும் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். கடந்த 50 ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் அழிந்துள்ளன, 10 லட்சத்துக்கும் அதிகமான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளது. 

வரும் 2020ல் சீனாவில் நடைபெற உள்ள பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இந்த அறிக்கை அடிப்படையில் முக்கிய கொள்கைகள் வகுக்கப்பட உள்ளது. இவ்வளவு நாட்களாக இயற்கையை பயன்படுத்தி பலன்களை அனுபவித்த மனித இனம் தனது எதிர்கால சந்ததிக்கு எதைத் தரப் போகிறது என்பதற்கு அந்த மாநாடு விடை தர வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கிறது.