செவ்வாய், 7 மே, 2019

ப்ராய்டியன் ஸ்லிப் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

கனவு காண்பது மனிதனின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. கனவுகள் மூலம் தனக்கு ஏதோ ஒரு சமிக்ஞை கிடைக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான விளக்கங்களையும், அந்த கனவுக்கான காரணத்தையும் அறிய மனிதன் முற்படுவதும் வழக்கம். 

இன்றல்ல நேற்றல்ல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதன் கனவுகளை புரிந்துகொள்ள முயன்று வருகிறான். கனவுகள் தெய்வத்தின் விருப்பம் கொண்டு உருவாவது என்று நம்பிய மூதாதையர்கள் அதன் காரணிகள் யாவை என அறியும் முயற்சியில் ஈடுபடவில்லை. கனவு ஒரு நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே இருந்தது. எனவே அது விஞ்ஞானத்தின் பிரச்சனையாயிற்று. பல சந்தேகங்கள் ஆராய்ச்சிகளுக்குப்பின் கனவு உண்டாவதற்கு பலவகைப்பட்ட காரணங்கள் உண்டு எனவும் அது உளவியல் ரீதியாகவும் இருக்கலாம், உடலியல் ரீதியாகவும் இருக்கலாம் என்றும் விஞ்ஞானம் கண்டுபிடித்தது. ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை விதையை போட்டது சிக்மண்ட் ஃப்ராய்ட் தான். 

1856ம் ஆண்டு மே6ம் தேதி ப்ராய்பெர்க்(Freiberg) என்ற ஊரில் தற்போது செக்கோஸ்லோவகியாக (Czechoslovakia) உள்ள மொராவியா நாட்டில் ஜேக்கப் பிராய்ட் (Jacob Freud), அமலியா ஃப்ராய்ட் (Amalia Freud) தம்பதிகளுக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார் சிக்மண்ட் ப்ராய்ட். சிக்மண்ட் ஃப்ராய்ட் பிறப்பால் ஒரு யூதர். ஜேக்கப் பிராய்ட் ஒரு கம்பளி வியாபாரி. தொழிற்புரட்சி காரணமாக ப்ராய்பெர்க்கிலிருந்து வியன்னாவுக்கு குடி பெயர்ந்தது சிக்மண்ட் ஃப்ராய்ட் குடும்பம்.

ஃப்ராய்ட் அடிப்படையில் ஒரு மருத்துவர். பின்னர் நரம்பியல் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற ஃப்ராய்ட் தன் தந்தையின் இறப்புக்குப் பிறகு கனவுகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கினார்.  மனநோய் மூளையை பாதிக்கக்கூடிய நோய் எனவே நோயாளியின் மனோபாவங்களையும் வரலாற்றையும் கேட்டறிந்து அவர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள குறைகளையும் அறிந்து களைய வேண்டும். அவ்வாறு செய்யாத வரை எந்த மருந்தாலும் மனநோயை குணப்படுத்த முடியாது என்று மன நோயாளிகள் பலரிடம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் கண்டு சொன்னவர் பிராய்ட் தான். அதற்கு Psycho analysis எனப்படும் உளப்பகுப்பாய்வு என்ற மன அலசல் முறையை முதன்முதலில் உருவாக்கினார். இன்னும் சொல்லப்போனால் Psycho analysis என்ற சொல்லை கொடுத்தவரே ஃப்ராய்ட்தான்.பலர் சிக்மண்ட் ப்ராய்டை உளவியலின் தந்தை என்கின்றனர்.

ஆனால் ஃப்ராய்ட் உளவியலின் தந்தை அல்ல. வில்ஹைம் உண்ட் (wilheim wundt) என்பவர்தான் உளவியலின் தந்தை. ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வின் தந்தை. தனது புத்தகங்களில் வில்ஹெய்மின் கூற்றுகளை மேற்கோள் காட்டியிருப்பார் ஃப்ராய்ட். ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு முறை (Psychonanalysis) உள்ளத்தின் அமைப்பும் அதன் இயக்கமும் பற்றிய ஒரு கோட்பாடு; இட் (Id), அகம் Ego), அதிஅகம் (superego) போன்ற கருத்தாக்கங்கள் இதில் அடங்கும். இதை உளநரம்பு நோய்களுக்கான (neuroses) சிகிச்சை முறையாக முன்வைத்தார் ஃப்ராயிட். வாய்தவறி கருத்துகளை சொல்வதற்கும், பெயர்களை மறந்து போவதற்கும் ஆழ்மனதிற்கும் தொடர்பு உள்ளது என்று தனது The Psychopathology of Everyday Life புத்தகத்தில் விளக்கினார் ஃப்ராய்ட். அதுதான் ப்ராய்டியன் ஸ்லிப் என்று சொல்லப்படுகிறது.

கனவுகள் யாவும் நனவில் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் களமாக வடிகாலாக அமைகிறது எனவும் அந்த ஆசைகள் பெரும்பாலும் பாலுணர்வு சம்பந்தப்பட்டதாகவே உள்ளது என நம்பினார் ஃப்ராய்ட். இந்த கருத்துக்காக ஆராய்ச்சியாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

1900ம் ஆண்டின் தொடக்கத்தில் கனவுகள் குறித்த ஆராய்ச்சிகள் அடங்கிய “the interpretation of dreams” என்ற கனவுகளின் விளக்கங்கள் அடங்கிய புத்தகத்தை 600 பிரதிகள் மட்டும் அச்சிட்டு வெளியிட்டார் ப்ராய்ட். அந்த புத்தகம் வெளியிட்டு 8 ஆண்டுகள் வரை விற்கப்படவில்லை. அதற்குப் பிறகு அந்த புத்தகம் திடீரென பிரபலமடைய, ஃப்ராய்டின் இறப்பு வரை மட்டும் 7 பதிப்புகள் வெளியானதோடு உலகை மாற்றிய சிறந்த புத்தகங்களில் ஒன்று என்று இப்போதுவரை வர்ணிக்கப்படுகிறது. 

1923களில் தாடையில் கேன்சர் நோயால்தாக்கப்பட்டு கடுமையாக அவதிப்பட்டார் ஃப்ராய்ட். அதன்காரணமாக 30 அறுவை சிகிச்சைகள் அவரது தாடையில் நடைபெற்றது. ஆனாலும் ஃப்ராய்ட் தனது ஆராய்ச்சியை விடவில்லை. 1938ல் ஹிட்லரின் நாசிப்படைகள் வியன்னாவை சூழ்ந்துகொண்டன. ஃப்ராய்ட் அடிப்படையில் ஒரு யூதர் என்பதால் லண்டன் நகருக்கு தனது மனைவி மற்றும் மகள் அன்னாவோடு இடம்பெயர்ந்தார். 

எனினும் லண்டன் சென்ற சில மாதங்களிலேயே நோய் தாக்கம் அதிகமானதால் 1939ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி ஃப்ராய்ட் உயிரிழந்தார். ஃப்ராய்டின் கோட்பாடுகளில் தவறு உள்ளது என்பது பின்னாளில், பல உளவியல் ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டாலும், கனவு பற்றி விஞ்ஞானப்பூர்வமாக அறிந்துகொள்ள ஃப்ராய்டின் சிந்தனையை பரிட்சயம் கொள்வது முதலில் அவசியம் என்பது மறுக்கவியலாதது.