திங்கள், 18 மே, 2020

சிறுவர்களை வேலைத்தளங்களில் வேலைக்கு அமர்த்தாதீர்கள்.

'சிறுவர்களை வேலைத்தளங்களில் வேலைக்கு அமர்த்தாதீர்கள். மாறாக, அவர்களின் எதிர்கால வாழ்வின் கனவுகள் நனவாக வழி விடுங்கள்'.

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கின்றன.

குழந்தைகள் உங்களுக்கு பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல'என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துவதனூடாக சிறுவர் தொழிலாளர்களை அதிலிருந்து விடுபடுவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கல்வியானது எதிர்காலத்தில் சிறப்பான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான சாதனமாகும். அதன் அவசியத்தை அறியாத நிலையில் உள்ளவர்களாக பலர் காணப்படுகின்றார்கள். இன்றய சூழலின் கல்வியின் அவசியம் யாது? எதிர்காலத்தில் கல்வி அறிவு இன்மையால் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை உணராத நிலையில் உள்ள பெற்றோர் காணப்படுகின்றமையால் சிறுவர்களை கற்றலில் ஈடுபடச் செய்யாமல் சுயதேவையை பூர்த்தி செய்யும் வகையில் வேலைக்கு அனுப்புகின்ற நிலை காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரசகட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய,சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பவங்கள்,கடத்தல்கள்,சிறுவர்களை வேலைக்கமர்த்துதல்,பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும்,வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. பெருந்தோட்டங்கள்,கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட்டு செல்வந்த வீடுகளுக்கும்,கடைகள்,ஹோட்டல்கள், கராஜ்கள் போன்ற பல இடங்களுக்கும் வேலைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே அரும்பாகி பருவகாலங்களில் மலர வேண்டிய மலர்களை அரும்பிலேயே கசக்கி கருக்கும் சிறுவர் தொழில் சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். உலகெங்கும் வாழும் சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கும் சூழலும், வறுமை இல்லாது வாழும் சூழலும் உருவாக மக்கள் ஒன்றுபட்டு உழைக்க ​வேண்டும்.