திங்கள், 5 ஆகஸ்ட், 2019

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைவிட பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரம் பூமியை கடக்கும்

அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட பெரிய விண்கல் ஒன்று அடுத்த வாரத்தில் பூமியை அருகாமையில் கடந்து செல்லவுள்ளது.
விண்வெளியில்  பில்லியன் கணக்கில் விண்கற்கள் உள்ளன. அவை புவியின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு விழும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. அளவில் சிறியதாக இருக்கும் பட்சத்தில் பிரச்சினையில்லை.

ஆனால் பெரியதாக இருக்கும் பட்சத்தில் விளைவுகள் மோசமாக இருக்கும். அந்த வகையில், ஆயிரத்து 870 அடி விட்டத்தைக் கொண்ட 2006 கியூகியூ33 (QQ23) என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் ஒன்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூமியை அருகாமையில் கடந்து செல்ல உள்ளது.

தற்போது பூமியில் இருந்து சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அது உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த விண்கல்லால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பொதுவாக சூரிய மண்டலத்தில் உள்ள விண்கற்களின் அதிக பட்ச நீளமே 33 கிலோ மீட்டர்கள் தான். பூமிக்கு மிக அருகே கடந்து செல்லும் விண்கற்கள், ஆபத்தை ஏற்படுத்தும் விண்கற்கள் தொடர்பாக கண்டுபிடித்து எச்சரிக்கும் தொழில்நுட்பம் நாசாவிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.