சனி, 22 ஜூன், 2019

60 சதவீதம் பாலைவனம் மட்டுமே கொண்ட நாடு, நீர்மேலாண்மையில் சிறந்து விளங்குவது எப்படி?

இஸ்ரேலில் இருப்பதுபோன்ற தண்ணீர் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி நீர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு யோசனை சொல்லிருக்கிறார் ஸ்டாலின்.... நீர்மேலாண்மைக்கு உலகளவில் பெயர் பெற்ற இஸ்ரேல் எப்படி இந்த நிலையை அடைந்தது? 

இஸ்ரேல் ஒன்றும் தமிழ்நாட்டைபோல பசுமையான வளங்கள் மிகுந்த பகுதி கிடையாது. நாட்டில் 60 சதவீதம் பாலைவனம் மட்டும்தான், சுட்டெரிக்கும் வெயில், வடக்கு பகுதிக்கு மட்டுமே பொழியும் மழை... இன்று தமிழகம் சந்திக்கும் தண்ணீர் பஞ்சத்தைவிட 1000 மடங்கு அதிகமான பஞ்சம்.. அப்படிப்பட்ட நாடு இன்று தண்ணீரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளக்கு வளர்ந்திருக்கிறது? இது எப்படி சாத்தியமானது? 

1959 ஆம் ஆண்டிலேயே, நீர் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி நீர்வளங்களை பொதுச் சொத்தாக மாற்றியது இஸ்ரேல்.  விவசாயத்திற்கு போதுமான நீர் விநியோகம் செய்வது, குடிப்பதற்கு மற்றும் மக்கள் உபயோகப்படுத்த தேவையான தண்ணீரை தங்கு தடையில்லாமல் விநியோகிப்பது, இவைதான் இந்த சட்டத்தின் முக்கியமான நோக்கம்... இந்த சட்டம் மூலமாக நீர்வளங்கள் சுரண்டவது தடுக்கப்பட்டதோடு, தண்ணீர் ஒதுக்கீடும்  ஒழுங்குபடுத்தப்பட்டது.

2010 ம் ஆண்டு இஸ்ரேலின் ஒட்டுமொத்த தண்ணீர் தேவை, 24 லட்சத்து 80ஆயிரம் கோடி லிட்டர். ஆனால்,  2020ம் ஆண்டில் 26  லட்சத்து 80 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதை முன்னரே கணித்து பல திட்டங்களை வகுத்து நீர் தேவை பூர்த்திசெய்யவிருக்கிறது.

இஸ்ரேல் கொண்டுவந்த சிறந்த திட்டங்களில் முதன்மையானது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். உலகிற்கே இந்த திட்டத்தில் இஸ்ரேல் முன்னோடியாக திகழ்கிறது.  மொத்த குடிநீர் விநியோகத்தில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மூலம் 50 சதவீதமும், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலம் 40 சதவீதமும், நீர்நிலைகளில் இருந்து 10 சதவீதமும் பெறப்படுகிறது. இதன்மூலமாக நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 97 சதவீத மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது இஸ்ரேல்.

வேளாண்மையில் சொட்டு நீர் பாசன முறையை உருவாக்கி, அதை வெற்றிகரமாக பயன்படுத்திய நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது இஸ்ரேல். குடிநீர் குழாய்களில் ஏற்படும் சிறு துளைகள் மற்றும் உடைப்புகளை உடனடியாக கண்டறிந்து, அதை ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட ரோபாக்களின் உதவியுடன் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுகிறது. இதன்மூலம் தண்ணீர்  வீணாவது 25%-75%  தடுக்கப்படுகிறது. 

இதோடு மட்டுமில்லாமல், இஸ்ரேல் முழுவதிலும் மொத்தம் 120 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு சுமார் 90 சதவீத கழிவுநீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. பாலைவனத்தில் செயற்கை ஏரியை உருவாக்கி, அதில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை சேமித்து வேளாண் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த திட்டங்களால்  தண்ணீர் பிரச்சனைகள் தீர்ந்ததோடு மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது...  நீர் மேலாண்மைக்கான உபகரணங்கள் தயாரித்து ஏற்றுமதி செய்வதில் மட்டும் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடப்பதாக தெரிவிக்கின்றன புள்ளிவிபரங்கள்... 
 
இதெல்லாம் சாத்தியப்பட இஸ்ரேலுக்கு சுமார் 70 ஆண்டுகள் ஆகிருக்கிறது. இந்த திட்டங்களை தமிழ்நாடு இப்போது உடனே செயல்படுத்தினால் இன்னும் 70 ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சமே வராது என்று கணிக்கின்றனர் நீர்மேலாண்மை வல்லுநர்கள்...