புதன், 29 ஜனவரி, 2020

விண்வெளித்துறை சாதனையில் உயர... உயர... பறக்கும் இந்தியா

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா தனது விண்வெளி பயணத்தில் மாபெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
விண்வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்டத்தட்ட ஒரு வெற்றிடம் ஆகும். நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண்வெளியில் நட்சத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே.
மனிதன், பூமி, நிலவு, கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள், பால் வெளி இவை குறித்து அறிந்து கொள்வதற்கான ஆர்வத்திற்கு மனித சமுதாயம் எடுத்து கொண்ட முயற்சியே விண்வெளி பயணங்கள். ஆள் இல்லாத, ஆளோடு கூடிய விண்கலங்களை பூமியின் எல்லைகளுக்கு அப்பால் அனுப்பி இந்த பிரபஞ்சம் குறித்த பல உபயோகமான தகவல்களை பெறுவதற்கான ஒரு முயற்சியாக இது அமைந்து உள்ளது. விண்வெளி காலம் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது.
இந்த விண்வெளி பயணம் நமது பூமிக்கும், இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பை கண்டறிவதற்காகவும் சூரியன் கிரகங்கள், நட்சத்திரங்கள் எப்படி தோன்றின என்பதை ஆய்வு செய்வதற்காகவும் இந்த பூமிக்கு அப்பால் உயிரினங்கள் மற்றும் நம்மை போன்ற மனித சமுதாயங்கள் இருக்கின்றனவா என அறிந்து கொள்வதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக நாடுகள் அனைத்தும் விண்வெளித்துறையில் பல்வேறு ஆய்வுகளை  மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில்  வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி உலகத்தையே வியக்க வைத்து வருகிறது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இந்திய அரசின் முதன்மையான விண்வெளி ஆராய்ச்சி நிலையமாக விளங்குகிறது. இது ஆகஸ்டு 15, 1969 -இல் நிறுவப்பட்டது. உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையங்களில் இஸ்ரோ ஆறாவதாக உள்ளது. புதிய மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து அவற்றை நாட்டு நலனுக்காக பயன்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உள்ளது. 
இஸ்ரோவின் பல்வேறு பணிகளுக்காகவும், ஆராய்ச்சிகளுக்காகவும் பெங்களூரு, திருவனந்தபுரம், டெல்லி, ஸ்ரீஹரிகோட்டா, மகேந்திரகிரி (தமிழகம்) உள்பட 21 இடங்களில் இஸ்ரோ மையங்கள் உள்ளது.
விஞ்ஞானிகளின் விடா முயற்சி, கடின உழைப்பு, மற்றும் திறமையினால் இஸ்ரோ பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 1975 -இல் ஆர்யபட்டா என்ற இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் இஸ்ரோவினால் உருவாக்கப்பட்டது. இது சோவியத் ரஷ்யாவின் உதவியுடன் அந்நாட்டிலிருந்து, அவர்களுடைய  ராக்கெட்  மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஸ்கரா, ரோகிணி, கல்பனா, இன்சாட் போன்ற பல செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. 
நிலவை ஆராய்வதற்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கைக்கோள் சந்திரயான். சந்திரயான் விண்கலம் இந்திய தயாரிப்பான பி.எஸ்.எல்.வி.(எக்ஸ்எல்) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திரயான் விண்கலம், நவம்பர் 8-ம்தேதி (2008) நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. நவம்பர் 14-ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் இறங்கியது. அங்கு வெற்றிகரமாக இந்திய தேசியக் கொடியை நிலைநாட்டியது. இதன்மூலம் நிலவில் தனது நாட்டின் கொடியை பதித்த 4-வது உலகநாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. சந்திரயானின் முக்கியச் சாதனையாக கருதப்படுவது நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை அது உறுதிபடுத்தியதுதான்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பி வெற்றி கண்டதைத் தொடர்ந்து செவ்வாய்கிரக ஆராய்ச்சிக்காக ஒரு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அந்த விண்கலத்திற்கு மங்கள்யான் என்று பெயர்சூட்டப்பட்டது 
2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ந்தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. மங்கள்யான் விண்கலம் 450 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட விண்கலங்கள் இவ்வளவு குறைந்த செலவில் தயாரிக்கப்படவில்லை. இதன் எடை 1,350 கிலோ.
24.9.2014 அன்று இஸ்ரோ விஞ்ஞானிகளின் 3 மணி நேர தொடர் நடவடிக்கைக்குப்பின், செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து பல  வெளிநாட்டினரும் செயற்கைகோள் தயாரித்து தரக்கேட்டுக் கொண்டார்கள். இதைத் தொடர்ந்து இந்தியா பல செயற்கைக்கோள்களை விண்ணுக்கும் அனுப்பியது.
2017 ஆம் ஆண்டில் ஒரே ஒரு பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்தது. பிஎஸ்எல்வி - சி 37 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன.
இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைக்கோள், ஐஎன்எஸ்-1ஏ, ஐஎன்எஸ் 1-பி என 2 நானோ செயற்கைக்கோள்கள் இஸ்ரேல், கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான 5 நானோ செயற்கைக்கோள், அமெரிக்காவின் 96 நானோ செயற்கைக் கோள்கள் என மொத்தம் 104 செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் சுமந்து சென்றது. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக  நிலை நிறுத்தப்பட்டன.
அதிகபட்சமாக 37 செயற்கைக்கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்தது. 104 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் ரஷ்யாவின் சாதனை முறியடித்து உள்ளது.
இதன் மூலம் இந்தியா குறைந்த கட்டண விண்வெளி ஆய்வு மற்றும் அறிவியல் பணிகள் குறித்த நற்பெயரையும் உருவாக்கியுள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றினாலும் 10 நாடுகள்தான் அவற்றை ஏவும் வசதியைப் பெற்றுள்ளது. அவ்வகையில் இஸ்ரோவினால் 11-12-2019  வரை 319  வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
1994 ஆம் ஆண்டிலிருந்து 40க்கும் அதிகமான முறை பிஎஸ்எல்வி ராக்கெட்டில் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளி வட்டப்பாதையை முத்தமிட்டிருக்கின்றன.
2015க்குப் பிறகு இந்தியா ஹெவி வெய்ட் தொலைதொடர்பு செயற்கைக்கோள்களை ஏவ ஏரியன்ஸ்பேஸ் எனும் வர்த்தகரீதியிலான செயற்கைக்கோள் நிறுவனத்தின் உதவியை நாடியது. பிற்காலத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைக்கோளை ஏவும் முயற்சிகளை இந்தியா தொடங்கும். தற்போதைக்கு இந்தியா, குறைந்த செலவில்  செயற்கைக்கோள்களை அனுப்பும் நிறுவனம் ஒன் அண்ட் ஒன்லி தான் மட்டுமே என உலகிற்கு கூறியுள்ளது.
இஸ்ரோ வெளிநாட்டு லைட்வெயிட் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ராக்கெட்டுகள் மூலம் அனுப்ப 1.5 கோடி ரூபாய்களை கட்டணமாக வசூலிக்கிறது. இவ்வகையில் பிஎஸ்எல்வி ராக்கெட்டிற்கான மார்க்கெட்டை இஸ்‌ரோ கைப்பற்றும் வாய்ப்பு அதிகம்.
இந்திய செயற்கைக்கோளை அழிக்க எதிரி நாடுகள் முயன்றால் அவர்களின் ஏவுகணையை விண்ணில் தவிடு பொடியாக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது.
வெறும் மூன்றே நிமிடங்களில் இந்தியா இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளது. மேலும் இதன் தயாரிப்பு 100% இந்திய தொழில்நுட்பத்தால் ஆனது.
மிஷன் சக்தி என்ற பெயர் கொண்ட திட்டம் வெற்றி பெற்றுள்ளது.
உலகிலேயே இந்த வகை திறன் பெற்ற 4-வது நாடாக இந்தியா வெற்றி கண்டுள்ளது.
சந்திரயான்-1 விண்கலம் அனுப்பியதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ‘சந்திரயான்-2’ திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
சந்திரயான்-2 விண்கலம், கடந்த 2019  ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுப்பாதையில்  வெற்றிகரமாக நிலை நிறுத்தி சாதனை புரிந்தது.
நிலவின் மேற்பரப்பில் சந்திராயன்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அதனுடனான தொடர்பை இழந்தது. விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்தது. இது சிறிது  பின்னடைவை ஏற்படுத்தினாலும் சந்திரயான்-2 திட்டம் வெற்றிதான்.
2019ம் ஆண்டில் அனுப்பிய விண்கலங்களின் எண்ணிக்கை 7. இஸ்ரோ 77 முறை பூமியில் இருந்து விண்ணிற்கு ஏவுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. 2019ம் ஆண்டில் 6 முறை இது நடந்துள்ளது. 2019ம் ஆண்டில் 50 செயற்கைக்கோள்களை அனுப்பி உள்ளது.
2019ம் ஆண்டில் விண்வெளியில் ஏவப்பட்ட விண்கலங்கள்:
ஜனவரி:  மைக்ரோசாட்-ஆர் (ராணுவ நோக்கத்திற்காக) 
பிப்ரவரி : சிசாட்-31 (தொலைதொடர்புக்காக) 
ஏப்ரலில் : இ.எம்.ஐ.சாட் (மின்காந்த அளவீடுக்காக)
மே: ரிசாட்-2பி (பேரிடர் மேலாண் திட்டம், பூமியை ஆய்வு செய்ய)
ஜூலை: சந்திரயான்-2 (நிலவை ஆய்வு செய்ய)
நவம்பர்: கார்ட்டோசாட்-3 (பூமியை ஆய்வு செய்ய)
டிசம்பர் : ரிசாட்-2பிஆர்ஐ (பேரிடர் மேலாண் திட்டம், பூமியை ஆய்வு செய்ய)
இந்திய வெண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின்  எதிர்கால திட்டங்கள் பல உள்ளன.
சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளை தொடர்ந்து சூரியன் பற்றிய ஆராய்ச்சிகளை 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளனர். ‘ஆதித்யா எல்-1’ என்ற திட்டத்தின் மூலம் சூரிய ஒளிவட்ட ஆய்வுகளையும் காலநிலை மாற்றத்திற்கான காரணங்களையும் தேட இருக்கிறார்கள்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது, செவ்வாய் கிரகம் மற்றும் சந்திரனில் மனித குடியிருப்புகளை அமைப்பது உள்ளிட்ட பல பணிகளையும், 2020-ம் ஆண்டிற்குள் செய்து முடிக்க இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) ரோபோ வகைக்கு ஒரு பெரிய பாய்ச்சலை எடுத்து வருகிறது.
2021 (ஜூலை) ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகள்
2021 (டிசம்பர்) ஆளில்லா விண்வெளி விமான ஆராய்ச்சிகளுக்கு அடுத்ததாக, மனிதர்களை சுமந்து செல்லும் ‘ககன்யான்’ என்ற விண்வெளி விமான சோதனையில் ஈடுபட உள்ளனர். இஸ்ரோவின் இந்த திட்டம் வெற்றிப்பெற்றால், மனிதர்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் முதல் விண்வெளி விமானம் என்ற பெருமை, ககன்யானுக்கு கிடைக்கும். 3 விண்வெளி வீரர்கள் பயணிக்கும்படி ககன்யானை வடிவமைக்க உள்ளனர்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கு முன்னோடியாக மனித உருவிலான பெண் ரோபோவை இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
காலில்லாத வயோம் மித்ரா எனும் பெண் ரோபோ இதற்காக  உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் செய்யும் பல வேலைகளை செய்யும் திறமையுடைய இந்த ரோபோ இரு மொழிகளில் சரளமாக பேசும் திறனுடையது.
அறிமுகவிழாவில் பேசிய வயோம் மித்ரா நான் வியோம் மித்ரா பேசுகிறேன். நான் பாதி மனித ரோபோவின் முன்மாதிரி. முதல் ஆளில்லா ககன்யான் திட்டத்திற்காக நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன். என்னால் தொகுதி அளவுருக்கள் (மாடுல் பேராமீட்டர்ஸ்) மூலம் கண்காணிக்க முடியும். உங்களை எச்சரிக்க முடியும். வாழ்வியல் செயல்களை செய்ய முடியும். சுவிட்ச் பேனல் செயல்பாடுகள் போன்ற செயல்களை என்னால் செய்ய இயலும்.
நான் விண்வெளி வீரர்களுடன் ஒரு தோழியாக இருக்க முடியும். அவர்களுடன் கலந்துரையாடுவேன். அவர்களை அடையாளம் காண இயலும். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்கவும் முடியும் என்று பெண் ரோபோ பேசியது அனைவரையும் கவர்ந்தது.
2023 வீனஸ் கிரக ஆராய்ச்சி விண்கலம் அனுப்புவது.
2030 ககன்யான் விண்வெளி விமானத்தில், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் வீரர்களுக்கு ஏதுவாக, விண்வெளியில் மிதக்கும் பிரத்யேக விண்வெளி  நிலையத்தை கட்டமைக்கும் முயற்சிகளில் இஸ்ரோ இறங்க உள்ளது. ‘‘இதன்படி 2030-ம் ஆண்டில், இந்தியாவிற்கு என பிரத்யேக விண்வெளி நிலையம் விண்ணில் மிதக்கும்.
இந்த விண்வெளி நிலையம் 20 டன் எடையில் உருவாக உள்ளது. இதில் விண்வெளி வீரர்கள் 15 நாட்கள் வரை தங்கியிருக்கலாம். இந்த விண்வெளி நிலையத்தை, பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்க உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற 107வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி விண்வெளி துறையில் இந்தியா வெற்றி, பெற்றதைப்போல ஆழ்கடல் ஆய்விலும் பிரதிபலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.