திங்கள், 22 ஜூலை, 2013

குர்து - மலையோரம் வீசும் இரத்த வாடை...!





துருக்கி, இஸ்தான்புல் நகரம். குர்து சிறுபான்மையின மக்கள் வாழும் புறநகர் பகுதி அன்று வழக்கத்திற்கு மாறாக பதற்றம் காணப்படுகின்றது. முக்கியமான சந்தியில் வேள்வித்தீ போல பெரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்புக்கு அந்தப்பக்கம் விண்வெளிக்கு செல்பவர்களைப் போல கவச உடையணிந்த பொலிஸ்காரர்கள், தடுப்புச் சுவர் போல வீதியை மறித்துக் கொண்டு நிற்கின்றனர். நெருப்பிற்கு இந்தப் பக்கம், பதின்ம வயதிலான சாதாரண இளைஞர்கள். பொலிசாரை நோக்கி கற்களை வீசியெறிந்து விட்டு ஓடுகிறார்கள். பதிலுக்கு பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகின்றது. சாதாரண கடைத் தெரு அன்று யுத்தகளம் போல காணப்படுகின்றது. வியாபாரிகள் கடைகளை இழுத்து மூடிவிட்டு உள்ளுக்குள்ளே பதுங்கிக் கொள்கின்றனர். பொது மக்கள் பாதுகாப்புத் தேடி நாலாபுறமும் ஓடுகின்றனர்.

அங்கே என்ன நடக்கிறது? ஏதாவது அரசியல் ஆர்ப்பாட்டமா? இல்லை. அது ஒரு புதுவருடக் கொண்டாட்டம்! உலகிலேயே துருக்கியில் மட்டும் தான், புதுவருடப் பிறப்பு கலவரத்தை தூண்டும் அரசியல் தினமாக "கொண்டாடப்படுகின்றது". அந்த நாட்டில் மட்டும்தான், சிறுபான்மை குர்து இன மக்களின் "நெவ்ரோஸ்" என்ற தனித்துவமான புத்தாண்டு தினம் தடைசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 21 ம் திகதியளவில், குர்தியரைப் போல ஒருமித்த புராதன கலாச்சாரத்தை கொண்ட ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நெவ்ரோஸ் கொண்டாடப்படுகின்றது. (வட இந்தியாவில் அதையே "ஹோலி பண்டிகை" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.) இருப்பினும் துருக்கி பேரினவாதமானது, சிறுபான்மை இனங்களின் எந்தவொரு கலாச்சார அடையாளத்தையும் சகித்துக் கொள்வதில்லை.

துருக்கி நாட்டில், துருக்கி மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை தவிர, ஆர்மேனியர்கள், குர்தியர், அரேபியர் ஆகிய சிறுபான்மை இனங்கள் (குறிப்பாக கிழக்கு பிரதேசங்களில்) காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப்போரின் முடிவில், பெருமளவு ஆர்மேனியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை மூலம் விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது துருக்கியில் வாழும், எஞ்சிய சில லட்சம் ஆர்மேனியர்கள் கடந்தகால இனப்படுகொலை பற்றி பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் உயிர்வாழ்தலின் அவசியத்திற்காக, பெரும்பான்மை சமூகத்துக்குள் அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அரேபிய சிறுபான்மையினர் வாழும் பிரதேசம், முன்பு சிரியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பிரெஞ்சு காலனிய அரசால் துருக்கிக்கு தாரை வார்க்கப்பட்டது.

குர்து மக்களின் வாழ்விடம் ஒரு மலைப்பிரதேசமாகும். பொருளாதார ஆதாயமற்ற மலைகள் மீது, எந்தவொரு ஆட்சியாளருக்கும் அதிக அக்கறை இருக்கவில்லை. இதனால் ஓட்டோமான் இஸ்லாமிய அரசு காலத்திலும், குர்து நிலப்பிரபுக்களினால் ஓரளவு சுயாதீனமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போர் முடிவில், ஈராக்கை கைப்பற்றிய பிரிட்டிஷார், குர்து இன மக்களின் பிரதேசம் வரை தமது காலனிய ஆட்சிக்கு உட்படுத்தினர். மத்திய கிழக்கில் தேசிய அரசுகளை உருவாக்குவதில் ஈடுபட்ட பிரிட்டிஷ் காலனியவாதிகள், குர்து இனத்தவருக்கு தனியான தேசத்தை தருவதாக உறுதிமொழி கொடுத்தனர். இருப்பினும் கண்ணியமற்ற பிரிட்டிஷ் அதிகாரிகள், உறுதிமொழிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டனர். குர்து மக்களின் தாயகத்தை ஈராக்கிற்கும், துருக்கிக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு, லண்டன் சென்று ஓய்வெடுத்தனர்.

கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி அரசாங்கம், துருக்கி முழுவதும் பாசிச ஆளுமைக்கு உட்படுத்தியது. சிறுபான்மை இனங்கள் கடுமையாக அடக்கப்பட்டன. உத்தியோகபூர்வ மொழியான துருக்கி மொழி மட்டுமே பாடசாலைகளில் போதிக்கப்பட்டது. குர்து மொழியை வீட்டில், வீதியில் பேசுவது கூட தடை செய்யப்பட்டது. குர்தியருக்கே தனித்துவமான பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டமுடியாது. குர்து மொழிக்கே உரிய பிரத்தியேக உச்சரிப்புகளைக் கொண்ட பெயர்களை யாரும் வைத்திருக்க முடியாது. அவை துருக்கிமயப்படுத்த வேண்டும். இந்த அடக்குமுறையின் விளைவாக, தற்போது மறுமலர்ச்சி கண்டுள்ள குர்து மொழி, துருக்கி உச்சரிப்புக்கேற்ப எழுதப்படுகின்றது.

தமிழகத்திலோ, அல்லது இலங்கையிலோ நடந்ததைப் போல, குர்து மொழி உரிமைப் போராட்டம் அப்போது வெடிக்காததற்கு காரணங்கள் உள்ளன. குர்தியர்களில் ஒரு நடுத்தர வர்க்கம் உருவாக நீண்டகாலம் எடுத்தது. பெரும்பாலான குர்து இன மக்கள் உழைக்கும் வர்க்கமாக, ஊரில் உள்ள நிலப்பிரபுவிற்கு கட்டுப்பட்ட பண்ணையடிமைகளாக இருந்தனர். தற்போதும் அந்த நிலைமையில் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டுள்ளது. குர்து நிலப்பிரபுத்துவ சக்திகள், இன்றுவரை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்து வருகின்றன. நிலப்பிரபுக்கள் தமது வர்க்க குணாம்சம் காரணமாக, இஸ்லாமிய (பெரும்பான்மை குர்தியர்கள் இஸ்லாமியர்கள்) அடிப்படைவாத அரசியலுக்கு ஆதரவளிப்பவர்கள். துருக்கி அரசு இந்த முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது.

எழுபதுகளின் இறுதியில், துருக்கியின் தலைநகர் அங்காராவில், சில படித்த குர்து இளைஞர்கள் இரகசியமாக ஒன்றுகூடினார்கள். வசீகரத் தோற்றம் கொண்ட "அப்துல்லா ஒச்சலான்" என்ற இளைஞர் அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கினார். குர்து மக்களின் எல்லாவித ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில், ஆயுதப்போராட்டமே ஒரே தீர்வு என முடிவு செய்தனர். பனிப்போர் நிலவிய காலத்தில், மத்திய கிழக்கின் கம்யூனிஸ்ட் சக்திகளுடனான தந்திரோபாயக் கூட்டு, தமது தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என நம்பினர். தமது இரகசிய தலைமறைவு இயக்கத்திற்கு "குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி" (Partiya Karkerên Kurdistan) சுருக்கமாக "பி.கே.கே" என்ற பெயரிட்டனர். குர்த்தியரின் பிராந்திய தலைநகரான டியார்பாகிரில் 1978 ம் ஆண்டளவில், இயக்கம் ஸ்தாபிக்கப் பட்டது. மத்திய குழு ஒன்றைக் கூட்டி, மார்க்சிச லெனினிச சிந்தாந்தப்படி கட்சியைக் கட்டுவது என முடிவெடுத்தனர். பி.கே.கே. எடுத்த எடுப்பில் கம்யூனிசம் பேசியதற்கு, சமூக ஆதிக்க சக்திகளான நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராட வேண்டி இருந்தும் ஒரு காரணம்.

1984 ம் ஆண்டளவில், சர்வதேச சூழ்நிலையும் குர்து ஆயுதப்போராட்டத்திற்கு சாதகமாகவே அமைந்திருந்தது. பனிப்போர், சோவியத் யூனியன் எல்லாம் நிலைத்திருந்த காலம் அது. துருக்கியின் அயல்நாடான சிரியா, மத்திய கிழக்கில் சோவியத் யூனியனின் மனங்கவர்ந்த நண்பனாக இருந்த காலமது. இன்று "பயங்கரவாதிகள் பட்டியலில்" உள்ள அரைவாசி இயக்கங்களுடன், சிரிய அரசுக்கு அன்று தொடர்பு இருந்தது. தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரிப்பது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் தந்திரோபாயம், என்ற கொள்கையை பின்பற்றிய சோவியத் யூனியன், சிரியா ஊடாக இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் இடம்பெற்றது. ஒரு வல்லரசின் பக்க பலம் காரணமாக இஸ்ரேல் உட்பட எந்த ஒரு நாடும், சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அஞ்சியது.

அத்தகைய சர்வதேச பின்புலத்தை பி.கே.கே. கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது. சிரியாவின் ஒத்துழைப்புடன் துருக்கி எல்லையோரமாக போராளிகளின் பயிற்சி முகாம்களை நிறுவியது. ஒச்சலான் போன்ற தலைவர்கள், தலைநகர் டமாஸ்கஸ்ஸில் தங்கி, பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் மூலம் இராணுவ பயிற்சிகள், ஆயுதங்கள் என்பனவற்றை பெறக்கூடியதாகவிருந்தது. (பிற்காலத்தில், பி.கே.கே. புலம்பெயர்ந்த குர்து மக்களின் உதவியுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தனக்கென ஆயுதக் கடத்தலுக்கான வலைப்பின்னல் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டது.) சிரியாவை பின்தளமாக பயன்படுத்திய பி.கே.கே., தனது போராளிகளை துருக்கியினுள் அனுப்பி கெரில்லா நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது.

ஆரம்பத்தில் துருக்கிப்படைகள் கெரில்லாக்களின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் நிலைகுலைந்தது. மலைப்பிரதேசம், மறைந்து கொள்வதற்கேற்ற குகைகள், கரடுமுரடான தரையமைப்பு, போன்றன கெரில்லாப் போருக்கு அனுகூலமாக இருந்தது. ஒரு கட்டத்தில், முன்னேறிக் கொண்டிருந்த பி.கே.கே. கெரில்லாப் படையணிகள், சில மலைப்பிரதேச கிராமங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். கெரில்லாப் போராட்டம் உத்வேகத்துடன் முன்னெடுக்கப் படுகையில், குர்து மக்கள் துருக்கி அடக்குமுறையாளருக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். அதன் பிறகு சுதந்திர குர்திஸ்தான் மலரும் என்று கணக்குப் போட்டனர். ஆனால் அது ஒரு தப்புக்கணக்கு என்று விரைவில் தெரியவந்தது.

துருக்கி அரச படைகள், குர்து நிலப்பிரபுக்களின் உதவியுடன் ஊர்காவல் படைகளை அமைத்தனர். ஊர்காவல் படையில் குர்து சமூகத்தில் இருந்து பலவந்தமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களும் இருந்தனர். பி.கே.கே. அரசபடைகள் மட்டுமல்லாது, ஊர்காவல்படையும் தனது எதிரி எனப் பிரகடனப்படுத்தியதுடன், குறி வைத்து தாக்கியும் வந்தது. இதனால் கொல்லப்பட்ட ஊர்காவல்படைவீரரின் குடும்பத்தினரையும் பி.கே.கே. பகைத்துக்கொண்டது. குர்து இனத்தில் ஒரு பிரிவினரை போராளிகளுக்கு எதிராக திசை திருப்பி விடும் தந்திரத்தில் துருக்கிய அரசு ஓரளவு வெற்றி பெற்றது. மேலும் துருக்கியில் கட்டாய இராணுவ சேவை அமுலில் உள்ளது. தேசியக் கடமையான இராணுவப் பயிற்சிக்கு செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட குர்து இளைஞர்கள், பின்னர் போர் நடக்கும் இடங்களில் கொண்டு போய் விடப்பட்டனர். சில நேரம் சொந்த சகோதரர்களில் ஒருவர் துருக்கி இராணுவவீரனாகவும், மற்றொருவர் பி.கே.கே. போராளியாகவும், எதிரெதிரே நின்று சண்டையிடும் காட்சியை ஒரு கணம் கண் முன்னே கொண்டு வாருங்கள். அப்படிப்பட்ட அவலம் குர்து மக்களின் தவிர்க்கவியலாத தலைவிதி. இரக்கமற்ற போரில் அதிகமாக பலியானது, குர்து இனத்தவர்கள் தாம். "மலைகளுக்கு மட்டுமே தெரியும் எங்கள் கவலை" என்று குர்து மக்கள் மனங்குமுறுவது வெளியுலகிற்கு கேட்கப் போவதில்லை.

துருக்கி அரச படைகளின் பேரினவாத வெறி, குர்து மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு வழி திறந்து விட்டது. ஆயிரக்கணக்கான குர்து வாலிபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல்போனார்கள். காணாமல் போன மகனை தேடும் பெற்றோர் இராணுவ முகாம் அதிகாரியை தொடர்பு கொள்வார்கள். அப்போது அந்த அதிகாரி: "உங்கள் மகன் எம்மிடம் இல்லை. ஒரு வேளை உங்கள் மகன் பி.கே.கே. யுடன் சேர்ந்திருப்பான்." என்று கூசாமல் பொய் சொல்வார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட இளைஞன், சித்திரவதை செய்யப்பட்டு, எங்காவது ஒரு புதைகுழியில் கொன்று புதைக்கப்பட்டிருப்பான். குர்திஸ்தான் முழுவதும் இது போன்று ஏராளமான புதைகுழிகளுக்குள் ஆயிரக்கணக்கான காணாமல்போன இளைஞர்களின் சடலங்கள் கிடக்கின்றன. துருக்கி பேரினவாதத்தின் இரத்த சாட்சியங்களான அவற்றை தோண்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க, இதுவரை எந்தவொரு சர்வதேச சமூகமும் முன்வரவில்லை.

துருக்கியின் இடதுசாரி மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று டியார்பாகிர் நகரில் காணாமல் போனவர்களின் வேதனைகளைப் பகிர்ந்து ஆவணப்படுத்தும் மகாநாடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. அந்த மகாநாட்டிற்கு சென்ற சர்வதேச பிரதிநிதிகளில் நானும் ஒருவன். இஸ்தான்புல்லில் இருந்து நாம் சென்ற பேரூந்து வண்டி, குர்திஸ்தான் எல்லையை அடைந்தவுடன், நாம் ஒரு யுத்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்கிறோம் என புரிந்து கொண்டோம். வீதித்தடை காவலரணில் கடமையில் இருந்த துருக்கிய படையினர் வண்டியை சோதனையிட்டனர். பயணிகளின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு தான் மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர். டியார்பாகிர் நகரை அடையும் வரையில் இது போன்ற வீதித் தடை சோதனைகள் தொடர்ந்தன. நாம் செல்லும் வழியெங்கும் இராணுவ வீரர்களின் பிரசன்னம் இருந்தது. தாங்கிகள், கவச வாகனங்களைக் கொண்ட படையணிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. தப்பித்தவறி இராணுவ தொடரணியை படமெடுக்க வேண்டாம் என்று, எம்மோடு வண்டியில் இருந்த துருக்கி நண்பர்கள் எச்சரித்தனர்.

துருக்கியின் பிற பகுதிகளில் இருந்து, குர்திஸ்தான் முற்றிலும் மாறுபாடான தோற்றத்தைக் கொண்டிருந்தது. துருக்கியின் சன நெருக்கடி மிக்க சிறு நகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள் போன்றன சில மைல் தூர இடைவெளியில் காணப்பட்டன. குர்திஸ்தானில் அதற்குப் பதிலாக எங்கு பார்த்தாலும் மலைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. மனிதர்களே வசிக்காத சூனியப் பிரதேசத்திற்குள் வந்து விட்டதைப் போல தோன்றியது. பஸ் வண்டியில் இருந்த அனைவர் முகத்திலும் இனந்தெரியாத அச்சம் காணப்பட்டது. அவர்களது அச்சம் நியாயமானதே. பயங்கரவாத அழிப்பு என்ற போர்வையில், துருக்கிய படைகள் பல குர்து கிராமங்களை நிர்மூலமாக்கி விட்டிருந்தன. வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கிராமங்கள் பல சுடுகாடாக காணப்படுகின்றன. அங்கே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு என்ன நடந்தது? ஆரம்ப கட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டு விட்டனர். மிகுதிப்பேர் பலவந்தமாக தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இடம்பெயர்ந்த குர்து மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் துருக்கியின் மேற்குக் கரையில் குடியேற்றப்பட்டனர்.

துருக்கி பேரினவாத அரசு, குர்து மக்களின் கட்டாய இடப்பெயர்வை இரண்டு நோக்கங்களுக்காக நெறிப்படுத்தியது. ஒன்று, மக்கள் என்ற தண்ணீரை பிரித்தெடுத்து, கெரில்லாக்கள் என்ற மீன்களை இறக்க விடுதல். இரண்டு, குர்து மக்களின் தாயகக் கோட்பாட்டை நடைமுறைச் சாத்தியமற்றதாக்குதல். முதலாவது நோக்கம் பெருமளவு நிறைவேறவில்லை. முப்பது வருடங்களாக இடையூறின்றி தொடரும் கெரில்லாப்போர் அதற்கு சாட்சி. இருப்பினும் குர்து மக்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பதில் துருக்கி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. மேற்குக்கரை நகரங்களில் பகைமை கொண்ட துருக்கிய சமூகத்தின் மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட குர்து மக்கள், ஆயிரம் மைல் கடந்து தாயக பூமியை அடைவதென்பது இயலாத காரியம். அடிமட்ட உழைப்பாளர் வர்க்கமான இவர்களிடம், ஊருக்கு ஒரு முறை சென்று வருவதற்கு கூட பணம் இருக்காது. இந்தப் பிரிவினரில் இரண்டாவது தலைமுறை, குர்திஸ்தான் எப்படி இருக்கும் என்பது கூட தெரியாமல் வளர்ந்து வருகின்றது.

குர்திஸ்தான் எல்லைப் பகுதிகளில் துருக்கி மக்களை குடியேற்றுவதும் நடைபெற்று வருகின்றது. பி.கே.கே. தனது தாயகமான குர்திஸ்தான் என்று உரிமை கோரும் பகுதிகள் சில இன்று துருக்கிமயப்பட்டு விட்டன. "குர்திஸ்தான் தலைநகரம்" என அழைக்கப்படும் டியார்பாகிர் நகரவாசிகளில் அரைவாசிப்பேர் துருக்கியர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் துருக்கி இராணுவத்தில் பணி புரிபவர்களும், அவர்களது குடும்பத்தினருமாகும். மற்றவர்கள் வியாபாரிகள். குர்திஸ்தான் பகுதியில் டியார்பாகிர் மட்டுமே ஒரு நகரத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. அதற்கு அப்பால் அபிவிருத்தியடைந்த பகுதி ஒன்றை காண்பது அரிது. துருக்கி பேரினவாத அரசு, குர்து சிறுபான்மையினர் பிரதேசத்தை வேண்டுமென்றே புறக்கணித்து வந்துள்ளது. தற்போது, ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரத்தால் அபிவிருத்திப் பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சிக்கின்றது.

துருக்கி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் அமைந்திருப்பதால், வட அட்லான்டிக் இராணுவ கூட்டமைப்பில் (நேட்டோ) அங்கத்துவம் பெற்றுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்காவும், ஜெர்மனியும் துருக்கிக்கு இராணுவ உதவி வழங்கி வருகின்றன. துருக்கி இராணுவ அதிகாரிகள் பலர் ஜெர்மனியில் பயிற்சி பெற்றவர்கள். டியார்பாகிர் நகரில் நான் கலந்து கொண்ட மகாநாட்டு மண்டபத்தில், சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இனங்காணப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்கும், மகாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் வழக்கறிஞர் ஒருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரளமாக ஜெர்மன் மொழியிலேயே பேசிய அந்த பொலிஸ் அதிகாரி, "தான் ஜெர்மனியில் ஒரு வருட பயிற்சி பெற்றதாகவும், தனக்கு சட்டம் பற்றி பாடம் எடுக்க வேண்டாமென்றும், ஜெர்மன் பொலிஸ் கூட இப்படித்தான் நடந்து கொள்வார்கள்" என்றும் பதிலளித்தார். மனித உரிமைகள் பற்றி உபதேசம் செய்த ஜெர்மன் வழக்கறிஞரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று வைத்திருந்து தான் விட்டார்கள். மீண்டும் துருக்கிக்கு திரும்பி வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து ஜெர்மன் அரசு ஆட்சேபிக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். ஜெர்மன் அரசு, தனது பிரஜை என்றாலும் "பயங்கரவாத அனுதாபிகள்" விஷயத்தில் அக்கறைப்படுவதில்லை.

துருக்கியில் ஒரு பாராளுமன்றமும், அதில் ஜனநாயகத் தேர்தல்கல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். தடைசெய்யப்பட்ட பி.கே.கே. யின் ஆதரவைப் பெற்ற, அல்லது அவர்களாலே தோற்றுவிக்கப்பட்ட, குர்து தேசியவாத அரசியல் கட்சி ஒன்று உள்ளது. பெரும்பான்மை குர்து மக்களின் வாக்குகளைப் பெற்று, குர்திஸ்தான் பிராந்தியக் கட்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது. கவனிக்கவும், துருக்கியில் எந்தவொரு கட்சியும் குறிப்பிட்ட இனத்தின் பெயரைக் கொண்டிருக்க முடியாது. அதனால் "ஜனநாயகக்கட்சி" என்று தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குர்து மொழியில் சத்தியப்பிரமாணம் எடுத்ததற்காக சிறையிலடைக்கப்பட்டார். துருக்கி அரசு பி.கே.கே. மீதான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நேரங்களில், அந்த அரசியல் கட்சியும் நீதிமன்றத்தால் (பிரிவினைவாத குற்றச் சாட்டில்) தடை செய்யப்படும். பின்னர் அந்தக் கட்சியினர் வேறொரு புதிய பெயரில் நிறுவனமயப்படுவார்கள். எந்தப் பெயரில் தோன்றினாலும், அந்தக் கட்சி பி.கே.கே. ஆதரவாளர்களினுடையது என்று துருக்கி அரசுக்கு நன்றாகவே தெரியும். இதனால் சில சமயம் குர்து கட்சி தலைவர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. குர்து தேசியவாதக் கட்சியில் மட்டுமல்லாது, வேறு பல இடதுசாரிக் கட்சிகளிலும் குர்து இனத்தவர் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. குர்திய மக்கள் அனைவரும் குர்து தேசியவாதிகள் இல்லை.

துருக்கியில் போரை நடத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது. அங்கே இராணுவம் மாபெரும் பாசிச நிறுவனமாக வளர்ந்துள்ளது. அட்டதுர்க் ஸ்தாபித்த துருக்கி தேசியத்தை பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இராணுவம், மாற்று அரசியல் சக்திகள் அதிகாரம் செலுத்த நினைத்தால், சதிப்புரட்சிக்கும் தயங்காது. இதனால் துருக்கியின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், அங்கே இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கும் இடமில்லை. அத்தகைய நிலையில், குர்திஸ்தான் போர்கள் யாவும் பாராளுமன்ற ஒப்புதல் இன்றி இராணுவ தலைமைப் பீடமே முன்னெடுத்து வருகின்றது. அந் நாட்டில் பேரினவாதிகளின் செல்வாக்கின் கீழ் உள்ள வலதுசாரி வெகுஜன ஊடகங்களும் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகின்றன.

துருக்கி/குர்து பிரச்சினை தற்போது புலம்பெயர் நாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஜெர்மனி, நெதர்லாந்து,சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான துருக்கியரும், கணிசமான அளவு குர்த்தியரும் வசிக்கின்றனர். துருக்கியர்கள் அனேகமாக ஒப்பந்தக் கூலிகளாக வந்து குடியேறியவர்கள். அதற்குமாறாக குர்தியர்கள் போர் தொடங்கிய பின் பெருமளவில் அகதிகளாக வந்தவர்கள். துருக்கிய சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் பேரினவாத ஆதரவாளர்கள். அதற்கு மாறாக குர்திய அகதிகள் மத்தியில் பி.கே.கேயின் செல்வாக்கு அதிகம். புலம்பெயர்ந்த நாடுகளில் பி.கே.கே. பிரமுகர்கள், கட்டாய நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக ஆங்காங்கே குற்றச் சாட்டுகள் எழுகின்றன. புகலிடத்தில் முரண்பட்ட இரண்டு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதில்லை. சில சமூக நிகழ்வுகளில் கைகலப்பு ஏற்படுவதுண்டு.

ஒரு முறை எமது தொழிற்கல்வி நிலையத்தில் புதிதாக சேர்ந்த ஒரு மாணவன் தன்னை துருக்கி- குர்து இனத்தை சேர்ந்தவராக அறிமுகப்படுத்தினார். உடனே அங்கிருந்த துருக்கி மாணவனுக்கு கோபம் வந்து விட்டது. "துருக்கியில் குர்து இனம் என்று ஒன்று இல்லை. மலை வாழ் துருக்கியர் மட்டுமே உள்ளனர்" என்று சத்தம் போட்டார். அந்த மாணவர் மட்டுமல்ல, பெரும்பாலான துருக்கியின மக்கள் அரச பரப்புரைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். முற்றிலும் மாறுபட்ட குர்து மொழி பேசும் மக்களை, "மலை வாழ் துருக்கியர்" என்ற அரசு சொல்லிக் கொடுத்த பாலபாடம் துருக்கியர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது. அதை விட, துருக்கி மக்கள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள், என்ற சுய பச்சாதாப கலாச்சாரமும் வேரூன்றியுள்ளது. குர்து மக்களின் துயரங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத அளவிற்கு, இனவாதம் மேலோங்கியுள்ளது. பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட போது, "இரத்த வெறி பிடித்த கொலைகாரனை தூக்கிலிடுமாறு" ஆயிரக்கணக்கான துருக்கி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போரில் கொல்லப்பட்ட இராணுவவீரர்களின் படங்களை ஏந்திய தாய்மார் கண்ணீர் வடிக்கும் காட்சியை, தொலைக்காட்சிகள் மனதை உருக்கும் வண்ணம் ஒளிபரப்பின.

பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், எஞ்சிய போராளிகள் வட ஈராக்கில் தளமமைத்துக் கொண்டனர். ஈராக் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சுயாட்சிப் பிரதேசமான, குர்த்தியரின் வட ஈராக் பகுதி, பி.கே.கே. பாதுகாப்பாக பதுங்கியிருக்க ஏதுவான பின் தளமாகும். நீண்ட கால போர் நிறுத்த இடைவேளையின் பின்னர், பி.கே.கே. போராளிகளின் திடீர் தாக்குதலால், இருபதுக்கும் குறையாத இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துருக்கி மக்கள் மத்தியில் அந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் தேசிய வெறியை தூண்டிவிட்டது. கொல்லப்பட்டவர்கள் கடமையிலீடுபட்ட இராணுவத்தினரே ஆனாலும், அப்பாவி மக்கள் பலியானது போல ஆவேசப்பட்டார்கள். "துருக்கி இராணுவம் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்" என்று கோஷமிட்டவாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். துருக்கியின் நகரங்களில் மட்டுமல்ல, மேலைத்தேய நகரங்களிலும் "துருக்கி அரசை தற்காப்பு இராணுவ நடவடிக்கை" எடுக்கக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இவற்றை துருக்கி அரசு ஒழுங்கு செய்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

ஈராக் இறைமையுள்ள இன்னொரு நாடு என்ற விஷயம் எல்லாம் துருக்கி இராணுவத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. பி.கே.கே. மறைவிடங்கள் மீது விமானப்படை குண்டு மழை பொழிய, தரைப்படை முன்னேறியது. ஈராக் நிலப்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, பி.கே.கே. முகாம்களை அழித்தொழிக்க எண்ணியது. தனது நாட்டின் இறைமை குறித்து கவலைப்பட்ட ஈராக் அரசு, அமெரிக்க நண்பனிடம் முறையிட்டது. அமெரிக்க அரசு துருக்கி மீது எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்காது, இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியது. ஏனெனில் அமெரிக்க அரசு ஏற்கனவே பி.கே.கே. யை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை இதுவும் பயங்கரவாதத்திற்கு எதிரான பதிலிப் போர் தான்.