செவ்வாய், 4 ஜூலை, 2017

தனி நாடு பிறந்த கதை

பொதுவாக ஒரு நாடு எப்படி பிறக்கிறது என்பதை யாராலும் தெளிவாகக் கூற முடியாது. ஒரு நதியின் கதை எவ்வளவு  பழமையானதோ அதே போன்ற கணிக்க முடியாத கால ஓட்டத்தைக் கடந்து ஒரு நாடு பிறக்கிறது. இந்தியா போன்ற மிகப் பழமையான நாடுகளுக்கு இது மிகச்சரியாகப் பொருந்தும். அதே வேளையில் நம் கண் முன்பே சில நாடுகள் புதிதாக பிறந்துள்ளதையும் நாம் கண்டிருக்கிறோம். 1947ல் பிறந்த பாகிஸ்தான் ஒரு சிறந்த உதாரணம்.

பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் சகிப்புத்தன்மை மேலோக்கி இருக்க வேண்டும். பெரும்பான்மை அடக்குமுறை சிறுபான்மைமீது கட்டவிழ்த்து விடப்படும் போது அதே சிறுபான்மை இனவாதமும் மறுபிரதியீடு செய்ததை வரலாற்றின் பல பக்கங்களில் கற்றிருக்கின்றோம். ஈழப்பிரச்சனையின் போது சிங்கள, தமிழர் தரப்பிடம் இருந்து தனித்துவமாக எவ்வாறு முஸ்லீம்கள் தனி அலகு கேட்டார்களோ அது போன்று. ஏனெனில் கசப்பான வரலாற்று அனுபவங்களை எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கவும், தத்தமது உரிமைகளை பாதுகாத்து கொள்ளவும் அனைத்து சமூகங்களுக்கும் உரிமை உண்டு. அதைத்தான் ஜின்னா செய்தார். ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் பெற்றாலும் இந்து அடிப்படைவாதத்தில் இருந்து காக்கவும் தனித்த தேசத்தில் நாட்டம் கொண்டார். அதற்கு காலமும் கலவரங்களும் கை கொடுத்தது. இப்போது இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிகழ்தகவுகளை போல. வரும் தேர்தல்களில் பொங்கப்போகின்ற பாற்சோறுகளை போல...!!!!

1946 அக்டோபர் 30 ஆம் தேதிக்கும் நவம்பர் 7 ஆம் தேதிக்கும் இடையே மிகப்பெரிய இனப்படுகொலைகள் பீகாரில் நடந்தன. இம்முறை மிகுதியாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  5,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்று ஓர்  அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது. கொல்லப்பட்டவர்களில் முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் அடங்குவார்கள். ஜின்னா பதறினார். பிரிவினைக்கு முழு அழுத்தம் கொடுத்தார். முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்கத்தா, நவகாளி படுகொலைகளுக்குப் பழி தீர்ப்பதற்காக பீகார் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என்ற கருத்து பரவியதுதான்.

இந்தியாவைப் பிரித்து தனி பாகிஸ்தான் கேட்டவர்கள் முஸ்லிம் லீகைச் சேர்ந்தவர்கள். பிரிவினை வேண்டாம் என்றவை  மற்ற பெரிய கட்சிகளான காங்கிரஸும் இந்து மகாசபையும். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணப் பொதுத் தேர்தல் அறிக்கையில் இரண்டு கட்சிகளும் தங்கள் தேசப்பிரிவினை எதிர்ப்பைத் தெளிவாகக் குறிப்பிட்டன. முஸ்லிம் லீகைத் தவிர மற்ற முஸ்லிம் அமைப்புகளும் வெளிப்படையாகப் பிரிவினையை எதிர்த்தன. முஸ்லிம் லீக் தனி பாகிஸ்தான் என்ற லட்சியத்தை அடைய  பஞ்சாப், வங்காளம் ஆகிய மாகாணங்களைப் பிரிப்பதையே நம்பி இருந்தது. ஏனென்றால் மேற்கு பஞ்சாபிலும், கிழக்கு வங்காளத்திலும் முஸ்லிம்கள் மிகுதியாக உள்ளார்கள். பீகாரில் மூஸ்லிம்கள் சுமார் 10 சதவீதம் தான். அங்கே பெரும்பான்மையினராக இந்துக்கள் இருக்கிறார்கள். அதனால் சிறுபான்மை மக்களாக இருக்கும் முஸ்லிம்களை அவர்கள் மிரட்டிக் கொல்ல ஆரம்பித்தார்கள் என்று நம்புவது எளிது.

முஸ்லிம்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற கொள்கையை ஜின்னாவுக்கு முன்னால் முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர்  சர் சையத் அகமது கான்ங (1817—1898). எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, தனி நாடு வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம் மக்கள் சிலரிடம் தோன்றி இருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்தர இந்தியா மலர்ந்தது. அதற்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முன்னமே செதுக்கப்பட்ட பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டது. இந்தக் கூற்று  தேசப்பிரிவினை பற்றி  ஜின்னா போன்றவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு மிக மிக நெருக்கமாக இருக்கும். இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களில் இருந்து  பண்பாடு, மதம் ஆகியவற்றால் வேறுபட்ட முஸ்லிம் இன மக்களை மட்டுமே கொண்ட ஒரு தனி நாடாக பாகிஸ்தான் ஜின்னாவின் கொள்கைக்கு ஏற்ப பிரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஒரு தனி சிலையாகச் செதுக்கி எடுக்கப்பட்டது என்பது அவர் முதலில் கொண்டிருந்த  நம்பிக்கை. பாகிஸ்தான் என்பது செதுக்கப்பட்ட சிலை அல்ல, இந்தியாவிடம் இருந்து உடைக்கப்பட்ட ஒரு பகுதி என்று சொல்பவர்களும் உள்ளனர்.

Muhammad Ali Jinnah
தனி பாகிஸ்தானைப் பெற்று அதிகாரத்தில் அமர கனவு கண்ட சிலர் அதை எவ்வழியில் அடைந்தார்கள் என்பது எல்லோரும் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. அவர்கள் அப்போது  கையாண்ட முறைகள் அவர்களுடைய அரசியல் சித்தாந்தத்திலும், கொள்கையிலும் ஒன்றுகலந்தன. அவை இன்றும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றில்  தொடர்ந்து வெளிப்படுகின்றன.
கடந்த நூற்றாண்டின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இந்தியப்  பிரிவினை. அதன் காரணமாகப் பிறந்த  பாகிஸ்தான் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பலவேறு கருத்துகள் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் வாதப் பிரதிவாதங்கள் நிறைய இருக்கின்றன.






இந்திய விடுதலைச் சட்டம் 1947 பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு 1947 ஜூலை மாதம் பிரிட்டிஷ் அரசின் ஒப்புதல் கிடைத்தது. இந்தச் சட்டத்தின்படி ஒரே நாடாக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு டொமினியன்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு சுதந்தரம் பெற்றன. 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானும், ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவும் விடுதலை அடைந்தன. இந்திய விடுதலைச் சட்டம் 1947ல் இந்தியப் பிரிவினை பற்றிய விஷயங்கள் அடங்கியுள்ளன. அதன் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வங்காளம், பஞ்சாப் ஆகிய மாகாணங்கள் பிரிக்கப்பட்டு இந்தியா, பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அளிக்கப்படுவதைக் குறிப்பிடுகிறது. பிரிவினை ஒப்பந்தப்படி அனைத்தும் பிரித்துக் கொடுக்கப்பட்டன. அவற்றில் இந்தியக் கருவூலம்; இந்திய அரசுப் பணி; இந்திய ராணுவத்தின் தரைப்படை,  கப்பல் படை, விமானப் படை மற்றும் எஞ்சி இருக்கும் அத்தனை நிர்வாக அமைப்புகளும் அடங்கும்.

புதிதாகப் பிறந்த பாகிஸ்தானின் அப்போதைய தலைநகரம் கராச்சி. பளிங்கு கற்களால் ஆன ஓர் அரண்மனையில், பாகிஸ்தான் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக கிட்டத்தட்ட ஓர் அரசனைப் போல் ஜின்னா இருந்தார். இந்தப் பாகிஸ்தான் அவ்வளவு எளிதாக அவருக்கும் அந்த மாபெறும் கனவை நனவாக்கத் துடித்த அவர் சகாக்களுக்கும் கிடைத்து விடவில்லை. பெரும் விலையை இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் கொடுக்கவேண்டியிருந்தது. பாகிஸ்தான் உருவான கதையின் சாரம் என்பது அந்தத் தேசத்துக்காகக் கொடுக்கப்பட்ட பெரும் விலைதான்.

பிரிவினைக்கு முன்பும் அதற்குப் பின்பும்  இந்தியாவில்  இந்துக்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் இருந்தவர்கள் முஸ்லிம் மக்கள்தாம். இந்தியாவின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்களுடைய  பங்களிப்பு  கணிசமானது. அதனால்தான் மத அடிப்படையிலான அந்தத் தேசப் பிரிவினையை மிகுதியான மக்களும் தலைவர்களில் பலரும் விரும்பவில்லை. பல நூற்றாண்டுகளாக இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக  வாழும் நாட்டை மத அடிப்படையில் பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர்கள் கருதினார்கள். இந்தியாவைக் கிட்டத்தட்ட  இரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர்கள் பிரிட்டிஷார். அதற்கு முன்னால் சுமார் முந்நூறு ஆண்டுகள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் முகலாயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தன. அன்றும் ஒன்றுபட்ட பெரும் இந்தியா இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் மதஅடிப்படையிலான பிரிவினைக் கருத்து மக்களிடையே – குறிப்பாக முஸ்லிம் மக்களிடையே தலைதூக்கவில்லை. இதன் காரணமாகவே 1947 இல் இயங்கிக் கொண்டிருந்த  பல முஸ்லிம் அரசியல் கட்சிகள்  பிரிவினையை எதிர்த்தன.

ஆனால் இந்திய முஸ்லிம் லீக் பிரிவினைக் கொள்கையில் உறுதியாக இருந்தது. 1940ல் நடைபெற்ற லாகூர் கூட்டத்தில் ஜின்னா முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியம் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தேசப் பிரிவினை அதிகாரப்பூர்வமாக நிழ்ந்த 1947 வரை ஏழு வருடங்களாக நாடு பெரும் இன்னல்களைச் சந்தித்தது. அதற்குப் பிறகும் இன்னல்கள் தொடர்ந்தன.

பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரலான முகமது அலி ஜின்னா அந்நாடு உருவாவதற்கு  முக்கியப் பங்காற்றியவர். பிரிட்டிஷ் இந்தியாவின் சிந்துவில் பெரும் செல்வக்குடும்பத்தில் பிறந்த அவர் இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். ஒரு தேசியவாதியாக முகமது அலி ஜின்னா உருவானார். இங்கிலாந்தில் இருந்தபோதே தாதாபாய் நௌரோஜி போன்ற தலைவர்களால் அவர் ஈர்க்கப்பட்டார். இந்தியாவுக்கு வந்து 1906ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார். அதே ஆண்டு தொடங்கப்பட்ட  முஸ்லிம் லீக்கில் சேர்வதற்குத் தயக்கம் காட்டினார். ஆனால் 1913ல் முஸ்லிம் லீக்கில் இணைந்த அவர் மூன்று ஆண்டுகளில் அதன் தலைவராகி விட்டார். அந்நியர்கள்  ஆண்டபோது வராத கவலை, முஸ்லிம் தலைவர்களை அப்போது வாட்டியது. இந்தியா சுதந்தரம் பெற்றால் இந்துக்கள் தங்கள்மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். 1906 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள இந்து உறுப்பினர்கள் மீது  முஸ்லிம் தலைவர்கள் கொண்ட சந்தேகத்தின் காரணமாக இந்திய முஸ்லிம் லீக்  தொடங்கப்பட்டது.

1930 ஆம் ஆண்டு நடந்த முஸ்லிம் லீக் கூட்டத்தில் எழுத்தாளர் அலாமா இக்பால்   தலைமை உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். “இந்துக்கள் மிகுதியாக இருக்கும் இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம்களுக்குத் தனி நாடு அவசியமாகிறது.பிரிவினை வெகு சீக்கிரத்தில் நடக்கும் என்பதே என் கணிப்பு.”

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய மக்கள் இடப்பெயர்ச்சிக்கு வழிவகுத்தது இந்திய பாகிஸ்தான் பிரிவினை. அது எல்லைக் கோட்டின் இருபுறமும் சுமார் ஐந்து லட்சம் மக்கள் உயிர் இழக்கக் காரணமாக இருந்தது.

1905 ஆம் ஆண்டு இந்தியாவின் வைஸ்ராய் கர்சன் பிரபு வங்காளத்தை கிழக்கு, மேற்கு பகுதிகளாகப் பிரித்தார். அதன்மூலம் இந்து முஸ்லிம் பகையை வளர்த்து, இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று அவர் எண்ணினார். எதிர்ப்புகள் வலுக்கவே 1911ல் மீண்டும் வங்காளத்தின் பகுதிகள் இணைக்கப்பட்டன. அது ஒரு முக்கியமான நிகழ்வுக்குக் காரணமானது. அதுதான் இந்திய முஸ்லிம் லீக்கின் தொடக்கம். மேலும் அது இந்தியாவை மத ரீதியில் பிரிப்பதற்கு ஒத்திகை பார்த்தது போலாகிவிட்டது.

பரந்து விரிந்து பலவிதமான  பழக்க வழக்கங்களையும், மொழிகளையும் கொண்ட மக்கள் வாழும்  நாடு இந்தியா. இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒன்றாக  இருந்தது என்பது  மிகவும் வியப்பான ஒரு விஷயம்தான்.  ஏனென்றால் அப்போது இந்தியாவில் பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியின் கீழ் செயல்பட்ட மாகாணங்கள் தவிர, நேரடி கட்டுப்பாட்டில் இல்லாத ஐநூறுக்கும் மேலான  சமஸ்தானங்கள் இருந்தன.
முதலில் இந்தியாவை ஆண்டது கிழக்கிந்திய கம்பெனிதான். ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயர் பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பிரபலம் அடையத் தொடங்கியது. ஐரோப்பியர்கள் ஆசியாவில் இருக்கும் பல நாடுகளையும், அவற்றைத் தாண்டி பசிபிக் கடலில் இருக்கும் பெரும் தீவுக் கூட்டங்களையும் ஈஸ்ட் இண்டீஸ் என்ற பெயரால் அழைத்தார்கள். அதன் படி ஈஸ்ட் இண்டீஸ் என்பது இந்திய துணைக்கண்டம்; தென்கிழக்கு ஆசிய நாடுகள்; பசிபிச் கடலில் இருக்கும் ஆஸ்திரேலியாவோடு இன்னும் பல தீவுக் கூட்டங்கள்; மேலும் சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளையும் குறிக்கும் ஒரு சொல்.

1600 ஆம் ஆண்டு  லண்டனில் தொடங்கப்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி தான் ஐரோப்பாவில் இருந்தவற்றில் மிகவும் பழமையானது. இந்த கிழக்கிந்திய கம்பெனியின் பங்குதாரர்களாக பெரும் வியாபாரிகளும், பிரபுக்களும் இருந்தார்கள். எலிசபெத் அரசி அதற்கு  ராஜ உரிமை அளித்தார். இருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு  அதில் பங்குகள் எதுவும் இல்லை. அரசாங்கம் மறைமுகமாக அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.1707 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி பிரிட்டிஷ் ஜாயின்ட் ஸ்டாக் கம்பெனி ஆனது. 1757 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் உறுதியானது. 1857 இல் நடந்த சிப்பாய் கலகம் வரை கிழகிந்திய கம்பனி ஆட்சி தொடர்ந்தது. 1858 இல் இயற்றப்பட்ட இந்திய அரசாங்க சட்டத்தின் படி, இந்தியா பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி ஆளுமையின் கீழ் வந்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 60 சதவிகிதம் பிரிட்டிஷாரின் நேரடி ஆளுமையில் இருந்தது. எஞ்சிய 40 சதவிகிதம் 565 பல்வேறு சமஸ்தானங்களின் கீழ் இருந்தது. இந்த சமஸ்தானங்களின் அரசர்கள், அரசர்களாக இருக்க அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. சுதந்தரத்துக்குப் பிறகு இவற்றுள் அதிக விவாதத்திற்குள்ளான சமஸ்தானங்கள் காஷ்மீர், ஹைதராபாத், தற்போது குஜராத்தில் இருக்கும் ஜுனாகத் ஆகியவை தாம். முஸ்லிம்கள் மிகுதியாக உள்ள காஷ்மீரை ஓர் இந்து அரசர் ஆள்கிறார். இந்துக்கள் மிகுதியாக உள்ள ஹைதராபாத்தையும், ஜுனாகத்தையும்  முஸ்லிம் அரசர்கள் ஆள்கிறார்கள். இவை விசித்திரமான முரண்பாடுகள். அதே வேளையில் இவை இந்தியாவில் இந்துக்களும், முஸ்லிம் மக்களும் எவ்வாறு கலந்து, கலாசாரத்தால் இணைந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு சாட்சிகளாகவும் உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அனைத்து சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இருப்பதற்கு  ஒப்பந்தம் செய்து கொண்டன. மொத்த சமஸ்தானங்களில்  21 சமஸ்தானங்கள் மட்டுமே  தங்களுக்கென மாநில அரசாங்கம் வைத்திருந்தன. அவற்றிலும் ஹைதராபாத், மைசூர், பரோடா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய நான்கு மட்டுமே பெரியவை. மற்ற எல்லா சமஸ்தானங்களும் சிறியவை.அவற்றின் அரசர்கள்  இந்திய வைஸ்ராயின் ஒப்பந்தக்காரர்கள் போல செயல்பட்டார்கள்.

இந்தியாவை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த  பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சமஸ்தானங்களை மேய்ப்பது ஒரு  முக்கியமான வேலையாக இருந்தது. சிறிய ஜமீன்கள் போன்றவை நீங்கலாக இருநூறுக்கும் மேலான சமஸ்தானங்கள் பாதுகாப்புப் படை வைத்திருந்தன. இந்த சமஸ்தானங்களில் இரண்டு மோதிக் கொள்ளும் போதும் ஒரு பெரிய சமஸ்தானம் சிறிய ஒன்றைப் பிடிக்க முயலும் போதும், பிரச்னை எழுந்தது. அந்தச் சமயங்களில் இந்தியாவில்  ஆட்சி செலுத்தும் பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரம் கேள்விக்குள்ளானது. இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் பிரிட்டன் நீடிப்பதற்குக் காரணமாக இருப்பவை ஆங்கிலேயர்களின் அறிவு, திறமை, உழைப்பு ஆகியவைதாம் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதே வேளையில் இங்கிலாந்து நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் அவர்கள் அல்ல என்பது மறுக்கமுடியாத உண்மை. பிரிட்டானியர் என்ற பெயருக்கும் அவர்கள் உரிமையானவர்கள் அல்ல. ஏனென்றால் இங்கிலாந்தின் பூர்வ குடிகள் செல்டிக் மக்கள். இப்படி தொடக்கம் முதலே பிறரை அடக்கியாளும் குணம் கொண்ட ஆங்கிலேயர்களிடம் இருந்தது. இந்தியாவிலும் இது பிரதிபலித்தது.

தேச பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்குக் கிடைத்த மேற்கு பஞ்சாப் மாகாணம் சுமார் 62 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது. பின்னாளில் சுமார் 17ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்ட பகவல்பூர் சமஸ்தானம் அதனோடு இணைக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தோடு இஸ்லாமாபாத் தலைநகர் பகுதி சேர்ந்திருந்தது. 1955 இல் அது பஞ்சாப் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. பிரிவினையின் போது 16 மாவட்டங்கள் மேற்கு பஞ்சாபுக்குக் கொடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பஞ்சாபின் எஞ்சிய பகுதி கிழக்கு பஞ்சாபாக இந்தியாவுக்குக் கிடைத்தது. அதற்கு 13 மாவட்டங்களும், ஐந்து சமஸ்தானங்களும் கிடைத்தன.

(தொடரும்)