செவ்வாய், 4 ஏப்ரல், 2017

இயேசுவின் இரண்டாம் வருகை (Second Advent), இரகசிய வருகை (Secret advent)

வரலாறுகளும் நடந்து கொண்டிருப்பவைகளும்...

[1] இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகை:
இது ஏற்கனவே நிறைவேறிவிட்டது. இயேசு முதன் முதலாக பூமியில் சுமார் 2009 ஆண்டுகளுக்கு முன்பு மனிதசாயலாக வந்து, சிலுவையில் நம்முடைய பாவங்களுக்காக மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து 40 நாள் பூமியில் இருந்து பின்பு பரலோகத்துக்கு சென்றுவிட்டார். இதுவே முதலாம் வருகை.

அவர் உயிர்த்தெழுந்தபோது "மத்தேயு 27:52 கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது" என்று வாசிக்கிறோம். எல்லாரும் அல்ல, அநேக (பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்) என்னும் வார்த்தைகளை கவனியுங்கள். இது ஒரு உயிர்த்தெழுதலாயிருக்க சாத்தியம்தான். இங்கே அநேகர் உயிர்த்து எழுந்து போயிருக்கலாம்!

[2] இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை:
சுருக்கமாகச் சொன்னால், நாம் தற்போது கிருபையின் காலத்தில் (Period of grace) வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது இயேசுவின் இரகசிய வருகையுடன் முடிவடையும். அதன் பின்பு உபத்திரவகாலம் இருக்கும். அதற்குப்பின்பு ஆயிரவருட இயேசுவின் ஆளுகை அல்லது அரசாட்சி இந்தப் பூமியில் நடைபெறும். இயேசு சொன்னார்: "பரலோகத்தில் அநேக வாசஸ்தலங்கள் (mansions) உண்டு. அப்படி இல்லாதிருந்தால் நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்"; மேலும்:யோவான் 14:3
நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை (a place) ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
எபிரெயர் 9:28 தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
இயேசுவின் இரண்டாம் வருகையை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
இவை எல்லாமே இரண்டாம் வருகைதான்.
. எப்படியெனில் இரகசிய வருகையில் செல்பவர்களுக்கு அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகை. அவருடைய வருகையில் போகாதவர்கள் இன்னும் அவரை சந்திக்கவில்லை.
. உபத்திரவகாலத்தில் மரிப்பவர்களுக்கும் அது இரண்டாம் வருகை ஏனெனில் அப்போதுதான் அவர்களுக்கு அது கிறிஸ்துவை இரண்டாம் வருகை.
. எஞ்சி இருப்பவர்களுக்கு வெளிப்படையான வருகைதான் இரண்டாம் வருகை.
[2-A] இரகசிய வருகை: (Secret Advent) 
திருடன் வருகிற விதமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரமாகஇருக்கும்.
திருடன் வந்து விட்டு போனபின்பு எப்படி எல்லாரும் திருட்டை அறிந்துகொள்கிறார்களோ அப்படியே இரசியவருகை நடந்து முடிந்தபின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை முடிந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுவார்கள். இந்த வருகையில் முதலாவதாக கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் உயிரடைவார்கள், இரண்டாவதாக உயிரோடிருக்கும் நாமும் அவருடனேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளபப்படுவோம். இந்த இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் (twinkling of an eye) நடைபெறும். எனவே இரகசிய வருகையையும், வெளிப்படையான வருகையையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். வெளிப்படையான வருகையை எல்லாரும் காண்பார்கள். இரகசிய வருகை ஒரு கண்ணிமைக்கும் நேரம் மட்டும் இருப்பதால் எல்லாருக்கும் தெரியாது.

I தெசலோனிக்கேயர் 4:14-18
இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.I தெசலோனிக்கேயர் 5:2
இரவிலே திருடன்வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.
1கொரிந்தியர் 15:50-54
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது [1] மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; [2] நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்.
[2-B] உபத்திரவ காலத்தின் வருகை (Tribulation Martyr's Harvest)
கர்த்தருடைய வருகைக்குப்பின் உபத்திரவகாலம் இருக்கும். இது சுமார் ஏழு வருடங்கள் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.[3.5 years+3.5 years]. உபத்திரவம் ஏழு வருடங்கள் என்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை.

[ வருடங்களும், ஸ்திரீ, ஆண்பிள்ளையின் அர்த்தமும்:
ஸ்திரீ பெற்ற ஆண்பிள்ளை சிங்காசனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.வெளி 12:6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. (1260 days/360 = 3.5 years)வெளி 11:3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். (1260 days/360 = 3.5 years)
(Jewish calendar: see http://www.webexhibits.org/calendars/calendar-jewish.html)
ஸ்திரீயானவள் - கைவிடப்பட்ட கூட்டத்தார் (பிள்ளை எடுத்துக்கொள்ளப்பட்டபின்) என்றும்,
ஆண்பிள்ளை - இரகசிய வருகையில் சென்ற கூட்டத்தார் என்றும் ஞானார்த்தமாக எடுத்துக்கொள்ளலாம். ஸ்திரீக்கும் ஆண்பிள்ளைக்கும் உள்ள எடையின் விகிதம் 1:20 என்று வைத்துக்கொண்டால்கூட உலகில் உள்ள சபையாரில் 20 ல் ஒரு பங்கு மட்டும் இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்று சிலர் சொல்கின்றனர். நிச்சயமாக இது இயேசுவும் மரியாளும் அல்ல, ஏனெனில் யோவான் பத்மு தீவில் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளை ஆவிக்குள்ளாகி காண்கிறார். இதற்கு முன்பே இயேசு மரித்து உயிர்த்தெழுந்தாயிற்று.]
இந்த உபத்திரவகாலத்தில் அந்திக்கிறிஸ்து பூமியில் வலுசர்ப்பமாகிய பிசாசின் சக்தியுடன் ஆளுவான். இந்த உபத்திரவகாலத்தில் கைவிடப்பட்ட கூட்டத்தாரை அந்திக்கிறிஸ்து உபத்திரவப்படுத்துவான் (வெளி 12:17). இங்கு அநேகர் இரத்தசாட்சியாக மரிப்பார்கள். இவர்களை அழைத்துக்கொண்டு போகும்படி இயேசு மீண்டும் தம்முடைய தூதர்களை அனுப்புவார். பின்பு யூதர்களுடன் ஒப்பந்தம் செய்து தேவாலயம் கட்ட உதவியாயிருப்பான். [இப்போது அங்கே தேவாலயம் இல்லை, ஏனெனில் தேவாலயம் கி.பி. 70ம் வருடம் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடிக்கு இயேசு சொன்னது போல் இடிக்கப்பட்டது. அங்கே தற்போது ஒரு மசூதி இருக்கின்றது. see paragraph 3 on http://en.wikipedia.org/wiki/Temple_in_Jerusalem] அதன்பின் தன்னை வணங்கவேண்டும் என்று சொல்லுவான் II தெசலோனிக்கேயர் 2:4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். அப்பொழுது யூதர்கள் அவனுடன் செய்த உடன்படிக்கையை முறித்துபோட்டுவிடுவார்கள். அவன் யூதர்களை துன்புறுத்துவான். இந்த யூதர்களில் 144000 பேர் முத்திரையாக பாதுகாக்கப்படுவார்கள் (வெளி 7).

வெளி 7:9-14. இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
வெளி 14: 14-20 அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான். அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

[2-C] வெளிப்படையான வருகை (Public Advent)
உபத்திரவ காலம் முடிந்த பின்பு, இயேசு ஒலிவமலையில் வந்து இறங்குவார். அவரை இதுவரை விசுவாசிக்காத யூதர்கள் தங்கள் ஒரே பேறான குமாரனுக்காக அழுது புலம்புவது போல் அழுவார்கள். அவரைக் குத்தினவர்களின் (யூதர்கள்) கண்கள் அவரைக்காணும். இயேசுவே மேசியா என்று அப்பொழுது அறிந்துகொள்ளுவார்கள். சகரியா 12:10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்திக்கிறிஸ்து மற்றும் அவன் சேனைகளை அவர் தமது வாயிலிருந்து புறப்படும் பட்டயத்தால் ஜெயிப்பார் (வெளி 19:13-21)

மத்தேயு 24:29,30. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.சகரியா 14:3-5
கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

[3] ஆயிரவருட ஆளுகை, நியாயத்தீர்ப்பு, நித்தியம்:
அந்திக்கிறிஸ்துவின் சேனையை வென்றபின்பு பழைய பாம்பாகிய பிசாசென்னும் வலுசர்ப்பம் பிடிக்கப்பட்டு பாதாளத்தில் ஆயிரவருடம் அடைக்கப்படுவான்.

வெளி 20:2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.

1000 வருட ஆளுகை இந்த பூமியில் இதன்பின்பு துவங்கும். அப்பொழுது ஏதேனில் இருந்த நிலமையை மீண்டும் பூமியில் இயேசு கொண்டுவருவார். ஏசாயா 11:6-9 6. அப்பொழுது ஓநாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப்படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும், என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

ஆயிரவருட ஆளுகைக்குப்பின்பு பிசாசானவன் பாதாளத்திலிருந்து திறந்துவிடப்படுவான். இவன் தன் சேனைகளோடு (கோகு, மாகோகு) கர்த்தருக்கு விரோதமாக யுத்தம்பண்ணவருவான். (அர்மகெதோன் யுத்தம். Battle of Armageddon வெளி 16:16 ). இதற்குப் பின்பு பிசாசும் அவன் சேனையும் ஆதிமுதலாக அவர்களுக்கென்று உண்டாக்கிவைக்கபட்டிருந்த அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள். இதன் பின்பு "வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு" இருக்கும். பூமி மரித்தோரை ஒப்புவிக்கும். தாங்கள் செய்த கிரியைக்கான பலனை அடையும்படி பரலோகத்துக்கும் நரகத்தும் ஜனங்கள் வேறுபிரிக்கப்படுவார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் தேவனோடிருப்பார்கள். அநேகர் நித்திய நித்தியமாய் நரகம் என்னும் அக்கினிக்கடலில் வாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

இன்று நீ இறந்துபோனால்(மரித்தால்) எங்கே போகுவாய்? என்ற கேள்விக்கு நீங்கள் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். பரலோகம் போகமுடியும் என்று உறுதியாய் உங்களால் சொல்லமுடியாவிட்டால், இயேசுவிடம் முழங்கால் படியிட்டு நீங்கள் செய்த பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்டு மனந்திரும்புங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். யோவான் 3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

இப்போது நீங்கள் இருக்கும் இடத்திலேயே முழங்கால்படியிட்டு கண்ணீரோடு அவரிடம், "இயேசுவே, நீர் மெய்யான குமாரனாகிய தேவன் என்றும், நீர் சிலுவையிலே என்னுடைய பாவங்களுக்காக இரத்தம் சிந்தி மரித்து உயிர்த்தெழுந்தீர் என்றும் விசுவாசிக்கிறேன். நான் பாவியாகிய மனுஷன், என் பாவங்களை மன்னியும். இந்த பாவம் என்ற பாரச்சுமையை என்னிலிருந்து நீக்கும். உம்முடைய இரத்தத்தினாலே என்னைக் கழுவும். என் இருதயத்தில் வாரும். நான் இனி உம்முடைய பிள்ளையாக பாவம் செய்யாமல் ஜீவிப்பேன். இனி இந்த உலகத்தார் போல ஜீவிக்கமாட்டேன். என்னை உம்முடைய மகனாக/மகளாக ஏற்றுக்கொள்ளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள பிதாவே. ஆமென்". என்று ஜெபியுங்கள், அவர் ஜெபத்தைக் கேட்கிற தேவன்.

மேலே கூறப்பட்டவை ஒரு சுருக்கமாகும்.

நிகழ்தகவாய் நடப்பவை இருப்பின் நிகழ்வுகள் நடந்தே தீரும்.