திங்கள், 16 அக்டோபர், 2017

இன்று... உலக உணவு தினம்


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்...! உணவு உற்பத்தியில் வேண்டும் மாற்றம்.
ஐ.நா.,வின், உணவு மற்றும் விவசாய அமைப்பு, அக்., 16ம் தேதியை, உலக உணவு நாள் என அறிவித்துள்ளது. 

இத்தினத்தின், நடப்பாண்டு மையக்கருத்து, 'காலநிலை மாறுகிறது; உணவு மற்றும் விவசாயத்திலும் கட்டாயம் மாற்றம் வர வேண்டும்' என்பது தான்.ஐ.நா., சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள சில விஷயங்கள்:காலநிலை மாற்றத்தால், உணவு பாதுகாப்பு என்பது, மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. 

மக்கள் தொகை, 2050ல், 960 கோடியாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய, காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப, விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

திட்டமிடல் அவசியம்

இயற்கை வளங்களை வைத்து, விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். உணவு பதார்த்தங்களை வீணடிக்காமல், சிக்கனத்தை கையாள வேண்டும். விவசாயப் பொருட்களை அறுவடை செய்வது, அவற்றை சேமிப்பது, 'பேக்கிங்' செய்வது, வாகனம் மூலம் கொண்டு செல்வது, உட்கட்டமைப்பு மற்றும் சந்தை வசதி போன்றவற்றில் சரியான திட்டமிடலை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டமைப்பின் அமைப்பாளர் கூறுகையில், ''சிறு, குறு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச தொழில் பாதுகாப்பு இருந்தாலே, அவர்கள், விவசாயத்தை விட்டு விலக மாட்டார்கள். பழமை மாறாமல் உள்ள விவசாயிகளை, அறிவியல் அறிவு நிறைந்த விவசாயிகளாக மாற்றவும், அதன் மூலம், விவசாயத்தில் இயந்திரமயமாக்கலை புகுத்தவும் முயற்சி எடுக்க வேண்டும்,'' என்றார்.

2030ல் பசி தீருமா?

வரும், 2030க்குள் பசியில்லா நிலையை (ஜீரோ ஹங்கர்) உருவாக்க, இந்தியா, பிரான்ஸ், சீனா, அமெரிக்கா, அர்ஜென்டினா உட்பட, 193 நாடுகள் உறுதி பூண்டுள்ளன. இந்நிலையை எட்ட, விவசாய முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். 

இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து, உலக நாடுகள் பங்கேற்கும் கருத்தரங்கு, மொராக்கோவில், நவ., 7 முதல் 18 வரை நடக்கிறது. இதில், காலநிலை மாற்றம், பசியில்லா நிலையை எய்துவது தொடர்பாக, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.