ஞாயிறு, 22 மே, 2016

அதிரவைக்கும் உலக மர்மங்கள்

உலகத்தில் நமக்கு தெரியாத விடயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அப்படிப்பட்ட விடயங்களை நமக்கு தெரியப்படுத்த/ அறிவியல் ஆய்வு  நடத்தி அதனை விளக்க விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்களா என்றால், இன்னும் இல்லை என்பது உண்மை! அப்படி என்றால் எல்லாம் வல்ல அறிவியலால் கூட புரிந்து கொள்ள முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.  உதாரணமாக பேய்/பிசாசு, ஆவி அப்படி நிறைய சொல்லிகொண்டே போகலாம். 

இப்போது நாம் பார்க்க போவது, அந்த மாதிரி மனிதனால்/அறிவியலால் கூட விளக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுகள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படியெனின் முதலில் மனிதனிலிருந்தே தொடங்குவோம்….

உடல்-மூளை தொடர்பு


நம் மூளை எப்படி நமது உடலைப் பாதிக்கிறது என்னும் விவரத்தை, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவத்துறை நமக்கு விளக்க தொடங்கி இருக்கிறார்கள். உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், சில நோய்களுக்கு மாத்திரை என்று பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுக்காமல், ஒரு இனிப்பு மாத்திரையை, நோயைக் குணப்படுத்தும் என்றும் சொல்லி, நோயாளிகளுக்கு கொடுத்தால் மட்டுமே கூட சில நோய்களை குணப்படுத்த முடியும் என்பது மருத்துவத்துறையில் ஒரு விளங்க முடியாக் கவிதை போலவே வெகு காலமாக இருந்து வருகின்றது! இதற்கு ஆங்கிலத்தில் “placebo effect”, என்று சொல்கின்றோர்கள். ஆக, இது ஒரு நம்பிக்கை மட்டுமே. இருந்தாலும் நோய் குணமடைகிறது. அது எப்படி? அது யாருக்கும் தெரியாது? அதாவது, உடல் தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்வது எப்படி என்று எந்த புதுயுக மருத்துவத்தாலும் இதுவரை வரையறுத்துச் சொல்ல முடியவில்லை.




அமானுஷ்ய சக்தி/ ESP 

உலகத்தில் மனிதனைப் பற்றி மனிதனாலேயே புரிந்துகொள்ள முடியாத விடயங்களிலேயே மிக முக்கியமானதுதான் இந்த அமானுஷ்ய சக்தி/இ.எஸ்.பி என்பது. அதாவது, ஐம்புலன்களையும் தாண்டி உலகத்தை உணரக்கூடிய ஒரு சக்தி (Extra-sensory perception ESP). ஆங்கிலத்தில் “Intuition” என்று சொல்லக்கூடிய, எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்கூட்டியே தெரிந்து சொல்வது எப்படி என்பது இதுவரை யாருக்கும் புரியாத, ஆனால் நம் எல்லோரையும் அதிர வைக்கும் ஒரு மர்மம்! இதில் செய்த ஆய்வுகள் இதுவரைக்கும் ஒரு தெளிவான பதிலை சொல்லவே இல்லை. குழப்பமான, புரியாத ஆய்வு முடிவுகளையே கொடுத்திருக்கிறது இ.எஸ்.பி பற்றிய ஆய்வுகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்னும் சிலர், இந்த மாதிரி அமானுஷ்ய சக்தி பற்றிய ஆய்வு எப்போதும் ஒரு தெளிவான முடிவைத் தராது, மனிதனிற்கு அப்பாற்பட்டது என்று சொல்கிறார்கள். அப்ப்டியானால், கடைசி வரைக்கும் இது ஒரு புரியாத புதிராகவேதான் இருக்குமா? தெரியவில்லை, காலம் தான் பதில் சொல்லவேண்டும்.


இறப்பை ஒத்த அனுபவங்கள்இறப்புக்குப் பின் வாழ்வு

நம்மில் சில பேர், சில சமயத்தில் சாகிற நிலைக்குப் போய் பிழைத்துக் கொள்வதுண்டு. இதைப்பற்றி சொல்லும்போது “செத்துப் பிழைத்தவன்” என்று சில பேர் சொல்வதுண்டு. அதாவது சாகும் தருவாய் வரைக்கும் சென்று பின் அதிர்ஷடவசமாக பிழைத்துக்கொள்வார்கள். ஆங்கிலத்தில் “Near-Death Experiences”, என்று சொல்கிறார்கள். இந்த மாதிரி அனுபவம் இருக்கிறவர்கள், அந்த அனுவபம் பற்றி விவரிக்கும்போது, “ஏதோ பாதாளத்துக்குள்ளே போன மாதிரி இருந்தது, உடனே பிரகாசமான வெளிச்சத்துக்குள் வந்து, சொந்த பந்தங்களோட இணைந்த மாதிரி ஒரு உணர்வு” என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம் இல்லையா? அதாவது, கல்லறையையும் தாண்டிய ஒரு உணர்வு/வாழ்வு? இதுமாதிரி கதைகள் பல நம்மிடையே இருந்தாலும் இதுவரையில் யாரும் தகுந்த ஆதாரங்களோடு அப்படியொரு நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை என்பதே உண்மை. இது ஒருபுறமிருக்க, இந்த மாதிரி ஆய்வுகள் செய்யும் விஞ்ஞானிகளோ, இவையெல்லாம் பாதிக்கப்பட்ட மூளையின் ஒரு வித உணர்வே தவிர இதில் உண்மை என்று எதுவும் இல்லை  என்று சொல்கிறார்கள்.


UFOs


UFOs என்றால் “அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்” (Unidentified Flying Objects). இத்தகைய பொருட்களை பலர் பார்த்திருக்கிறார்கள் என்பது உண்மை. அதாவது, சில சமயம் வானத்தில் திடீர் என்று எதாவது ஒன்று பறக்கிற மாதிரி தெரியும், அது விண்கற்களா/ஏவுகணைகளா என்று அடையாளம் சொல்ல முடியாது. அதேசமயம், இது வேற்றுகிரக மனிதனுடைய வேலையாகக் கூட இருக்கலாம் என்பது இன்னொரு விடயம். என்னதான் கூர்மையா கவனித்து ஆய்வு பண்ணினாலும் இதுவரைக்கும் இது என்ன என்றே தெரியாமல்தான் இருக்கிறோம்.


தேஜா வு (Deja vu)

“தேஜா வு”, என்றால் ப்ரெஞ்சு மொழியில் “மூன்கூட்டியே பார்த்தது” என்று அர்த்தமாம். அதாவது, இதுவரைக்கும் செல்லாத ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வைத்தான் இப்படி சொல்கிறார்கள்! உதாரணத்துக்கு, ஒரு பெண்  ஒரு வெளிநாட்டுக்கு முதல் முதலில் சென்று, ஒரு கட்டிடத்திற்குள்ளே அடியெடுத்து வைக்கிறார்கள். ஆனால் அவர்கள், அவர்களது வாழ்க்கையில் முதல்முதலில் பார்க்கின்றவையெல்லாமே முன்பே அவர்கள் பார்த்து, அனுபவித்தது மாதிரி ஒரு உணர்வு வருகின்றது. இதுதான் “தேஜா வு” என்கிறார்கள். சில விஞ்ஞானிகள் கூற்றுப்படி, தேஜா வு-வுக்கு காரணம் முன் ஜென்ம நினைவுகள் என்று சொன்னாலும், இதுவரைக்கும் இந்த உளவியல் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒரு மர்மமாகவேதான் இருக்கிறது.


பேய்/பிசாசு/ஆவி

நம் பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் ஊறிப்போன ஒரு விஷயம்தான் இந்த பேய், பிசாசு, ஆவி எல்லாம். கண்டிப்பாக நாம் எல்லாரும் அப்பா/அம்மா, பாட்டி/தாத்தா இப்படி நம்ம குடும்பத்தச் சேர்ந்த ஒருத்தர் சொல்லக் கேட்ட ஒரு பேய் கதை கண்டிப்பாக இருக்கும். மேலே சொன்னது மாதிரி உலகத்தின் எல்லா மூலைகளிலும் இருந்தும் இந்த மாதிரி கதைகள் நிறைய சொல்லப்பட்டாலும், சில புகைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு இருந்தாலும், இதுவரைக்கும் யாரும் “பேய்” என்ற ஒன்று  இருக்கு என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேயில்லை. அது ஒரு அழகிய மர்மமாகவேதான் இருக்கிறது.

மர்மமாக மறையும் மனிதர்கள் (Mysterious Disappearances)

பொதுவாக மனிதர்கள் தொலைந்து போவதும், கொஞ்ச காலம் கழித்து திரும்ப கிடைப்பதும்/விபத்தில் இறந்து போவதும் உலகத்தில் சாதாரணமாக நடக்கும் ஒன்று. ஆனால் இப்போது நாம் பார்க்க போகும் விடயம் அப்படியில்லை. நம்முடன் இருந்துகொண்டிருக்கும் ஒருத்தருக்கு திடீர் என்று மறைந்து போவது எப்படி சாத்தியம்? அது எப்படி என்று தெரியாது, ஆனால் இது மாதிரி நிறைய நடக்கிறது. தொலைந்து போனவர்கள் கிடைத்தால் பறவாயில்லை, ஆதாரம் எதுவுமே இல்லாமல், தொலைந்து போறவர்களை பற்றி விசாரணை பண்ணாலும் அவங்க கிடைப்பதில்லை எனும் போது, அது ஒரு மர்மம்தானே?


ஆறாவது அறிவு(Intuition)

நம் எல்லாருக்குமே “உள்ளுணர்வு” என்ற ஒன்று இருக்குதாம். அது ஆறாவது அறிவோ இல்ல வெறும் உள்ளுணர்வோ, எதாவது ஒரு தருணத்தில் நாம் எல்லோரும் அதை உணர்ந்திருப்போம்தானே? அந்த மாதிரி உள்ளுணர்வுகள் சில நேரங்களில் பொய்த்துப் போனாலும், பெரும்பாலான நேரங்களில் உண்மையாவதை உணர்ந்து/கேள்விப்பட்டிருப்போம். உதாரணத்துக்கு, ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று நாம் நினைத்து முடிக்கிறதுக்குள்ளே ஒரு விபத்து நடந்து விடும். இவை எல்லாவற்றிற்கும் காரணம், நமது ஆழ்மனதில் நம்மை சுற்றி நடக்கும் விடயங்கள் பதிந்துபோய், அதில் இருந்து நமக்கே தெரியாமல் நாம், இப்படி நடக்கப்போகிறது என்று உணர்கிறோம். அது நமக்கு “எப்படி”, தெரிகிறது, “ஏன்” உணர்கிறோம் என்கிற கேள்விக்கெல்லாம் இன்னும் பதில் தெரியவில்லை.



மனிதன் போன்ற மிருகம் (Bigfoot)


பல வருட காலமாக அமெரிக்காவில், பெரிய, அடர்த்தியான முடியுடன், மனிதன் மாதிரியே இருக்கிற “Bigfoot”, என்கிற மிருகத்தைப் பார்த்ததாக நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். அப்படி அந்த மாதிரி மிருகங்கள் இருந்து, இனப்பெருக்கம் செய்தால் குறைந்தது ஒன்றையாவது, இல்லை என்றால் அதனுடன் இதுவரைக்கும் ஒரு பிணத்தையாவது கண்டுபிடித்திருக்கவேண்டுமே? ஆனால் அவ்வாறு ஒன்றையும் இதுவரைக்கும் கண்டுபிடிக்கவில்லை, வேட்டையாடவும் இல்லை என்பதுதான் உண்மை. வெறும், கண்ணால் கண்ட சாட்சி, புரியாத போட்டோ மட்டும் வைத்துக்கொண்டு அந்த மாதிரி ஒரு மிருகம் இருக்கிறது என்று சொல்வதில் எந்த யதார்த்தமும் இல்லை என்று சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.


டாவோஸின் முனுமுனுக்கும் பாடல் (The Taos Hum) 

அமெரிக்காவில், நியூ மெக்சிகோவில் இருக்கும் ஒரு சின்ன நகரத்துக்கு பெயர்தான் டாவோஸ் (Taos). இந்த நகரத்தைச் சேர்ந்த சில மக்கள் பல வருடமாக, யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுக்கிற மாதிரியே தூரத்தில் ஒரு சத்தம் கேட்டு கொண்டு இருக்கிறதாகச் சொன்னார்கள். ஆனால் சில மக்கள்தான் இதைச் சொல்கிறார்களே தவிர, மற்றவர்கள் இது ஏதோ ஒலி அலைகளினால் ஏற்படும் ஒரு சத்தம்தானே தவிர, வித்தியாசமான முனுமுனுப்பு எல்லாம் இல்லை என்கிறார்கள். எது எப்படியோ, அது என்ன சத்தம் என்று இதுவரைக்கும் யாராலையும் உறுதியாச் சொல்லமுடியவில்லையாம்.