புதன், 26 பிப்ரவரி, 2014

மீள்குடியேற்றத்துக்காக…. - கவிதைத்தொகுப்பு

மீண்டும் கடிகாரம் பின்னோக்கி ஓட வேண்டும்.
விட்டுச்சென்ற என் காதலை மீளபிடிக்க வேண்டும்.
கற்பனையின் உச்சத்தை எட்டும் போது 
கவிதைகள் மட்டுமே வருகிறது. 
அக்கவிகளில் உன் முகஓவியம் மட்டும் தெரிகிறது.
கண்சிமிட்டும் நேரத்தில் தடுமாறிய தூரிகை கிறுக்கல், 
என்நெஞ்சினில் கரிய நிறபக்கங்களை மட்டுமே விட்டுச்சென்றன. 
வலிசுமக்கும் மனதின் விழி சிரிப்பை மட்டும் அறிவார் பலர்.
கலைந்து செல்லும் கார்மேகம் கூட
கண்ணீர் கொடுப்பதை புரிவார்கள் சிலர். 
உச்சத்தில் இருந்தாலும் உள்ளத்தில் வித்தியாசமான 
கவியை மட்டும் குடியேற்றினேன். மீள்குடியேற்றத்துக்காக....!


© அ. எல்றோய்

கடவுளே வலியாய் கொடுத்துவிட்டார்

சுற்றும் பூமியில்
சுழன்று அடிக்கும் பித்தன் நான்.
விழித்தெழுத்து பார்க்கையில்
வியப்போடு வெளி பார்க்கிறேன்

கலை தாவும் ஆவலை
கடவுளே வலியாய் கொடுத்துவிட்டார்
மலை தாவும் வலிமை பெற
மனதை உடைத்து பெயர்த்துவிட்டார்



உறவுகள் உண்டு இவைக்கு
உள்உணர்வுகள் இல்லை
ஓடித்திரியும் கனவுகளை எனக்குள்
ஒளித்து வைக்க துணிவுமில்லை

அறிமுகமில்லா யார்யாரோ
அன்பாய் அணைக்கிறார்கள் ஒருபுறம்
ஆழமான சொந்தங்கள்
ஆப்பாகின பலபுறம்

தேடலில் உள்ள ருசிதனை
தேக்கி வைக்க இயலவில்லை
காட்டினிலே உள்ள கனிவினைபோல்
கார்பட்டிலே காணமுடிவதில்லை

புழுதியில் கிளப்பிய பயணம்
புலம்பெயர்வாக கற்றுக்கொடுத்தது
எழுதிய விதியை மாற்ற
என் பெருமானுக்கும் பொறுப்புமில்லை

தவிப்போடு யான் வேண்ட
தலை தடவி எனை கூர்ந்து
அடிபடு மகனே என்று
அன்பாய் சொல்லிவிட்டார்



பகலையும் இரவையும்
பண்பாய் அரவணைத்தேன்
பாசத்தையும் நேசத்தையும்
பாயுக்குள் சுருட்டி வைத்தேன்


இடைவிடா தேடலில்
இசை எனக்கோர் இளைப்பாற்றி
புணர்ந்து விட்ட உறவுபோல்
புகைப்படம் எனது பொண்டாட்டி


மூச்சிறைக்க ஓடுகிறேன்
மூடுபனி விலகவில்லை
பேச்செடுக்க மறுக்கிறது
பேசும் பொருள் அருகிலில்லை



சிறகடிக்கும் சிந்தனைகளுக்கு
சிறகே வரமாக வேண்டுகிறேன்
முப்பொழுதும் கற்பனை தொடர
முடிவற்ற பயணத்தை தேடுகிறேன்…


© அ. எல்றோய்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

உலக எழுத்தறிவு தினம் / World Literacy Day - செப்டம்பர் 8

ஏற்றம் தரும் எழுத்தறிவு - உலகம் முழுவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
World Literacy Day
கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு. இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. எழுத்தறிவு பெற்றால் தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும். சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம். எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை; அவசியம்; கட்டாயம். உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.எழுத்தறிவு, அடிப்படைக் கல்வியின் இருதயமாக உள்ளது. எழுத்தறிவு பெறுவதன் மூலம் வறுமை, குழந்தை திருமணம், மக்கள் தொகை பெருக்கம், வேலைவாய்ப்பின்மை, பாலின வித்தியாசம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை தடுக்க முடியும். எழுத்தறிவு மூலம், அமைதி மற்றும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த முடியும். இது இன, மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எழுத்தறிவு பெற்ற பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கமாட்டர்.வயது வந்தோரில் 10 கோடி பேர் எழுத்தறிவு அற்றவர்களாக உள்ளனர். உலகில் எழுத்தறிவற்றவர்களில் மூன்றில் 2 பேர் பெண்கள். எழுத்தறிவற்றவர்களில் 98 சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஆப்ரிகா கண்டத்தில், எழுத்தறிவு சதவீதம் 60க்கும் குறைவு. வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளி செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இலங்கையில் கடுமையான யுத்தகாலங்களில் கூட எம்மக்கள் கல்வியை பொருளாதார மூலதனத்துக்காக பயன்னடுத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. நாகரீகம் என்ற பெயரில் தாய்மொழியை மறந்து வாழும் பல இனத்தவர்களில் நாங்கள் வேறுபட்டு இருக்கின்றோம். புலம்பெயர்ந்து போகும் போது கல்வியையும் தாய் தமிழையும் உலகம் பூராவும் கொண்டு சென்றவர்கள் இதற்கு எடுத்துக்காட்டு.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு ..கற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்....நண்பர்களே..அன்பு நண்பருக்கு ஒரு வேண்டுகோள்...இன்னும் பல பேர் ஆங்கிலத்தை அப்படியே டைப் செய்து வெளியிடுகிறீர்கள்..
ஆக உங்களுக்கு தமிழ் மொழியை முக நூலில் மற்றும் இணையத்தில் கையாள தமிழ் மொழியறிவு தேவை படுகிறது..
இதோ உங்களுக்கான சரியான தெரிவு...
நல்ல விஷயத்தை நாம் அனைவருக்கும் தெரியும் வண்ணம் ஏன்நம்ம தாய் மொழியான தமிழ் இல் பகிர்ந்து கொள்ள கூடாது.. நீங்கள் உங்களது post இல் இந்த http://www.google.co.in/transliterate/indic/tamil மற்றும் http://tamil.changathi.com/ ஆகிய url ஐ பயன்படுத்த கூடாது..நாங்கள் அனுபவிக்கும் இந்த தமிழின் இனிமையை ஏன் நீங்களும் முயற்சிக்க கூடாது....எனக்கு என்னமோ நீங்கள் முயற்சி செய்தால் இதை வெற்றி பெற செய்யலாம் என்று கருதுகிறேன்.....யோசியுங்கள் தோழர்களே...நம்ம தாய் மொழியை இனிதவறாது  பயன் படுத்துவோம் .
Type in Tamil - Google Transliteration....www.google.co.in
 நேரடியாக முகநூளில் நமது இனிய தமிழைப் பதிப்பதை விட, இது சற்று சிரமமான செயலே. முதலில் இகலப்பை Ekalappai
( www.tavultesoft.com/forums/category.php?ForumCategoryID=82) என்னும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாநேரங்களிலும் கூட தட்டச்சு செய்ய முடிந்தது. தவிர முகநூளில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய முடிந்தது. ஆனால் இலவசமாக இருந்த அந்த மென்பொருள் கட்டணம் செலுத்தி தான் பெறமுடியுமென்ற சூழ்நிலை. மொழி மாற்றத்திற்கு உட்படுத்துவதில் (http://tamil.changathi.com/ ) ஐ விட (http://translate.google.co.in/?hl=en&tab=wT#en/ta/internet) டே சிறந்தது. ஆங்கிலத்தில் தெரிந்த ஒரு சொல்லுக்கு தமிழில் ஏறக்குறைய சரியான தமிழ் சொல்லையும் அறிந்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. மீக்க மகிழ்ச்சி தமிழில் எழுத ஊக்கப்படுத்தியமைக்கு. முகநூளிலும் நேரடியாக பதிக்கக் கூடிய, எழுதக் கூடிய தமிழுக்கான இலவச மென்பொருள் இருந்தால் எமக்கு செய்தி அனுப்புங்கள். மிக்க உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள்.
Tamil - eKalappai Keyboard - Tavultesoft
www.tavultesoft.comகற்றது கையளவு கல்லாதது உலகளவு ...தினம் தினம் பல பாடம்களை நாம் படித்தும் கேட்டும் வருகிறோம் ..நமக்கு தெரிந்ததை அனைவருக்கும் கற்றுகொடுப்போம் ..வாருங்கள் நல்ல நாளைய சமுதாயத்தை உருவாக்குவோம்....


வியாழன், 5 செப்டம்பர், 2013

ஒருவனின் மரணம், இன்னொருவனுக்கு உணவு. ஆதலினால் போர் செய்வீர்....


மத்திய கிழக்கில் ஏதும் பிரச்சனை என்றால் அடுத்த நொடி மூக்கை நுழைக்கும் அமெரிக்கா, மேற்குலகம் மற்றும் ஜ.நா சபைக்கு...


கஷ்மீர், கொலம்பியா, பலஸ்தீனம், குர்திஸ்தான், மியன்மார், திபெத், ஈழம், நாகலாந்து, பாஸ்க், சீனாவின் ஷின்-ஷியாங், பல ஆபிரிக்க தேசங்கள் மற்றும் இன்னும் வெளிஉலக விளம்பரம் இல்லாமல் பல தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ள சுதந்திர தேசங்களின் பிரச்சனைகளில் ஏன் நீதியாக நடந்து கொள்வதில்லை! இங்கு சொல்லப்படுகின்ற அனைத்து தேசங்களிலும் எண்ணை வயல்கள் இல்லாத குறையா, இல்லை வளப்பற்றாக்குறையா? உலகம் பன்னாட்டு நிறுவனங்களின் குறுகிய நலன் சார்ந்த உலகமயமாவதை எடுத்துக் காட்டுகின்றது. மூலதனத்துக்குப் பைத்தியம் முற்றும் போது, ஏகாதிபத்திய யுத்தங்கள் அரங்கேறுகின்றன.  (தொடரும்...)


எங்கும் அமைதி பற்றியும், சமாதானம் பற்றியும் உரத்துப் பேசுகின்றனர். எங்கும், அனைத்துத் துறைகளிலும் படுமோசமான வன்முறையே நவீனமாகின்றது. இதை நியாயப்படுத்தி அல்லது மூடிமறைக்கும், முதுகு சொறியும் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், தமது சொந்த ஜனநாயகத்தின் பெயரால் மக்களின் முதுகில் ஏறி அமருகின்றனர். அமைதியான, சமாதானமான உலகம் பற்றி, வண்ணவண்ணமான கோட்பாடுகளை முன்வைக்கின்றனர். மனித இனத்தைச் சுரண்டிக் கொழுக்கும் மனிதவிரோத, சமூகவிரோத செயலையிட்டு, இந்த ஜனநாயக எழுத்தாளர்கள் யாரும் எப்போதும் கவலைப்படுவது கிடையாது. இந்தக் கொடுமையை எதிர்த்துப் போராடுவதையே, இவர்கள் கோட்பாட்டு ரீதியாக எப்போதும் மறுத்துரைக்க முனைகின்றனர். சமாதானமாகச் சுரண்டும் உலக அமைதிக்கும், சுதந்திரமாகச் சுரண்டும் உரிமைக்கும் எதிராகப் போராடுபவர்களையே, சமாதானத்தின் எதிரிகளாக இவர்கள் சித்தரிப்பவர்களாக உள்ளனர். மனித உழைப்பு மற்றொருவனால் சுரண்டப்படுவதே, உலகின் சமாதானத்துக்குச் சவாலாகின்றது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை அல்லது சிலர் சடங்குக்காக அதை ஒத்துக் கொண்டு அதற்கு எதிராகவே எதார்த்தத்தில் உள்ளனர். இதை இட்டு இவர்கள் கவலை கொள்ளாத ஒரு நிலையிலும், ஏகாதிபத்தியத்துக்கு இடையில் மூலதனம் உருவாக்கும் பிரதான முரண்பாடு, அமைதிக்கும் சமாதானத்துக்கும் எதிராக செயல்படுவதை மூடிமறைப்பதே இன்றைய இலட்சியமாகி விடுகின்றது. இந்த மூலதனத்துக்கு இடையிலான மோதல், மனித இனத்தையே அழித்துவிடும் என்ற உண்மையைக் கூட கண்டு கொள்வதை திட்டமிட்டே மூடி மறைக்கின்றனர். இன்று மூலதனத்துக்கு இடையிலான மோதல் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஆபத்தான ஒன்றாகவே வளர்ச்சியுற்று வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முதல் இரண்டு உலக யுத்தங்களும், மூலதனத்துக்கு இடையேதான் நடந்தன. ஏகாதிபத்திய சகாப்தம் முதல் இன்று வரையில், நாடுகளுக்கு உள்ளேயான வர்க்கப் போராட்டம் அல்லாத அனைத்து மோதல்களும் கூட ஏகாதிபத்திய மூலதனத்துக்கு இடையிலானதாகவே இருந்தது. ஆனால் இதை வெறும் தனிநபர்கள், சிறு குழுக்கள் சார்ந்தாகக் கட்டுவது, மூலதனத்தின் தந்திரமான விளையாட்டாக உள்ளது. இதையே பற்பல ஜனநாயக எழுத்தாளர்களும் பிரதிபலித்து, எதிரொலிக்கின்றனர்.


இந்த மோசடித்தனமான கூச்சல் அன்று முதல் இன்று வரை ஒரேவிதமாக பல வண்ணத்தில் அரங்கேறுகின்றது. லெனின் இதைத் தனது காலத்தில் எதிர் கொண்ட போதே, அதை அம்பலப்படுத்தினார். ""சர்வதேசக் கார்ட்டல்கள், மூலதனம் சர்வதேசியமயமாக்கப்படுதலின் மிகவும் எடுப்பான வெளிப்பாடுகளில் ஒன்றாகுமாதலால், முதலாளித்துவத்தில் தேசங்களிடையே சமாதானம் மலர்வதற்கான நம்பிக்கையை அளிப்பனவாகும் என்ற கருத்தைச் சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். தத்துவார்த்தத்தில் இந்தக் கருத்து அறவே அபத்தமானது, நடைமுறையில் குதர்க்க வாதமும், படுமோசமான சந்தர்ப்பவாதத்தை நேர்மையற்ற முறையில் ஆதரித்து வாதாடுவதுமே ஆகும் என்றார். இந்த உண்மை இன்று பரந்த தளத்தில், ஜனநாயகத்தின் பெயரில் நடக்கின்றது. சமாதானம், அமைதி, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் எதிர்களாக, மக்களுக்காகப் போராடுபவர்கள் மீது அவதூறாக சுமத்தப்படுகின்றது. உலகின் எஞ்சி இருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தையும் படிப்படியாக அழித்துவரும் மூலதனம், இதை மற்றவர்கள் மேல் சுமத்தி விடுகின்றனர். யாரிடம் வாழ்வதற்கான அடிப்படையான வாழ்க்கை ஆதாரப் பொருட்கள் தாராளமாக உள்ளனவோ, அவர்கள் மட்டும் தான், குறைந்தபட்சம் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்கமுடியும். மற்றவனிடம் கையேந்தி நிற்கும் ஒருவன் எப்படி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை நினைத்துப் பார்க்க முடியும். தான் நினைத்ததைச் சொல்லவும், அதை எழுதவும் கூட முடியாத வகையில், மூலதனம் அனைத்து ஊடக வடிவங்களையும் கூடக் கைப்பற்றி வைத்துள்ளது.

இந்த நிலையில் உலகத்தில் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் எப்படி இருக்கமுடியும். அமைதி முதல் சமாதானத்துக்கு எதிராக மூலதனம் நடத்தும் மோதல்கள் தான், உலக அமைதிக்கு சவால்விடுகின்றது. இதனடிப்படையில் மூலதனம் தமக்கு இடையில் அன்றாடம் மோதுகின்றது. மனிதனைப் பட்டினி போட்டே மனித இனத்தைக் கொன்று போடுகின்றது. வாழ்க்கை ஆதாரப் பொருட்களைக் கைப்பற்றி வைத்துள்ள மூலதனத்துக்கு எதிராகப் போராட வைக்கின்றது. மக்கள் கிளர்ந்து எழுவது ஒருபுறம் நடக்க, மறுபுறத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட வடிவில் உருவாகாத எதிர்வினைகள் அரங்கேறுகின்றன. இது மக்களின் பெயரில் நடக்கும் உதிரியான கொள்ளை, கொலை முதல் தனிநபர் பயங்கரவாதம் வரை விரிந்து செல்கின்றது. ஏகாதிபத்தியம் மறுபுறத்தில் எல்லாவிதமான கொள்ளையையும், சூறையாடலையும், மனிதப் படுகொலைகளையும் கவர்ச்சிகரமாக மூடிமறைத்தபடி, மற்றவர்கள் மீது அதை குற்றம் சுமத்துகின்றனர். கேடுகெட்ட மூலதனத்தின் வல்லான்மையின் துணையுடன், உண்மைகளையே கவிழ்த்துப் போடுகின்றனர். பணத்துக்குப் பல் இளித்து நக்கிப் பிழைக்கும் அறிவுத்துறையினர், உலகத்தையே தம்மையொத்த பன்றிகளின் கூடாரமாக்குகின்றனர். (தொடரும்...)




புரிந்துகொள்ள முடியாத நபர்


narendra-modi-the-man-the-times-400x400-imadjbh9uqqry72kநரேந்திர மோடி குறித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ள இரு நூல்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நூல், நிலஞ்சன் முகோபாத்யாய் எழுதிய Narendra Modi : The Man, The Times.  இரண்டாவது, கிங்ஷுக் நாக் எழுதிய The NaMo Story. முகோபாத்யாய், நாக் இருவருமே குஜராத் அரசியல் குறித்தும் மோடி குறித்தும் பத்தாண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர்கள். மோடியின் அரசியல் வாழ்க்கையோடு சேர்த்து குஜராத்தின் சமூக, அரசியல் வரலாறையும் பாஜக வளர்ந்த கதையையும் இந்திய அரசியல் களத்தில் பொருத்திப் பார்த்து ஆய்வு செய்கின்றன இந்த நூல்கள்.
முகோபாத்யாய், தி எகனாமிக் டைம்ஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், அவுட்லுக், ஸ்டேட்ஸ்மென் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.  குஜராத்துக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளும் நேர்காணல்களும் மேற்கொண்டு, மோடியிடமும் உரையாடி தனது புத்தகத்தை இவர் உருவாக்கியிருக்கிறார். கரன் தாப்பர் செய்ததைப் போல் 2002 குறித்து சங்கடமான கேள்விகள் எதையும் முகோபாத்யாய் மோடியிடம் முன்வைக்கவில்லை. அவ்வாறு செய்யக்கூடாது என்பதில் அவர் தெளிவாகவே இருந்திருக்கிறார். மோடியிடம் என்ன கேட்கவேண்டும், என்ன கேட்கக்கூடாது என்பதைப் பட்டியலிட்டுக்கொண்ட பிறகே தன் பணியைத் தொடங்கியிருக்கிறார். மோடியை இதற்கு முன்பே நிலஞ்சன் முகோபாத்யாய் வேறு சில சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்திருக்கிறார், உரையாடியிருக்கிறார் என்றபோதும் குஜராத்தின் முதல்வரான பிறகு அவரைச் சந்திப்பது இதுவே முதல் முறை.
வேறு பலரும்கூட குறிப்பிட்டுப் பாராட்டும் மோடியின் ஒரு பண்பை விவரித்தபடியே புத்தகம் ஆரம்பமாகிறது. முதல்வரின் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். தற்சமயம் இல்லை, வந்தவுடன் பேசுவார் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு மணி நேரத்தில் மோடி லைனுக்கு வந்துவிட்டார். எங்கே, எப்போது என்பதை விரைவில் உறுதி செய்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். உடனே அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள் அவர் அலுவலகத்தில் இருந்து பறந்து வரத் தொடங்கிவிட்டன. நேரம் ஒதுக்கப்பட்டது. புன்சிரிப்புடன் வரவேற்று உபசரித்து கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறார் மோடி. தன் வாழ்வின் தொடக்கப்பகுதி தொடங்கி, கல்வி, அரசியல் ஈடுபாடு, வழிநடத்திய தலைவர்கள், மேற்கொண்ட பணிகள், படிப்படியாக வளர்ந்த கதை, தனது கனவுகள், இந்துத்துவ அரசியல், குஜராத் 2002 (அதிகமில்லை, கொஞ்சம்தான்) என்று பல விஷயங்கள் குறித்து சுருக்கமாக மோடி உரையாடியிருக்கிறார்.
மோடியை இன்னொரு காந்தியாகவோ அல்லது மற்றொரு ஹிட்லராகவோ முன்னிறுத்தாமல், “அவரைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்திருக்கிறேன் என்கிறார் முகோபாத்யாய். ஹேஜியோகிராஃபியாகவும் (புகழ் புராணம்) இல்லாமல் கூர்மைமயான விமரிசன நூலாகவும் இல்லாமல் பல கோணங்களில் இருந்து மோடியை அணுகி முடிந்தவரை விருப்பு, வெறுப்பற்று பதிவு செய்திருக்கிறார் முகோபத்யாய். ஆனால் அவரே ஓரிடத்தில் குறிப்பிடுவதைப் போல், 2002 சம்பவத்தை விலக்கிவிட்டு மோடியைப் புரிந்துகொள்வதோ மதிப்பிடுவதோ முடியாத காரியம். அந்தச் சம்பவம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால் மோடி ‘வழிபாட்டுக்குரிய ஒரு தலைவராக வளர்ச்சி அடைந்திருக்கமாட்டார். அவரைப் பற்றி நாம் இன்று விவாதித்துக்கொண்டிருக்கவும் மாட்டோம்.’
0
நரேந்திர மோடி 17 செப்டெம்பர் 1950 அன்று பிறந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் தோன்றி ஒன்பது மாதங்கள்கூட ஆகியிருக்கவில்லை. மோடி பிறந்து, வளர்ந்து, படித்த மெஹ்சானா என்னும் மாவட்டம் குஜராத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. குஜராத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் அதிகம் செழிப்பாக இந்த மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களும் பல உற்பத்தி நிறுவனங்களும் அமைந்துள்ளன. இங்குள்ள வாட்நகர் என்னும் சிறிய நகராட்சியில்தான் மோடி பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டார். மிகுந்த பாசத்துடன் வாட்நகரை முகோபாத்யாயிடம் நினைவுகூர்கிறார் மோடி. குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட சில மாதங்களில் ஒரு தனி கமிட்டியை உருவாக்கி இந்நகரின் வளர்ச்சித் திட்டங்களை முடுக்கிவிட்டிருக்கிறார் மோடி.
2002 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் வாட்நகரில் தானா ரிரி மஹோத்சவ் நடைபெற்றுவருகிறது. புராணத்தின்படி அக்பரின் துருப்புகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்த இரு சகோதரிகளும் தற்கொலை செய்துகொண்டனராம். குஜராத்தி பிராமணப் பிரிவைச் சேர்ந்த இந்த இரு பாடகர்களையும் கடத்திவந்து தன் அரண்மனையில் பாட வைக்க அக்பர் திட்டமிட்டிருந்தாராம். 2010ம் ஆண்டு இவர்கள் பெயரில் ஒரு விருதை உருவாக்கி, முதல் விருது லதா மங்கேஷ்கருக்குக் கிடைக்கும்படி பார்த்துக்கொண்டிருக்கிறார் மோடி.
மோடி பிறந்து, வளர்ந்த ரயில் பெட்டி போன்ற ஒரு வீட்டுக்குச் சென்று முகோபாத்யாய் பார்வையிட்டிருக்கிறார்; அவருடைய பால்ய சிநேகிதர் ஒருவரிடமும் மோடியின் மாமாவிடமும் உரையாடியிருக்கிறார். இளம் வயதில் இருந்தே மோடி ‘ஒரு சிறந்த இந்துவாக’ இருந்திருக்கிறார்.  கோயில்களுக்குச் சென்று சத்தம் போட்டு மந்திரங்களை உச்சரிப்பார். பண்டிகைக் காலங்களில், முக்கிய தினங்களில் விரதம் இருப்பார். முகோபாத்யாயிடம் பேசும்போது, சமயத் தேடலைவிடவும் ஆன்மத் தேடலில் தனக்கு விருப்பம் அதிகம் என்று குறிப்பிடுகிறார். கைலாஷ் மானசரோவர், அமர்நாத் என்று சிவாலயங்களைத் தேடிச் சென்று தரிசித்திருக்கிறார். ‘தினமும் பூஜை செய்கிறேன் என்றபோதும் மத நம்பிக்கைகளிலும் நம்பிக்கைச் சார்ந்த சடங்குகளிலும் நான் சிக்கிக்கொள்ளவில்லை.’
அப்போது மோடியின் தந்தை வாட்நகர் ரயில்வே நிலையத்துக்கு அருகில் ஒரு சிறிய தேநீர் கடை நடத்தி வந்தார். மோடிக்கு ஆறு வயதாகும்போது மகா குஜராத் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. மகா குஜராத் ஜனதா பரிஷத் என்னும் அமைப்பு குஜராத் தனி மாநிலமாக அறிவிக்கப்படவேண்டும் என்னும் கோரிக்கையுடன் போராடி வந்தது. வாட்நகரில் உள்ள ரசிக்பாய் தவே, இந்துலால் யாக்னிக் ஆகிய பிரமுகர்கள் இந்தக் கோரிக்கைக்கு குரல் கொடுத்துக்கொண்டிருந்தனர். வாட்நகரில் அமைந்திருந்த தவேயின் அலுவலகத்துக்குச் சென்று குஜராத் மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தும் முத்திரைகளை வாங்கி விநியோகிக்கும் பணியை ஆர்வத்துடன் செய்துவந்தார் மோடி. ரசிக்பாயிடம் இருந்து எப்படிச் சத்தம் போட்டு கோஷமிடுவது என்று கற்றுக்கொண்டார். தனது முதல் அரசியல் பணியை ஒரு விளையாட்டு போல கற்றுக்கொண்டு செய்ததாகக் குறிப்பிடுகிறார் மோடி.
அப்போதே காங்கிரஸைத் தீவிரமாக வெறுக்கத் தொடங்கிவிட்டதாகவும் சொல்கிறார் மோடி. ‘மக்கள் அப்போது காங்கிரஸைத் தீவிரமாக வெறுத்தனர். பேரணி நடத்தினர், கோஷமிட்டனர், உருவபொம்மைகள் எரித்தனர். ஏன் காங்கிரஸ்மீது இவர்களுக்கு இவ்வளவு கோபம் என்று யோசித்தேன். விசாரித்தபோது, காங்கிரஸ் நமக்கு தீங்கு செய்துவருகிறது என்று சொன்னார்கள். ’
தனி மாநிலக் கோரிக்கைகள் தீவிரமாக இருந்த சமயம் அது. தனி ஆந்திரம் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த பொட்டி ஸ்ரீராமுலு 15 டிசம்பர் 1952 அன்று இறந்துபோனார். ஆந்திராவை உருவாக்குவதாக இரு தினங்களில் நேரு அறிவிக்கவேண்டி வந்தது. அதுவரை காலம் ஒன்றாக இருந்த ஆந்திராவும் தமிழ்நாடும் பிரிக்கப்பட்டன. இதைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்டு பல மாநிலக் கோரிக்கைகள் எழும் என்று அஞ்சிய நேரு, மாநில மறுசீரமைப்பு கமிட்டியை (எஸ்ஆர்சி) உருவாக்கினார். எதிர்பார்த்தபடியே பல கோரிக்கைகள் எழுந்தன. அவற்றில் ஒன்று, பம்பாய் தொடர்பானது. மராத்தி பேசும் மக்களுக்கும் குஜராத்தி பேசும் மக்களுக்கும் பொதுவாக இருந்த பம்பாய் யாருக்குச் செல்லும் என்னும் கேள்வி பொது வெளியில் எழுந்தது. பம்பாய் மாநிலத்தை குஜராத், மகாராஷ்டிரா என்று தனியே பிரித்து பம்பாய் நகரை யூனியன் பிரதேசமாக மாற்றிவிடலாம் என்னும் அரசின் யோசனை ஏற்கப்படவில்லை. இறுதியில் இருமொழி மாநிலமாக பம்பாய் மாற்றியமைக்கப்பட்டது. அதே சமயம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவற்றை தனி மாநிலங்களாக அங்கீகரிக்கமுடியாது என்றும் எஸ்ஆர்சி அறிவித்தது. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 1 மே 1960 அன்று மகாராஷ்டிரா, குஜராத் இரண்டும் தனி மாநிலங்களாக அங்கீகரிக்கப்பட்டன. பம்பாயும் அகமதாபாத்தும் அவற்றின் தலைநகரங்கள் ஆயின. அப்போது மோடி பத்து வயதை நெருங்கிக்கொண்டிருந்தார்.
modiஅறுபதுகளின் தொடக்கத்தில் சுதந்தர இந்தியாவின் முதல் ஆன்மிகச் சாமியார் என்று அழைக்கப்பட்ட பாண்டுரங் சாஸ்திரி அதவாலே என்பவரின் சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்டு வந்திருக்கிறார் மோடி. அவர் உரையாற்றும் தன்மை தன்னை அதிகம் கவர்ந்ததாக மோடி குறிப்பிடுகிறார். தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தபோது இவருக்கு பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.
தன் மறைவுக்கு முன்னர் அதவாலே தன் வளர்ப்பு மகளான ஜெயஸ்ரீ அதவாலே என்பவரைத் தனது இயக்கத்தின் (ஸ்வத்யாய் இயக்கம் மற்றும் பரிவார்) ஆன்மிக வாரிசாக நியமித்தார். ஜூன் 2006ல் அகமதாபாத்தில் பங்கஞ் திரிவேதி என்னும் வெளிநாட்டு வாழ் இந்தியர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கும் ஜெயஸ்ரீ இயக்கத்தினருக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. கொல்லப்படுவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் மோடியை திரிவேதி தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். ஜெயஸ்ரீ பரிவார நிர்வாகத்தில் பல குளறுபடிகள் நடைபெறுவதாகவும் அவர்களால் தன் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று தான் அஞ்சுவதாகவும் திரிவேதி மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார். சுமார் ஐந்தாண்டு காலத்துக்கு மீடியாவில் இந்த விவகாரம் தொடர்ந்து அலசப்பட்டது.  தனக்கும் இந்த விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்பதாக மோடி விலகிக்கொண்டார்.
மோடி புரிந்துகொள்ளமுடியாத ஒரு நபராகவே அன்று தொடங்கி இன்றுவரை நீடிக்கிறார் என்கிறார் கிங்ஷுக்நாக். தன் குடும்பத்தினர் உள்பட யாருடனும் அவர் நெருக்கமான உறவுகள் வைத்துக்கொண்டதில்லை. அரசியல் களத்தில்கூட மோடிக்கு நெருக்கமானவர்கள் என்று யாரையும் சொல்லமுடிவதில்லை. எந்தப் பெயர்களையும் குறிப்பிடமுடியவில்லை. ஜஷோதாபென் சிமன்லால் என்பவருடனான மோடியின் இளவயது திருமணம் குறித்து பத்திரிகைகளில் சில செய்திகள் வருவதற்கு முன்பு தங்களுக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்று பாஜகவிலேயே பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே எழுதப்பட்டதைத் தவிர புதிதாக எந்த உபயோகமான தகவலும் கிடைக்கப்போவதில்லை என்பதால் நிலஞ்சன் முகோபாத்யாய் இது பற்றி மோடியிடம் எதுவும் கேட்கவில்லை.
மோடியின் முரண்பட்ட பர்சனாலிட்டிக்கு இது ஓர் உதாரணம் என்கிறார் முகோபாத்யாயிடம் உரையாடிய ஒரு ஆர்எஸ்எஸ் தலைவர். தான் எப்படிப்பட்டவர் என்பதை மோடி ஒரு போதும் பொதுவெளியில் வெளிக்காட்டியதில்லை. அவர் வெளிக்காட்டும் தோற்றம்தான் நிஜமானது என்று நினைப்பதும் தவறு என்கிறார் இவர். மோடி தன் மனைவியை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, முறைப்படி விவாகரத்தும் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இவர்.
இது மோடியின் பிரச்னை மட்டுமல்ல என்கிறார் முகோபாத்யாய். சங் பரிவாரத்தில் பெண்களுடனான திருமண மற்றும் நட்புரீதியான உறவுமுறை நீண்டகாலமாகவே குழப்பம் மிகுந்ததாக இருந்து வருகிறது என்கிறார் அவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நிறுவிய கே பி ஹெட்கேவாரின் மரணத்துக்குப் பிறகு பல இயக்கத் தலைவர்களின் உறவுமுறைகள் குறித்து மீடியாவில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விவாதங்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மோடியும்கூட மிரட்டலையும் சமரசத்தையும் பயன்படுத்தி தன் திருமணம் குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்கச் செய்தார்.  ஆனால் அவருடைய முயற்சிகள் குஜராத்தைத் தாண்டி வெற்றிபெறவில்லை.
தன் திருமணம் குறித்து மட்டுமல்ல பொதுவாகவே தனது கடந்த காலத்தைப் பற்றி எந்தவித செய்திகளும் வெளிவரக்கூடாது என்பதில் மோடி கவனமாக இருந்திருக்கிறார். சிறு வயதில் மோடி ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறார் என்பதைக் கண்டறிந்து செய்தி வெளியிட்டிருக்கிறார் ஒரு நிருபர். மோடிக்கு நன்றாக நடிக்க வருகிறது, இளம் வயதிலிருந்தே இயல்பாக அவருக்கு நடிக்க வந்துவிட்டது என்றும் அவர் எழுதிவிட்டதால் மோடி கோபம் அடைந்துவிட்டாராம்.
குஜராத் மாநிலம் உருவாகி இரு ஆண்டுகளில், அதாவது 1962ல் இந்திய சீனப் போர் மூண்டுவிட்டது. துருப்புகள் அங்கும் இங்கும் நகர்ந்துகொண்டிருந்தன. 12 வயது மோடி மெஹ்சானாவுக்குத் திரும்பி ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரின் தன்னார்வப் பணிகளில் இணைந்துகொண்டார். இந்தியப் போர்வீரர்களுக்கு ஆடைகள் வாங்குவதற்காக எல்லோரிடமிருந்தும் நிதி சேகரித்துக்கொண்டிருந்தார்கள். மோடியும் அதில் சேர்ந்துகொண்டார். தேநீரும் தின்பண்டங்களும் கொண்டு சென்று வீரர்களுக்கு விநியோகித்தார்.
சீனப் போர் முடிவடைந்ததும் 1965ல் இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடங்கிவிட்டது. ஒப்பந்தங்களைமீறி ஊடுருவலும் தாக்குதல்களும் தொடர்ந்தன. செப்டெம்பர் 19ம் தேதி அப்போதைய குஜராத் முதல்வர் பல்வந்த்ராய் மேதா, அவர் மனைவி இருவரும் குஜராத் பாகிஸ்தான் எல்லையைப் பார்வையிட சென்றபோது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இருவரும் இறந்துபோனார்கள்.
இந்தக் காலகட்டம் தன் வாழ்வில் முக்கியமான ஒரு பகுதியாக விளங்கியது என்கிறார் மோடி. நேரு, சாஸ்திரி இருவரும் மரணமடைந்துவிட ஒரு வலுவான தலைவர் நாட்டுக்குத் தேவை என்னும் உணர்வு எங்கும் பரவியிருந்த சமயம் அது. தேசபக்தியுணர்வு தன்னையும் பற்றிக்கொண்டதாக மோடி நினைவுகூர்கிறார். சர்தார் வல்லபபாய் படேல் ஏன் பிரதமராகவில்லை என்று குஜராத்தில் இருந்த பலரையும் போல் மோடியும் அப்போது ஆதங்கப்பட்டிருக்கிறார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைந்துகொண்டது குறித்தும் சங் பரிவார் பணிகள் குறித்தும் மோடி பெருமிதத்துடன் நினைவுகூர்கிறார். வகில் சஹாப் என்று அழைக்கப்பட்ட சங் பரிவார் தலைவர் லஷ்மண்ராவ் இனம்தாருடன் மோடிக்குப் பரிச்சயம் ஏற்பட்ட காலமும் இதுவே. அப்போது மோடி ஒரு பால சுவயம்சேவக். வகில் சஹாபின் உரைகள் அவரை மிகவும் கவர்ந்தன. பின்னர் அவர் பெயரில் குஜராத்தில் பள்ளி ஒன்றை அவர் தொடங்கிவைத்தார்.
(தொடரும்)

சீனாவின் அதிசயம் தொடர்கிறது


edu1பண்டைய நாகரிகங்கள் / அத்தியாயம் 13


8. கி. பி. 618 முதல் கி.பி. 906 வரை – டாங் வம்ச (Tang dynasty) ஆட்சிக் காலம்
சீன வரலாற்றிலும், நாகரிக  வளர்ச்சியிலும் டாங் ஆட்சியின் 288 வருடங்கள் பொற்காலம். பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டது. குறிப்பாக, எழுத்து, இசை ஆகிய படைப்புக் கலைகளில் சீனா புதிய அடித்தடங்கள் பதித்தது.
கி.பி. 624.  ஒயாங் ஜுன் (Ouyang Xun) என்னும் அறிஞர் யிவென் லெஜ்ஜூ* (Yiwen Leiju) என்னும் நூலை எழுதினார். அந்நாள்வரை சீனாவில் இருந்த முக்கிய இலக்கியங்களை 47 வரிசைகளாகத் தொகுத்துத் தரும் இந்தப் புத்தகம், இலக்கிய ரசிகர்களின் ரசனைக்கு மட்டுமல்ல, அன்றைய சீன வாழ்க்கைமுறையைத் தெரிந்துகொள்ள ஆசைப்படும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷம்.
(*வரிசைப்படுத்தப்பட்ட இலக்கியத் தொகுப்பு என்று பொருள்).
xuanzang-travels-mapBTநம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு மனிதர் இதோ வருகிறார். அவர்தான்  சுவான்ஸாங் எனப்படும் யுவான் சுவாங் (Xuanzang). இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். யுவான் சுவாங். சீன நாட்டுப் புத்தத் துறவி. புத்த மதத்தைப் பற்றி, அவருக்குள் பல கேள்விகள்.  தன் அறிவுத் தாகத்தை, இந்தியாவின்  பீஹார் மாநிலத்தில் நாலந்தா மடாலயத் துறவிகள்தாம் தணிக்கமுடியும் என்று நினைத்தார். கி.பி. 629 – இல் சீனாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டார். நான்கு வருட நீண்ட நெடும் பயணம். புத்த மதத்தின் நடமாடும் பல்கலைக்கழகமாக அவர் தாயகம் திரும்பியபோது, சீனா பெருமித வரவேற்பளித்தது.  கி.பி. 650 – இல், பியான்ஜி (Bianji) என்னும் புத்த பிட்சு, யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளைப் புத்தகமாகத் தொகுத்து எழுதினார்.
எழுத்து உலகில் வகை வகையான படைப்புகள் வந்தன. (இவற்றைப் புத்தகங்கள் என்று குறிப்பிட்டாலும், அச்சடிக்கும் கலை அப்போது கண்டுபிடிக்கப்படாததால், இவை காகிதம், மூங்கில் தகடுகள், பட்டுத் துணி போன்றவற்றில்  எழுதப்பட்டன).
கி.பி.  648 – ஜின் வம்ச ஆட்சியை விவரிக்கும் புத்தகம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. கி.பி. 265 முதல் கி.பி. 420 வரையிலான காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் அற்புத ஆணவம் இந்தப் புத்தகம்,
கி.பி.  657 – 833 வகை இயற்கை மருந்துகள் / மூலிகைகள் பற்றியப் புத்தகம் வெளியாகிறது.
கி.பி.  710 – 52 அத்தியாயங்கள் கொண்ட ஷிட்டாங் (Shitong) என்னும் வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு நூல் அரசால் கொண்டுவரப்படுகிறது.
கி.பி.  713 – கையுவான் (Kaiyuan) என்னும் பட்டுத் துணியில் எழுதப்படும் நாளிதழ் அரசால் வெளியிடப்படுகிறது. அரசியல் அறிவிப்புகள், நாட்டு நடப்புகள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.
கி.பி.  719 – கௌதம சித்தா எழுதிய ஜோசியப் புத்தகம். இந்த வானியல் அறிஞர் இந்தியாவிலிருந்து சீனா சென்று குடியேறியவர்.
கி.பி. 785 – உலகின் பல நாடுகளைப் பூகோள ரீதியாக அறிமுகம் செய்யும் பிரம்மாண்ட ஆராய்ச்சிப் புத்தகம் எழுதத் தொடங்குகிறார், ஜியா டான் (Jia Dan). இவர் பூகோள மேதை, அரசு அதிகாரி. ஜப்பான், கொரியா, இந்தியா, ஸ்ரீலங்கா, ஈராக் ஆகிய நாடுகள்பற்றி, இவர் தந்திருக்கும் விவரங்கள் வியக்கவைக்கின்றன.
கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில வியப்புகள் காத்திருக்கின்றன. கி.பி. 868 – இல், ஒரு பக்க புத்தமத ஞான நூலான வைர சூத்திரம் உலகத்திலேயே முதன் முறையாகக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது. இந்திய சம்ஸ்கிருத நூலின் மொழிபெயர்ப்பு இது என்பது நாம் பெருமைப்படக்கூடிய சமாச்சாரம்.
Woodblock Printing என்னும் அச்சுமுறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. மரக்கட்டைகளில், அச்சிடப்படவேண்டிய விஷயங்களைச் செதுக்குவார்கள். கட்டையில் இவை மட்டும் பொருமி நிற்கும். மை போட்டுக் காகிதத்தில் அழுத்தும்போது, பொருமிய எழுத்துகள் காகிதத்தில் பதியும்.
கி.பி. 712 – ல் லியுயான் (லியுயான் என்றால், பேரிக்காய்த் தோட்டம் என்று அர்த்தம்) என்னும் பெயரில்  இசை, நாடகம் ஆகியவற்றுக்காக அரசாங்கம் பயிற்சிக்கூடம் நிறுவியது. மக்களின் அமோக ஆதரவால், விரைவிலேயே நாடெங்கும் இதன் கிளைகள் திறந்தன.
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று நாம் பொன்மொழி உதிர்க்கலாம். ஆனால், ஒரு நாட்டில் கலைகள் வளர வேண்டுமானால், அங்கே மக்கள் பஞ்சம், பசி, பட்டினி என்னும் அன்றாடக் கவலைகள் இல்லாமல் சுக வாழ்க்கை வாழ வேண்டும். படைப்புக் கலைகள் செழித்து வளர்ந்ததால், டாங் ஆட்சியில் சீனர்கள் வளமாக, நலமாக இருந்தார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. பிற சான்றுகளும், ஆவணங்களும், இந்தக் கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு சமுதாயம் சம அந்தஸ்து அளித்தது. சீன வரலாற்றில் ஒரே ஒரு பெண்தான் சக்கரவர்த்தியாக நாட்டை வெற்றிகரமாக ஆட்சி செய்திருக்கிறார். அவர் கி.பி. 690 முதல் கி.பி. 701 வரை ஆண்ட வூ ஜேஷியன் (Wu Zetian). பலமான பணபுலம், அரசியல் தொடர்பு கொண்டவர்களாக இருந்தாலும், நுழைவுத் தேர்வில் தேறாவிட்டால், அவர்களுக்கு அரசுப் பதவிகள் கொடுக்கக்கூடாது என்னும் கொள்கையைக் கறாராக நிறைவேற்றினார் இந்தப் பெண் சிங்கம்.
பீங்கான் தொழில் அமோக வளர்ச்சி கண்டிருந்தது. சமையலறைப் பாத்திரங்கள், அழகு கொஞ்சும் பொம்மைகள் தயாரிக்கப்பட்டன. இவை சீனர்கள் வீடுகளை மட்டுமல்லாமல் கடல் தாண்டிய பல நாடுகளையும் அலங்கரித்தன. குவான்ஜோ  நகரத்தில் இருக்கும் துறைமுகம் முக்கிய அந்நிய வியாபாரக் கேந்திரமாக விளங்கியது.  அந்நியர்களுக்காகத் திறக்கப்பட்ட முதல் சீனத் துறைமுகம் இது. இந்திய, பாரசீக வியாபாரிகள் அடிக்கடி குவான்ஜோ வந்து போனார்கள்.
கி.பி. 758 – இல்  பாரசீகக் கடல் கொள்ளைக்காரர்கள் குவான்ஜோ துறைமுகத்தைத் தாக்கி சூறையாடினார்கள். முக்கியப் பகுதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். எக்கச்சக்கச் சேதம். சீன அரசு துறைமுகத்தை மூடவேண்டிய கட்டாயம். சேதங்களைச் சீர்படுத்தவும், மறுபடி வாணிப மையமாக்கவும் ஐம்பது வருடங்களாயின.
கி.பி. 635 – சீனர்களின் சமுதாய வாழ்வில் முக்கிய வருடம். நாட்டின் மத நம்பிக்கைக் கதவுகள் புதிய கருத்துகளுக்குத் திறக்கத் தொடங்கின. ஆரம்ப நாட்களில் மக்கள் இதிகாசங்களில் குறிப்பிடப்படும் பல தெய்வங்களை வணங்கினார்கள். இவை பெரும்பாலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சக்திகளின் வடிவங்கள். கி.மு. 265 காலகட்டத்தில் மாமன்னர் அசோகர் புத்த பிட்சுக்களை நேபாளம், பூடான், சீனா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. விரைவில், புத்த மதம் சீனாவின் பெரும்பகுதி மக்களை ஈர்த்துக்கொண்டது.  பின்னாள்களில், கன்ஃபூஷியனிஸம், தாவோயிஸம் ஆகிய கொள்கைகளைப் பலர் பின்பற்றத் தொடங்கினார்கள்.
பாரசீகத்திலிருந்து நான்கு கிருஸ்தவப் பாதிரிமார்கள் கி.பி.635 – இல் சீனா வந்தார்கள், தங்கள் மத நம்பிக்கைகளுக்கு வித்திட்டார்கள்.  கி.பி.650- ல் அரேபியாவிலிருந்து இஸ்லாமிய மதகுருக்கள் சீனா வந்தார்கள். இந்த வருகை, சீனாவில் இஸ்லாமியத்தின் ஆரம்பம்.
இன்றைய சீனாவில் மத நம்பிக்கை எப்படி இருக்கிறது?   எந்த மதக்கொள்கையையும் நம்பாத நாத்திகர்கள் – 42% பழங்கால மதங்கள் + தாவோயிஸம் -  30% புத்த மதம் – 18% கிறிஸ்தவ மதம் – 4 % இஸ்லாமியர் – 2% பிறர் – 4%.
பல்வேறு மதங்களும் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இந்தச் சூழல் கி.பி. 845 – இல் கெட்டது. உபயம், கி.பி. 840 முதல் கி.பி. 846 வரை சக்கரவர்த்தியாக இருந்த வூ ஜாங் (Wuzong). மண்ணாசை கொண்ட மாமன்னர் பல போர்கள் நடத்தினார். கஜானா காலியானது. எங்கே கை வைக்கலாம் என்று மன அரிப்பு. அவர் கண்களில் புத்தக் கோவில்கள் பட்டன. இன்றைய திருப்பதிபோல், அன்றைய புத்தக் கோவில்களில் பக்தர்கள் காணிக்கை மழை பொழிந்துகொண்டிருந்தனர். வூ ஜாங் 46,000 கோவில்களை அரசுடமையாக்கினார், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மத குருக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தார்.
அறிவுகெட்ட அரசர்கள் மட்டுமல்ல,இயற்கையும் தன் சோதனைகளைத் தொடங்கியது.  சாங்கான் (Changan – இன்று Xian என்று அழைக்கப்படுகிறது) நகரம் டாங் ஆட்சியில் சீனாவின் தலைநகரம், இங்கே, கி.பி. 843- இல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 4000 வீடுகள், நூற்றுக் கணக்கான சரக்குக் கிடங்குகள், ஏராளம் கட்டடங்கள் அழிந்தன.
பதினைந்து வருடங்கள் ஓடின. அக்னிக்கு நான் என்ன இளைத்தவனா என்று போட்டிப் போட்டுக்கொண்டு வந்தது பெருவெள்ளம். பல்லாயிரம் வீடுகளையும் உயிர்களையும் பலிகொண்டு திருப்தி அடைந்தது.
சக்கரவர்த்திகளுக்கு நாட்டின் மீதிருந்த பிடியும் தளரத் தொடங்கியது. கி.பி. 874 – ல் மக்கள் அதிருப்தி வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையானது. இந்த எரிமலைக்கு வத்திக் குச்சி வைத்துப் பற்றி எரியவிட்டார் ஹூவாங் சாவோ (Huang Chao). அன்றைய சீனாவில், அத்தியாவசியப் பொருளான உப்பு விநியோகம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் இருந்தது. அரசாங்க வருமானத்தில் பெரும்பகுதியை உப்பு வியாபாரம் தந்தது. பணம் கொட்டும் இடங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடவேண்டாமா? ஆடியது. ஏராளமானோர் உப்புக் கடத்தலிலும், கறுப்புச் சந்தையிலும் ஈடுபட்டனர்.
ஹூவாங் சாவோ அப்படிப்பட்ட உப்புக் கடத்தல்காரர். கை நிறையப் பணம் வந்தவுடன், அவர் அரசாங்கத்தை எதிர்த்தார். அரசுக்கு எதிரானவர்களும், அதிருப்தி கொண்டவர்களும் ஹூவாங் சாவோ பின்னால் அணி திரண்டார்கள். கலவரம் வெடித்தது. வீதிகள் எங்கும் அரசுப் படைகளும், கலவரக்காரர்களும் மோதினார்கள். ஹூவாங் சாவோ பல ஆரம்ப வெற்றிகள் கண்டார். தலைநகர் சாங்கான் அவர் கை வசமானது. அடுத்து அவர் கைப்பற்றியது வணிகத் தலைநகரான குவான்ஜோ. தன்னைச் சீனச் சக்கரவர்த்தியாக ஹூவாங் ஜோ அறிவித்துக்கொண்டார். ஆனால், பாவம் அவர் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சீன அரசுப் படைகள் அவரைத் தோற்கடித்தன. அவர் முடிவு? மருமகனால் படுகொலை செய்யப்பட்டார் என்கிறார்கள் சிலர்: இல்லை, தோல்வியைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள் சிலர். எப்படி என்பது தெரியவில்லை. ஆனால், அவர் மரணமடைந்தது நிஜம்,
நிறைவேறாத ஆசைகளோடு மரணமடைந்த அவர் ஆத்மா, எட்டு வருடங்களுக்குப் பின் சாந்தி அடந்திருக்கும். கி.பி. 907 – இல் ஜூ வென் (Zhu Wen), ஐ (Ai) சக்கரவர்த்தியைப் போரில் வென்றார், அவரை அரியணையிலிருந்து கீழே இறக்கினார். டாங் வம்சம் முடிந்தது. சீன வரலாற்றில், நாகரிகத்தில் புதிய பக்கங்கள் விரியத் தொடங்கின.

திங்கள், 22 ஜூலை, 2013

குர்திஸ்தான், துருக்கியின் துயரம்


துருக்கியின் மிகப்பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த நகரமான இஸ்தான்புல், பொஸ்போருஸ் கடலால் இரண்டாக பிரிக்கப் படுகின்றது. மேற்கு பகுதி, ஐரோப்பிய நிலமாகவும், கிழக்கு பகுதி ஆசிய நிலமாகவும், புவியியல் ரீதியாக அல்ல, அரசியல் ரீதியாக கருதப்படுகின்றது. இரண்டு பகுதிகளையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதனால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்று. இது இன்னொரு பக்கம், துருக்கியின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது எனலாம். மேலைத்தேய கலாச்சாரமும், கிழகத்தயகலாச்சாரமும், லிபரல் சித்தாந்தமும், இஸ்லாமிய மதமும், என்று நாடு முழுக்க இரு வேறு பட்ட உலகங்களை காணலாம். அரசாங்கம் என்னதான் துருக்கியை ஒரே மொழி பேசும், ஓரின மக்கள் வாழும் நாடாக காட்ட விரும்பினாலும், சிறுபான்மை மொழி பேசும் இனங்கள் அடக்கப்பட்ட நீண்ட வரலாறு அதற்குண்டு. அதன் எதிர்வினையாக, இரண்டாவது சிறுபான்மை இனமான குர்து மொழி பேசும் மக்களின் தாயகத்திற்கான ஆயுதப் போராட்டம் இன்று சர்வதேச பிரச்சினையாக மாறி பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக ஏவி விடப்பட்ட துருக்கி இராணுவம் பல மனித உரிமை மீறல்களை புரிந்து, பலரை காணாமல் போக வைத்து இருந்த காலகட்டத்தில், "காணாமல் போவதற்குசர்வதேச கமிட்டி" என்ற மனித உரிமைகள் நிறுவனம் ஒழுங்கு படுத்திய மகாநாட்டில் கலந்து கொண்ட போது, நான் பார்த்த விடயங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
முதலாம் உலக யுத்தத்தில் தோல்வியை தழுவிய, அன்றைய ஒட்டோமான் சாம்ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி பதவியில் இருந்து நீக்கபட்டு , அரசியல் உள்நோக்கம் கொண்ட கமல் அட்டடுர்க் (Mustafa Kemal Atatürk) என்ற இராணுவ அதிகாரி துருக்கியின் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அது நவீனமடைய தொடங்கியது. மேற்கு ஐரோப்பிய பாணியில் கல்வி, ஒரு கலாச்சார புரட்சியை உருவாக்கியது. பழமைவாதத்தை ஆதரித்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மதச்சார்பற்ற கொள்கை வலியுறுத்தப் பட்டது.இவ்வாறு அட்டடுர்க் அரசாங்கம் ஒருபக்கம் முற்போக்கானதாக இருந்தாலும், மறு பக்கம் பாசிச மயமாகி, சிறுபான்மை இனங்களை அடக்கி, துருக்கி மொழியை பலவந்தமாக திணித்தது. ஆர்மேனிய மொழி பேசும் மக்கள் இந்த பேரினவாதத்திற்கு அதிக விலை கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர்.வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறினார்கள்.
அந்த இனப்படுகொலைக்கு பிறகு எஞ்சியிருந்தோறும், பிற இனத்தவர்களும், துருக்கி மொழி மட்டுமே பேச வேண்டுமென கட்டாய படுத்தப் பட்டனர். அவ்வாறே தென் கிழக்கு மலைப் பிரதேசங்களில் வாழும் குர்து மொழி பேசும் மக்களின் இன அடையாளமும் புறக்கணிக்கப்பட்டு, அவர்கள் "மலைநாட்டு துருக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். இஸ்லாம் என்ற மதம் மட்டுமே இவ்விரு இன மக்களுக்கும் பொதுவானது. மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய துருக்கி மொழி பேசுவோரும், இந்தோ-ஈரானிய மொழி பேசும் பூர்வ குடிகளான குர்த்தியரும், கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள். இத்தகைய கலாச்சார பாரம்பரியம் கொண்ட மக்கள்,தமக்கென பாடசாலை இன்றி துருக்கி மொழியில் கல்வி கற்க வேண்டிய நிலை. எந்த பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு குர்து மொழிப் பெயர் இட்டால் சிறை செல்ல வேண்டும். குர்து மொழியை வீதியில் பேசுவது கூட தடை செய்ய பட்டது. அந்த இன மக்களுக்கே உரிய "நெவ்ரோஸ்" எனப்படும் புத்தாண்டு கொண்டாடுவது கூட அண்மைக்காலமாக தடை செய்யப் பட்டிருந்தது.
துருக்கி-குர்து கலப்பின பெற்றோருக்கு பிறந்த அப்துல்லா ஒச்சலான், குர்திய தொழிலாளர் கட்சி (PKK) என்ற ஆயுதபோராட்ட வழியில் நம்பிக்கை கொண்ட அமைப்பை நிறுவிய பிறகு, அந்த பிராந்தியத்தில் வன்முறை கலாச்சாரம் பரவியது. துருக்கியின் போலிஸ், இராணுவத்தை குறிவைத்து கெரில்லாக்கள் தாக்கத் தொடங்க, பதிலடியாக இராணுவம் அப்பாவி பொதுமக்களை கொன்று, அவர்களின் குடியிருப்புக்களை அழித்து, பெண்களை பாலியல் துன்புருதலுக்குள்ளாக்கி, சொத்துகளை நாசமாக்கி, அடக்குமுறையை ஏவி விட்டது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராளிகளாக மாற, தனது போராட்டம் முன்னேறி, அது ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று ஒச்சலான் கணக்கு போட, கள நிலவரம் எதிர்பாராத அளவு மோசமடைந்தது.



துருக்கி இராணுவம் பெருமளவு குர்து மக்களை, அவர்களது கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், துருக்கியின் மேற்கு பகுதியில் குடி அமர்த்தியது. இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்கள், மீண்டும் தமது தாயகப் பூமிக்கு திரும்ப முடியாமல் வாழ்கின்றனர். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருந்ததால், அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து இராணுவ ஆலோசனைகள், ஆயுத தளபாடங்கள் ஆகியனவற்றை பெற்றுக் கொண்டது.இதனால் பி.கே.கே.யின் தாக்குதிறன் கணிசமாக குறைக்கப்பட்டு, போராளிகள் மலைகளில் மட்டும் முடங்கி கொள்ள நேர்ந்தது. அண்டை நாடான சிரியாவை, பி.கே.கே. நீண்ட காலமாக தனது பின்தளமாக பயன்படுத்தியது. இயக்கத்தின் தலைவர் ஒச்சலான்அங்கே தங்கியிருந்தது மட்டுமல்ல, பல பயிற்சி முகாம்களும் இருந்தன. பின்னர் துருக்கி அரசாங்கம் சிரியா மீதும் படையெடுப்போம் என்று மிரட்டியதால், அங்கிருந்து வெளியேறிய ஒச்சலனை கென்யாவில் வைத்து, துருக்கிய கொமாண்டோக்கள் சிறை பிடித்து கூட்டி வந்தனர். இந்த பின்னடைவு,பி.கே.கே. இயக்கத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கி, இரண்டாக உடைந்து பலவீனப்பட்டது. தற்போது பி.கே.கே.யின் முக்கிய முகாம்கள் துருக்கி எல்லையோரமாக இருக்கும் ஈராக்கின் மலைப் பகுதிகளில் உள்ளன. துருக்கி இராணுவம் அவ்வப்போது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஈராக்கினுள் நுழைந்து திரும்பி வரும். இது தான் இன்றுள்ள நிலைமை.


2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம், இஸ்தான்புல் நகர மத்தியில் இருந்த "கலதசரை"(Galatasaray)விளையாட்டு மைதானத்திற்கு அருகில் குழுமிய, காணமல் போன இளைஞர்களின் அன்னையருடன், பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த சர்வதேசபிரதிநிதிகளும் இணைந்து கொண்ட ஊர்வலம், தானுண்டு தன் வீடுண்டு என்று வாழும் நகர மக்களையும் மட்டுமல்ல, பெருமளவு பொலிசரையும் கவர்ந்தது. தொடர்ந்து ஒரு உணவு விடுதியின் மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு , அனைத்துபத்திரிகைகளுக்கும் அழைப்பு விடுக்க பட்டிருந்தாலும், வந்ததென்னவோ ஒரு சில இடதுசாரி சார்பு பத்திரிகையாளர்கள் தான். இந்தப் போக்கு பின்னர் குர்திஸ்தான் நகரமான டியார்பகிரில் (Diyarbakir) நடந்த மகாநாட்டிலும் காணப்பட்டது. பாதுகாப்பு படைகளால் பிடித்து செல்லப் பட்டு காணாமல் போனவர்கள், ஒன்றில் சிறுபான்மை குர்த்தியராக இருப்பார்கள், அல்லது இடதுசாரி கட்சி உறுப்பினராக இருப்பார்கள். இந்த காரணத்தால் துருக்கி அரசாங்கத்தை ஆதரிக்கும் பெரும்பான்மை பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.

துருக்கியின் தென் கிழக்கு மூலையில் இருக்கும் டியார்பகிர் நகரத்திற்கு சர்வதேச பிரதிநிதிகளுடன் வந்திறங்கிய போது வித்தியாசங்கள் தெரிய ஆரம்பித்தன. குர்திய தேசியவாத கட்சி ஆளும் நகரசபை, மகாநாட்டிற்கு என மண்டபத்தை ஒதுக்கி தந்தது. அயல் கிராமங்களில் இருந்தும் சாதாரண குர்து மக்கள் மகாநாட்டிற்கு கலந்து கொள்ள வந்திருந்தனர். நான்கு நாட்கள் நடந்த மகாநாட்டில் தமது கண்ணீர் கதைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். வீட்டிற்கு வந்து தமது பிள்ளைகளை கூட்டி சென்ற இராணுவத்தினர், சில நாட்களின் பின்னரும் விடுதலை செயாதலால், தேடிப்போகும் பெற்றோருக்கு தமக்கு தெரியாது என கை விரித்த சம்பவங்கள். அப்படி "காணாமல் போனவர்கள்" சில மாதங்களின் பின்னர் ஆள் அரவமற்ற பகுதிகளிலோ, அல்லது புதை குழிகளிலோ உயிரற்ற சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவங்கள், போன்றவற்றை, மனதை உருக்கும் விதத்தில் கூறிய போது, மகாநாட்டு மண்டபத்தில் பலர் அழுததை காணக் கூடியதாகவிருந்தது. காணமல் போனோர் சங்கத்தை உருவாக்கியவர் ஒரு துருக்கி தாய். அவர் பேச எழுந்த போது, பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து விண்ணதிர முழக்கமிட்டனர். இதனை அங்கிருந்த சிவில் உடையில் இருந்த போலிஸ் அதிகாரிகள் எரிச்சலுடன் கவனித்தனர். அந்த பெண்மணியின் மகன் 'ஹசன்', ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். நன்றாக படித்து நல்ல வேலைக்கு போகக் கூடிய மத்திய தர வர்க்க குடும்பத்தை சேர்ந்தவர். ஆனால் பட்டம், பதவியை உதறி தள்ளி விட்டு, டியர்பகிர் நகரத்திற்கு வெளியே இருந்த, குர்திய சேரி மக்களுக்கு சேவை செய்து வந்தார். இவ்வாறு அடித்தட்டு மக்கள் மத்தியில் வேலை செய்வது கூட, துருக்கி அரசாங்கத்தின் பார்வையில் குற்றமாக தெரிந்தது. திடீரென ஒரு நாள் காணமல் போன அந்த வாலிபனின் உடல் பின்னர் ஒரு மயானத்தில் கண்டெடுக்கப் பட்டது. இந்த சம்பவத்தால் ஹசனின் குடும்பம் துவண்டு விடவில்லை. வயதான தாயும், ஒரேயொரு சகோதரியும் காணாமல் போவதற்கு எதிரான சங்கத்தை ஆரம்பித்து நீதிக்காக போராடுகின்றனர். இன்று அந்த சங்கத்தின் கிளைகள் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல, பிலிப்பைன்ஸ்போன்ற ஆசிய நாடுகளிலும், கொலம்பியா தென் அமெரிக்கா நாடுகளிளுமாக, சர்வதேச நிறுவனமாக மாறியுள்ளது.

மாநாட்டிற்கு வந்திருந்த சிவில் போலிஸ் தலையிட்டு குழப்பிய சம்பவம் ஒன்றும் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒரு வயதான குர்திய பெண்ணும், ஒரு துருக்கி இளம் பெண்ணும் "வாழ்க குர்திஸ்தான்" என்று கோஷம் எழுப்பிய காரணத்திற்காக, போலிஸ் அலுவலகம் கூட்டிசென்று விசாரிக்கப் பட்டனர். துருக்கியில் இப்போதும் குர்து மக்களின் தாயகத்தை குறிக்கும் "குர்திஸ்தான்" என்ற சொல்லை பயன்படுத்த தடை உள்ளது. மேலும் போலிஸ் உளவாளி ஒருவர், மண்டபத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, மகாநாட்டில் நடப்பனவற்றை வீடியோ வில் பதிவு செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாடு கூட்டங்கள் ஓய்ந்த நேரம், இருபது வயதே மதிக்கத்தக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, புரட்சி பாடல்களை பாடி ஆடினர். இறுதி நாளன்று பலஸ்தீன இசைக் குழுவொன்றின் இன்னிசை கச்சேரி களை கட்டியது . தொடர்ந்து கலந்து கொண்ட சர்வதேச பிரதிநிதிகளுக்கு குர்திய சால்வை வழங்கி கௌரவித்து, "சர்வதேச கீதம்" பாடி மாநாடு இனிதே முடிந்தது. அடுத்த நாள் டியர்பகிர் நகரில் இருந்து சில நூறு கி.மி. தூரத்தில் இருக்கும் "ஹசன்கேய்ப்" (Hasenkeyf) என்ற பண்டைய நாகரீகத்தின் சிதிலங்களை பார்வையிட சென்றோம். வழி நெடுக பச்சை புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள் என்று அழகிய இயற்கை காட்சி. இடையிடையே இது ஒரு யுத்த பூமி என்பதை நினைப்பூட்டும் துருக்கி இராணுவ வாகன தொடரணிகள். குர்து மக்களின் கலாச்சார சொத்து என வர்ணிக்கப்படும் பண்டைய நாகரீகம், மலையுச்சியில் சிறு சிறு குகைகள் போன்று தோற்றம் தரும்
இடிந்த வீடுகளை கொண்டுள்ளது. சிறுவர்களின் கற்பனை கதைகளில் வாசித்ததை நேரே பார்ப்பது போலிருந்தது. ஆயிரம் வருடங்களை கடந்தும் அழியாது நிலத்து நிற்கும் அந்த பண்டைய நாகரீக சின்னங்களை இனிமேல் பார்க்க முடியுமா என்பது கேள்விகுறி. ஏனெனில் அந்த இடத்தில் ஒரு பிரமாண்டமான அணைக்கட்டை கட்டி, அனைத்தையும் தண்ணீருக்குள் மூழ்கடிக்க துருக்கி அரசு திட்டம் போட்டுள்ளது.

குர்திய மக்களுக்கு மலைகள் மட்டுமே சொந்தம் என்று ஒரு மேலைத்தேச எழுத்தாளர் நூல் வெளியிட்டார். அவர்களில் பெரும்பான்மையானோர் ஏதுமற்ற ஏழைகள். அதனாலேயே போரினால் இரட்டிப்பு பாதிப்புக்குள்ளாகும் போது, ஆயுதமேந்தும் நிலைமைக்கு தள்ளப்படுகின்றனர். பி.கே.கே. கொண்டு வந்த குர்து தேசியவாதம், பல பிரதேச வேறுபாடுகளை கொண்ட குர்து மக்களை ஓரணியில் சேர்த்து. ஐரோப்பிய நகரங்களில் பெற்றோருடன் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த சில வாலிபர்கள், இளம் பெண்கள் கூட, தமது சொகுசான வாழ்க்கையை உதறித்தள்ளி விட்டு, விடுதலை வேட்கையுடன் ஆயுதம் தரித்த போராளிகளாக, பனி படர்ந்த மலைகளில் துருக்கி இராணுவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழிவுகள், துயரங்கள், எல்லாமே இப்போதும் தொடர்கதையாக இருப்பினும் யுத்தம் ஒரு இனத்தின் இருப்பை நிச்சயப் படுத்தியிருக்கிறது.

குர்து - மலையோரம் வீசும் இரத்த வாடை...!





துருக்கி, இஸ்தான்புல் நகரம். குர்து சிறுபான்மையின மக்கள் வாழும் புறநகர் பகுதி அன்று வழக்கத்திற்கு மாறாக பதற்றம் காணப்படுகின்றது. முக்கியமான சந்தியில் வேள்வித்தீ போல பெரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. நெருப்புக்கு அந்தப்பக்கம் விண்வெளிக்கு செல்பவர்களைப் போல கவச உடையணிந்த பொலிஸ்காரர்கள், தடுப்புச் சுவர் போல வீதியை மறித்துக் கொண்டு நிற்கின்றனர். நெருப்பிற்கு இந்தப் பக்கம், பதின்ம வயதிலான சாதாரண இளைஞர்கள். பொலிசாரை நோக்கி கற்களை வீசியெறிந்து விட்டு ஓடுகிறார்கள். பதிலுக்கு பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசுகின்றது. சாதாரண கடைத் தெரு அன்று யுத்தகளம் போல காணப்படுகின்றது. வியாபாரிகள் கடைகளை இழுத்து மூடிவிட்டு உள்ளுக்குள்ளே பதுங்கிக் கொள்கின்றனர். பொது மக்கள் பாதுகாப்புத் தேடி நாலாபுறமும் ஓடுகின்றனர்.

அங்கே என்ன நடக்கிறது? ஏதாவது அரசியல் ஆர்ப்பாட்டமா? இல்லை. அது ஒரு புதுவருடக் கொண்டாட்டம்! உலகிலேயே துருக்கியில் மட்டும் தான், புதுவருடப் பிறப்பு கலவரத்தை தூண்டும் அரசியல் தினமாக "கொண்டாடப்படுகின்றது". அந்த நாட்டில் மட்டும்தான், சிறுபான்மை குர்து இன மக்களின் "நெவ்ரோஸ்" என்ற தனித்துவமான புத்தாண்டு தினம் தடைசெய்யப்பட்டுள்ளது. மார்ச் 21 ம் திகதியளவில், குர்தியரைப் போல ஒருமித்த புராதன கலாச்சாரத்தை கொண்ட ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நெவ்ரோஸ் கொண்டாடப்படுகின்றது. (வட இந்தியாவில் அதையே "ஹோலி பண்டிகை" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.) இருப்பினும் துருக்கி பேரினவாதமானது, சிறுபான்மை இனங்களின் எந்தவொரு கலாச்சார அடையாளத்தையும் சகித்துக் கொள்வதில்லை.

துருக்கி நாட்டில், துருக்கி மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை தவிர, ஆர்மேனியர்கள், குர்தியர், அரேபியர் ஆகிய சிறுபான்மை இனங்கள் (குறிப்பாக கிழக்கு பிரதேசங்களில்) காலங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப்போரின் முடிவில், பெருமளவு ஆர்மேனியர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை மூலம் விரட்டியடிக்கப்பட்டனர். தற்போது துருக்கியில் வாழும், எஞ்சிய சில லட்சம் ஆர்மேனியர்கள் கடந்தகால இனப்படுகொலை பற்றி பேசுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் உயிர்வாழ்தலின் அவசியத்திற்காக, பெரும்பான்மை சமூகத்துக்குள் அடங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம். அரேபிய சிறுபான்மையினர் வாழும் பிரதேசம், முன்பு சிரியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பிரெஞ்சு காலனிய அரசால் துருக்கிக்கு தாரை வார்க்கப்பட்டது.

குர்து மக்களின் வாழ்விடம் ஒரு மலைப்பிரதேசமாகும். பொருளாதார ஆதாயமற்ற மலைகள் மீது, எந்தவொரு ஆட்சியாளருக்கும் அதிக அக்கறை இருக்கவில்லை. இதனால் ஓட்டோமான் இஸ்லாமிய அரசு காலத்திலும், குர்து நிலப்பிரபுக்களினால் ஓரளவு சுயாதீனமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது. முதலாம் உலகப்போர் முடிவில், ஈராக்கை கைப்பற்றிய பிரிட்டிஷார், குர்து இன மக்களின் பிரதேசம் வரை தமது காலனிய ஆட்சிக்கு உட்படுத்தினர். மத்திய கிழக்கில் தேசிய அரசுகளை உருவாக்குவதில் ஈடுபட்ட பிரிட்டிஷ் காலனியவாதிகள், குர்து இனத்தவருக்கு தனியான தேசத்தை தருவதாக உறுதிமொழி கொடுத்தனர். இருப்பினும் கண்ணியமற்ற பிரிட்டிஷ் அதிகாரிகள், உறுதிமொழிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டனர். குர்து மக்களின் தாயகத்தை ஈராக்கிற்கும், துருக்கிக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு, லண்டன் சென்று ஓய்வெடுத்தனர்.

கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி அரசாங்கம், துருக்கி முழுவதும் பாசிச ஆளுமைக்கு உட்படுத்தியது. சிறுபான்மை இனங்கள் கடுமையாக அடக்கப்பட்டன. உத்தியோகபூர்வ மொழியான துருக்கி மொழி மட்டுமே பாடசாலைகளில் போதிக்கப்பட்டது. குர்து மொழியை வீட்டில், வீதியில் பேசுவது கூட தடை செய்யப்பட்டது. குர்தியருக்கே தனித்துவமான பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டமுடியாது. குர்து மொழிக்கே உரிய பிரத்தியேக உச்சரிப்புகளைக் கொண்ட பெயர்களை யாரும் வைத்திருக்க முடியாது. அவை துருக்கிமயப்படுத்த வேண்டும். இந்த அடக்குமுறையின் விளைவாக, தற்போது மறுமலர்ச்சி கண்டுள்ள குர்து மொழி, துருக்கி உச்சரிப்புக்கேற்ப எழுதப்படுகின்றது.

தமிழகத்திலோ, அல்லது இலங்கையிலோ நடந்ததைப் போல, குர்து மொழி உரிமைப் போராட்டம் அப்போது வெடிக்காததற்கு காரணங்கள் உள்ளன. குர்தியர்களில் ஒரு நடுத்தர வர்க்கம் உருவாக நீண்டகாலம் எடுத்தது. பெரும்பாலான குர்து இன மக்கள் உழைக்கும் வர்க்கமாக, ஊரில் உள்ள நிலப்பிரபுவிற்கு கட்டுப்பட்ட பண்ணையடிமைகளாக இருந்தனர். தற்போதும் அந்த நிலைமையில் சிறிதளவே மாற்றம் ஏற்பட்டுள்ளது. குர்து நிலப்பிரபுத்துவ சக்திகள், இன்றுவரை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்து வருகின்றன. நிலப்பிரபுக்கள் தமது வர்க்க குணாம்சம் காரணமாக, இஸ்லாமிய (பெரும்பான்மை குர்தியர்கள் இஸ்லாமியர்கள்) அடிப்படைவாத அரசியலுக்கு ஆதரவளிப்பவர்கள். துருக்கி அரசு இந்த முரண்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றது.

எழுபதுகளின் இறுதியில், துருக்கியின் தலைநகர் அங்காராவில், சில படித்த குர்து இளைஞர்கள் இரகசியமாக ஒன்றுகூடினார்கள். வசீகரத் தோற்றம் கொண்ட "அப்துல்லா ஒச்சலான்" என்ற இளைஞர் அந்தக் குழுவிற்கு தலைமை தாங்கினார். குர்து மக்களின் எல்லாவித ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில், ஆயுதப்போராட்டமே ஒரே தீர்வு என முடிவு செய்தனர். பனிப்போர் நிலவிய காலத்தில், மத்திய கிழக்கின் கம்யூனிஸ்ட் சக்திகளுடனான தந்திரோபாயக் கூட்டு, தமது தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என நம்பினர். தமது இரகசிய தலைமறைவு இயக்கத்திற்கு "குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி" (Partiya Karkerên Kurdistan) சுருக்கமாக "பி.கே.கே" என்ற பெயரிட்டனர். குர்த்தியரின் பிராந்திய தலைநகரான டியார்பாகிரில் 1978 ம் ஆண்டளவில், இயக்கம் ஸ்தாபிக்கப் பட்டது. மத்திய குழு ஒன்றைக் கூட்டி, மார்க்சிச லெனினிச சிந்தாந்தப்படி கட்சியைக் கட்டுவது என முடிவெடுத்தனர். பி.கே.கே. எடுத்த எடுப்பில் கம்யூனிசம் பேசியதற்கு, சமூக ஆதிக்க சக்திகளான நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராட வேண்டி இருந்தும் ஒரு காரணம்.

1984 ம் ஆண்டளவில், சர்வதேச சூழ்நிலையும் குர்து ஆயுதப்போராட்டத்திற்கு சாதகமாகவே அமைந்திருந்தது. பனிப்போர், சோவியத் யூனியன் எல்லாம் நிலைத்திருந்த காலம் அது. துருக்கியின் அயல்நாடான சிரியா, மத்திய கிழக்கில் சோவியத் யூனியனின் மனங்கவர்ந்த நண்பனாக இருந்த காலமது. இன்று "பயங்கரவாதிகள் பட்டியலில்" உள்ள அரைவாசி இயக்கங்களுடன், சிரிய அரசுக்கு அன்று தொடர்பு இருந்தது. தேசிய விடுதலை இயக்கங்களை ஆதரிப்பது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் தந்திரோபாயம், என்ற கொள்கையை பின்பற்றிய சோவியத் யூனியன், சிரியா ஊடாக இயக்கங்களுக்கு ஆயுத விநியோகம் இடம்பெற்றது. ஒரு வல்லரசின் பக்க பலம் காரணமாக இஸ்ரேல் உட்பட எந்த ஒரு நாடும், சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுக்க அஞ்சியது.

அத்தகைய சர்வதேச பின்புலத்தை பி.கே.கே. கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது. சிரியாவின் ஒத்துழைப்புடன் துருக்கி எல்லையோரமாக போராளிகளின் பயிற்சி முகாம்களை நிறுவியது. ஒச்சலான் போன்ற தலைவர்கள், தலைநகர் டமாஸ்கஸ்ஸில் தங்கி, பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதன் மூலம் இராணுவ பயிற்சிகள், ஆயுதங்கள் என்பனவற்றை பெறக்கூடியதாகவிருந்தது. (பிற்காலத்தில், பி.கே.கே. புலம்பெயர்ந்த குர்து மக்களின் உதவியுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, தனக்கென ஆயுதக் கடத்தலுக்கான வலைப்பின்னல் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டது.) சிரியாவை பின்தளமாக பயன்படுத்திய பி.கே.கே., தனது போராளிகளை துருக்கியினுள் அனுப்பி கெரில்லா நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது.

ஆரம்பத்தில் துருக்கிப்படைகள் கெரில்லாக்களின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் நிலைகுலைந்தது. மலைப்பிரதேசம், மறைந்து கொள்வதற்கேற்ற குகைகள், கரடுமுரடான தரையமைப்பு, போன்றன கெரில்லாப் போருக்கு அனுகூலமாக இருந்தது. ஒரு கட்டத்தில், முன்னேறிக் கொண்டிருந்த பி.கே.கே. கெரில்லாப் படையணிகள், சில மலைப்பிரதேச கிராமங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். கெரில்லாப் போராட்டம் உத்வேகத்துடன் முன்னெடுக்கப் படுகையில், குர்து மக்கள் துருக்கி அடக்குமுறையாளருக்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள். அதன் பிறகு சுதந்திர குர்திஸ்தான் மலரும் என்று கணக்குப் போட்டனர். ஆனால் அது ஒரு தப்புக்கணக்கு என்று விரைவில் தெரியவந்தது.

துருக்கி அரச படைகள், குர்து நிலப்பிரபுக்களின் உதவியுடன் ஊர்காவல் படைகளை அமைத்தனர். ஊர்காவல் படையில் குர்து சமூகத்தில் இருந்து பலவந்தமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களும் இருந்தனர். பி.கே.கே. அரசபடைகள் மட்டுமல்லாது, ஊர்காவல்படையும் தனது எதிரி எனப் பிரகடனப்படுத்தியதுடன், குறி வைத்து தாக்கியும் வந்தது. இதனால் கொல்லப்பட்ட ஊர்காவல்படைவீரரின் குடும்பத்தினரையும் பி.கே.கே. பகைத்துக்கொண்டது. குர்து இனத்தில் ஒரு பிரிவினரை போராளிகளுக்கு எதிராக திசை திருப்பி விடும் தந்திரத்தில் துருக்கிய அரசு ஓரளவு வெற்றி பெற்றது. மேலும் துருக்கியில் கட்டாய இராணுவ சேவை அமுலில் உள்ளது. தேசியக் கடமையான இராணுவப் பயிற்சிக்கு செல்லும் 18 வயதிற்கு மேற்பட்ட குர்து இளைஞர்கள், பின்னர் போர் நடக்கும் இடங்களில் கொண்டு போய் விடப்பட்டனர். சில நேரம் சொந்த சகோதரர்களில் ஒருவர் துருக்கி இராணுவவீரனாகவும், மற்றொருவர் பி.கே.கே. போராளியாகவும், எதிரெதிரே நின்று சண்டையிடும் காட்சியை ஒரு கணம் கண் முன்னே கொண்டு வாருங்கள். அப்படிப்பட்ட அவலம் குர்து மக்களின் தவிர்க்கவியலாத தலைவிதி. இரக்கமற்ற போரில் அதிகமாக பலியானது, குர்து இனத்தவர்கள் தாம். "மலைகளுக்கு மட்டுமே தெரியும் எங்கள் கவலை" என்று குர்து மக்கள் மனங்குமுறுவது வெளியுலகிற்கு கேட்கப் போவதில்லை.

துருக்கி அரச படைகளின் பேரினவாத வெறி, குர்து மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு வழி திறந்து விட்டது. ஆயிரக்கணக்கான குர்து வாலிபர்கள் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல்போனார்கள். காணாமல் போன மகனை தேடும் பெற்றோர் இராணுவ முகாம் அதிகாரியை தொடர்பு கொள்வார்கள். அப்போது அந்த அதிகாரி: "உங்கள் மகன் எம்மிடம் இல்லை. ஒரு வேளை உங்கள் மகன் பி.கே.கே. யுடன் சேர்ந்திருப்பான்." என்று கூசாமல் பொய் சொல்வார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட இளைஞன், சித்திரவதை செய்யப்பட்டு, எங்காவது ஒரு புதைகுழியில் கொன்று புதைக்கப்பட்டிருப்பான். குர்திஸ்தான் முழுவதும் இது போன்று ஏராளமான புதைகுழிகளுக்குள் ஆயிரக்கணக்கான காணாமல்போன இளைஞர்களின் சடலங்கள் கிடக்கின்றன. துருக்கி பேரினவாதத்தின் இரத்த சாட்சியங்களான அவற்றை தோண்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க, இதுவரை எந்தவொரு சர்வதேச சமூகமும் முன்வரவில்லை.

துருக்கியின் இடதுசாரி மனித உரிமைகள் நிறுவனம் ஒன்று டியார்பாகிர் நகரில் காணாமல் போனவர்களின் வேதனைகளைப் பகிர்ந்து ஆவணப்படுத்தும் மகாநாடு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. அந்த மகாநாட்டிற்கு சென்ற சர்வதேச பிரதிநிதிகளில் நானும் ஒருவன். இஸ்தான்புல்லில் இருந்து நாம் சென்ற பேரூந்து வண்டி, குர்திஸ்தான் எல்லையை அடைந்தவுடன், நாம் ஒரு யுத்த பிரதேசத்திற்குள் பிரவேசிக்கிறோம் என புரிந்து கொண்டோம். வீதித்தடை காவலரணில் கடமையில் இருந்த துருக்கிய படையினர் வண்டியை சோதனையிட்டனர். பயணிகளின் அடையாள அட்டையை வாங்கிப் பார்த்து விட்டு தான் மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர். டியார்பாகிர் நகரை அடையும் வரையில் இது போன்ற வீதித் தடை சோதனைகள் தொடர்ந்தன. நாம் செல்லும் வழியெங்கும் இராணுவ வீரர்களின் பிரசன்னம் இருந்தது. தாங்கிகள், கவச வாகனங்களைக் கொண்ட படையணிகள் ஊர்ந்து கொண்டிருந்தன. தப்பித்தவறி இராணுவ தொடரணியை படமெடுக்க வேண்டாம் என்று, எம்மோடு வண்டியில் இருந்த துருக்கி நண்பர்கள் எச்சரித்தனர்.

துருக்கியின் பிற பகுதிகளில் இருந்து, குர்திஸ்தான் முற்றிலும் மாறுபாடான தோற்றத்தைக் கொண்டிருந்தது. துருக்கியின் சன நெருக்கடி மிக்க சிறு நகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள் போன்றன சில மைல் தூர இடைவெளியில் காணப்பட்டன. குர்திஸ்தானில் அதற்குப் பதிலாக எங்கு பார்த்தாலும் மலைகளை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது. மனிதர்களே வசிக்காத சூனியப் பிரதேசத்திற்குள் வந்து விட்டதைப் போல தோன்றியது. பஸ் வண்டியில் இருந்த அனைவர் முகத்திலும் இனந்தெரியாத அச்சம் காணப்பட்டது. அவர்களது அச்சம் நியாயமானதே. பயங்கரவாத அழிப்பு என்ற போர்வையில், துருக்கிய படைகள் பல குர்து கிராமங்களை நிர்மூலமாக்கி விட்டிருந்தன. வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும் கிராமங்கள் பல சுடுகாடாக காணப்படுகின்றன. அங்கே வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு என்ன நடந்தது? ஆரம்ப கட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஏராளமானோர் கொல்லப்பட்டு விட்டனர். மிகுதிப்பேர் பலவந்தமாக தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டனர். இடம்பெயர்ந்த குர்து மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் துருக்கியின் மேற்குக் கரையில் குடியேற்றப்பட்டனர்.

துருக்கி பேரினவாத அரசு, குர்து மக்களின் கட்டாய இடப்பெயர்வை இரண்டு நோக்கங்களுக்காக நெறிப்படுத்தியது. ஒன்று, மக்கள் என்ற தண்ணீரை பிரித்தெடுத்து, கெரில்லாக்கள் என்ற மீன்களை இறக்க விடுதல். இரண்டு, குர்து மக்களின் தாயகக் கோட்பாட்டை நடைமுறைச் சாத்தியமற்றதாக்குதல். முதலாவது நோக்கம் பெருமளவு நிறைவேறவில்லை. முப்பது வருடங்களாக இடையூறின்றி தொடரும் கெரில்லாப்போர் அதற்கு சாட்சி. இருப்பினும் குர்து மக்களின் தாயகக் கோட்பாட்டை சிதைப்பதில் துருக்கி ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. மேற்குக்கரை நகரங்களில் பகைமை கொண்ட துருக்கிய சமூகத்தின் மத்தியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட குர்து மக்கள், ஆயிரம் மைல் கடந்து தாயக பூமியை அடைவதென்பது இயலாத காரியம். அடிமட்ட உழைப்பாளர் வர்க்கமான இவர்களிடம், ஊருக்கு ஒரு முறை சென்று வருவதற்கு கூட பணம் இருக்காது. இந்தப் பிரிவினரில் இரண்டாவது தலைமுறை, குர்திஸ்தான் எப்படி இருக்கும் என்பது கூட தெரியாமல் வளர்ந்து வருகின்றது.

குர்திஸ்தான் எல்லைப் பகுதிகளில் துருக்கி மக்களை குடியேற்றுவதும் நடைபெற்று வருகின்றது. பி.கே.கே. தனது தாயகமான குர்திஸ்தான் என்று உரிமை கோரும் பகுதிகள் சில இன்று துருக்கிமயப்பட்டு விட்டன. "குர்திஸ்தான் தலைநகரம்" என அழைக்கப்படும் டியார்பாகிர் நகரவாசிகளில் அரைவாசிப்பேர் துருக்கியர்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் துருக்கி இராணுவத்தில் பணி புரிபவர்களும், அவர்களது குடும்பத்தினருமாகும். மற்றவர்கள் வியாபாரிகள். குர்திஸ்தான் பகுதியில் டியார்பாகிர் மட்டுமே ஒரு நகரத்திற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. அதற்கு அப்பால் அபிவிருத்தியடைந்த பகுதி ஒன்றை காண்பது அரிது. துருக்கி பேரினவாத அரசு, குர்து சிறுபான்மையினர் பிரதேசத்தை வேண்டுமென்றே புறக்கணித்து வந்துள்ளது. தற்போது, ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரத்தால் அபிவிருத்திப் பணியை மேற்கொண்டு பயங்கரவாதத்தை ஒழிக்க முயற்சிக்கின்றது.

துருக்கி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசத்தில் அமைந்திருப்பதால், வட அட்லான்டிக் இராணுவ கூட்டமைப்பில் (நேட்டோ) அங்கத்துவம் பெற்றுள்ளது. நேட்டோ உறுப்பு நாடுகளான அமெரிக்காவும், ஜெர்மனியும் துருக்கிக்கு இராணுவ உதவி வழங்கி வருகின்றன. துருக்கி இராணுவ அதிகாரிகள் பலர் ஜெர்மனியில் பயிற்சி பெற்றவர்கள். டியார்பாகிர் நகரில் நான் கலந்து கொண்ட மகாநாட்டு மண்டபத்தில், சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் இனங்காணப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரிக்கும், மகாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் வழக்கறிஞர் ஒருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரளமாக ஜெர்மன் மொழியிலேயே பேசிய அந்த பொலிஸ் அதிகாரி, "தான் ஜெர்மனியில் ஒரு வருட பயிற்சி பெற்றதாகவும், தனக்கு சட்டம் பற்றி பாடம் எடுக்க வேண்டாமென்றும், ஜெர்மன் பொலிஸ் கூட இப்படித்தான் நடந்து கொள்வார்கள்" என்றும் பதிலளித்தார். மனித உரிமைகள் பற்றி உபதேசம் செய்த ஜெர்மன் வழக்கறிஞரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று வைத்திருந்து தான் விட்டார்கள். மீண்டும் துருக்கிக்கு திரும்பி வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து ஜெர்மன் அரசு ஆட்சேபிக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். ஜெர்மன் அரசு, தனது பிரஜை என்றாலும் "பயங்கரவாத அனுதாபிகள்" விஷயத்தில் அக்கறைப்படுவதில்லை.

துருக்கியில் ஒரு பாராளுமன்றமும், அதில் ஜனநாயகத் தேர்தல்கல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் அங்கம் வகிக்கின்றனர். தடைசெய்யப்பட்ட பி.கே.கே. யின் ஆதரவைப் பெற்ற, அல்லது அவர்களாலே தோற்றுவிக்கப்பட்ட, குர்து தேசியவாத அரசியல் கட்சி ஒன்று உள்ளது. பெரும்பான்மை குர்து மக்களின் வாக்குகளைப் பெற்று, குர்திஸ்தான் பிராந்தியக் கட்சியாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றது. கவனிக்கவும், துருக்கியில் எந்தவொரு கட்சியும் குறிப்பிட்ட இனத்தின் பெயரைக் கொண்டிருக்க முடியாது. அதனால் "ஜனநாயகக்கட்சி" என்று தான் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குர்து மொழியில் சத்தியப்பிரமாணம் எடுத்ததற்காக சிறையிலடைக்கப்பட்டார். துருக்கி அரசு பி.கே.கே. மீதான இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நேரங்களில், அந்த அரசியல் கட்சியும் நீதிமன்றத்தால் (பிரிவினைவாத குற்றச் சாட்டில்) தடை செய்யப்படும். பின்னர் அந்தக் கட்சியினர் வேறொரு புதிய பெயரில் நிறுவனமயப்படுவார்கள். எந்தப் பெயரில் தோன்றினாலும், அந்தக் கட்சி பி.கே.கே. ஆதரவாளர்களினுடையது என்று துருக்கி அரசுக்கு நன்றாகவே தெரியும். இதனால் சில சமயம் குர்து கட்சி தலைவர்கள், பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாக அறிவிக்கவேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. குர்து தேசியவாதக் கட்சியில் மட்டுமல்லாது, வேறு பல இடதுசாரிக் கட்சிகளிலும் குர்து இனத்தவர் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. குர்திய மக்கள் அனைவரும் குர்து தேசியவாதிகள் இல்லை.

துருக்கியில் போரை நடத்தும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது. அங்கே இராணுவம் மாபெரும் பாசிச நிறுவனமாக வளர்ந்துள்ளது. அட்டதுர்க் ஸ்தாபித்த துருக்கி தேசியத்தை பாதுகாப்பதை லட்சியமாகக் கொண்டுள்ள இராணுவம், மாற்று அரசியல் சக்திகள் அதிகாரம் செலுத்த நினைத்தால், சதிப்புரட்சிக்கும் தயங்காது. இதனால் துருக்கியின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், அங்கே இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கும் இடமில்லை. அத்தகைய நிலையில், குர்திஸ்தான் போர்கள் யாவும் பாராளுமன்ற ஒப்புதல் இன்றி இராணுவ தலைமைப் பீடமே முன்னெடுத்து வருகின்றது. அந் நாட்டில் பேரினவாதிகளின் செல்வாக்கின் கீழ் உள்ள வலதுசாரி வெகுஜன ஊடகங்களும் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகின்றன.

துருக்கி/குர்து பிரச்சினை தற்போது புலம்பெயர் நாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஜெர்மனி, நெதர்லாந்து,சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான துருக்கியரும், கணிசமான அளவு குர்த்தியரும் வசிக்கின்றனர். துருக்கியர்கள் அனேகமாக ஒப்பந்தக் கூலிகளாக வந்து குடியேறியவர்கள். அதற்குமாறாக குர்தியர்கள் போர் தொடங்கிய பின் பெருமளவில் அகதிகளாக வந்தவர்கள். துருக்கிய சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் பேரினவாத ஆதரவாளர்கள். அதற்கு மாறாக குர்திய அகதிகள் மத்தியில் பி.கே.கேயின் செல்வாக்கு அதிகம். புலம்பெயர்ந்த நாடுகளில் பி.கே.கே. பிரமுகர்கள், கட்டாய நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக ஆங்காங்கே குற்றச் சாட்டுகள் எழுகின்றன. புகலிடத்தில் முரண்பட்ட இரண்டு சமூகங்களும் ஒன்றுடன் ஒன்று சேர்வதில்லை. சில சமூக நிகழ்வுகளில் கைகலப்பு ஏற்படுவதுண்டு.

ஒரு முறை எமது தொழிற்கல்வி நிலையத்தில் புதிதாக சேர்ந்த ஒரு மாணவன் தன்னை துருக்கி- குர்து இனத்தை சேர்ந்தவராக அறிமுகப்படுத்தினார். உடனே அங்கிருந்த துருக்கி மாணவனுக்கு கோபம் வந்து விட்டது. "துருக்கியில் குர்து இனம் என்று ஒன்று இல்லை. மலை வாழ் துருக்கியர் மட்டுமே உள்ளனர்" என்று சத்தம் போட்டார். அந்த மாணவர் மட்டுமல்ல, பெரும்பாலான துருக்கியின மக்கள் அரச பரப்புரைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். முற்றிலும் மாறுபட்ட குர்து மொழி பேசும் மக்களை, "மலை வாழ் துருக்கியர்" என்ற அரசு சொல்லிக் கொடுத்த பாலபாடம் துருக்கியர் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது. அதை விட, துருக்கி மக்கள் பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள், என்ற சுய பச்சாதாப கலாச்சாரமும் வேரூன்றியுள்ளது. குர்து மக்களின் துயரங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத அளவிற்கு, இனவாதம் மேலோங்கியுள்ளது. பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட போது, "இரத்த வெறி பிடித்த கொலைகாரனை தூக்கிலிடுமாறு" ஆயிரக்கணக்கான துருக்கி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். போரில் கொல்லப்பட்ட இராணுவவீரர்களின் படங்களை ஏந்திய தாய்மார் கண்ணீர் வடிக்கும் காட்சியை, தொலைக்காட்சிகள் மனதை உருக்கும் வண்ணம் ஒளிபரப்பின.

பி.கே.கே. தலைவர் ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், எஞ்சிய போராளிகள் வட ஈராக்கில் தளமமைத்துக் கொண்டனர். ஈராக் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத சுயாட்சிப் பிரதேசமான, குர்த்தியரின் வட ஈராக் பகுதி, பி.கே.கே. பாதுகாப்பாக பதுங்கியிருக்க ஏதுவான பின் தளமாகும். நீண்ட கால போர் நிறுத்த இடைவேளையின் பின்னர், பி.கே.கே. போராளிகளின் திடீர் தாக்குதலால், இருபதுக்கும் குறையாத இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துருக்கி மக்கள் மத்தியில் அந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் தேசிய வெறியை தூண்டிவிட்டது. கொல்லப்பட்டவர்கள் கடமையிலீடுபட்ட இராணுவத்தினரே ஆனாலும், அப்பாவி மக்கள் பலியானது போல ஆவேசப்பட்டார்கள். "துருக்கி இராணுவம் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்" என்று கோஷமிட்டவாறு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். துருக்கியின் நகரங்களில் மட்டுமல்ல, மேலைத்தேய நகரங்களிலும் "துருக்கி அரசை தற்காப்பு இராணுவ நடவடிக்கை" எடுக்கக் கோரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இவற்றை துருக்கி அரசு ஒழுங்கு செய்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

ஈராக் இறைமையுள்ள இன்னொரு நாடு என்ற விஷயம் எல்லாம் துருக்கி இராணுவத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. பி.கே.கே. மறைவிடங்கள் மீது விமானப்படை குண்டு மழை பொழிய, தரைப்படை முன்னேறியது. ஈராக் நிலப்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, பி.கே.கே. முகாம்களை அழித்தொழிக்க எண்ணியது. தனது நாட்டின் இறைமை குறித்து கவலைப்பட்ட ஈராக் அரசு, அமெரிக்க நண்பனிடம் முறையிட்டது. அமெரிக்க அரசு துருக்கி மீது எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்காது, இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியது. ஏனெனில் அமெரிக்க அரசு ஏற்கனவே பி.கே.கே. யை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்திருந்தது. அவர்களைப் பொறுத்தவரை இதுவும் பயங்கரவாதத்திற்கு எதிரான பதிலிப் போர் தான்.