செவ்வாய், 26 செப்டம்பர், 2017

குர்திஸ்தான் : தனி நாட்டுக்காக விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கையை அடுத்து இன்று ஈராக்கின் எதிர்ப்பையும் மீறி பொது வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.

பாக்தாத்:

ஈராக்கின் வடபகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குர்திஸ்தான் என்றழைக்கப்படும் இந்தப் பகுதி ஈராக் ஆட்சியின் கீழ் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுகிறது. ஈராக்கின் எண்ணெய் வளம் மிக்க குர்துகள் வசிக்கும் இந்த பகுதியை தனிநாடாக அறிவிக்க அம்மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இக்குழுக்கள்ளில் பிகேகே எனப்படும் குர்துக்கள் தொழிலாளர் கட்சியினர் ஆயுதமேந்திய போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால், குர்து இன மக்களின் இந்த கோரிக்கையை ஈராக் ஏற்க மறுத்து விட்டது. ஈராக் துண்டாக பிரிவதை அனுமதிக்க மாட்டேன் என ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி தெரிவித்திருந்தார்.

தனி நாடு கோரி பொதுவாக்கெடுப்பு நடத்த குர்து மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக இஸ்ரேல் கூறியது. இதற்கான தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தனி நாடு கோரிக்கைக்கான ஆதரவு பெருகி வருகிறது.

பரபரப்பான சூழ்நிலையில் இன்று பொதுவாக்கெடுப்பு நடைபெற உள்ளது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈராக் குர்துக்களின் முடிவுக்கு துருக்கியில் வசித்துவரும் சிறுபான்மை குர்துக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டில் வசிக்கும் குர்துக்கள் குர்திஸ்தான் தனிநாடு கேட்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்திவருகின்றனர். 

ஈராக் குர்துக்களின் தனிநாடு கோரிக்கை நிறைவேறினால் அது சிரியா மற்றும் துருக்கி நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என துருக்கி அச்சம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து ஈராக் பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி கூறியபோது, குர்து இன மக்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தீயோடு விளையாடுகிறார்கள். ஏதாவது பிரச்சினை எழுந்தால் ராணுவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக் துணை அதிபர் நவுரி அல்-மாலிக் கூறியபோது, குர்து இன மக்களின் தனி நாடு கோரிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. இரண்டாவதாக இஸ்ரேல் நாடு உருவாவதை நாங்கள் அனுமதிக்கவில்லை. பொது வாக்கெடுப்பு திட்டத்தை குர்து இன தலைவர்கள் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

மரண சாசனம்...!

மரணம் என்றெனும் தெரியா நிலையே
     மனிதரின் நிலையா வாழ்வினை உரைக்கும்;
மரணம் என்னும் மாறா இறுதியை
     மனதொடு உணர்ந்தால் மானுடம் சிறக்கும்;
தெரியும் தேடலில் கருணையும் நிறையும்;
     தெளிந்த உளத்திடை தெய்வமும் உறையும்;
புரிதலின் விளைவால் வெறுப்புகள் ஒழியும்;
     புத்தியில் பேதங்கள் தயக்கங்கள் அழியும்;
1

பற்றுகள் மறையும்; பக்குவம் விளையும்;
     பதவிச் சுகத்தின் பாசம் அழியும்;
சுற்றம் சொந்தம் பந்தம் விலகும்;
     சோகம் மோகம் யாவும் அகலும்;
அற்ற குளத்து ஆம்பலைப் போலும்
     அன்புடை வாழ்வே நெஞ்சிடை நிலவும்;
உற்ற தெய்வத்து உள்ளொளி நாடி
     உடலும் உளமும் நலத்தொடு உலவும்;
2

பக்தியும் மலரும்; பண்புகள் புலரும்;
     பருவ நாடக மயக்கம் தெளியும்;
சக்தியும் தெரியும்; சகலமும் புரியும்;
     சாந்த நிலைதனில் சலனமும் விலகும்;
அச்சம் மரணம் துச்சம் ஆகும்;
     அழுகை, துயரம் யாவும் தொலையும்;
முக்தி என்னும் முதன்மை இலக்கில்
     முனையும் வாழ்வில் மேன்மையே நல்கும்;
3

பிறந்ததும் அழுதோம்; பேதை நெஞ்சில்;
     இறப்போம் என்பதை எண்ணி நினைந்தா?
பிறப்பின் நோக்கம் இறப்போ என்று
     பிள்ளை மனத்தால் அறிந்தா? உணர்ந்தா?
பிறப்பின் முடிவே இறப்பே என்றால்
     பெற்றயிவ் வாழ்வும் எதற்கே என்றா?
இறப்பினை நோக்கி வளர்வதா என்றா?
     இருப்பின் கணங்கள் குறையுதே என்றா?
4

பிறந்ததும் அழுதால் பெற்றவர் இன்பம்;
     இறந்ததும் அழுதால் இருப்பவர் துன்பம்;
பிறந்ததும் அழுதோம்; பசிக்கா? ருசிக்கா?
     இருந்தும் அழுதோம்; குறையா? பிழையா?
இறந்ததும் அழுதோம் இழப்பா? பிழைப்பா?
     இரக்கம் கருணை எதற்கும் அழுதோம்.;
துறந்ததும் அழுதோம்; தொலைந்ததில் அழுதோம்;
     துரோகம் ரோகம் அனைத்திலும் அழுதோம்;
5

வரவுகள் இழந்து வருந்தும் துயரில்
     வாழ்வில் நழுவும் வளமையில்; வலியில்
உறவுகள் மறைவில் உணர்ச்சிப் பிரிவில்
     உயர்வில் தாழ்வில் ஊமை நட்பில்
குறைகள் அறிந்து குமையும் பொழுதில்
     குன்றிய பெருமையில்; குறையும் அருமையில்
மறைவில் மனதுள் மயங்கியே அழுதோம்;
     மனித வாழ்வில் வேறென்ன கண்டோம்?
6

கண்டவை எல்லாம் மறையும் இன்பம்;
     கருத்திடைக் கனன்ற மாயப் பிம்பம்;
உண்டவை உடுத்தவை உடலொடு முயன்றவை
     வென்றவை சென்றவை விரிந்தவை புரிந்தவை
மண்டல மண்ணிடை மலர்ந்தவை நிகழ்ந்தவை
     மானில மேதினில் வளர்த்தவை சிலிர்த்தவை
அண்டிக் களித்தவை அனைத்தும் அகத்தே
     ஐயம் திரிபிலாச் சிற்றின்பச் சருக்கம்!
7

சலனச் சிறையில் சருக்கும் நினைவில்
     சருகாய் அருகும் அகவை முதிர்வில்
நலத்து நலிவில் நடையின் தளர்வில்
      நல்லவை அல்லவை அறியும் நிலையில்
உலகியல் நடப்பினை ஒதுக்கும் பொழுதில்
     உளத்தே இறப்பை உணரும் நொடியில்
மலங்களைத் துறந்து மயங்கும் தருணம்
     மரணம் வருகையில் வருந்துதல் முறையோ?
8

மறையும் போழ்தும் அழியாத் துடிப்பா?
     மரணப் பிடியிலும் மறையாப் பிடிப்பா?
இறைவன் அழைப்பை மறுக்கும் நடிப்பா?
     இருப்பைப் பெருக்க மறுகும் படிப்பா?
பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும்;
     பிழையாச் சுழற்சியில் எதுதான் நிலைக்கும்?
அறிந்தன அனைத்தும் அழிதலே உண்மை;
     அழுதால் மட்டும் வாழ்வா பிழைக்கும்?
9

ஆடிய ஆட்டம் போதும் என்றே
     ஆண்டவன் அழைக்கும் வேளை அன்றோ?
தேடலில் உயிரும் தேர்ந்த நிலையில்
     திரும்பா இறுதிப் பயணம் அன்றோ?
படைத்தோன் வகுத்த விதிப்படி முடியும்
     பயிலா நாடக இறுதித் தருணம்;
கடவுளின் மடியில் மீளாத் துயிலாம்;
     கரும்பாய் இனிக்கும் மரணம் அஃதே;
10

உடலும் உயிரும் உறவறு நேரம்
     உதறாப் பற்றால் பயன் என்ன?
விடுதலை உற்று ஏகும் போதும்
     வேதனை கொள்வதில் நலம் என்ன?
நடப்பவை யாவும் நலமென நினைந்தால்
     நாளும் மனதிடைச் சுகம் தானே!
கடப்பவை எல்லாம் கடமையே என்றால்
     கருத்திலும் வருத்தம் இலை தானே!
11

உடலை உயிரும் களையும் நொடியில்
     உணர்வு மறைதல் என்ன நிபந்தனையா?
உலகை விட்டுப் பிரிவது என்பது
     உயிருக்கு வருகிற உயர் தண்டனையா?
மறையும் இறுதித் துளியினில் கூட
     இறையைத் தொழுதால் பலன் தானே;
பிறப்பும் இறப்பும் இல்லா முக்தி
     பெறுவோம் என்றால் சுகம் தானே?
12

ஒருமுறை தானே வருகிற மரணம்
     உளத்தால் நொந்து மடிவதும் ஏன்?
ஒவ்வொரு நாளும் மரண பயத்தால்
     உள்ளே வருந்தித் துடிப்பதும் ஏன்?
இறக்கும் நொடியும் இன்பம் என்றே
     இருந்து விட்டாலே குறை என்ன?
இரணமே இல்லா மரணம் அல்லால்
     இறுதியில் பேரின்பம் வேறு என்ன?
13

தரணியில் இயற்கை மரணம் என்பது
     தானாய் வருகிற இறுதி ஒன்றே;
தருமம் கருமம் என்பது எல்லாம்
     தவமாய் வாழ்ந்து முடிந்த பின்னே;
மறுமைச் சுழற்சி வெல்லும் முக்தி
     மண்ணில் முழுதும் வாழ்ந்த பின்னே;
மரணம் என்பதும் இன்பம் தானே
     மனதுள் தெரியும் உறுதி முன்னே!!!
14

கூட்டினைக் குருவி துறந்திடுங் காலை
     கூறிடும் வாய்பை இழப்ப தினாலே
நாட்டிடை கிடந்து நாறா மெய்யை
     பாடையில் இட்டுப் பயணம் சுமக்கும்
கூட்டினும் பெருக்கினும் வருகிற நாலை
     கூடிக் களித்த கூட்டம் முதலாய்
காட்டிடை எரிக்கும் மானுடம் வரைக்கும்
     கழல்வோம் இன்றே கடைசி நன்றி!!!
15

திங்கள், 18 செப்டம்பர், 2017

ஏலியன்ஸ் இருக்கா? இல்லையா? என்ன சொல்கிறது நாசா

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏலியன்ஸ் குறித்த தகவலை நாசா கெப்ளர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது.


அதில் 10 புதிய கோள்கள் உயிர் வாழத் தகுதியுடையதாக உள்ளது என தெரிவித்தது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் கடந்த நான்கு வருடங்களாக நடத்திய ஆராய்ச்சியில் இதுவரை ஏராளமான கோள்கள் கண்டறியப்பட்ட்டுள்ளது. அதில் 2335 கிரகங்கள் வெளிக்கோள்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. பூமியை போன்று உயிர் வாழ தகுதியுடைய 30 கோள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரபஞ்சத்தில் நாம் வாழும் பூமியில் மட்டும் தான் உயிரினம் உள்ளதா? இல்லை நம்மை போன்று வேறு கிரகத்தில் உயிரினம் இருக்குறாதா? என்பதுதான் கேள்வி. இந்த கேள்விக்கு அன்று முதல் இன்று வரை முடிவுரை எழுதப்படாமல் தொடர்ந்து வருகிறது. இதுகுறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

ஏலியன்ஸ் குறித்து நாசா தற்போதைய சூழலில் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் உயிர்கள் வாழ்வதற்கான தகுதியுடைய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளதால், வேற்று கிரகவாசிகள் இருக்கலாம் என்ற கூற்று மிகவும் வலுவடைந்து வருகிறது.       

நோய்க்கு மருந்தா மருந்துக்கு நோயா?


புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது. அதுபோலவே, புதுப்புது நோய்கள் பூவுலகிற்கு அடிக்கடி அறிமுகமாகின்றன. ஆனால், மருத்துவத் துறையின் விழுமியங்களோ மரணக் கட்டிலில் கிடக்கின்றன. மருந்து நிறுவனங்களும், மருத்துவர்களும் அமைக்கின்ற கூட்டணி, நோயாளிக்குக் குணத்தை கொடுக்கும் போர்வையில், பணத்தைப் பறிக்கும் கொடுமையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.மகத்துவ மிக்க மருத்துவத் துறையில் மனிதநேயத்தையும், சேவையுணர்வையும் தனது முகவரியாய்க் கொண்ட முன்மாதிரி மருத்துவர்கள் பலரும் உண்டு. ஆனால், விழுமியங்களைத் தொலைத்தவர்களின் விளைச்சல் மிக வேகமாக அதிகரித்து வருவதையும் மறுக்க முடியாது.

கல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டால் மிகப் பெரிய பண்பாட்டு வீழ்ச்சி ஏற்படும். மிருக உணர்வுகளும் வளர்ந்து விடும். எனவேதான், அறஞ் சார்ந்த அரசுகள் கல்வியையும், மருத்துவத்தையும் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றிருந்தன.இன்று அரசாங்க மருத்துவமனை, ஏதுமற்ற ஏழைகள் மட்டும் உயிருக்குத் துணிந்து போகும் இடமாக்கப்பட்டுள்ளது (சில விதிவிலக்குகள் உண்டு).ஆனால், தனியார் மருத்துவமனைகளோ, வீதிகள் தோறும் புற்றீசல்போலப் பெருகியுள்ளன.ஊடகங்களில், பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நுகர்வுப் பொருள்களின் விளம்பரங்களோடு, மருத்துவமனை விளம்பரங்களும் போட்டி போடுகின்றன. மருத்துவமனைகள் ஆடித் தள்ளுபடி அறிவிக்காததுதான் பாக்கி.ஒரு நோயாளியிடம் பிரபல மருத்துவர், குறிப்பிட்ட இடத்தில் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறுகிறார். அந்த நோயாளி, கட்டணம் குறைவான இடத்தில் ஸ்கேன் எடுத்துக் கொண்டு, அதை மருத்துவரிடம் காட்டுகிறார்.மருத்துவர் முகத்தில் எரிமலை வெடிக்கிறது. "நான் சொன்ன இடத்தை விட்டுவிட்டு எங்கோ போய் எடுத்துள்ளீர்கள். இது உயிர் விஷயம், இதிலா கணக்குப் பார்ப்பது? பாருங்கள் தெளிவாக இல்லை. நான் சொன்ன இடத்தில் போய் எடுத்து வாருங்கள்’ என்று விரட்டுகிறார்.நோயாளியோ, தான் ஸ்கேன் எடுத்த இடத்திற்குக் கோபமாகச் சென்றபோது, அவர் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த அங்கிருந்த பொறுப்பாளி, "டாக்டர் ஸ்கேன் தெளிவாக இல்லை எனத் திட்டியிருப்பாரே’ என்று கேட்க, ஆச்சர்யமான அந்த நோயாளி "ஆமாம்’ என்கிறார்."அதே ஸ்கேனை இதோ இந்த கவரில் போட்டுத் தருகிறேன். எடுத்துப் போங்கள்’ என்று கூறி மருத்துவர் பரிந்துரைத்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட உறையில் அதை இட்டுத் தருகிறார்.மீண்டும் மருத்துவரிடம் போன நோயாளியிடம் மருத்துவர் சொல்கிறார்:"பார்த்தீர்களா. இது எவ்வளவு தெளிவா இருக்குன்னு. முன்னாடியே இங்கே போயிருந்தா உங்களுக்கு வீண் செலவு ஏற்பட்டிருக்காதல்லவா?’எல்லா மருத்துவர்களுமே இப்படியா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், கணிசமான தொகையினர், இப்படித்தான் இயங்குகிறார்கள் என்பது உண்மை.


மருந்து நிறுவனங்கள், மருத்துவர்கள் நடத்தும் மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை, மேசை, நாற்காலி, படுக்கை உள்பட வாங்கித் தருகின்றன.கருத்தரங்குகளுக்கோ, பணியை முன்னிட்டோ, அல்லது இன்பச் சுற்றுலாவாகவோ, மருத்துவர் வெளியூர்கள் அல்லது வெளிநாடுகள் செல்லும்போது, விமானப் பயணம், நட்சத்திர விடுதிகளில் தங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை மருந்து நிறுவனங்கள் மனமுவந்து செய்து தருகின்றன.நூற்றுக்கு நூறு தொடங்கி நூற்றுக்கு ஐநூறு தாண்டி, சலுகை மருந்துகளைத் தருகின்றன. மருத்துவர் தனது மருத்துவமனையிலேயே மருந்தகமும் வைத்திருந்தால் நோயாளிகள் சுரண்டப்படும் விதம் சொல்லி மாளாது.மருந்து நிறுவனங்கள் சில மாத(ா)ந்திர கையூட்டுகளை மருத்துவர்களுக்கு அளிக்கின்றன. இப்படி ஏராளமான சலுகைகளும், லஞ்சங்களும், தாராளமாகத் தரப்படுகின்றன. இதற்கு மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு அந்நிறுவனத்தின் மருந்துகளை, அதிகமாக எழுதி, நோயாளிகளை வாங்கச் செய்ய வேண்டும்.சில மருத்துவர்கள் சிறிய நோய்க்கும் பெரிய பட்டியலே எழுதுவார்கள். காரணம், அவர் பல நிறுவனங்களுக்கும் கடமைப்பட்டவர். அதிக மருந்துகள் உட்கொள்வதால், குடலில் அமிலப் பாதிப்பு வருமல்லவா அதற்கும் சேர்த்து ஒரு மருந்தை எழுதி விடுவார்.மருத்துவர் தந்த அதீத மருந்துகளின் பக்க விளைவு மெதுவாகத் தெரியும்.


ஒரே வகையான மருந்துகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கேற்ப, பெரும் விலை வேறுபாட்டுடன் சந்தையில் உள்ளன.நான்காம் தலைமுறை எதிர் உயிரி மருந்துகளில் 4th Generation Anti-biotic) Cefxime என்ற மருந்தை ஒரு நிறுவனம் 11 ரூபாய்க்கும் (Cipla-omnix) இன்னொரு நிறுவனம் 6 ரூபாய்க்கும் (Mankind-Mancet) விற்பனை செய்கிறது.மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் சில வகையான மருந்துகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. "ஜெனரிக் மெடிசன்ஸ்’ (மூலப்பொருள் பெயரிலான மருந்துகள்) அதிகம் பிரபலமாகாத நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை. ஆனால், முறையான அனுமதியே பெறாமல் இந்தியா முழுவதும் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதாக ஒரு மருத்துவர் நம்மிடம் தெரிவித்ததோடு, மேலும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளையும் கூறினார்.உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள Analgin, Cisapride, Properido, Furazolidone, Nimesulid, Nitrofurazone, Phenol Phthalein உள்ளிட்ட பல மருந்துகள் நாட்டில் தங்கு தடையின்றி சந்தையில் விற்கப்படுவதைக் கவலையோடு பகிர்ந்து கொண்டார்.இந்த மருந்துகள் பிற நாடுகளில் தடை செய்யப்படுவதற்கு எலும்புகளை பலவீனப்படுத்துதல், மன அழுத்தம் ஏற்படுத்தல், நாடித் துடிப்பை சீர்குலைத்தல், புற்றுநோய் உருவாக்குதல், கல்லீரலைப் பாதித்தல் உள்ளிட்ட மிக மோசமான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. உலகில் அதிக மனித வளம் கொண்ட நம் தாய்த்திருநாட்டுக்கு குடிமக்களின் உடல்நலம் குறித்த அரசின் அக்கறையை மேற்கண்ட மருந்துகளின் அமோக விற்பனை காட்டுகின்றது.காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் தகவல்கள் நம்மைப் பதற வைக்கின்றன. காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.

மருந்துக் கடைகளில், காலாவதியாகித் தேங்கிவிட்ட மருந்துகளை ஒரு கொடுங் கும்பல் சேகரித்துச் சென்று காலாவதி தேதியை மாற்றி, புது லேபிள் ஒட்டி, மறுசுழற்சி செய்கின்றனவாம். மருந்தை வாங்கியதும், காலாவதி தேதியை முதலில் பார்ப்போம். தேதியே போலியான தென்றால்?நோயாளி நுகர்வோர் என்னதான் செய்வது? எந்த மருந்து வாங்கினாலும், அதற்கு பில் வாங்க வேண்டும். மருந்து குறித்து சந்தேகம் இருந்தால், மருந்தின் மேற்புறம் அச்சிடப்பட்டுள்ள Batch எண்ணை, மருந்து நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பதிவு செய்தால், உண்மையான காலாவதி தேதி
தெரிந்துவிடும். ஒருசமயம், Batch எண்ணே போலியாக இருந்தால், எந்தத் தகவலும் வராது. அந்த விவரங்களை நகல் எடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.எல்லா நோயாளிகளுக்கும் இயல்கிற செயலா இது?நோயாளிகள் பெற வேண்டிய விழிப்புணர்வு குறித்து சமூக அக்கறையுள்ள ஒரு மருத்துவர் கூறியதாவது:மருத்துவர்கள் எழுதும் மருந்துகள், அவற்றின் பயன்கள் குறித்து மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும்.மருத்துவர் தரும் மருந்துச் சீட்டில் (Prescribtion) நோயின் தன்மை (அ) பெயர் எழுதப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். இவ்வாறு நோய் குறித்த விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயம்.வெளியூரில் அந்த மருந்து கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர் குறிப்பிடும் பெயர்களிலேயே மருந்து தயாரித்துத் தருகின்றனவாம். அவர் மருந்து சீட்டில் உள்ள கடை தவிர பிற கடைகளில் அந்த மருந்து கிடைக்காது. மருத்துவர்களின் சேவை மகத்தானது. அர்ப்பணிப்புணர்வும், தொழில் அறமும், சேவை உள்ளமும் கொண்ட ஏராளமான மருத்துவர்கள், மக்களின் மனங்களை ஆள்கிறார்கள் என்பது உண்மை.குணமாக்கும் மருத்துவத்தைப் பணமாக்க மட்டுமே பயன்படுத்துவது, பஞ்சமா பாதகத்தினும் கொடிய பாதகம்.

மருந்து நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை அரசே நிர்ணயித்தது போல, மருந்துகளுக்கும் அதற்குரிய நியாயமான விலையை அரசே மக்கள் நலச் சிந்தை கொண்ட நிபுணர் குழுவை நியமித்துத் தீர்மானிக்க வேண்டும்.நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம்; மருந்துகளுக்கே நோய் என்றால்.

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

கௌரி லங்கேஷ் - உடைந்த 'பேனா முனை'

வாள்முனையைவிட பேனாமுனை வலிமை கொண்டது என்னும் வரி பலசந்தர்ப்பங்களில் சொல்லப்படுகிறது. உண்மை, ஆனால் அது கல்வியறிவும் அரசியல்பிரக்ஞையும் கொண்ட சமூகங்களில். உலகமெங்கும் நிகழ்வதென்னவென்றால் ஒருங்கிணைந்த மதப்பழைமைவாத அமைப்புக்களால் மிக எளிதாக ஓரிரு கொலைகள், வன்முறைகள் வழியாக மாற்றுத்தரப்புகளை மையத்திலிருந்து விலக்கி அமைதியாக்கிவிடமுடியும் என்பதே.

அதிதீவிர ஒற்றைநிலைபாடு. அதற்கு தர்க்கஒருமையும் வரலாற்றுணர்வும் கொண்ட பார்வை ஏதுமில்லை. உணர்ச்சிகரமான பற்று மட்டுமே இருக்கும். அத்தகைய இதழாளர்கள் பலர் இன்றுள்ளனர். அவர்களின் நிலைபாடுகள் மிகமிக எளிமைப்படுத்தப்பட்டவை, ஆகவே தெருச்சண்டை அரசியல்கொண்டவை. அதேசமயம் அவர்கள் இன்றைய இந்தியாவின் மனசாட்சியின் குரல்களாக, பன்மைத்துவத்தின் சமரசமற்ற போராளிகளாக, நவீன உலகு தேங்கியழுகிய பழைமைவாதத்திற்கு அளிக்கும் எதிர்வினைகளாக இருக்கிறார்கள். கௌரி லங்கேஷ் அத்தகையவர்

மாற்றுக்கருத்துக்கள் என்றுமிருக்கும் என்பது உண்மை, ஆனால் அது வலுவான தரப்பாக ஒலிக்காது. அந்தச் சமநிலையின்மையே வன்முறையாளரின் குரல் ஓங்கி ஒலிக்கச்செய்துவிடும். சாமானியர் ஆற்றலை வழிபடுபவர்கள் என்பதனால் ஓங்கி ஒலிக்கும் குரலை நோக்கியே ஈர்க்கப்படுவார்கள். காலப்போக்கில் அந்த பழைமைவாதமும் அடிப்படைவாதமும்  கருத்தியல்சூழலை, அரசியலதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்ளநேரும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் நிகழ்ந்த அதே அரசியல்பரிணாமம் இங்கும் இந்து அடிப்படைவாதத்தால் தொடங்கப்பட்டுள்ளது என்பதையே இக்கொலைகள் காட்டுகின்றன.

கௌரி லங்கேஷின் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும், முன்னுதாரணமாகத் தண்டிக்கப்படவேண்டும். அதையொட்டி மக்களின் எதிர்ப்பு திரளவும் அடிப்படைவாதிகள் அதன்பொருட்டு மன்னிப்புகோரும்ம்கட்டாயம் உருவாகவும் வேண்டும். அதுவே இன்று தேவையானது, எதிர்காலத்திற்காக...!