வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

இந்த நாட்டின் வரலாறு, கங்கைச் சமவெளியில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது..ஆனால் உண்மையில், இந்த நாட்டின் வரலாறு காவிரிக் கரையில் இருந்துதான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார் பேரறிஞர் அண்ணா. இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் ஆய்வை, நீண்ட நெடுங்காலமாகக் கங்கைச் சமவெளியில் இருந்து தொடங்கும் வழக்கத்தைக் கைவிட்டு, கிருஷ்ணா, காவிரி, வைகைச் சமவெளிகளில் இருந்து ஆய்வுகளைத் தொடங்க வேண்டும் என்றார் வரலாற்றாசிரியர் வின்சென்ட் ஏ.ஸ்மித்...சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்றும், மனித நாகரிகம் இந்தியாவின் தென்கோடியில் இருந்து வட இந்தியா முழுவதும் பரவியது என்றும் கூறுகிறார் தொல்லியல் அறிஞர் ஆர்.டி.பானர்ஜி. இவை அத்தனையும் உண்மை..உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என அடித்துச் சொல்கிறது கீழடி.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட பகுதி. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகம் பூதமாக வெளிவந்து, ஆரிய-பார்ப்பன திரிபுகளுக்கு ஆப்பறைந்தது

மதுரையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தென்னந்தோப்புகள் சூழ்ந்த கிராமம்தான் கீழடி. அந்தத் தென்னந்தோப்புகளுக்கு நடுவில், சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் புதைந்து கிடக்கிறது தமிழினத்தின் தொன்மையை அழுத்தமாகச் சொல்லும் வரலாற்றுக் கருவூலம். அதில் ஒரு சிறிது மட்டுமே தற்போது அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு ஏக்கர் நிலப்பகுதியைத் தோண்டியதிலேயே.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்கள் அள்ளி எடுக்கப்பட்டுள்ளன. அவை அத்தனையும், கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்றைக் காட்டும் சான்றுகளாக இருக்கின்றன.சங்க இலக்கியங்களில் நாம் படித்துச் சுவைத்த, மனக்கண்ணில் ஓடவிட்டுப் பெருமிதப்பட்ட காட்சிகளை எல்லாம் கீழடி நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

பட்டினப்பாலை சொன்ன ‘உறைகிணற்றுப் புறச்சேரி’ என்ற வரிக்கு. கீழடியில் தோண்டிஎடுக்கப்பட்ட உறை கிணறு உயிர் கொடுத்திருக்கிறது. இப்பூமிப்பந்தின் பல பகுதிகளிலும், மக்கள் இலைதழைகளையும், விலங்குகளின் தோல்களையும் உடலுக்குச் சுற்றித் திரிந்தபோது, இங்கே தமிழர்கள், நெசவுத் தொழிலை அறிந்தவர்களாக, நெய்த ஆடைகளுக்கு வண்ணம் ஏற்றத் தெரிந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? கீழடியில் கிடைத்துள்ள ‘தக்ளி’ என்னும் கருவியும், இன்ன பிற பொருள்களும், கட்டிடங்களின் அமைப்புகளும், நம்பித்தான் தீர வேண்டும் என்கின்றன.

சுட்ட செங்கற்களால் ஆன கட்டிடங்கள், தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டைகள், கருப்பு சிவப்பு என இரு வண்ணங்களால் ஆன மண்பாண்டங்கள், சூது பவளங்கள் என ஆயிரக்கணக்கில் கீழடி அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இதற்கு முன்பும் இவை போன்ற பல புதைபொருள்கள், ஆதிச்சநல்லூர், கொடுமணல், அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்துள்ளன. என்றாலும் கீழடிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. முதன் முதலாகத் தமிழர்களின் சங்ககால நகரம் ஒன்று இங்குதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்தது, இனக்குழு நாகரிகம்தான் என்ற கருத்துத் திணிக்கப்பட்டு வரும் நிலையில், இல்லை, இல்லை. தமிழினம் தனித்துவம் மிக்கதொரு தேசிய இனம் என்பதை, வரலாற்றுப் புரட்டர்களின் செவிப்பறையில் அறைந்து சொல்கிறது கீழடி. அதனால்தான் அகண்ட பாரதக் கனவில் இருக்கும், பா.ஜ.க. அரசு கீழடியைக்கண்டு அஞ்சுகிறது. ஆய்வைத் தொடரத் தயங்குகிறது.

இந்தியா வேதங்களின் நாடு என்றும், வேதக் கலாச்சாரமே இந்தியாவின் கலாச்சாரம் என்றும் கட்டியமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,கூட்டத்தின் அடிமடியிலேயே கை வைப்பதாக இருக்கிறது கீழடி அகழ்வாய்வு சொல்லும் மற்றொரு செய்தி. இதுவரை கீழடியில் கிடைத்துள்ள பொருள்களை ஆய்வு செய்து பார்த்த வகையில், மதம் தொடர்பான சிறு அடையாளம் கூட காணப்படவில்லை. தமிழர்களின் வரலாறு. முன்னோர் வழிபாட்டையும், நடுகல் வழிபாட்டையும் மரபாகக் கொண்டதே தவிர, பெருந்தெய்வ வழிபாடு அதற்குத் தொடர்பில்லாதது என்பதைக் காட்டும் கீழடி, மத அரசியலையும், மாட்டு அரசியலையும் மட்டுமே நம்பியிருக்கும் கூட்டத்திற்குப் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இதேபோல் இன்னொன்றையும் கீழடி உணர்த்தி நிற்கிறது.

மதச் சார்பற்ற, சமயச் சார்பற்ற ஒரு தேசிய இனத்தின் மொழி மட்டும் சார்புடையதாகவா இருக்கும்? தமிழ் ஒரு சமயச் சார்பற்ற மொழி என மொழியியல் அறிஞர் கால்டுவெல் எடுத்துரைத்ததை மெய்ப்பிக்கின்றன கீழடி ஆய்வுகள். செத்த மொழியான சமஸ்கிருதமே தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளின் தோற்றுவாய் என சற்றும் கூசாமல் சொல்லி, மொழி வரலாற்றையும் திரித்துக் கூறுவோரின் உச்சத்தலையில் குட்டி, தேவபாஷையான சமஸ்கிருதத்திற்கும், சமயச் சார்பற்ற தமிழினத்தின் தாய்மொழிக்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறது கீழடி.

2015, 2016ஆம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற கீழடி ஆய்வை, இடைக்கால அறிக்கை தயாரிக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு உதவாத காரணத்தைச் சொல்லி, பாதியிலேயே நிறுத்தியது பா.ஜ.க., அரசு. தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு, அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்கள் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தொல்லியில் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.கீழடியிலேயே அவற்றைப் பாதுகாத்து ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, வரலாற்று அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால் என்ன கொடுமை தெரியுமா? தமிழினத்தின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடியைத் தமிழகத்தை ஆளும் அதிமுக அமைச்சர்களோ, மாவட்ட ஆட்சித் தலைவரோ வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

குஜராத்திலும் பத்து ஆண்டுகளாகத் தொல் பொருள் ஆய்வு நடந்து வருகிறது.அங்கு புதிய சான்றுகள் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. இருந்தும் அங்கு ஆய்வுகளைத் தொடர இந்த ஆண்டும் நிதி ஒதுக்கியதோடு, பா.ஜ.க.,வின் பாரதப் பிரதமர் மோடி நேரில் சென்று அதைத் தொடங்கியும் வைத்துள்ளார். அதேநேரம் புது வரலாறு படைக்கத்தக்க சான்றுகளை அள்ளித் தருகின்ற கீழடி புறக்கணிக்கப்படுவதை ஏன் என்று கேட்க வக்கற்ற அரசாக, அதிமுக அரசு இருப்பதால், தமிழர்களின் வரலாற்றுக் கருவூலத்தை மண்ணைப் போட்டு மூடத் துணிந்திருக்கிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசு.

பிள்ளையாருக்கு யானைத் தலைமை ஒட்ட வைத்ததுதான் உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை என அறிவியல் அறிஞர்கள் குழுமியிருந்த அவையில், சற்றும் கூச்சமின்றி சொன்னவர்தான், பாரதப்பிரதமர் மோடி. என்ன செய்வது அவர்களின் வரலாற்று எல்லை அவ்வளவுதான். புராணங்களோடு நின்று போனவை. ஆனால் தமிழர்கள்.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அறிவியலோடு இயைந்த நாகரிக வாழ்க்கையைக் கொண்டவர்கள்.

வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால் அதற்கு முன் தெற்கு வாழ்ந்திருக்கிறது.மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறது. என்பதை உலகிற்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லும் தொல்பொருள் ஆய்விடம் கீழடி. ‘தங்கள் இனத்தின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கும் தமிழக மக்களுக்கு, கீழடி ஆய்வை மத்திய அரசு பாதியில் நிறுத்தியது ஏமாற்றத்தையும், வேதனையையும் தருவதாக உள்ளது என ஒட்டுமொத்த தமிழகத்தின் உள்ளக்கிடக்கையை, மத்தியக் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மாவுக்குக் கடிதத்தின் வழி வெளிப்படுத்தினார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். இப்போது கீழடியில் ஆய்வைத் தொடர்வதற்கான நிதியை ஒதுக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அறிவிப்பு வந்திருக்கிறதே ஒழிய இன்னும் ஆய்வுகள் தொடங்கப்படவில்லை..இதுவரை ஆய்வினை முன்னின்று நடத்திய அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமித்து, தன் ‘ராஜதந்திரத்தைக் காட்டியிருக்கிறது பா.ஜ.க. அரசு.

சிந்துவெளியில் கிடைத்த, காளைமாட்டின் குறியீட்டையே குதிரையாக்கி, சிந்து வெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்று சொல்லி, இல்லாத சரஸ்வதி ஆற்றைத் தேட 100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள ஆரிய மாயையின் ஆட்டம், கீழடியில் நடக்காது. நடக்கவும் விட மாட்டோம் என்பதில், தமிழக வரலாற்று அறிஞர்கள் உறுதியுடன் உள்ளனர். மீண்டும் கீழடியில் அகழ்வாய்வுகள் உடனடியாகத் தொடங்கப்பட, மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் தர தொடர் முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மரங்களின் பாட்டு

ஐரோப்பாவில் இருக்கும் எஸ்டோனியன் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கல்லூரி ஒரு புதுமையான கருவியை உருவாக்கி இருக்கிறது.


மரங்களின் மெகாபோன் என்று இதை  அழைக்கிறார்கள். அதாவது மரங்களின் தனித்துவமான மொழியை கேட்கவும், அவை இயற்கையோடு பேசுவதை உணரவும், செடி-கொடிகளின் பாஷையை கேட்பதற்காகவும் இந்த பிரமாண்ட இசை சேகரிப்பு கருவியை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் என்ன சிறப்பு தெரியுமா..? இந்த மெகாபோனிற்குள் அமர்ந்தால் மட்டுமே செடி-கொடி, மரங்களின் சங்கீதத்தை கேட்கமுடியுமாம். 

பூமியின் புதிய யுகத்தில் நாம்!


பூமியின் கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியல் நிபுணர்கள்.
Welcome to the 'Meghalayan Age', A New Phase in Earth's History
அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நாகரிகங்கள் அழிந்துபோன இந்தக் காலகட்டத்துக்கு ‘மேகாலயன் யுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஒரு குகையில் வளரும் புற்றுப்பாறைகளின் அடிப்படையில் இந்த யுகத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

காலவரிசை அடிப்படையிலான சர்வதேச பாறைப்படிவியல் விளக்கப்படமும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. பூமியின் புவியியல் வரலாற்றை காலவரிசைப்படி அந்தப் புகழ்பெற்ற விளக்கப்படம் பட்டியலிடுகிறது.

ஆனால் இந்த யுகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆய்வுக் கட்டுரையில் ‘மேகாலயன் யுகம்’ பற்றி விவரிக்கப்பட்டிருந்தாலும், இதுகுறித்து போதிய விவாதங்கள் நடத்தப்படவில்லை என்பது சில அறிவியலாளர்களின் கருத்து.

சுமார் 4.6 கோடி ஆண்டுகள் நீளும் பூமியின் வரலாற்றை காலத் தொகுதிகளாக விஞ்ஞானிகள் பகுத்துள்ளனர். ஒவ்வொரு பகுப்பும், கண்டங்கள் பிரிந்தது, காலநிலையில் பெரும் மாற்றங்கள் உண்டானது, புதிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்கள் உருவானது என ஒவ்வொரு முக்கிய அறிவியல் நிகழ்வுடன் தொடர்பு உடையது.

நாம் தற்போது இருப்பது ஹோலோசீன் சகாப்தத்தில். ‘பனி யுகம்’ முடிந்து வெப்பம் பரவத் தொடங்கிய கடைசி 11,700 ஆண்டுகளின் புவியியல் வரலாற்றை உள்ளடக்கியது இந்த யுகம். இந்த ஹோலோசீன் சகாப்தத்தையும் பல கட்டங்களாகப் பிரிக்க முடியும் என்கிறது புவியியல் அடிப்படையிலான காலங்களை வரையறுக்கும் அதிகாரப்பூர்வ அமைப்பான சர்வதேச பாறைப்படிவியல் ஆணையம். ஹோலோசீன் சகாப்தத்தையும் ஆரம்ப, மத்திய மற்றும் இறுதிக் காலகட்டங்களாகப் பிரிக்க முடியும் என்கிறது இந்த அமைப்பு. இந்தக் காலகட்டங்கள் முக்கிய பருவநிலை மாற்றங்களை எதிர்கொண்டுள்ளன. இவற்றில் மிகவும் சமீபத்தியதான மேகாலயன் யுகம் தற்போதுள்ள காலத்துக்கு 4,200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. அப்போது சுமார் 200 ஆண்டுகள் நீடித்த மிகவும் மோசமான வறட்சி எகிப்து, கிரேக்கம், சிரியா, பாலஸ்தீனம், மெசபடோமியா, சிந்து சமவெளி மற்றும் யாங்சி நதிப் பள்ளத்தாக்கு நாகரிகம் ஆகியவற்றில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது.

பெருங்கடல் நீரோட்டத்தின் திசை மற்றும் வளிமண்டலத்தின் காற்று வீசும் திசையில் உண்டான மாற்றங்களால் இந்த வறட்சி உண்டாகியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதை ஒட்டி பண்பாட்டு வழக்கங்கள் உண்டான காலகட்டத்துடன் ஒத்திசைந்து இருப்பதால் மேகாலயன் யுகத்துக்கு என்று ஒரு தனித்துவம் இருப்பதாக லாங் பீச் ஸ்டேட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டான்லி பின்னி கூறுகிறார். சர்வதேச புவிசார் அறிவியல் அமைப்பின் பொதுச்செயலாளராக அவர் உள்ளார்.
ஹோலோசீன் சகாப்தத்தின் மத்தியப் பகுதியான ‘நார்த்கிரிப்பியன் யுகம்’, மேகாலயன் யுகம் தொடங்குவதற்கு முந்தைய 8,300 ஆண்டுகளை உள்ளடக்கியது. உருகிய பனியால் கடல் மட்டம் அதிகரித்து, பெருங்கடலின் நீரோட்டத்தின் திசை இந்தக் காலகட்டத்தில் மாற்றங்களைச் சந்தித்தது.

ஹோலோசீன் சகாப்தத்தின் மிகவும் பழைய காலகட்டமான ‘கிரீன்லேண்டியன் யுகம்’ பனியுகம் முடிவுக்கு வந்தபின் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை விஞ்ஞானிகள் தனி யுகமாகக் கருத வேண்டுமென்றால் அக்காலகட்டத்தில் பூமி முழுவதற்கும் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த மாற்றம் பாறை அல்லது வண்டல் மண்ணுடன் தொடர்பு உடையதாக இருக்க வேண்டும்.
6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கிரிட்டேசிய காலத்திலிருந்து பேலியோஜீன் காலத்துக்கு மாற்றம் நிகழ்ந்தபோது இரிடியம் படிமங்கள் பூமி முழுதும் பரவி இருந்தன. டைனோசர்கள் இந்தப் பூமியில் இருந்து அழியக் காரணமான விண்கல் மோதலால், அதிலிருந்த இரிடியம் பூமி முழுதும் பரவியது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள மாம்லு குகையில் வளர்ந்துள்ள புற்றுப்பாறைகளில் உள்ள ஆக்சிஜன் அணுக்கள் அல்லது அதன் ஐசோடோப்புகளில் கண்டறியப்பட்டுள்ள குவியலில் இந்த மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், அந்த மாற்றம் நிகழ்ந்த சமயத்தில் மழைப் பொழிவு குறைந்துள்ளது. அந்த மாற்றம் நிகழ்ந்தபோது பருவ மழை பொழிவது 20 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது என வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக் வாக்கர் கூறுகிறார்.

‘‘மிகவும் முக்கியமான இரண்டு புவிசார் மாற்றங்கள் 4100 மற்றும் 4300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தன. எனவே இரண்டுக்கும் சராசரியாக 4200 ஆண்டுகளுக்கு முன்பு மேகாலய யுகத்தின் தொடக்கத்தை நிர்ணயித்தோம்’’ என்கிறார் அவர். இந்தக் காலகட்டத்தை தனி யுகமாக்க முன்மொழிந்த ஹோலோசீன் அறிவியலாளர்கள் குழுவுக்கு மைக் வாக்கர் தலைமை வகித்தார்.
யுகம் யுகமாய் பூமி எவ்வளவு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது!

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

பெரும் கானகத்து சிட்டுக்குருவியாகவே இருக்க விரும்புகிறேன்

பெரும் கானகத்து சிட்டுக்குருவியாகவே இருக்க விரும்புகிறேன். - வங்காரி மத்தாய்



“I will be a hummingbird" - Wangari Maathai
பெரும் கானகத்து சிட்டுக்குருவியாகவே இருக்க விரும்புகிறேன். - வங்காரி மத்தாய்
http://www.youtube.com/watch?v=-btl654R_pY


காட்டுத் தீயால் விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெரும் கானகத்து சிட்டுக்குருவி கதையில் வரும் சிட்டுக் குருவியாகவே இருக்க விரும்புகிறேன். காட்டு தீயால் திகுதிகுவென எறிந்து கொண்டிருக்க யானை, சிங்கம் உள்ளிட்ட பெரிய விலங்குகள் எல்லாம் காட்டை விட்டு வெளியேறி ஒடையோரம் பதைபதைப்புடன் காடு எரிவதுப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. எதிர் பாராமல் நடந்து கொண்டிருக்கும் பாதிப்பால் நிலைகுலைந்து, சக்தியற்றவர்களாக பார்த்துக் கொண்டிருந்தன, ஒரு சிட்டுக் குருவி தவிர. இந்தக் காட்டுத் தீயை அணைக்க நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்றுக்கூறி அருகில் இருந்த ஒடைக்குப் பறந்து சென்று சின்ன அலகால் தண்ணீரை அள்ளி வந்து தீ மேல் ஊற்றியது. ஒடைக்கும் காட்டுத் தீ பரப்பிற்குமாக வேக வேகமாக- அதனால் எவ்வளவு வேகமாகப் பறக்க முடியுமோ அவ்வளவு வேகமாகப் பறந்து தண்ணீரை அள்ளி வந்து தெளித்தது.
நீரை அதிகம் அள்ளிக் கொண்டு வரக் கூடிய கண்ட யானை போன்ற விலங்குகள் திகைப்புற்று நின்றபடியே அந்தச் சிட்டுக் குருவியைப் பார்த்துச் சொல்லின, நீ ‘என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறாய்,காட்டுத் தீயோ பெரியது. நீயோ சின்னஞ்சிறிய குருவி. உன் சிறகுகளோ சிறியன, உன் அலகுகளும் சிறியன. உன்னால் சில துளி தண்ணீரையே கொண்டு வர முடியும். இவற்றை வைத்துக் கொண்டு நீயென்ன செய்துவிட முடியும்?’, என்று தொடர்ந்து நம்பிக்கையிழக்கும் வகையில் பேசின.

சிட்டுக்குருவி நேரத்தை வீணாக்க விரும்பாது பறந்து கொண்டே சொன்னது,’என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் சிறப்பாக செய்ய முயல்கிறேன். என்னைப் பொறுத்தவரை நாம் அத்தணை பேரும் இதைத் தான் செய்யவேண்டும்,என்றது. நாம் இந்தச் சிட்டுக்குருவி போல இருக்க வேண்டும். நான் என்னை சின்னஞ்சிறியவளாக அற்பமானவளாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் நிச்சயமாக அந்த விலங்குகள் போல இந்தப் பூமி அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கவிரும்பவில்லை. நான் ஒரு சிட்டுக் குருவியாக இருப்பேன், என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ அதைச் சிறப்பாகச் செய்வேன்.

இப்படிக் கூறிய அந்தச் சிட்டுக்குருவி தான் அண்மையில் தன் சிறகுகளை நைரோபி மருத்தவமணையில் அடிப்பதை நிறுத்திக் கொண்டது. தனது சிறகுகளை மடக்கிக் கொள்ளும் முன் அந்தச் சிட்டுக் குருவி எறிந்து கொண்டிருக்கும் பூமிப் பந்தின் தீயை அணைக்க 14 கோடிக்கும் மேலாக மரக்கன்றுகளை நட்டு பசுமரக் குடைகளை உருவாக்கிவிட்டது. தன்னைப் போல் பல்லாயிர சிட்டுக் குருவிகளுக்கு சிறப்பாக தங்களது சிறகுகளை அடிக்கப் பழக்கி விட்டுதான் தன் சிறகுகளை மடக்கிக் கொண்டது. காட்டுத்தீயின் பெருங்கங்குகள் கண்டு அஞ்சிக் கலங்காது அதை அணைக்க தன்னாலான சிறுநீர்த் திவளைகளை சிறப்பாக அள்ளி வந்த அந்தச் சிட்டுக் குருவியின் பெயர் வங்காரி மத்தாய். கென்ய நாட்டுச் சிட்டுக்குருவி.. கென்ய நாட்டுத் தலைவர்களில் மிகச் சிறந்த மக்கள் தலைவர்.உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆப்பிரிக்கப் பெண்மணி..

Wangari Maathai with her Nobel Medal and Diploma at the Nobel Peace Prize Award Ceremony, Oslo City Hall ,Norway



இந்தச் சிட்டுக்குருவி கதை தான் என்ன செய்கிறேன் என்பதை விளக்க அடிக்கடி சொல்லும் கதையாகும்.
வங்காரி மத்தாய் 1940 ஏப்ரல் 1ம் தேதி இகிதி என்ற கிராமத்தில் பிறந்தார். ஆங்கிலேயர்க்கு வேண்டுமானால் ஏப்.1 முட்டாள்கள் தினமாக இருக்கலாம் ஆனால் கென்யர்களுகல்ல நிச்சயமாக. அவர் பிறந்த காலத்தில் பெரும்பாலான பெண்கள் படித்திருக்கவில்லை. மத்தாய் தன் அண்ணனின் தூண்டுதலால் படித்தார். 1959 ல் பள்ளிப்படிப்பை முடித்ததும் அன்றைய அமெரிக்க அதிபரான கென்னடியின் அரசு வழங்கிய உதவித் திட்டத்தின்படி அமெரிக்காவில் கன்காஸ் மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் உயிரியலில் பட்டம் பெற்றார். பின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பட்டமேற்படிப்பை முடித்ததும் அப்போதுதான் விடுதலை பெற்றிருந்த சுதந்திர கென்யாவிற்குத் திரும்பினார். நைரோபி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்றார்
கல்லூரிப் பருவ நண்பர்களுக்கு அவர் மேரி ஜோ.

வங்காரி மத்தாய் 1971 ல் கால்நடை மருத்துவத்தில் முனைவர் பட்டத்திற்காக சேர்ந்தபோது அத்துறையிலிருந்த பலரின் எதிர்ப்பையும், கிண்டல்களையும் எதிர்க்கொண்டார். தனது அறிவுத் திறமையாலும், கடும் உழைப்பால் அவர் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார். அன்றைய நிலையில் வங்காரி மத்தாய் தான் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார். பின்னாளில் நைரோபி பல்கலையில் ஒரு துறையின் தலைவரும் ஆனார். இப்படி ஒரு துறையின் தலைவரான முதல் கிழக்கு மற்றும மத்திய ஆப்பிரிக்க நாட்டு முதல் பெண்மணியும் அவரே ஆவார்.

வங்காரி மத்தாய் பேராசிரியராக இருக்கும் காலத்திலேயே கென்ய தேசிய பெண்கள் நிலை உயர்த்த வேலை செய்தார். தேசிய பெண்கள் கமிசனில் 1976 முதல் 1987 வரை தீவிரமாக இயங்கினார். 1981 முதல் 1987 வரை இதன் தலைவராக இருந்தார். கிராமப்புறப் பெண்களிடம் உரையாடும்போது அவர், அரசு விவசாயிகளை உணவுப் பயிர் பயிரிடுவதைக் கைவிட்டு ஏற்றுமதிக்கான தேயிலை, காபி போன்றவற்றைப் பயிரிடத் தூண்டியதையும், அதன் விளைவாக பெரும் கானகப் பரப்பு அழிக்கப்பட்டு தேயிலை, காப்பித் தோட்டங்கள் ஆனது. இந்த மாற்றம் கிராம மக்களின் வாழ்வில், குறிப்பாக பெண்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உணவுப் பயிர் இருந்த இடத்தைப் பணப்பயிர் பிடித்துக் கொண்டது. மண் வளமிழந்தது. குழந்தைகளை அரை வயிறு கால் வயிறு உணவுடன் வளர்க்க வேண்டியிருக்கிறது. மேலும் கிராமப்புற பெண்களின் எரிபொருளான விறகு இப்போது அரிதான ஒன்றாகிவிட்டது. கால்நடைகள் மேய்வதற்கான மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போனதால் கால்நடைகளும் குறைந்து விட்டன. ஓடைகள் வறண்டு விட்டன அல்லது மண் அரிப்பால் மாசுபட்டது. எனவே குடிநீரும் அரிதாகிவிட்டது.

இப்பணியில் இருந்த காலத்தில் அவர் கென்யாவின் கிராமப்புறப் பெண்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ள கிராமங்களில் பயணித்த போதுதான் சீரழிந்த சுற்றுச்சூழலும், மோசமான சமூகச் சூழலும், வறுமையும் பெண்களின் வாழ்வை கடும் சிரமத்தில்உள்ளாக்கியுள்ளதைக் கண்டார். அவர்களுடைய அன்றாட வாழ்விற்குத் தேவையானதை அடைவதற்குக் கூட கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அவர் சந்தித்த ஒவ்வொரு கிராமத்தின் பெண்களும் சுத்தமானத் தண்ணீரில்லை, சத்தான உணவில்லை, எரிக்கவும், குளிரிலிருந்து காத்துக் கொள்ள விறகுமில்லை என்று ஒருமனதாகக் கூறினர். ஏழைகளின் தேவை எங்கும் எப்போதும் மிகக் குறைவானதே. ஆனால் அத்தேவையும் எளிதில் பூர்த்தியாவதில்லை.

அவர் நோபல் பரிசு ஏற்பு விழாவின் போது தன் இளமைக்காலத்தை நினைவு கூறியது நம்மை அன்றைய கென்யா எப்படி இருந்தது என்பதைச் சொல்லும்.


நோபல் பரிசு உரையில், ‘என் பெற்றோர் மண்ணையும், அது அள்ளி வழங்கும் விளை பொருட்களையும் மதிக்கக் கற்றுக் கொடுத்தனர். நான் பெரும்பாலும் என் தாயுடன் நேரத்தைக் கழித்தேன். விளை நிலத்தில் இயற்கையை ரசிக்க, உற்று நோக்கக் கற்றுக்கொண்டேன்”.
’வீட்டிற்கு அருகில் உள்ள ஓடைக்குச் சென்று அம்மாவிற்காகத் தண்ணீர் எடுத்து வந்த என் இளம் பிராயத்து நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். ஒடையில் ஓடும் தண்ணீரை நேரடியாக அள்ளிக் குடிப்பேன். அரோ ரூட் கிழங்கின் இலைகளுடன் விளையாடிக் கொண்டு இழைக்கப்பட்டிருக்கும் தவளையின் முட்டைகளை அள்ள முயன்று தோற்றுள்ளேன். இழைகளுடன் ஒட்ட வைக்கப்பட்டிருக்கும் அந்த முட்டைகளை பாசி மணிகள் என்று நம்பினேன். என்னுடைய சின்ன விரல்கள் கொண்டு அவைகளுககு அடியில் வைக்கும் போது அவை சிதைந்து சிதறம். பிறகு நான் பூமியின் பழுப்பு நிறப் பின்னணியில் தெளிந்த நீரில் ஆயிரக்கணக்கான தலைப்பிரட்டைகள் கரிய நிறத்தில் உற்சாகத்துடன் வாலாட்டிக்கொண்டு இங்குமங்கும் நீந்துவதைக் கண்டிருக்கிறேன். என் பெற்றோர;களிடமிருந்து இத்தகைய உலகை நான் சுவீகரித்துள்ளேன்.
அன்று எங்கும் தண்ணீர் இருந்தது. எங்கெங்கும் மரக் கூட்டம். ஆகையால் விறகுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. இப்போது எங்களிடம் இவை அதிகமில்லை. இன்று 50 ஆண்டுகளில் ஓடைகள் காய்ந்து விட்டன. பெண்கள் நீண்ட தூரம் நடந்து தண்ணீர; கொண்டு வருகின்றனர்.அதுவும் தூய்மையாக இல்லை. குழந்தைகளுக்கு தாங்கள் எதையெல்லாம் இழந்துள்ளோம் என்பது எதுவும் தெரியாது. தலைப்பிரட்டைகளின் இல்லத்தை சரி செய்து உலகின் அழகையும், விந்தைகளையும் குழந்தைகளுக்குத் திருப்பித் தருவதே நமக்குள்ள சவாலாகும்.
‘ஆயினும் ஏழைகள் என்று உணர்ந்ததில்லை. நாம் மரக் கன்றுகள் நடுவதிலிருந்து தொடங்க வேண்டும் என்று கூறினோம். மரக்கன்றுகள் நடுவது பெண்களைத் தூண்டிவிட்டது.உற்சாகப்படுத்தியது. அவர்களுக்கு தங்களது உணவு, விறகு, தண்ணீர் தேவைகள் பற்றியும் மரங்கள் இருக்க வேண்டியது பற்றியும் தெரிந்திருந்தது.

பெண்கள் அனுபவிக்கும் பிரச்சினையின் வீரியத்தையும், அதன் மூலத்தையும் உணர்ந்த வங்காரி மத்தாய் இப்பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு மரங்கள் தான் என முடிவு செய்தார். உடனடியாக மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதே என்ற எளிமையான தீர்வுக்கு வந்தார். சமைக்க விறகும், கால்நடைகளுக்கு தீவனமும், வேலிக்கு வேண்டியவைகளையும் மரங்கள் தரும். கூடவே மண்ணரிப்பைத் தடுக்கும், மண்ணில் மழை நீரைப் பிடித்து வைக்கும் அதன் மூலம் உணவுக்கான விவசாயத்தைக் காணலாம் என ஒரு கல்லில் பல மாங்காய்களைக் குறி பார்த்தார். அவர் ‘பெண்கள் தெரிவித்த பிரச்சினைகளில் சில நிலத்தோடு அவர்கள் வைத்திருந்த உறவு. அந்த உறவை மீட்டெடுக்க மரக்கன்றுகள் நட வைத்தோம். நீங்கள் மரக்கன்றுளை வளர்த்தால் அவை எரிக்க விறகைத் தருகின்றன. அவை உணவைத் தருகின்றன. அவை தண்ணீரைத் தருகின்றன” என்று கூறி பெண்களிடம் ஆர்வத்தைத் தூண்டினார்.

பசுமைப் பட்டை இயக்கத்தைத் (Green Belt Movement) 1977ல் தொடங்கினார்.
வளர்ச்சி என்ற பெயரில் காடுகள் அழிக்கப் பட்டதால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்யும் நோக்கில் வங்காரி நாடெங்கும் மரம் வளர்க்க 1977ல் புவி தினத்தன்று கென்ய பெண் சுற்றுச் சூழல் முன்னோடிகளை கௌரவிக்கும் வகையில் ஏழு மரக்கன்றுகள் நட்டு தனது திட்டத்தைத் தொடங்கினார்.


ஒரு சின்னஞ்சிறிய கட்டிடத்தில் தொடங்கப்பட்ட பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) மாபெரும் பெண்கள் இயக்கமானது. சூழல் அழிக்கப்படும் போது முதலில் பாதிக்கப்படுவது பெண்களாக இருப்பதை அவர் ஏற்கனவே உணர்த்தியிருந்தார். குறுகிய காலத்திலேயே பெண்கள் பெருமளவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தேசிய பெண்கள் கமிசனின் துணையுடன் தொடங்கப்பட்ட பசுமைப் பட்டை இயக்கத்திற்காக வங்காரி மத்தாய் கல்லூரித் துறைத் தலைவர் பணியைத் துறந்தார். இளம் சூழலாளராகத் துளிர் விடத் தொடங்கினார். பசுமைப் பட்டை இயக்கம் கிராமத்தவர்கள் சிலருடன் விதை சேகரிப்பிலும், பதிவிலுமாக மிகச் சிறிய அளவில் பிறப்பெடுத்தது.
ஆரம்பத்தில் அரசு அதிகாரிகள் எள்ளி நகையாடினர். வனத்துறை அதிகாரிகளுக்குத் தான் மரங்கள் வளர்க்கத் தெரியும். பட்டிக்காட்டான்களுக்கு என்ன தெரியும் என்றனர். ஆனால் இந்தச் சின்னக் குழு மற்ற கிராமத்தவர்களுக்கு பயிற்சி அளித்தது. புதிதாய் பயிற்சியும் அனுபவமும் பெற்றவர்கள் மற்ற கிராமத்தவர்களுக்கு பயிற்சி கொடுத்தனர். இப்படியாக அடுத்த 35 ஆண்டுகளுக்குள் நட்டு வளர்த்து பராமரித்த மரங்கள் பல கோடி. 6000க்கும் மேலான மரக்கன்று நாற்றங்கால்கள் இப்பெண்களால் உருவாக்கப்பட்டன. பல ஆயிரம் பேருக்கு வேலையும் கொடுத்தது. தனது எதிர்காலம் தங்கள் கையில் என்கிற பெரும் அதிகார மாற்றம் சத்தமின்றி நடந்தது.
Wangari Maathai planting a tree at the Outspan Hotel, Nyeri, Kenya, to mark the launch of her autobiography
‘சுற்றுச்சூழல் காப்பில் 3R மட்டுமே பேசப்படுகிறது. இன்னும்மொரு R உள்ளன. அது கெடுக்கப்பட்ட சூழலை சீர்செய்வதாகும்.ஆக 4R உள்ளன. Reduce-Reduce-Recycle-Repair. எனது பணி முக்கியமாக நான்காவதாக உள்ள R ஆகும்,’ என்றார் ஒரு முறை.
பேராசிரியர் வங்காரி மத்தாய் சூழல் சீரழிவு மற்றும் வறுமைக்குப் பின்னால் உரிமைகள் இன்மை, அதிகாரங்கள் இல்லாமை, மோசமான அரசு நிர்வாகம், நிலத்தை, வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை வள ஆதாரங்கள் மீது சமூகம் தனது பண்பாட்டின் சிறப்பான அம்சமாகக் கொண்டிருந்த மதிப்புகள் இழந்தது எனப் பல உள்ளதை உணரந்தார். மரக்கன்றுகள் நடலும், வளர்ப்பதும் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் பணிகளுக்கான தொடக்கப் புள்ளியாக இருந்தது.

கென்யா அப்போது தானியல் ஆராப் மோய் என்ற சர்வாதிகாரியின் அடக்குமுறை ஆட்சிக்குள் இருந்து வந்தது.
‘எந்தப் பிரச்சினைகளுக்காக நான் வேலை செய்தேனோ அதற்கும் அதனுடைய மூலக்காரணங்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை நான் பார்க்கத் தொடங்கினேன். சுற்றுச் சூழலை அழிக்கும் முக்கியக் கயவன் அரசாங்கமே என்பதைத் தெரிந்து கொண்டேன்”, என்ற வங்காரி மத்தாய் அரசின் சுற்றுச் சூழல் கொள்கைகளில் மாற்றம் தேவை என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார். படித்த மக்களிடம் இது குறித்து கருத்தரங்குகள் நடத்தத் தொடங்கினார். நேரடியாகவே அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார்.
‘வெளிப்படையான நிர்வாகம், மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையை நம் தலைவர்களிடம் வலியுறுத்தத் தவறிவிட்டோம் நாம். அவர்கள் நம் இனத்தவர்கள் என்ற காரணத்தால்.அவர்கள் நம்மை உய்விக்க வந்த தேவர்கள் என்று நம்பி அவர்களை நெருக்கமாக்கக் கண்கானிக்கத் தவறிவிட்டோம். அவர்கள் ஊழல்வாதியாக, வெறுக்கத் தக்கவராக, முற்றிலும் ஒழுக்கங்கெட்டவராக இருப்பினும் தேர்தல் அடுத்து தேர்தலுக்கு அவர்களையே தேர்வு செய்தோம் அவர்கள்

நம் இனத்தவர் என்பதால் மட்டுமே.அவர் நாம் பேசும் மொழியைப் பேசுபவராக இருந்துவிட்டால் போதும் என்று கருதி அவரின் தகுதி,தொலைநோக்கு பற்றியெல்லாம் கவலைப்படாமல் தலைவராக்கி அவர் அடுத்த இனக்குழுக்கள் நம்மை அழிக்க வருகிறார்கள் என்று கூறியதும் ஆயுதங்கள் தூக்கி நம்மை அழித்துக் கொள்கிறோம்.
ஒரு நிலையான சமூகத்தை ஒரு முக்காலியுடன் ஒப்பிடுகிறார் மத்தாய். அவர் இயற்கையை வளங்குன்றாத வகையில் பயன்படுத்துதல், மக்களாட்சி, அமைதிப் பண்பாடு ஆகிய மூன்றையும் அந்த முக்காலியின் மூன்று கால்கள் என்கிறார். எந்தவொரு காலை இழந்தாலும் அந்த சமூகத்தில் அமைதி நிலைத்திருக்காது எவ்வளவு வெளிநாட்டுக்கடன்களை வளர்ச்சிக்காக என்று கூறி வாங்கினாலும்’, எனகிறார்.
‘மக்களிடம் அதிகாரம் வழங்காத வரை இந்த இயற்கை வளங்கள் தங்களுடையது என்பதை அவர்களுக்குச் சொல்லி, உணர உதவி, தாங்கள் தான் தங்களுடைய இயற்கை வளங்கள் காக்க வேண்டும் என்ற உணர்வை ஊட்டாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியாது’, என்பது அவர்களின் முழக்கமாக இருந்தது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமெனில் ஜனநாயகம் அவசியம் என்பதை உணர உணர, பசுமைப்பட்டை இயக்கம் விரிவாக விரிவாக கென்ய அரசுடன் உரசல்களும் அதிகமானது.

1980 மற்றும் 90 களில் பசுமைப் பட்டை இயக்கம் கென்ய நாட்டு ஜனநாயகத்திற்கான அமைப்புகளுடன் கைகோர்த்து கென்யாவின் சர்வாதிகாரியாக இருந்த தானியல் அராப் மோய்-யின் சர்வதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் போராட்டங்களில் பங்கேற்றது.
இச்சமயத்தில்தான் ஆளும் சர்வாதிகாரியான மோய்-ன் கட்சி அலவலகத்திற்காக 62 மாடிக் கட்டிடம் கட்டும் திட்டம் வந்தது. அழிக்கப்பட்ட சூழலை சீர்படுத்தும் வேலையைச் செய்துகொண்டிருந்தவருக்கு இப்போது அழிவைத் தடுத்து நிறுத்தும் போராட்டம் அவரை யார் என்று உலகிற்குக் காட்டியது.

நைரோபி நகரெங்கும் இருக்கும் நெடிதுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பசுஞ்சோலை ஒன்று உள்ளது. நைரோபி நகரின் வடக்கில் இருந்த காரூரா கானகத்தின் பகுதியான உகுரு பூங்கா அதன் பெயர். உகுரு என்றால் சுதந்திரம் என்று பொருள். வங்காரி என்ற பெண் 1980களில் நூற்றுக்கணக்கானவர்களைத் திரட்டி பெரும் போராட்டத்தை நடத்தியிருக்காவிட்டால் இன்று அந்தப் பூங்காவும் கட்டிடக்காடாகியிருக்கும். அப்போதைய கென்ய அதிபர் தானியல் அராப் மோய் அங்கு வெளிநாட்டுக்கம்பெனிகளின் உதவியுடன் 62 மாடிக்கட்டிடம் ஒன்றை தமது கட்சியின் தலைமை நிலையமாகக் கட்டத் திட்டமிட்டார். சூழல்வாதியான வங்காரி இயற்கை எழில் மிக்க இடத்தை அழிவிலிருந்து காக்க அங்கு போராட்டத்தை நடத்தினார். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டது. குண்டாந்தடிகளால் பெண்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டனர். மத்தாயும் கடுமையாகத் தாக்கப்ட்டார். அவரையும் மற்றவர்களையும் கைது செய்து மோய்-ன் கொலைகளமாகக் கருதப்பட்ட பாதள சிறையில் அடைக்கப்பட்டனர். முதலீடு செய்யவிருந்த கம்பெனிகள் போராட்டத்தைக் கண்டு விலகிக் கொண்டதால் திட்டத்தைக் கைவிட்டார் மோய்.
பசுமை பட்டை இயக்கத்தவர்களும், வங்காரி மத்தாயும் மோய்-னின் அரசால் தொடர்ந்து தாக்கப்பட்டனர், கைது செய்யப்பட்டனர். அரசியல் கைதிகளின் தாய்மார்கள் கொண்ட அமைப்பை உருவாக்கி கைது செய்யப்பட்டவர்களின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்துப் போராடினர். இதன் விளைவாக அரசியல் போராட்டங்களுக்காக கைது செய்யப்பட்ட 51 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

வங்காரி மத்தாய் வெளிக்காட்டிய தைரியமும், விடாமுயற்சியும் அவரை மிகவும் மதிக்கத்தக்க கென்ய பெண்மணியாக்கியது. சர்வ தேச அரங்கில் மக்களின் உரிமைக்காகவும், சூழல் காப்பதற்குமான போராளியாக அடையாளம் காட்டியது.
அரசுடனான போராட்டங்கள் அதிகமாயின. அடிக்கடி கைது செய்யப்பட்டார். 1991-ல் மத்தாய் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்ட போது அம்னெஸ்டி இன்டர்நேசனல் என்ற அமைப்பு உலகு தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்தி விடுவிக்கச் செய்தது.
சுற்றுச் சூழல் காப்பு, மரம் வளர்ப்பு என ஒரு அரசியலுக்கு அப்பால் உள்ள ஒர் மென்மையான செயல்பாடுகள் கொண்டிருந்த வங்காரி மத்தாய் அரசியலில் ஆர்வம் எப்படி வந்தது?
அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்த போது அங்கு வியட்நாம் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆந்த ஆர்ப்பாட்டங்களைக் கவனித்த வங்காரி மத்தாய் அமெரிக்க மக்கள் தாங்கள் நம்புவதை, தங்களது எண்ணத்தை வெளிப்படையாகக் கூறும் உரிமையைப் பெற்றிருப்பதை உணர்ந்து கொண்டார். இதுவே அவரை கென்ய மக்களை அழிக்கும் சூழல் அழிவிற்கு எதிராகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடவும் மக்களைத் திரட்டவும், அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தவும் உதவவும் செய்தது.
‘அமைதிக்கான முக்கியமானதில் சுற்றுச் சூழலுக்கு முக்கிய பங்கு உள்ளது. நாம் நமது இயற்கை வளங்களை அழிக்கும்போது அவை அரியதானவைகளாகி விடுகிறது. பின் அதற்காக சண்டை போட்டுக் கொள்கிறோம்,’ என்கிற வங்காரி மத்தாய்,’சுற்றுச் சூழல் அழிவிற்கு ஏழைகளே காரணம் என்று பழியை அவர்கள் மீது சுமத்தி விடுகிறோம். உண்மையில் பெரும் சக்தி மிக்கவர்களும், அரசாங்கங்களுமே இதற்கு காரணமாக இருக்கின்றது. நமக்குத் தேவை இயற்கை வளத்தை, சுற்றுச் சூழலை அழிக்காத வளர்ச்சியே, என்று தனது விசாலமான பார்வையை முன்வைக்கிறார்..

1989- ன் ஐ.நா.ஆய்வு ஒன்று ஆப்பிரிக்காவில் வெட்டப்படும் ஒவ்வொரு 100 மரங்களுக்கும் 9 மரங்கள் மட்டுமே நடப்பட்டு வளர்க்கப் படுகிறது என்கிறது. இந்தளவு மரங்கள் வெட்டப்படுவது தொழில் சார்ந்த வேலைகளுக்காகவே ஒழிய ஏழை மக்களால் அல்ல. உண்மையில் காடுகள் அழிவதில்லை அழிக்கப்படுகிறது அது அரசாங்கத்தால் என்கிற போது அதனைக் காக்கும் முயற்சியும் அரசியல் சார்ந்து தானே இருக்க முடியும் என்கிறார் அவர்.
அவர், ‘சுற்றுச் சூழல், மரங்கள், காடுகள் ஆகியவற்றின் சீரழிவை தனித்தனியே பார்க்க முடியவில்லை. இப்பிரச்சினைகளுடன் மேம்படுத்தப்பட்ட, ஒளிவு மறைவற்ற நிர்வாகம், மனித உரிமைகள், பெண் விடுதலை, ஜனநாயகம் ஆகியன எல்லாமே பின்னிப்பிணைந்துள்ளது,’ என்கிறார். ‘உலக வணிக முறைகள் ஆப்பிரிக்காவின் தொண்டைக்குள் ஆப்பிரிக்க மக்கள் விரும்பாததை திணிக்கின்றன. அவை ஆப்பிரிக்க மக்களின் நீண்ட கலாச்சார, பண்பாட்டுப் பின்னணியைச் சிதைத்து விட்டன. ஆப்பிரிக்கா மேலெழுந்து வரவேண்டுமானால் தனது பாரம்பரியமிக்க கலாச்சாரத்தின் அஸ்திவாரத்திலிருந்தே எழமுடியும்,’ என்று நம்பினார்.

‘இந்த பூமியின் இயற்கைச் சூழல் மீது நமக்கு மிகவும் தனிப்பட்ட அக்கறையும் பொறுப்பும் உள்ளது. மற்ற உயிரினங்கள் இந்த பூமியியல் வாழ்வதை உறுதி செய்வதன் மூலம் நாம் நமது உயிர் வாழ்தலை உறுதி செய்து கொள்கிறோம். பூமியில் அமைதி என்பது நாம் எப்படி நமது உயிர்ச் சூழலைப் பாதுகாக்கிறோம்,’ என்பதைப் பொறுத்தே உள்ளது என்று கூறிய வங்காரி மத்தாய் கென்யாவிலும், ஆப்பிரிக்காவிலும் உயிர்ச் சூழல் வழியில் சாத்தியமாகும் சமூக, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். இது அரசியலின்றி இது சாத்தியமாகாது என்பதை அவர் உணர்ந்து கொண்ட பின் அவரது அரசியல் நடவடிக்கைகள் விசாலமாகியது. ஒரு முழுமை பெற்ற பார்வையில் வளங்குன்றாத வளர்ச்சியையும், ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், பெண்கள் உரிமைகளையும் பார்த்ததோடு அதற்காகவே உழைக்கவும் செய்தார்.
அவர்,’மனித உரிமைகள் என்பது மேஜைமேல் வைக்கப்பட்டு எடுத்து அனுபவிக்கக் கூடிய பொருட்கள் போன்றதல்ல. அவை போராடிப் பெற வேண்டிய ஒன்று. பெற்றபின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட,’ என்பதை அனைவரிடமும் உணர்த்தினார்.
உண்மையான ஜனநாயம் இல்லாமல் இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது என்பதால் ஜனநாயகமற்று இருக்கும் கென்யாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.


மோய்-ன் அரசிற்கு எதிராகப் பேசியதற்காக அவரது தேர்தலில் போட்டியிடும் முயற்சிகள் பலமுறை தோற்கடிக்கப்பட்டாலும் வங்காரி மத்தாய் மனங்குலையாமல் தொடர்ந்து முயற்சித்தார். 1992- ல் மோய் அரசாங்கம் நடத்திய போலித் தேர்தலில் அதிபர் பதவிக்குப் போட்டியிட பலரும் வற்புறுத்தினர். ஆனால் காலம் கனியவில்லை என்பதால் மறுத்துவிட்டார். ஆனால் 1997-ல் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், கென்ய லிபரல் கட்சியின் அதிபர் வேட்பாளராகவும் போட்டியிட சம்மதித்தார். இவைகள் கென்ய நாட்டின் அன்றைய நிலையில் அரசியல் கட்சிகளுக்கு வங்காரி மத்தாய் தான் விடிவெள்ளியாகத் தென்பட்டார். இருந்தாலும் லிபரல் கட்சி வங்காரி மத்தாய் சுற்றுச் சூழல் பிரச்சினைகளையே பிரதானப்படுத்தி செயல்படுவார் என்று கருதி தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் மத்தாய்க்குத் தெரியாமலேயே அவரைப் போட்டியிலிருந்து அவரது கட்சி விலக்கிக் கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான போட்டியில் மூன்றாவது இடத்தையே பெற முடிந்தது.
கென்ய நாடு சுதந்திரமடைந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக 2002-ல் சுதந்திரமான தேர்தல் வந்தது. கென்ய மக்கள் புதிய அரசிற்காக மவாய் கிபாகிக்கு வாக்களித்தனர். இதே தேர்தலில் வங்காரி மத்தாய் நாடாளுமன்ற உறுப்பினருக்காகப் போட்டியிட்டிருந்தார். கடந்த முறை 3-ம் இடத்திற்குத் தள்ளிய அதே மக்களில் 98 சதவிகிதம் பேர் மத்தாய்-க்கு வாக்களித்தனர். பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் 98 சதம் வங்காரிக்கு என்ற செய்தியைக் கேட்ட பெண்கள் நைரோபியின் சாலைகளில் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வங்காரி மத்தாயின் வெற்றியைக் கொண்டாடினர். புதிய ஆட்சி அமைந்த ஒரு வார காலத்தில் கிபாகி வங்காரி மத்தாய்-ஐ சுற்றுச் சூழல், இயற்கை வளங்கள், கானுயிர்களுக்கான துணை அமைச்சராக நியமித்தார்.
தனது பசுமைப்பட்டை இயக்கத்தில் கடைப்பிடித்த அடிமட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்கல், மக்கள் பங்கேற்புடன் கூடிய முடிவெடுத்தல், ஒளிவு மறைவற்ற நிர்வாகம் ஆகியவற்றை சுற்றுச் சூழல் அமைச்சகப் பணிகளிலும் கொண்டு வந்தார்.
இத்தேர்தலுக்குப் பிறகு கென்யாவின் அரசியல் சூழ்நிலை வெகுவாக மாறியது. பெண்களின் பிரச்சினைகள் காது கொடுத்துக் கேட்கப்பட்டது. முடிவுகள் எடுப்பதில் பெண்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வங்காரி மத்தாய்.
இந்தப் புதிய சூழலில்; வங்காரியின் பசுமைப் பட்டை இயக்கம் ‘மாற்றத்துக்கான பெண்கள்’ என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன் இலக்கு பெண்களுக்கு குறிப்பாக இளம் பிள்ளைகளுக்கு, இளம் பெண்களுக்கு கல்வி மூலம் தன்னம்பிக்கையையும், தங்களுக்கும் முடிவுகள் எடுப்பதில் பங்குண்டு என்ற உணர்வையும் ஊட்டுவதாக இருந்தது.

கென்யாவின் ஜனாதிபதி 2003-ல் எய்ட்ஸ்-க்கு எதிரான போரை அறிவித்த போது ‘மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பு’ பெண்கள் மத்தியில் இனப்பெருக்க உடல் நலம், இளம் வயதில் கர்ப்பத்தைத் தடுப்பது, எய்ட்ஸ்-இல் இருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு கல்வியைப் பரப்பியது. மேலும் இந்த அமைப்பு மூலம் படிப்பில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு உதவித்தொகை, கல்விக்கட்டணம் போன்றவற்றை வழங்கியது. மேலும் கிராமப்புற பெண்களுக்கு வருவாயைப் பெருக்க தொழில் திறமைகள் வளர்ப்பையும் செய்தது.

மாற்றத்துக்கான பெண்கள் அமைப்பின் வேலைகளின் விளைவாக இன்று கென்ய அரசியல் அரங்கில் பெண்கள் பங்கேற்பது அதிகமாகியுள்ளது. நீண்ட காலமாக இருந்து வந்த பண்பாட்டு ரீதியான பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, குழந்தைகளுக்கான மையத்தையும் வங்காரி மத்தாய் இவ்வமைப்பு மூலம் தொடங்கி உணவு, உறைவிடம், கல்வியை வழங்கினார்.
இப்படிப் பண்பாட்டு ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பொருளாதார முறையிலும், உணர்வு ரீதியிலும் ஆதரவளித்ததுடன் அவர்களின் குழந்தைகளின் மேம்பாட்டிற்கும் உழைத்தார்.
கென்ய பண்பாட்டில்-இங்கு ஒரு காலத்தில் பரவலாக இருந்தது போலவே ,பெண்கள் கணவர்களின் உடைமை. ஆகவே பல கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கபட்டது. பலர் தனித்து விடப்பட்டனர். ஒதுக்கி வைக்கப்பட்டனர். அவர்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் எதுவுமில்லை.
2005- ல் கென்யா அரசு உருவாக்கிய புதிய உரிமைகள் சட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றினார். உலகம் முழுதும் உள்ள பெண்கள் உரிமையைப் பெற்றுத்தர உருவான ஐ.நா.அமைப்பின் பெண்கள் நிலை குறித்த சர்வதேச கமிசனில் கென்யா சார்பில் பங்கு பெற்றார்.
கென்ய கிராமங்களைப் பார்த்து வந்த புகழ் பெற்ற எழுத்தாளர்களான ஆனி மற்றும் பிரான்சஸ் லேப்பி, ‘அடக்கியாளும் கணவர்களுக்கும், ஊர்த்தலைவர்களுக்கும் தாங்கள் அடங்கியிருக்க வேண்டியதில்லை என்பதையும், தங்களது சக்தியையும அப்பெண்கள் உணர்ந்து கொண்டனர்,” என்று புகழ்ச்சியாக எழுதினர்.

எப்படி பெரியார் தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் கல்வி, பெண்ணுரிமை, தாய்மொழிக் கல்வி, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், தமிழர் நலன் எனப் பல தளங்களில் வேலை செய்தாலும் மூடநம்பிக்கை,கடவுள் மறுப்பு மட்டுமே பரவலாகத் தெரிந்ததோ அது போல வங்காரி மத்தாய்-க்கும். சுற்றுச் சூழல் கலப்புமணம், செயல்பாட்டாளராகவே அறியப்பட்டு வந்தாலும் அவரது வேலைகள் பெண்ணுரிமை, பெண் குழந்தைகள் கல்வி நலன்களையும் மையமாகக் கொண்டே இருந்தது.தேசிய பெண்கள் கமிசனின் ஆதரவுடன் குடும்பக் கட்டுப்பாடு, சத்துள்ள உணவு, ஆளுமைப் பண்பு வளர்த்தெடுப்பது போன்றவைகளின் கல்வியை கென்ய பெண்களுக்கு வழங்கினார். பசுமைப்பட்டை இயக்கம் சத்துள்ள உணவுத் திட்டமாக முன்பு அவரவர் கிராமத்தில் வளர்க்கப்பட்ட பாரம்பரிய பயிர்களை வளர்க்கத் தூண்டினார். குடும்பத்தின் தேவைக்காக வீட்டுக் காய்கறித் தோட்டத்தை உருவாக்க வைத்தார்.
வங்காரி மத்தாய் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமாயின் பாரதியின் நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னெஞ்சும் கொண்ட பெண்மணி. சுற்றுச் சூழல் பிரச்சினைகளில் புதைந்திருக்கும் அரசியல், ஜனநாயக உரிமைகள், பெண்கள் உரிமைகள்,பெண் கல்வி என அனைத்து இணைப்புகளையும் புரிந்து கொண்ட பெண்மணி. ஆதிகார அரசியல் அவரை இழுத்தது. ஆனாலும் வங்காரி மத்தாய் போன்ற மக்களுக்கான தலைவர்கள் நேர்மை, அடிமட்ட வளர்ச்சி பற்றிப் பேசிச் செயல்படுபவர்களை அதிகார அரசியல் தாங்கிக் கொள்ள முடியாது என்பதை அவரது அரசியல் பயணம் மீண்டும் தெளிவு படுத்தியது. அடுத்த தேர்தலில் அவருக்கு இடமில்லை. சூரியன் போல் மத்தாய். மரங்கள், கிராமப்புற பெண்கள் மேம்பாடு எனத் தொடர்ந்து இயங்கி வந்தார் புற்றுநோயால் மரணமடையும் வரை.

வங்காரி மத்தாய் நைரோபி மருத்துவமனையில் புற்றுநோயால் மரணமடைந்த போது டிவிட்டர்களிலும், பேஸ்புக்குகளிலும் இவரது மரணம் பற்றிய செய்திகள் அதிகமாக இருந்ததாம்.

‘உங்களைப் போல் சுற்றுச் சூழல் காக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்”.
‘நீங்கள் என்னுடைய ஆதர்ச மாதிரி”
‘உங்களிடமிருந்து தான் சுற்றுச் சூழலை, குறிப்பாக தண்ணீர் ஆதாரங்களைக் காப்பது பற்றி அறிந்து கொண்டேன”;.
‘நீங்கள் விதைத்த ஒரு விதை இன்று மாபெரும் மரமாகி உள்ளது”.
இப்படிப் பலநூறு மடல்கள். அதில் பெரும்பாலானவை வளர்ந்த நாடுகளில் இருந்து.
கென்ய தேசத்தின் அடையாளமாக உலக மக்களால் கருதப்பட்ட ஒரு குடியானவனின் மகளான போர் குணமும் தொலைநோக்கும் உள்ள இவரின் இடத்தை நிரப்ப சர்வ தேச அளவிலேயே வெற்றிடம் தான் உள்ளது.

Wangari Maathai-Union Square West-New York City

ஆப்பிரிக்கா செய்ய வேண்டியவைகள் பற்றி

ஆப்பிரிக்காவின் சவால்களை பல்வேறு மாவட்டங்களில் சரிசெய்து வருகிறோம். சில வெற்றிகள் வந்து சேர்ந்துள்ளன. ஆனால் போதுமான வேகத்தில் அல்ல. வளம் குன்றாத வளர்ச்சி மாடல்கள் மற்றும் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி ஆகியன எங்களுக்கு அன்னியமானவைகள் அல்ல. எங்கள் குழந்தைகளும், எதிர்கால தலைமுறைகளும் இந்த உலகின் மீது உரிமையுள்ளவைகள் என்பதை நாங்கள் அறிவோம். அவர்களுக்கு சக்தி தேவை. அது சூழலில் மாசுபடுத்தாததாக இருக்க வேண்டும். அவர்களது உலகம் உயிரின வளம் நிறைந்ததாக இருக்க வேண்டும். எல்லா உயிரினங்களும் நிலைத்து வாழக்கூடிய சூழ்நிலையுள்ளதாக இருக்க வேண்டும் என்று மத்தாய் ஒரு கருத்தரங்கில் கூறினார். உண்மையில் அவர் கூறிய அனைத்தும் உலகின் எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.

இதற்கான தொடக்கத்தை தொடங்க குடிமக்கள் சின்னதொரு வேலையைச் செய்ய வேண்டும். அது தேவைப்படும் மாற்றத்தை உருவாக்கும். அந்தச் சின்ன வேலை மரங்கள் வளர்ப்பதுதான். தற்போது கென்ய நாட்டில் மரங்களை வெட்டுவது மட்டுமே பழக்கமாக உள்ளது. எல்லோரும் மரங்களை வெட்டுகிறார்கள். யாருமே நடுவதில்லை. இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்துகிறது.


Ø 2007-ல் நடந்த பொதுத் தேர்தலின் போது பெருமளவு வன்முறை வெடித்தபோது வங்காரி மத்தாய் அமைதி, நீதி மற்றும் நேர்மைக்கான குரலாக மட்டுமின்றி சமாதானம் ஏற்படுத்துபவராகவும் செயல்பட்டார்.
Ø 2006 அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 5 பெண்களை இணைத்து நோபல் பெண்களின் அமைப்பை உருவாக்கி உலகளவிலான அமைதி, நீதி, சமத்துவத்திற்காகக் குரல் கொடுத்தார்.
Ø 2006-ல் வங்காரி மத்தாய் ஐ.நா.சுற்றுச் சூழல் திட்டத்துடன் இணைந்து 1 கோடி மரங்கள் நடும் வேலையில் கை கோர்த்தார். இந்த இலக்கை ஒரு ஆண்டிற்குள்ளாகவே எட்டப்பட்டது. தற்போது இது 14 கோடி எண்ணிக்கையையும் தாண்டிவிட்டது.
Ø 2009-ல் ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கி-மூன் வங்காரி மத்தாய்-ஐ ஐக்கிய நாடுகளின் அமைதிக்கான தூதராக நியமித்தார்.
Ø 2010-ல் நைரோபி பல்கலையுடன் இணைந்து வங்காரி மத்தாய் அமைதி மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் மூலம் நிலவளப் பயன்பாடு, காடுகள், விவாசயம், இயற்கை வளங்களுக்கான மோதல்கள் அமைதி உள்ளிட்ட பிரச்சினைகளை ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
Ø தனது 1 கோடி மரங்கள் திட்டத்திற்கு வங்காரி மத்தாய்-ஐ தூதராக அறிவித்தது 2006-ல். இந்த இலக்கு ஒரே ஆண்டிற்குள் அடையப்பட்டு விட்டது, இப்போது இந்த இலக்கு 14 கோடியாகிவிட்டது. 5 ஆண்டுகளுக்குள் 14 மடங்கிற்கு இலக்கு உயர;த்தப்பட்டதெனில் அதற்குக் காரணம் வங்காரி மத்தாய்-ன் உழைப்பும், திட்டமிடலுமே காரணம்.

கென்ய அளவிலும், உலக அரங்குகளிலும் பெண்ணுரிமைக்காகப் பல வேலைகளைச் செய்தாலும் அவருடைய இயற்கைச் சூழல் காப்பு வேலையை நிறுத்தவேயில்லை. உலக அரங்கு அவரை உலகின் மிக முக்கிய சுற்றுச் சூழல் காப்பாளராகவே அடையாளப்படுத்தியது. 2005-ம் ஆண்டிற்குப் பின் ‘ப்பேன் ஆப்பிரிக்கன் கரீன் பெல்ட் நெட் ஒர்க்’ (Pan African Green Belt Network) என்ற பெயரில் 15 க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் கொண்ட பசுமைப் பட்டை வலை அமைப்பு உருவானது. வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு கிடைத்த பிறகு பசுமைப்பட்டை இயக்கம் ஆப்பிரிக்கக் கண்டத்தையும் தாண்டிப் பரவியது. அமெரிக்கா, வடஅமெரிக்கா என்று கண்டம் விட்டு கண்டம் சென்றது ஒரு சின்ன அறையில் துவங்கிய பசுமைப் பட்டை இயக்கம்.

ஏன் இவ்வளவு (பூமி பற்றி) அக்கறைப்பட்டுக்கொள்கிறேன்
‘இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் இந்த பூமியின் தலைவிதி குறித்து, இந்த உலகின் தலைவிதி குறித்து அக்கறைப்படும் ஒவ்வொருவரிடமும் இந்த குரல் ஒலிக்கிறது என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
நான் ஏன் இவ்வளவு (பூமி பற்றி) அக்கறைப்பட்டுக்கொள்கிறேன் என்று எனக்கு உண்மையில் தெரியவில்லை. எனக்குள் உள்ள ஒன்று அங்கு ஏதோவொரு பிரச்சினை என்று சொல்கிறது. நான் அது குறித்து ஏதேனும் செய்தாக வேண்டும். இதைத்தான் நான் எனக்குள் இருக்கும் கடவுள் என்று கூறுகிறேன் என நினைக்கிறேன்.
நாம் எல்லோரும் நமக்குள் கடவுளைக் கொண்டிருக்கிறோம். அந்தக் கடவுளின் சக்தி எல்லா உயிர்களை ஒருங்கிணைத்துள்ளது, இந்த பூமியில் உள்ள எல்லாவற்றையும் இணைத்துள்ளது. ஏதேனும் செய் என்று இந்தக் குரல்தான் சொல்லியிருக்க வேண்டும்.

நல்லதைத் தேடும்போது நான் தடுக்கி விழுந்து எழுந்து, தடுக்கி விழுந்து எழுந்து கொண்டேயிருக்கிறேன். ஏன்? என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். நான் இப்போது சரியான பாதையில் செல்வதாக, குறிப்பாக பசுமைப்பட்டை இயக்கத்துடன், நம்புகிறேன். ஆனால் நான் வேலையைக் கைக்கொள்ளக்கூடாது என்றும், எனது குரலை உயர்த்தக்கூடாது என்றும், பெண்கள் ஒரு எஜமானனைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் மற்றவர்கள் கூறுகிறார்கள். இறுதியில் நான் அறிந்து கொண்டேன், ‘நான் ஏதேனும் பங்களிப்பைச் செய்ய வேண்டுமாயின் எவர் என்ன சொல்லினும் நான் அதைச் செய்ய வேண்டும். நான் செல்லும் வழியில் நான் சரியாக உள்ளேன்.அதுதான் பலனளிக்கிறது’.
1970 களில் கல்லூரிப் பேராசிரியையாக இருந்த போது அரசியல்வாதியான மவாங்கி மத்தாயை மணந்தார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயானார். மிகவும் கட்டுப் பெட்டித்தனமும், ஆண் ஆதிக்கமும் மிகுந்த சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட மவாங்கி மத்தாயால் வங்காரியின் ஆளுமையுடன் ஒத்துப் போக முடியவில்லை. 1980 களின் மத்தியில் மவாங்கி வங்காரியை விவாகரத்து செய்தார். விவாகரத்து செய்ய அவர் தெரிவித்த காரணம் ‘வங்காரி மிகவும் படித்தவராக உள்ளார். அவரைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது”, என்பதே.
இத்தணைக்கும் மத்தாய்-வங்காரியின் கணவர் அரசியல் பிரமுகர். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், அதிகம் படித்தவர்.

நான் என் மணவாழ்வு உடைவதை விரும்பவில்லை. நிலைகுலைந்தேன். என் குழந்தைகளைத் தனியாக வளர்க்க விரும்பவில்லை. சம்பவங்கள் எதிர்மறையாகி நிற்கும் போது நீ மூலையில் முடங்கி உட்கார்ந்து வாழ்க்கை முழுதும் புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது. ’எழு, நட, தொடர்ந்து நட. எதிர் வரும் பாதை மோசமானதாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் நட’. என்ற பாடத்தை என் மண வாழ்வின் முறிவு எனக்கு வழங்கியது.
காதல் கண்மூடித்தனமானது. நாம் அதில் ஆழ்ந்திருக்கும் போது குற்றங்குறைகளைக் காண்பதில்லை. சமயங்களில் தவறு செய்துவிடுகிறோம். உன் நண்பர்கள் கூறுவதைக் கூர்ந்து கேள். அவர்கள் நம்மைவிடத் தெளிவாகக் காண்பார்கள்.


விமர்சனத்திற்கு ஆளான நோபல் பரிசு
நோபல் பரிசு வழங்கப்பட்ட போது ஒரு சுற்றுச் சூழல்வாதி உலக அமைதிக்கு என்ன செய்யமுடியும் என்று விமர;சிக்கப்பட்டார். அப்போது அவர; ‘நான் நேரிடையாக உலக அமைதிக்காக வேலை செய்யவில்லைதான். ஆனால் உலகம் அமைதியை நோக்கிச் செல்வதற்கான பணியைச் செய்து வருகிறேன். இதைத்தான் நோபல் பரிசுக் கமிட்டி உணர்ந்து கொண்டது. நாம் இந்த சந்தர்ப்பத்தில் சற்று நிதானமாக நின்று உலக அமைதி மற்றும் பாதுகாப்பை விரிவான பார்வையில் பார்க்க வேண்டும்”, என்றார;.
நோபல் பரிசுக்குப் பிறகு மத்தாய் உலகின் பல பகுதிகளுக்கும் அழைக்கப்பட்டார். அவரும் மக்களைச் சந்திப்பதில் சலிப்படையாது நாடு நாடாகப் பயணித்தார். அத்தகையது அவரது மன ஆளுமை. மக்கள் அடிக்கடி கேட்கிறார்கள், ‘எது என்னை தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறது”, என்று. மத்தாய் சிரித்துக்கொண்டே. உண்மையில் கடினமான கேள்வி எதுவென்றால், எது என்னை நிறுத்தி வைக்கும்? என்றார். அவ்வளவு உள் ஆற்றல்.
நமக்குப் பின்னால் வரும் தலைமுறைகளின், தங்களுக்காகப் பேச முடியாத எல்லா உயிரினங்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பு நமக்குள்ளது என்று பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை உலக மக்களிடம் சளைக்காமல் உணர்த்தி வந்தார்.

வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு அறிவித்ததும் போர்களும், தீவிரவாதமும், அணு ஆயுதப் பரவலும் அதிகரித்துள்ள ஒரு காலக்கட்டத்தில் சுற்றுச் சூழல் வேலை செய்யும் ஒருவருக்கு எதற்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. நோபல் பரிசுக் குழுவின் தலைவர்; தான்போல்ட் அவர்கள் இந்த ஆண்டு நோபல் பரிசுக்குழு அமைதி என்பதற்காக விளக்கத்தை போர்- சமாதானம் என்பதோடு நிறுத்தாமல் விரிவாக்கியுள்ளது. சுற்றுச் சூழல் காப்பும அமைதியை நோக்கிச் செல்லும் பாதை தான் என்று விளக்கமளித்தார். நோபல் பரிசைப் பெற்ற போது நிகழ்த்திய ஏற்புரையில் வங்காரி மத்தாய், ‘ஒரு ஆப்பிரிக்க பெண்ணிற்கு முதல் முறையாக நோபல் பரிசு வழங்கியதற்கு நன்றி”, தெரிவித்த கையோடு, ‘இது கென்ய மற்றும் ஆப்பிரிக்க, ஏன் உலக மக்களின் சார்பில் பரிசைப் பெற்றுக் கொள்கிறேன் என்று தன்னை உலக மக்களுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
பெற்ற விருதுகள்:
1984 - Right Livelihood விருது

1991 - கோல்டுமேன் விருது
2008 - Elder of Bcerning spear
2004 - Elder of Golden Heart
2004 - சோஃபி பரிசு
2004 - நோபல் பரிசு
2006 - கென்ய தேசிய மனித உரிமைகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
2007 - உடல் நலன் மற்றும் மனித உரிமைகளுக்கான நெலசன் மண்டேலா விருது
போன்றவைகள் குறிப்பிடத் தகுந்தவை.
வங்காரி மாத்தாய் “பசுமைப் பட்டை இயக்கம்- அணுகுமுறை மற்றும் அனுபவங்கள் பகிர்வு” என்ற தனது முதல் நூலை வெளியிட்டார்.
2006-ல் “தலைவணங்காமல்” என்ற தனது சுயசரிதையை எழுதினார்
2008- ஆப்பிரிக்காவிற்கான சவால்கள் என்ற நூலையும், 2010-ல் “பூமிக்கு வளமூட்டுதல், உலகையும், நம்மையும் நாமே குணப்படுத்தும் ஆன்மிக மதிப்பீடுகள்” என்ற நூலையும் வெளியிட்டார்.
ஒரு குழிதோண்டி அதில் மரக்கன்று ஒன்றை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்க்கச் செய்யாவிட்டால் நீங்கள் எதையுமே செய்யவில்லை என்றே பொருள். நீங்கள் வாய்ச் சொல் வீரர் தான்.
‘நீங்கள் உங்கள் குரலை உரக்க ஒலிக்காவிட்டால் உங்களது சுற்றுச் சூழல் ஆர்வத்தால் எந்தப் பயனும் கிடையாது. அது வெறும் சந்தர்ப்பவாதமாகவோ ஒப்புக்கு ஒட்டிக் கொண்டதாகவோத்தான் இருக்கும்”, என்று தன் மக்களைத் தட்டி எழுப்பினார்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

ஹிட்லர் ஜெர்மனியின் தலைவராக பதவியேற்ற நாள் இன்று!

ஹிட்லர் ஜெர்மனி தலைவராக பதவியேற்ற நாளான இன்று சர்வாதிகாரம் வளர்ச்சியை தருமா என்பது பற்றிய சிறப்புச் செய்தி. ஏனெனில் இலங்கையில் இனி வரப்போகும் காலங்கள் அரசியல் நடைமுறை சித்தாந்தங்களின் எதிர்கால மாற்றங்களை தோற்றுவிக்கலாம்.

“ஹிட்லர் ஆட்சிக்கு வந்த நான்காவது ஆண்டில் ஏதாவது காரணத்தால் அவர் உயிரிழந்திருப்பாரேயானால், உலகமே அவரை மிகச் சிறந்த மாமனிதன் என பாராட்டியிருக்கும்“ என்கிறார் “அடால்ப் ஹிட்லர்“ என்ற புத்தகத்தை எழுதியுள்ள JOHN TOLAND என்ற அமெரிக்க எழுத்தாளர் 

உலக மக்கள் பெரும்பாலானோரால் வெறுக்கப்படும், கொடூரமானவராக சுட்டப்படும் ஹிட்லர் குறித்த இந்த கருத்து உயர்வு நவிழ்ச்சிக்காக கூறப்பட்டதல்ல. 
ஹிட்லரைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னர், சர்வாதிகாரம் என்ற பதத்தை பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

உலக மக்களின் நலனுக்காக, உலக அமைதியை நிலை நாட்ட முன்வைக்கப்படும் கம்யூனிஸம், மக்களாட்சி, மன்னராட்சி போன்ற சித்தாந்தங்களின் வரிசையில் சர்வாதிகாரத்திற்கும் தனித்த இடமுண்டு. அந்த வகையில் ((பார்த்தால்)), உலக வரலாற்றில் அதிக காலம் நிலைத்து நின்ற ஒரு சித்தாந்தம் சர்வாதிகார சித்தாந்தம். ஒற்றை மனிதர் அல்லது ஒரு குழுவிடம் அதிகாரங்கள் அனைத்தும் இருப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அது கட்டமைக்கப்பட்டுள்ளது. 

சர்வாதிகாரம் என்பது மக்களிடையே திணிக்கப்பட்ட ஒன்று எனவும், அது எக்காலத்திலும் மக்களால் விரும்பப்பட்டதில்லை என்ற வாதம் இங்கு இயல்பாகவே எழக்கூடும்.

லூயி மன்னர்களின் ஆட்சிக்கு எதிராகவும், மக்களாட்சி கோரியும்தான் பிரஞ்ச் புரட்சி நடத்தப்பட்டது. அப்புரட்சி வெற்றிப்பெற்ற சில ஆண்டுகளுக்குள்ளாகவே நெப்போலியன் தன்னை பிரான்சின் சக்கரவர்த்தியாக, முடிசூட்டிக்கொண்டார். மக்களும் அவரது தலைமையை ஏற்றுக்கொண்டனர்.

அதேபோல், மக்களாட்சிக்கு பெயர் பெற்ற ரோம் நாட்டில், ஜூலியர் சீசர் சர்வாதிகாரியாக முடிசூட்டிக்கொண்டார். அதுவரை மக்களாட்சியை விரும்பி வந்த ரோம் மக்களும், ஜூலியஸ் சீசர் சர்வாதிகாரத்துடன் ஆட்சி நடத்த சம்மதம் தெரிவித்தனர். இந்த பின்னணியில்தான், சர்வாதிகார ஆட்சி என்பது அதை யார் தருகிறார்கள் என்பதில் அடங்கியுள்ளதாக கருதுகின்றனர் அதன் ஆதரவாளர்கள்.

ஹிட்லரின் ஆட்சி, உலக மக்களால் கொடூரமான ஆட்சியாக கருதப்பட்டாலும், ஒரு தரப்பினரால் அது பொற்கால ஆட்சியாகவே பார்க்கப்பட்டது. முதல் உலகப்போரின் தோல்வியால், பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த ஜெர்மனியை, பழைய நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பை விரும்பி ஏற்றதுடன் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டினார் ஹிட்லர். 

ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையிலான முதல் உலகப்போரின் முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்களை கிழித்தெறிந்தார். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. போதைப்பொருட்கள், விபச்சாரம் உள்ளிட்டவை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டன. 

தனது சீர்திருத்தங்களால், செயல்பாடுகளால் உலக வரலாற்றில் தனி இடம் பிடித்த ஹிட்லர், யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளால் தனது தரத்தை  தாழ்த்திக்கொண்டார். 

அதேபோல், ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின், முசோலினி தொடங்கி, சதாம் உசேன், இடி அமீன், முகமது கடாஃபி வரையிலான பட்டியலில் சிலர் மட்டுமே தங்களது சர்வாதிகாரத்தை சரியாக பயன்படுத்தி மக்களால் விரும்பப்படும் தலைவராக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். அந்த அன்பான சர்வாதிகாரிகள் வரிசையில், ஜூலியஸ் சீசர், நெப்போலியன், லெனின், பிடல் காஸ்ட்ரோ, மாசேதுங், லீகுவான் யூ ஆகியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

#Adolf_Hitler #German_Politician #Dictators

புதன், 1 ஆகஸ்ட், 2018

எது பகுத்தறிவு, எது ஆன்மீகம்?

பொதுவாக எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலோருக்கு “தான்” என்கின்ற எண்ணமே முன் வந்து நிற்கிறது. “எதுவாக இருந்தாலும் நாங்கள் உணர்ந்தால் தான் நம்புவோம், நாங்கள் கண் கூடாகப் பார்த்தால் தான் நம்புவோம். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எதையுமே ஏற்க இயலாது” – இதுதான் பலரது உரத்த குரலாக இருக்கிறது.
சரி. எது பகுத்தறிவு? மனிதன் மட்டுமே பகுத்தறிவு படைத்தவன் என்று எந்த உறுதிப்பாட்டில் கூற முடியும்? மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியுமா?

மனிதன் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்குமே ‘பகுத்தறிவு’ உள்ளது என்பதுதான் உண்மை. அந்தந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு அந்த அறிவு அமைந்துள்ளது. ஒரு நாயைப் பார்த்து கல்லை விட்டு எறிந்தால் அது ஏன் ஓடுகிறது? நாம் அடிக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்வதினால் தானே! அந்த உணர்வுக்குப் பெயர் என்ன? ‘அனிச்சைச் செயல்’ என்றா சொல்ல முடியும்? அதே போல் ஒரு காகத்தை விரட்டினாலும், குருவியை அதட்டினாலும் அவை பறந்து சென்று விடுகின்றனவே ஏன்? இவன் நம்மை விரட்டுகிறான், தாக்க வருகிறான் என்று அவற்றால் உணர முடிவதால் தானே, அந்த உணர்விற்குப் பெயர் என்ன? – பகுத்தறிவாகத் தானே இருக்க முடியும்? அவை வாழும் உணர்வு உலகத்திற்கேற்ப அந்தப் பகுத்தறிவானது செயல்படுகிறது. அவ்வளவுதான். அதே சமயம் அவற்றின் பகுத்தறிவை மனிதனின் பகுத்தறிவோடு ஒப்பிடுவது மதியீனம். ஏனென்றால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பவன். அவன் அறிவை, அவனை விடக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட உயிரினங்களுடன் ஒப்பிட இயலாது. எப்படிக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட குழந்தையின் அறிவுடன், நன்கு வளர்ந்த இளைஞனின் அறிவை ஒப்பிட முடியாதோ அப்படித்தான் இதுவும்.
உண்மையைப் பார்க்கப் போனால் ஐம்புலன்களுக்குத் தான் ஐந்தறிவு. புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவான ஆறாம் அறிவைக் கொண்டவன்தான் மனிதன். ஆனால் அவற்றை உணராமல், அதைப் பயன்படுத்தத் தெரியாமல் ஐந்தறிவு படைத்த மிருகங்களைப் போலவே அவன் நடந்து கொள்கிறான். வாழ்கிறான்.

அறிய அறிய விரிவது தான் அறிவு. அறிந்து கொண்ட உண்மைகளை முன் தரவாக வைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து, அதன் முடிவுகளைப் பற்றிப் பேசுவது தான் அறிவியல். அறியாத அல்லது அறிய இயலாத உண்மைகளைப் பற்றி அதனால் எப்போதும் முடிவு கூற இயலாது. அதனால் தான் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. ஆனால் ஒரு உண்மையை நாம் முற்றிலும் மறந்து விடுகின்றோம். புத்தம் புதியதாக, இல்லாத ஒன்றை நாம் உருவாக்கி விடவில்லை. ஏற்கனவே வேறு ஒரு ரூபத்தில் இருந்ததை தற்போழுது வெளிக் கொணருகின்றோம், அவ்வளவுதான். We are not the Creators or Inventors. We are only the Discoverers.

இயற்கைக்கு மாறாக எதுவுமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது  நிச்சயம் பொய். யாராவது நிரூபித்தால் நான் ஒரு இலட்சம் ரூபாய் தருகின்றேன்.” அறைகூவல் விடுத்தார் திரு. ஆபிரகாம். டி. கோவூர். ஆனால் அவரது அறைகூவலை யாரும் ஏற்கவில்லை. அவரும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பேய், பிசாசுகள் ஆவிகள் இல்லை, எல்லாம் மனநோயின் பல்வேறு வடிவங்களே என்று சிலவற்றை நிரூபிக்கவும் செய்தார். கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. ஆத்மா என்ற ஒன்றெல்லாம் கிடையவே கிடையாது என்பது அவர் வாதம். ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்முடைய அளவிடும் திறன் என்ன? கடவுளைக் கண்ணால் காண முடியவில்லை. ‘ஆத்மா’ என்பதை உணர முடிவதில்லை. உடனே ‘எதுவுமே இல்லை’ என்று கூறிவிடுகின்றோம். நாம் பார்க்க முடியாததெல்லாம் உலகில் இல்லாத பொருள்களா என்ன?
சரி, ஒரு நாயின் கண்களுக்கு, ஒரு மாட்டின் கண்களுக்குத் தெரிவதை உங்களால் காண இயலுமா?( ஓ, மிருகங்களோடு ஒப்பிடக் கூடாது இல்லையா? மன்னியுங்கள். ஆனால் இங்கே வேறு வழியில்லை. அப்படிப் போய்த் தான் உண்மையை ஆராய வேண்டியுள்ளது.) சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமியின் போது பல இடங்களில் பறவைகளும், ஆடு, மாடுகளும் அதை முன்னரே உணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தம்மைக் காப்பாறிக் கொண்டன என்ற செய்தி நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. பறவைகளும், விலங்குகளும் அதை எப்படி முன்னரே உணர்ந்து கொண்டன? அந்த உணர்விற்குப் பெயர் என்ன? மிருகங்களை விட மிக உயர்ந்த “பகுத்தறிவு” படைத்த மனிதனால் ஏன் அதை முன்னரே உணர முடியவில்லை? உணர்ந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை?
சில சமயம் நாய் போன்றவைகள், காதினை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் குரைத்துக் கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். அவை ஏன் அப்படிச் செய்கின்றன, நமக்குத் தெரியாது. ஆனால் நம் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை. அது போன்றே மாடுகளும் சில சமயம் மிரளும். ஆனால் நம்மால் அதன் சரியான காரணத்தினை உணர இயலாது. அது ஏன்? இவ்வாறு சில மிருகங்களின் கண்ணுக்குத் தெரிவது, அவை கேட்பது, அவை உணருவது, மற்றும் சில பறவைகளின் கண்களுக்குத் தெரிவது, நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கேட்பதில்லை. நம்மால் உணர முடிவதில்லை. அது ஏன்? ஆராய்ச்சி செய்திருக்கிறோமா, இல்லை.
நாம் உயர்ந்த பகுத்தறிவு கொண்டவர்களாக இருந்தால் மிருகங்களை விட உயர்ந்த அறிவு நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மையானால் நம்மால் சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து ஏன் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டது? மிருகங்களை விட நாம் மட்டமா? அல்லது நமது அறிவுத்திறனில் ஏதாவது குறைபாடு உள்ளதா?
ஆம். அதுதான் உண்மை. சில விஷயங்களில் நாம் ஐந்தறிவு உயிரினங்களை விட மிக மிக மேம்பட்ட நிலையில் இருந்தாலும், சில விஷயங்களில் அவற்றை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அதற்கு காரணமும் உள்ளது. முக்கிய காரணம் ஒருகாலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த நாம், காலச் சூழல் காரணமாக அதற்கு மாறான வாழ்க்கையை நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது தான்.
நம்முடைய கேட்கும் திறன் 20-20000 டெசிபல் தான். அதற்கு மேற்பட்ட ஒலியையோ, கீழான ஒலியையோ நம்மால் கேட்க இயலாது. [இப்போதுதான் EVP (Electronic Voice Phenomenon)  முறையில் இது போன்ற ஒலிகளைப் பதிவு செய்யும் முறையில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று வருகிறார்கள்]. நுண்ணோக்கி இல்லாமல் சிலவற்றைப் பார்க்க முடியவில்லை. உடல் உறுப்புக்களைப் பார்க்க எக்ஸ்ரேயை, ஸ்கேனைப் பயன்படுத்துகின்றோம். இன்னும் தொலைநோக்கி, லேசர் என்று பல வகைகளைப் பயன்படுத்தித் தான் சிலவற்றைப் பார்த்து இன்னதென்று அடையாளம் கண்டுபிடிக்கின்றோம்.
இப்படி பார்வைத்திறனிலே குறைபாடு, கேட்கும் திறனிலே குறைபாடு என்று பலவற்றை நமக்குள் வைத்துக் கொண்டு, அமானுஷ்ய விஷயங்களை, கடவுள் போன்றவற்றை நாம் அளக்க முயன்றால் எப்படிச் சரியான விடை கிடைக்கும்? தவறான அளவு கோலால் அளக்கப்படுவது எதுவானாலும் தவறான முடிவினைத்தானே தரும்?.
ஒருகாலத்தில், இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்த காலத்தில் நமக்கு இத்தகைய திறமைகள் இயற்கையாகவே இருந்து, தற்போது பரிணாம வளர்ச்சியின் காரணமாக அவை நம்மை விட்டு நீங்கியிருந்தால்..?? இயற்கைக்கு மாறாக வாழ்ந்து நாம் அவற்றை இழந்திருந்தால்…. நம்மால் எதையும் சரிவர உணர முடியாது அல்லவா?
பரிணாம வளர்ச்சியின் காரணமாக, படிப்படியாக வால், உடலெங்கும் முடி, மிக நீண்ட கூரிய நகங்கள் போன்றவற்றை இழந்த நாம் இது போன்ற பல் வகை ஆற்றல்களையும் இழந்திருந்தால் நம்மால் எந்த விதக் கருவி, உபகரணம் ஏதும் இல்லாமல் எதையுமே தெளிவாகக் காண முடியாது அல்லவா?

 ஒரு வேளை கடவுள், ஆவிகள், தேவதைகள் போன்றவர்கள் காலம், இடம், பொருள் என்று எல்லாவற்றையும் கடந்த, வேறு பரிமாணத்தில் இருக்கின்றவர்களாக இருந்தால்! (அது தான் உண்மையும் கூட). நம் தவறான அளவுகோலால் எப்படிச் சரியான மதிப்பீடு பெற முடியும்? ஆகவே இதற்குத் தேவை நுண்ணிய ஆராய்ச்சி மட்டுமே. அதை விடுத்து அரை குறைக் கருவிகளை வைத்துக் கொண்டு அளப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.

நிலவில் நீர் இருப்பதை இன்று தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய வானியல் சாத்திரத்தில் இதையெல்லாம் முன்பே சொல்ல்யிருக்கிறார்கள்.

ஆகவே, சாதாரண மானுடர்களால் ஒரு செயல் முடியாது என்றால் அது நிகழவே நிகழ முடியாது என்பது பொருளல்ல. நம் மூளையின் ஆற்றலை நாம் வெறும் 8% சதவிகிதம் கூட சரிவரப் பயன்படுத்துவதில்லை. மீதிப் பகுதியையும் நாம் உணர்ந்து, அறிந்து, தெளிந்து பயன்படுத்த ஆரம்பித்தால் நாம் கடவுளை அடையலாம். இல்லை… கடவுளாகவே ஆகி விடலாம்.

சர்வம் பிரம்ம மயம்.

அஹம் பிரம்மாஸ்மி.

இவற்றை முறையாகப் பயின்று அறிவதே பகுத்தறிவு. அதுவே ஆன்மீகம்.



லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்.

தனது மகனின் ஆசிரியருக்கு லிங்கன் எழுதிய புகழ் பெற்ற கடிதம்.

அனைத்து மனிதர்களும் நேர்மையானவர்கள் அல்ல, அனைத்து மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல என்பதை எனது மகன் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், மனிதர்களில் அயோக்கியர்களுக்கு இடையில் உண்மையான கதாநாயகர்களும் இருக்கிறார்கள் என்பதையும், சுயநல  அரசியல்வாதிகளுக்கு இடையில் அர்ப்பணிப்பு மிக்க தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் பகைவர்களுக்கு இடையில் நண்பர்களும் இருக்கிறார்கள் என்பதையும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவனுக்குப் பொறாமைக் குணம் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

மௌனமாக ரசித்துச் சிரிப்பதன் ரகசியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து சுருங்கிக்கொள்வது கோழைத்தனம் என்பதைப் புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதைப் பள்ளியில் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டு குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

கும்பலோடு கும்பலாய்க் கரைந்துபோய்விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். எனினும் உண்மை என்னும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்து எடுக்க அவனுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். கண்ணீர்விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால், எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

தனது செயல்திறனுக்கும், அறிவாற்றலுக்கும் மிக அதிக ஊதியம் கோரும் சாமர்த்தியம் அவனுக்கு வேண்டும். ஆனால், தனது இதயத்திற்கும், தனது ஆன்மாவிற்கும் விலை பேசுபவர்களை அவன் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்ட தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம்காட்டி சார்ந்திருக்கவைக்க வேண்டாம். ஏனென்றால் கடுமையான தீயில் காட்டப்படும் இரும்பு மட்டும்தான் பயன்மிக்கதாக மாறுகிறது.

தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். அதே வேளையில் தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கைகொள்வான்.

இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான், இதில் உங்களுக்குச் சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன், எனது அன்பு மகன்.