செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

முடிவில்லாத பயணங்கள் முடிந்தவரை தொடருவோம்.....

பூமியில் உயிர்களின் தோன்றலின் போதே பயணங்கள் தொடங்கியது. முதன்முதலில் ஆதிமனிதனின் இடம்பெயர்தலே பயணத்தை தொடங்கியது..
நடைபயணமாகவே இடம் பெயர்தல் இருந்த காலக்கட்டத்தை சக்கரத்தின் கண்டுபிடிப்பு அடுத்த கட்ட பயணத்திற்கு மனித வாழ்க்கை வந்தது..

பல பயணங்கள் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வாஸ்கோடகாமாவின் கடற்பயணம் இந்தியாவை அடிமை படுத்த வழி வகுத்தது.
சீனாவின் குடியரசை உருவாக்கிய மா சே துங் மற்றும் அவரை சார்ந்த மக்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள 8000 கிலோமீட்டர் தூரத்தை தொடர்ந்து 370 நாட்கள் ஓடிய பயணமே நீண்ட நெடிய பயணமாக காலம் பதிந்துள்ளது..
சுற்றுலா பயணம் எப்போதும் மகிழ்ச்சியயை மனதில் தேக்கி வைக்கிறது.. போக்குவரத்து, பயணத்தை எளிதாக்கி விடுகிறது.. ஆனாலும் மனதிற்கு பிடித்தவர்களின் கை கோர்த்து நடந்து செல்லும் பயணம்... இனிமையான தருணமாகவே இருந்து விடுகிறது.

ரயில் பயணங்கள் சுகமான தாலாட்டுடன், காலத்தை பின்னோக்கி செல்வது போல் காட்சிகளையும் கடந்து சென்றுக் கொண்டே இருக்கிறோம்.
தேடல்களே பயணங்களை தொடங்குகிறது. சிலர் வேலை தேடி பயணம், சிலர் நண்பரை தேடி பயணம், சிலர் காதலை தேடி பயணம் இன்னும் சிலர் வாழ்வை தேடி பயணம்.. ஒவ்வொரு பயணத்திலும் ஒரு கதை கிடைக்கிறது. சிலருக்கு சிறுகதையாய் முடிகிறது. சிலருக்கு தொடர்கதையாய் தொடர்கிறது..
சிலரது பயணங்கள் புத்தகங்களுடனே பயணிக்கிறது... இன்னும் சிலரின் பயணங்கள் புத்தகத்தின் உள்ளே கதாபாத்திரங்களுடனும், குதிரைகளுடனும், போர்களத்திலும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாத்திரி" பயணம் பற்றிய புத்தகம் நம் பயணங்களின் எண்ணத்தை மாற்றிவிடும். பயணத்தின் போது மழை, வெயில், மேகம், கடல் எல்லாம் நம் நண்பர்களாக மாறிவிடும்.
பயணங்கள் பல ஆச்சர்யங்களையும்,அதிசயங்களையும் தன்னுளே புதைத்துக் கொண்டு உள்ளது. இந்த ஆச்சர்ய உலகத்தின் மீது நம்பிக்கை வைத்து நாமும் பயணத்தை ரசனையுடன் பயணிப்போம்..

ஜனனம்....
என்பதே ஒரு
வெற்றிப் பயணம்தான்
நம் அணைவருக்கும்...
அன்று
தொடங்குகிறோம்
வாழ்க்கை எனும்
பயணத்தை!!!
மழலை பருவத்தில்
அன்னையின் விரல்பிடித்து
தொடரும் பாச பயணம்...
பள்ளிப்பருவத்தில்
தோழமைகளின்
கரம் பிடித்து சில
விளையாட்டு பயணம்...
கல்லூரிப்பருவத்தில்
நல்ல நட்புகளும்
இனிமையான காதலுடனும்
கை கோர்க்கும் பயணம்....
இளமை பருவத்தில்
திருமண பந்தத்துடன்
தொடரும் உண்மை பயணம்...
நம் மழலை கை பிடித்து
தொடரும் அன்பு பயணம்...
எதையும் பொருட்படுத்தாது
பொருள் தேடும் பொறுப்பான
பயணம்....
முதுமை பருவத்தில்
மன அமைதியும்
இறை அருளும் தேடும்
இன்ப பயணம்....
முடிவில்லாத பயணங்கள்தான்
இப்படி....
முடிந்தவரை தொடருவோம்.......