புதன், 14 செப்டம்பர், 2016

கடந்து போகும் கறுப்பு ஜூலை…!

கர்நாடகாவில் தமிழர் ஒருவரை கன்னடர்கள் நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்துள்ள சம்பவத்தை வீடியோவில் பார்த்தேன். இந்தச் சம்பவங்கள் எல்லாம் தமிழர்களுக்கு புதிதல்ல..! உலகத்தமிழர்களாக ஒருங்கிணைந்து பார்த்தால் இலங்கையிலேயே அதிகமான இனக்கலவர சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
1983 Colombo
1956, 1958, 1977, 1981, 1983, இறுதியாக 2009 முள்ளிவாய்க்கால் மனிதஅவலத்துடன் கறைபடிந்த இனவாத அத்தியாயங்களாக பதிவு பெற்றது இலங்கை வரலாறு என்பது எல்லோருக்கும் ஞாபகமிருக்கும்.
இவை எல்லாம் வைத்துப்பார்த்தால் ஒரு விடயம் மட்டும் தெளிவாக புரிகின்றது. வாழும் நிலம்சார் சூழல் முதல் சமூக அரசியல் சூழலை புரிந்து கொண்டால் மட்டுமே அந்த கலவரத்தின் தன்மையையும், அதன் அரசியல் அரத்தத்தையும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழனும் சரி, இலங்கை தலைநகரில் தாக்கப்பட்ட தமிழர்களானாலும் சரி ஒரு விடயம் மட்டும் உண்மையானது.
நம் சமூகம்சார் வாழம் சூழுலும் நம்வீடும் மட்டுமே நமக்கு பாதுகாப்பானது. இன்று பிற நாடுகளாயினும் சரி! பிற மாநிலமானலும் சரி! தலைநகர சொகுசு வாழ்க்கையானாலும் சரி. இவை எல்லாம் புகைந்து கொண்டிருக்கும் எரிமலையின் வாசலின் சூட்டை தணித்துக்கொண்டிருக்கும் சுகம் போன்றது. 
எங்கெல்லாம் சிறுபான்மை எதிர்ப்பு அதிகமாகுமோ முதலில் இலக்கு வைக்கப்படுவது பெரும்பான்மை இடப்பரப்பிலேயே... இழக்கப்படுவது உயிர்கள் மாத்திரமல்ல, காலம் பூராவும் கடினப்பட்டு உழைத்த சொத்துக்களும் இலக்கு வைக்கப்படும்.இல்லை தீக்கிரையாக்கப்படும்.
இவை எல்லாம் கடந்து வந்த உலகவரலாறுகளை புரட்டிப்பார்த்தால் புரியும். இன்று கர்நாடகத்தில் நடைபெறுவது நாளை எங்கு என்பதற்கான கேள்விக்குறியே பல இடங்களில் தொக்கி நிற்கின்றது. காரணம் தமிழர்கள் உலகம் பூராவும் பரந்து வாழ்ந்தாலும் அவர்களுக்கிடையான யூத மக்களை போன்ற சர்வதேசமயப்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களோ நிலசார் கட்டமைப்புக்களோ இல்லாத ஒரு வெற்றிடங்களையே காண முடிகின்றது.
இலங்கைவாழ் தமிழர்களுக்கு இன்னும் தெளிவான அரசியல் தீர்வு திட்டங்களோ, பாதுகாப்பு பொறிமுறைகளோ இல்லாத இந்த நேரத்தில், பேரினவாத போசாக்கு உண்டு வளர்ந்த சில இனவாதிகளின் செயற்பாடுகள் அரசியல் இலாபத்துக்காக பயன்படுமாயின் தற்போதைய நல்லிணக்கம் நல்லடக்கம் செய்யப்படும். 
1983க்கும் 2009க்கும் 26 வருட இடைவெளியில் பெரியதொரு மனித அவலத்தை வரலாறுகளில் கறையாக விதைத்திருக்கிறது. 'மீண்டும்',
காலகற்பிதத்தை கணக்கிட்டு மறுமுறை கறைபடியுமெனில் அது "2042"ஆண்டிலா? இல்லை அடுத்த தேர்தல் காலத்திலா??? 
2016 karnataka

பதிலான எதிர்காலம் தொக்கி நிற்பது எம்தலைமுறைக்கா? இல்லை நமது அடுத்த தலைமுறைக்கா? 1983ல் 'கொழும்பு', இன்று 'கர்நாடகா!' மீண்டும் நடக்காது என்று யாராலும் உத்தரவாதப்படுத்த முடியாது.
கடந்துவந்த இழப்புக்களின் படிப்பினைகளிலிருந்து வருமுன் காப்போமா, இல்லை வந்தபின் காப்போமா என்பதை நாளைய தலைப்புச்செய்திகள் தீர்மானிக்கட்டும்.
-இது-
சொந்த ஊரில் காணி, வீடு, சொத்து, சொந்தங்கள், அடையாளங்களை 'விற்று' 'விட்டு' கடன்பட்டு தலைநகரில் அடுக்குமாடி வாங்கி வசிக்கும் எம்மவர்களுக்கு சமர்ப்பணம்.
©அ. எல்றோய்