வியாழன், 3 நவம்பர், 2011

போதி தர்மன் யார்? Bodhidharma

போதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒரு பௌத்த மத துறவி ஆவார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.

ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதைக் கருவை பற்றிய விடயங்களையும் யார் இந்த போதிதர்மன் என்று ஆராய்ந்து இணையத்தேடல் வாயிலாக  பகிர்ந்து கொள்வதில் ஒரு முயற்சி...

(Bodhidharma was a Buddhist monk who lived during the 5th/6th century and is traditionally credited as the leading patriarch and transmitter of Zen (Chinese: Chán, Sanskrit: Dhyāna) to China. He was the third son of a Tamil king of the Pallava Dynasty) http://en.wikipedia.org/wiki/Bodhidharma

போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்

இப்போது சாவலின்குங்க்பூவில் "பூமராங்" என்றொரு ஆயுதம் இருக்கிறதே, இது வளரி எனும் பெயரில் அகஸ்தியரால் முன்பே பயன்படுத்தப்பட்டது. உலகத் தற்காப்புக் கலைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் நமது சித்தர்கள் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆன்மீக ரகசியங்களை உணர்ந்து கொள்வதற்கு உறுதுணையாக இருந்தது சிலம்பம் எனும் தற்காப்புப் பயிற்சியே என்பதை அகஸ்தியர் தனது"கம்பு சூத்திரத்தில்" தெளிவு படக் கூறுகிறார். மேலும் எதிரியின் "கால்" வரிசையை வைத்து அவருடைய சுவாசம் இடகலையிலா? பிங்கலையிலா? என்பதை கவனித்து அந்த நிலையில் அவரைத் தாக்க வேண்டுமா? அல்லது அவரின் தாக்குதலைத் தடுக்க வேண்டுமா? என்பதையெல்லாம் தனது "கம்பு சூத்திரத்தில்" தெளிவுபடக்கூறுகிறார் அகஸ்தியர்.

இன்று உலக ராணுவப்பயிற்சிகளிலெல்லாம் "லெப்ட்,ரைட்" என்று கூறுகிறார்களே இதற்கு முன்னோடி நமது அகத்தியர் என்றால் அது மிகையாகாது. martial arts என்று சொல்லக்கூடிய எல்லாத் தற்காப்புப் பயிற்சிகளிலும் இடது காலை முன் வைத்தே பயிற்சி தொடங்கப்படுகிறது. வலது சுவாசத்தைச் செயல்படச் செய்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். சாவலின்குங்க்பூவிற்கும், சிலம்பத்திற்கும், வர்மத்திற்கும், யோகாசனத்திற்கும், ஆடல் கலையான பரதத்திற்கும் அடிப்படை ஒன்றுதான்.

குங்க்பூவிலும் முத்திரை உண்டு, வர்மத்திலும் முத்திரை உண்டு, யோகத்திலும் முத்திரை உண்டு, பரதத்திலும் முத்திரை உண்டு, குங்க்பூவில் ஆரம்ப நிலையில் செய்யக்கூடிய "sengoose stance" என்னும் நிலையே யோகத்தில் வீரபத்ராசனம். பரதத்தில் ஊர்த்துவ தாண்டவமாக செய்யக்கூடிய ஒரு நிலை குங்க்பூவில் elephant stance. இந்த நிலையே யோகத்தில் ஏகபாத ஊர்த்துவாசனம். பரதத்தை மித வேகமாக செய்தால் குங்க்பூ. அதையே மிக வேகமாக செய்தால் அது களறி, குங்க்பூவை மென்மையாக செய்தால் அது பரதம். அது சரி, இதுக்கும் போதி தர்மனுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கத் தோன்றுகிறதா?.......

சாவலின் கோவிலை நிர்மாணித்து குங்க்பூவை அறிமுகப்படுத்தியது போதிதர்மன் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் போதி தர்மன் குங்க்பூவின் தாய் பயிற்சியான களரியைப் பயின்றது பொதிகை மலையில் என்பது மறைக்கப்பட்ட வரலாறு. போதி தர்மன் புத்தபிக்கு என்றபோதும் அகத்தியரின் நேரடி சீடர் என்பதும் மறைக்கப்பட்ட செய்தி.

பல்லவ சாம்ராஜ்யத்தில் வைஷ்ணவர்களுக்கும் பௌத்தர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் புத்தப்பிக்குவாக அறிமுகம் செய்யப்பட்டப் பல்லவ இளவரசனைக் கொன்றுவிட வைஷ்ணவர்கள் முயற்சி செய்கிறார்கள். போகமஹரிஷியின் உதவியுடன் புத்தப்பிக்குவான இளவரசன் பொதிகைமலைக்கு அழைத்துவரப்பட்டு அகஸ்தியருக்கு அறிமுகப்படுத்தப் படுகிறான். "இறையில்லை ஆனால் இறைத்தன்மை உண்டு அதனை விழிப்புணர்வால் மட்டுமே அடையமுடியும்" எனக்கூறுகின்ற புத்தமும், "நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" எனக்கூறுகின்ற சித்தமும், கைகோர்த்ததில் ஒரு புது சந்நியாசி உருவானார். அவரே அக்கால தமிழ்நாடு, கேரள எல்லைப்பகுதியில் உள்ள மக்களால் “லாட சன்யாசி” எனும் திருப்பெயரால் அழைக்கப்பட்ட போதிதர்மன்.

குதிரையின் லாடத்தைத் தனது மரச் செருப்பின் அடியில் பதித்திருந்த இந்த லாட சன்யாசியால் இப்போதைய தென்காசி, செங்கோட்டை, நாகர்கோவில் பகுதியில் வாழும் மனிதர்களின் மூதாதையர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதே “அப்பியும்”, "விலங்குவர்மமும்". இன்றும் இந்தப்பகுதியிலேயே வர்மத்தில் சிறந்த வர்மானிகள் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. லாட சன்யாசியின் நினைவாக இன்றும் இந்தப்பகுதியில் சன்யாசி எனும் பெயருடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். அகத்தியரிடம் வித்தை கற்பதற்காகப் போதிதர்மன் குற்றாலமலையில் தங்கியிருந்த குகை “பரதேசிப்புடவு” என்னும் பெயரில் இன்றும் உள்ளது. குற்றாலத்தில் உள்ளவர்களுக்கேக் கூடத் தெரியாத இந்தக் குகைக்கு சீனப் புத்தப் பிக்குகள் வந்து செல்வது ஆச்சரியமான அதிசயம்.

அகத்தியரிடம் தான் கற்றுக்கொண்ட யோகபாடத்தையும், களரியையும் இணைத்து ஷாவலின் குங்க்பூவை வடிவமைத்தப் பெருமை போதிதருமனையே சாரும். பொதிகைமலையில் தங்கியிருந்த போதிதருமன் விலங்குகள் சண்டையிடும் காட்சியைப் பார்க்கிறார். உருவத்தில் பெரிய யானை, உருவத்தில் சிறிய சிறுத்தையிடம் தோற்றுப்போவதின் சூட்சுமம் புரிகிறது. ஒவ்வொரு விலங்கும் தனக்குள் இருக்கும் விஷேச சுவாசத்தைச் சப்தமாக,சக்தியாக மாற்றிக்கொள்வதின் ரகசியத்தைத் தனதுக் கூர்ந்த ஞானத்தால் உணர்ந்த போதிதர்மன், தான் கற்ற களரியில் விலங்குகளின் நிலைகளை(stance) இணைத்துக் கொள்கிறார். Monkey stance, elephant stance, tiger stance, snake stance, cat stance போன்ற பயிற்சி முறைகளே இன்றும் குங்க்பூவை மற்ற கராத்தே பயிற்சி முறைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. “சிட்டோரியன்,” “ஹயசிக்கா” போன்ற கராத்தே பயிற்சி முறைகளையும் நான் கற்றிருக்கிறேன். ஆனால் அவற்றிலெல்லாம் animal stance கிடையாது என்பதே நான் உணர்ந்த உண்மை.

ஒவ்வொரு விலங்குகளின் நிலையில் நிற்கும் போதும் மனிதனுக்குளிருக்கும் “தச வாயுக்கள்” இயக்கப்படுகிறது” . இந்த விஷேச நிலையினால் சுவாசம் கட்டுப் படுகிறது. “சலே வாதம், சலே சித்தம் நிச்சலம் நிச்சல பவதி” என்னும் பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் கூறியபடி சுவாசக் கட்டுப்பாடு மனத்தைக் கட்டுப்படுத்துகிறது. மன ஒடுக்கம் மனிதனின் ஞானப்பாதைக்கு வழி வகுக்கிறது. யோகத்தில் மேம்பட்ட சுவாசப் பயிற்சியாகக் கூறப்படும் “பதினெட்டுக் கதிகளையும்” தனது தற்காப்புப் பயிற்சியில் போதிதர்மன் பயன்படுத்தி இருக்கிறார். யோகத்தில், ஒரு குரு தனது நெருக்கமான, மேம்பட்ட சீடனுக்குக் கற்றுக்கொடுக்கும் உச்சக்கட்டப் பயிற்சியான “முத்திரைப் பயிற்சியையும்” குங்க்பூவில் இணைத்த பெருமை போதி தருமனையே சாரும்.

ஒருமுறை ஐந்தலைப்பொதிகையில் போதிதர்மன் இருந்தபோது, மூங்கில் மரத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுப் பனியின் எடை தாங்காமல் மூங்கில் மரம் வளைகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில் பனியின் எடை முழுவதையும் இறக்கிவிட்டு மூங்கில் மரம் நிமிர்கிறது. கூர்ந்த மதியுடைய போதிதர்மனுக்கு இந்த நிகழ்வு ஒருப் புது யுக்தியைப் போதிக்கிறது. நினைத்த மாத்திரத்தில் உடலின் எடையைக் குறைக்க முடியுமா? என அகத்தியரை வினவுகிறான். நமது உடலில் தசவாயுக்களில் ஒன்றான “உதானனைச்” செயல்படச் செய்தால் மனித உடலின் எடையைக் காற்றை விடக் கனம் குறைந்ததாக மாற்றிக் கொள்ளமுடியும்.எனும் அறிவியல் போதிக்கப்படுவதோடு உதானனைச் செல்படுத்த யோக பாடத்தில் ஒன்றான “உட்டியானா பந்தமும்” கற்றுக் கொடுக்கப்படுகிறது.

இன்றும் சீன தேசத்தில் மூங்கில் மரத்தில் நின்று கொண்டே பறந்து பறந்து பயிற்சி செய்யும் “உட்டான்” பயிற்சி முறை மிகவும் பிரபலம். சிலம்பத்திலும் ஒரு வீட்டிலிருந்து,இன்னொரு வீட்டிற்குப் பரந்த நிலையில் தாவிச் செல்லும் நிலைக்கு “உடான்” எனும் பெயரே வழக்கத்தில் உள்ளது. கொக்கும், நாகமும் சண்டையிடுவதைப் போதிதர்மன் பார்த்ததின் விளைவே இன்று உலகம் போற்றும் யோக ஆடல் கலையான “தாய்ச்சி” தோன்றியதின் ரகசியம்.

இவ்வளவு பெருமை வாய்ந்த போதி தர்மன் ஏன் சீனாவுக்குச் சென்றார் என நீங்கள் வினா எழுப்புவது எனக்குப் புரிகிறது.

அக்காலத்தில் சீன தேசத்தில் “இறைவன் இல்லை, ஆனால் இறைத்தன்மை உண்டு, ஒவ்வொருவரும் தனது விழிப்புணர்வின் மூலமாக மட்டுமே இறைத்தன்மையை உணர முடியும்” எனும் புத்தரின் போதனைகள் இறைவனை வெளியில் தேடிக்கொண்டிருந்தவர்களிடையே ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மதகுருமார்களும், பேரரசர்களும் வெகுண்டெழுந்தார்கள். புத்த பிக்குகள் சித்திரவதைக்கு உட்பட்டதோடு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். அதிகமான நியமங்களைக் கடை பிடித்த பிக்குகள் உடல் நிலையிலும் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார்கள். இந்தப்பிக்குகளால் எதிரியின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. இந்தப் பிக்குகளுக்கு எதிரியின் தாக்குதலைச் சமாளித்துக்கொள்ள தற்காப்புப் பயிற்சியுடன் கூடிய உடல் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் பயிற்சி முறைத் தேவைப்பட்டது. ..............காலம் கனிந்தது., சிறப்பு பயிற்சி பெற்ற போதிதர்மன் என்னும் திராவிடப்பிக்கு சித்த குருமார்களின் ஆசியோடு சீன தேசம் நோக்கிப் பயணப்பட்டார்.


இன்று யோகயுவகேந்திராவின் லோகோவாக வைத்திருக்கிறோமே “யின்-யாங்”, இதுதான் அன்றைய போதிதர்மனின் கொடிச்சின்னம். இந்த யின்-யாங்கை சீனர்கள் இன்று தங்களுடையது எனக்கூறினாலும், இது நமது சித்தகுருமார்களால் வடிவமைக்கப்பட்டது என்பதே உண்மை. வலது சுவாசமான யின் னையும், இடது சுவாசமான யாங் கையும் இணைக்கத் தெரிந்தால் ஒரு மகத்தான சூட்சும, சுழுமுனைச் சக்தியைப் பெறமுடியும் என்பதே யின்-யாங் சொல்லும் தத்துவம். இன்றும் சித்தகுருமார்கள் இருக்கிற ஊர்களிலுள்ள கோவில்களில் யின்-யாங் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாகத் திருவண்ணாமலைக் கோவிலில் இந்தச் சின்னம் அதிகமாகப் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.


பின்னாட்களில் நான் “அக்குபஞ்சர்” பயின்றபோது, இந்த குத்தூசி வைத்தியத்திலும் போதிதர்மன் சிறந்த ஞானத்துடன் இருந்ததை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஷாவலின் கோவிலுள்ள புத்தப்பிக்குகளுக்கு போதி தருமன் "குத்தூசி வைத்தியம்" செய்ததாக அக்குபஞ்சரின் மூலப் புத்தகமான "நெய்ஜிங்கில்" குறிப்புகள் காணப்படுகிறது.

போதிதர்மன் நோக்கு வர்மத்திலும் தலை சிறந்து விளங்கியிருக்கிறார். யோக சத் கிரியாக்களில் ஒன்றான "திராடகப்" பயிற்சியின் உச்சக்கட்ட நிலையே வர்மத்தில் "நோக்கு வர்மமாகப்" பேசப்படுகிறது. பிராணயாமப் பயிற்சியின் மூலமாகப் பிராண சக்தியைத் தனக்குள் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற ஒரு மேம்பட்ட யோகிக்கு மட்டுமே நோக்கு வர்மம் சித்தியாகும் என்பது யோக ரகசியம்.

வெளியில் போராடும் குணம் உள்ள ஒரு ரஜோ குண வாதியே பின்னாளில் மனதுடன் போராடத் தகுதியுள்ள சத்துவ குண யோகியாக மாற முடியும் என்பதே போதிதர்மன் கண்ட உண்மை. குற்றாலமலையிலுள்ளப் “பரதேசிப்புடவில்” லாடசன்யாசி இன்றும் வந்துபோகிறார். அவருடைய லாடம் பதித்த மரச் செருப்பின் தடம்தான் இதுவென எனது களறி குருமார்கள் காட்டியக் காலடித் தடங்களை இன்றும் என்னால் நினைவு கூற முடிகிறது. இன்று எனது களறி, மற்றும் வர்ம குருமார்கள் என்னுடன் இல்லை. கிருஷ்ணன் தாத்தாவையும், பாஸ்கர நாயரையும், காலம் என்னிடமிருந்து பிரித்துவிட்டது. ஆனால் “பரதேசிப் புடவில்” வைத்து அவர்கள் கற்றுத்தந்த “சித்த வித்தை” என் அடி மனதில் நீங்காமல் நிலைத்திருக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாக சமாதியடைந்த "சண்முகச்சாமி" எனும் சித்த வித்யார்த்தி இந்த பரதேசிப்புடவில் நீண்ட காலம் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாத அறிவுடன் சீனம் சென்று, ஏழாம் அறிவையும் தாண்டி, எட்ட முடியாப் புகழுடன் விளங்கும் போதிதருமன் எனும் திராவிடப் பிக்குவின் யோகப்பணி நினைந்து பெருமை கொள்கிறது -

குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் vs prinze ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple – kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).

4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.

5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.

6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué
யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)

8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.

9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.

10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)


11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.நன்றி இணையம்,,yogashiva,wiki