ஞாயிறு, 16 அக்டோபர், 2011

உண்மையில் மனிதன் யார் ?

நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு.

மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது.

1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள்.

2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்டுவதற்கு ஏதாவது இல்லாவிட்டால் நம்மால் சிந்திக்கவே முடியாது. நம்மை சிந்திக்கத் தூண்டும் புத்தகத்தை எழுதிய மனிதனுக்குக்கூட வேறு ஏதேனும் ஒன்று தூண்டுதலாக இருந்திருக்கும்.

3. மொத்தத்தில் கூட்டு சிந்தனையே அனைத்து தத்துவங்களுக்கும் காரணம்.
இந்த இடத்தில்தான் மொழியின் சிக்கல் விஸ்வரூபம் எடுக்கிறது. உதாரணமாக, "அம்மா" என்று ஒருவரை அழைக்கும்போதே மற்றவர்கள் யாரும் "அம்மா" இல்லை என்பதை உணர்த்துகிறோம். எதிர்பாலினத்தைக் காதலிப்பதாகச் சொல்லும்போதே, மற்றவர்களை வெறுக்கிறோம் என்பதை ஏற்கிறோம். ஒருவரை நேசிக்கும்போதே, அடுத்தவரை நேசிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில், ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை சுமந்துகொண்டே அலைகிறது.

4. இப்படி புனிதமாக நாம் நினைக்கும் எல்லாம் வெறும் புடலங்காய்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

5. உண்மையில் தன்னைத் தவிர யாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.

6. அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே, அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பதுதான். மனதின் சந்தோஷமே அடுத்தவர் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது.

7. விலங்குகளின் இயல்பே மனிதனின் இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கும் போதுதான் குற்ற உணர்வுகளும் மன அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.

8. புனிதம் என்று காலம் காலமாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரும் விஷயம் காதல். உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்து வேறு எதுவுமே கிடையாது.

9. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓர் ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் சாயலாகக் காணும் ஆண், அவளைக் காதலிப்பதாக நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதைத் தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.

10. பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை பலரிடம் காண்பதுதான். அதனால்தான், அனுபவம் கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்துகொண்டே போகிறது; மாறிக்கொண்டே இருக்கிறது. மறுபாதியின் பிரதிபலிப்பைக் காணும்போதெல்லாம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறது. பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இப்போது காதலுக்காக வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இறந்து, ஆவணக் காப்பகங்களில் செல்லரித்துப் போயிருக்கின்றன.

11. இன்று சராசரியாக ஒவ்வொருவரும் பன்னிரெண்டு, பதிமூன்று வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். அது முதலே காதல் உணர்வு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அதனால்தான், இருபத்து மூன்று வயதுப் பெண்ணிடம் காதலிப்பதாக ஓர் ஆண் சொல்லும்போது அவள் சிரிக்கிறாள். அவளுக்குத் தெரியும், போகப் போக இன்னும் அதுபோன்ற பலரை தான் எதிர்கொள்ள நேரிடும் என்று!

12. ஒவ்வொருவரும் இன்று நேரில், போனில், இன்டர்நெட்டில் என்று எதிர் பாலினத்தைச் சேர்ந்த பலரிடம் தினமும் பேசுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். எதற்காகப் பேசுகிறோம், பழகுகிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாதது போல நடந்துகொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது ‘புனிதத்தைக் காப்பாற்றுகிறது.

13. உண்மையில் அன்றாடம் நாம் சந்திப்பவர்களில் நமது எதிர்காலத்துக்கு யார் உதவுவார்களோ அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்க மனம் அனுமதிக்கிறது.

14. இன்றைய தேதியில் திருமண மையங்களில் பதிவு செய்பவர்கள்கூட, இன்ன தகுதியுள்ள, இன்ன வேலை செய்யக்கூடிய வரன்தான் தேவை என்பதைத் தெளிவாகக் கேட்டுப் பெறுகிறார்கள். காதலிப்பதாக சொல்பவர்கள்கூட, சாதாரணமானவர்களைக் காதலிப்பதில்லை. தகுதியானவர்களை, தங்கள் எதிர்காலத்துக்கு பயன்படக் கூடியவரை மட்டுமே காதலிக்கிறார்கள்.

15. பரஸ்பர உதவிகளே காதலின் அடித்தளம். இந்தத் தகுதியும், பயனும் ஆறு போல ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் காதல் உறவும் நீடிக்கும். குட்டையைப் போல தேங்கிவிட்டால், சாக்கடையைப் போல உறவும் நாறி, பிரிவை நோக்கி நகர்ந்துவிடும்.
தோழமையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

16.தேவை அறிந்து உதவுபவன் மட்டுமே நண்பனாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான். உதவாதவன் விரோதி பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பான்.
இப்படி உதவுபவனும் சாகும் வரை உதவ வேண்டும். அப்போதுதான் அவன் உயிர் நண்பன்.

17. எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்போதுதான் சந்தோஷம் பிறக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அப்படியானால் சந்தோஷமும் துக்கமும்கூட கற்பிதம்தானே?

18. மனது ஏற்கும் விஷயம் சரியாகவும் ஏற்க அச்சப்படும் விஷயம் தவறாகவும் அர்த்தமாகும்போது, உணர்வுகளும் பொய்யாக அல்லவா போகிறது?

19. நன்றி, விசுவாசம், நேர்மை, நியாயம்... போன்ற வார்த்தைகள் புனிதமல்ல. ஒரு செயலைச் செய்ய அச்சப்படும்போது, நம்மை நாமே சமாதானப்படுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. அவ்வளவுதான்.

20. விசுவாசிகளை தலைவன்கூட நம்புவதில்லை. தலைவனைத் தவிர வேறு யாரையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை. இந்த விலங்கின் இயல்பை ஏற்றுக்கொண்டவன் புத்திசாலி. ஏற்கத் தயங்கி யோசிப்பவன் முட்டாள்!

21. இந்த சமூகத்தில் வேட்டையாடத் தெரிந்தவன் மட்டுமே வாழத் தகுதியானவன். வேட்டையாட அஞ்சுபவன், வேட்டையாடப்பட வேண்டியவன். நீங்கள் வேட்டையாட விரும்புகிறீர்களா? வேட்டையாடப்பட விரும்புகிறீர்களா? இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து உங்கள் எதிர்காலம் இருக்கும். ?

சேகுவேரா வரலாற்றின் நாயகன்

http://amalathaselroy.blogspot.com/சேகுவேரா - வரலாற்றின் நாயகன் - 1

ஜனவரி1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. குயூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா, resignation) செய்தார். பணிதுறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானதளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில். அதே வேளை ஹவானா முதல் குயூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. பாட்டிஸ்டாவின் அரசில் அதிகாரம் செலுத்தியவர்களை காப்பாற்றி ஐக்கிய அமெரிக்க தேசத்தின் (USA) மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ஜாக்ஸன்வில் நகரங்களுக்கு கொண்டு செல்ல அன்று இரவு பல விமானங்கள் கேம்ப் கொலம்பியாவிலிருந்து பறந்துகொண்டிருந்தது. தன்னையும், தனது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்றுமளவு வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு தனக்கிருந்தும் பாட்டிஸ்டா எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்? அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட புரட்சிக்கு காரணமென்ன? விடைகாண இன்னும் 26 வருடங்களுக்கு பிந்தைய கியூபாவுக்கு வாருங்கள்.

செப்டெம்பர் 4, 1933 கியூபாவில் 'சிப்பாய்கள் கலகம்' என்ற இராணுவ புரட்சி நடந்தது. ஜெரால்டொ மசாடோ தலைமையிலான அரசு அன்றைய இராணுவ புரட்சியில் வீழ்ந்தது. 33 வயது நிரம்பிய பாடிஸ்டா கியூபாவின் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். அப்போது முதல் இராணுவத்தின் விளையாட்டுகள் அரச அதிகாரத்தில் ஆரம்பமானது. பாடிஸ்டா தன்னை இராணுவத்தலைவராக, அரசை உருவாக்கும் வல்லமையுள்ளவரா, அமெரிக்காவின் ஆதரவு பெற்றவராக உயர்த்தினார். பின்னர் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக மாறிய இந்த பாடிஸ்டா யார்?

********
பாடிஸ்டா பிறந்தது கியூபாவின் ஓரியன்டே மாகாணத்தில் ஜனவரி 16, 1901. இனக்கலப்பு (வெள்ளை, இந்திய, சீன, கருப்பின) கொண்ட கரும்பு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்த இந்த சிறுவனின் பெயர் ரூபன் புல்ஜென்சியோ பாட்டிஸ்டா சால்திவர். சிறுவயதிலேயே பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த பாடிஸ்டா பகலில் வேலைக்கு சென்று இரவில் பள்ளிக்கு சென்றார். புத்தகங்கள் படிப்பதே தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தவர் பாடிஸ்டா. 1921 இல் இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் சேர ஹவானாவுக்கு செல்ல பயணம் செய்வதற்காக கைக்கடிகாரத்தை அடகுவைத்தார். பொருளாதார பிரச்சனையான பின்னணியிலிருந்து வந்த பாடிஸ்டா 1932இல் சார்ஜெண்டாக பதவியுயர்வு பெற்று மறுவருடத்தில் ஆட்சியை கைப்பற்றுமளவு வளர்ந்தார். அதே நேரம் பாடிஸ்டாவின் அதிகாரத்தையே அப்புறப்படுத்த போகிற ஒருவர் பிறந்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது பாடிஸ்டாவின் கழுகுப்பார்வையில் தெரியவில்லை. அதுவும் தனது மாகாணத்தில் மிக அருகில் அவர் இருப்பதை. யார் அவர்?
Posted Image
*********
பாடிஸ்டா பிறந்த அதே ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது (உண்மை கடிதமா தெரியவில்லை, யாரவது தெரிந்தால் உறுதிபடுத்துங்கள்). அந்த சிறுவயது காஸ்ட்ரோவுக்கு தெரியாது அமெரிக்காவை அலற வைக்கிற வலிமை தன்னிடமிருப்பது. குடும்பத்தின் அரவணைப்பில் கியூபாவின் சந்தியாகு, ஹவானாவில் உயர்தர கிறிஸ்தவ பள்ளிகளில் கல்வி கற்றார். 1945இல் சட்டம் பயில துவங்கி 1950இல் ஹவானா பல்கலைப்பட்டம் வாங்கினார். 1948இல் மிர்றா டியஸ் பலர்ட் என்ற பெண்ணை மணந்தார். அவரது திருமணத்திற்கு பாடிஸ்டா கணிசமான தொகையில் பரிசனுப்பினார். இருந்தும் பாடிஸ்டாவின் ஆட்சியை அப்புறப்படுத்த இளைஞர்களை திரட்டி புரட்சிக்கு புறப்பட்டார் பிடல் காஸ்ட்ரோ. அவரை இந்த புரட்சிகர நிலைக்கு தள்ளியது எது? இதனால் கியூபாவின் சரித்திரம் மட்டுமல்ல, உலகின் பார்வையும், விடுதலைப்போரியலில் புதிய வழிமுறையும் பிறக்கபோவது அப்போது அவருக்கு தெரியுமா? அவருக்கு துணையாக புறப்பட்டு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய அந்த சரித்திர மனிதன் யார்?

வரலாறு விரியும்...

ஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires)400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரொசாரியோவிலுள்ள ஒரு வீடு. ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர் தங்களுக்கு அன்று பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டெ ல செர்னா என பெயர் சூட்டினர்.

அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. குட்டிப்பையனாக இருந்த ஏர்னெஸ்டோவுக்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ஏர்னெஸ்டோவுக்கு ஒரு வயதிருக்கும் பொழுது ரோசாரியோவிலிருந்து அந்த பண்ணைக்கு குடிபுகுந்தார்கள் அங்கு ஏர்னெஸ்டோவுக்கு தங்கை ஒருவர் கிடைக்கப்பெற்றார். அவரது 2வது வயதில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஆஸ்துமா நோயிருப்பது கண்டறியப்பட்டது. ஏர்னெஸ்டோவின் மூன்றாவது வயதில் அவரது குடும்பத்தினர் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்க்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவருக்கு தம்பியொருவர் பிறந்தார். ஏர்னெஸ்டோவின் ஆஸ்துமா அதிகமானதால் அவரது உடல் நலனுக்கேற்ற காலநிலையுள்ள அல்டா கிரேசியா என்ற நகரில் குடிபெயர்ந்து, சுமார் 10 வருடங்கள் அங்கு வாழ்ந்தார்கள்.

நோய்வாய்ப்பட்டதால் அதிகமாக புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார் ஏர்னெஸ்டோ. சிறு வயதில் ஏர்னெஸ்டோ தனது தாயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தாயார் அவரை சுயமாக சிந்தித்து வளரும் தன்மை மிக்கவராக வளரத் தூண்டினார். விடுமுறையில் குடும்பம் சந்தோசமாக பொழுதை கழித்துவந்தனர். தந்தையார் வைத்திருந்த படப்பிடிப்பு கருவியால் ஏர்னெஸ்டோவை படம் பிடிப்பது வாடிக்கை. அவரது 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு யுத்தச்செய்திகள் சேகரித்து வந்தார். அதனால் சிறுவயதிலேயே யுத்தம் சம்பந்தமான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டார் ஏர்னெஸ்டோ. அது தான் ஏர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் துவக்கம். அங்கிருந்து துவங்கிய இந்த அலை அவரை சமூகத்தின் அவலங்களை தேட வைத்தது.

அர்ஜென்டினாவில் ஏர்னெஸ்டோ வளர்ந்து கொண்டிருக்கையில், கியூபாவில், பாடிஸ்டா அதிகாரத்தை கைப்பற்றியதன் பின் அமெரிக்க வல்லரசு பாடிஸ்டாவின் எதிராளிகளை சரிகட்டி அமெரிக்க நிறுவனங்களை அங்கே நிறுவ ஆரம்பித்தது. இடைக்கால அதிபராக இருந்த ரமோன் கிரயு சன் மார்டினுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, புதிய அதிபராக கார்லோஸ் மெண்டியெட்டா அமர்த்தபட்டார். அமெரிக்கா இந்த புதிய அரசை உடனடியாக அங்கீகரித்தது. மே 29, 1934 குயான்றனாமோ பே (Guantnamo Bay) தீவை பயன்படுத்த உடன்படிக்கையை கியூபாவுடன் எற்படுத்தியது அமெரிக்கா. அன்று முதல் இன்று வரை அந்த தீவு அமெரிக்காவின் வசம்.
தொடர்ந்து வந்த அமெரிக்க ஆதரவு பாடிஸ்டாவை பலம் மிக்கவராக மாற்றியது. பாடிஸ்டா பல நிழல் உலக வர்த்தக பிரமுகர்களுடன் தொடர்பை வலுப்படுத்தினார். இந்த தொடர்புகள் வழியாக பல சூதாட்ட விடுதிகள் ஹவானாவில் திறக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பாடிஸ்டா அதிகாரத்திலுள்ள நண்பனாக இருந்தார். அரசு நிர்வாகம் லஞ்சமும், ஊழலுமாக மக்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்தது. மாணவர்களும், பொதுவுடமையாளர்களும் எதிர்ப்புகளை காட்டிய வண்ணமிருந்தனர். பல எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பாடிஸ்டாவை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. மாணவர் தலைவர் ஒருவர் எழுதிய கடிதத்தில் பாடிஸ்டா பற்றி "புரட்சி என ஒன்று நடந்தால், தான் தப்பிச் செல்ல விமானம் ஒன்றை தயாராக வைத்திருக்கும் குணமுடையவர்" என்றார். கியூபாவில் அதிபருக்கான தேர்தலும் வந்தது.

அர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூக போராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் காலச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகியது.

அவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமான இடம். உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, இனிமையான காலநிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. ஏர்னெஸ்டோவின் தந்தையார் அந்த நகரின் பணக்கார, மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடு கட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார். ஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப்(golf) விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட தாயின் அரவணைப்பு ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டும், கரங்களை பிடித்தபடியே நடப்பது வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது.

புத்தகம் படிபதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் ஏர்னஸ்டோ. ஆஸ்துமாவின் அழுத்ததினால் 9 வயது வரை தாயின் கவனிப்பில் வீட்டிலேயே படித்தார் ஏர்னெஸ்டோ. 2 வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது, 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார். ஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மன உறுதியை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தியது. சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிடவேலை செய்த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டு பிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை. சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடனே இருந்தார்.

லத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மேட்ரிட் (Madrid), டெருயெல்(Teruel), குயுரென்சியா(Querencia) நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் போல அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.
~o00o~
கியூபாவில் நடந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் புதிய அரசியல் சட்டம் உருவானது. புதிய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கான சமூக உரிமைகள், வேலைவாய்ப்பு, சம ஊதியம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என நல்ல பல திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. தனிநபர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டுப்பாட்டில் குவித்து வைத்திருந்த பெரிய பண்ணை நிலங்களை சட்டத்துக்கு புறம்பானதாக்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நிலசீர்திருத்தத்தை வலியுறுத்தியது புதிய அரசியல் சட்டம். அதன் பின்னர் 1940ல் நடந்த தேர்தலில் பாடிஸ்டா அதிபராக போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த தேர்தலில் தனது பழைய எதிரி சன் மார்டினை தோற்கடித்து கியூபவின் 14வது அதிபராக பதவியேற்றார் பாடிஸ்டா. பாடிஸ்டாவின் அரசு 1943 இல் கம்யூனிஸ்டு கட்சியை சட்டப்படி செயல்பட அனுமதித்தது. அமெரிக்காவுடன் வியாபார தொடர்புகள் அதிகரித்தன. யுத்தவரி என்ற பெயரில் கியூபா மக்கள் மீது கடும் வரிச்சுமை உருவானது. இதன் பிரதிபலிப்பு அடுத்து 1944இல் நடந்த தேர்தலில் சன் மார்டின் வெற்றிபெற்று பாடிஸ்டாவை பதவியிலிருந்து இறக்கினார். வெற்றிபெற்று வந்த புதிய அதிபர் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்தார். பதவிக்கு வந்ததும் அரசியல் சட்டத்தை முறையாக செயல்படுத்த துவங்கியது. அதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் கியூபாவில் தளர துவங்கியது. அமெரிக்காவின் நிழல் விளையாட்டுக்கள் மீண்டும் கியூபாவில் ஆரம்பமானது.


(வரலாறு வளரும்)

குயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான குயூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப்படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.

குயூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்று அதிபரானார். பாடிஸ்டா லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து குயூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

******

யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜுயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோ வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜுயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.

பெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அர்ஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது பதினொன்று. அர்ஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. தனது 16 வயதில் லத்தீன் அமெரிக்கவில் பலரது எண்ணங்களில் புரட்சியை தூண்டிய மாபெரும் மக்கல் கவிஞன் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ. இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.

The Me Bird by Pablo Neruda

I am the Pablo Bird,
bird of a single feather,
a flier in the clear shadow
and obscure clarity,
my wings are unseen,
my ears resound
when I walk among the trees
or beneath the tombstones
like an unlucky umbrella
or a naked sword,
stretched like a bow
or round like a grape,
I fly on and on not knowing,
wounded in the dark night,
who is waiting for me,
who does not want my song,
who desires my death,
who will not know I'm arriving
and will not come to subdue me,
to bleed me, to twist me,
or to kiss my clothes,
torn by the shrieking wind.

That's why I come and go,
fly and don't fly but sing:
I am the furious bird
of the calm storm.


ஏர்னெஸ்டோவின் தந்தையாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் அவர். ஏர்னெஸ்டோவையும் அவரது தாயாரையும் எரிச்சலடைய வைத்தது அந்த நிகழ்வு. அது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவர் கோபமடந்தார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஏர்னெஸ்டோ அவரது தாயாருடன் மேலும் நெருக்கமானார்.

ஆஸ்துமாவின் தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவராகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகளை மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.

சிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா பகுதி வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தாலும், அட்டைபெட்டிகளாலும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று பிழைத்து வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம். அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடையை செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அவர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பரும் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வின் வழி பணக்காரர்கள் ஏழைகள் மீது கொள்ளும் இரக்கம் விடுதலையாகாது என்பதை உணர்ந்தார்.

பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947 ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லூரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வலுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.

ஏர்னெஸ்டோவின் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமாக ஒரு விடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்கா முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள் 1951 இல் பொதெரோசாII என பெயரிடபட்ட நோர்டன் 500சிசி மோட்டர் சைக்கிளில் பயணம் துவங்கினர்.

(வரலாறு வளரும்

குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். தங்களது வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்காகவே காஸ்ட்ரோ வாதாடினார். இதனால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்குகளுக்காக வந்த ஏழைகளிடமிருந்து வாழ்க்கை போராட்டங்களை நேரடியாகவே பிடல் அறிந்துகொண்டார். ஏழைகள் வறுமையில், நோயின் கோரப்பிடியில் தவிப்பதும், செல்வந்தர்கள் ஆடம்பரங்களும், கேளிக்கைகளும் நிரம்பிய மயக்கத்தில் வாழ்வதையும் காஸ்ட்ரோ புரிந்துகொண்டார். சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதமாக அரசின் திட்டங்களும், அமைப்புகளும் செயல்படுவதை அவர் உணர்ந்தார். குயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது.

எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியலில் ஈடுபட வைத்தது. அரசியல் அறிவு வளர்ந்த வேளையில் மக்களுக்காக பணிசெய்ய தீர்மானித்த காஸ்ட்ரோவுக்கு குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு கவர்ந்தது.

காஸ்ட்ரோ 1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார். ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தனர். காஸ்ட்ரோ அதிகமான நேரத்தை கட்சிப்பணியில் மக்கள் பிரச்சனைகளுக்காக செலவிட்டார். அரசாங்க அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. காஸ்ட்ரோவின் ஈடுபாடு குயூபா மக்கள் கட்சியில் மேலும் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான செயலாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்டு இளைய வயதினர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமாக இணைந்தனர்.

1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வேளையில் குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெறும் நிலை இருந்தது. இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் இராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நடவடிக்கையானது குயூபா மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர் நிகழ்வுகள் குயூபாவின் வரலாற்றை மாற்றியமைத்தது.



-o0o00o000o00o0o-



அர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் (Norton 500 cc motorcycle named La Poderosa II ("The Mighty One, the Second")) வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் தங்களது நீண்ட பயணத்தை துவங்கினர்.

ஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிப வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்காவிற்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். இருவரும் முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய கால அவசரத்தில் பயணத்தை துவக்கினார்கள். பயணம் துவங்கும் முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்துகொள்ள விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்து ஏர்னெஸ்டோவும், ஆல்பர்ட்டோவும் புறப்பட்ட வேளையில், ஏர்னெஸ்டோவின் அன்னை சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களும் கலங்கியது. விடை பேற்று வீறிட்டு கிழம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனம் பிரிவின் முதல் வலியை உணர துவங்கியது. எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட தனது அருமை மகன் தொலைதூர பயணம் செல்கையில் எழும் வெறுமை, நிச்சயமற்ற தன்மை அன்னையின் மனதை கனமாக்கியது. ஏர்னெஸ்டோ தனக்கு அருகேயே இருந்து ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை அன்னனயை வாட்டியது. இணைந்திருந்த வேளைகளின் சிறப்பு பிரிவில் தெரியும் மானிட பாசத்தின் இயல்பு ஏர்னெஸ்டோவின் அன்னைக்கும் ஏற்பட்டது.

ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என அனனத்தையும் கடந்து காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் நகரை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் ஏனெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே ஏர்னெஸ்டோ காற்றில் மிதந்தபடி பயணம் போகிறார்.

இந்த இளம் வாலிபனின் மனதை கொள்ளைகொண்ட நாயகி யார்?

ஏர்னெஸ்டோவின் காதலி!

தனக்காக காத்திருப்பதாக உறுதியளித்த காதலி சிசினாவை விட்டு பயணம் செய்த ஏர்னெஸ்டோவின் வண்டி கரடு முரடான சாலையில், காற்றை கிழித்து வேகமாக சென்றது. காதலியை பிரிந்த ஏர்னெஸ்டோவின் மனதில் தான் எத்தனை அழகிய பசுமையான எண்ணங்கள். நினைவு அருவி சுழலில் சிக்கி தவிக்கும் மனது பழைய நிகழ்வுகளை சுழல வைத்தது. அழகிய அந்திப்பொழுதில் சிசினாவை சந்தித்த முதல் வேளை ஏர்னெஸ்டோவின் மனதில் பசுமையாய் படர்ந்தது.

மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டு பிசானி கிளினிக்ல் வேலை பார்த்து கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாடுவதும் ஜார்ஜ் மாமாவிடம் க்ளைடர் பாடங்கள் கற்பதுமாக இருந்தார். அர்ஜென்டினா முழுவதும் மோட்டார் பயணம் செய்து வந்திருந்ததால் உலகை சுற்றிப்பார்க்க ஆசை அலைமோதிய காலகட்டமது. அடுத்த பயணத்திற்கான திட்டங்களை தயாரித்துக்கொண்டே இருந்த அந்த அக்டோபர் மாத கடைசியில் ஏர்னெஸ்டோவின் வாழ்வில் புதிய இனிய அனுபவம் வந்தது.

கொன்சலஸ் அகுலியார் அவர்களுடைய மகள் கார்மன் திருமணத்திற்காக ஏர்னெஸ்டோ குடும்பத்தினர் கொரடோப பயணம் செய்தனர். அந்த திருமண விருந்தில் மரியா டெல் கார்மன் "சிசினா" பெரேரோ என்ற 16 வயது மங்கையை கண்டார். கொரடோபவின் மிகவும் வசதி படைத்த வீட்டு மங்கையான சிசினா அழகாய் இருந்தார். சிறுவயதில் ஏர்னெஸ்டோவும் சிசினாவும் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தாலும் நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்தபோது விழிகள் வீழ்ந்து, இதயங்களில் இறகுகள் முளைத்தது. இருவரின் பார்வையில் இதயங்கள் இடமாறிய வேளையில் "ஏர்னெஸ்டோவின் மீது மின்னல் பாய்ந்த உணர்வு" ஏற்பட்டதாக இந்த நிகழ்வை கண்ட பெப்பெ அகுல்யர் விவரிக்கிறார். முதல் முறையாக காதல் வயப்பட்டார் ஏர்னெஸ்டோ.

ஏர்னெஸ்டோவால் சிசினாவும் கவரப்பட்டார். அவரது அழகிய உருவமும், கலகலப்பும் வெகுளியான பேச்சும், கள்ளமில்லா மனதும் சிசினாவை கவர்ந்தது. "அவரது அழுக்கான கசங்கிய ஆடைகள் சில வேளைகளில் பிடிக்காவிட்டாலும் எங்களை சிரிக்க வைத்தன... அதை ரசித்து ஏர்னெஸ்டோவும் சிரித்து மகிழ்ந்தார்" என சிசினாவின் வார்த்தைகளில் அவர்களது நெருக்கம் வெளிப்பட்டது. சிசினா முதிர்ச்சியடையாதவராக இருந்தாலும் கற்பனை வளமும் புத்தி கூர்மையும் மிக்க பெண்ணாக காணப்பட்டார். சிசினா தான் தனது வாழ்வில் இணையப்போகிற பெண் என ஏர்னெஸ்டோ நம்பினார். ஏர்னெஸ்டோ காதலில் தீவிரமானார்.

தேவதை கதைகளில் வருகிற காதல் போன்றது ஏர்னெச்டோவின் காதல். சிசினா அர்ஜெண்டினாவில் மிகவும் வளம் கொழித்த செல்வந்தரின் மகள். அவர்களுக்கென இருந்த சுண்ணாம்பு சுரங்கம், அரண்மனை போன்ற வீடு, மிகப்பெரிய தோட்டம் என செழிப்புற வாழ்ந்தவர். ஏர்னெஸ்டோ சாதாரணமான குடும்பத்தை சார்ந்தவர். சிசினாவும் அவரது பெற்றோரும் ஏர்னெஸ்டோ குடியிருந்த பழைய வீட்டிற்கு அருகாமையில் குடியிருந்தனர். கொரடொபாவிற்கு வெளியே அவர்களுக்கு சொந்தமான "மலகுயெனோ" என்ற மாளிகையில் கோடைவிடுமுறையில் கழித்த வேளை ஏர்னெஸ்டோ மோட்டார் பயணத்தில் சிசினாவை பார்க்க சென்றிருந்தார்.

ஏழு நாட்களும் அவர் தங்கியிருந்த அந்த அழகு மாளிகை 2000 ஏக்கர் பரப்பளவுடைய நிலத்தில் அமைந்திருந்தது. அரேபிய குதிரைகள், 2 போலோ விளையாட்டு மைதானம், சுண்ணாம்பு சுரங்க்க தொழிலாளர் குடியிருப்பு என பரந்து விரிந்த அந்த இடத்தில், எழிலாய் நிமிர்ந்து நின்றது அழகிய அரண்மனை போன்ற அந்த மாளிகை. ஞாயிற்றுக் கிழமைகளில் சிசினாவின் குடும்பம் அருகிலுள்ள தேவாலயத்தில் சென்று வழிபடுவது வழக்கம். தேவாலயத்தில் அவர்கள் குடும்பம் மற்ற தொழிலாளர்களிடம் சேராது தனியாக ஜெபங்களில் பங்கு பெற தனி வாசல், அமர்ந்து கொள்ள தனியறை என ராஜகுடும்பத்தின் அனைத்து வகை ஆடம்பரமும் நிறைந்தது சிசினா வளர்ந்த சூழல். இந்த அழகிய ராஜகுமாரி மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக சிசினாவும் ஏர்னெஸ்டோவை மிகவும் நேசித்தார். ஏர்னெஸ்டோவுக்கு அந்த மாளிகையின் செல்வந்த உபசரணைகள் தராத இனிய உணர்வை மனதிற்கு இனிய காதலியோடு இருந்த நேரங்களும் நினைவுகளும் தந்திருந்தது.

சிசினாவின் குடும்பத்தினர் ஏர்னெஸ்டோவை ஒரேயடியாக நிராகரிக்கவில்லை. சில விடயங்களில் சிசினாவிற்கு பொருத்தமானவராக ஏர்னெஸ்டோவை பார்த்தனர். அவரது எளிமையான தோற்றம் சிசினா குடும்பத்தினரை கவர்ந்தது. ஏர்னெஸ்டோ இலக்கியம், வரலாறு, தத்துவம் பற்றி பேசிய போதும், அவரது பயண அனுபவங்களை பகிர்ந்த வேளையும் அனைவரும் கவனமாக கேட்டனர். அப்போதெல்லாம் சிசினாவின் கண்களில் ஒளி படர்ந்து கன்னங்கள் சிவந்து புன்னகை வெளிப்பட்டது.

சிசினாவின் பெற்றோர் ஏர்னெஸ்டோவின் பயணங்கள் பற்றி அதிகம் கவலை கொள்ளவில்லை. அவர்களும் உலக அறிவு படைத்து, பன்முக கலாச்சாரத்துடன் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையுடன் இருந்தது அதற்கு காரணம். பிற்போக்கு தன்மையுடைய சமுதாயத்தில் அவர்கள் வேறுபட்ட மனிதர்களாக காணப்பட்டனர் அதனால் மற்றவர்களுக்கு சிசினா குடும்பத்தினர் வாழ்க்கை வித்தியாசமானதாக தென்பட்டது. சிசினாவின் தந்தையார் ஆபத்தான அடர்ந்த அமேசான் காடுகளில் பயணம் செய்திருந்தார். சாலைகள் சரியாக அமையாத காலத்தில் 4 சக்கர வாகன பந்தயத்தில் கலந்துகொண்டிருந்தனர். சிசினாவின் பாட்டியின் மேற்பார்வையில் முதல் விமானத்தை ஓட்டிய பெருமை கொண்டவர். சிசினாவின் மாமா ஒருவர் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானியர்களால் மூழ்கடிக்கப்பட்ட யுத்த கப்பல் ஒன்றில் பலியானார். இப்படி பன்முக தன்மையுடைய குடும்பம் சிசினாவுடையது.

ஏர்னெஸ்டோவுக்கு சிசினாவின் குடும்வ சூழல் சவாலாகவும் அதே வேளை மனதை கவரவும் செய்தது. காதலியை காண அடிக்கடி கொரடோபா நோக்கி பயணம் போனார் ஏர்னெஸ்டோ. 1951ல் தொடர்ந்து மலகுயெனோவிலும், நகரில் அமைந்த வீட்டிலுமாக பலமுறை சிசினா மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. சிசினாவின் உறவினர்களின் ஏர்னெஸ்டோவை அதிகம் விரும்பியவர் சிசினாவின் மாமா மார்டின். மலகுயெனோவில் அவர் அரேபிய குதிரைகளை வளர்த்து வந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேசநாடுகளின் படைகளை விரும்பி ஆதரவு தெரிவிக்க இவர் மட்டும் நாஜிப் படைகளுக்கு ஆதரவு தெரிவித்தார். இரவு முழுவதும் விழித்திருந்து ஏர்னெஸ்டோ, சிசினா மற்றும் நண்பர்கள் விடியும் வரை நடனமாடுவதற்கு பியானோ வாசித்த பாசமான மனிதர் அவர்.

காதல் வளர, ஆசையும் வளர்ந்தது. ஏர்னெஸ்டோ சிசினாவை திருமணம் செய்யவும், தேனிலவு செல்ல தென் அமெரிக்கா முழுவதும் "காரவேன்" பயணம் செல்ல தூண்டினார். பதினாறு வயது மங்கையான சிசினா முடிவெடுக்க முடியாமல் தத்தளிக்க, பெற்றோர் இந்த திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை. இதன் பின்னர் ஏர்னெஸ்டோவுக்கும் சிசினா குடும்பத்தினருக்குமிடையே இடைவெளி உருவானது. விருந்து உபச்சார மேசையில் ஏர்னெஸ்டோவின் முக்கியத்துவம் குறைய துவங்கி, வீண் விவாதங்கள் அவ்வப்போது தென்பட்டது. குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாவிடினும் ஏர்னெஸ்டோ-சிசினா காதல் இரகசிய சந்திப்புகளில் வளர்ந்தது.

செவிலியர் சான்றிதழ் பெற்ற ஏர்னெஸ்டோ கப்பலில் சில காலம் வேலை பார்த்தார். துறைமுகத்தில் கப்பல் நிற்கிற சிறிது இடைவெளியில் சிசினாவின் கடிதம் கிடைத்தால் கொண்டு சென்று தர அவரது தங்கை செலியாவை அடிக்கடி துரத்துவது ஏர்னெஸ்டோவுக்கு வாடிக்கை. ஓடி வரும் தங்கையின் கைகளில் கடிதம் இருப்பதை பார்க்கும் வேளைகளில் அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. சிசினாவின் தொடர்புகள் குறைந்து கப்பலில் வேலை பார்ப்பது விருப்பமில்லாமல் வேலையை விட்டு நீங்கி மருத்துவ படிப்பை தொடர்ந்தார். அவருக்கும் சிசினாவுக்கும் காதலில் எந்த பிரச்சனியும் இருப்பதாக குடும்பத்தினரிடம் ஏர்னெஸ்டோ வெளிப்படுத்தவில்லை. சிசினாவை காதலிப்பதில் ஏற்பட்ட அழுத்தங்கள் ஏர்னெஸ்டோவின் மனதை வாட்டியது.

இப்படியான ஒரு சூழலில் 7 நாட்கள் இனிதாக காதலியுடன் கழித்து விடைபெற்ற காதலர் கண்களும் நெஞ்சமும் ஈரமானது இயற்கையே. காதலியை சந்தித்த நிகழ்வுகளை மனதில் சுமந்ததால் பயணத்தின் தூரத்தை ஏர்னெஸ்டோ உணரவில்லை. ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி நெகோசியா என்ற இடத்தில் ஆல்பர்டோவின் கல்லூரி தோழியின் வீட்டை நோக்கி சென்றது.
(வரலாறு வளரும்)

புகைப்பிடிப்போரும் புகை பிடிக்காதோரும் – ஒரு ஒப்பீட்டு ரீதியான ஆய்வு

20000 இளைஞர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் புகைப்பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகைப்பிடிப்பவர்களின் அறிவாற்றல் குறைவாக இருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்களின் அறிவுத்திறன், சராசரி ஆண்களை விட எட்டு புள்ளிகள் வரை குறைவாக இருக்கின்றது. தினமும் அவர்கள் புகைக்கும் சிகரெட்டின் எண்ணிக்கைக்கு ஏற்ப அறிவாற்றல் குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

புகைப்பழக்கம் இல்லாதவர்களுக்கு 101 புள்ளிகள் அறிவுத்திறன் இருக்கும் நிலையில் புகைப் பிடிப்பவர்களுக்கு 94 புள்ளிகள் மட்டுமே அறிவுத்திறன் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். மன அழுத்தம் அதிகம் உள்ள இளைஞர்களே அதிகம் புகைப்பிடிக்கின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் புகைப்பழக்கம் மன அழுத்தத்தை அதிகரித்து மனநல பாதிப்புகளுக்கு உள்ளாக்குகிறது மேலும் புகைப்பழக்கம் குடிப்பழக்கத்திற்கும் வழிவகுக்கிறது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மாரடைப்பு, புற்றுநோய், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயம். ஆனால் மனைவிக்கு நுரையீரல் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றையும், குழந்தைகளுக்கு காதுகோளாறு, ஆகியவையும் பரப்புகின்றனர். புகைப்பழக்கத்தில் இருந்து மீள மனரீதியான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

வேலையில் டென்சன் ஏற்பட்டால் புகையை நாடாமல் நல்ல இசையை ரசிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். உடற்பயிற்சி, தியானம் போன்றவையும் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.