சனி, 21 மே, 2011

யுத்தமும் ஆயுத விற்பனையும்

பிரான்ஸ் TF1 தொலைக்காட்சி செய்தியை தற்செயலாக பார்த்தவர்கள், அந்த மாபெரும் உண்மையை அறிந்து திகைத்திருப்பார்கள். லிபியாவில் நடக்கும் போர் குறித்த செய்தி அறிக்கை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. பிரெஞ்சு இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதல் விபரங்களை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். "லிபியாவில் நடக்கும் போரினால் எமது ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது. சந்தையில் புதிதாக வாங்கிய விமானங்களின் தாக்குதிறனை பரீட்சிப்பதற்கு இது அரிய சந்தர்ப்பம். எமது விமானிகளுக்கும் போர்க்களத்தில் நேரடிப் பயிற்சி கொடுக்க முடிகிறது.
" தற்செயலாக, ஒரு தடவை மட்டுமே அந்த அதிகாரியின் நேர்காணல் ஒளிபரப்பானது. விழித்துக் கொண்ட பிரெஞ்சு அரசு, அவசரமாக விடுத்த வேண்டுகோளின் பின்னர் அந்தப் பகுதி நீக்கப்பட்டு விட்டது. மேலைத்தேய "மனிதாபிமான" அரசுகள், கடாபி என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோன்மையில் இருந்து, லிபிய மக்களை காப்பாற்றுவதற்காகவே, குண்டு போடுவதாக மக்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், புதிதாக உற்பத்தி செய்யப் பட்ட நவீன ஆயுதங்களை சந்தையில் விற்பதற்காகத் தான், லிபியா மீது போர் தொடுக்கப் பட்டது. இந்த உண்மையை மக்கள் அறிந்துகொண்டால், கற்பிக்கப்பட்ட நியாயம் அடிபட்டுப் போகாதா? மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமான முகமூடி கிழிவதை பொறுத்துக் கொள்ளலாமா? ஆயிரம் காரணம் சொல்லுங்கள். உலகில் தயாரிக்கப்படும் முக்கால்வாசி ஆயுதங்கள் மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற உண்மையை எவராவது மறுக்க முடியுமா?


சாதாரணமாக எவரும் விக்கிபீடியா, கூகிளில் தேடிப் பெறக் கூடிய தகவல் இது. ரஷ்யாவை தவிர்த்தால், அதிக ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிக்கும் முதல் ஐந்து நாடுகள் மேற்குலகில் இருக்கின்றன. உலகில் ஆயுத உற்பத்தியில் முன்னணியில் நிற்பது, வேறு யார்? அமெரிக்கா தான். உலகில் 30 சதவீத ஆயுதங்கள் அமெரிக்க தயாரிப்புகள் தான். அவை தான் அதிகளவில் விற்பனையாகின்றன. பனிப்போர் முடிந்து இருபதாண்டுகளுக்கு மேலானாலும், இன்றைக்கும் ரஷ்யா தான் அமெரிக்காவுடன் போட்டி போட்டுக் கொண்டு ஆயுதங்களை தயாரிக்கிறது. (23 %) அதற்கு அடுத்ததாக ஜெர்மனி (11 %), பிரான்ஸ் (7 %), பிரிட்டன் (4 %), நெதர்லாந்து (3 %). இவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் மனித உரிமைகள், போர்க்குற்றம் பற்றி விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். மறுபக்கம், ஆயுதங்களை விற்று கொலைகாரர்களை ஊக்குவிக்கிறார்கள். எல்லாமே பணத்துக்காகத் தான். எங்கேயோ ஒரு மூன்றாம் உலக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் தானே, முதலாம் உலக மக்கள் செல்வந்த வாழ்வு வாழலாம்? இனப்படுகொலை, போர்க்குற்றம், எது நடந்தாலும் அவர்களுக்கு கவலை இல்லை. ஆயுதங்களை விற்றோமா, இலாபம் சம்பாதித்தோமா, அது தான் முக்கியம். இல்லாவிட்டால் தொடர்ந்தும் பணக்கார நாடுகளாக அவர்களால் நிலைத்து நிற்க முடியுமா? ஒருவனின் மரணம், இன்னொருவனுக்கு உணவு. ஆதலினால் போர் செய்வீர்.

எங்களால் நம்ப முடியாது. ஆனால் இது தான் உலக யதார்த்தம். புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்து காட்சிக்கு வைத்தால் மட்டும் போதாது. அவற்றின் செயல்பாட்டை நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் வாடிக்கையாளர்கள் வந்து வாங்கிச் செல்வார்கள். எங்காவது ஒரு நாட்டில் போர் நடந்ததால் தானே, புதிய ஆயுதங்களை பரீட்சித்துப் பார்க்க முடியும்? அவை எத்தனை மக்களின் உயிரைக் குடிக்கும், எத்தனை சொத்துகளை நாசமாக்கும், என்றெல்லாம் நிரூபித்துக் காட்ட வேண்டாமா? உதாரணத்திற்கு ஐரோப்பியரின் புதிய தயாரிப்பான Eurofighter Typhoon விமானத்தை எடுத்துக் கொள்வோம். அதன் இணையத்தளத்தில் பின்வருமாறு விளம்பரம் செய்கிறார்கள். "The world's most advanced new generation multi-role/swing-role combat aircraft available on the market." சும்மா விளம்பரம் செய்து விட்டால் போதுமா? இதுவரை எந்த ஒரு யுத்தத்திலும் பாவிக்கப்படாத போர்விமானத்தை எவன் வாங்குவான்? தற்போது லிபியா மீது நேட்டோ படைகள் நடத்தும் தாக்குதல்களில், அந்த விமானங்கள் ஈடுபடுத்தப் படுகின்றன. Eurofighter விமானங்களின் தாக்குதிறன் குறித்த விபரங்களை தொலைக்காட்சி செய்தியில் பார்த்து மகிழலாம். சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாம் இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சில முக்கிய வாடிக்கையாளர்கள் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா, பிரேசில், குரோவாசியா... இன்னும் பல நாடுகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளன.

அமெரிக்கா தனது மேலாண்மையை நிறுவதற்காக ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளது. தொலைதூர இலக்குகளைத் தாக்குவதற்கு அணுகுண்டு பொருத்தப்பட்ட ஆயுதங்களை பாவிக்க வேண்டிய தேவை இருந்தது. புதிதாக கண்டுபிடித்த Prompt Global Strike, அதே அளவு தாக்குதிறனைக் கொண்ட, மரபு வழிப் போரில் பயன்படுத்தக் கூடிய ஆயுதம். அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்ட ஒரு மணி நேரத்தில், உலகின் எந்தப் பாகத்திலும் சென்று வெடிக்கக் கூடியது. செய்மதி அந்த ஆயுதத்தை இலக்கு நோக்கி வழிநடத்தும். ஆனால், அந்த ஆயுதம் சந்தைக்கு வர இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் அமெரிக்காவின் Prompt Global Strike நிகழ்த்தப் போகும் அற்புதங்களைக் காண தயாராகுங்கள். ஒபாமாவுக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கொடுத்தது இதற்காகத் தானா?

இன்று நேற்றல்ல, கடந்த எழுபதாண்டுகளாக போர்க்காலத்தில் தான் ஆயுத வியாபாரம் சூடு பிடிக்கின்றது. 1937 ம் ஆண்டு, ஸ்பானியாவில் குவேர்னிகா நகரம் ஜெர்மன் விமானங்களின் குண்டுவீச்சில் அழிக்கப் பட்டது. பிரான்கோவின் பாஸிச படைகளுக்கு உதவும் பொருட்டு நடத்தப்பட்ட குண்டுவீச்சில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முதல் நடந்த போர் அது. பிற்காலத்தில் போர்க்குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட நாஸி அரசின் மந்திரி கேரிங் இவ்வாறு கூறினார்:"புதிதாக அமைக்கப்பட்ட எங்களது விமானப்படையினதும், விமானிகளினதும் முதலாவது போர்க்கள அனுபவம்." நாஸி ஜெர்மனி சொல்லிக் கொடுத்த பாடத்தை அமெரிக்கர்கள் வியட்னாம் போரில் பின்பற்றினார்கள். BLU -82B /C -130 என்ற உற்பத்திப் பெயரைக் கொண்ட, "Daisy Cutter " என்று செல்லமாக அழைக்கப்பட்ட நாசகார ஆயுதத்தை வியட்னாம் காடுகளில் போட்டார்கள். அந்தக் குண்டு, வனாந்தரக் காட்டின் மத்தியில் 600 மீட்டர் சுற்றளவுக்கு மரங்களை அழித்து விடும். மரங்கள் அழிக்கப்பட்ட இடத்தில், ஒரு ஹெலிகாப்டர் இறங்குமளவிற்கு இடம் கிடைத்து விடுமாம். டெய்சி கட்டர் குண்டுவீச்சினால் பரவிய காட்டுத்தீயில், அங்கு வாழ்ந்த வியட்நாமிய மக்களும் மரணமடைந்தனர். சீறிப் பாய்ந்த தீச் சுவாலைகள் மிரண்ட மக்களை எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவிக்க வைத்தது. அதைப் பற்றி யாருக்கு கவலை? ஹெலிகாப்டர் தரையிரங்குமளவு இடம் கிடைத்ததல்லவா? அது அல்லவா வியாபாரத்திற்கு அவசியமான விளம்பரம்?

குவைத் மீட்பதற்கு நடந்த முதலாவது வளைகுடா போரில், "Bunker Buster " குண்டுகள் பிரயோகிக்கப் பட்டன. சதாம் ஹுசைனின் நிலக்கீழ் மறைவிடங்களை தாக்கி அழிக்கும் நோக்கில் ஏவப்பட்டன. பின்னர் ஆப்கான் போரில், அல்கைதா/தாலிபான் தலைவர்கள் பதுங்கியிருந்த குகைகளை தகர்க்க பயன்படுத்தப் பட்டன. ஆனால் இத்தகைய நவீன ஆயுதங்களால் தாலிபானை அழிக்க முடியவில்லை. அதனால் தற்போது ஒரு புதிய ஆயுதத்தை கண்டுபிடித்துள்ளார்கள். Thermobaric (வெப்ப அமுக்க) குண்டுகள், விழுந்த இடத்தில் பிராணவாயுவை உறிஞ்சி எடுத்து விடும். இதனால் உள் உடல் உறுப்புகள் யாவும் பாதிக்கப்படும். பிரித்தானியா கண்டுபிடித்துள்ள Light weight anti -structure missiles சுவரை துளைத்துச் சென்று உள்ளே சென்று வெடிக்கும் தன்மை கொண்டது. XM25 Individual Airburst Weapon System (IAWS), இதுவும் சந்தையில் புதிதாக வந்துள்ள அமெரிக்க ஆயுதம் தான். இது ஒரு சாதாரணமான கிரனேட் வீசு கருவி. ஆயினும் லேசரால் தூரத்தை அளந்து, கிரனேட் குறிப்பிட்ட இலக்கின் மீது விழுந்து வெடிக்க வைக்கலாம். இந்த புதிய ஆயுதங்களை வாங்கி பாவிக்க விரும்புகிறீர்களா? உடனடியாக ஒபாமாவை தொடர்பு கொள்ளவும். வாங்குபவர் ஏதாவது ஒரு அரசாங்க சார்பாக தொடர்பு கொள்வது விரும்பத் தக்கது. அரசுகளுடன் மட்டும் தான் அவர்கள் வியாபாரம் பேசுவார்களாம். கறுப்புச் சந்தையில் ஆயுதம் விற்கும் சில்லறை வியாபாரிகளும் இருக்கிறார்கள். பெரும்பாலும் சிறிய ரக ஆயுதங்களை அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். அவ்வப்போது பெரிய முதலாளிகள், சில்லறை முதலாளிகளை பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள்.

விமானந்தாங்கிக் கப்பல் மீதான ஒரு பார்வை

விமானந்தாங்கிக் கப்பல்

நாடுகளுக்கிடையிலான யுத்தங்களின் போது விமானப்படையின் பணி பிரதானமானதாகக் காணப்படுகின்றது. எதிரி நாடுகளின் உட்கட்டுமானங்களைச் சிதைப்பதில் விமானப்படையின் பங்கே மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

தொலைவிலுள்ள நாடுகளுடனான யுத்தங்களின் போது விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் வெடிபொருள் நிரப்புதலுக்கான தளங்களைத் தெரிவுசெய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்ப்பதன் பொருட்டே விமானந்தாங்கிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன யுத்த விமானங்களுக்கு வானிற் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி காணப்பட்ட போதிலும் வெடிபொருள் மீள் நிரப்புகைக்காகத் தளங்கள் தேவையாகவேயுள்ளன.

விமானந்தாங்கிக் கப்பல்களின் வரலாறு வளிக்கூடு தாங்கிகளின் (Balloon Carrier) உருவாக்கத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கடற்கண்காணிப்புப் பயன்பாட்டிற்கான வளிக்கூடுகளைத் (Balloon) தாங்கிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கடற்கலங்களே விமானந்தாங்கிக் கப்பல்களின் எண்ணக்கருவிற்கு அடித்தளமிட்டது. 1910 ஆம் ஆண்டளவில் அமெரிக்கக் கடற்படையின் குருஸ் வகை கப்பலில் இருந்தே உலகின் முதலாவது விமானந் தாங்கிக் கப்பலில் இருந்தான வான்பறப்பு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலக யுத்தக் காலப்பகுதியில் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜப்பானியக் கடற்படைகளால் Escort வகை விமானந்தாங்கிக் கப்பல்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் உற்பத்திச்செலவு குறைவாகக் காணப்பட்ட படியால் அவை அதிகளவிற் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் கண்டறிபப்பட்ட இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் வினைத்திறன் குறையாடு விமானந்தாங்கிக் கப்பல்களின் தொழினுட்ப மேம்பாட்டுக்கான தேவையை உணர்த்தின. இரண்டாம் உலகப்போரின் பின்னர் விமானந்தாங்கிக் கப்பல்கள் தொழினுட்ப மற்கும் வினைத்திறனில் பாரிய வளர்ச்சியைக் கண்டன.

பொதுவாக விமானந் தாங்கிக் கப்பல்கள் ஏனைய போர்க்கப்பல்களுடன் ஒப்பிடும்போது குறைந்தளவு போராயுதங்களையே கொண்டிருப்பதுடன் தாக்குதல் வலுக் குறைந்ததாகவும் காணப்படுகின்றன. இதன் காரணமாக விமானந்தாங்கிக் கப்பல்கள் அவற்றுடன் விரைவு தாக்குதற்கலங்கள், நாசகாரிக்கப்பல்கள் போன்றவற்றைக்கொண்ட அணியாகவே செயற்படுகின்றன.

நவீன விமானந்தாங்கிக் கப்பல்கள் விமானங்கள் மேலெழுதல் (Take-off) மற்றும் தரையிறங்கல் (Landing) போன்ற செயற்பாடுகளைச் செய்யக்கூடியவாறு தட்டையான மேற்பரப்பை உடையவையாகக் காணப்படுகின்றன. விமானங்கள் கப்பலிலிருந்து கப்பலின் முன்புறக்தால் மேலெழுந்து தரையிறங்கும்போது கப்பலின் பின்புறத்தால் தரையிறங்குகின்றன. சில விமானந்தாங்கிக் கப்பல்கள், விமானங்கள் அவற்றிலிருந்து மேலெழும்போது, குறிப்பிட்டதோர் வேகத்தில் முன்நோக்கி நகர்ந்து விமானத்தின் சார்புவேகத்தை அதிகரிக்கின்றன. இதன்காரணமாக விமானம் கப்பலின் மேற்பரப்பில் குறைந்தளவு வேகத்தில் ஓடி மேலெழ முடிகின்றது. ஆயினும் நவீன விமானந்தாங்கிக் கப்பல்களில் விமானம் மேலெழும்போதான வேகத்தை அதிகரிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு விசைப்பொறி (Catapult) பயன்படுத்தப்படுகின்றது.

விமானத்தின் முன் சக்கரத்துடன் பொருத்தப்படும் இவ் விசைப்பொறியானது விமானத்தை உந்தித் தள்ளுவதன் மூலம் விமானம் மேலெழுவதற்குத் தேவையான வேகத்தை அதிகரிப்பதோடு மிகக் குறுகிய தூர ஓட்டத்துடன் விமானம் மேலெழுவதற்கும் உதவுகின்றது.
விமானந்தாங்கிக் கப்பல் ஒன்றில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விமானத்தின் வாற்பகுதியிலுள்ள கொழுவியமைப்பானது (Tailhook) கப்பலின் மேற்தளத்திலுள்ள வடம் (Arrestor wire) ஒன்றினை பற்றிப்பிடிப்பதன் மூலம் விமானத்தின் வேகம் மிகக்குறுகிய தூரத்தினுள் சடுதியாக ஓய்விற்குக் கொண்டுவரப்படுகின்றது.

விமானந்தாங்கிக் கப்பல்களின் மேற்தளத்தில், இடதுபக்கமாக Island என்றழைக்கப்படும் கப்பலின் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைந்திருக்கும். மிகச்சில கப்பல்கள் இக்கட்டுப்பாட்டுக் கோபுரம் இல்லாது வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் அவர்களின் பணிகளிற்கேற்ப வெவ்வேறான நிறக்களினாலான உடைகளை அணிந்திருப்பர்.

பிரித்தானிய றோயல் கடற்படையால் முதலாவதாக வடிவமைக்கப்பட்டு பின்னர் பலநாட்டுக் கடற்படைகளாலும் பயன்படுத்தப்படும் அண்மைக்கால விமானந்தாங்கிக் கப்பல்களின் வடிவம் அவற்றின் முன்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து காணப்படும். இவ்வகையான கப்பல்கள் குறுந்தூர ஓட்டத்துடன் மேலெழவல்ல Sea Harrier வகை விமானங்களை கருத்திற்கொண்டே வடிவமைக்கப்பட்ட போதிலும் சாதாரண விமானங்களுக்கும் இவை ஏற்றவையாகவே காணப்படுகின்றன. இவ்வகைக் கப்பல்களின் சிறப்பான மேற்தள வடிவமைப்புக் காரணமாக இவ்வகைக் கப்பல்களில் விமானத்தை உந்தித்தள்ளும் விசையமைப்போ (Catapult) அல்லது தடுப்புவடமோ (Arrestor wire) தேவையில்லை. இருந்தபோதிலும் அதிக சுமையினைக் காவவல்ல விமானங்களான Super Hornet மற்றும் Sukhoi Su-33 வகை விமானங்களுக்கும் E-2 Hawkeye வகை வேகம்குறைந்த விமானங்களுக்கும் இவ்வடிவமைப்புப் பொருத்தமற்றே காணப்படுகின்றது. இதன்காரணமாக, அமெரிக்க வடிவமைப்பாளர்கள் இவ்வடிவமைப்பை வரவேற்கவில்லை.

அமெரிக்கக் கடற்படை அணுசக்தியில் இயங்கும் பாரிய விமானந்தாங்கிக் கப்பல்கள் பதினொன்றை தமது கடற்படைச் சேவையில் ஈடுபடுத்துகின்றது. அமெரிக்கக் கடற்படையே உலகில் அதிகளவான விமானந்தாங்கிக் கப்பல்களைப் பயன்படுத்தும் கடற்படையாகும். அமெரிக்கக் கடற்படை இருபத்திநாலு மணிநேரத்தினுள் உலகின் எப்பாகத்திற்கும் செல்லக்கூடியவாறு தனது விமானந்தாங்கிக் கப்பலணியைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றது. அமெரிக்கா தவிர்ந்து பிரான்ஸ், சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகள் தமக்கான நவீன விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்குகின்றன. ரஸ்யா 2050 ஆம் ஆண்டளவில் 60000 மெற்றிக் தொன் காவுதிறன் கொண்ட உலகின் மிகப்பொரும் விமானந்தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகின்றது.