திங்கள், 9 நவம்பர், 2015

"மாதுலுவாவே சோபித தேரர்"

பேரினவாத நெருக்கடிகளையும் விமர்சனங்களையும் கடந்து தமிழ்மக்களின் சுயமரியாதைக்காக குரல்கொடுத்து நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கும் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு ஏற்படுவதற்கும் அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றி வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் நல்லாட்சிக்கு அத்திவாரமிட்ட நல்ல மனிதனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

சனி, 31 அக்டோபர், 2015

பனிப்போர் என்றுமே முடிவுக்கு வரப்போவதில்லை

கிரிமியா, சிரியாவுக்குள் மூக்கை நுழைத்தது தற்செயலானது அல்ல. கடந்த கால ரஸ்யாவின் செயற்பாடுகளும் முன்னோக்கிய நகர்வும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இனி பின்வைக்குமளவு என் கால் இல்லை என்று தெளிவான நகர்வுகளுடன் ரஸ்யா…!!!

கோர்க்காசிய பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த ஆயத மோதலைச் சாக்காக வைத்துக் கொண்டு அப்பிராந்தியத்தில் மூக்கை நுழைக்க அமெரிக்கா முயற்சித்துவரும் வேளையில், ~நான் ஒன்றும் சளைத்தவன் அல்ல| என்பதை நிரூபிப்பது போன்று ரஸ்யா அமெரிக்காவின் கொல்லைப் புறத்திலே இராணுவ ஒத்திகையொன்றைச் செய்ய களத்தில் இறங்கியிருக்கிறது.
சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசும் தற்போதைய அயல் நாடுமான ஜோர்ஜியாவின் பிரிவினை கேட்டுப் போராடிய மாநிலமான தெற்கு ஒஸ்ஸற்றியாவை தனது கட்டுப் பாட்டின் கீழ் பலவந்தமாக ஒன்றிணைக்க ஜோர்ஜியா எடுத்த முயற்சியில் தெற்கு ஒஸ்ஸற்றியா பகுதியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரஸ்யா ஜோர்ஜியாவுடன் யுத்தம் புரிய வேண்டிய நிலை உருவானது.
ஒரு சில நாட்களே நீடித்த இந்த யுத்தத்தின் விளைவாக உருவான அரசியல் சூழலும் மேற்குலகின் ஒரு தலைப்பட்சமான அணுகுமுறையும் தெற்கு ஒஸ்ஸற்றியா மட்டுமன்றி ஜோர்ஜியாவில் இருந்து பிரிந்து சென்ற அப்காசியாவினதும் தனிநாட்டுக் கோரிக்கையை ரஸ்யா அங்கீகரிக்கும் நிலையை உருவாக்கியது. இந்த இரு தேசங்களும் 1992 இலேயே தம்மை தனிநாடுகளாக பிரகடனப்படுத்திய போதிலும் எந்தவொரு நாடும் அவற்றை அங்கீகரிக்கவில்லை. எனினும் ஆகஸ்டில் இடம்பெற்ற மோதலை அடுத்து உருவான சூழ்நிலைகளால் ரஸ்யா அவற்றை அங்கீகரித்தது.
இந்நிலையில் செப்டம்பர் 6ஆம் திகதி மத்திய அமெரிக்க நாடான நிக்கரகுவாவும் இந்த இரு தேசங்களையும் தனிநாடாக அங்கீகரித்துள்ளதுடன் விரைவில் அந்நாடுகளில் தனது தூதுவராலயங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசும் தற்போதைய ரஸ்யாவின் அயல் நாடுமான பெலாரஸ் இம்மாத முடிவிற்குள் இந்த இரண்டு தேசங்களையும் தனிநாடுகளாக அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் தெற்கு ஒஸ்ஸற்றியாவில் ஜோர்ஜியா இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட போது, ரஸ்யா இவ்வளவு தூரம் அதிரடி நடவடிக்கையில் இறங்கும் என எதிர்பார்த்திராத அமெரிக்க நடப்பு விவகாரங்களால் மிகவும் அசௌகரியத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. கடும்போக்காளர் எனக் கருதப்பட்ட விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து அகன்று பிரதமர் பதவியில் அமர்ந்ததும் அவரது நண்பரான மெட்வடேவ் ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததும் ரஸ்யாவின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என நினைத்திருந்த அமெரிக்காவுக்கு நடப்பு நிகழ்வுகள் ஏமாற்றத்தையே தந்தன.
ஒஸ்ஸற்றிய விவகாரத்தில் மத்தியஸ்தம் வகித்த ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்யப் படைகள் ஜோர்ஜிய மண்ணில் இருந்து அகல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தபோது தெற்கு ஒஸ்ஸற்றியா மற்றும் அப்காசியா மீது ஜோர்ஜியா மீண்டுமொரு முறை பலாத்காரத்தைப் பிரயோகிக்காது என்ற உறுதிமொழியைப் பெற்றுக் கொண்ட ரஸ்யா ஜோர்ஜியாவிலிருந்து படைகளை வாபஸ் பெறத் தொடங்கியுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் படி அக்டோபர் முதலாம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 200 வரையிலான கண்காணிப்பாளர்கள் ஜோர்ஜியாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர். இதனையடுத்து 10 நாட்களுக்குள் ரஸ்யப் படைகள் ஜோர்ஜிய மண்ணைவிட்டு முற்றாக அகல வேண்டும்.
இதனை ஏற்றுக் கொண்ட ரஸ்யா தனது பிடியை வலுப்படுத்த புதிய தந்திரமொன்றைக் கையாண்டுள்ளது. 1992 இல் ஜோர்ஜியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தெற்கு ஒஸ்ஸற்றியா மற்றும் அப்காசியா ஆகிய தேசங்களில் சமாதானப் படைகளை ரஸ்யா நிறுத்தியிருந்தது. புதிய ஒப்பந்தத்தின்படி தனது படைகளை விலக்கிக் கொள்ளும் ரஸ்யா, புதிதாக உருவான நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் ஒவ்வொரு நாட்டிலும் 3,800 படையினர் வீதம் நிறுத்த முடிவு செய்துள்ளது. சமாதானப் படையினர் போலல்லாது புதிதாக நிலைகொள்ளும் படையினர் முழுச் சுதந்திரமும் பெற்றவர்களாகவும் சர்வதேச சட்டவிதிகளுக்கு அமையச் செயற்படக்கூடிய அதிகாரம் மிக்கவர்களாகவும் விளங்குவர். அதாவது இந்த 2 தேசங்களினதும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் சந்தர்ப்பத்தில் அதற்குக் காரணமான நாட்டின் மீது ரஸ்யா போர் தொடுப்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இதன் மூலம் கிடைத்திருக்கின்றது. இதனை வேறு விதத்தில் சொல்வதானால்
சும்மா இருந்த சங்கை அமெரிக்கா ஊதிக் கெடுத்திருக்கின்றது.
இதேவேளை விடாக்கண்டனான அமெரிக்காவும் ஒரு கை பார்த்துவிடுவது என்ற அடிப்படையில் ஜோர்ஜியாவுக்கு தனது கடற்படைக் கப்பல்களை அனுப்பி வைத்திருக்கின்றது. கருங்கடல் பிராந்தியத்துக்குள் நுழைந்துள்ள அமெரிக்காவின் 6 ஆவது கடற்படைப்பிரிவு அணுவாயுத யுத்தக் கப்பலான மவுண்ட் வைற்னி உட்பட 3 கப்பல்கள் ஜோர்ஜிய துறைமுகமான போற்றி இல் நங்கூரம் இட்டுள்ளன.
இதனால் ரஸ்யா பெரிதும் சீற்றமடைந்துள்ளது. ஜோர்ஜியாவுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காகவே தனது கப்பல்கள் ஜோர்ஜியா சென்றிருப்பதாக அமெரிக்கா கூறினாலும் அதற்கு எதற்காக அணுவாயுத யுத்தக் கப்பல்கள் என்ற கேள்விக்கு அமெரிக்காவிடம் பதிலில்லை.
இதேவேளை நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு யேர்மனி, ஸ்பெயின், போலந்து ஆகியவையும் நமது கப்பல்களை இப்பிராந்தியத்துக்கு அனுப்பி வைத்துள்ளன. 90 களின் முன்னர் ரஸ்யாவைத் தவிர வேறு யாருமே நுழைய முடியாமல் இருந்த
இப்பிராந்தியத்தில் இன்று யார் யாரோவெல்லாம் நுழைவது ரஸ்யாவுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தனது கப்பல்கள் மூன்றை அப்காசியத் துறைமுகங்களுக்கு ரஸ்யா அனுப்பி வைத்திருக்கின்றது. இது தவிர ஜோர்ஜியா மீது இராணுவத் தடை விதிக்குமாறும் ரஸ்யா அழைப்பு விடுத்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் மூன்றாவது உலக யுத்தம் ஒன்றுக்கு வித்திட்டுவிடுமோ என்ற அச்சமொன்று உருவாகியுள்ள சூழ்நிலையில் தென்னமெரிக்க நாடான வெனிசுவேலாவுடன் இணைந்து கடற்படை ஒத்திகையொன்றைச் செய்யப் போவதாக ரஸ்யா அறிவித்துள்ளது. நவம்பர் 10 முதல் 14 வரை நடைபெறப் போகும் இந்த ஒத்திகையில் உலகிலே சிறந்த அணுவாயுத நாசகாரி கப்பல்களுள் ஒன்று எனக் கருதப்படும் ரஸ்யக் கப்பலான ~பீற்றர் த கிரேட்| கலந்து கொள்ளவுள்ளது. இதனுடன் மேலும் 3 கடற்படைக் கப்பல்களும் கலந்து கொள்ளும் ஆயிரம் கடற்படை வீரர்களும் இந்த ஒத்திகையில் பங்கெடுப்பர்.
ஜோர்ஜியாவில் தரித்து நிற்கும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள், போலந்தில் அமெரிக்கா செய்து கொண்டுள்ள ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு ஒப்பந்தம், உக்ரைனை நேட்டோவில் இணைத்தல் என ரஸ்யாவைச் சூழ்வதற்கு அமெரிக்க முயற்சித்து வரும் நிலையில் அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தினூடாக கரீபியன் கடலை ரஸ்யா எட்டுவதென்பது தற்செயல் நிகழ்வாகக் கருதப்பட முடியாதது. 20 வருடங்களின் பின் ரஸ்யா இத்தகையதொரு போர் ஒத்திகையில் அதுவும் மிகவும் பலம்பொருந்திய ஒரு கடற்படைக் கப்பலின் உதவியுடன் ஈடுபடுவது அமெரிக்காவுக்கு பல சேதிகளைச் சொல்லவே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கெடுபிடி யுத்தம் முடிந்து அமெரிக்கா தலைமையிலான ஏக தலைமையின் வழிநடத்தலில் உலகம் பயணிப்பதாக நிலைமைகள் தென்பட்ட போதிலும் அமெரிக்கக் கழுகு ஏகபோக உரிமையை அனுபவிப்பதை ரஸ்யக் கரடி அனுமதிக்கப் போவதில்லை என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப் படுகின்றது. உலகின் என்ன தான் மாறினாலும் இந்த இரண்டு வல்லரசுகளுக்கும் இடையிலான பனிப்போர் என்றுமே முடிவுக்கு வரப்போவதில்லை என்பதுவும் இதன் மூலம் உணர முடிகின்றது.
இந்தக் கடற்படை ஒத்திகைக்கு மற்றுமொரு முக்கியத்துவமும் இருக்கிறது. எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி அமெரிக்க அரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற
இருக்கின்றது. இக்காலப்பகுதியிலேயே இந்த ஒத்திகையும் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெறுகின்றது. இந்நிலையில் தேர்தலில் யார் வெற்றி பெறுவது என்பதிலும் இது செல்வாக்குச் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
கடந்த யூலையில் ரஸ்யாவுக்கு விஜயம் செய்த வெனிசுவேலா அதிபர் ஹியூகோ சாவேஸ், ரஸ்யாவின் அணுவாயுதம் தாங்கிய யுத்த விமானங்களுக்கு தனது நாட்டின் கதவுகள் திறந்திருக்கின்றன என பகிரங்கமாக அறிவிப்புச் செய்திருந்தார்.
சோவியத் ஒன்றியம் உலகில் இருந்த 70 வருடங்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களுக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் உந்து சக்தியாக, பக்க பலமாக அமைந்திருந்தது.
இதன்விளைவாக உலகின் போக்கில் பல சாதகமான மாற்றங்களும் ஏற்பட்டன.
கடந்த 2 தசாப்தங்களாக விடுபட்டுப் போயிருந்த அப்பணியை ரஸ்யா தொடர்ந்தும் முன்னெடுக்குமானால் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் உலக அரங்கில் மீண்டும் ஒலிக்கும் வாய்ப்பு உருவாகலாம். அதனை ரஸ்யா செய்யுமா என்பதே இன்று முற்போக்குச் சக்திகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

போகும் போக்கில் புரியவைத்து விட்டாய் வாழ்வு பொய் என்று

புரியவில்லை அன்பே... நீ நடத்தும்
நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!
மறந்து விட்டேன் உன்னை.....!! என்று தான்
சொல்ல
நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும் மறுகணம்
நினைவில்
நீ..!!!
பிரிந்து விட்ட பின்னும் உன் பெயர்
படித்தால் உள்ளம்
புல்லரிப்பது என்னவோ உண்மை தான்
அன்பே..!!
இந்த முறை உன் பிரிவு என்னை ஸ்தம்பிக்க
செய்யவில்லை.. காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்..!!!..
போகும் போக்கில் புரியவைத்து விட்டாய்
வாழ்வு பொய் என்று!!

கிழிந்த பக்கங்கள்

உனக்காக நான் இழந்தது 
என்னை மட்டுமல்ல, 
என்னை சார்ந்த அனைத்துமே..!! 

நம் காதலை மறைக்க 
நண்பர்களிடம் கூறிய பொய்.!! 
தொலைபேசியில் உன் பெயரோ 
அழகிய ஆண் பெயர்..!! 
படிப்பதாக புத்தகம் திறந்து 
உனக்கு அனுப்பிய குறுந்தகவல்..!! 
உன்னை சந்திக்க வேண்டுமெனில் 
திடீரென வரும் காய்ச்சல்..!! 
நண்பர்கள் தூங்கிய நடு இரவில் 
உன் புகைப்படம் பார்ப்பது 
என எத்தனை போராட்டங்களில் 
உன்னை காப்பாற்றி இருக்கிறேன்..!! 

ஆனால் நீயோ, 
அழகில்லை என என்னை ஒதுக்கி 
உன் அழகின் அழகை காட்டி விட்டாய்..!! 
அடி போடி கிறுக்கி, 
என் வாழ்கையை கிறுக்கி விட்டு 
உன் ஓவியம் வரைய பார்க்கிறாய்..!! 
என்னை கண்ணீரில் அமிழ்த்தி 
உன் தாகம் தீர்க்க நினைக்கிறாய்..!! 

இப்படி நடுவழியில் விட்டு போகவா, 
நடு இரவில் விழிக்க வைத்தாய்..!! 
பேய் காதல் கூட 
உண்மையெனில் சேர்ந்து விடும்..!! 
பொய் காதல் என்றும் 
சூரியனை நோக்கிய பனித்துளி தான்..!!

என்னவள்

என்னுள்ளே பல மாற்றங்களை
ஏற்படுத்தியவள், பார்த்த நாள்
முதல் பின் தொடர்கிறேன்,
அவள் பாத சுவடுகள் வழியே!

அவளின் பாதம் பாதமல்ல பல்லக்கு,
என் இதயத்தை காதலில் உறைய வைத்த 
பல்லக்கு,அவள் வைக்கும் ஒவ்வொரு அடியும்
இம்மண்ணில் விழவில்லை என் மனதில்!

தேவதை அவள்!
அல்லித்தண்டு பாதம்,தேன் சிந்தும் பாதம்
அவளின் பாதம், தண்ணீர் கூடஅமிர்த சுவை 
கண்டது அவளின் பாதம் தரிசித்ததால்!

பாதத்தோடு பூட்டிய இரண்டடுக்கு கொலுசு
அதில் பதித்த மூன்று முத்துக்களின் கொத்து
அதுவே அவளின் அழகிய பாதத்தின் சொத்து, அவை
உன் பாதத்தோடு பூட்டவில்லை, என் இதயத்தோடு!

உன் பாத கொலுசொலி ஒலித்தது என்
நாடித்துடிப்பாய் ,நான் துடிதுடித்துப்போனேன் 
துவண்டு போனேன், தூக்கமற்று
பசியற்று, காதல் எனும் கருவறைக்குள்! 

கருவறையை விட்டு கரை சேர்க்க
வருவாயா உன் பாதத்தால் எனை நோக்கி
காதலை முத்துக்களாய் கோர்த்து
இல்லற வாழ்வில் இன்புற,
துடியாய் துடிக்கிறது என் இதயம்,
உன் பாத கொளுசொலியாய்!

உன் காதலை என்னிடம் நீ கரை சேர்க்க 
உன் நிழற்படம் பார்த்து மட்டுமே 
வார்த்தைகளை கோர்த்து கவிதையாய் 
கரை சேர்த்த என் காதலை நீ
நிழற்படமாகவே மாற்றிவிட்டாய்!!!

இதற்காகவா உன் பொய் காதலை கரை 
சேர்த்தாய் , புலப்பட்டது பிறகு, உன்
 பாத சுவடுகள் அல்ல புதைகுழிகளின் 
பூங்காவனம் , உன் கொலுசின் ஓசை 
அல்ல நீ எனக்கு அடித்த சங்கு ஓலி என்று!!!

சனி, 17 அக்டோபர், 2015

இயற்கையான தானியங்களையும் காய்கறிகளையும் சமைப்போம்.

பூமியில் உணவுகளை உற்பத்திசெய்வதும் பராமரிப்பதும்தான் நம் உலக குடும்பத்தின் முதன்மை கடமை.

மனிதனுக்கு உடனடி தேவையாக எல்லா காலத்திலும் இருந்துவருவது காற்று, நீர், உணவுதான்.

இந்த மூன்றின் அவசியத்தை கருதி இயற்கையும் தன்னகத்தே உயிரினங்களுக்காக அதிகமாகவே வைத்திருக்கிறது.

காற்றையும் நீரையும் ஆதிகாலத்தில் இருந்து அப்படியே பயன்படுத்திவரும் மனிதன் உணவுகள் விடயத்தில் மட்டும் தன் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாற்றங்களை நாளுக்கு நாள் பெருக்கிக்கொண்டான்.

அரிசி, கோதுமை, கேழ்வரகு, போன்ற தானிய வகைகளையும் பருப்பு வகைகளையும் காய்கறிகளையும், பழங்களையும் அதிகமாக பயிரிட்டுக்கொண்டான்.

அவைகளை வேகவைத்து சுவையாக சப்பிடும் வித்தையை பழக்கிக்கொண்டான். வேகவைத்தால் மாமிசமும் தனக்கு உணவு என்பதை தெரிந்துகொண்டான்.

இப்படி உணவு அடிப்படையில் செய்துவந்த மாற்றங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சுவைக்காக உப்பு, புளி, காரம் சேர்த்தான்.

மணத்துக்காக மசாலாவை சேர்த்தான். இப்படி எல்லாம் இயற்கையிலிருந்தே எடுத்து தனது உணவு என்ற ஒரு கட்டமைப்பை பலப்படுத்தினான்.

ஒரு காய்கறியை 10 விதமான முறைகளில் கறிசெய்யும் அளவில் மனிதனின் சிந்தனை சமையற்கலையில் புகுந்து விளையாடியது.

இந்த வளர்ச்சியே ஒரு நிலையில் மக்களை வெறுப்படைய செய்தது. உணவு பார்க்க கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக வண்ணங்கள் சேர்க்கப்பட்ட போதும் துரித உணவுகள் துவங்கிய போதும்.

புதிய உணவு வகைகள் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எதையாவது பீட்சா, பார்க்கர், என்றும் க்ரீம் சேர்த்து அலங்கார கேக்குகளை உருவாக்குவதும் அதை கவர்ச்சியான விளம்பரங்களால் மக்களிடம் திணிப்பதும், உண்மையை கூட வெளியில் சொல்லமுடியாத வெற்று ஆடம்பர மோகத்தில் மக்களை சிக்க வைத்திருப்பதாலும் இப்போது உள்ள உணவு முறைகள் நல்ல உணவு ஞானம் உள்ள மனிதர்களால் விரும்பப்படாத நிலையிலே உள்ளது.

புதிய உணவுகளில் மக்கள் மதிப்பிட முடியாத வகையில் பொருள்கள், ஆடம்பரங்கள் சேர்க்கப்படுகின்றன.

எவ்வளவு விதவிதமான பாத்திரங்கள் வீட்டில் இருந்தாலும் பாலித்தின் தாள்கள்தான் அவசரகால உணவுதளங்களாக மாறுகின்றன.

இதனால், ஒரு நாளைக்கே கோடானகோடி கணக்கில் அவைகள், குவிந்து உலகில் அழிக்க முடியாத செயற்கை குப்பைமேடுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

நாகரீக உணவு வகைகள் நம்மிடையே புகுந்ததால், நாம் இழந்த சுவையான ஆரோக்கியமான பழைய இயற்கை உணவு வகைகள் ஏராளம்.

அந்த உணவு வகைகள் தொலைந்து போனதால் வரும் தலைமுறைகளும் ஆரோக்கியமற்று உடல் பருத்து நரை விழுந்து, நடுத்தர வயதிலே மருந்து மாத்திரைகளோடு நோயாளியாக வாழ்கின்றனர்.

அதேசமயம் பழமையான உணவுகளை திரும்பிப் பார்க்கும் கலாச்சாரமும் மக்களிடையே கொஞ்சம் பரவி வருவது ஒரு ஆறுதலான விடயமாக உள்ளது.

சமீபத்தில், நெஸ்ட்லே நூடூல்ஸ் தீங்கானது என்று அரசால் தடை செய்யப்பட்டது. அதுபோல, பல தீங்கான உணவு பொருள்கள் நம்மிடையே இன்னும் உண்டு.

பேக்கிங் செய்யப்படும் உணவு சம்பந்தப்பட்ட பொருள்கள் எல்லாமே வணிகம் ஓங்குவதற்காக, மனிதனுக்கு தீங்குசெய்ய தயங்காத கொள்கை கொண்டதுதான்.

எண்ணெய் வித்துக்களில் பிழிந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கெடுதியல்ல, அதை பலமுறை காய்ச்சி வடித்து ப்ளாஸ்டிக் பைகளில் அடைத்தால் கேடுதான்.

சர்க்கரை (சீனி), மைதா, இவற்றின் தயாரிப்பில் வெண்மை நிறத்துக்காக சேர்க்கப்படும் ரசாயனப்பொருள்கள் நீரிழிவு போன்ற பல நோய்களுக்கு காரணமாவதை ஆய்வு முடிவுகள் தெரிவித்தும், தவிர்க்க முடியாத பொருளாகவே இன்னும் விளங்குகிறது.

உணவின் அவசியம் கருதி, அதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த ஆண்டில் ஒரு தினமாக அக்டோபர் 16 ம் திகதியை ஐ.நா. அறிவித்து கொண்டாடி வருகிறது.

இந்த தினத்திலிருந்தாவது, இயற்கையான தானியங்களையும் காய்கறிகளையும், கடல் உணவு வகைகளையும் சமைப்போம்.

அதற்கு சுவை, மணம், நிறம் கொடுக்கவும் தீங்கில்லாத தாவரங்களில் இருந்து பெறப்பட்ட பொருளையே சேர்ப்போம்.

தீங்கான பொருளை நாம் புறக்கணித்தால், நல்ல பொருள்கள் வியாபாரிகளுக்கு தானே தெரியவரும்.

சர்வதேச வறுமை ஒழிப்பு

சமுதாயத்தில் மக்களிடம் பொருளாதாரத்தில் நிலவும் வேறுபாடுதான் எல்லா வித சமத்துவமின்மையையும் வன்மையாக பிரதிபலிக்கச் செய்கிறது.

வறுமை ஏற்பட்ட குடும்பம் ஆனாலும், ஒரு இனம் ஆனாலும், ஒரு நாடு ஆனாலும் தாழ்ந்த மனநிலைக்கு செல்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை 1993 ம் ஆண்டில் ஐ.நா. அறிவித்து ஆண்டுதோறும் அக்டோபர் 17 ம் திகதியில் கொண்டாடி வருகிறது.

உழைக்க தயாராக ஒருவன் இருப்பதால் மட்டும் தன் வறுமையை ஒழித்துவிட முடியாது என்ற நிலை உலகில் உருவாகியிருப்பது தான் சிக்கலே.

வறுமையில் சிக்கிய மக்கள் உழைக்க துணிந்தும் எங்கே எப்படி என, பண வரவான தொழிலுக்கு வழிதெரியாமல் விழிபிதுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

முதலாளித்துவத்திலும் அரசியலிலும், கனவு தொழிற்சாலைகளிலும் ஒருவனின் உழைப்புக்கு பொருத்தமின்றி குவியும் கோடிக்கணக்கான பணத்தோடு, ஒரு கூலித் தொழிலாளியின் சம்பளம் எப்படி போட்டிபோட முடியும். அதேசமயம், கூலித்தொழிலாளி வேலைகளும் ஒழிக்கப்படக் கூடியது அல்ல.

இந்த ஏற்றத்தாழ்வுகளை எப்படி சமப்படுத்துவது கடினமோ, அதே சிரமம் வறுமை ஒழிப்பிலும் இருக்கிறது.

பணம் என்ற உலகின் ஒரு தலையாய கொள்கை, சமுதாயத்தின் அத்தியாவசியப் பொருள், அத்தியாவசிய உழைப்பு, தொழிலை கூட மதிப்பற்றதாக்கிவிடும்.

மாறாக, உபயோகம் குறைந்த பொய்யான ஒரு பொருளையும் விலைவைத்துவிடும் தந்திர கருவியாக மனிதர்கள் கையில் தவழ்கிறது.

இதனால், நல்ல உழைப்பாளர்களாலும் வறுமையை போக்கிக்கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது. உன்னதமான உணவு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளும் மீனவர்களும் வறுமையில் வாடுவதே இதற்கு சாட்சி.

அறிவுப்பூர்வமான உழைப்பும் மக்களின் அத்தியாவசியமும் அந்த தொழிலுக்கு இருந்தும் கூட, பணத்தின் விளைவு மட்டும் ஏன் பரிதாபத்திற்கு உரியதாக கிடைக்கிறது.

இதுபோல எத்தனையோ அவசியமான வேலைகள் அடிமாட்டு விலையிலேயே நடக்கின்றன.

இதற்கான காரணத்தை அறிந்திருந்தாலும், பொறுப்பிலிருக்கும் எந்த ஆட்சியாளர்களாலும் ஆராய்ந்து தீர்வு காண முடியவில்லை.

இன்றைய வாழ்வின் போதாத நிலைக்கு காரணங்கள்:

தவறான இலக்கு நோக்கிய முன்னேற்றங்கள், லஞ்சம், ஊழல், வேலைவாய்ப்பின்மை, மக்கள்தொகை, ஆட்சியாளர்களின் இயலாமை, சுயநலம், சந்தர்ப்ப முடிவுகள், இன மொழி மத பிரிவினை தாக்கங்கள், இளைஞர்களை திசைமாற்றும் அரசியல் கட்சிகள், விளையாட்டு, சினிமா, வலைதளங்கள். முதலாளித்துவம், வணிகமயம் இவைகளோடு பணம் என்ற கண்டுபிடிப்பும் நிச்சயமாக முதன்மை காரணமாகவே இடம்பெறும்.

இந்த கடினமான காரணங்கள் வேர் வலுவடைந்து சரிசெய்யப்பட முடியாத தூரத்துக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

தன் நாட்டைப் பற்றி வெளி உலகுக்கு பொய் தோற்றத்தை காட்டும் திறமையற்ற ஆட்சியாளர்கள்.

50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமலும் ஒரு நாளைக்கு இரு வேளை உணவுக்கே வழியில்லாமலும் இருக்கும்போது, அந்த நாட்டில் மெட்ரோ ரயில், பல்லாயிரம் கோடிகளில் ராணுவ தளவடங்கள், உலக அளவிலான விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என பணக்கார நாடு போல காட்டி தங்கள் மரியாதையை தேடிக்கொள்கிறார்கள்.

இது நோயால் சீரழிந்த உடலுக்கு, உயர்ரக ஆடையும் தலைப்பாகையும் உடுத்திப்பார்க்கும் நிலையே, அதனால், ஆரோக்கியம் வந்துவிடாது.

என்றாலும், என்றாவது இந்த வறுமை எல்லோரிடமும் ஒழிக்கப்படும் என்று, அணு விஞ்ஞானி அப்துல் கலாம் கூறியதுபோல, ஒவ்வொருவரும் கனவு காண இந்த வறுமை ஒழிப்பு தினத்தை பயன்படுத்துவோம்.

கனவு என்பது தூங்குவதல்ல, தூங்கவிடாமல் செய்வது.

புதன், 7 அக்டோபர், 2015

மத்திய கிழக்கில் மிகப்பெரிய சத்திரசிகிச்சை நடைபெற ஆரம்பித்துள்ளது…!!!

தலைமை வைத்தியர் குலாம் - அமெரிக்கா. ரஷ்யா
மேற்பார்வை - இஸ்ரேல்
தாதியார்கள் - பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நட்பு நாடுகள்
கத்திரிக்கோல் - துருக்கி, ஜோர்தான், சவூதி
தையல் நூல் - புரட்சிப்படை
அகற்றப்பட வேண்டிய கட்டி - ஜ.எஸ்.ஜ.எஸ்
காரணி - அசாத்
வைத்தியசாலை - சிரியா, ஈராக்
சிதிலமடையும் பகுதி - பொதுமக்கள்
சிதைக்கப்பட வேண்டிய பகுதி - ஈரான்
மருத்துவச்சான்றிதழ் - ஜ. நா
உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய மருந்து - குர்திஸ்தான், யேசிடிஸ்தான்
பாவிக்கப்படும் குளுசைகள் - SU - 25, AV-8B, F-35B, SAMs, chemical weapons, 9K11, 9A- 91, KPV, 9M133, BMP-1, BM-21 and more tablets...

திங்கள், 5 அக்டோபர், 2015

சக்தி டீவி தொலைக்காட்சி தொடர்களில் நான் நடித்த நாடகத்தொடர்கள்

புன்னகை -  2013

சில நேரங்களில் சில மனிதர்கள் - 2014

தூண்டில் மீன் - 2014


இரண்டு - 2015


ஆசை - 2015




மூன்றாம் உலகப்போரின் களங்கள் World War 3

சிரியாவை மைப்படுத்தி வல்லரசுகள் திறந்துவிட்ட போர்களம் இனி மெல்ல பரவும்.
தென்சீனக்கடலில் மையம் கொண்டுள்ள சுறாவளி இனிமெல்ல வீசும்
ஒரே பாய்ச்சலில் அருணாச்சலம் உட்பட கிழக்கிந்திய மாநிலங்கள் கைமாறும்
பாக்கிஸ்தானில் பலுஸ்கிஸ்தான் பிளவுபடும்
தென் ஆசியாவில் சில மாற்றங்கள்.
பல வல்லரசுகளின் சித்துவேலைகளால் சின்னாபின்னமாகப்போகும் முத்துத்தீவுகள்
வடகொரியாவின் பொழுதுபோக்கில் தென்கொரிய பற்றி எரியும்

மொத்தத்தில் அமெரிக்க அவுஸ்ரேலிய ஜரோப்பாவை தவிர்ந்த மற்றக்கண்டங்களுக்கான யுத்தம் இது... முடிவில் வரைபடங்கள் மாறுபடும்.

சின்னத்திரையின் அடுத்த படைப்பில்…!

சக்தி டீவியின் தயாரிப்பில் ஒரு சராசரி குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சனைகளும் பிளவுகளையும் வித்தியாசமான கோணத்தில் ... நிறைவடைந்த படப்பிடிப்பில் வெளிவராவாய் இருக்கிறது.



இயக்கம் - அஸ்வின் பாஸ்கர் (இந்திய இயக்குநர்)
ஒளிப்பதிவு - சுஜித்
நடிகர்கள் - அ. எல்றோய் , கிருசாந்தினி , சிறுவன் கார்த்தி மற்றும் பலர்…


அமெரிக்க இஸ்ரேலிய நிகழ்ச்சி நிரலின் படி போரில் குதித்த ரஷ்யா


சிரியா உள்நாட்டுப்போர் பல நாடுகளின் ஆயுத தளபாடங்களை பரீட்சித்துப்பார்க்கும் களமாக திறந்துவிடப்பட்டுள்ளது.

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Lf9-723BZw8

புதன், 1 ஏப்ரல், 2015

தமிழன்

ஆரியன் வந்தான்…! சாத்திரத்தையும் சாதியையும் விதைத்தான். 
மொகலாயன் வந்தான்…! மதத்தையும் மதத்தால் அழிவையும் விதைத்தான்.
ஆங்கிலயன் வந்தான்...சுரண்டலையும் அதனால் பசியையும் வறுமையும் விதைத்தான்.
ஏமாந்த தமிழன் எல்லாவற்றையும் ஏற்று கொண்டான்.
தன்னை தானே இழித்து கொள்ளும் தரங்கெட்ட நிலைக்கு தாழ்ந்தும் போனான் !!
கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான் !!
ஈழம் சென்று கங்கை கொண்டு கடாரம் வென்று இமயத்தில் கொடி நாட்டியவன்
இன்று இனம் பிரிந்து மொழி மறந்து அகதிகளாய் முகம் தொலைத்து முகவரியற்று அலைகிறான் !
இன்று அங்கவையும் சங்கவையும் கேலிபொருள்கள்
கோப்பெருந்தேவியும் குழல்வாய்மொழியும் விலைமாதர்கள் !
தமிழ் பேசினால் பாவம் தமிழ் படித்தால் சாபம் !
தம் இனம் மறந்து மொழி தொலைந்து திரியும் இவன்
அடுத்த நூற்றாண்டில் அழிந்து போவான்...!

ராஜ ராஜ சோழன்


இந்தியர்கள் குப்தர்களையும், விஜயநகர அரசர்களைப் பற்றிக் கற்குமளவுக்கு ராஜ ராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ கற்பதில்லை. இந்தியாவின் பெருமையாக ஈரானின் கட்டட காலையில் உருவான தாஜ்மகாலை கூறிக்கொள்ளும் நாம் இந்தியாவிலே உருவான தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.ராஜ ராஜ சோழனை பற்றி கேட்ட நாள் முதல் அவனை பற்றி ஆராய வேண்டும் என்ற சிந்தை இருந்தது.ஆதலால் ஆங்கங்கே கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இணையத்தில் தமிழில் தொகுத்து தந்துள்ளேன் .. முதல் முயற்சி பிழை இருப்பின் பொறுத்தருள்க .


தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது

மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் 
1 சங்க கால சோழர்கள் 
2 விஜயால சோழர்கள் 
3 சாளுக்கிய சோழர்கள்

நாம் இங்கு காண இருப்பது விஜயால சோழர்களை பற்றி.. இவர்கள் காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் தன் கடற்படை வலிமை கொண்டு தெற்காசியா முழுவது பறந்து விரிந்திருந்தது. இந்திய வரலாற்றில் முதன் முதலாக கடல் கடந்து தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு ராஜ்யம் சோழ ராஜ்யம் தன்.இவர்கள் தம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து மதத்தையும்,திராவிட கலாச்சாரத்தையும் பரப்பினர்.

விசயாலய சோழன்
விசயாலய சோழன் (கி.பி. 850-880) என்ற மாவீரன் காலத்திலிருந்து சோழர் ஆட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. விசயாலய சோழன் கி.பி 850இல் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான்.விசயாலயசோழன் காலத்தில் பாண்டியர்களும், பல்லவர்களும் வலிமை பெற்று இருந்தனர்.இதே கால கட்டத்தில் சோழர்களைப்போன்றே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம்வசப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்.இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்டமுடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது.

திருப்புறம்பயம் போர்
சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக  முத்தரையர்களும் போரிட்டனர்.அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான்.அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்டதோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார்.இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது.கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில்வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.

முதலாம் ஆதித்தன்
மாவீரன் விசயாலய சோழன், சோழர்குலம் மீண்டும் சோழநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கு அடிக்கல் நாட்டினான்.விஜயால சோழன் பல்லவர்களை வெற்றி கொண்டு தஞ்சையை தலைமையிடமாக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தைய் நிறுவினான் .விஜயால சோழனுக்கு பின் அவனது மகனான ஆதித்ய சோழன் ஆட்சிக்கு வந்தான்.பிறகு ஒரு போரில் ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் அபராஜிதன் மீது முதலாம் ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன்று தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான். இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும்.

முதலாம் பராந்தகன்
ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகன் ஆட்சி ஏற்றவுடன் பாண்டிய நாட்டை ஆண்ட இரண்டாம் இராசசிம்மன் உடன் போரிட்டான்.இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான்.போரில் பாண்டியர்களை வென்று தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்

தக்கோலப் போர்
முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்ததால் இராஷ்டிரகூடர்களின் வளர்ச்சி அதிகமாயிற்று.திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான். அப்போது இராட்டிரக்கூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.அரக்கோணத்திற்கு அருகில் உள்ளல் தக்கோலம் என்ற இடத்தில் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னர தேவனுக்கும் இராசாதித்தனுக்கும் கடும்போர் நடந்தது. மூன்றாம் கிருஷ்ணனுக்கு துணையாக கங்க மன்னன் பூதுகன் என்பன் போரிட்டான். இராசாதித்த சோழன் யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தபோது, பூதுகன் விடுத்த அம்பு ஒன்று சோழனின் மார்பை துளைத்துச் சென்றது. இராசாதித்தன் வீர மரணம் அடைந்தான். இதனால் சோழ படை தோல்வியுற்று தனது பகுதிகளை இழந்தது. ஏழத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழ் தக்கோலம் இருந்தது.வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான்

கண்டராதித்த சோழன்
தக்கோலப்போரில் இராசாதித்த சோழன் மாண்டதால் முதலாம் பராந்தகன் தனது இரண்டாவது புதல்வனான கண்டராதித்தனை முடி சூடச் செய்தார் . கண்டராதித்தன் தான் பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலயே அரிஞ்சய சோழனை இளவரச பட்டமேற்கச் செய்தான்.அப்பொழுது கண்டரதித்தனுக்கு புதல்வர்கள் கிடையாது.கண்டராதித்தான் போர்களில் ஈடுபடுவதை காட்டிலும் கோவில் கட்டுவதிலயே அதிகம் ஈடுபாடு கொண்டார்.தொண்டை மண்டலம் தொடர்ந்து இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழே இருந்தது.அதை மீட்பதற்கு சிறிது கூட முயலவில்லை என்றே கூற வேண்டும்.இக்காலகட்டத்தில் சோழ இராணுவம் வலிமை குறைந்து, கடல் வாணிபம் செழிப்புற்று விளங்கியது. சிதம்பரம் கோவிலில் உள்ள திருவிசைப்பா என்ற சைவ பாடலை பாடியவர் இவர்தான் என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது.

அரிஞ்சய சோழன் 
அரிஞ்சய சோழன் முதலாம் இராசாதித்த சோழன், கண்டராதித்த சோழன் ஆகியோருடைய தம்பியாவான். வடக்கிலும்,தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன்,மிகக் குறுகிய காலமே ஆண்ட இவன் சோழ நாட்டின் வடக்குப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியில் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.


சுந்தர சோழன் 
அரிஞ்சய சோழன் இறந்தவுடன் அவனது மகனான சுந்தர சோழன் பட்டமேற்றான். கண்டராதித்தன் மகனாகிய உத்தம சோழன் பட்டத்துக்கு உரிமை பெற்றவனாயினும் அவனது இளம் பிராயத்தை கருதி தனது மூத்த பேரனை சுந்தர சோழனை பட்டமேற்கச் செய்தான் முதலாம பராந்தகன் என்று கருத்து உண்டு.இரண்டாம் பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்ட சுந்தர சோழனக்கு ஆதித்ய கரிகாலன்,அருண் மொழி தேவன் , குந்தவை என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர் . இவன் ஆட்சிக்கு வந்த பொழுது தெற்கே பாண்டியர்களும் வடக்கில் இராஷ்டிரகூடர்களிடம் மிக வலுவாக இருந்தனர்.இவன் முதலில் உள்நாட்டு கலகக்காரர்களை அடக்கியத்துடன் பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை மன்னன் மகிந்தனை அடக்க கொடும்பாளூர் வேளாள இளையவர் தலைமையில் ஒரு படையை இலங்கைக்கு அனுப்பினான் . குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட படையாலும், ஆயுத மற்றும் தானிய குறைபாடு காரணமாகவும் சோழ படைகளால் இலங்கை படையை வெல்ல முடியவில்லை .இப்போரில் கொடும்பாளூர் வேளாள இளையவர்போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார்.
சோழப் படைகள் இலங்கையில் தோல்வியுற்றவுடன் வீர பாண்டியன் மீண்டும்மறைந்து இருந்து தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தான்.ஆனால் இம்முறை சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் படை நடத்தி சென்றான். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனும் வீர பாண்டியனும் நேருக்கு நேர் மோதினர்.இப்போரில் சுந்தர சோழன் யானைகளை கொன்று இரத்த ஆறை ஓட வைத்தான் என்றும், போரின் இறுதியில் வீர பாண்டியன் படைகள் தோல்வியுற்று வீர பாண்டியன் பக்கத்தில் உள்ள மலையில் சென்று ஓளிந்து கொண்டதாகவும் அவனை ஆதித்யன் தேடி சென்று தலையைக் கொய்ததாகவும் கருத்து உண்டு. அல்லது இவன் போர்க்களத்தில் கொல்லப்பட்டு இருக்கலாம் எப்படியும் "ஆதித்யன் வீரத்துடன் போரிட்டு ,வீர பாண்டியனை வென்று அவனுடைய தலையைக் கொய்ததாக" திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. இப்போரில் வென்றாலும் சுந்தர சோழனால் முழுமையாக பாண்டிய நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிய வில்லை.
இப்போர் முடிந்தவுடன் ஆதித்யன் வடக்கில் ஆக்கிரமித்து கொண்டிருந்த இராஷ்டிரகூடர்களிட போரில் ஈடுபட்டான் . இப்போரில் இவர்களால் இராஷ்டிரகூடர்களை முழுமையாக வடக்கிலிருந்து விரட்ட முடிந்தது.இலங்கை போரில் ஏற்ப்பட்ட தோல்வியை துடைக்க மீண்டும் இலங்கை மீது படை எடுக்க சுந்தர சோழன் தீர்மானித்தான்.ஆனால் இம்முறை யார் தலைமையில் படை நடத்தி செல்வது என்ற விவாதம் ஏற்ப்பட்டது.அப்போதுஆதித்ய கரிகாலன் இராஷ்டிரகூடர்களுடன் காஞ்சியை நிலைப்படுத்த தீவிரமான போரில் ஈடுப்பட்டிருந்தான்.இந்நிலையில் சுந்தர சோழனின் இளைய மகனான அருண் மொழி தேவன் (ராஜ ராஜான்) படைகளை நடத்த முன் வந்தான்.அப்போது அவனுக்கு வயது 19.

ஆதித்த கரிகாலன் கொலை
சுந்தர சோழன் தமது காலத்தில் உரிய பிராயத்தை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வர் மதுராந்தகரை அடுத்த இளவரசராக அறிவிக்காமல் தனது தலைமகனான இரண்டாம் ஆதித்தரை இளவரசராகப் பட்டம் கட்டியது பல்வேறு மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்குமென்று தோன்றுகிறது. இதில் ஏதோ ஒரு வகையில் கடுமையான பாதிப்பையடைந்த உடையார்குடியின் கேரளத்து அந்தணர்கள் இரண்டாம் ஆதித்தரைக் கொலை செய்துவிட்டு மதுராந்தகர் உத்தமச் சோழர் என்கிற பெயரில் சோழசிம்மாதனமேற வழியேற்படுத்திக்கொடுத்தார்கள். இரண்டாம் ஆதித்தரின் தமையனான இளைஞர் அருள்மொழிவர்மர் தனது சிற்றப்பா மதுராந்தகர் சோழ மகுடத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனைத் தனது மனதினாலும் தீண்டுவதில்லையென்று திட்டவட்டமாக அறிவித்ததைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்துள்ளன .உத்தம சோழன் பதவி ஏற்றவுடன் அருண்மொழிவர்மனை இளவரசு பட்டமேற்கச் செய்தான் .

உத்தமச் சோழரின் காலத்தில் வம்ச வம்சமாகச் சோழருடன் பகை பூண்டிருந்த பாண்டியருடன் உத்தமச் சோழரும் அவரது சுற்றமும் நெருக்கமாக கைகோர்த்துக்கொண்டார்கள் என்பது குத்தாலக் கல்வெட்டால் விளங்குகிறது. சோழசாம்ராஜ்ஜியத்தை மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாச்ரயர் கி பி 980ல் தாக்கியபோது உத்தமச் சோழரால் அவரை வெற்றிகொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தபின் வேறு வழியின்றி உத்தமச் சோழர் விலகிக் கொள்ள கிபி 985ல் "இராஜராஜன்" என்னும் அபிஷேக நாமத்துடன் அருள்மொழிவர்மர் சோழசிங்கதானத்தில் அமர வழியேற்பட்டது.

போர்கள்
காந்தளூர்ச்சாலை கடிகை போர்  
பட்டமேற்றவுடன் ராஜ ராஜன் செய்த முதல்காரியம் தனது தமையனார் ஆதித்த கரிகாலர் கொலையில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டித்ததே ஆகும். சோமன் இவனது தம்பி ரவிதாசன், பரமேஸ்வரன், மலையுரன் மற்றும் இவர்களுக்கு பெண் கொடுதோர் பெண் எடுத்தோர் ஆகியோரை கட்டிய துணியோடு சோழ எல்லை தாண்டி சேர நாட்டுக்கு துரத்தி அடித்தான்.அந்தணர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை தரக் கூடாது என்று போதிக்கும் மனு தர்மத்துக்கு அடிபணிந்து அவர்களை உயிரோடு விட்டதாக கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை மீது போர் தொடுத்து பாஸ்கர ரவி வர்மனை தோற்கடித்தான்.காந்தளூர்சாலை கடிகை என்பது சேர,சோழ, பாண்டிய மன்னர்களிடையே புகழ்வாய்ந்த போர்முறைகளை, ஆயுதங்கள் பயிற்சியினை மற்றும் இன்னபிற தந்திரங்களை பயிற்றுவிக்கும் கல்லூரி போல திகழ்ந்து வந்தது.இங்கு தான் ஆதித்த கரிகாலனை கொல்ல சதி திட்டம் உருவானதாக கருதியதால் இக்கடிகை தகர்க்கப்பட்டது.  

மலை நட்டு போர்  
இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான்.இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

ஈழப் போர்
பாண்டிய மணிமுடியை கைப்பற்றும் பொருட்டும் இலங்கையை முழுவதுமாக தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டும் ஈழப் போரை நடத்தினான். சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.இருப்பினும் இவனால் பாண்டிய மணிமுடியை கைப்பற்ற முடியவில்லை.இராஜேந்திர சோழன் காலத்திலயே மணிமுடியும் இலங்கையின் முழு கட்டுப்படும் சோழர் கைக்கு வந்தது.

வடக்கு போர்கள்  
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே  பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஷ்டிரகூடரின்  இல்லாததால் இப்போர் மிக சுலபமாக வெற்றி அடைந்தது . அடுத்த நூற்றாண்டு முழுதும் இந்த பகுதி சோழர் வசமே இருந்தது.

மேலைச் சாளுக்கிய போர்
காங்கபடியையும் நுலம்பாடியையும் கைப்பற்றியவுடன் சோழர்களுக்கும் சாளுக்கியகளுக்கும் அடிக்கடி சிறு சிறு மோதல் ஏற்பட்டது . இருவரும் தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர் தங்களது பலத்தை நிருபிப்பதற்கு.எந்த சம்பவம் படையெடுப்பை தூண்டியது என்பது தெளிவாக தெரியவில்லை .கல்வெட்டுபடி கி.பி 1007 ல் இராஜராஜன் தலைமையில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் கொண்ட சோழ படை சாளுக்கியத்தை துவசம் செய்ததுடன் மிகப்பெரும் அழிவையும் ஏற்படுத்தி சென்றது.இப்போரில் சத்தியாசிரயனை வெற்றி கொண்டு அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் கொணர்ந்து பெரிய கோவில் கட்டுவதற்கு செலவழித்தான் இராஜராஜன். 
வேங்கிப் போர்
இராஜராஜன் கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடன் ஓர் இராணுவ உடன்படிக்கை செய்துகொண்டான். ஆனால் இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்த்த ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். 
வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.

கலிங்க போர்
வேங்கிப் போர் முடிந்தவுடன் கலிங்கத்தின் (கலிங்கம் இன்றைய ஒரிசாவின் பகுதி) மீது படையெடுத்தான்.இராஜராஜன் தலைமையில் சென்ற படை கலிங்க அரசன் பீமனை முறியடித்து 

மாலத்தீவு போர்
இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. 

சோழ சாம்ராஜ்யம்  

மதுரை
கங்கபாடி நுளம்பபாடி (தற்போதய மைசூர்)
கலிங்கா
வெங்கி
மாலத்தீவு
கடாரம்  (தற்போதிய மலேசியாவில் உள்ள ஒரு தீவு )
மலாயா ( தற்போதிய தாய்லாந்து, பிலிபீன்ஸ், இந்தோனேசிய, மலேசியா, ப்ருனாய் மற்றும் சிங்கபூர் )
இலங்கை
















தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் சோழர்களால் கட்டப்பட்ட பழங்கால இந்து ஆலயம்








நிர்வாகம்

இராணுவம்
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. 
இவன் வலிமை மிக்க  
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)  
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது

தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்

நிலசீர்திருத்தம்
ராஜராஜன் தனது 16 வது ஆட்சி ஆண்டில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவருடைய பேரரசு முழுவதையுமே அளந்துள்ளார். பயிர் செய்யக்கூடியதும் முடியாததுமான எல்லா நிலங்களையும் அளந்து, வகைப்படுத்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால நவீன அளவீட்டுக் கருவிகள் ஏதுமில்லாஅத நிலையில் வெறும் கயிறுகளைக் கொண்டு அளந்து ஓலைச்சுவடிகளில் குறித்துக்கொண்டு கணக்கிடுவது என்பது ஓர் அசுர சாதனை. அதுவும் மிகவும் துல்லியமாக (ஒரு வேலியின் 32ல் ஒரு பகுதியைக்கூட அளந்தார்கள்) அளவை செய்வது என்பது உலகையே அளப்பதற்கு ஒப்பாகும். இதனால் இவருக்கு “குரவன் உலகளந்தான்” என்றும் ஒரு பெயர் வந்தது.

சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது.10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்..

கிராமசபை

இராஜராஜனுடைய சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலிஎனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம்பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில்தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டுஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில்உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல்என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும்ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள்,ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன்வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள்என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம்என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

ராஜராஜனின் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். 

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

ராஜராஜனின் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தஞ்சை கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது

.
















தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!
வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது





கல்கியின் பொன்னியின் செல்வனின் புத்தகத்தில் வரையப்பட்டுள்ள குந்தவை மற்றும் நந்தினி படங்கள்.















கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!

சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.


Reference tamilnation.org, wikipedia, varalaru.com, velu.blogsome.com, muththamiz google group, ponniyin selvan yahoo group தலை வணங்கா தமிழன் - ராஜ ராஜ சோழன்