புதன், 6 மே, 2020

ஐசக் நியூட்டன்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஒரு நாயை வளர்த்துவந்தார். அதற்கு டயமண்ட் (வைரக் கல்) என்று பெயரும் சூட்டி அன்பாகப் போற்றி வந்தார். ஒரு நாள் அவர் மாலையில் உலாவச் சென்றார். அப்பொழுது அறையின் மேஜை மீது மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அன்று என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அவர் உலாவச் சென்ற நேரத்தில் அந்த நாய் மேஜை மீது தாவிக் குதித்தது போலும். மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அங்கு அவர் எழுதிவைத்திருந்த காகிதங்களுக்குத் தீவைத்தது. அத்தனையும் எரிந்து கருகின. அதன் அருமை பெருமை நியூட்ட்ன் ஒருவருக்கே தெரியும். ஏனெனில் அவை அவரது இருபது ஆண்டுக் கால ஆராய்ச்சியின் முடிவுகளடங்கிய காகிதங்கள்.

உலாவச் சென்று திரும்பிய நியூட்டனுக்கு அவற்றைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி. எல்லாம் டயமண்டின் ‘திருவிளையாடல்’ தான் என்பது அவருக்குப் புரிந்தது. அதுவோ தான் செய்த பெரிய தீங்கை அறியாது அன்பாக வாலைக் குழைத்து நியூட்டனை வரவேற்றது.

நியூட்டனைத் தவிர வேறு ஒருவர் அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால், நாயை எத்தி உதைந்து அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருப்பார். ஆனால் நியூட்டனோ அன்பாக நாயை எடுத்துத் தழுவி அணைத்து, “டயமண்ட், நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறியமாட்டாய்” என்றுசொல்லிக் கொஞ்சினார். அது மீண்டும் வாலை ஆட்டி தன் நன்றியைத் தெரிவித்தது. நியூட்டன் மீண்டும் எழுதத் துவங்கினார்.

👉 சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே”- வெற்றி வேர்க்கை

👉 நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள்

வியாழன், 23 ஏப்ரல், 2020

உலக புத்தக தினம்

"படிப்பதில் ஆழ்ந்து,
மாய உலகங்கள் சென்று வருவோமா...?

கற்பனை உலகில் சிறகடித்துப் பறக்கலாமா,
ஒரு பிறவியில்,பல பிறவிகளின் அனுபவம் பெறலாமா...? 

புத்தக கடலில்,
ஆழ்ந்து மூழ்கி,
புத்துணர்வு பெறலாமா...?

எண்ண வெளியில் பறந்து
எல்லையில்லா பெருவெளியில் கரைந்து விடலாமா...?"

#WorldBookDay 
#உலகபுத்தகதினம்❤

'தூக்கு கயிற்றை முத்தமிடும் வரை படித்துகொண்டிருந்தார்
உமர்முக்தர்!

தூக்குமேடைக்கு செல்லும் வரை
படித்துகொண்டிருந்தார்
பகத்சிங்!

படுக்கும் இடம்கூட
படிப்பகம் அருகே வேண்டுமென்றார் 
அம்பேத்கர்!

படித்த புத்தகத்தை 
முடிக்கவேண்டும் என்பதற்காக 
அறுவை சிகிச்சையை அடுத்த நாள் மாற்ற சொன்னார் அண்ணா!

கடைசி வரையிலுப் புத்தகத்தை நேசித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்!
-
வாசிப்பை நேசிப்போம், அதை மூச்சாகியும் சுவாசிப்போம்..'

“Books are like mirrors: You only see in them what you already have inside you.”
#உலகபுத்தகதினம்

செவ்வாய், 31 மார்ச், 2020

அமெரிக்காவில் இரு வாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப்பலியும் உச்சத்துக்கு செல்லும் - அதிர வைத்த டிரம்ப்

அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கமும், உயிர்ப் பலியும் 2 வாரத்தில் உச்சத்துக்கு செல்லும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதியான டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன், 

வல்லரசு நாடான அமெரிக்காவிலும் இப்போது கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது. நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, அங்கு இந்த வைரஸ் பிடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்து விட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை 2,475.

நேற்று முன்தினம் ஒரே நாளில் இந்த வைரஸ் 18 ஆயிரம் பேருக்கு தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 255 அமெரிக்கர்கள் ஞாயிற்றுக்கிழமையன்று கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி நியூயார்க் நகரத்தில் மட்டும், 60 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு இதுவரை 960 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

நியூஜெர்சி மாகாணத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கி உள்ளது. அங்கு இதுவரை 13 ஆயிரம் பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். 161 பேர் பலியாகியும் உள்ளனர்.

மேலும் 20 மாகாணங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக அமெரிக்காவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

24 மாகாணங்களில் ஊரடங்கு, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு முன்னதாக தேசிய நெருக்கடி நிலையையும் ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே அறிவித்து அதுவும் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்கள் மத்தியில் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளை மாளிகையின் பொது சுகாதார ஆலோசகர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழு உறுப்பினர்களான டாக்டர் டெபோரா பிரிக்ஸ், டாக்டர் அந்தோணி பாசி ஆகியோர் ஆலோசனைப்படி, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருவதற்கான கால வரையறை ஏப்ரல் 30-ந்தேதி நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தணிப்பதற்கு எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள், புதிதாக கொரோனா வைரஸ் பரவுவதை குறைக்கும், பலி எண்ணிக்கையையும் குறைக்கும் என்று டாக்டர் டெபோரா பிரிக்ஸ், டாக்டர் அந்தோணி பாசி எடுத்துக்காட்டி உள்ளனர்.

தங்களது தன்னலமற்ற எழுச்சியூட்டும், துணிச்சலான முயற்சிகள் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள்.

புதிய சமூக வழிகாட்டுதல் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் 1-ந் தேதி அறிவிக்கப்படும். ஜூன் 1-ந் தேதி வாக்கில் நாம் மீண்டு வருவதற்கான பாதையில் நன்றாக இருப்போம் என்று நம்புகிறேன்.

கொரோனா வைரசால் நாம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் உயிர்ப்பலி 22 லட்சம் அளவுக்கு போகக்கூடும் என எனக்கு சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படுகிற உயிர்ப்பலியை 1 லட்சம் என்ற அளவுக்கு கட்டுப்படுத்தி விட்டாலே நாம் நன்றாக செயல்பட்டிருக்கிறோம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே டிரம்ப், கொரோனா வைரஸ் பற்றி கருத்து தெரிவிக்கையில் ஈஸ்டர் பண்டிகைக்குள் (ஏப்ரல் 12-ந்தேதி) இயல்பு நிலைக்கு அமெரிக்கா திரும்பி விடும் என எதிர்பார்ப்பதாக கூறி இருந்தார்.

இப்போது அவரே ஜூன் 1-ந் தேதி வாக்கில் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் இருப்போம் என கூறி இருப்பது, அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.

இதற்கு இடையே சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை கடைப்பிடிக்காமல் பொதுவெளியில் சுற்றித்திரிகிறவர்கள் மீது மாகாண அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் நடவடிக்கை எடுக்கத்தொடங்கி உள்ளன.

சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் நியூயார்க்கிலும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு 200 டாலர் முதல் 400 டாலர்வரை (சுமார் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில்) அபராதம் விதிக்கத்தொடங்கி இருக்கிறார்கள்.

நியூயார்க் நகரத்தில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானவர்களின் உடல்களை பாதுகாப்பாக வைக்க போதுமான அளவுக்கு பிணவறை வசதி இல்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

தற்போது அந்த நகர ஆஸ்பத்திரிகளில் உடல்களை வைப்பதற்கு குளிரூட்டப்பட்ட லாரிகளை நிறுத்தி இருப்பதை பார்ப்பதாக டிரம்ப் கூறி உள்ளார்.

ஏற்கனவே தாக்கியுள்ள மற்ற வைரஸ்களின் புள்ளி விவரத்தின்படி பார்த்தால், இப்போதைக்கு கொரோனா வைரஸ் பரவலை தணிக்காவிட்டால், அதனால் 16 லட்சம் முதல் 22 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் டெபோரா பிரிக்ஸ் எச்சரித்துள்ளார்.

டாக்டர் பிரிக்ஸ் கணிப்பு அடிப்படையில் பார்த்தால், 2 வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் அமெரிக்காவில் உச்சம் தொடும், பலியும் அதேபோல அதிகரிக்கும் என்று டாக்டர் அந்தோணி பாசி கூறி உள்ளார்.

இப்போது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்கான கால வரம்பை ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து, டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உயிர்ப்பலி 80 ஆயிரம் முதல் 1 லட்சத்து 60 ஆயிரம் வரையில் இருக்கும் என்று டாக்டர் டெபோரா பிர்க்ஸ் கணித்து கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Coronavirus: Trump says US in good shape to meet 'peak'

திங்கள், 30 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது.தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் என நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கணித்து உள்ளார்.

லாஸ்ஏஞ்சல்ஸ்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம் உகானில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 151,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான  நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு  அளித்த பேட்டியில்  கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டது.தற்போதைய நிலைமை சிறப்பானதாக மாறிவிடும் 

 சமூக விலகல் இந்த நேரத்தில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான ஒரு சக்தியை  உலகிற்கு அளித்துள்ளது.

ஏனெனில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, சீனா குறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டிருந்து போதிலும், மைக்கேல் லெவிட்  துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.

சீனாவில் 80,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று மைக்கேல் லெவிட்  மதிப்பிட்டு இருந்தார் அதுபோலவே நடந்து உள்ளது.சீனாவில் 3277 உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், 81,171 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவரின் கூற்றின் படியே, சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், கொரோனா வைரஸினால் அத்துடன், சீனாவில் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது குறிப்பிடதக்கது. இதை தொடர்ந்து மைக்கேல் கருத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 

‘We’re going to be fine’ — Nobel winner Michael Levitt says COVID-19 pandemic will end soon



வியாழன், 26 மார்ச், 2020

கிருமிகள் உலகில் மனிதர்கள்

கொரோனா .. .. .. "கிருமிகள் உலகில் மனிதர்கள்"

தற்கால சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறைய விடயங்களை உள்ளடக்கியது இந்த புத்தகம். கிடைத்திருப்பது வரப்பிரசாதமே. நேரம் ஒதுக்கி படியுங்கள் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. சுய ஊரடங்கு உங்களை வாசிப்பின் தாற்பரியத்தை மேம்படுத்தும். அதற்கேற்றால் போல் நுண்ணங்கிகளையும் உலகின் அசைவையும் ஓரளவு புரிந்து வைக்க இந்த நூல் உதவும் என நம்புகிறேன்.

- எல்றோய் அமலதாஸ்

நாடெங்கும் ஏன் பாரெங்கும் ஒரு பாதையில் விரைந்து கொண்டிருக்கும் போது அதற்கு எதிரான பாதையில் இயல்பாகவே ஒரு மாற்றுக் குறைவு ஏற்பட்டு விடுகிறது. என்றாலும் அதில் இருக்கும் நியாயங்கள் மறைக்கப்பட்டாக வேண்டுமா? விவாதிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.

நுண்ணுயிர் தேற்றம் (Germ theory) அதன் தொடக்க காலத்திலிருந்தே எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் அவை மறைக்கப்பட்டிருக்கின்றன.

அலோபதி மருத்துவத்தின் போதாமையும், அறிவியல் ஆய்வுகள் என்ற பெயரில் நடக்கும் ஒற்றைப் பார்வை ஆய்வுகளும் கண்டிப்பாக மக்களின் ஆரோக்கியத்தை காக்கப் போவதில்லை. என்றால் மக்களை நேசிப்பவர்களின் அடுத்த அசைவு எதை நோக்கியதாக இருக்க வேண்டும்?

கிருமிகள் உலகில் மனிதர்கள் எனும் அக்கு ஹீலர் உமர் ஃபாரூக் எழுதிய இந்த நூலை படித்துப் பாருங்கள். நுண்ணுயிர்கள் குறித்து நாம் கொண்டிருக்கும் பார்வையை எளிமையாகவும், வலிமையாகவும் மறுத்து விளக்கங்களையும் தரவுகளையும் முன் வைக்கிறார்.

மருத்துவ மாணவர்களே, மருத்துவர்களே, மருத்துவ வல்லுனர்களே, இதை விவாதிக்க நீங்கள் நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறேன். இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான மக்களின் ஒருமையையும், ஓர்மையையும் குலைப்பது இதன் நோக்கம் இல்லை. சரியானதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் முனைப்பு தான்.

வாருங்கள் விவாதிப்போம்.



நூலை பதிவிறக்க
https://drive.google.com/file/d/13Et9_ThqgJ3vWOuErXyZU724zYJSJwjt/view

புதன், 25 மார்ச், 2020

256 தவிர்க்க முடியாத இலக்கம்..!

பரிசோதனைகளின் உண்மைத்தன்மையை பொறுத்து இலக்கம் ஏறத்தாழ என கொள்ளப்பட்டாலும் இராவண தேச நுண்ணிய காவுகள் கதை கொண்டுபேசும்...! #256

திங்கள், 23 மார்ச், 2020

பொறுப்புடன் அறிக்கையிடுங்கள். நம்பகத்தன்மையற்றவற்றை பிரசுரிக்க வேண்டாம்.

கடவுளே...!😪
ஊடக தொழில் என்பது அனுபவத்துக்கும் அப்பாற்பட்ட அறிவும், நெறிமுறையும் கொண்டது என்று தயவு செய்து உணருங்கள் தோழர்களே.. 

பிரேசில் தலைவர் யார்..? 
இத்தாலி தலைவர் யார்..?
என்ற வேறுபாடு கூட தெரியாதவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு பிரதான ஊடகமாக போற்றப்படும் பத்திரிக்கைதுறையை கேவலப்படுத்தாதீர்கள்..
Mainstream mediaவையும் சில இணைய/சமூக வலைதள ஆய்வற்ற ஊடகமாக மாற்றிய பெருமையை இனி காலம் கடந்தும் பேசப்படும்..

👉பொறுப்புடன் அறிக்கையிடுங்கள். நம்பகத்தன்மையற்றவற்றை பிரசுரிக்க வேண்டாம். 

ஊடகப்பணி
இது வெறுமனே வேலை வாய்ப்பல்ல.. சுய பிரபலத்துக்கான ஆர்வக்கோளாறுகளின் களமும் அல்ல..

மக்களின் அவநம்பிக்கைகளை பெற்றுவிட்டால் துறைசார்ந்த இயங்குநிலை கேள்விக்குறிதான். இனி ஊடக பாடப்புத்தகங்களிலும் உங்கள் லட்சணம் மேற்கோள் கொண்டு உத்தறியப்படுவது தவிர்க்க முடியாதது.

நன்றி 
எல்றோய் அமலதாஸ்

#Fakenews⚠️
#FactCheck🚫
(Image Of Brazilian President Breaking Down Falsely Linked To Coronavirus-Hit Italy)👆

ஞாயிறு, 22 மார்ச், 2020

பல நாடுகளும் கைவிரித்த நிலையில், மனிதநேயத்துடன் அடைக்கலம் தந்த கியூபா!

நடுக்கடலில் சிக்கித்வித்த கொரோனா தாக்கிய வெளிநாட்டு பயணிகளுக்கு கியூபா அரசு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. 

அச்சறுத்தும் கொரோனாவால், ஒவ்வொரு நாடும் உலக நாடுகளில் இருந்து தங்களை தனிமைபடுத்தி கொண்டே வருகிறது.  வைரஸ் தொற்று அறிகுறியுள்ள வெளிநாட்டு பயணிகளை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க அனைத்து நாடுகளும் தடை விதித்துள்ளது. சில நாடுகளில், கொரோனா பாதித்த சொந்த நாட்டு மக்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கியூபா மட்டும் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு தஞ்சமளித்துள்ளது. 

Photo

பிரிட்டனைச் சேர்ந்த எம்.எஸ்.ப்ரீமர் என்ற சொகுசு கப்பல் 682 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 381 சிப்பந்திகளுடன் கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதில் இருந்த 5 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், கப்பலை நிறுத்த பல கரீபியன் நாடுகளிடம் நிர்வாகத்தினர் அனுமதி கோரினர். ஆனால், அனைத்து நாடுகளும் கைவிரித்து விட்டன. இதனால், நடுக்கடலில், நடுங்கிக்கொண்டிருந்த சொகுசு கப்பலுக்கு, கியூபா அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து, கியூபாவின் கட்டுப்பாட்டில் உள்ள பஹமாஸ் தீவு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுற்றுலாப்பயணிகள் சோதனைக்குப் பிறகு கியூபாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள், மீண்டும் பிரிட்டனுக்கு விமானம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர். வைரஸ் தாக்கிய பயணிகளுக்கு தாங்களே சிகிச்சை அளிக்க கியூபா அரசு முன் வந்துள்ளது. 

Photo

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பாதித்த மக்களை ஏற்க முன்வராத போது, கியூபா மட்டும் ஏற்றுக்கொண்டது ஏன்? கியூபாவின் மருத்து கட்டமைப்பு அவ்வளவு வலுவானதா என்பதை அறிய வேண்டியுள்ளது. 

1959ம் ஆண்டு அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்த படிஸ்டாவின் சுறண்டல் ஆட்சியை பிடல் கேஸ்ட்ரோவும், சேகுவேராவும் புரட்சி முலம் வீழ்த்தினர். பின்னர், கியூபாவின் அதிபரான ஃபிடல் கேஸ்ட்ரோ, மிகச்சிறந்த மருத்துவ கட்டமைப்பை நிறுவ விரும்பினார். மருத்துவ சேவை இல்லாத பகுதிகளில் மருத்துவ சேவை வழங்குவது கேஸ்ட்ரோவின் கனவாக இருந்தது. கேஸ்ட்ரோவின் இந்த கனவை நனவாக்க, மருத்துவரான, அவரது சக போராளி சேகுவேரா பல திட்டங்களை கொண்டுவந்தார். அதன் ஒருபகுதியாக, கியூபாவில் இருந்த மருத்துவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவு மருத்துவர்கள், கியூபாவில் தங்கியிருந்து மருத்துவச் சேவையைச் செய்ய வேண்டும். அதேநேரம் தேவைப்படும்போது, மற்ற நாடுகளில் நிகழும் இயற்கைப் பேரிடர்களின்போது, தன்னார்வத் தொண்டர்களாகச் செயல்பட வேண்டும். இந்த மருத்துவப் பிரிவு  மருத்துவப் புரட்சி படை என்று அழைக்கப்பட்டது. 

Photo

மருந்துகளின் விலை குறைப்பு, இலவச மருத்துவ சேவை, மருத்துவ கல்வியை பரவலாக்கியது என பல திட்டங்களை முன்னெடுத்தார் ஃபிடல் கேஸ்ட்ரோ. இதனால், மற்ற நாடுகளை விட மருத்துவ சேவையை விசாலமான சிந்தனைகொண்டு கியூப அரசால் செயல்பட முடிகிறது. அதன் வெளிப்பாடே, கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணிகளுக்கு சிகிச்சை அளிக்க கியூபா முன் வந்துள்ளது.

Photo

முதலாளித்துவத்தை ஏற்றுக்கொண்டுள்ள பல வல்லரசு நாடுகள், கொரோனாவை தாக்குபிடிக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றன. இந்த சூழலில், கம்யூனிச சிந்தனையால் ஆட்சி செய்யப்பட்டு வரும் கியூபாவில், இதுவரை கொரோனாவால் 4 பேரே பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணிகளுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முன்வந்துள்ளது.