புதன், 1 ஏப்ரல், 2015

தமிழன்

ஆரியன் வந்தான்…! சாத்திரத்தையும் சாதியையும் விதைத்தான். 
மொகலாயன் வந்தான்…! மதத்தையும் மதத்தால் அழிவையும் விதைத்தான்.
ஆங்கிலயன் வந்தான்...சுரண்டலையும் அதனால் பசியையும் வறுமையும் விதைத்தான்.
ஏமாந்த தமிழன் எல்லாவற்றையும் ஏற்று கொண்டான்.
தன்னை தானே இழித்து கொள்ளும் தரங்கெட்ட நிலைக்கு தாழ்ந்தும் போனான் !!
கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான் !!
ஈழம் சென்று கங்கை கொண்டு கடாரம் வென்று இமயத்தில் கொடி நாட்டியவன்
இன்று இனம் பிரிந்து மொழி மறந்து அகதிகளாய் முகம் தொலைத்து முகவரியற்று அலைகிறான் !
இன்று அங்கவையும் சங்கவையும் கேலிபொருள்கள்
கோப்பெருந்தேவியும் குழல்வாய்மொழியும் விலைமாதர்கள் !
தமிழ் பேசினால் பாவம் தமிழ் படித்தால் சாபம் !
தம் இனம் மறந்து மொழி தொலைந்து திரியும் இவன்
அடுத்த நூற்றாண்டில் அழிந்து போவான்...!

ராஜ ராஜ சோழன்


இந்தியர்கள் குப்தர்களையும், விஜயநகர அரசர்களைப் பற்றிக் கற்குமளவுக்கு ராஜ ராஜ சோழனைப் பற்றியோ, தமிழரசர்களைப் பற்றியோ கற்பதில்லை. இந்தியாவின் பெருமையாக ஈரானின் கட்டட காலையில் உருவான தாஜ்மகாலை கூறிக்கொள்ளும் நாம் இந்தியாவிலே உருவான தமிழர்களால் கட்டப்பட்ட கோவில்களை பற்றி மறந்தும் பேசுவதில்லை.ராஜ ராஜ சோழனை பற்றி கேட்ட நாள் முதல் அவனை பற்றி ஆராய வேண்டும் என்ற சிந்தை இருந்தது.ஆதலால் ஆங்கங்கே கிடைத்த தகவல்களை ஆராய்ந்து இணையத்தில் தமிழில் தொகுத்து தந்துள்ளேன் .. முதல் முயற்சி பிழை இருப்பின் பொறுத்தருள்க .


தமிழில் பொருள் காண முடியாத சொற்களில் "சோழ" என்பதும் ஒன்றாகும். 'நீர் சூழ்நாடு' என்பது நாளடைவில் 'சூழநாடு', பிறகு சோழநாடு என மாறியிருக்கலாமோ என்று ஆராயத்தக்கது. சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது

மிக பழமையானது சோழ ராஜ்யம். இதனை பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும் அசோகா கல்வெட்டிலும் கூட காணப்படுகிறது.சூரிய குலத்தவர் என்று தங்களை அழைத்துக் கொண்ட சோழர்கள் சங்க காலத்திலேயே (கி.மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 2ம் நூற்றாண்டு வரை) வாழ்ந்திருந்தாலும் அந்தக் காலக்கட்டதின் முடிவில் தென்னாட்டு வரலாற்றிலிருந்தே காணாமல் போய்விட்டிருக்கிறார்கள். ஆயினும் சங்கம் வளர்த்த இந்த இனத்தவர் குறுநில மன்னர்களாக உறையூர், பழையாறை போன்ற பழைய தலைநகரங்களிலே தொடர்ந்து வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
சோழர்கள் காலத்தை மூன்று வகையாக பிரிக்கலாம் 
1 சங்க கால சோழர்கள் 
2 விஜயால சோழர்கள் 
3 சாளுக்கிய சோழர்கள்

நாம் இங்கு காண இருப்பது விஜயால சோழர்களை பற்றி.. இவர்கள் காலத்தில்தான் சோழ சாம்ராஜ்யம் தன் கடற்படை வலிமை கொண்டு தெற்காசியா முழுவது பறந்து விரிந்திருந்தது. இந்திய வரலாற்றில் முதன் முதலாக கடல் கடந்து தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு ராஜ்யம் சோழ ராஜ்யம் தன்.இவர்கள் தம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இந்து மதத்தையும்,திராவிட கலாச்சாரத்தையும் பரப்பினர்.

விசயாலய சோழன்
விசயாலய சோழன் (கி.பி. 850-880) என்ற மாவீரன் காலத்திலிருந்து சோழர் ஆட்சி மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியது. விசயாலய சோழன் கி.பி 850இல் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றான்.விசயாலயசோழன் காலத்தில் பாண்டியர்களும், பல்லவர்களும் வலிமை பெற்று இருந்தனர்.இதே கால கட்டத்தில் சோழர்களைப்போன்றே முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை தம்வசப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்.இவர்களும் சோழர்களைப் போலவே, தம் சுதந்திர ஆட்சியை நிலைநாட்டமுடியாமல், பாண்டியர்களுடனோ பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது.

திருப்புறம்பயம் போர்
சோழர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புறம்பயம் போர் இக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜிதவர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண வர்மனுக்கும் இடையில் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் நடைபெற்றது.இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாக சோழர்களும் பாண்டியர்களுக்கு ஆதரவாக  முத்தரையர்களும் போரிட்டனர்.அபராஜிதவர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரிதிவீபதி வந்திருந்தான்.இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப்படையின் மாதண்ட நாயக்கராக போரிட்டான்.அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில் தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண பல்லக்கில் சென்றிருந்தார்.அங்கே போர் முகாமில் பல்லவ-சோழப் படைகள் கிட்டத்தட்டதோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததை கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயர் (அப்போது அவருக்குவயது கிட்டத்தட்ட 90) இரு வீரர்களின் தோளில் ஏறிக் கொண்டு போருடைப் பூண்டு வாளினை சுற்றிக் கொண்டு களமிறங்கினார்.இதுகண்ட சோழப்படை மீண்டும் வீறாப்புடன் போராடி வெற்றிபெற்றது.கங்க மன்னன் பிரதிவீபதி அன்றைய போரில்வீர சொர்க்கம் எய்தினான். இப்போரின் மூலம் சோழர்கள் முத்தரையர்களை ஒழித்து தஞ்சையை தன் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது.

முதலாம் ஆதித்தன்
மாவீரன் விசயாலய சோழன், சோழர்குலம் மீண்டும் சோழநாடு முழுவதையும் கைப்பற்றுவதற்கு அடிக்கல் நாட்டினான்.விஜயால சோழன் பல்லவர்களை வெற்றி கொண்டு தஞ்சையை தலைமையிடமாக கொண்டு சோழ சாம்ராஜ்யத்தைய் நிறுவினான் .விஜயால சோழனுக்கு பின் அவனது மகனான ஆதித்ய சோழன் ஆட்சிக்கு வந்தான்.பிறகு ஒரு போரில் ஒரு உயர்ந்த யானையின்மீது அமர்ந்திருந்த பல்லவமன்னன் அபராஜிதன் மீது முதலாம் ஆதித்தன் பாய்ந்து அவனைக் கொன்று தன் இராஜ்ஜியத்தை, தொண்டைநாடு வரை பரவச்செய்தான். இதிலிருந்து ஆதித்தன் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி அதன்மூலம் பல்லவர்களின் ஆட்சியை ஒரு முடிவிற்கு கொண்டுவந்ததோடு, சோழ இராச்சியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்றே கூற வேண்டும்.

முதலாம் பராந்தகன்
ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகன் ஆட்சி ஏற்றவுடன் பாண்டிய நாட்டை ஆண்ட இரண்டாம் இராசசிம்மன் உடன் போரிட்டான்.இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் காசியப்பன் பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான்.போரில் பாண்டியர்களை வென்று தன் வெற்றியை மதுரையில் கொண்டாடும் பொருட்டு, பாண்டிய மன்னனின் முடியையும், மற்ற சின்னங்களையும் தானே அணிந்து கொள்ள எண்ணினான். ஆனால் இவையனைத்தும் இராஜசிம்மனால்(பாண்டிய மன்னன்) ஈழத்து மன்னனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததால், இவற்றைத் திரும்பிப் பெறமுயன்று இம்முயற்சியில் படுதோல்வியடைந்தான்

தக்கோலப் போர்
முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்ததால் இராஷ்டிரகூடர்களின் வளர்ச்சி அதிகமாயிற்று.திருமுனைப்பாடியில் இக்காலத்திலேயே பராந்தகனின் முதல் மகன் இராசாதித்தன் தலைமையில் யானைப்படையும் சிறிய குதிரைப் படையும் அடங்கிய பெரும் படை ஒன்று இந்த இராஷ்டிரகூட படையெடுப்பு நிகழும் சாத்தியக்கூறுகள் இருந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதே காலத்தில், இதே பகுதியில் அரிகுலகேசரி என்ற பராந்தகனின் இரண்டாம் மகனும் தன் சகோதரன் இராஜாதித்தனுக்கு உறுதுணையாக இருந்தான். அப்போது இராட்டிரக்கூட மன்னனான மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.அரக்கோணத்திற்கு அருகில் உள்ளல் தக்கோலம் என்ற இடத்தில் மூன்றாம் கிருஷ்ணன் எனப்படும் கன்னர தேவனுக்கும் இராசாதித்தனுக்கும் கடும்போர் நடந்தது. மூன்றாம் கிருஷ்ணனுக்கு துணையாக கங்க மன்னன் பூதுகன் என்பன் போரிட்டான். இராசாதித்த சோழன் யானை மீது அமர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தபோது, பூதுகன் விடுத்த அம்பு ஒன்று சோழனின் மார்பை துளைத்துச் சென்றது. இராசாதித்தன் வீர மரணம் அடைந்தான். இதனால் சோழ படை தோல்வியுற்று தனது பகுதிகளை இழந்தது. ஏழத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழ் தக்கோலம் இருந்தது.வடபகுதியில் பெற்ற தோல்வியின் பயனாக பராந்தகன் தன் நாட்டின் தென் பகுதியையும் இழந்தான்

கண்டராதித்த சோழன்
தக்கோலப்போரில் இராசாதித்த சோழன் மாண்டதால் முதலாம் பராந்தகன் தனது இரண்டாவது புதல்வனான கண்டராதித்தனை முடி சூடச் செய்தார் . கண்டராதித்தன் தான் பதவி ஏற்ற கொஞ்ச காலத்திலயே அரிஞ்சய சோழனை இளவரச பட்டமேற்கச் செய்தான்.அப்பொழுது கண்டரதித்தனுக்கு புதல்வர்கள் கிடையாது.கண்டராதித்தான் போர்களில் ஈடுபடுவதை காட்டிலும் கோவில் கட்டுவதிலயே அதிகம் ஈடுபாடு கொண்டார்.தொண்டை மண்டலம் தொடர்ந்து இராஷ்டிரகூடர்களின் ஆட்சியின் கீழே இருந்தது.அதை மீட்பதற்கு சிறிது கூட முயலவில்லை என்றே கூற வேண்டும்.இக்காலகட்டத்தில் சோழ இராணுவம் வலிமை குறைந்து, கடல் வாணிபம் செழிப்புற்று விளங்கியது. சிதம்பரம் கோவிலில் உள்ள திருவிசைப்பா என்ற சைவ பாடலை பாடியவர் இவர்தான் என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது.

அரிஞ்சய சோழன் 
அரிஞ்சய சோழன் முதலாம் இராசாதித்த சோழன், கண்டராதித்த சோழன் ஆகியோருடைய தம்பியாவான். வடக்கிலும்,தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன்,மிகக் குறுகிய காலமே ஆண்ட இவன் சோழ நாட்டின் வடக்குப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியில் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான்.


சுந்தர சோழன் 
அரிஞ்சய சோழன் இறந்தவுடன் அவனது மகனான சுந்தர சோழன் பட்டமேற்றான். கண்டராதித்தன் மகனாகிய உத்தம சோழன் பட்டத்துக்கு உரிமை பெற்றவனாயினும் அவனது இளம் பிராயத்தை கருதி தனது மூத்த பேரனை சுந்தர சோழனை பட்டமேற்கச் செய்தான் முதலாம பராந்தகன் என்று கருத்து உண்டு.இரண்டாம் பராந்தக சோழன் என்று அழைக்கப்பட்ட சுந்தர சோழனக்கு ஆதித்ய கரிகாலன்,அருண் மொழி தேவன் , குந்தவை என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர் . இவன் ஆட்சிக்கு வந்த பொழுது தெற்கே பாண்டியர்களும் வடக்கில் இராஷ்டிரகூடர்களிடம் மிக வலுவாக இருந்தனர்.இவன் முதலில் உள்நாட்டு கலகக்காரர்களை அடக்கியத்துடன் பாண்டியர்களுக்கு உதவிய இலங்கை மன்னன் மகிந்தனை அடக்க கொடும்பாளூர் வேளாள இளையவர் தலைமையில் ஒரு படையை இலங்கைக்கு அனுப்பினான் . குறைந்த அளவு எண்ணிக்கை கொண்ட படையாலும், ஆயுத மற்றும் தானிய குறைபாடு காரணமாகவும் சோழ படைகளால் இலங்கை படையை வெல்ல முடியவில்லை .இப்போரில் கொடும்பாளூர் வேளாள இளையவர்போர்க்களத்தில் வீர மரணம் எய்தினார்.
சோழப் படைகள் இலங்கையில் தோல்வியுற்றவுடன் வீர பாண்டியன் மீண்டும்மறைந்து இருந்து தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தான்.ஆனால் இம்முறை சுந்தர சோழனின் மூத்த மகனான ஆதித்ய கரிகாலன் படை நடத்தி சென்றான். புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்தனும் வீர பாண்டியனும் நேருக்கு நேர் மோதினர்.இப்போரில் சுந்தர சோழன் யானைகளை கொன்று இரத்த ஆறை ஓட வைத்தான் என்றும், போரின் இறுதியில் வீர பாண்டியன் படைகள் தோல்வியுற்று வீர பாண்டியன் பக்கத்தில் உள்ள மலையில் சென்று ஓளிந்து கொண்டதாகவும் அவனை ஆதித்யன் தேடி சென்று தலையைக் கொய்ததாகவும் கருத்து உண்டு. அல்லது இவன் போர்க்களத்தில் கொல்லப்பட்டு இருக்கலாம் எப்படியும் "ஆதித்யன் வீரத்துடன் போரிட்டு ,வீர பாண்டியனை வென்று அவனுடைய தலையைக் கொய்ததாக" திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. இப்போரில் வென்றாலும் சுந்தர சோழனால் முழுமையாக பாண்டிய நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிய வில்லை.
இப்போர் முடிந்தவுடன் ஆதித்யன் வடக்கில் ஆக்கிரமித்து கொண்டிருந்த இராஷ்டிரகூடர்களிட போரில் ஈடுபட்டான் . இப்போரில் இவர்களால் இராஷ்டிரகூடர்களை முழுமையாக வடக்கிலிருந்து விரட்ட முடிந்தது.இலங்கை போரில் ஏற்ப்பட்ட தோல்வியை துடைக்க மீண்டும் இலங்கை மீது படை எடுக்க சுந்தர சோழன் தீர்மானித்தான்.ஆனால் இம்முறை யார் தலைமையில் படை நடத்தி செல்வது என்ற விவாதம் ஏற்ப்பட்டது.அப்போதுஆதித்ய கரிகாலன் இராஷ்டிரகூடர்களுடன் காஞ்சியை நிலைப்படுத்த தீவிரமான போரில் ஈடுப்பட்டிருந்தான்.இந்நிலையில் சுந்தர சோழனின் இளைய மகனான அருண் மொழி தேவன் (ராஜ ராஜான்) படைகளை நடத்த முன் வந்தான்.அப்போது அவனுக்கு வயது 19.

ஆதித்த கரிகாலன் கொலை
சுந்தர சோழன் தமது காலத்தில் உரிய பிராயத்தை எட்டியிருந்த கண்டராதித்தரின் புதல்வர் மதுராந்தகரை அடுத்த இளவரசராக அறிவிக்காமல் தனது தலைமகனான இரண்டாம் ஆதித்தரை இளவரசராகப் பட்டம் கட்டியது பல்வேறு மட்டங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்குமென்று தோன்றுகிறது. இதில் ஏதோ ஒரு வகையில் கடுமையான பாதிப்பையடைந்த உடையார்குடியின் கேரளத்து அந்தணர்கள் இரண்டாம் ஆதித்தரைக் கொலை செய்துவிட்டு மதுராந்தகர் உத்தமச் சோழர் என்கிற பெயரில் சோழசிம்மாதனமேற வழியேற்படுத்திக்கொடுத்தார்கள். இரண்டாம் ஆதித்தரின் தமையனான இளைஞர் அருள்மொழிவர்மர் தனது சிற்றப்பா மதுராந்தகர் சோழ மகுடத்தின் மீது ஈடுபாடு கொண்டிருக்கும் வரை அதனைத் தனது மனதினாலும் தீண்டுவதில்லையென்று திட்டவட்டமாக அறிவித்ததைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்துள்ளன .உத்தம சோழன் பதவி ஏற்றவுடன் அருண்மொழிவர்மனை இளவரசு பட்டமேற்கச் செய்தான் .

உத்தமச் சோழரின் காலத்தில் வம்ச வம்சமாகச் சோழருடன் பகை பூண்டிருந்த பாண்டியருடன் உத்தமச் சோழரும் அவரது சுற்றமும் நெருக்கமாக கைகோர்த்துக்கொண்டார்கள் என்பது குத்தாலக் கல்வெட்டால் விளங்குகிறது. சோழசாம்ராஜ்ஜியத்தை மேலைச்சாளுக்கிய மன்னரான சத்தியாச்ரயர் கி பி 980ல் தாக்கியபோது உத்தமச் சோழரால் அவரை வெற்றிகொள்ள இயலவில்லை. இத்தோல்வியின் முடிவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தபின் வேறு வழியின்றி உத்தமச் சோழர் விலகிக் கொள்ள கிபி 985ல் "இராஜராஜன்" என்னும் அபிஷேக நாமத்துடன் அருள்மொழிவர்மர் சோழசிங்கதானத்தில் அமர வழியேற்பட்டது.

போர்கள்
காந்தளூர்ச்சாலை கடிகை போர்  
பட்டமேற்றவுடன் ராஜ ராஜன் செய்த முதல்காரியம் தனது தமையனார் ஆதித்த கரிகாலர் கொலையில் ஈடுபட்டிருந்த கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டித்ததே ஆகும். சோமன் இவனது தம்பி ரவிதாசன், பரமேஸ்வரன், மலையுரன் மற்றும் இவர்களுக்கு பெண் கொடுதோர் பெண் எடுத்தோர் ஆகியோரை கட்டிய துணியோடு சோழ எல்லை தாண்டி சேர நாட்டுக்கு துரத்தி அடித்தான்.அந்தணர்கள் எத்தகைய குற்றம் புரிந்திருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை தரக் கூடாது என்று போதிக்கும் மனு தர்மத்துக்கு அடிபணிந்து அவர்களை உயிரோடு விட்டதாக கூறப்படுகிறது.

கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை மீது போர் தொடுத்து பாஸ்கர ரவி வர்மனை தோற்கடித்தான்.காந்தளூர்சாலை கடிகை என்பது சேர,சோழ, பாண்டிய மன்னர்களிடையே புகழ்வாய்ந்த போர்முறைகளை, ஆயுதங்கள் பயிற்சியினை மற்றும் இன்னபிற தந்திரங்களை பயிற்றுவிக்கும் கல்லூரி போல திகழ்ந்து வந்தது.இங்கு தான் ஆதித்த கரிகாலனை கொல்ல சதி திட்டம் உருவானதாக கருதியதால் இக்கடிகை தகர்க்கப்பட்டது.  

மலை நட்டு போர்  
இராஜராஜனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான்.இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம்.

ஈழப் போர்
பாண்டிய மணிமுடியை கைப்பற்றும் பொருட்டும் இலங்கையை முழுவதுமாக தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டும் ஈழப் போரை நடத்தினான். சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அனுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்க பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.இருப்பினும் இவனால் பாண்டிய மணிமுடியை கைப்பற்ற முடியவில்லை.இராஜேந்திர சோழன் காலத்திலயே மணிமுடியும் இலங்கையின் முழு கட்டுப்படும் சோழர் கைக்கு வந்தது.

வடக்கு போர்கள்  
முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே  பரவியிருந்தது. இராஷ்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கங்கபாடியும், நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராஜராஜ சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராஷ்டிரகூடரின்  இல்லாததால் இப்போர் மிக சுலபமாக வெற்றி அடைந்தது . அடுத்த நூற்றாண்டு முழுதும் இந்த பகுதி சோழர் வசமே இருந்தது.

மேலைச் சாளுக்கிய போர்
காங்கபடியையும் நுலம்பாடியையும் கைப்பற்றியவுடன் சோழர்களுக்கும் சாளுக்கியகளுக்கும் அடிக்கடி சிறு சிறு மோதல் ஏற்பட்டது . இருவரும் தக்க சமயத்தை எதிர்பார்த்து இருந்தனர் தங்களது பலத்தை நிருபிப்பதற்கு.எந்த சம்பவம் படையெடுப்பை தூண்டியது என்பது தெளிவாக தெரியவில்லை .கல்வெட்டுபடி கி.பி 1007 ல் இராஜராஜன் தலைமையில் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் கொண்ட சோழ படை சாளுக்கியத்தை துவசம் செய்ததுடன் மிகப்பெரும் அழிவையும் ஏற்படுத்தி சென்றது.இப்போரில் சத்தியாசிரயனை வெற்றி கொண்டு அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் கொணர்ந்து பெரிய கோவில் கட்டுவதற்கு செலவழித்தான் இராஜராஜன். 
வேங்கிப் போர்
இராஜராஜன் கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் அவர்களுடன் ஓர் இராணுவ உடன்படிக்கை செய்துகொண்டான். ஆனால் இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர்.999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராஜராஜன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்த்த ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராஜராஜன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்று முடிவாக ஜடாசோடன் என்னும் பேரூம் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது.1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். 
வேங்கி நாடு இராஜராஜனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்குச் சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது.

கலிங்க போர்
வேங்கிப் போர் முடிந்தவுடன் கலிங்கத்தின் (கலிங்கம் இன்றைய ஒரிசாவின் பகுதி) மீது படையெடுத்தான்.இராஜராஜன் தலைமையில் சென்ற படை கலிங்க அரசன் பீமனை முறியடித்து 

மாலத்தீவு போர்
இராஜராஜனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. 

சோழ சாம்ராஜ்யம்  

மதுரை
கங்கபாடி நுளம்பபாடி (தற்போதய மைசூர்)
கலிங்கா
வெங்கி
மாலத்தீவு
கடாரம்  (தற்போதிய மலேசியாவில் உள்ள ஒரு தீவு )
மலாயா ( தற்போதிய தாய்லாந்து, பிலிபீன்ஸ், இந்தோனேசிய, மலேசியா, ப்ருனாய் மற்றும் சிங்கபூர் )
இலங்கை
















தாய்லாந்தில் பாழடைந்து கிடக்கும் சோழர்களால் கட்டப்பட்ட பழங்கால இந்து ஆலயம்








நிர்வாகம்

இராணுவம்
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின. 
இவன் வலிமை மிக்க  
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)  
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது

தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்

நிலசீர்திருத்தம்
ராஜராஜன் தனது 16 வது ஆட்சி ஆண்டில் உலகின் வேறு எந்தப் பகுதியிலும், எந்த அரசனும் செய்யாத அளவில் அவருடைய பேரரசு முழுவதையுமே அளந்துள்ளார். பயிர் செய்யக்கூடியதும் முடியாததுமான எல்லா நிலங்களையும் அளந்து, வகைப்படுத்து கணக்கிட்டுத் தீர்வையும் நிர்ணயித்தது ஒரு மாபெரும் சாதனை. இக்கால நவீன அளவீட்டுக் கருவிகள் ஏதுமில்லாஅத நிலையில் வெறும் கயிறுகளைக் கொண்டு அளந்து ஓலைச்சுவடிகளில் குறித்துக்கொண்டு கணக்கிடுவது என்பது ஓர் அசுர சாதனை. அதுவும் மிகவும் துல்லியமாக (ஒரு வேலியின் 32ல் ஒரு பகுதியைக்கூட அளந்தார்கள்) அளவை செய்வது என்பது உலகையே அளப்பதற்கு ஒப்பாகும். இதனால் இவருக்கு “குரவன் உலகளந்தான்” என்றும் ஒரு பெயர் வந்தது.

சோழநாடு மண்டலங்கள் என்ற பெரும் பிரிவுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மண்டலத்துள்ளும் வளநாடுகள் பல இருந்தன. பல கிராமங்களின் தொகுப்பாக கூற்றம் என்ற அமைப்பு இருந்தது. இதை கோட்டம் அல்லது நாடு என்றும் குறிப்பிட்டனர். பல கூற்றங்களை உள்ளடக்கியதாக வளநாடு அமைந்தது.10 முதல் 300 சதுரம் வரை பரப்பைக் கொண்ட நிருவாகப் பிரிவாக நாடு இருந்தது. நாடுகளின் பொருப்பாளர்களாக நாட்டார், நாடுகண்காணி என்போர் இருந்தனர். வேளாண்மை காவல் வரிவசூல் ஆகிய பணிகளை இவர்கள் மேற்கொண்டனர். மன்னனுக்கு உதவி புரிய இருக்கும் அரசு அலுவலர்கள் உடன் கூட்டம் என்று அழைக்கப்பட்டனர். வாய்மொழியாக மன்னன் பிறப்பிக்கும் ஆணைகளைக் கேட்டு அவற்றை எழுத்தில் பதிவு செய்து உரியவர்களிடத்தில் அனுப்பி வைக்கும் பணியைச் செய்பவன் திருவாய்க்கேள்வி திருமந்திர ஓலை எனப்பட்டான்..

கிராமசபை

இராஜராஜனுடைய சிறப்பியல்பாக கிராம சுய ஆட்சி முறை நிலவியது. பிராமணர்களுக்கு உரிய நிலங்களுக்கு வரி வாங்கப்படவில்லை. இவை இறையிலிஎனப்பட்டன. இறையிலி நிலங்களைக் கொண்ட பிராமணர் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனப்பட்டன. குடும்பு என்ற சிறு பிரிவுகளாக கிராமம்பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டார். குடும்புக்குரிய வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைத் துண்டில்தனித்தனியாக எழுதி அவ்வக் குடும்புக்குரிய குடத்தில் இடுவர். பின்னர் குடத்தை நன்றாக குலுக்கி அறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு ஓலைத்துண்டுஒன்றை எடுக்கும்படி செய்வர். அவனால் எடுக்கப்படும் ஓலையில் காணப்படும் பெயருக்குரியவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். குடும்பில்உறுப்பினராவதற்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டிருந்தன. சொந்த மனையில் வீடு கட்டியிருத்தல், குறைந்தது கால்வேலி நிலமுடையவராய் இருத்தல், 35வயதிற்குக் குறையாதிருத்தல், 70 வயதிற்கு மேற்படாதிருத்தல், நான்கு வேதத்தில் ஒரு வேதத்தையோ, ஒரு பாஷியத்தையோ ஓதும் ஆற்றல் பெற்றிருத்தல்என உத்திரமேரூர் சாசனம் குறிப்பிடுகிறது. அடித்தள மக்கள் கிராம சபைகளில் நுழைய விடாமல் தடுப்பதில் இத்தகுதிகள் முக்கியப் பங்காற்றின. மேலும்ஒரு குழுவிலோ, வாரியத்திலோ உறுப்பினராக இருந்து பணியாற்றிய போது ஒழுங்காகக் கணக்கு காட்டத் தவறியவர்கள், அவருடைய உறவினர்கள்,ஒழுக்கமற்றவர்கள், வேட்பாளராகத் தகுதியற்றவர்கள் என்றும் இச்சாசனம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு வாரியங்கள் அமைக்கப்படும். ஏரி வாரியம், தோட்ட வாரியம், பஞ்சவார வாரியம், பொன்வாரியம், கலிங்கு வாரியம் கழனி வாரியம் ஆகியன முக்கிய வாரியங்களாகும். இவ்வாரியங்களின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள்என்றழைக்கப்பட்டனர். ஒவ்வொரு வாரியங்களும் தமக்குரிய பணிகளைச் செய்து வந்தன.

பிராமணர் அல்லாதோர் வாழ்ந்த குடியிருப்புக்கள் ஊர்கள் எனப்பட்டன. இவற்றை ஊரவை நிறுவகித்தது. அவையின் நிர்வாகக்குழு, ஆளும் கணம்என்றழைக்கப்பட்டது. வணிகர்கள் மிகுதியாக வாழ்ந்த நகரங்களின் சபை நகரத்தோம் எனப்பட்டன.

சமூகம்

ராஜராஜனின் காலச் சமுதாயத்தில் சாதி வேறுபாடுகள் ஆழமாக இருந்தன. பிராமணர்கள் ஏற்றம் பெற்றிருந்த சாதியினராக விளங்கினர். அகரங்கள், அக்கிரகாரங்கள், சதிர்வேதி மங்கலங்கள் என்ற பெயர்களில் பிராமணர்களுக்குத் தனிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டன. கோவில்கள், மடங்கள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இலவச உணவும் உறையுளும் நல்கி வேதக்கல்வி புகட்டும் வேதபாட சாலைகளும் இவர்களுக்கென்றே மன்னர்களால் நிறுவப்பட்டன.

பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் நிலக்கிழார்களாக விளங்கிய வேளாளர்கள் இருந்தனர். கோவில் நிலங்களின் மீது பிராமணர்களுடன் இணைந்து இவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு சமூகத்தினரையும் தவிர பல்வேறு கைவினைத் தொழில் செய்து வந்தவர்களும், உழுகுடிகளான, பள்ளர், பறையர் ஆகியோரும் தனித்தனி சாதிகளாக அழைத்திருந்தனர். 

தீண்டாமை சோழர் காலத்தில் வேர்விட்டு வளர்ந்திருந்தது. பறையர்களுக்கென்று தனிக்குடியிருப்புகள் இருந்தன. தீண்டாச்சேரி என்று இக்குடியிருப்புகள் அழைக்கப்பட்டன. ஆயினும் இவர்களில் சிலர் சொத்துரிமை உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆடலிலும், பாடலிலும் வல்ல பெண்டிரை விலைக்கு வாங்கியும், வன்முறையில் கைப்பற்றிக் கொண்டும் கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். கோவிலைப் பெருக்கி மெழுகுதல், மாலை தொடுத்தல் தேவாரம் ஓதுதல், நடனமாடுதல், நாடகங்களில் நடித்தல் ஆகியன இவர்களின் முக்கியப் பணிகளாக அமைந்தன. தலைக்கோலிகள், தளிச்சேரிப் பெண்டுகள், பதியிலார், தேவரடியார் என்று இவர்களுக்குப் பெயர்கள் வழங்கின.

அடிமைமுறை சோழர் காலத்தில் நிலை பெற்றிருந்தது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கினர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் எனப் பெயர் பெற்றது. வறுமையின் காரணமாகத் தம் குடும்ப உறுப்பினர்களை விற்பதும் தம்மைத்தாமே விற்றுக் கொள்வதும் நிகழ்ந்துள்ளன. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டது. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசூலச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெற்குற்றுதல், வேளாண் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாகும். தங்களை மட்டுமின்றி தங்கள் பரம்பரையினரையும் அடிமைகளாக விற்றுக் கொண்டதை இவர்களையும் இவர்கள் வர்க்கத்தாரையும் பரம்பரை பரம்பரையாக, வழியடிமை, யானும் எம் வம்சத்தாரும் என்று கல்வெட்டுக்களில் காணப்படும் தொடர்கள் உணர்த்துகின்றன.

சமயம்

ராஜராஜனின் காலத்தில் அரசு சமயமாக சைவம் விளங்கியது. சிவனுக்கு முக்கியத்துவம் இருந்தது. பல்லவர் காலத்தில் வளரத் தொடங்கிய சைவம் சோழர் காலத்தில் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியது. சைவ சமயத்தின் தத்துவமாக சைவ சித்தாந்தம் உருப்பெற்று செல்வாக்குற்றது. மறைந்து கிடந்த தேவாரப் பாடல்கள் ஏழு திருமுறைகளாக வகுக்கப்பட்டு கோவில்களில் ஓதப்பட்டன. இதைக் கண்காணிக்க தேவார நாயகம் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார். கோவில்களில் நாள்தோறும் விளக்கேற்றவும், தேவாரம் பாடவும், திருவிழாக்கள் நிகழ்த்தவும் மன்னர்களும் பொதுமக்களும் மானியம் வழங்கினர். சைவ வைணவ கோவில்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியங்கள் தேவதானம் எனப் பெயர் பெற்றன.

தஞ்சை கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது

.
















தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!
வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது





கல்கியின் பொன்னியின் செல்வனின் புத்தகத்தில் வரையப்பட்டுள்ள குந்தவை மற்றும் நந்தினி படங்கள்.















கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்!

சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.


Reference tamilnation.org, wikipedia, varalaru.com, velu.blogsome.com, muththamiz google group, ponniyin selvan yahoo group தலை வணங்கா தமிழன் - ராஜ ராஜ சோழன்

வெள்ளி, 20 மார்ச், 2015

எது கனவு? யார் நிஜம்? ‘எனக்குள் ஒருவன்’. திரை விமர்சனம்

கனவு நனவென சம்பவங்கள் மாறி மாறி நிகழும் படம் மாறுபட்ட கதைக் களத்தைக் கொண்டுள்ளது ‘எனக்குள் ஒருவன்’. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘லூசியா’ படத்தின் மறு ஆக்கம் என்ற போதும் தமிழ்ப் படமாகவே உள்ளது. நனவுலகில் நடிகர் விக்கி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அது தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கியை அவருடைய காதலியே கொலை செய்ய முயல்கிறார். எது கனவு? யார் நிஜம்? ஏன் இந்தக் கொலை முயற்சி? காதலியின் பிரச்சினை என்ன? நாயகனின் உண்மையான பிரச்சினை என்ன? இறந்து போவது யார்? இப்படிக் குழப்பமான பல விஷயங்கள் எந்தக் குழப்பமுமின்றி அழகான திரைக்கதையாக்கப்பட்டுள்ளன. 


இரு கதைகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துதான் ஆக வேண்டும் என்பதும் அதுவரையில் பார்வையாளர்களின் குழப்பம் அல்லது எதிர்பார்ப்பு தக்கவைக்கப்பட வேண்டும் என்பதும் இதுபோன்ற படங்களில் கட்டாயம். அதை இயக்குநர் ஓரளவு சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். ஆனால் புலனாய்வுக் கட்டத்தில் பங்கு பெறும் நாயகனின் காதலி சித்தரிக்கப்பட்டுள்ள விதம் அந்தக் குழப்பத்தைத் தக்கவைப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள செயற்கையான திணிப்பாகவே உள்ளது.





அதாகப்பட்டது.. Sankoviiii :)

இன்செப்சன் படத்தின் இன்ஸ்பிரேசனில் கன்னடத்தில் உருவான படம், லூசியா. க்ரவுட் ஃபண்டிங் முறையில் வெளியாகி மெகா ஹிட் ஆனது. அந்தப் படத்தினை தமிழில் ‘எனக்குள் ஒருவனாக’ ரீமேக் செய்திருக்கிறார்கள். சி.வி.குமாரின் தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவான படம்.

 
ஒரு ஊர்ல :
நிஜ வாழ்வில் சலிப்புற்ற ஹீரோவுக்கு, கனவில் நினைத்த வாழ்க்கையை வாழ லூசியா எனும் மாத்திரை மூலம் ஒரு வாய்ப்பு வருகிறது. அது ஹீரோவின் வாழ்க்கையை

எப்படி திருப்பிப் போடுகிறது என்பதே கதை.

உரிச்சா:

திரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம்.

கோமாவில் கிடக்கும் சித்தார்த். அதற்கான காரணத்தை விசாரிக்கும் போலீஸ்.

தியேட்டரில் டார்ச் அடித்து, ஆட்களை உட்கார வைக்கும் ஏழை சித்தார்த்தின் கதை, கூடவே ஹீரோயின் தீபா சன்னதியுடன் ஒரு அழகான காதல்.

டாப் சினிமா ஸ்டார் சித்தார்த்தின் கதை..கூடவே மாடல்(தீபா சன்னதி) மேல் காதல் கொள்ளும் கதை.

மூன்று கதையையும் கலந்து கட்டி அடிக்கிறார்கள். மூன்று கதையும் ஒன்று சேரும்புள்ளியில் ‘அட’ என்று நம்மை அசர வைக்கிறார்கள். தமிழில் பொதுவாக மறுபடியும்

மறுபடியும் பார்த்துப் புரிந்துகொள்ள வைக்கும் ஸ்டைலில் திரைக்கதைகள் வருவதில்லை. அந்தவகையில், இதுவொரு முக்கியமான படம்.

ஒரு கதையில் நரேனுக்கு விசுவாசமாக சித்தார்த் இருக்க, இன்னொரு கதையில் சித்தார்த்துக்கு விசுவாசமாக வருகிறார். இப்படி இரண்டு கதையிலும் பல தலைகீழ்

மாற்றங்கள், நுணுக்கமான சித்தரிப்புகளுடன் தரமான படமாக வந்திருக்கிறது.

இதில் ஒரே ஒரு சிக்கல் தான்..நம் மக்கள் பொழுதுபோக்கிற்குத் தான் படம் பார்க்க வருகிறார்களே ஒழிய, உட்கார்ந்து யோசிக்க அல்ல. நெட்டில் டவுன்லோடு செய்து

நோலனின் படத்தை சிலாகிக்கும் கும்பல்கூட ‘அனேகன்’ போன்ற முயற்சிகளை ரசிப்பதில்லை என்பதே யதார்த்தம்.

ஸ்லோவாக நகரும் படம், மூன்று கதைகள், கிளைமாக்ஸ் ட்விஸ்ட்வரை ‘அப்புறம் என்ன..?’ என சற்று அசுவாரஸ்யமாகவே உட்கார வைக்கின்றன. எனவே கமர்சியலாக ஏ

செண்டர் தாண்டி படம் தேறுவது கஷ்டம் தான்.

கதையைப் பற்றி இதற்கு மேல் என்ன சொன்னாலும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால்....உரிச்சது போதும்!

சித்தார்த்:

ஒரிஜினல் கன்னட ஹீரோவைவிட, இரண்டு கேரக்டருக்கு இடையே அதிக வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார். உடல்மொழி, பேசும் விதம் என எல்லாவற்றிலும் நல்ல 
உழைப்பு. ஏழை அப்பாவியாக காதலில் தயக்கம் காட்டுவதும், சினிமா ஸ்டாராக அதிகாரம் காட்டுவதுமாக கலக்கல் நடிப்பு. சித்தார்த்தின் கரியரில் இதுவொரு முக்கியமான படமாக இருக்கும். சினிமா ஸ்டாராக வரும் காதல் போர்சன் தற்செயலாக சமந்தாவை ஞாபகப்படுத்துகிறது.

தீபா சன்னதி:

சமந்தா-சித்தார்த் காதல் பிரிவிற்குக் காரணமே இந்த கன்னி பாம் தான் என்றார்கள். ஸ்டில் அளவிற்கு படத்தில் அம்மணி அழகாக இல்லை. முகத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இவரை விட ’மேகா நாயகி’ சிருஷ்டி அழகாக இருக்கிறார். ஆனால் அவரை டம்மியாக யூஸ் செய்திருக்கிறார்கள். வெரி பேட். அந்த கன்னக்குழி அழகியை ஹீரோயின் ஆக்கியிருக்கலாம்.

நரேன்:
ரொம்ப நாளைக்கு அப்புறம் மனுசருக்கு நல்ல கேரக்டர். நொடித்துப்போன தியேட்டர் அதிபராகவும், ஹீரோவின் மேனேஜராகவும் பின்னி எடுக்கிறார்.

நெகடிவ் பாயிண்ட்ஸ்:
- லூசியா மாத்திரை..கனவில் வேறொரு வாழ்க்கை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறார்கள். அதில் இருந்து இண்டர்வெல்வரை வேறு பெரிய ட்விஸ்ட்டே இல்லை.
- மெதுவாக நகரும் படம்
- விசாரணை அதிகாரி கேரக்டருக்கு வேறு ஃபேமஸான நடிகரைப் போட்டிருக்க வேண்டும். அந்த போர்சன்மேல் பெரிய ஆர்வம் வருவதில்லை. ஆனால் படத்தில் அது தான் த்ரில்லர் போர்சன்
- ஹீரோயின்
- பெண் தன்மையுள்ளவராக அறிமுகமாகும் ஜான் விஜய், அதற்கு அடுத்த காட்சிகளில் நார்மல் ஆணாக இருப்பது!
- நல்ல படம்!

பாசிடிவ் பாயிண்ட்ஸ்:
- திரைக்கதை..கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டும் தொடரும் காட்சிகளும் தான் படத்தின் பெரும் பலம்.
- சித்தார்த்
- வழக்கம்போல் சந்தோஷ் நாராயணின் கலக்கல் பாடல்களும் இசையும்.
- திரைக்கதைக்கு தோள் கொடுக்கும் பக்கா எடிட்டிங்.
- ரொம்ப நாளைக்கு அப்புறம், திரையில் பாதிப்படத்தை ப்ளாக் & ஒயிட்டில் பார்ப்பது. குறிப்பாக, ஓப்பனிங் ஷாங்கில் ஒளிப்பதிவும் ஆர்ட்டும் அட்டகாசம்.
- நல்ல படம்!! 

நிஜத்தை கருப்பு வெள்ளையாகவும், கனவுகளை வண்ணங்களாகவும் காணும் விக்னேஷ் பாத்திரம் சரியாக செதுக்கப்பட்டிருக்கிறது. சிறு வயதில் பெற்றோரை இழந்து அதோடு வண்ணங்களை உணரும் பார்வைக் குறைபாட்டையும் பெறும் விக்னேஷ், படம் முழுக்க கருப்பு வெள்ளை, வண்ணம் என்று மாறி மாறி வருவது நல்ல உத்தி. கடைசி காட்சியில் கனவு முடிந்து, போக நிஜ வாழ்வில் அவை பார்வையாளனுக்கு வண்ணமாக மாறுவது ரசிக்க வைக்கிறது.

பார்க்கலாமா?

நல்ல தரமான படம் பார்க்க விரும்புபவர்கள்….பார்க்கலாம் - கனவால், நிஜ வாழ்வு விபரீதமாகும் ஒருவனின் விசித்திரக் கதை!

வெள்ளி, 13 மார்ச், 2015

பில்லியர்களின் செல்வவள வளர்ச்சி

திங்களன்று Forbes இதழால் பிரசுரிக்கப்பட்ட சமீபத்திய தொகுப்புரையின்படிஉலக பில்லியனர்களின் மொத்த ஒருங்கிணைந்த மதிப்பு ஒரு புதிய மட்டத்திற்கு 2015 இல் 7.05 ட்ரில்லியன் டாலரை எட்டியுள்ளது.
அங்கே சாதனையளவிற்கு 1,826 பில்லியனர்கள்ஒவ்வொருவரும் சராசரியாக 3.8 பில்லியன் செல்வ வளத்துடன் உள்ளனர்கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்உலக பில்லியனர்கள் அவர்களின் மொத்த செல்வ வளத்தை 2014 இல் 6.4 ட்ரில்லியனில் இருந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து கொண்டுள்ளனர்.அதேவேளையில் மொத்த பில்லியனர்களின் எண்ணிக்கை 11 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளது.
அதன் அறிக்கையின் அறிமுகத்தில்Forbes இதழ் உலகின் மிகப் பணக்காரர்களின் செல்வ வளம் தொடர்ந்து உயர்ந்து வருவதற்கும் உலக பொருளாதார நிலைக்கும் இடையிலான மலைப்பூட்டும் இடைவெளியை குறிப்பிட்டுக் காட்டியது. “வீழ்ச்சி அடைந்துவரும் எண்ணெய் விலைகள் மற்றும் பலவீனமடைந்து வரும் யூரோ ஆகியவற்றிற்கு இடையேஉலக செல்வந்தர்களின் எண்ணிக்கை உலக பொருளாதார கொந்தளிப்புடன் போட்டிபோட்டு மீண்டுமொருமுறை விரிவடைந்தது,” என்று எழுதியது.
பில்லியர்களின் இந்த செல்வவள வளர்ச்சி தொடர்ந்து உலகளாவிய பங்குவிலை நிர்ணய சந்தைகளின் உயர்வுடன் பிணைந்துள்ளனஅகில உலக FTSE குறியீடு கடந்த மாதம் சாதனை அளவிற்கு உயர்ந்ததுமற்றும் அமெரிக்க சந்தைகள் சாதனைகளை முறிப்பதை தொடர்ந்து கொண்டிருக்கிறதுபங்குடைமையோ (share ownership) "பணத்தை அச்சடித்தல்" (quantitative easing), சாதனையளவிலான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் ஏனைய அரசாங்க கொள்கைகளின் பிரதான ஆதாயதாரர்களாக உள்ள செல்வந்தர்களின் கரங்களில் அதிகளவில் குவிந்துள்ளது.

உலக பில்லியனர்களின் செல்வ வளம்
வோல் ஸ்ட்ரீட் தாயகமாக மற்றும் உலகளாவிய நிதியியல் மூலதனத்தின் மையமாக விளங்கும் அமெரிக்கா,இதுவரையில் இல்லாத வகையில் மீண்டும் பில்லியனர்களின் மிக அதிக எண்ணிக்கையுடன் —536—உள்ளது. 2009 இல் “பொருளாதார மீட்சிஎன்றழைக்கப்பட்டது தொடங்கியதில் இருந்துஅமெரிக்காவில் மொத்த இலாப வருவாய்களில் சுமார் 95 சதவீதம் மேல்மட்ட சதவீதத்தினருக்கு சென்றுள்ளது.இதற்கிடையேதான்அந்நாட்டில் அண்மித்தளவில் நான்கில் ஒரு குழந்தை வறுமையில் வாழ்கிறது.
அமெரிக்காவில் உள்ள பில்லியனர்களின் பட்டியலில் பரிசயமானவர்களின் பெயர்களே மேலே இடம்பெற்றுள்ளனமைக்ரோசாப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் பெயரும் அதில் உள்ளடங்கும்இவரது தனிப்பட்ட செல்வ வளம் மட்டுமே 3.2 பில்லியனில் இருந்து 79.2 பில்லியன் டாலருக்கு உயர்ந்ததுஅமெரிக்கர்களின் மத்தியில்கேட்ஸூக்கு அடுத்து இருப்பவர் முதலீட்டாளர் வாரென் பஃபெட் (Warren Buffett) ஆவார்இவர் இவ்வாண்டின் மிகப்பெரிய இலாபமீட்டியவராக அப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கடந்த ஆண்டு 14.5பில்லியன் டாலரில் இருந்த இவரது சொத்தின் நிகர மதிப்புஇப்போது 72.7 பில்லியன் டாலராகும்.
அப்பட்டியலில் அதற்கு கீழே இருப்பவர்களில்தனியார் முதலீட்டு நிர்வாகி ஸ்டீவன் கோஹென் (Steven Cohen) போன்றவர்களை ஒருவரால் பார்க்க முடியும்இவர் அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றகர குணாம்சத்தின் இன்றியமையாத உருவடிவமாவார்ஓராண்டிற்கு முன்னர்கோஹெனின் முன்னாள் தனியார் முதலீட்டு நிதியம், SAC Capital Advisors, உள்-வர்த்தக கட்டண குற்றங்களுக்காக வழக்கில் இழுக்கப்பட்டதுகோஹென் (Cohen) மீதே கூட ஒருபோதும் குற்றஞ்சாட்டப்படவில்லை என்பதோடுஅவர் எளிமையாக அவரது செல்வங்களை Point72 Asset Management என்ற புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொண்டார்கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டாலர் ஈட்டிய கோஹென்அவரது மொத்த நிகர மதிப்பை 11.4பில்லியன் டாலருக்குக் கொண்டு வந்தார்.
தனி உள்ளாட்சியாக வகைப்படுத்தினால்Forbes பட்டியலில்கலிபோர்னியாவெறுமனே ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை மற்றும் சீனாவை அடுத்து, 131 பில்லியனர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும்.நிச்சயமற்ற மற்றும் ஒழுங்குமுறையற்ற வேலை நேரங்களுடன்குறைந்த ஊதியம் பெறும் ஓட்டுனர்களை ஒருங்கிணைப்பதில் சிறப்புதன்மை கொண்ட கார்-பகிர்வு சேவையான Uber நிறுவனத்தின் இணை-ஸ்தாபகர்கள் Travis Kalanick மற்றும் Garett Camp ஆகியோர் கலிபோர்னியாவின் புதிய பில்லியனர்களில் உள்ளனர்அதுபோன்ற உழைப்பு சுரண்டும் முறை ஒட்டுமொத்தமாக அமெரிக்க பொருளாதாரத்திற்கான ஒரு முன்மாதிரியாக பெருமளவில் பார்க்கப்பட்டு வருகிறது.
மெக்சிகன் தொலைதொடர்புத்துறை அதிபர் கார்லோஸ் ஸ்லிம் (Carlos Slim), அந்த உலகளாவிய பட்டியலில்77.1 பில்லியன் டாலருடன் இரண்டாவது இடத்தில் இருந்தார்மெக்சிகோவின் 122 மில்லியன் மக்கள்தொகையில் பாதி மக்கள் வறுமையில்நாளொன்றுக்கு சுமார் டாலருக்கும் குறைந்த வருவாயில்(மாதத்திற்கு 2,329 பெசொஸூடன் -pesos) வாழ்வதாக வரையறுக்கப்படுகிறதுஸ்லிமின் தனிப்பட்ட செல்வமேவறிய 60 மில்லியன் மெக்சிகோ தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த ஆண்டு வருவாய் உடன் தோராயமாக ஒப்பிடக்கூடியதாக உள்ளது.
இலத்தீன் அமெரிக்காவில் மிகப்பெரிய தனிநபராக ஸ்லிம் விளங்குகிறார் என்ற நிலையில்அப்பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான 54 பில்லியனர்களை கொண்ட நாடாக பிரேசில் உள்ளதுபிரேசிலின் 60மில்லியன் குழந்தைகளில் பாதி வறுமையில் வாழ்கின்றன.
ஒட்டுமொத்தமாகமிக அதிகமாக 213 என்ற எண்ணிக்கையில் பில்லியனர்களை கொண்ட இரண்டாவது நாடு சீனாவாகும்அதைத் தொடர்ந்து ஜேர்மனிஇந்தியா மற்றும் ரஷ்யா உள்ளன.
உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு உழைப்பு தளமாக விளங்கும் சீனாஇந்த ஆண்டு Forbes பட்டியலில்290 பில்லியனர்களில் 71 புதியவர்களுக்குஅல்லது மொத்த நபர்களில் சுமார் ஒரு கால் பங்கினருக்கு புகலிடமாக உள்ளதுசீனாவில் உள்ள மிகப் பெரிய செல்வந்தர் ஒரு நில/கட்டிடத்துறை அதிபரான வாங் ஜியான்லின் (Wang Jianlin) (24.2 பில்லியன் டாலர்ஆவார்இவருக்கு அடுத்து நில சொத்து (real estate)வர்த்தக நிறுவனமான அலிபாபா குழுமத்தின் (Alibaba Group) அதிபர் ஜேக் மா (22.7 பில்லியன் டாலர்)ஆவார்.
கடந்த ஆண்டு சீனாவின் பங்கு-நிர்ணய சந்தைகளில் இருந்த உயர்வு சீன பில்லியனர்களுக்கு மட்டும் ஆதாயமளிக்கவில்லைForbes குறிப்பிடுகையில், “சீன பில்லியனர்கள் பட்டியலில் மேல்மட்ட 20பில்லியனர்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்திருந்தால்நீங்கள் அவர்களின் செல்வ வளத்திலிருந்து சரியாக உங்களின் பங்கு கணக்கைப் பெற்று வந்திருப்பீர்கள்,” என்றதுகடந்த ஆண்டு அலிபாபாவின் ஆரம்ப பொது பங்கு வெளியீடானது ஊக வணிகம் மற்றும் பேராசையின் ஒரு சர்வதேச காட்சியாக மாறி இருந்ததுடன்உலகளாவிய முதலீட்டாளர்களிடம் இருந்து பில்லியன் பில்லியன் கணக்கில் இலாபங்களைக் குவித்தன.
இந்தியாவில்அந்நாட்டின் 90 பில்லியனர்கள் "பெரிதும் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் 'நல்ல காலத்திற்கானவாக்குறுதியின் மீது சவாரி செய்து வருவதாகForbes கருத்துரைத்ததுகடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த வலதுசாரி இந்து அடிப்படைவாத அரசியல்வாதிஅந்நாட்டை உலகின் கொத்தடிமை கூடமாக ஆக்கிக் கொண்டேவணிகம்-சார்ந்த நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பை வேகமாக முன்னெடுத்துள்ளார்.
Reliance Industries Limited இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, 21 பில்லியன் டாலர் நிகர சொத்துக்களுடன்இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்இந்தியாவில் சுமார் 60சதவீத மக்கள்அல்லது 750 மில்லியன் மக்கள்நாளொன்றுக்கு டாலருக்கும் குறைந்த வருவாயில் வாழ்கின்றனர்.
ரஷ்யாவின் பில்லியனர்கள் எண்ணிக்கை கணிசமான அளவில் 111இல் இருந்து 88க்கு வீழ்ச்சி அடைந்து,ஒட்டுமொத்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்கு இறங்கியது.கூர்மையான எண்ணெய் விலை வீழ்ச்சியாலும்அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினால் திணிக்கப்பட்ட முடமாக்கும் பொருளாதார தடைகளாலும்அந்நாட்டை சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடியில் இதுவும் ஒரு விளைவாகும்இத்தகைய தடைகளின் பிரதான நோக்கங்களில் ஒன்றுதங்களின் செல்வ வளத்தின் மீதான தாக்கங்களைக் குறித்து பீதியுற்றுள்ள ரஷ்ய செல்வந்த தட்டுக்களின் ஒரு பிரிவை விளாடிமீர் புட்டின் அரசாங்கத்திற்கு எதிராக திருப்பி விட ஊக்குவிப்பதாகும்.
நம்பகமான பரந்தளவில் இதற்கு இணையானவையும் வெளிப்பட்டு வருகின்றனசான்றாக ஐரோப்பிய வங்கிகளில் கிரீஸ் கொண்டிருக்கும் கடன் சுமார் 90 பில்லியன் டாலர் ஆகும்உலக பில்லியனர்களின் செல்வவளம் இந்த தொகையை விட 77 மடங்கு அதிகமாகும்.
அமெரிக்காவில்டெட்ராய்ட் நகரத்தின் கடன் 6.9 பில்லியன் டாலராகும்அல்லது உலக பில்லியனர்களின் மொத்த செல்வ வளத்தில் ஆயிரத்தில் ஒரு பங்காகும்.
கிரீஸூம் சரி டெட்ராய்டும் சரி இரண்டுமே வங்கிகளால் கட்டளையிடப்பட்டஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தால் ஆமோதிக்கப்பட்ட ஒரு பேரழிவுகரமான மறுசீரமைப்பிற்குள் இழுக்கப்பட்டுள்ளதோடு,அதனால் பாரிய வறுமையும் வாழ்க்கை தரங்களின் சீரழிவும் விளைந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக Forbes பட்டியல் உலக முதலாளித்துவத்தின் ஒட்டுண்ணித்தனமான குணாம்சத்திற்கு வெளிப்பாட்டை வழங்குகிறதுஅவர்களின் செல்வ வளமானது—நிதிஉற்பத்திதொலைதொடர்பு என—பொருளாதாரத்தின் எந்தவொரு குறிப்பிட்ட துறையுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் சரிபெரும் பணக்காரர்களின் சொத்துக்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பங்கு சந்தைகளின் உயர்வுடன் பிணைந்துள்ளன.
அதுபோன்ற பெரும் தொகைகள் மிக சிலரின் கரங்களில் திரண்டிருப்பது வெறுமனே வார்த்தையளவில் பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் விளைவுபொருள் அல்லமாறாக அது 2008 நிதியியல் நெருக்கடிக்குப் பின்னர் தீவிரமாக்கப்பட்ட திட்டமிட்ட அரசாங்க கொள்கைகளின் விளைபொருளாகும்அந்த சமயத்திலேயேஉலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போலஇந்த நெருக்கடியின் "வடிவில் அமெரிக்க மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திலும்மற்றும் அதை அடித்தளமாக கொண்டுள்ள சமூக மற்றும் வர்க்க உறவுகளிலும் ஓர் அடிப்படை மறுகட்டமைப்பு நடந்து கொண்டிருக்கிறது.”
2009இல் இருந்துவங்கி பிணையெடுப்புகள்பூஜ்ஜியத்திற்கு அண்மித்த வட்டிவிகிதங்கள் மற்றும் "பணம் அச்சடித்தல்ஆகிய கொள்கைகள் முழுமையாக நடைமுறைபடுத்தப்பட்ட போதுஉலக பில்லியனர்களின் செல்வ வளம் சுமார் மூன்று மடங்கு உயர்ந்துள்ளனஅமெரிக்காவில் ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில்,ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது ஓர் இரக்கமற்ற தாக்குதலை நடத்திக் கொண்டேநிதியியல் சந்தைகளுக்குள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை பாய்ச்சி உள்ளது.
இத்தகைய நிகழ்ச்சிப்போக்கின் உலகந்தழுவிய குணாம்சம்நிலவும் பொருளாதார ஒழுங்கமைப்பின் இயல்பு தான் பிரச்சினையே என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறதுசமூக சமத்துவமின்மையின் அசாதாரண வளர்ச்சி மற்றும் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு செல்வ வளத்தை பாரியளவில் கைமாற்றுவது ஆகியவை ஒரு திவாலான மற்றும் நோய்பீடித்த அமைப்புமுறையான முதலாளித்துவத்தின் வெளிப்பாடுகளாகும்இந்த அமைப்புமுறையின் சீரழிவும் நெருக்கடியும் அதை அழிப்பதற்கான வழிவகைகளை அதுவே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன —அதாவது சமூக மோதல் மற்றும் உலகந்தழுவிய வர்க்க போராட்டத்தின் மேலெழுச்சியை உருவாக்கி வருகின்றன.