திங்கள், 22 ஜூலை, 2013

பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!


1.
"பைபிள் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்." என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் என்றால் அதையே "தமது மதம் ஆண்டவரால் தெரிவு செய்யப்பட்டது" என்று நிரூபிக்க உதாரணமாக காட்டுவார்கள். இவர்கள் ஒன்றை மறந்து விட்டு பேசுகிறார்கள். உலக வரலாறு காலனிய காலகட்டம் என்ற ஒன்றைக் கண்டுள்ளது. பிரிட்டிஷ், ஒல்லாந்து, பிரெஞ்சு, ஸ்பானிய, போர்த்துகீச ஐரோப்பியர்கள் உலகம் முழுவதையும் ஒரு காலத்தில் ஆட்சி செய்தார்கள். அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் கைப்பற்றிய புதிய பிரதேசங்களில் கிறிஸ்தவ மதத்தை பரப்பினார்கள். அதற்கு இலகுவாக பைபிளை பல உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து போதித்தார்கள்.

பைபிள் என்பது ஆங்கில உச்சரிப்பு. பிபிலியோ (Biblio) என்றால் கிரேக்க மொழியில் புத்தகம் என்று அர்த்தம். போர்த்துகீச மொழிப் பெயரான பிபிலியா (Bíblia) என்ற சொல் தான் தமிழில் "விவிலியம்" என்று மாறியது. ஐரோப்பாவில் கிரேக்க, லத்தீன் மொழிகளைத் தவிர்ந்த பிற மொழிகள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தன. பல்வேறு இனங்களை சேர்ந்த மக்களுக்கு தெரிந்த முதலாவது நூலும் பைபிள் தான். தனது பெயரைக் கூட எழுதப், படிக்கத் தெரியாத மக்கள் தான் ஞாயிறு பூசைக்கு தேவாலயங்களுக்கு சமூகமளித்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு புத்தகத்தை காட்டி, இது ஆண்டவர் எமக்கு வழங்கியது என்று சொன்னால், கண்ணை மூடிக் கொண்டு நம்புவார்கள்.

லத்தீன் மொழியில் கைகளால் எழுதப்பட்டிருந்த பைபிளை, லத்தீன் மொழி படித்த பாதிரிகள் மட்டுமே வாசிக்க முடிந்தது. பைபிள் எழுதும் அல்லது பிரதி பண்ணும் வேலையில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க துறவிகள் ஈடுபட்டிருந்தார்கள். மடாலயத்தில் வசித்த அவர்களின் வேலை அது மட்டும் தான். அது ஒன்றும் இலகுவான காரியமல்ல. நாள் முழுக்க உட்கார்ந்து மையைத் தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இன்று நாம் கிறுக்குவது போல எழுத முடியாது. நுணுக்கமாக படம் வரைவது போன்ற, அழகான கையெழுத்தாக இருக்க வேண்டும். தாளுக்கு பதிலாக பதனிடப்பட்ட மாட்டுத் தோல் பயன்படுத்தப் பட்டது. நெதர்லாந்து மொழியில் Monniken werk (துறவியின் வேலை) என்று ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. ஒரே இடத்தில் இருந்து செய்யும் நுணுக்கமான வேலையை அப்படி சொல்வார்கள்.

ஆனால் துறவிகள் எழுதும் பைபிளை வாசிப்பதற்கு பொது மக்களுக்கு அனுமதி இருக்கவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு மட்டுமே உள்ள விசேஷ உரிமை அது. அது மட்டுமல்ல, பைபிளை மொழிபெயர்ப்பது தடைசெய்யப்பட்டு இருந்தது. ஐரோப்பாவில் லத்தீன் மேட்டுக்குடியினர் பேசும் மொழியாக இருந்தது. சாதாரண மக்கள் வேறு மொழிகளைப் பேசினார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு எல்லாம் அந்தக் காலத்தில் "பட்டிக்காட்டான் பேசும் தாழ்ந்த பாஷைகளாக" இருந்தன. சாதாரண குடிமகனும் பைபிளை படித்து புரிந்து கொள்வதை வத்திகான் விரும்பவில்லை. கத்தோலிக்க தலைவர் பாப்பரசர் "மொழிபெயர்ப்புத் தடை" உத்தரவைப் பிறப்பித்திருந்தார். பைபிள் லத்தீன் மொழியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும். அதனை வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது ஆண்டவருக்கு எதிரான பாவகாரியம் என்று அறிவித்தார். பாப்பரசரின் உத்தரவை மீறி மொழிபெயர்க்க முனைந்தவர்கள் கிறிஸ்தவ மதத் துரோகிகளாக கருதப்பட்டனர். துரோகத்திற்கு தண்டனை மரணம். விவிலிய நூலில் எழுதியிருக்கும், கர்த்தரின் நற்செய்தியை வாசித்தவர்கள் அனைவரும், உயிரோடு கொளுத்தப்பட்டு பரலோகம் சென்றனர்.


2.
இன்று லத்தீன் மொழி வழக்கொழிந்து விட்டது. இதனால் லத்தீன் பைபிளை வாசித்து புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். வத்திக்கானில் கடமையாற்றும் பாப்பரசர், கார்டினல்கள், மற்றும் உலகெங்கும் கிறிஸ்தவ இறையியல் கற்கும் மாணவர்கள் லத்தீன் மொழி படித்துள்ளனர். விரல் விட்டு எண்ணக் கூடிய இந்த சிறு கூட்டத்தை தவிர வேறு யாருக்கு லத்தீன் மொழி தெரியும்? பைபிளை மொழிபெயர்க்கக் கூடாது என்ற தடைச்சட்டம் இன்று வரை தொடர்ந்திருந்தால், இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? கிறிஸ்தவ மதத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட "நாஸ்திக" ஐரோப்பாவில், இன்று லத்தீன், கிரேக்க மொழிகள் அனைத்து பள்ளிப் பிள்ளைகளுக்கும் போதிக்கப்படுகின்றன. (முன்னாள் சோஷலிச நாடுகளிலும் அந்த பாடத்திட்டம் பின்பற்றப் பட்டது.)பலர் இவற்றை படிப்பதில் அக்கறை காட்டா விட்டாலும், குறைந்த பட்சம் விவிலிய நூலில் எழுதியுள்ள சொற்களின் அர்த்தங்களை புரிந்து கொள்ளவாவது உதவுகின்றது. நானும் தான் கிரேக்க, லத்தீன் மொழிகளைப் படித்திருக்கிறேன்.ஆனால் எனது கிறிஸ்தவம் பற்றிய கட்டுரைகளை எதிர்க்கும் எத்தனை பேருக்கு இந்த மொழிகள் தெரியும்?

மொழிபெயர்க்கும் பொழுது தவிர்க்கவியலாது சில இடங்களில் அர்த்தம் மாறுபடுவதும் நடந்துள்ளது. இன்று ஆங்கிலத்தில் மட்டும் இரண்டு டசின் மொழிபெயர்ப்புகள் (
Timeline of Bible Translation History)
வந்து விட்டன. (கர்த்தரே! எது சரியானது?) ஒவ்வொன்றும் எங்கோ ஒரு இடத்தில் வித்தியாசப்படும். 19 ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு அன்க்லிகன் திருச்சபையை சேர்ந்த இறையியல் அறிஞர்கள் (
Brooke Foss Westcott & Fenton John Anthony Hort) பைபிளை கிரேக்க மொழியில் இருந்து நேரடியாக மொழிபெயர்த்தார்கள். அதுவே இன்று சிறந்த மொழிபெயர்ப்பாக(The New Testament In The Original Greek) கருதப்படுகின்றது. அனேகமாக தமிழ் விவிலிய நூலும் அதை தழுவியே மொழிபெயர்த்திருக்கலாம். இதில் வேடிக்கை என்னவென்றால், உலகில் மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்த அறிஞர்கள் மத நம்பிக்கையற்றவர்கள்! டார்வினின் பகுத்தறிவுக் கொள்கையிலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு காட்டியவர்கள். பரிபூரணமான பைபிள் மொழிபெயர்ப்புக்காக, கிறிஸ்தவர்கள் இரண்டு நாஸ்திகர்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது.வெட்கக்கேடு.

பைபிள் ஆண்டவரால் அருளப்பட்ட நூல் என்பதால், எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் ஒன்றாகவே இருக்கும் என்று பல கிறிஸ்தவர்கள் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்னர், ஒரு புரட்டஸ்தாந்து சபையினர் ஒழுங்கு செய்த பைபிள் வகுப்புகளில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த இடம், நெதர்லாந்து நாட்டுப்புறக் கிராமம் என்பதால், அருகில் இருந்த அகதி முகாமை சேர்ந்த பன்னாட்டு அகதிகள் கலந்து கொண்டார்கள். அரபு, ரஷ்ய, ஜோர்ஜிய, தமிழ் மொழி பேசுவோர் தம்மோடு அந்தந்த மொழிகளில் இருந்த பைபிளையும் கையோடு எடுத்து வந்திருந்தார்கள். பைபிள் வகுப்பை ஒழுங்கு படுத்தியவர்கள், டச்சு, ஆங்கில மொழிப் பிரதிகளுடன் காத்திருந்தார்கள்.

பைபிளை வாசிக்கும் பொழுது, அது அங்கே பல மொழிகளிலும் புரிந்து கொள்ளப்பட்டது. ஆயினும் டச்சு, ஆங்கில மொழிகள் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டன. (நானே ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கில, டச்சு மொழி பைபிள்களை மாறி, மாறி வாசித்திருக்கிறேன்.) ஒரே அத்தியாயத்தை சேர்ந்த, ஒரே வரிகள் ஒவ்வொரு மொழியிலும் எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை அப்பொழுது புரிந்து கொள்ள முடிந்தது. வகுப்பை ஒழுங்கு படுத்திய கிறிஸ்தவ சபையை சேர்ந்த நெதர்லாந்துக்காரர்கள் சிறிது குழம்பிப்போனார்கள். "கர்த்தர் எதற்காக தனது சொந்த நூலிலேயே அடிக்கடி முரண்படுகிறார்?" எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. (பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்களுக்கிடையில் முரண்பாடுகள் காணப்படுவது வேறு விடயம்.)எல்லோருக்கும் பொதுவாகத் தெரிந்த பைபிளைத் தவிர, மோர்மன், ஜெஹோவா பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தமக்கென தனியான பைபிளை தயாரித்துள்ளார்கள். மோர்மன்களின் பைபிளில் மோர்மன் என்ற சொல்லும், ஜெஹோவாக்களின் பைபிளில் அடிக்கடி ஜெஹோவா என்ற சொல்லும் இடம்பெறும்.


3.
பைபிளின் மூல நூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு (எபிரேய), அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு முழுக்க முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. இயேசுவின் பன்னிரு சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு என்று அழைக்கப்படுகின்றது. சில வருடங்களுக்கு முன்னர் யூதாஸ் எழுதிய சுவிசேஷம் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அது பைபிளில் சேர்க்கப்படவில்லை.

இன்று பைபிளில் காணப்படும் சுவிசேஷங்கள் மட்டும் தான் எழுதப்பட்டன, என்று நம்புவது வரலாறு தெரியாதவர்களின் அறியாமை. கிறிஸ்தவ மதம் நிறுவனமயப்பட்ட காலங்களில் எத்தனையோ சுவிசேஷங்கள் அழிக்கப்பட்டு விட்டன.கிரேக்கத்தில் (இன்று துருக்கி இருக்கும் இடம்) ஞானவாத கிறிஸ்தவ பிரிவு (Gnosticism) பரவலான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது. "இனோசிஸ்" (ஆங்கிலத்தில் : knowledge)என்ற கிரேக்க சொல்லில் இருந்து அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால் இன்றுள்ள கிரேக்க பழமைவாத (ஓர்தோடொக்ஸ்) கிறிஸ்தவ பிரிவு அரச ஆதரவைக் கொண்டிருந்தது. இரண்டு மதப் பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தத்துவப் போர்கள் நடந்தன. ஞானவாத கிறிஸ்தவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சபையை சேர்ந்த உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் எழுதி வைத்த தத்துவங்களும் அழிக்கப்பட்டன. "நன்மைகளின் உலகம், தீமைகளின் உலகம்" என்ற ஈருலகக் கோட்பாடு அவர்களுடையது. ஞானவாத கிறிஸ்தவர்கள் பொருளாயவாத உலகை சாத்தானின் படைப்பாக கருதினார்கள். தேவாலயம் கூட ஒரு பொருள் என்பதால், அதனை அவர்கள் எற்றுக் கொள்ளவில்லை.

ஏற்கனவே பைபிளில் சேர்க்கப்பட்டுள்ள "வெளிப்பாடு" (இறுதி அத்தியாயம்) என்ற சுவிசேஷத்தை என்ன காரணத்திற்காகவோ, கிறிஸ்தவர்கள் படிக்க விரும்புவதில்லை. "கத்தோலிக்க மடாதிபதி பாப்பரசர் சாத்தானின் அவதாரம்." என்ற அர்த்தம் வரும் சில வரிகள் அதிலே எழுதப்பட்டுள்ளன. (நேரடியாக குறிப்பிடவில்லை.) அதற்காக வத்திகான் அந்த இறுதி அத்தியாயத்தை மக்களின் கண்களில் இருந்து மறைத்து வைக்க விரும்பியதாக கூறப்படுகின்றது. "வெளிப்பாடு" எழுதிய அப்போஸ்தலர் யானிஸ் ("ஜோன்" என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் உங்களுக்கு புரியும்) பட்மொஸ் தீவில் அந்த சுவிசேஷத்தை எழுதினார். அவர் அங்கே மறைந்து வாழ்ந்ததாக கருதப்படுகின்றது. துருக்கிக்கு அருகில் உள்ள அந்த சிறு தீவில் இருந்து கொண்டே, பல எதிர்காலக் காட்சிகளை மனக்கண்ணால் கண்டுள்ளார். ஊழிக்காலத்தை எதிர்வு கூறிய ஒரு தீர்க்கதரிசியின் வாசகங்களைப் படிப்பதற்கு பல கிறிஸ்தவர்கள் பயப்படுகிறார்கள்.


4.
மேற்கு ஐரோப்பாவில், லத்தீனை தவிர வேறு எந்த மொழியும் எழுத்து வடிவம் கொண்டிருக்கவில்லை. அனேகமாக மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் அந்த மொழிகளில் எழுதப்பட்ட முதலாவது நூலாக இருக்கும். கத்தோலிக்க அதிகாரத்திற்கு எதிராக, செல்வச் செழிப்பில் வாழ்ந்த ஊழல்மய மதகுருக்களுக்கு எதிராக மார்ட்டின் லூதர் போர்ப் பிரகடனம் செய்தார். ஜெர்மன் மொழியில் எதிர்ப்பு எனப் பொருள்படும் "Protest" என்ற பெயரில் புதிய இயக்கம் பைபிளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தது. அதன் பின்னரே, டச்சு, பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் துணிச்சலுடன் வெளிவந்தன. புரட்டஸ்தாந்து அமைப்பு தோன்றும் வரையில், மொழிபெயர்த்த பைபிளை வைத்திருப்பது பாரதூரமான குற்றமாக கருதப்பட்டது. 1517 ம் ஆண்டு, அதாவது புரட்டஸ்தாந்து கிளர்ச்சி இடம்பெற்ற அதே காலப்பகுதியில், இங்கிலாந்தில் ஏழு பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். உள்ளூர் கத்தோலிக்க தேவாலயத்தால் மரண தண்டனை வழங்கப்படும் அளவிற்கு அவர்கள் செய்த குற்றம் என்ன? அந்த ஏழு குற்றவாளிகளும் யாரையாவது கொலை செய்தார்களா? இல்லை. தமது பிள்ளைகளுக்கு ஆங்கில மொழியில் ஜெபம் செய்ய சொல்லிக் கொடுத்தது தான் அவர்கள் செய்த மாபெரும் குற்றம்! ஆமாம், அந்தக் காலத்தில் ஜெபம் செய்வது கூட லத்தீன் மொழியில் தான்.

1380 ம் ஆண்டு, இங்கிலாந்தை சேர்ந்த 
John Wycliffe, என்ற கிறிஸ்தவ இறையியல் பயின்ற அறிஞர் பைபிளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். பாப்பரசர் எத்தனை தடை போட்டும், மிரட்டியும் அஞ்சாமல் தனது முயற்சியை தொடர்ந்தார். அவரும், அவரது ஆதரவாளர்களும் கையால் எழுதி பூர்த்தி செய்த பைபிளை மேலும் பல பிரதிகள் எடுத்தார்கள். முதன் முதலாக ஆங்கில மொழியில் வெளியான பைபிள் அது தான். John Wycliffe இறந்த பின்னரும் பாப்பரசரின் கோபம் அடங்கவில்லை. "கிறிஸ்தவ மதத்துரோகி" யின் புதைக்கப்பட்ட உடல் தோண்டியெடுக்கப்பட்டு எலும்புகள் பொடிப்பொடி ஆக்கப்பட்டன.

John Wycliffe பைபிளை படித்து மொழிபெயர்த்ததுடன் மட்டும் நிற்கவில்லை. கத்தோலிக்க தேவாலய மதகுருக்களின் ஊழலுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடினார். உண்மையான கிறிஸ்தவன் ஏழ்மையில் வாழ வேண்டும் என நம்பியவர். ஒரு நேர்மையான கனவானின் பின்னால் மக்கள் அணிதிரண்டதில் வியப்பில்லை. அப்படியானால் அன்றைக்கு கத்தோலிக்க மதகுருக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகளை தன்னலம் கருதும் ஊழல் பெருச்சாளிகளாக நீங்கள் பார்க்கிறீர்கள். அதே போலத்தான், அன்றைக்கிருந்த ஐரோப்பிய மக்கள் கத்தோலிக்க மதகுருக்களை பார்த்தார்கள். ஆமாம், கத்தோலிக்க மதவாதிகள் ஆட்சி செய்த ஐரோப்பா, தேவகுமாரனின் பரிசுத்த ராஜ்ஜியமாக இருக்கவில்லை.


5.
இன்றைக்கு கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பிஷப், பாதிரிகள் துறவற வாழ்க்கை வாழ்கின்றனர். கர்த்தரின் திருப்பணிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்று, நீங்கள் அவர்கள் மீது பெரு மதிப்பு வைத்திருக்கிறீர்கள். ஆனால் ஐரோப்பாவில் கத்தோலிக்க மதம் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் அவ்வாறான நிலை இருக்கவில்லை. வத்திகானில் முடிசூடா மன்னனாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த முதலாவது பாப்பரசர் பீட்டர் திருமணம் செய்தவர். அது வரலாற்றில் பதியப்படுமளவிற்கு, எல்லோருக்கும் தெரியும். பிஷப்கள் முதல் சாதாரண கிராமப்புற பாதிரி வரையில் திருமணம் செய்து குழந்தைகளை பெற்று குடும்ப வாழ்க்கை வாழ்ந்தார்கள். ஒரு காலத்தில் மதகுருக்கள் திருமணம் செய்யக் கூடாது என்று கத்தோலிக்க திருச்சபை சுற்றறிக்கை அனுப்பியது. அதற்குப் பிறகு ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்வதை விட, பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது.

சுவிட்சர்லாந்துக்கு அருகில் உள்ள பிரான்சின் நகரமான லியோனில் இருந்து ஆட்சி செய்த கத்தோலிக்க மதகுரு, சினிமாவில் வரும் வில்லன் போல அனைத்து கெட்ட பழக்கங்களையும் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்த ஊரெல்லாம் அவரது அட்டகாசம் கொடி கட்டிப் பறந்தது. "லியோன் தாதா" வின் கொடுமை கண்டு பொங்கி எழுந்த வால்டோ 
(Peter Waldo) என்ற வர்த்தகர், மக்களை திரட்டி சீர்திருத்த இயக்கம் ஒன்றை தொடங்கினார்(1170). தனது சொத்தை எல்லாம் தேவாலயத்திற்கு என எழுதிக் கொடுத்து விட்டு, களத்தில் இறங்கினார். ஆரம்பத்தில் வால்டோவின் சீர்திருத்த இயக்கத்திற்கு பாப்பரசர் அனுமதி வழங்கினார். (மதப் பிரசங்கம் செய்பவர் பாப்பரசரின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும்.) ஆனால் வால்டோவின் போராட்டம் லியோன் ஊழல் பெருச்சாளிக்கு எதிராக திரும்பியதும் அனுமதியை ரத்து செய்து விட்டார்.

இதற்கிடையே வால்டோ பைபிளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கும் வேலையிலும் ஈடுபட்டார். (அபச்சாரம்! அபச்சாரம்!!) அது மட்டுமல்ல வால்டோ குழுவினரின் தேவாலயங்களில் பெண்களும் மதகுருக்களாக பூசை செய்ய முடிந்தது. (தெய்வ குற்றம்! கர்த்தருக்கே பொறுக்காதே!!) வால்டோ குழுவினருக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க மேற்குறிப்பிட்ட இரண்டு காரணங்களும் போதுமானதாக இருந்தன. பாப்பரசர் அனுப்பிய சிறப்புப் படையணி வால்டோ குழுவினரின் இருப்பிடங்களை முற்றுகையிட்டு வேட்டையாடியது. வால்டோ குழு உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்ட போதிலும், மலைகளுக்குள் மறைந்து கொண்டனர். வால்டோ குழுவினர், சுவிட்சர்லாந்தின் வொட் (Vaud) என்ற மாநிலத்தில் நீண்டகாலம் தாக்குப் பிடித்தனர். பிரெஞ்சு மொழியில் வோடுவா (Vaudois) என்ற பெயரே பின்னர், (ஜெர்மன் மொழியில்) வல்டோ குழு என்று திரிபுற்றதாக சொல்லப்படுகின்றது.

கிறிஸ்தவ மதம் தோன்றி ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்னர் தான் பைபிளை மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்துள்ளன. அதற்கு என்ன காரணம்? அந்தக் காலகட்டத்தில் தான் ஐரோப்பாவில் புதிய நகரங்கள் உருவாகின. நகரமயமான சமுதாயத்தில் புதிய சிந்தனைகளுக்கான தேடல் ஏற்பட்டது. வர்த்தகர்கள் தொழில் நிமித்தம் உலக அறிவு கைவரப் பெற்றிருந்தனர். சிலர் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டனர். மறுபக்கத்தில் நிலப்பிரபுத்துவ பொருளாதார முறை தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. அரசியல் அதிகாரம் (கத்தோலிக்க) மதகுருக்களின் கைகளில் இருந்து, மன்னர்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருந்தது. சுருக்கமாக, ஐரோப்பா ஒரு சமூகப் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தவிர்க்கவியலாது மதம் குறித்த அறிவுத் தேடலும் அந்தப் புரட்சியின் ஒரு அங்கமாகியது. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிறிஸ்தவர்களை விட, இன்றுள்ள கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பற்றி அதிகம் அறிந்து வைத்துள்ளனர். அதற்கு அவர்கள் தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய சில சமூக விடுதலைப் போராளிகளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளனர்.

ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து நீண்ட காலமாகி விட்டது.மேலெழுந்தவாரியாக பிரச்சார யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதைப் போலதோன்றினாலும்,மறைமுகமாக தனது கூலிப்படைகளினூடாக இரத்தம் சிந்தும்ஆயுதப்போராட்டத்தையும் நடத்திவருகின்றது. ஈராக்கில் தளமமைத்துள்ளமுஜாகிதீன் கல்க் என்ற ஈரானிய எதிர்ப்பியக்கம்வெளிப்படையாகவேஅமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றது. இதே நேரம்பாகிஸ்தானைதளமாக கொண்டு இயங்கி வரும் "ஜன்டுல்லா" என்ற தீவிரவாதக் குழுவிற்குஅமெரிக்காஇரகசியமாக உதவி வருவதை ABC தொலைக்காட்சிஅம்பலப்படுத்தியுள்ளது. 2005 ம் ஆண்டு, முன்னாள்அமெரிக்க அமைச்சர் டிக்சென்னிக்கும், அப்போது பாகிஸ்தானில் பதவியில் இருந்த முஷாரப்பிற்கும்இடையில்ஏற்பட்ட இரகசிய உடன்படிக்கையின் பின்னர் இந்த பதிலிப்போர்ஆரம்பமாகியுள்ளது.

பலுச்சி மொழி பேசும் மக்கள் ஈரானிற்குள்ளும் வாழ்கின்றனர். பாகிஸ்தானின்பலுச்சிஸ்தான் மாகாணம் ஈரான் எல்லையில்அமைந்துள்ளமைகுறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாகாணத்தின்பிரிவினைக்காக சில ஆயுதமேந்திய இயக்கங்கள் போராடி வந்தன.அவை யாவும்பாகிஸ்தானிய இராணுவத்தால் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டன. எஞ்சியஆயுதபாணிகளை "ஜன்டுல்லா" என்ற பெயரில் ஒன்று திரட்டி,ஈரானுக்குள்சென்று போரிட அனுப்பி வைக்கப்படுகின்றனர். அமெரிக்கா நேரடியாக உதவிசெய்யா விட்டாலும், ஈரானிய புலம்பெயர் அமைப்புகள் மூலம்பணப் பரிமாற்றம்செய்கின்றது. ஜன்டுல்லா தலைவர் அப்த் எல் மாலிக் ரெகி ஒரு மாஜிதாலிபானும், போதைவஸ்து கடத்தல்காரனுவார்.

ரெகி தலைமையிலான சில நூறு போராளிகள் எல்லை கடந்து ஈரானுக்குள்நுழைந்து, ஈரானிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களை கடத்திகொலைசெய்து வருகின்றனர். இதுவரை ஒரு டசினுக்கும் அதிகமான சிப்பாய்களைகடத்தி கொலைசெய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதைநிரூபிக்கும் வீடியோப்பிரதிகளை அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அனுப்பி வைத்தது. இதே நேரம்ஈரானில் ஸஹடன் நகரத்தில் பெப்ரவரிஇடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில், வண்டியில் சென்ற பதினோரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட குண்டுவெடிப்பின்சூத்திரதாரிகள் என்று இரண்டு ஜன்டுல்லாதீவிரவாதிகளை ஈரானிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அவர்கள் தாம்பாகிஸ்தான் பலுச்சிஸ்தான் பகுதிமுகாமில் பயிற்சி பெற்றதைஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய தொலைக்காட்சி அறிவித்தது. சி.ஐ.ஏ. தீவிரவாதிகளை பின்னணியில் இருந்து இயக்கிவருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ள போதிலும், சி.ஐ.ஏ. இதனை மறுத்துள்ளது.


"அல்கைதாவும் அமெரிக்காவும் நண்பர்கள்!" - ஒரு பயங்கரவாதியின் சாட்சியம்


"அல்கைதாவுடன் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை." - பிடிபட்ட பயங்கரவாதியின் வாக்குமூலம். மேலும் ஈரான் போன்ற நாடுகளில் இயங்கி வரும், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க அரசு ஆயுதங்களும், நிதி உதவியும் வழங்கி வந்துள்ளது. பெப்ரவரி மாதம் ஈரானில் பல பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான "ஜன்டுல்லா" (அல்லாவின் சேனை) என்ற இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் துபாயில் இருந்து கிரிகிஸ்தான் செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது பிடிபட்டார். கிரிகிஸ்தான் மனாஸ் அமெரிக்க இராணுவ முகாமில் ஒரு முக்கிய புள்ளியை சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்த பொழுது, விமானம் ஈரானில் பலவந்தமாக தரையிறக்கப்பட்டது. ஜன்டுல்லா தலைவர் ரிகி கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் தூக்கில் இடப்பட்டார்.
இங்கேயுள்ள வீடியோவில் பிடிபட்ட ஜன்டுல்லா தலைவர் ரிகியின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.


அமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்

Video: 'The War on Democracy' 

மத்திய, தென் அமெரிக்க நாடுகளில், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கங்களை அகற்றுவதற்கு, அமெரிக்கா தொடுத்த போர்களைப் பற்றிய முழுநீள ஆவணப்படம்.

'The War on Democracy' is John Pilger's first major film for the cinema - in a career that has produced more than 55 television documentaries. Set in Latin America and the US, it explores the historic and current relationship of Washington with countries such as Venezuela, Bolivia and Chile. 

"The film tells a universal story," says Pilger, "analysing and revealing, through vivid testimony, the story of great power behind its venerable myths. It allows us to understand the true nature of the so-called war on terror".

FBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)

Sibel துருக்கி மொழிபெயர்ப்பாளராக FBI யில் பணியாற்றியவர். மேலதிகாரிகளுடன் முரண்பட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர். அமெரிக்க உளவுத்துறையில் மேல்மட்டத்தில் நிலவும் ஊழலை பகிரங்கப்படுத்தும் துணிச்சலான பணியில் ஈடுபட்டுள்ளார். 

Most Americans have never heard of Sibel Edmonds, and if the U.S. government has its way, they never will. The former FBI translator turned whistleblower tells a chilling story of corruption at Washington’s highest levels—sale of nuclear secrets, shielding of terrorist suspects, illegal arms transfers, narcotics trafficking, money laundering, espionage…. 

Kill The Messenger
By Sibel Edmonds - Video Documentary: 

துபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது

துபாய், ஒரு காலத்தில் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், விண்ணைத் தொடும் கட்டிடங்களும், கடலுக்குள் செயற்கைத்தீவுகளும் கட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்டின் வளர்ச்சிக்கு வானமே எல்லை, என்று உலகம் பார்த்து வியந்து கொண்டிருந்தது. கடந்த வருடம் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி, துபாயின் பொருளாதாரத்தை வளரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. வானத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்த அடுக்குமாடிக் கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆடம்பர வீடுகளை தாங்கவிருந்த செயற்கைதீவுகள் பல கடலுக்குள் கிடக்கும் கட்டுமானக் குப்பைகளாகிப் போயின. பூமியில் கட்டப்பட்ட ஒரு கனவுலகம் ஒன்றைத் தான், இதுவரை துபாய்வாசிகள் கண்டுவந்தனர். இப்போது மாயை அகன்று வருகின்றது.

பாலைவன முகாம்களுக்குள் வாழும் தொழிலாளர்கள், நகரத்தில் அடுக்குமாடிக் கட்டடங்களில் தமது குடும்பங்களுடன் வசிக்கும் மத்தியதரவர்க்கத்தினர், கோடிகளை முதலீடு செய்த வர்த்தகர்கள்; இப்படிப் பலதரப்பட்டவர்களை கொண்ட வெளிநாட்டவர்களின் சமூகம், துபாயின் மொத்த சனத்தொகையில் 90 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற்தேர்ச்சி பெற்ற அதிக சம்பளம் வாங்கும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கை வளமானதாகவே இருந்தது. இவர்களில் பலர் துபாயில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஆடம்பர வீடுகளை வங்கியில் கடன் எடுத்தாவது வாங்கிட முண்டியடித்தனர். துபாயில் வீடு வாங்குபவர்களுக்கு, நிரந்தர வதிவிட அனுமதிப்பத்திரம் கிடைக்கும் என்று அரசு ஆசை காட்டியது. இந்தக் காரணத்திற்காகவே வீடு வாங்கியவர்கள் நிறையப்பேர். அயல்நாடான ஈரானைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலருக்கு இது கிடைத்தற்கரிய வாய்ப்பாகப் பட்டது. சர்வதேச பொருளாதார தடைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் ஈரானை விட, துபாயில் இருந்து கொண்டு வணிகம் செய்வது பாதுகாப்பானது எனக் கருதினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வீட்டு மனைக்கான கேள்வி அதிகரிக்கவே, கட்டுமானக் கம்பெனிகளும் "பேரீச்சை மர வடிவில்", "உலக வரைபட வடிவில்" என்று செயற்கைத் தீவுகளை நிர்மாணித்து, அதிலே ஆடம்பர வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டங்களை அறிவித்தனர். இவையெல்லாம் கட்டப்படுவதற்கு முன்னரே, வீடுகளை விற்கும் திட்டம் ஆரம்பமாகி விட்டது. முன்கூட்டியே பணத்தை செலுத்த வேண்டும், ஆனால் குடியேறுவதற்கு வருடக் கணக்கேனும் காத்திருக்க வேண்டி வரலாம். "துபாய் முதலாளித்துவத்திற்கு ஆயுசு நூறு" என்று நம்பிய பலர், (Real Estate) புத்தகத்தில் மட்டுமே பார்க்கக்கூடிய கற்பனை வீடுகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கையில் பணமில்லாதவர்கள் வங்கிகளிடம் கடன் வாங்கிக் கட்டினர். "வீட்டின் விலை எப்போதும் கூடிக் கொண்டு தான் இருக்கும், ஒருபோதும் குறையாது" என்று பங்குச்சந்தை சித்தர் சொன்ன அருள்வாக்கு பொதுக்கருத்தாக இருந்த காலமது. அந்தக் காலத்தில் வாங்கிய வீட்டை சில நாட்களின் பின்னர் விற்று லாபம் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். வாங்கி ஒரு மணித்தியாலங் கழித்துக் கூட, சந்தையில் வீட்டின் விலை அதிகரித்திருக்கும் என்று சொல்லப்படுகின்றது.

நிதிநெருக்கடி கட்டுமான கம்பெனிகளையும் விட்டுவைக்கவில்லை. பல நூறு அடுக்குமாடிக் கட்டடங்கள், செயற்கைத்தீவுகள் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாக இருக்கின்றன. இவையெல்லாம் தொடர்ந்து கட்டப்படுமா? எப்போது முடியும்? என்ற கேள்விகளுக்கு எவரிடமும் பதில் இல்லை. வீடுகள் கட்டப்படவில்லை என்பதற்காக, கடன் கொடுத்த வங்கிகள் சும்மா விடவில்லை. லட்சக்கணக்கான டாலர் கடனை மாதாந்த தவணையில் தொடர்ந்து கட்டி வர வேண்டும் என்று நச்சரிக்கின்றன. இதனால் இப்போது பலர் இல்லாத ஒரு வீட்டிற்காக பணம் கட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதுவும் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து வேலை செய்பவர்கள், வீட்டுக்கடனை அடைத்து வரலாம். திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள்?

துபாய் அரசாங்கம் தினசரி 1500 தொழில் விசாக்களை இரத்து செய்வதாக உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்தது. தொழில் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் அந்த செய்தியை மறுக்கவில்லை, அதேநேரம் ஆமோதிக்கவுமில்லை. அந்த தொகை பத்திரிகை தெரிவித்ததை விட அதிகமாகவே இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது. இதைவிட கம்பெனிகள் இதுவரை எத்தனை பேரை பணி நீக்கம் செய்துள்ளன என்ற சரியான விபரம் இல்லை. எப்படியும் ஆயிரக்கணக்கான, அல்லது லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வேலை பறிபோயுள்ளது. இவர்களில் பலர் பணி நிரந்தரம் என்ற நம்பிக்கையில், வீடு அல்லது கார் வாங்குவதற்கு எடுத்த கடன் இப்போது தலைக்கு மேலே நிற்கிறது. இதுவரை வருமானம் இருந்ததால், மாதாமாதம் திருப்பிச் செலுத்திக் கொண்டிருந்தனர். இனிமேல் அது சாத்தியமா? துபாய் சட்டப்படி, வேலை இழந்தவர்களின் தொழில் விசா இரத்து செய்யப்படும். அதற்குப்பின் ஒரு மாதம் மட்டுமே தங்கி இருக்கலாம். அதற்குள் இன்னொரு வேலை தேடிக்கொண்டால் பரவாயில்லை. ஆனால் இதுவரை அதிக சம்பளம் கொடுத்துக் கொண்டிருந்த, எஞ்சினியர்களின் சம்பளத்தைக் கூட அரைவாசியாக குறைக்கும் அளவிற்கு வேலையில்லாப்பிரச்சினை அதிகரித்துள்ளது.

வேலை இழந்ததால், வீட்டுக்கடனை கட்டமுடியாத இக்கட்டிற்குள் மாட்டிக் கொண்டவர்களின் நிலை பரிதாபகரமானது. துபாயில் கடனை அடைக்க முடியாதவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படியே சிறைத்தண்டனை கிடைத்தாலும், வாழ்நாள் முழுவதும் அடிமையாக வேலை செய்து கடனை கட்டி முடிக்க வேண்டி வரும். இதனால் கடனை கட்டமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட பலர் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் போகும் போது கிரெடிட் கார்ட்டில் எஞ்சியிருக்கும் பணத்தையும் எடுத்துக் கொண்டு, தமது விலை உயர்ந்த கார்களை (எவருக்கும் விற்கமுடியாததால்) அங்கேயே போட்டு விட்டு ஓடுகின்றனர். துபாய் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் இவ்வாறு ஆயிரக்கணக்கான வண்டிகள் கைவிடப்பட்டுள்ளன. வேலையிழப்புகள் அதிகரித்து வருவதால், வீடுகள் காலியாகின்றன, வீட்டுமனை விலை சரிகின்றது, தெருக்களில் வாகன நெரிசல் குறைகின்றது. மொத்தத்தில் துபாய் மாநகரின் சில பகுதிகள் யாருமே வசிக்காத இடங்களாக உருமாறுகின்றன.

நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக, அரசாங்கம் புதிய ஊடக சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதன் படி துபாயில் பொருளாதார பிரச்சினை இருப்பதாக, எந்த ஒரு ஊடகமும் மக்களுக்கு தெரிவிக்க முடியாது. அது குறித்த செய்திகளை பிரசுரிப்பவர்கள் அதிக பட்சம் ஒரு மில்லியன் டிர்ஹம் ($ 272000) குற்றப்பணம் கட்டவேண்டும். இதனால் ஊடகங்களும், செய்தியாளர்களும் "தேசப் பொருளாதாரம் என்றும் போல சிறப்பாக இருப்பதாக" பாசாங்கு செய்கின்றனர். இந்த சட்டம் காரணமாக பல வதந்திகள் பரவுகின்றன. இது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கின்றது.

துபாய், "ஐக்கிய அரபு அமீரகம்" என்ற சமஷ்டிக் கூட்டமைப்பிற்குள் உள்ள மாநிலம். அதன் அயலில் உள்ள அபுதாபி மட்டுமே, அனைத்து மாநிலங்களிலும் பணக்கார எமிரேட். அதன் அளவுக்கதிகமான எண்ணை வளம் காரணமாக பெருமளவு தொகை பணத்தை கையிருப்பில் வைத்துள்ளது. எனினும் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துபாய்க்கு உதவ மறுத்து வருகின்றது. இது ஏன் என்ற கேள்வி பலருக்கு புரியாத புதிராக உள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக துபாய் திவாலாவதை அபுதாபி எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், மேலைத்தேய நாடுகளில் உள்ளதைப்போல சுதந்திர கலாச்சாரம் கொண்ட துபாயில், கடும்போக்கு இஸ்லாமிய நெறிமுறைகளை கொண்டு வரும் நோக்கம் இருக்கலாம். அதே நேரம் அமீரகம் முழுவதையும் ஒரே நாடாக, அபுதாபியின் இரும்புக்கர ஆட்சியின் கீழ் கொண்டுவரும் திட்டமும் இருக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், அங்கே வேலை செய்யும் வெளிநாட்டவர்களின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும்.

ஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்




நேற்று ஜெர்மனி, இன்று இஸ்ரேல் 


கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்



அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம் , எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர்.
இது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொரு நகரில் ஒரு வீட்டில் தீவிரவாதிகளின் ரகசியக் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துப்போன பொலிஸ் அதிகாரிகள், அது தமக்கு வைத்த பொறி என்றுணர்வதற்குள் குண்டுவெடித்துக் கொல்லப்பட்டனர். நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக கொலம்பியப் படைகளுக்கு அலோசனை வழங்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகள் இருவர் சென்ற விமானம் இயந்திரக் கோளாறினால் அடர்ந்த காட்டிற்குள் விழுந்து விபத்தில் உயிர் தப்பிய அமெரிக்கர்களை கெரில்லாக்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தனது பிரஜைகளை மீட்பதற்காக கொலம்பியாமீது படையெடுக்கப்போவதாக அமெரிக்க அரசு மிரட்டி வந்தது.

கொலம்பியா ஒழுங்காக தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் ஜனநாயக நாடுதான். இருப்பினும் நகரங்களில் மட்டுமே ஜனநாயகத்தைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நாட்டுப்புறங்களில் ஒன்றில் இராணுவத்தின் அல்லது துணைப்படைகளின் ஆட்சி நடக்கும் பிரதேசமாகவிருக்கும் அல்லது கெரில்லா இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவற்றைவிட மூன்றாவது சக்தியாக போதைவஸ்துக் கடத்தும் மாபியாக் குழுக்கள் தமக்கென தனிப்படைகளுடன் சிறிது காலம் சில தசாப்தங்களாக அட்டகாசம் புரிந்து வந்தன. அரசபடைகளுடனான மோதலில் இறுதியில் பலம் குறைந்து போன மாபியாக் குழுக்கள் இராணுவத்துடன் உடன்பட்டு துணைப்படையை உருவாக்கினார்கள். இதனால் தற்போது இரண்டு சக்திகள் மட்டுமே களத்தில் உள்ளன

இரண்டாவது சக்தியான மார்க்ஸீய கொரில்லாக் குழுக்களின் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாகத் தோல்வியடையாமல் சளைக்காமல் போரிட்டு வரும் கெரில்லாக்களை கொலம்பியாவில் காணலாம். அவர்களின் வெற்றிக்கு பல காரணங்களிருந்தபோதும் நாட்டில் நிலவும் ஆழமான சமூக ஏற்றத்தாழ்வான ஏழை-பணக்கார வர்க்க வித்தியாசம் மிக முக்கியமான காரணி.

1946 ல் நாட்டில் எழுந்த குழப்ப நிலையே இன்றைய கெரில்லாக்குழுக்களின் ஆரம்பம். விவசாயிகள் நில உரிமைக்காகப் போராடினர். தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்தனர். ஆட்சியிலிருந்த கென்சர்வேட்டிவ் கட்சி நிலவுடைமையாளரின் பக்கம் நின்று போராட்டத்தை நசுக்கியது. தொழிற்சங்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியான லிபரல் கட்சியில் இருந்த இடதுசாரிகள் ஆயுதம் ஏந்தினர்.

லிபரல் கட்சி ஆரம்பத்தில் போராட்டத்திற்கு அதரவளித்தது. இருப்பினும் சந்தர்ப்பவாதப் போக்குடைய அந்தக்கட்சி ஆயுதப் போராட்டத்தை அரசுடன் பேரம் பேசப் பயன்படுத்தியது. இதன் விளைவாக 1970 ல் இருகட்சிகளிடையே உடன்பாடு ஏட்பட்டு தேசிய முன்னணி அமைத்தனர். இடதுசாரிகள் இதனைத் தமக்கிழைத்த துரோகமாகப் பார்த்தனர். தேசிய முன்னணி அரசு தெரிவு செய்யப்பட்ட தேர்தல் தினத்தின் பெயரில் எம்-19 என்ற இயக்கம் உருவாகியது. இந்த இயக்க உறுப்பினர்களில் பலர் நகர்ப்புறப் படித்த இளைஞர்கள். இதைத்தவிர நாட்டுப்புறத்தில் உதிரிகளாக இருந்த கொரில்லாக் குழுக்களை இணைத்து இன்னொரு பலம் வாய்ந்த இயக்கம் உருவானது. "கொலம்பிய புரட்சிகர இராணுவம்" (FARC) மிகவும் கட்டுக்கோப்பான மிகப்பெரிய கெரில்லா இயக்கம். இதற்கும் சட்டபூர்வ கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. லிபரல் கட்சியுடன் அதிருப்தியுற்று வெளியேறிய இடதுசாரி லிபரல்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அந்தக்காலத்தில் சோவியத் சார்புடையதாக இருந்ததால், சீனச்சார்பு மாவோயிஸக் கம்யூனிஸ்ட்டுகள் தமக்கென "மக்கள் விடுதலைப் படை" (EPL) என்ற கெரில்லா இயக்கத்தை அமைத்தனர். கொலம்பியாவின் ஆயுதப் போராட்டத்திற்கு கியூபப்புரட்சியும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கியூபப்புரட்சியரல் கவரப்பட்ட சில கொலம்பியர்கள் ஒன்றிணைந்து 'தேசிய விடுதலை இராணுவம்' (ELN) என்ற கெரில்லா இயக்கத்தை ஸ்தாபித்தனர். இந்த இயக்கத்திற்கு கியூபா பல வழிகளிலும் உதவி வந்தது. ELN ன் தனிச்சிறப்பு, அது மாக்ஸீயத்துடன் 'விடுதலை இறையியலையும்' தனது சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. தேவாலயங்களில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த கத்தோலிக்க மதகுருமார் ஆயுதம் ஏந்தி கெரில்லா இயக்கக் கொமாண்டர்களாக மாறிய அதிசயம் கொலம்பியாவில் நடந்தது. சமுக அநீதிகளுக்கெதிராக ஏழைமக்கள் ஆயுதமேந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கூறிய பாதிரியார் கமிலோ தொரஸ் அதனைச் செயலிலும் காட்டி ELN இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார். ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுற்ற பல மதகுருக்கள் அவரின் வழியைப் பின்பற்றினர். புரட்சி, சமூக நீதி பற்றிப்பேசுபவர்கள் நாஸ்திகர்களாக இருக்கத்தேவையில்லை என்பதை முதன்முதலாக கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்தக் கெரில்லாக்குழுக்களின் தோற்றத்தில் மட்டுமல்ல, அவற்றின் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள் தெரிகின்றன. தற்போது ஓய்ந்திருக்கும் எம்-19 பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை டொமினிக்கா நாட்டுத் தூதுவராலயத்தைக் கைப்பற்றிப் பல நாட்டுத் தூதுவர்களை இரண்டுமாதகாலமாக பயணக்கைதிகளாக வைத்திருந்தனர்.இன்னொருமுறை பால் லொறியைக் கடத்திச் சென்று சேரிவாழ் ஏழைமக்களுக்கு இலவசப் பால் விநியோகம் செய்தனர். ELN பொருளாதார இலக்குகளைக் குறிவைக்கிறது. எண்ணைவிநியோகப் பாதையில் குண்டுவைத்து நாசம் செய்தல், மின்மாற்றிகளை நகர்த்தல் போன்றவற்றின் விளைவாகப் பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் இயக்கத்திற்கு நிதியுதவி செய்து தன்னைக் காத்துக்கொண்டது. இதுதவிர முக்கிய புள்ளிகளைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்து பணம் கறப்பதையும் ELN தனது நிதி சேகரிப்பு நடவடிக்கையாகக் கருதுகிறது. பணக்காரரிடமிருந்து பணம் கறப்பதற்கு அது(கடத்தல்) சிறந்த வழி என்று நியாயப்படுத்தப்படுகின்றது.

FARC சிறு கெரில்லாக்குழுவாக ஆரம்பித்த இயக்கம். இன்று பெரிய இராணுவமாக வளர்ந்துள்ளது. இதனால் சிறு இராணுவ முகாம்கள் காவல் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்கியழித்து, குறிப்பிடட்ட பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 1995 க்கும் 1999 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய இராணுவ முகாம்களும் அடுத்தடுத்து வீழ்ந்தன. அரசபடைகள் பின்வாங்கி ஓடின. இறுதியில் சுவிட்சர்லாந்து அளவிலான பிரதேசத்தை FARC இடம் விட்டுக்கொடுத்துவிட்டு, அரசாங்கம் பேச்சுவார்தை நடாத்தியது. கொலம்பியாவின் மத்திய, தென்பகுதிகளில் பல FARC ன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக அறியப்பட்டுள்ளன. அங்கே பகலில் இராணுவத்தினர் ஆட்சியும் இரவில் FARC ன் ஆட்சியும் நடக்கிறது. கொலம்பியாவின் வடக்குப்பகுதியில் ELN ஆதிக்கம் செலுத்துகிறது. ELN க்கும் FARC க்கும் இடையில் நட்புரீதியான புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதுவரை இரண்டுக்குமிடையில் எந்த வகையான பகைமுரண்பாடுகளும் வெடிக்கவில்லை.

FARC ன் 30 வீதமான போராளிகள் பெண்கள். போர்முனைகளில் ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுகின்றனர். இராணுவப்பயிற்சியும் சமமாகவே வழங்கப்படுகின்றது. பல பெண்கள் கொமாண்டர் தரத்திற்கு உயர்ந்துள்ளனர். ஆண்-பெண் போராளிகளுக்கிடையிலான திருமண பந்தம் தொடர்பான விதிகள் சிக்கலானவை. இயக்கத்திற்குள் காதலிப்பதற்கும், ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர் தனது காதலை பகிரங்கப்படுத்தவேண்டும். தொடர்ந்து அவர்களின் விருப்பப்படி சேர்ந்துவாழ விடப்படுவர். ஆனால் அது நிலையானதல்ல. கடமை அழைக்கும்போது தமது உறவை முறித்துக்கொண்டு களத்திற்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாக குழந்தை பெற்று வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தனது துணைவி மீது வன்முறை பிரயோகிக்கும், அல்லது வல்லுறவு செய்யும் ஆண்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

கொலம்பியாவின் அரசியல் அமைப்பை "இரு கட்சி ஜனநாயக முறை" என்று அழைக்கின்றனர். இதுவரை ஒன்றில் கென்சர்வேட்டிவ் கட்சி அல்லது லிபரல் கட்சி என்று மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. நாட்டின் உள்நாட்டுப்போர் அடிக்கடி தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்ப்படுகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் சமாதானம் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிதுகால யுத்த நிறுத்தம் ஏற்பட்டுப் பேச்சுவார்த்தை நடக்கும். பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பேச்சுவார்த்தை குழம்பி பழையபடி யுத்தம் நடக்கும். கடந்த முப்பது வருடங்களாக சண்டையும் சமாதானமும் இதே பாணியில் தொடர்கிறது. அரச படைகளின் ஜெனரல்கள் பொதுவாகவே கெரில்லா இயக்கங்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை எதிர்த்து வருகின்றனர். இந்தக் கடும் போக்காளரின் பின்னால்தான் அமெரிக்க அரசும் நிற்கிறது. கடந்த ஆண்டு "Plan Colombia" என்ற பெயரில் அமெரிக்கக் காங்கிரஸ் அனுமதியுடன் பெருமளவு பணம் கொலம்பிய இராணுவத்தை பலப்படுத்தச் செலவிடப்பட்டது. அதிநவீன black Hawk ஹெலிகப்டர்கள், இரவில் பார்க்கும் உளவுவிமானங்கள் என்பன இந்த உதவியில் அடக்கம். மேலும், அமெரிக்கா கொலம்பியப் போரை "பயங்கரவாத்திற்கெதிரான போர்" என்றே சொல்லி வருகின்றது.

பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் முன்னெடுக்கப்பட்ட கடைசிச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் (FARC தலைவர் மருலண்டாவும், அன்றைய ஜனாதிபதி பஸ்த்ரானாவும் காட்டுக்குள் சந்தித்துக் கதைத்தனர்) குழம்பிய பின்னர் கெரில்லாக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டுவிட்டு காடுகளுக்குள் பின்வாங்கினர். போகும்போது எந்தவொரு அரசாங்க நிர்வாகத்தையும் விட்டுவைக்காமல் அழித்துவிட்டுச்சென்றனர். படைப்பிரிவுகளின் கொமாண்டர்கள் வௌ;வேறு இடங்களில் இருந்தாலும் தமக்கிடையிலான ரேடியோத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டனர். புதிய யுக்தியாக கொலம்பியாவில் மட்டுமல்லாது எல்லை கடந்து பிறேசிலிலும் வெனிசுலாவிலும் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். உள்நாட்டில் யுத்த தந்திரத்தை மாற்றிக் கொண்டனர். வழக்கமான இராணுவ முகாம் தாக்குதல்களைவிட்டு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குண்டு வைத்து தகர்க்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறுகிய காலத்திற்குள் குறைந்தது 50 பாலங்களாவது தகர்க்கப்பட்டள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாற்பதாயிரம் போர்வீரர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கெரில்லாக்கள் பெருமளவு வெடிமருந்துப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. இதைவிட அதிர்ச்சியைக் கொடுத்த விடயம், FARC கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பல வெளிநாட்டவர்களும் காணப்படுவதாக வரும் செய்திகள். மூன்று ஐரிஸ்காரர்கள் இராணுவத்தால் பிடிபட்டபின்புதான், ஐரிஸ் குடியரசு இராணுவ (IRA) உறுப்பினர்கள் கொலம்பியக் கெரில்லாக்களுக்குக் குண்டு வைப்பதில் பயிற்சியளிப்பது தெரியவந்துள்ளது.

அரசபடைகளுடன் தொடர்புடைய துணைப்படையான AUC க்கு அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வருகி;ன்றனர். சில வெளிநாட்டுக் கூலிப்படைகளும் தமது சேவையை வழங்கி வருகின்றனர். அரசாங்கத்திற்குக் கட்டுப்படாத துணைப்படைக்கு நிலப்பிரபுக்களும், பெருமுதலாளிகளும் தாராளமான நிதி வழங்கி வருகின்றனர். பெருமளவு மனித உரிமை மீறல்களுக்கு துணைப்படையே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கெரில்லாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் துணைப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

"ஒன்று, இரண்டு, மூன்று... வியட்னாம்களை உருவாக்குவோம்" என்றார் ஆர்ஜென்தீனப் புரட்சியாளர் சே குவேரா. இரண்டாவது வியட்நாம் கொலம்பியாவில் நிதர்சனமாகி வருகின்றது. நிலைமை இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில்கெரில்லாக்கள் நாடு முழுவதையும் பிடித்துவிடுவார்கள் என்று உண்மை நிலையைச் சொல்லியது அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை. என்ன விலை கொடுத்தாகிலும் அதைத் தடுக்க அமெரிக்க அரசு பெரும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. பல ஆண்டுகளாகவே "போதைப் பொருளுக்கெதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்க உதவி கொலம்பிய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்தப் போர்வையின் கீழ் நடக்கும் கதையோ வேறு. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படைப்பிரிவு கெரில்லாக்கள் நடமாட்டத்தையும் கண்காணித்தது. அவர்களின் அக்கறை முழுக்க வேறு எங்கோ இருந்ததாக கொலம்பிய அரச அதிகாரிகளே குறைப்பட்டனர். ஹெரோயின் உற்பத்திக்கான கொக்கோச் செடிகளை அழிக்க அனுப்பப்பட்ட விமானங்கள் விசிறிய மருந்து, பிற உணவுப்பயிர்களையும் அழித்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுவரைகாலமும் பின்னால் நின்று உதவிய அமெரிக்க அரசு தற்போது நேரடியாகத் தலையிடப்போவதாகப் பயமுறுத்தி வருகின்றது. வரப்போகும் அமெரிக்க இராணுவத்தை எதிர்பார்த்துக் கொண்டு கொலம்பியப் போராளிகள் காத்திருக்கின்றனர்.