ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இனிய நத்தார் வாழ்த்துக்கள்



ஆதரவு அற்றோருக்கு அடைக்கலமாய் அகிலம் முழுவதுக்கும் அன்புத் தெய்வமாய் பாரம் சுமப்போருக்கு சுமைதாங்கியாய் வந்துதித்த பாலன் யேசு பிறந்த இனிய நத்தார் வாழ்த்துக்களை எமது உறவுகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி சாந்தியும் சமாதானமும் மிக்க தேசமொன்றில் வளமும் நிறைவும் கொண்ட நல்வாழ்விற்காய் இறையாசி வேண்டி பிரார்த்திக்கும் நண்பன்

அமைதியின் இரவில்
அமலன் பிறந்தார்
அன்னை மரியின்
மடியினில் தவழ்ந்தார்

வாருங்கள் அனைவரும்
வணங்கிடுவோமே
வள்ளல் யேசுவை
தொழுதிடுவோமே

உலகுக்கு ஒளியானவர்
உயிருக்கு வழியானவர்
உனக்கும் எனக்கும் பலியானவர்
உண்மை வடிவானவர்

வாழ்வில் ஜீவன் ஆனவர்
வள்ளல் யேசு வடிவானவர்
வழியாய் என்றும் இருப்பவர்
வருத்தம் நீக்கி காப்பவர்

ஏழை எழிய மக்களையே
என்றும் அவரே அழைக்கிறார்
எங்கே நீயும் என்று தான்
ஏங்கி கொண்டே இருக்கிறார்

திங்கள், 22 நவம்பர், 2010

செயற்கை பூகம்பம் - வல்லரசுகளின் விபரீத விளையாட்டு

செயற்கை பூகம்பம் - வல்லரசுகளின் விபரீத விளையாட்டு

லட்சக்கணக்கான உயிர்கள் பலியான ஹெய்ட்டி பூகம்பம், அமெரிக்க கடற்படையின் நவீன ஆயுதம் ஒன்றை பரீட்சித்ததால் விளைந்த பேரழிவு!" ரஷ்யாவின் வட-துருவ கடற்படையின் உறுதிப்படுத்தாத அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ரஷ்ய அரசு உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளாத அறிக்கையை மேற்கோள் காட்டி, வெனிசுவேலா தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

மார்ச், 2002 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் பதிவான 7.2 magnitude நிலநடுக்கத்திற்கு அமெரிக்க ஆயுதமே காரணம் என ரஷ்யா குற்றம் சுமத்தியிருந்தது. செயற்கையாக பூகம்பத்தை தோற்றுவிக்கும் ஆயுதம் அமெரிக்காவிடம் மட்டுமல்லாது, ரஷ்யாவிடமும் இருக்கின்றது. 2002 ம் ஆண்டு, ஜோர்ஜியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு ரஷ்ய நாசகார ஆயுதமே காரணம் என, ஜோர்ஜிய பசுமைக் கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது.

வெனிசுவேலா ViVe தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் சாவேஸ், "அமெரிக்கா பரிசோதனை செய்த நவீன நிலநடுக்க ஆயுதம் ஹெய்ட்டியில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தியது. இந்த ஆயுதத்தை ஈரானில் பிரயோகித்து செயற்கையாக நிலநடுக்கம் ஏற்படுத்தி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான ஒத்திகையாகவே பரிசோதனை அமைந்திருந்ததாக" குற்றஞ்சாட்டினார். (இது குறித்து ரஷ்ய டுடே ஒளிபரப்பிய செய்தியறிக்கை.)

ரஷ்ய அறிக்கையை மேற்கோள் காட்டிய ViVe தொலைக்காட்சி: "அமெரிக்கா இதற்கு முன்னரும் கலிபோர்னியா அருகில் பசுபிக் சமுத்திரத்தில் ஆயுதப் பரிசோதனை நடத்தியதாகவும்,6.5 magnitude நிலநடுக்கம் பதிவாகியதாகவும்..." தெரிவித்தது. கலிபோர்னிய நிலா நடுக்கத்தில் உயிரிழப்புகள் ஏற்படா விட்டாலும், சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. வெனிசுவேலா செய்தியறிக்கையின் பிரகாரம் "ஹெய்ட்டி நிலநடுக்கத்தால் வரப்போகும் விளைவுகளை அமெரிக்க அரசு முன்கூட்டியே எதிர்பார்த்திருக்கும். அமெரிக்க தென் பகுதி கட்டளைத் தளபதி ஜெனரல் கீன் ஏற்கனவே (நிவாரண வேலைகளை பொறுப்பேற்க) ஹெய்ட்டி அனுப்பபட்டிருந்தார்."



இயற்கை அனர்த்தங்களான நிலநடுக்கம், வெள்ளம், போன்றவற்றை செயற்கையாக உருவாக்க கூடிய ஆராய்ச்சி மையம், High Frequency Active Auroral Research Program (HAARP) ஏற்கனவே அமெரிக்காவில் இயங்கி வருகின்றது. இந்த ஆராய்ச்சி மையம் செயற்கையாக காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதாக ஊர்ஜிதப்படுத்தப் படாத குற்றச்சாட்டு உள்ளது. 1997 ம் ஆண்டு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வில்லியம் கோகன் தெரிவித்த கூற்று ஒன்றும் இங்கே நினைவு கூறத் தக்கது. "தொலைதூர மின்காந்த அலைகளை ஏவி செயற்கையாக பருவநிலை மாற்றம், நிலநடுக்கம் போன்றவற்றை தோற்றுவிக்கும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்" குறித்து கவலை அடைவதாக தெரிவித்திருந்தார்.

திங்கள், 1 நவம்பர், 2010

தீபாவளி வாழ்த்துக்கள்.


தீபங்களின் ஒளியில்
இருள் ஒழியும்;
தீபாவளித் திருநாள்
தீமை வெல்லப்பட்டதின்
ஒரு அடையாளம்;
ஒருவருக்கு ஒருவர்
வாழ்த்துக்கள் சொல்லி,
இன்பங்களை பகிர்ந்து,
நன்மையின் வெற்றியை
கொண்டாடி மகிழ்வோம்;
பட்டாடை உடுத்தி,
பட்டாசுகள் கொளுத்தாமல்
அப்பணத்தை துன்புற்றவர்களுக்கு
கொடுத்து பலகாரங்கள் உண்டு,
எங்கும் மகிழ்ச்சியாய்
நன்மையை வரவேற்போம்.
எல்லோரும் எல்லா
வளமும் பெற்று
ஏழைகளின் இல்லங்களில்
ஏற்றம் மிகுந்து,
என்றும் இனிமை மிகுந்து
எங்கும் ஒளிமயமாய் வாழ,
தீபாவளி நன்னாள்
வழி காணட்டும்;
கதிரவன் உதயத்தில்
வெளிச்சம் பெருகுவது போல்
தீபாவளித் திருநாளில்
நன்மைகளும் சந்தோசங்களும்
வெள்ளமென பெருகி
எங்கும் பரவட்டும்.

திங்கள், 25 அக்டோபர், 2010

ஒரு வல்லரசின் பழிவாங்கல்

மேலைத்தேய நாசகார நாகரீகம்
"அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்? நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம். எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்." -"நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்." -"தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்."

மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவும், அதன் மேற்குலக கூட்டாளிகளும், கூறிவரும் நியாயங்கள். "நாகரீக உலகம்", "காட்டுமிராண்டிகளின் உலகம்" இந்த சொற்பதங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். அமெரிக்காவின் தீமைக்கெதிரான, அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆப்கானிஸ்தான் படையெடுப்போடு மட்டும் நின்றிருந்தால், "ஒரு வல்லரசின் பழிவாங்கல்" என்பதோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஈராக், வட-கொரியா என்று ஒன்றோடொன்று சம்பந்தப்படாத நாடுகள் மீதும் "நாகரிக உலகம்" போர் தொடுத்தது, அல்லது திட்டமிடுகிறது. மேற்குலக மக்கள் ஆதரவு "நாலாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கொள்கை" அடிப்படையில் ஒன்று திரட்டப்படுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்த எட்டு வருடங்களில் உலகம் அடியோடு மாறி விட்டது. "புஷ் ஆட்சிகாலம் மறைந்தாலும், அதன் தாக்கம் இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்." என்று புஷ்சின் சுயசரிதையை திரைப்படமாக்கிய ஒலிவர் ஸ்டோன். அமெரிக்கா மட்டும் தனது சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை மீளக் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவிலும் "கிறிஸ்தவ கலாச்சாரப் பெருமை" பேசும் வலதுசாரி சக்திகள் தலையெடுத்தன. சில நேரம் ஆட்சியில் இருப்பவர்களே, "பண்பாடு" "வாழும் நெறி" பற்றி தமது பிரசைகளுக்கும், குடியேறிய வெளிநாட்டவர்களுக்கும் வகுப்பெடுத்தனர். வந்தேறுகுடிகள் ஐரோப்பிய கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நம் நாட்டு மக்களில் பலர் தமது (இந்தியக்) கலாச்சாரமே உயர்ந்தது என்றும், ஐரோப்பியர்கள் தம்மை விடக் கீழான சீரழிவுக் கலாச்சாரம் கொண்டவர்கள் என்றும் ஒரு தலைப்பட்சமாக கருதுகின்றனர். மறு பக்கத்தில் ஐரோப்பியர்கள் தமது கலாச்சாரமே உலகில் சிறந்தது, மற்றவை எல்லாம் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று கருதுகின்றனர்.

மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் இப்போதும் "கலாச்சார மோதல்" பற்றி கற்பிக்கப்படுகின்றது. அதாவது நாகரீகமடைந்த மேற்கத்திய கலாச்சாரம், உலகின் பிற காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் இறுதியில் மேற்கத்திய கலாச்சாரம் வெற்றி பெறும். ஏனெனில் இது தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம். கறுப்பர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள், இவர்களுடன் ரஷ்யர்கள் கூட "பல குறைபாடுகளைக் கொண்ட சமூகங்களாக" சித்தரிக்கப்படுகின்றனர். அரசுகள், பல்கலைக் கழகங்கள், ஊடகங்கள், இப்படி மக்களை வழிநடத்தும் கருவிகள் யாவும் "காட்டுமிராண்டிகளை நாகரீகப்படுத்தும் தேவையை" சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரமின்மை, ஊழல், போர்க் காலக் குற்றங்கள், சித்திரவதை, சர்வாதிகாரம், பயங்கரவாதம்.... இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் குறிப்பிடப்படும் எதிர்மறையான விடயங்கள் யாவும், காட்டுமிராண்டி நாடுகளின் விசேட குணங்கள். இந்த நாடுகளைச் சேர்ந்த நாம் அப்படி நினைக்காமல் விடலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்படும் அப்பாவி மக்கள், அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாட்டு மாணவர்களுக்கு வரலாறு ஒரு கட்டாய பாடம். அந்தப் பாடத்தில் சித்தி அடையாமல், பல்கலைக்கழகம் செல்ல முடியாது. வரலாற்றுப் பாடத்தில், ஐரோப்பிய சரித்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஐரோப்பாவின் சரித்திரம் கிரேக்கத்தில் இருந்து தொடங்குவதாக அனைத்து நூல்களும் போதிக்கின்றன. நோர்வே முதல் இத்தாலி வரை பல்வேறு மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஐரோப்பிய சரித்திரம் ஒரே மாதிரித் தான் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் மறைந்த பிறகு, அங்கே எப்படி "நடுநிலை வரலாற்றுப் பாடம்" எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். சந்தேகத்திற்கிடமின்றி மேற்குலக கண்ணோட்டத்தில் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டிருக்கும். ஐரோப்பிய நாடுகள், அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தற்போது தாம் முன்பு ஒரே வரலாற்றைக் கொண்டிருந்ததாக சொல்வதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அமெரிக்காவில் சென்று குடியேறிய ஐரோப்பிய வம்சாவழியினரே, அங்கே அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் அமெரிக்க நாகரீகமும் கிரேக்கத்தில் இருந்தே ஆரம்பமாவது தவிர்க்க முடியாதது.

அடிக்கடி "கிரேக்கதைப் பாருங்கள்" என்று சுட்டிக் காட்டுகிறார்களே, அங்கே அப்படி என்ன இருந்தது? "ஜனநாயகம்", "தனி மனித சுதந்திரம்" இந்த வார்த்தைகள் இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் பயன்படுத்தினர். கிரேக்க மொழியில் னுநஅழள என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே "Democracy" என்ற மக்கள் ஆட்சி அங்கே நிலவியது. குறிப்பாக ஏதென்ஸ் என்ற நகர-தேசம் மன்னர் ஆட்சியற்ற குடியரசாக இருந்தது. அங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தது. தனி மனித சுதந்திரம் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாக சொன்னால், இன்றுள்ள மேற்கத்திய நாடுகளைப் போல பண்டைய கிரேக்கம் காட்சியளித்தது. இவையெல்லாம் சரித்திர பாடப் புத்தகங்களில் எழுதப் பட்டிருப்பதின் சாராம்சம். மேல்நிலைப் பள்ளியில் போதிக்கப்படும் "ஜனநாயக சித்தாந்தம்", பெரியவர்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. இந்நாடுகளில் ஆசிரியர்கள் இப்படித்தான் கற்பிக்க வேண்டுமென்று, கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப் படுகின்றனர்.

2001 ம் ஆண்டு, நியூ யார்க் தாக்குதலின் பின்னர், அன்றைய ஜனாதிபதி புஷ் ஆற்றிய உரை, பல உலக நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய மக்கள் மட்டும் தமது "ஜனநாயகப் பாரம்பரியம்" தாக்கப் பட்டதாகவும், தமது பழம் பெருமையை மீட்க வேண்டும் என்றும் சபதமெடுத்தனர். புஷ்ஷின் உரை, பண்டைய கிரேக்கத்தின் அறைகூவலை மீண்டுமொரு முறை எதிரொலித்தது. 2500 வருடங்களுக்கு முன்னர், கிரேக்கம் மீது ஈரானில் இருந்த பாரசீகப் பேரரசு படையெடுக்க எத்தனித்தது. கிழக்கே இருந்த பாரசீக நாட்டை சேர்ந்தவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து தான், கிரேக்கம் தனது மக்களை அணி திரட்டியது. "அவர்கள் ஏன் எம்மை தாக்குகிறார்கள்? எமது சிறந்த நாகரீகமான ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டுள்ளனர்." போருக்காக ஏதென்ஸ் அரசு கூறிய காரணங்கள் அவை. ஆமாம், பண்டைய கிரேக்கர்களும், நம் காலத்து அமெரிக்கர்களைப் போல, தமது ஜனநாயகம், சுதந்திரம் குறித்து பெருமை கொண்டிருந்தனர்.

பண்டைய கிரேக்கத்தில் ஜனநாயகம் நிலவியது உண்மை தான். ஆனால் அந்த ஜனநாயகம் நமக்கெல்லாம் தெரிந்த "பல கட்சி அரசியல் முறை" அல்ல. கட்சி என்றால் என்னவென்று அறிந்திராத காலம் அது. ஏதென்ஸ் பிரசைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து வாக்களிக்கும் உரிமை இருந்தது. ஆனால் அந்த "சர்வசன வாக்குரிமை" ஆண்களுக்கு மட்டுமே இருந்த சுதந்திரம். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. தனி மனித சுதந்திரம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப் பட்டே இருந்தது. பண்டைய கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடுதுஸ் (கி.மு. 484-420) எகிப்தில் தான் கண்டவற்றை பற்றி எழுதிய குறிப்புகளில் இருந்து: "எகிப்தியப் பெண்களுக்கு சந்தைக்கு சென்று வரவும், கடைகளை நடத்தவும் சுதந்திரம் இருந்தது. அதற்கு மாறாக கிரேக்கப் பெண்கள், கணவனில் தங்கியிருந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்தனர்." பண்டைய கிரேக்கத்தில் அடிமைகள், எஜமானின் சொத்தாக பார்க்கப்பட்டனர். ஒரு சில இடங்களில், பணம் சேர்க்க முடிந்த அடிமைகள் சுதந்திரம் வாங்கிக் கொண்டனர். அப்போது கூட உள்ளூர் பிரசைகள் செய்ய விரும்பாத (உதாரணம்: துறைமுகத்தில் மூட்டை சுமத்தல்) வேலைகளை மட்டுமே செய்தனர். இவர்களுக்கும், வேலைக்காக புலம்பெயர்ந்து வந்து குடியேறிய மக்களுக்கும், ஏதென்ஸ் நாட்டு பிரசாவுரிமை கொடுக்கப்படவில்லை. அந்த மக்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் என்பன அர்த்தமற்ற வார்த்தைகள்.

சில வருடங்களுக்கு முன்னர் ஹாலிவுட் எடுத்த "300" என்ற தலைப்பிலான படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஒரு சரித்திரக் கதையை மையமாக வைத்து வரையப்பட்ட சித்திரக்கதையை தழுவி அந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தது. "300" திரைப்படம் ஈரானியர்களை வில்லன்களாக சித்தரிப்பதாக விமர்சனங்கள் வந்தன. அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்றது ஈரான். அப்படி என்ன அந்தப் படத்தில் இருக்கிறது? பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நாட்டிற்கு தெற்கே இருந்த ஸ்பார்ட்டா என்ற தேசத்தின் வீரதீரக் கதை தான் "300". பாரசீக ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து, 300 ஸ்பார்ட்டா வீரர்கள் தீரத்துடன் போரிட்டு மடிவது தான் கதை. பாரசீக நாட்டு வீரர்கள், கறுப்பர்கள் போல, அல்லது அரேபியர் போல தோன்றுகின்றனர். அவர்களின் செயல்கள் காட்டுமிராண்டித் தனமானவை. சுருங்கக் கூறின், மேற்கத்திய நாகரீகத்திற்கும், கிழக்கத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான போர். இன்றைய இளம் தலைமுறைக்கு இன மேலாதிக்க அரசியல் பிரச்சாரம் செய்ய, ஹாலிவுட் கண்டு பிடித்த சரித்திரக் கதை அது.

ஸ்பார்ட்டா மக்கள் எந்த அளவு நாகரீகமடைந்திருந்தனர்? ஏதென்ஸ் இற்கும், ஸ்பார்ட்டாவிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. முரண்பாடுகள் முற்றி இவ்விரு அரசுகளுக்கும் இடையில் சில நேரம் யுத்தம் மூண்டது. "கிரேக்கர்களின் உள்நாட்டு யுத்தம்" என்று அப்போது அது அழைக்கப்பட்டது. ஏதென்ஸ் நகரமயமாக்கப்பட்ட சமூகமாக இருந்தது. அதற்கு மாறாக ஸ்பார்ட்டா கிராமங்களின் தேசம். ஆனால் அதி தீவிர இராணுவமயப்பட்ட பாஸிச சமூகத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தமது ஆண் குழந்தைக்கு பத்து வயதானவுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும். அன்றில் இருந்து இராணுவ முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் இளைஞர்களுக்கு, கடுமையான இராணுவ பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தமது பதின்ம வயதில் சித்தி அடையும் போது, தயக்கத்தைப் போக்குவதற்காக, கண்ணில் படும் அடிமையை கொலை செய்யுமாறு பணிக்கப்படுவர்.

ஸ்பார்ட்டாவில் அடிமைகளின் உரிமை பற்றி யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இராணுவ பயிற்சிக்காக கொல்லப்பட்டும் பலியாடுகள் அவர்கள். இந்த அடிமைகள் முந்தின போர்களில் வெற்றி கொல்லப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்கள். அதாவது போர்க் கைதிகள். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அடிமைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழக் கூடாது என்பதற்காக, இராணுவ பயிற்சியின் போது வேட்டையாடப் பட்டனர். ஒரு முறை ஸ்பார்ட்டாவில் ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி, அடிமைகளை விடுதலை செய்தது. அடிமைகள் ஒன்று திரண்டு, ஸ்பார்ட்டா அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். ஐந்து வருடங்களாக அந்தக் கிளர்ச்சியை அடக்க முடியவில்லை. இறுதியில் ஏதென்ஸின் மத்தியஸ்தத்தின் பின்னர், கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறிய பின்பே, அமைதி திரும்பியது. அந்த கிளர்ச்சிக்குப் பின்னர், ஸ்பார்ட்டா அதிகாரிகள், அடிமைகளை ஓரளவு மனிதத்தன்மையுடன் நடத்தலாயினர்.
இன்றைய மேற்குலக அரசுகளும், அன்றைய கிரேக்க அரசுகளும் பிரச்சாரம் செய்தது போல, கிழக்கில் இருந்த பாரசீக நாட்டில், காட்டுமிராண்டிக் கலாச்சாரம் நிலவவில்லை. பாரசீகப் பொருளாதாரம் அடிமைகளை நம்பி இருக்கவில்லை. சமுதாயத்தில் மிக மிகக் குறைவான அடிமைகளே இருந்தனர். மேலும் சீருஸ் சக்கரவர்த்தி போட்ட சட்டம், அடிமை முறையை தடை செய்திருந்தது. கி.மு. 6 ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சீருஸ் சக்கரவர்த்தியின் சட்டம், "உலகின் முதலாவது மனித உரிமைகள் சாசனம்" என்று புகழப் படுகின்றது. ஐ.நா.மன்றம் அதனை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. "பிற மதங்கள் மீதான சகிப்புத் தன்மை, அடிமை முறை ஒழிப்பு, விரும்பிய தொழிலை செய்யும் உரிமை...." போன்ற தனி மனித சுதந்திரங்கள் அந்த சாசனத்தில் உறுதிப்படுத்தப் பட்டிருந்தன. ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் இன்னொரு பேரரசின் தலைநகராக இருந்த பாபிலோன் சீருஸ் சக்கரவர்த்தியின் படைகளால் கைப்பற்றப்பட்டது. அப்போது கூட, பாபிலோன் மக்களுக்கு தாம் ஆக்கிரகிக்கப் பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் எழாதபடி ஆளப்பட்டனர். சக்கரவர்த்தியின் உத்தரவின் பிரகாரம், பாபிலோனியர்கள் தமது சொந்த மதத்தை வழிபட சுதந்திரம் வழங்கப்பட்டது. அத்தோடு எந்தவொரு பாபிலோனியனும் அடிமையாக்கப் படவில்லை.

மேற்குலகம் போதனை செய்வதைப் போல, அவர்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்தவர்களுமல்ல, மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகளும் அல்ல. வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து கற்பதால் தான் இந்த குளறுபடி ஏற்படுகிறது. இன்று ஊடகங்களில் சித்தரிக்கப்படும் "காட்டுமிராண்டிக் குணாம்சங்கள்" எல்லாம் ஐரோப்பிய வரலாறு கண்டு வந்தவை தான். உதாரணத்திற்கு, தற்கொலைத் தாக்குதல்கள். இன்று நீங்கள் சாதாரண ஐரோப்பியனை (அல்லது அமெரிக்கனை) கேட்டால், "பைத்திக்காரத் தனம்" என்று ஒரு வார்த்தையில் பதிலளிப்பார்கள். 1831 ம் ஆண்டு, நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் பிரிவினைக்காக யுத்தம் செய்த காலத்தில், நடந்த சம்பவமொன்று தற்கொலைப் பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும். யன் வான் ஸ்பைக் என்ற ஒல்லாந்து வணிகன், எதிரிப்படைகளிடம் தனது கப்பல் அகப்படும் தருணத்தில், தனது கப்பலை வெடிக்க வைத்து தானும் மாண்டான். அதிகம் பேசுவானேன், முன்னர் குறிப்பிட்ட 300 ஸ்பார்ட்டா வீரர்கள் மரணத்தை எதிர்நோக்கிச் சென்ற தற்கொலைக் கொலையாளிகள் தான்.
இன்றைய அமெரிக்கா தன்னை பண்டைய கிரேக்கத்துடன் ஒப்பிடும் ஒவ்வொரு தடவையும், யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருவதாக அப்பாவி வேஷம் போடுகின்றது. அதாவது தனக்கு ஏகாதிபத்திய ஆதிக்க வெறி ஒரு போதும் இருக்கவில்லை என்பது போல. இந்த விடயத்தில் கூட நம் காலத்து ஏகாதிபத்தியம், பண்டைய கிரேக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அனேகமாக "கிரேக்க ஏகாதிபத்தியம்" குறித்து சரித்திர நூல்கள் குறிப்பிடுவதில்லை. "அலெக்சாண்டர் என்ற தனி மனிதனின் உலகை ஆளும் ஆசை" பற்றி மட்டும் எடுத்துக் கூறுகின்றன. வட கிரேக்க, மசிடோனியா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர், பாரசீக நாட்டை அடக்குவதாக கூறித் தான் அனைத்து கிரேக்கர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டான். போரில் பாரசீக பேரரசை தோற்கடித்த பின்னர், இளம் வயதில் அலெக்சாண்டர் மாண்டது உண்மை தான். ஆனால் அத்துடன் சரித்திரம் முற்றுப் பெறவில்லை. அலெக்சாண்டரின் பின்னர் அந்தப் பேரரசை நிர்வகித்தவர்கள் அனைவரும் கிரேக்கர்கள். இன்றைய ஈரான் முதல் எகிப்து வரை கிரேக்க நகரங்கள் தோன்றியிருந்தன. அங்கெல்லாம் கிரேக்கர்கள் சென்று குடியேறினர். உள்ளூர் மக்கள் தொழிலுக்காக கிரேக்க மொழி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கிரேக்க காலனிகளின் மக்கள், உள்ளூர் மக்களுடன் ஒன்று கலக்காது, உயர்ந்த அந்தஸ்தைப் பேணி வந்தனர்.

கிரேக்க காலனிய காலகட்டத்தில் இருந்து, அதாவது 2500 வருடங்களாக, ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள், மேலைத்தேய நாகரீகத்தை வியப்புடன் நோக்கினர். வேறுவிதமாக கூறினால், மேற்கத்திய மேலாண்மைக்கு அடிபணிந்தனர். தமது சொந்த கலாச்சாரம் பிற்போக்கானது என்றும், மேலைத்தேய கலாச்சாரம் முற்போக்கானது என்று நம்பினார். நமது நாட்டில், தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடும், ஆங்கிலப் பெயர் சூட்டிக் கொள்வதை பெருமையாகக் கருதும், நடுத்தர வர்க்கத்தை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அப்படியானவர்கள் எல்லா ஆசிய நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அதாவது மேலைத்தேய நாகரீகம், தானே உலகில் உயர்ந்தது, மற்றதெல்லாம் காட்டுமிராண்டிகளின் நாகரீகம், என்பதை நிலை நாட்ட பாடுபடுகின்றது. அந்தக் கருத்துக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் மக்களும் இருந்தனர்ஃஇருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த சிந்தனை மாறி வருகின்றது.


குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மேற்குலகிடம் இருந்து தமக்கு கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி விட்டன. அவர்கள் மேற்குலக நாகரீகத்தை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற மறுக்கிறார்கள். சிறந்ததை மட்டும் பின்பற்றுவோம், மற்றவற்றை விட்டு விடுவோம் என்று நடந்து கொள்கின்றனர். (அதற்கு மாறாக, மேற்குலக குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வரும் நாடுகளும் இருக்கின்றன.) ரஷ்யாவிலும், சீனாவிலும், ஒரு காலத்தில் தமது பிரசைகள், மேற்குலக செல்வாக்கிற்கு உட்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. அதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அந்த அச்சம் மறைந்து வருகின்றது. ரஷ்ய, சீன அரசுகள் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. ரஷ்யா ஜோர்ஜியா மீது போர் தொடுத்த காலத்தில், சீனா திபெத் கிளர்ச்சியை அடக்கிய நேரமும், மேற்குலக கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பான்மை மக்கள் தமது அரசின் பக்கமே நின்றனர். அந்த நேரம் மேற்குலக கண்டனங்கள் அவர்களுக்கு எரிச்சலையே ஊட்டின. அதற்குக் காரணம், மேற்குலகின் "இரட்டை அளவுகோல் கொள்கை." "மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்," என்ற பழமொழிக்கேற்ப மேற்குலக நாடுகளின் நடத்தைகள் அமைந்துள்ளன. உலக மக்கள் அனைவரும் இந்த இரட்டை வேஷம் குறித்து நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால் "மேற்குலகின் உயர்ந்த நாகரீகம்" தற்போது, சந்தையில் விலைப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

நவராத்திரி மகிமை


நவராத்திரி மகிமை
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி `சிவசக்தியாக' ஐக்கிய ரூபிணியாக - அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.

இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும், நிறைவுறும் மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம்.

இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து கலைக்கு ஆதாரமாகத் திகழும் கலைமகளை பாடி, ஆடி பரவசமுடன் வணங்குவோருக்கு கேட்டவரத்தை சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.

சக்தி டீவியின் 12ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்...

சக்தி டீவியின் 12ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்.


இலங்கையில் தமிழ்த்தொலைக்காட்சியில் முதல்தர ஊடகமான சக்தி டீவீ தனது 12வது பிறந்த தினத்தை வரும் 20ம் திகதி தனது மக்களுடன் கொண்டாடுகிறது.உள்நாட்டில் பல நிகழ்ச்சிகளை படைத்ததும் மட்டுமல்லாமல் பல கலைஞர்களையும் சக்தி டீவி உருவாக்கியது. எதிர்காலத்தில் இலங்கை மட்டுமல்லாமல் நவீன தொடர்பாடல் பரிணாமத்தின் மூலம் முழு உலகிலும் தன் சக்தியை வியாபிக்க இருக்கின்றது. இந்நாளில் என் சக நிர்வாகஊழியர்களுக்கும் சக்தியின் சக்தியான ரசிகர்களுக்கும் இணைய ரசிகர்கள் உங்களுக்கும் என் சார்பான 12வது பிறந்ததின வாழ்த்துக்கள்...

வியாழன், 30 செப்டம்பர், 2010

ஸ்ராலின் கிராட் யுத்தம்

ஸ்ராலின் கிராட் யுத்தம்

இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜேர்மனிய படைகளுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் இன்று வோல்கோ கிராட் என்று அழைக்கப்படும் ஸ்ராலின் கிராட்டில் நடைபெற்ற யுத்தம்.உலக வரலாற்றில் பல யுத்தங்கள் நடைபெற்ற போதிலும் இன்றுவரை பேசப்படுகிற அல்லது விமர்சிக்கப்படுகிற யுத்தங்கள் மிக குறைவானவை ஆனால் இன்று வரை ஸ்ராலின் கிராட் யுத்தம் பற்றி பேசப்படுகிறது அல்லது எழுதப்படுகிறது,தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகிறது,அதனால் விம்பமும் ஸ்ராலின் கிராட் யுத்தத்தினை நினைவு கொள்கிறது.



இரண்டாம் உலக யுத்தத்தின் ஐரோப்பிய அரங்கின் திருப்பு முனையாக கருதப்படும் இந்த சமர் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நீடித்தது,நீண்ட காலம் நடைபெற்ற ஒரு மரபு வழி சமராக இராணுவ ஆய்வாவாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.17 ஜூலை 1942 இற்கும் பெப்ரவரி2 1943 இற்கும் இடையில் நடைபெற்ற இந்த சமரில் மொத்தமாக 1.5 மில்லியன் பேர் பலியானார்கள்.இரண்டு நாள் இரண்டு வாரம்,இரண்டு மாதம் என ஹிட்லரால் எண்ணப்பட்ட நாட்களின் கனவு தவிடுபொடியானது.22 ஆம் திகதி ஜூன் மாதம் 1941 ஆம் ஆண்டி ஹிட்லரின் நாசி படை சோவியத் மீது பார்பரோசா என்ற பெயரில் படை நடவடிக்கையினை ஆரம்பித்தது.ஜேர்மன் படைகளும் அதன் கூட்டுப் படைகளும் விரைவாக சோவியத் பகுதிக்குள் ஆழ கால்பதித்தார்கள்.ஸ்ராலின் கிராட் மீது ஹிட்லர் படை எடுப்பதற்கு பிரதானமான இரண்டு காரணங்கள் இருந்தன.அவற்றுள் ஒன்று வால்கா நதிக்கரையில் அமைந்திருந்த இந்த நகரம் கஸ்பியன் கடலையும் வடக்கு ரஸ்ஸியாவையும் இணைக்கும் பிரதான போக்குவரத்து பாதையாக இருந்தது.மற்றய காரணம் எண்ணை வள பகுதியான க்கஸஸ் பகுதியை நோக்கி முன்னேறிய படைகளுக்கு பாதுகப்பாக இருக்கும் என்பதும் ஆகும்.இதனை விட உளவியல் ரீதியாக ஸ்ராலின் பெயரில் நகரம் இருந்ததும் ஸ்ராலின் கிராட் நகரை கைப்பற்ற ஹிட்லறை தூண்டியது.

ஜேர்மனிய 6 வது இராணுவத்துக்கு தலைமை தாங்கிய ஜெனரல் போலசின் பணி காகஸஸ் பகுதியில் உள்ள எண்ணை வழங்களை கைப்பற்றுவதாக இருந்தபோதிலும்,அதற்காக ஸ்ராலின் கிராட்டை கைப்பற்றுமாறு ஹிட்லரால் உத்தரவிடப்பட்டது.செய் அல்லது செத்து மடி என்பது போல தாக்குதலை மேற்கொள்ளுமாறு ஸ்ராலினால் உத்தரவிடப்பட்டது,தமது தலைவனின் பெயராலான நகரை காப்பதற்குபொது மக்களும் ஆயுதம் ஏந்தினார்கள்.இருவருக்கு ஒரு துவக்கு என்ற வகையில் ஆயுதம் வழங்கப்பட்டது.ஒரு அடி கூட பின்னகர வேண்டாம் என உத்தரவு பிறந்தது.பல இடங்களை ஜேர்மனியர்கள் கைப்பற்றியபோதும் அவற்றை நிலையாக தக்க வைக்க முடியவில்லை.பகலில் ஜேர்மனியர்கள் கைப்பற்றிய பகுதிகளை இரவில் ரஸ்ஸியர்கள் மீளவும் மீட்கப்பட்டது.அகல கால் பதித்த ஜேர்மனியர்கள் மீதான முறியடிப்பு சமரினை மேற்கொள்ள நவம்பர் 19 அளவில் ரஸ்ஸியா முழுமையான தயார் நிலையினை அடைந்தது.ஒரு மில்லியன் படைபலம் கொண்ட 6 படைப்பிரிவுகள் மார்ஷல் சுகோவ் தலைமையில் நகரை சுற்றிவளைக்க தயாராகினர்.வடக்கு பகுதியில் இருந்து ரமானன்கோ தலைமையிலான 5 ஆவது தாங்கி படையணி தாக்குதலை ஆரம்பிக்க 21,65,24.64,57,52 ஆவது படையணிகள் தெற்கு பகுதியில் இருந்து தாக்குத‌லை ஆர‌ம்பித்த‌ன‌.இரு முனை தாக்குத‌ல் அணிக‌ளும் ந‌வ‌ம்ப‌ர் 23 ஆம் திக‌தி காலாச் ப‌குதியில் இனைந்து கொண்டன.250 000 முதல்300 000 வரையிலான ஜேர்மன் படையினர் சுற்றி வளைக்கப்பட்டு பொறிக்குள்அகப்பட்டு கொண்டார்கள்.எவரும் சரணடைய கூடாது என்றும் இறுதி தோட்டா உள்ளவரை யுத்தம் செய்ய வேண்டும் எனவும் கட்டளை இட்ட ஹிட்லர் போலஸை ஊக்குவிப்பதற்காக பதவி உயர்வையும் வழங்கினார்.எவையும் வேலைக்கு ஆகவில்லை,கால நிலை மோசமானது,வெப்பநிலை பூச்சியத்துக்கு கீழ் சென்றது.ஆயுதங்களுக்கும்,உணவுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது,எதுவுமே செய்ய முடியாத நிலையில் ஜனவரி1943 இல் தென் பகுதி ப‌டையின‌ர் ச‌ர‌ண‌டைய‌ வ‌ட‌ ப‌குதி ப‌டைய‌ணி 2 ஆம் திக‌தி பிப்ருவ‌ரி ச‌ர‌ண் அடைந்த‌து.பெரும்பாலான‌ ப‌டையின‌ர் இற‌க்க‌ 91000 இற்கும் அதிக‌மானோர் சிறைப்பிடிக‌ப்ப‌ட்டார்க‌ள்.ஸ்ராலின் கிராட்டின் தோல்வியும்,படையணிகளின் இழப்பும் ஜேர்மனியால் ஈடு செய்ய முடியாது போனதை ஜேர்மனி மீது ரஸ்ஸியா படை எடுத்த தருணங்கள் உணர்தி நிற்கிறது.





ஹிட்லரின் தளபதிகள் ; போலுஸ்,மன்சுடெயின்,ரிச்தோபுன்,கொசுடாவ் ,கரிபால்டி,துமிதிரிஸ்கு,கொண்ஸ்டான்டினெஸ்.

ஸ்ராலினின் தளபதிகள் ;
ஸ்யிகொவ், யெமெரென்கோ,வஸ்யேவ்சுகி,கிரகொரி ,செம்யோன்,மலினொவ்சுகி .

படை பலம்
ஜேர்மன்;ஆட்பலம் 1 011 500 ஆட்லறி10,290 தாங்கிகள் 675 விமானங்கள் ;1,216.

ரஸ்ஸியா; ஆட்பலம் 1,000,500 ஆட்லறி 13,541 தாங்கிகள் 894 விமானங்கள் 1,115.

சரித்திரப் பதிவுகள் - 5 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)



நார்மண்டி தாக்குதல் (D Day Landing)
'பல மாதங்களாகக் காத்திருந்த நீங்கள் தலைசிறந்த புனிதப் போரினை மேற்கொள்ளப் போகின்றீர்கள்...உங்கள் பணி எளிதானதல்ல. எதிரிகள் தக்க பயிற்சியுடனும், தேவையான தளவாடங்களுடனும், போர்களினால் விளைந்த திண்மையுடனும் எதிர்கொள்வார்கள். மிகுந்த மூர்க்கத்தனத்துடன் போரிடுவார்கள்... '

--- ட்வைட்.டி.ஐஸ்சனோவர் (06 ஜீன் 1944, நேசப்படைகளின் தலைமைத் தளபதி)

பிரான்சை ஜெர்மனியின் நாஜிப்படை ஆக்ரமித்திருந்த காலம். உலகத்திலேயே மிகப்பெரிய ஆக்ரமிப்பு படை 'ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord) ' மூலம் ஜெர்மனியைத் துரத்த தயாரானபோது, நேசப்படைகளின் தலைமைத் தளபதி ஐஸ்சனோவர் வீரர்களிடம், உரை நிகழ்த்தினார். மேற்கோளிடப்பட்ட அவரது பேச்சிலிருந்தே இம்முயற்சி எத்தகைய அபாயகரமானதென்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.

'ரேங்க் பேதமின்றி, அலையலையாக, 20 மைல்கள் பரந்து, ஐந்தாயிரம் போர்க்கப்பல்கள் புடைசூழ அவர்கள் (நேசப்படையினர்) வந்தார்கள். புதிய வேகம் பெற்ற வாகனாதிகள், துருப்பிடித்த சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல்கள், மருத்துவக் கப்பல்கள், எரிபொருள் ஏந்திய டாங்கர்கள், கப்பலை இழுக்கும் சிறிய படகுகள் அவற்றுள் அடங்கும். 350 அடி நீளம் கொண்ட துருப்புகள்/தளவாடங்களை கரை சேர்க்கும் கலங்கள்... இவையனைதிற்கும் முன்னே கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், கரையோரப் பாதுகாப்புக் கப்பல்கள், திசை காட்டும் கருவிகள் விதைக்கும் கலங்கள் சென்று கொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான போர்விமானங்கள் மேகத்திற்கு தாழப் பறந்தன. ' (Cornelius Ryan in his book 'The Longest Day).

மேற்கூறிய பத்தி சுருக்கமாக யுத்ததிற்கு சென்ற நேசப் படைகளின் பரிமாணத்தை விளக்கும்.

கிழக்கு மற்றும் மேற்கே நாஜிப்படைகள்

1939-41 'ல் செய்த போர்களினால் மேற்கு ஐரோப்பாவும், 1942 சண்டையில் கிடைத்த ரஷ்யாவின் பெரும்பகுதிகளும் ஹிட்லரின் பிடியிலேயே தொடர்ந்தன. நடுநிலை நாடுகளான ஸ்வீடன், போர்ச்சுகல், ஸ்விட்ஜர்லாந்து மற்றும் ஸ்பெயின் தவிர ஏனைய ஐரோப்பா முழுதையும் நாஜிப்படைகள் ஆக்ரமித்திருந்தன. வட ஆப்பிரிக்காவும் அவர்கள் பிடியிலிருந்து தப்பவில்லை. கிழக்கே ரஷ்யாவின் ஸ்டாலின்கிராடு, குர்ஸ்க் போன்ற பகுதிகளில் நடந்த எதிர்ப்பு சண்டைகளால் சிறிதே ஜெர்மனி பின்வாங்கியது. இருப்பினும் மேற்கிலிருந்து அமெரிக்காவும் இணைந்து இரண்டாவது முனைத் தாக்குதல் தொடுத்தாலொழிய ஜெர்மனியைத் தோற்கடிக்க முடியாதென்று நேச நாடுகளுக்குப் புரிய ஆரம்பித்தது.

இரண்டாவது முனை

ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின், தனது சகாக்களான வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ப்ராங்க்ளின் ரூசோவெல்ட் இருவரிடமும் மேற்கிலிருந்து இரண்டாவது முனைத் தாக்குதலை ஆரம்பிக்கச் சொல்லி வலியுறுத்த ஆரம்பித்தார். ஹிட்லரும் 11 டிசம்பர் 1941 'ல் அமெரிக்கா மீது போர் பிகடனம் செய்தார். அமெரிக்க ஜனாதிபதியான ரூசோவெல்ட் தனது நம்பகமான தளபதியான ஐஸ்சனோவரை அழைத்து, நேசப் படைகளின் வெற்றிக்கான வழிமுறையைக் காண கட்டளை பிறப்பித்தார்.

1943 'ல் ஐஸ்சனோவர் இரு நடவடிக்கைகளை பிரஸ்தாபித்தார். அவையாவன: Operation Roundup மற்றும் Operation Sledgehammer. இவற்றுள் முதல் நடவடிக்கையை இங்கிலாந்து ஆதரித்தது. இருப்பினும் Operation Torch என்று வடஆப்பிரிக்காவிலுள்ள நாஜிப்படைகளை முதலில் அழித்தொழிக்க வேண்டுமென்று புதிய யோசனையையும் முன் வைத்தது. இக்குழப்பத்திலேயே காலம் கடப்பதைக் கண்டு பதறிய ரூசோவெல்ட்டும், ஸ்டாலினும் டெஹ்ரானில் நடந்த சந்திப்பில் மே 1944 'ல் ஜெர்மனிக்கெதிரான மேற்குமுனைத் தாக்குதல் தொடங்க வேண்டுமென்று கறாராக சர்ச்சிலிடம் தெரிவித்தனர். பதிலாக ஸ்டாலின் கிழக்கு முனைப் போரை மும்முரமாக செயல்படுத்துவதாகவும், ஜெர்மனியை வென்ற பிறகு ஜப்பானுக்கெதிரான போரில் நேசப்படைகளோடு பங்கு பெறுவதாகவும் வாக்குறுதியளித்தார்.

ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord)

முதலில் லெப்டினென்ட் ஜெனரல் பிரட்டெரிக் மோர்கன் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக அறிவிக்கப்பட்டார். அவர்தான் ஓவர்லார்டு நடவடிக்கையின் சூத்திரதாரி. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று தனது கருத்திற்கு செயல் வடிவமும் கொடுத்தார். பின்னர் ஐஸ்சனோவர் ஜனவரி 1944 'ல் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தன்னைத் தோற்கடிக்க நேசப்படைகள் இருமுனைத்தாக்குதல் தொடுக்கலாமென்று ஹிட்லரும் கணித்திருந்தார். அதனால் பிரான்ஸில் நாஜிப்படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு தனது தளபதியான எர்வின் ரொம்மலை ஏவினார். நேசப்படைகளும் ரொம்மலை எதிர்த்து ஆப்பிரிக்க பாலைவனங்களில் போரிட்ட பெர்னார்டு லா மாண்ட்கோமரியை, ஐஸ்சனோவர்க்கு உதவியாக நியமித்தது. மேலும் வால்டர் ஸ்மித் என்னும் அமெரிக்கர் பிரதானத் தளபதியாகவும், இங்கிலாந்து தரப்பில் ஏர் சீப் மார்ஷல் ஆர்தர் டெட்டர், அட்மிரல் பெர்ட்ராம் ராம்சே, ஏர் சீப் மார்ஷல் டிராப்போர்டு லே-மலோரி ஆகியோரும் ஐசனோவர்க்கு துணையாக உதவி புரிய அனுப்பப்பட்டார்கள்.

நார்மண்டி பகுதி மொத்தம் 5 கடற்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. உடா, ஓமகா, கோல்டு, ஜுனோ மற்றும் ஸ்வார்டு போன்ற கடற்கரைகளில், மொத்தம் ஐந்து தரைப்படை ஸ்குவார்டன்கள் (2 அமெரிக்கா, 2 இங்கிலாந்து மற்றும் 1 கனடா) மூலம் தாக்குதல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. D Day (தாக்குதலின் முதல் நாள்) நார்மண்டியின் மேற்கு முனையில் 2 அமெரிக்க விமானப்படைப் பிரிவுகளும், இங்கிலாந்தின் ஒரு விமானப்படைப் பிரிவு அதன் கிழக்கு முனையிலும் தாக்குதல் தொடுக்கமாறு முடிவாகியது. எதிரிக்கு வியப்பைத் தரும் வண்ணம் 'நீந்தும் டாங்குகள் ' பயன்படுத்தவும் முடிவானது. இந்நடவடிக்கைக்கு முதல் மூன்று வாரத் தேவையாக 2,00,000 ஊர்திகளும், 6,00,000 டன் சரக்குகளும் மொத்தம் 6,500 கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்ல பெரிய திட்டம் தீட்டப்பட்டது.

வான்வெளித் தாக்குதல்

தாக்குதலின் முதல் கட்டமாக 13,000 போர்விமானங்கள் ஜெர்மனிப்படை மீது குண்டு பொழியத் தயாராக இருந்தன. நாஜிப்படையோ பதில் தாக்குதலுக்கு வெறும் 400 போர்விமானங்களே தயாரான நிலையில் கொண்டிருந்தது. நேசப் படை விமானங்களின் குண்டு மழையில் பிரான்ஸின் புகைவண்டி நிலையங்கள், சாலைகள், நாஜிப் படைகள் பயன்படுத்தும் விமான நிலையங்கள், ரேடார் கண்காணிப்பு நிலையங்கள், கரையோர பீரங்கிகள் மற்றும் பாலங்கள் அனைத்தும் கடுமையாக சேதமுற்றன. இவ்வான்வெளி தாக்குதலே நேசப்படைகளின் வெற்றிக்கு அடிகோலியதெனலாம்.

மேலும் இத்தாக்குதல் நார்மண்டி பகுதியை குறிவைத்து நடக்காமல் ஏனைய இடங்களில் பரவியிருந்தமையால், நேசப்படைகளின் கடல்வழி தாக்குதல் இடம் பற்றி ஜெர்மனி குழம்பியது. இது போதாதென்று கடல் தாக்குதல் நார்மண்டியிலில்லை என்று வேண்டுமென்றே ஜெர்மன் உளவு ஸ்தாபனத்திற்கு நேசப்ப்படை தவறான துப்பு கொடுத்தும் குழப்பியது. ஜெர்மனியின் சங்கேத செய்திகளை துல்லியமாக இனங்கண்டதால், நாஜிக்களின் எதிர்தாக்குதல் பற்றிய அனைத்து தகவல்களும் முன்கூட்டியே நேசப்படைக்கு தெரிந்தும் விட்டிருந்தது.

ஹிட்லருக்கு மட்டும் ஏனோ நார்மண்டிப் பகுதி தாக்கப்படலாமென்று கடைசி நிமிடத்தில் தோன்றியது. ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது. ரொம்மலோ தேவையில்லாத கடற்கரைப் பகுதிகளிளெல்லாம் 40 லட்சம் கண்ணி வெடிகளைப் புதைத்து, நேசப்படைகளை எதிர்காண ஆவலாயிருந்தார். இதற்கு நடுவே ரொம்மலுக்கும் அவரது மூத்த அதிகாரியான Rundstedt 'க்கும் டாங்க்குள் நிறுத்துமிடங்களில் கருத்துப் பேதமேற்பட, ஹிட்லரே தலையிட்டு பிரச்ச்சினையை சீர் செய்ய வேண்டியதாயிற்று. நேசப்படைகளின் தாக்குதல் ஆரம்பித்த போது ரொம்மல் விடுப்பில் இருந்ததுதான் பெரிய வேடிக்கை.

ஹோபார்ட்டின் பீரங்கிகள்

பாதுகாப்பு அரண் கொண்ட கடற்கரையில் மொத்தம் இரு வழிகளில் துருப்புகளை இறக்கலாம். கடற்கரையில் தொடர் குண்டுமழை பொழிந்து, அதே நேரத்தில் தாக்குதல் படையினை கரைக்கு அருகே எவ்வளவு தூரம் உள்ளே வர முடியுமோ அவ்வளவு தூரம் வந்து துருப்புகளை இறங்கச் செய்யலாம். இச்செய்கையினால் உயிர்ச் சேதம் மட்டுப்படும். இம்முறையினைத்தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கடற் கமாண்டோக்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.

கடல் வற்றுதலின் போது (low tide) துருப்புகளை கடற்கரையில் துருப்புகளை இறக்குவது இரண்டாவது முறையாகும். கரையில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு இம்முறை உகந்ததென்றாலும், உயிர்ச் சேதம் அதிகமாக வாய்ப்புண்டு. கரையினருகே வரவேண்டிய தேவையில்லாததால் கலங்களுக்கு அதிக ஆபத்தில்லை.

ஜெர்மனியின் பாதுகாப்பு அரண் மிகப் பலமாக இருந்த காரணத்தால் நேசப் படைகள் இரண்டாவது முறையினையே தேர்ந்தெடுத்தது. முதல் முறைப்படி கடல் ஏற்றத்தின் (high tide) போது தாக்குதல் தொடுத்திருந்தால் அரணிலிருந்த நாஜிக்கள் குருவியைச் சுடுவது போல் நேசப்படையினரையும், கலங்களையும் அழித்திருப்பார்கள். கரையிறங்கும் காலாட்படையோடு (infantry) அதிக டாங்குகளையும் அனுப்பினால் ஜெர்மனியின் பாதுகாப்பு அரணைத் தகர்க்கமுடியுமென்று திண்ணமாக நேசப் படை நம்பியது.

இத்தாக்குதலுக்கு முன்னர் இங்கிலாந்தின் தரைப்படைக்கு நவீன குண்டுதுளைக்கா கவச டாங்க்குகள் பிரிவினை உண்டாக்கும் பணியில் மேஜர் ஜெனரல் பெர்சி ஹோபார்ட் ஈடுபட்டிருந்தார். இவரது கொள்கைகளை 'கொமாளித்தனமென்று ' சிலரும், 'மிகப்புதுமையானதென்று ' சிலரும் தீவிர கருத்து பேதங்களோடு விவாதித்த காலத்தில், இனம்புரியாத காரணங்களுக்காக ஹோபார்ட்டுக்கு படையிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டது. ஆனால் ஹோபார்ட்டின் திறமை குறித்து சர்ச்சிலுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. D Day நடவடிக்கைக்காக மீண்டும் ஹோபார்ட் அழைக்கப்பட்டார். 79 'தாவது கவசவண்டிகள் பிரிவின் தலைவராய் ஹோபார்ட் ஆற்றிய பணி அளவிடமுடியாதது. இவர் உருவாக்கிய கவச டாங்குகள் பல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இவரது கண்டுபிடிப்புகளில் 'ஆர்க்ஸ் ' எனப்படும் பாலமைக்கும் டாங்குகள், 'ஷெர்மன் DD [Duplex Drive] ' எனப்படும் நீந்தும் டாங்குகள், 'கிராப் ' எனப்படும் கண்ணிவெடியகற்றும் டாங்குகள், 'பாப்பின்ஸ் ' எனப்படும் பாதையமைக்கும் டாங்குகள், சர்ச்சில் எனப்படும் தீ உமிழும் டாங்குகள், 'பேசைன்ஸ் ' எனப்படும் மதகமைக்கும் டாங்குகள் போன்றவை அடங்கும்.

ஓவர்லார்டு நடவடிக்கையில் நீந்தும் டாங்குகளின் பணி மகத்தானது. ஷெர்மன் வகை டாங்குகளுக்கு தண்ணீர் புகா கேன்வாஸ் அரண் கொடுத்து, இரு முன் தள்ளிகளும் (propellars) பொருத்தப்பட்டன. கரையிறக்கும் கலங்கள் (Landing craft) மூலம் இவ்வகை டாங்குகள் கரைக்கருகே எடுத்துச் செல்லப்பட்டன. 4-5 கீமீ தூரமிருக்கையில் டாங்குகள் கலத்திலிருந்து கடலில் இறக்கப்பட, அவை நீந்தி கரையினை அடைந்தன. பின்னர் கான்வாஸ் உறையின் காற்று நீக்கப்பட்டு போர்முனையில் சீறிப்பாய்ந்தன. கடற்கரையில் துருப்புகளை மட்டுமே எதிர்பார்த்த ஜென்மானியர்க்கு DD டாங்குகள் 'அதிர்ச்சி வைத்தியம் ' அளித்தன.

ஓமகா கடற்கரை

D Day 'ல் இங்குதான் உக்கிரமான போர் நிகழ்ந்தது. மற்ற நான்கு கடற்கரைகளைவிட ஓமகா பெரியது. மேலும் கடற்கரையில் சிறிய மலைக்குன்றுகள் அமெரிக்கப் படைகளின் தாக்குதலை கடினமாக்கியது. ரொம்மலும் தன் பங்கிற்கு 'டிராகன் பற்கள் ' என்று பெயரிட்டு பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியிருந்தர். மலைக்குன்றுகளில் 'எதிர்ப்புக் கூடுகளை ' ஏற்படுத்தியதோடு, படைகளின் இலகுவான நடமாட்டத்திற்காக பதுங்கு குழிகளையும் வெட்டி வைக்க ஆணைகள் பிறப்பித்தார். அமெரிக்கப் படைகளை எதிர்நோக்கி ஜெர்மனியின் பீரங்கிகள் ஓமகா கடற்கரையில் வெறியுடன் காத்திருந்தன.

ஓமர் பிராட்லி தலைமையில் அமெரிக்காவின் முதலாம் தரைப்படை ஓமகா கடற்கரையை வந்தடைந்தது. துரதிருஷ்டவசமாக ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 29 மூழ்கிப்போனது (27 தான் மூழ்கியதென்று சொல்வோருமுண்டு). எதிர்பாராமல் வீசிய ஆறடி உயர அலைகள், துருப்புகளோடு டாங்குகளை மூழ்கடிக்கச் செய்துவிட்டன. மேலும் கவச டாங்குகளின் துணையில்லாமல் கரையேறிய அமெரிக்க வீரர்களின் நிலை இன்னும் மோசமானது. இது பற்றாதென்று பலமாக வீசிய காற்று கரையிரக்கும் கலங்களை அலைக்கழித்தது. இதனால் குறித்த இடத்தில் துருப்புகள் வந்தடைய முடியவில்லை. கரையை எட்டிய பின்னர் எப்பிரிவு எங்கே செல்ல வேண்டுமென்ற குழப்பம் அதிகரித்தது. ஜெர்மனியின் தானியங்கி துப்பாக்கி ரவைகள் சந்தோஷமாக அமெரிக்கர்களை துளைத்தெடுத்தன. கடற்கரையினருகே ஏற்பட்டிருந்த மணற்மேடுகள் அமெரிக்கர்களுக்கு சிறிதே பாதுகாப்பளித்தாலும், கடலிலிருந்து அவற்றை சென்றடையுமுன் பலர் குண்டுகளுக்கு மரித்துப் போனார்கள். அமெரிக்க வீரர்கள் உயிரை பணயம் வைத்து மலைகுன்றுகளில் ஏறி வீரமாகப் போரிட்டனர். மேலும் சிறிய கப்பல்களை கரைக்கு மிக அருகே வர வைத்து ஜெர்மனியின் பீரங்கிகளை பதம் பார்த்தார்கள். ஒரே நாளில் இங்கே பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை சுமார் 2,400. காலை 6:30 மணிக்கு ஆரம்பித்த யுத்தத்தில் நண்பகல் தாண்டியவுடன் அமெரிக்கர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. இருள் சூழும் நேரத்தில் கிட்டத்தட்ட ஓமகாவை அமெரிக்கா பிடித்து விட்டது.

உடா கடற்கரையில் ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 28 கரை சேர்ந்தது. மற்ற கடற்கரைகளிலும் DD டாங்குகளின் பங்களிப்பு மகத்தானது.

கோப்ரா நடவடிக்கை (Operation Cobra)


25 ஜூலை அன்று அனைத்து கவச டாங்க்குகளையும் மேற்குப் பகுதியில் இங்கிலாந்தின் தரைப்படையை சமாளிக்க ஜெர்மனி அனுப்பியது. இது போதாதா ? நேசநாடுகளின் துரிதப்படை (Expeditionary Force) கோப்ரா நடவடிக்கை என்னும் வான்வெளித்தாக்குதலைத் தொடுத்தது. இத்தாக்குதலால் இங்கிலாந்தை சமாளிக்கச் சென்ற நாஜிப்படை பிளவுபட்டது. சந்து முனையில் சிந்து பாட அமெரிக்காவின் தரைப்படை கிடைத்த இடைவெளியில் புகுந்து கொண்டது. இப்போது நார்மண்டியில் எஞ்சியிருந்த நாஜிக்களை இப்படைபின்னாலிலிருந்து தாக்கி சின்னாபின்னமாக்கியது. ஹிட்லரின் ஆணைகள் சுத்தமாக மொழி பெயர்க்கப்பட்டதால் ஜெர்மனியின் பதில் தாக்குதலும் விலைவுகள் ஏதுமின்றி பிசுபிசுத்துப் போனது.


நாஜிப்படை தலைமையின் கதி

ஜெர்மனியின் ஏழாவது தரைப்படையின் கமாண்டர் டால்மேன் 28 ஜூன் அன்று இறந்துபோனார். மாரடைப்பென்று காரணம் சொன்னாலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்று ஊகம் நிலவியது. யுத்தத்தில் ஜெர்மனி தோற்றுவிடுமாகையால் நேசப்படைகளுடன் அமைதிப் பேச்சு நடத்துங்கள் என்று ஹிட்லருக்கு அறிவுரை கூறியமையால் Rundstedt 'தற்கொலை ' செய்து கொள்ள நேரிட்டது. இதற்கு நடுவே நாஜிப்படை அதிகாரிகள் சிலர் 20 ஜூலையன்று கிழக்கு பெர்ஷ்யியன் தலைமையகத்தில் ஹிட்லரைக் கொல்ல செய்த சதி தோல்வியில் முடிந்தது. Rundstedt இடத்தில் வந்த Gunther Von Kluge என்பவரும் இதே கருத்தைக் கூற 18 ஆகஸ்ட் அன்று தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. இங்கிலாந்து வீரரின் தாக்குதலில் சிக்கி காயமுற்ற ரொம்மல் அக்டோபரில் தற்கொலை செய்துகொண்டார்.

இன்றைய நார்மண்டி

ஏறத்தாழ இரண்டு லட்சம் கட்டிடங்கள் சண்டையில் சிதிலமாகின. கேன் பகுதி ஒரு கற்குவியலாகவே காட்சியளித்தது. மொத்தம் 15,000 வீடுகளில் 9,000 வீடுகள் குண்டுவீச்சினில் தரைமட்டமானது. போருக்குப் பின்னர் வந்த அரசுகள் 'வெற்று அரசியலிலேயே ' காலம் கழிக்க, பிரான்ஸின் அதிகார வர்க்கம் விழித்துக் கொண்டது. அமெரிக்க நிதியுதவியோடு உள்ளூர் மக்களின் உழப்பினையும் ஒருங்கிணைத்து, 1951 'ல் கிட்டத்தட்ட நார்மண்டியை பழைய நிலைமைக்கு கொண்டுவந்தனர். 1954 'ல் கேன் நகரமும் புனரமைக்கப்பட்டது.

நினைவுச் சின்னங்கள்

'தனது பழமையினை மறந்த எந்த தேசத்திற்கும் எதிர்காலமில்லை ' என்று முழங்கிய சர்ச்சிலின் தேசமான இங்கிலாந்து மக்களும் தேசப்பற்றிற்கு பேர் போனவர்கள். அமெரிக்காவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அமெரிக்க மக்கள் வியட்நாம் யுத்தத்தை மிகவும் எதிர்த்தனர். இருப்பினும் அமெரிக்கர் பலர் இப்போரில் பங்குகொண்டு இறந்து போன மற்றும் காயம்பட்ட வீரர்களை மறந்துவிடவில்லை.

நார்மண்டி படையெடுப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இறந்தனர். பிணக்குவியலாயிருந்த 9,000 அமெரிக்க வீரர்களின் உடல்களை பிரித்தெடுத்து ஓமகா கடற்கரைக்கு அருகே செயிண்ட் லெளரண்ட் என்னுமிடத்தில் அடக்கம் செய்தனர். லா காம்பே என்னுமிடத்தில் சுமார் 20,000 ஜெர்மனி வீரர்கள் அவ்வாறே அடக்கம் செய்யப்பட்டனர். ரான்வில் என்னுமிடத்தில் சுமார் 2,000 இங்கிலாந்து வீரர்களுக்கு சமாதிகள் உருவானது. நேச நாடுகளைத்தும் ஒவ்வொரு வருடமும் உயிர்த்தியாகம் புரிந்த இவ்வீரர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றன.



இப்போது நார்மண்டியில் பல தரப்பட்ட மக்கள் விஜயம் செய்கின்றனர். இறந்த தோழர்களின் நினைவாகவும், உயிரோடு மீண்டவர் ஒன்று கூடவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தை காணும் ஆவலிலும் என்று பார்வையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.