திங்கள், 18 மே, 2020

சிறுவர்களை வேலைத்தளங்களில் வேலைக்கு அமர்த்தாதீர்கள்.

'சிறுவர்களை வேலைத்தளங்களில் வேலைக்கு அமர்த்தாதீர்கள். மாறாக, அவர்களின் எதிர்கால வாழ்வின் கனவுகள் நனவாக வழி விடுங்கள்'.

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கின்றன.

குழந்தைகள் உங்களுக்கு பிறந்தவர்கள் தான், ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல'என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துவதனூடாக சிறுவர் தொழிலாளர்களை அதிலிருந்து விடுபடுவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கல்வியானது எதிர்காலத்தில் சிறப்பான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான சாதனமாகும். அதன் அவசியத்தை அறியாத நிலையில் உள்ளவர்களாக பலர் காணப்படுகின்றார்கள். இன்றய சூழலின் கல்வியின் அவசியம் யாது? எதிர்காலத்தில் கல்வி அறிவு இன்மையால் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை உணராத நிலையில் உள்ள பெற்றோர் காணப்படுகின்றமையால் சிறுவர்களை கற்றலில் ஈடுபடச் செய்யாமல் சுயதேவையை பூர்த்தி செய்யும் வகையில் வேலைக்கு அனுப்புகின்ற நிலை காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரசகட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய,சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பவங்கள்,கடத்தல்கள்,சிறுவர்களை வேலைக்கமர்த்துதல்,பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும்,வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. பெருந்தோட்டங்கள்,கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட்டு செல்வந்த வீடுகளுக்கும்,கடைகள்,ஹோட்டல்கள், கராஜ்கள் போன்ற பல இடங்களுக்கும் வேலைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே அரும்பாகி பருவகாலங்களில் மலர வேண்டிய மலர்களை அரும்பிலேயே கசக்கி கருக்கும் சிறுவர் தொழில் சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். உலகெங்கும் வாழும் சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கும் சூழலும், வறுமை இல்லாது வாழும் சூழலும் உருவாக மக்கள் ஒன்றுபட்டு உழைக்க ​வேண்டும்.

எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும்..!

“வையகம் காப்பவரேனும் – சிறு
வாழைப்பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யகலத்தொழில் செய்தே – பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர். என்று #சமத்துவத்தையும்,

“உடன் பிறந்தார்களைப் போல – இவ்வுலகில்
மனிதரெல்லாருக்கும் இடம் பெரிதுண்டு வையத்தில் – இதில்
எதுக்கு சண்டைகள் செய்வீர்? என்றும் சமாதானம் கோருகிறான்.

“காலா உன்னை காலால் உதைக்கிறேன் வாடா” என்று எக்காளமிட்டவன் பின் அதே காலனோடும் “பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்றோ, “பகை நடுவில் நம் பரமன் வாழ்கிறான்” என்றோ அவனோடு சேர்ந்துவிட்டான். 

நம் #பாரதி, #மகாகவி, முண்டாசுகவி, புரட்சிக்கவி, பிரபஞ்ச கவி என்று அடைமொழி அலங்காரங்களின் பின் பாரதியை ஒவ்வொருவரும் கொண்டாடும் விதங்களிலெல்லாம் பாரதி ஒரு சார்பாகவே நிற்க முயற்சிக்கும் அவர்களின் சூது நமக்கு புரிகிறதா?

பாரதியை ஒரு சார்புடையவனாக சித்தரிக்கும் சதியோ என்று வினவத் தோன்றுகிறது. பாரதி ஒரு மகாகவி என்னும் வெற்று பெருமை பேசி பயனில்லை, அவனை உலகமுழுமைக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ் இனப் பெருமை என்பது வெற்று உணர்ச்சி முழக்கமாக, இனவெறி தூண்டுவதற்காக பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு, பாரதியே கூறியதுபோல்,

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
       இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
       நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
       வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
       தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
       பரவும் வகை செய்தல் வேண்டும்.

- நாம் அதற்கு உழைப்போம்.

புதியதோர் உலகம் செய்வோம்

நாள்தோறும் ஊற்றெடுக்கும் கிணறுகளின் தண்ணீரே பயன்படுகிறது. இடையீடில்லாது ஓடிக்கொண்டேயிருக்கிற ஆறே ஜீவநதி; மனிதகுலத்துக்குப் பயன்படுவது. புண்ணிய தீர்த்தங்களாகக்கூட இடையீடில்லாது ஓடிக் கொண்டேயிருக்கின்ற ஆறுகளே அங்கீகரிக்கப்படுகின்றன.

அறிவின் வளர்ச்சிக்குப் புத்தம் புதிய நூல்களைக் கற்கவேண்டும். இலக்கியங்கள், புராணங்கள் மிகப் பழமையானவைகளைக் கற்கவேண்டும். அப்படிக் கற்பது வாழ்நிலையின் அடித்தளத்தை வலுப்படுத்தும்-வேர்கள் மரத்தை வலுப்படுத்துவது போல!
 
அறிவியல், அனுபவம் வளர வளர வளரும் தன்மையுடையது. அறிவியல் முற்றாக உலகியலை, உடலியலைச் சார்ந்தது. இந்த அறிவியல் உலகந்தழி இயது என்றுகூடக் கூறலாம்.
 
கலாச்சாரம், பண்பாடு முதலியன நாடுகள் தோறும் மாறும். இவை தலைமுறை தலைமுறையாக வருவன. இப்படி வழி வழி வரும் கலாச்சாரம், பண்பாடு ஆகியன வளரும் புதிய சமுதாயத்திற்கு மாறுபடாது. சென்ற கால வரலாற்றில் மாறுபட்டதில்லை.
 
ஒரு பழமை, புதுமையை ஈன்றுதர மறுக்குமாயின் அந்தப் பழமையில் ஏதோ குறையிருப்பதாகத்தான் பொருள். ஒரே வழி பழமைவாதிகள் தங்களுடைய அறியாமையை மறைத்துக்கொள்ளப் புதிய சிந்தனையை புதியவற்றை எதிர்ப்பார்கள்.
 
➡️ கிரேக்க ஞானி சாக்ரட்டிஸ், கலீலியோ, ஏசு பெருமான், அப்பரடிகள், வள்ளலார் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்றாகும். ஆனாலும் அவர்கள் கண்ட புதுமைதான் வென்றது.
 
அறிவு வளரும்போதே, ஆன்மாவும் ஒருங்கிணைந்து வளரவேண்டும். ஆன்மாவை வளர்த்துப் பேணிக்காக்கும் அறிவே, அறிவு. ஆன்மாவுக்குத் தொடர்பில்லாத அறிவு, வளர்ச்சிக்குத் துணை செய்யாது; மாற்றங்களுக்கும் காரணமாக அமையாது.
 
சிந்தனையில் வளர்ச்சி, அறிவில் வளர்ச்சி, அறிவியலில் வளர்ச்சி, வாழ்நிலையில் வளர்ச்சி, சமூகத்தில் வளர்ச்சி இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் நிகழுமாயின் மாற்றங்கள் ஏற்படும்.
 
வளர்ச்சியும் மாற்றங்களுமே மனிதகுல மேம்பாட்டுக்கு உந்துசக்திகள். மனிதன் பழக்கங்களுக்கும், வழக்கங்களுக்கும் அடிமைப்படுதல் கூடாது.
 
நாளும் மனிதன், புத்துயிர்ப்புப் பெறவேண்டும்; புது மனிதனாகப் பிறப்பெடுக்க வேண்டும். மனிதன் உழுதாலிலேயே உழுது கொண்டிருக்கும் வரை, நிலம் வளம் அடையாது.
 
🔅 அதுபோலவே படித்த சுலோகங்களையும் கோஷங்களையும் திரும்பத் திரும்பப் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டிருந்தால் வளர்ச்சி பாதிக்கும். வளர்ச்சி பாதிப்பு அடைந்தபின், மாற்றங்களும் ஏற்படாது.
 
அதனால், சாதி, சம்பிரதாய, மூடப் பழக்கங்களும் நிறைந்து வறுமையில் கிடந்துழலும் கூட்டமாக மக்கள் மாறுவர். இது நாட்டுக்கு ஏற்றதல்ல.
 
ஆதலால், ஒவ்வொரு நாளும் சென்ற காலத்திலிருந்து படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, நாளையை நோக்கி தடைபோட வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல; பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதுவும்" அல்ல, எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதுதான் முன்னேற்றம், வளர்ச்சி; மாற்றம்...! 

ஆதலால், நமக்கும் சரி, அடுத்த தலைமுறையினருக்கும் சரி, எதிர்கால நம்பிக்கை வேண்டும். வளர்ச்சியுடன் கூடியமாறுதல் தேவை. சென்ற காலத்தை விட எதிர்காலம் விழுமிய சிறப்புடையதாக இருக்கவேண்டும் என்பது சேக்கிழார் திருவுள்ளம். ”இனி எதிர்காலத்தின் சிறப்பும்” என்பார் சேக்கிழார். பாவேந்தன் பாரதிதாசனும், "புதியதோர் உலகம் செய்வோம்” என்றான்.

மத நிறுவனங்கள் அனுட்டானத்தை விட, பிரச்சாரப் புயலில் சிக்கித் தவிக்கின்றன. நாடோ, ஊரோ, வீடோ இன்று ஒன்றாக-ஒருருவாகவில்லை. கிராமத்தின் எல்லையில் நம்மை வரவேற்பது பசுமையும், இலைகளும், பூக்களும் நிறைந்த மரங்கள் அல்ல. கட்சிக் கொடிகளே வரவேற்கின்றன. அரசியற்கட்சிகளின் கொடிகளும் அல்ல.

உள் அமைப்பு ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும், மாற்றத்தையும் உத்தியாகக் கொள்ளாது தேக்கமடைந்ததால் ஏற்பட்ட கோபதாபங்களால் பிரசவிக்கப் பெற்றவைகளே இன்றுள்ள பெரும்பான்மையான கட்சிகள்..👈

'ஆகவே சிந்தியுங்கள்.' வளர்ச்சியும் மாற்றமும் பொருந்திய பாதையில் செல்ல அடியெடுத்து வைப்போம் நடப்போம்! தொடர்ந்து நடப்போம்!

பகுத்தறிவு அவன் சொல்கேட்டு நடக்கும் ஒரு புத்திசாலியான அடிமை...!

அரசியலில் உணர்வுக்கும் பகுத்தறிவிற்கும் இடையேயான மோதலில், உணர்வுகளே எப்பொழுதும் வெல்கின்றன என்கிறார் 'வெசுடன்'. அரசியலில் உணர்வுகள்தான் முக்கியம், உண்மையோ அல்லது ஆதாயமோ அவ்வளவு முக்கியமல்ல.

“In politics, when reason and emotion collide, emotion invariably wins.”

மனிதர்கள் பகுத்தறிவுடன் சிந்தித்து முடிவெடுப்பதாக இருந்தால், அரசியல்வாதிகள் பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. எல்லாம் வெட்டிப் பேச்சாகவே இருக்கும். உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அரசியல்வாதிகள் மக்களை பகுத்தறிவினால் பேசி ஈர்ப்பதில்லை,  மாறாக அவர்களின் அடையாளம் (சாதி, மதம்) , சித்தாந்தம்,  வெறுப்பு,  பயம், காழ்ப்புணர்ச்சி ஆகியவற்றின் அடிப்படியில் உணர்வுகளைத் தூண்டி ஈர்க்கிறார்கள்.

பொதுவாக ஒருவர் எந்த அரசியலை ஆதரிக்கிறார் என்பதை அறிய அவருக்கு என்ன ஆதாயம் என்று பார்க்கக் கூடாது, மாறாக அவர் எது மாதிரியான பாரபட்சங்களைக, விருப்பு, வெறுப்புக்களைக்  கொண்டுள்ளார், எது உணர்வுகளைத் தூண்டும் என்று பார்க்கவேண்டும்.  ஒருவர் தனக்கு முக்கியம் என்று கருதுவது எதுவும் உணர்வுகளுடன் தொடர்புடையது. முக்கியமானதை இழந்தால் உணர்வுகள் வருத்தத்தை அளிக்கும்.  நாம் இழந்தால்  வருத்தப்படாத ஒன்றை முக்கியமாகக் கருதமுடியாது.

ஏன் உணர்வுகள் இவ்வளவு முக்கியமானதாக செயல்படுகிறது  என்பதற்கு நமது மூளையின் வடிவமைப்புதான் அடிப்படைக் காரணம். பகுத்தறிவு என்பது பரிணாம வளர்ச்சியில் மூளையில் உருவான கடைசி அடுக்கு, அது உணர்வுகளை உருவாக்கும் அடுக்கின் மீது கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக  உணர்வுகளின் வழியாகப் பகுத்தறிவு செயல்படுவதால், உணர்வுகளுக்கு பகுத்தறிவு அடிமையாக இருக்கிறது. பகுத்தறிவு இல்லாவிட்டால் நாம் விலங்குபோல அறிவின்றி  செயல்படுவோம். உணர்வுகள் இல்லாவிட்டால், ஒரு சமூகத்தில்  மனிதனாக செயல்படவே முடியாது. சில உளநோய் (psychopath) உள்ளவர்கள் கொடிய கொலைகள் புரிவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு உணர்வுகள் இல்லாததுதான். உணர்வும் அறிவும் இனைந்துதான் செயல்படுகின்றன. நாம் உணர்வுகள் காட்டும் திசையில் பகுத்தறிவு செயல்படுகிறது. பகுத்தறிவு என்பது ஒரு வக்கீல் போன்றது. உணர்வு எதை சரி என்று சொல்கிறதோ, அதை நியாயப்படுத்தும் ஒரு வக்கீல்தான் பகுத்தறிவு என்கிறது உளவியல் ஆராய்ச்சிகள். உதாரணமாக தொலைக்காட்சி  அல்லது முகநூல் விவாதங்களில், யாரவது “நீங்கள் சொல்வது சரி”  என்று பகுத்தறிந்து கட்சி தாவி பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் என்ன நடக்கிறதென்றால் அனைவரும் உணர்வுகளின் அடிப்படையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதற்கு சாதகமாக ஒரு வக்கீலைப் போல நியாயம் கற்பிக்கிறார்கள். உணர்வுகளே அனைத்து முடிவையும் எடுப்பதில்லை. சில விடயங்களில் உணர்வுகள் பகுத்தறிவின் கையில் முடிவெடுக்கும் பொறுப்பை  கொடுத்து விடும். உணர்வுகள் என்பது ஒரு முட்டாள் எசமானான் போல.. "பகுத்தறிவு அவன் சொல்கேட்டு நடக்கும் ஒரு புத்திசாலியான அடிமை...!"

"நீ நீயாக இரு.."

தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (Scattering of Light), அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.

மன எழுச்சியடைந்துள்ள இளைஞர்கள் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். 

'அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்.'🪔🙏

எனக்குப் பிடித்த உலக சினிமா.. (Dunkirk-2017)

எனக்குப் பிடித்த உலக சினிமா..  (Dunkirk-2017)
'கிறிஸ்டோபர் நோலன்' இந்த இயக்குனர் உடைய எந்த திரைப்படத்தையும் நான் தவற விட்டதில்லை. திரைக்கதையை எங்கள் வாழ்க்கையுடன்    ஒன்றிணைக்க செய்து எங்களையும் திரைப்படம் முழுவதுமாக கட்டி வைப்பதில், சிந்திக்க வைப்பதில் இந்த இயக்குனருக்கு நிகர் எவரும் இல்லை. நேற்றைய தினம் மீண்டுமொருமுறை (Dunkirk)
டன்கிர்க்  இந்தத் திரைப்படத்தை Netflixல் பார்த்தேன். பார்த்ததும் நிச்சயம் உங்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிடுகின்றேன்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் 2017ல் வெளிவந்திருக்கும் படம், டன்கிர்க் (Dunkirk).
டன்கிர்க் என்பது பிரான்ஸில் உள்ள ஒரு துறைமுகத்தின் பெயர். பெல்ஜிய நாட்டு எல்லைக்கு மிக அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டன்கிர்க் துறைமுகத்தில் 1940ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற ஒரு போர் நிகழ்வின் ஒரு பகுதியே டன்கிர்க் திரைப்படம்.
ஜெர்மனிக்கும் நேசநாட்டுப்படைகளுக்கும் நடந்த சண்டையில், இந்த டன்கிர்க் துறைமுகத்தையும் அங்கே இருந்த நேச நாட்டுப்படையின் வீரர்களையும் வான் வழியாகவும், நீர் (கடல்) வழியாகவும் சுற்றி வளைத்தது ஜெர்மானியப்படை. சுற்றி வளைத்தது மட்டுமில்லாமல் அவர்களை தொடர்ந்து வான் வழியாக தாக்கி அழிக்கும் வேலையையும் செய்தது.
பிரான்சுப்படை உள்ளிட்ட நேசநாடுகளின் படையை ஜெர்மானியப்படை முறியடித்த இந்த நிகழ்வில் டன்கிர்க் துறைமுகத்தில் மாட்டிக்கொண்ட 4 இலட்சம்(4,00,000) நேசநாட்டுப் படைவீர்கள் பட்ட பாடும், அவர்கள் எப்படி மீண்டனர் என்பதும் தான் டன்கிர்க்கின் கதை. 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கிலாத்திற்கு தப்பி மீட்கப்பட்டனர்.
கப்பலோ, படகோ எது கிடைத்தாலும் பயன்படுத்தி அவர்களை மீட்க முயற்சி செய்யுங்கள் என்று அப்போதைய இங்கிலாந்து பிரதம மந்திரி வின்சென்ட் சர்ச்சிலின் உத்தரவின் பேரில் 1 இலட்சத்திற்கும் அதிகமான பிரான்சுப்படை வீர்ர்கள் நேசநாட்டுப்படை வீரர்கள் ஆங்கிலக்கால்வாய் வழியாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தை படமாக்கி இருக்கிறார், கிறிஸ்டோபர் நோலன். படம் பார்க்கும் உணர்வைத்தாண்டி நிஜமாகவே போர்க்களத்தை நேரடியாக பார்ப்பது போலவே இருக்கிறது. வழக்கமான திரைப்படங்கள் போன்று நிமிடத்திற்கு நிமிடம் மாறும் திரைக்கதை, ட்விஸ்ட் என்றில்லாமல்… போர்க்களம் அதன் நிகழ்வுகள்… தந்திரங்கள், தொழில்நுட்பங்கள்… என்று நமக்குத் தெரியாத தகவல்கள் நிறைந்து இருக்கிறது, டன்கிர்க். போர் விமானிகள் எப்படி செயல்படுவார்கள், எதிரியின் விமானப்படையை முறியடித்து தங்கள் படைகளுக்கு சாதகமாக இருப்பதிலும், தங்கள் படைகளை காப்பாற்றுவதிலும் எப்படி முக்கிய பங்காற்றுகிறார்கள்… எரிபொருள் தீரும் வரை கடைசிநொடி வரை போரிட்டு அதன் பின் எப்படி தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்… இப்படி நேரடி போர்க்களக்காட்சிகள்…

இலட்சக்கணக்கில் இராணுவ வீரர்கள் அடுத்தநொடி உயிர்வாழ்வது நிச்சயமில்லாத நிலையிலும்… எப்படியாவது தப்பித்து வீட்டுக்கு போகவேண்டும்…. என்று பரிதவித்து நிற்கிற நிலை… யுத்தங்கள் மீதான பேரச்சத்தையும் பெரும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

டன்கிர்க் திரைப்படம்.   பார்க்க வேண்டிய உலக சினிமா...

Battle of #Dunkirk (டன்கிர்க் சண்டை)
May 26, 1940 – Jun 4, 1940

ஞாயிறு, 17 மே, 2020

சுமந்திரன் சொல்லத் தவறியது...!

சுமந்திரன் சொல்லத் தவறியது...!
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் சரியானதென்று ஏற்றுக்கொள்ளவில்லை என சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கூறிவிட்டார் என்று எல்லோரும் நெருப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

அவரது இந்தக் கருத்துப் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் - அவருக்கு எதிராக அதிகளவிலும், ஆதரவாக சிறியளவிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

ஆனால், இதில் எவருமே சுட்டிக்காட்டாத சில விடயங்கள் இருக்கின்றன. அவற்றையே நான் இங்கு கவனத்தில் கொண்டுவர விரும்புகிறேன். 

இந்த வாதப் பிரதிவாதங்களில் நண்பர் ஒருவரின் பதிவில், ஆயுதப் போராட்டம் ஆயிரக்கணக்கான உயிரிழிவுகள், அங்கவீனங்கள், காணாமல்போதல்கள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள், சனத்தொகைச் சரிவு, பொருளாதார சிதைவு, கல்வி வீழ்ச்சி, நிலங்கள் இழப்பு, இராணுவ முகாம்களின் பெருக்கம் என்று ஏராளம் துன்பங்களையே இறுதியில் விட்டுச்சென்றிருக்கின்றது என்கின்ற ஒரு யதார்த்தமான அவதானத்தை வெளியிட்டிருந்தார். 

இந்தக் கோணத்தில் பார்க்கும்போது, ஆயுதப் போராட்டம் ஏற்படுத்தியிருக்கும் இழப்புக்கள் அதிகம் என்பதை மறுக்க முடியாது. 

வீம்புக்கு வேண்டுமானால் தமிழரின் பிரச்சினையை, வீரத்தை உலகறியச் செய்யவில்லையா என்று கேட்டாலும், சரி உலகறிந்து கண்டபலன் என்ன என்ற கேள்விக்கு பதிலேதும் உண்டா? 

சரி, ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக்கொள்கிறோமோ, இல்லையோ, அதன் பாதகமான அம்சங்களுக்கான பழியை அவ்வளவு இலகுவாக புலிகள்மீதும், அதன் தலைவர் பிரபாகரன்மீதும் சுமத்திவிட்டுத யாரும் இலகுவாகத் தப்பிக்கொண்டுவிட முடியுமா? 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பல தமிழ்ப் போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் ஆயுதமேந்துவதற்கான பின்னணியில் இருந்த “எய்தவர்களை“ வசதியாக மறந்துவிட்டு, “அம்புகளை” நோவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

சேர் பொன் இராமநாதன் காலத்திலேயே தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கிடைத்த வாய்ப்புக்களைத் தவறவிட்டுவிட்டு,

தமிழ்க் காங்கிரஸ் அமைத்து 50க்கு 50 என்று பேரம் பேசியும், அரசுடன் இணைந்து அமைச்சுக்களைப் பெற்றும் அரசியல் செய்து வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்னெடுத்த அரசியல் வழிமுறையையும் நிராகரித்துவிட்டு,

ஜீ.ஜீ.பொன்னம்பலத்துக்குப் போட்டியாக வாக்கு வங்கியைக் கவரும் வகையில், ஆங்கிலத்தில் Federal Party(சமஷ்டிக் கட்சி) என்று தேசியளவில் காட்டிக்கொண்டு, தமிழில் தமிழரசுக் கட்சி என்று தமிழர்களின் மனதில் தனிநாட்டுக் கனவை முதலில் வளர்த்துவிட்டு வாக்கள்ளியவர் செல்வநாயகமே. 

இவரது இந்த தேர்தல் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்ட அணுகுமுறையை மேலும் விரிவாக்கி, வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றி, தனிநாடுதான் ஒரே தீர்வு என்று தமிழ் இளைஞர்களின் இரத்தத்தைச் சூடேற்றி ஆயுதமேந்தத் தூண்டியவர் அமிர்தலிங்கமே.

இடையில், மாநகரசபை முதல்வராக யாழ் நகரில் அதிக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட அல்பிரட் துரையப்பா எங்கே தமக்கு அரசியல் ரீதியான போட்டியாக வளர்ந்துவிடுவாரோ என்று, பொன்னாலை வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் வழிபாடியற்றும்போது அவரைப் போட்டுத் தள்ளும்படி பிரபாகரனைத் தூண்டியவர்கள் இந்த வேட்டி அரசியல்வாதிகளே. 

சாத்வீகம் தோற்றதால்தான் ஆயுதமேந்தினோம் என்கிறார்களே, சாத்வீக வழியில் அப்படி என்னதான் பெரிதாகப் போராடினார்கள்? 

அப்படியே போராடியிருந்தாலும், சாத்வீக வழியில் போராடிய எந்தத தலைவர் தானே ஆயுதமேந்தினார்...?

ஆயுதமேந்திய எந்தத் தலைவர் முன்னதாக சாத்வீக வழியில் போராடியிருந்தார்....?

எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும், எந்த நிலையிலும் விட்டுக்கொடாமல் சாதீவகப் போராட்டம் நடாத்திய காந்தியின் வழியில் ஒரு அங்குலமேனும் இந்த வேட்டித் தலைவர்கள் ஏதும் முயன்றிருக்கிறார்களா....?

குறுக்கு வழியில் தேர்தல் வாக்குவேட்டைக்காக தமிழரசு, தமிழீழம், ஆயுதப் போராட்டம் என்று வாய்வீரம் பேசி, இரத்தத் திலகமிட்டு இளைஞர்களை ஆயுதமேந்தத் தூண்டிய “எய்தவர்களை“ விட்டுவிட்டு, இவர்களால் தூண்டப்பட்டு ஆயுதமேந்தி அதற்கு இறுதி வரையில் உண்மயாக இருந்து தம்முயிர்களையே மாய்த்த “அம்புகளை” ஏன் நோவான்?

பிரபாகரன், சிறிசபாரத்தினம், பத்மநாபா, உமாமகேஸ்வரன், பாலகுமார் என்று நீண்டுசெல்லும் இந்த “அம்புகளிடம்”, தாம் சரி என்று நம்பிய ஒன்றுக்காக தம்மையே அர்ப்பணித்த நேர்மை இருந்ததல்லவா?

உண்மையான அர்த்தத்தில் பார்த்தால், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுலைக் கூட்டணி ஆகியவற்றின் வாக்குவேட்டைக்கான வாய்வீச்சாக அறிவிக்கப்பட்ட ஆயுதப்போராட்டக் கூச்சலால் உந்தப்பட்டு இளைஞர்கள் ஆயுதமேந்த, 

பிராந்தியத்தில் தலையீடு செய்த அமெரிக்காவை ஓரங்கட்ட, இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுக்கும் பூகோள அரசியலின் பிராந்திய நகர்வுகளுக்காக அந்த இளைஞர்களை அண்டை நாடான இந்தியா மேலும் வளர்த்துவிட்டு பயன்படுத்திக்கொண்டது என்பதே நடந்தேறியது. 

இந்த ஆயுதப் போராட்டம் தவறானது என்று வாதிட்டால், அதற்கான பொறுப்பை இன்று மிதவாத வேடம் பூண்டிருக்கும் தலைவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும். 

அவர்களுடன் ஒரு அங்கமாக இருந்துகொண்டு, இது ஏதோ அவர்களுக்குச் சம்பந்தமில்லாத “பெடியள்“ விட்ட தவறு என்று அவர்களைக் காப்பாற்றும் கைங்கரியத்தையல்லவா சுமந்திரன் செய்திருக்கிறார்?

ஆயுதப்போராட்டம் உண்மையில் தீமையாகத்தான் முடிந்தது என்ற முடிவுக்கு வந்தால், “அம்புகளை” விட்டுவிட்டு, “எய்தவர்களை” அம்பலப்படுத்தவேண்டும்.

அதைச் செய்தால், “நெஞ்சில் உரமும், நேர்மைத் திடமும் கொண்ட“ ஒரு அரசியல்வாதியாக தன்னை நிரூபிக்க இது அவருக்கு ஒரு சந்தர்ப்பம்!

புதன், 6 மே, 2020

ஐசக் நியூட்டன்

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐசக் நியூட்டன் ஒரு நாயை வளர்த்துவந்தார். அதற்கு டயமண்ட் (வைரக் கல்) என்று பெயரும் சூட்டி அன்பாகப் போற்றி வந்தார். ஒரு நாள் அவர் மாலையில் உலாவச் சென்றார். அப்பொழுது அறையின் மேஜை மீது மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அன்று என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. அவர் உலாவச் சென்ற நேரத்தில் அந்த நாய் மேஜை மீது தாவிக் குதித்தது போலும். மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து அங்கு அவர் எழுதிவைத்திருந்த காகிதங்களுக்குத் தீவைத்தது. அத்தனையும் எரிந்து கருகின. அதன் அருமை பெருமை நியூட்ட்ன் ஒருவருக்கே தெரியும். ஏனெனில் அவை அவரது இருபது ஆண்டுக் கால ஆராய்ச்சியின் முடிவுகளடங்கிய காகிதங்கள்.

உலாவச் சென்று திரும்பிய நியூட்டனுக்கு அவற்றைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சி. எல்லாம் டயமண்டின் ‘திருவிளையாடல்’ தான் என்பது அவருக்குப் புரிந்தது. அதுவோ தான் செய்த பெரிய தீங்கை அறியாது அன்பாக வாலைக் குழைத்து நியூட்டனை வரவேற்றது.

நியூட்டனைத் தவிர வேறு ஒருவர் அந்த சூழ்நிலையில் இருந்திருந்தால், நாயை எத்தி உதைந்து அறைக்கு வெளியே தள்ளி கதவைச் சாத்தியிருப்பார். ஆனால் நியூட்டனோ அன்பாக நாயை எடுத்துத் தழுவி அணைத்து, “டயமண்ட், நீ செய்த சிறிய காரியத்தின் விளைவுகளை நீ அறியமாட்டாய்” என்றுசொல்லிக் கொஞ்சினார். அது மீண்டும் வாலை ஆட்டி தன் நன்றியைத் தெரிவித்தது. நியூட்டன் மீண்டும் எழுதத் துவங்கினார்.

👉 சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோராயின் பொறுப்பது கடனே”- வெற்றி வேர்க்கை

👉 நிறையுடைமை நீங்காது வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள்