ஞாயிறு, 6 அக்டோபர், 2019

உலகில் அழியும் நிலையில் உள்ள விலங்குகளை வளர்த்து, கொன்று, விற்று பணம் குவிக்கும் கும்பல்

லண்டன்,

உலகில் வசித்து வரும் உயிரினங்களில் பல அழிவின் விளிம்பு நிலையில் உள்ளன.  அவற்றை பாதுகாக்க நல அமைப்புகள் பல செயல்பட்டு வருகின்றன.

எனினும், அவற்றை சிலர் செல்ல பிராணிகள் என்ற போர்வையில் வளர்த்து பின் அவற்றை உயிருடனோ அல்லது கொன்றோ விற்பனை செய்து பணம் குவிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிர்ச்சி அளிக்கும் தகவலை புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

விலங்குகளில் தோலுக்காக நைல் முதலை, ரோமங்கள் கொண்ட சீல் விலங்கு, மலை வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானை, நீர் யானை ஆகிய 5 விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன.  அதனை விட செல்ல பிராணிகளாக அவற்றை வளர்த்து விற்பனை செய்யும் தொழிலிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அந்த இனங்கள் வேகமுடன் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன.

கடந்த 2011-2015 ஆண்டுகளில் 1 லட்சத்து 89 ஆயிரம் நைல் முதலைகளின் தோல்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன.

நமீபியாவில் சீல் விலங்குகளின் குட்டிகள் ரோமங்களுக்காக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் உறவுகளிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பின் அடித்து அல்லது மூச்சு திணற செய்து கொல்லப்படும் கொடூரங்கள் நடைபெறுகின்றன.

பின் அந்த ரோமங்கள் அலங்கார கைப்பைகள் மற்றும் கையுறைகள் தயாரிக்க கொண்டு செல்லப்படும்.


இவற்றில் யானைகள் ஒரு புறம் தந்தங்களுக்காகவும், மறுபுறம் அவற்றின் தோல்களுக்காகவும் வேட்டையாடப்படுகின்றன.  ஜாக்கெட்டுகள் மற்றும் காரின் உட்புற சொகுசு விரிப்புகளுக்கு யானை தோல் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

வரிக்குதிரைகளும் அவற்றின் தனித்தன்மை வாய்ந்த கருப்பு, வெள்ளை நிற தோலுக்காக வேட்டையாடப்படுகின்றன.  அவை பின்னர், வீடுகள் மற்றும் வணிக நிறுவன கட்டிடங்களை அலங்கரிக்கும் தரை விரிப்புகளாக பயன்படுகின்றன.

ஆப்பிரிக்காவில் இருந்து சமீபத்தில் 5 லட்சம் பால் வகை பைத்தான் பாம்புகள் உயிருடன் ஏற்றுமதி செய்யப்பட்டன.  இவற்றை பெருமளவில் அமெரிக்கா வாங்கி கொள்கிறது.

ஆப்பிரிக்காவின் கிரே வண்ண கிளிகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகின்றன.  அவை பிடிபட்டு, கடத்தப்படும்பொழுது அதிகளவில் அழிவை சந்திக்கின்றன.

எறும்பு தின்னிகள் உலகில் அதிகம் கடத்தலுக்கு இலக்கான பாலூட்டி இனம் ஆகும்.  இவற்றில் சில உயிருடன் நீரில் வைத்து கொதிக்க வைக்கப்படுவதும், உயிருடன் தோலுரிக்கப்படும் அவலமும் நடந்து வருகிறது.  இவை கிழக்கத்திய நாடுகளில் பாரம்பரிய மருத்துவத்தில் அதிக மதிப்புடையவையாக உள்ளன.

தென்ஆப்பிரிக்காவில் கடந்த 2017ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காண்டாமிருகங்கள் அவற்றின் கொம்புகளுக்காக வேட்டையாடப்பட்டு உள்ளன.

நைல் முதலைகளின் தோல்கள் 1,89,000

சீல் குட்டிகள் (1,000 ஒரு வருடத்திற்கு)

பால் பைத்தான் பாம்புகள் (4 ஆண்டுகளில் 5 லட்சம்)

கிரே வண்ண கிளிகள் (2,89,006)

தென்ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள் (1,000 ஒரு வருடத்தில்)

இவை தவிர, எம்பரர் வகை தேள், ஆமை, சவன்னா காடுகளில் வசிக்கும் பெரிய வகை பல்லிகள் உள்ளிட்டவையும் வேட்டைக்கு இலக்காகின்றன.  ஆப்பிரிக்காவில் கடந்த 4 வருடங்களில் 27 லட்சம் விலங்குகள் இந்த வகையில் கொல்லப்பட்டு உள்ளன என அந்த அறிக்கையில் இருந்து தெரிய வந்துள்ளது.

ஒருபுறம் அமேசான் காடுகள் தீக்கிரையாகி வருகிறது என கூக்குரல் எழும் நேரத்தில் மற்றொரு புறம் இதுபோன்ற விலங்கு வதை செயல்களால் ஆப்பிரிக்காவின் உயிர்ச்சூழல் கட்டமைப்பு சேதமடைவதுடன், நீண்ட கால பொருளாதார மற்றும் வாழ்வியல் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன.

இதுபற்றி உலக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் ஆலோசகரான டாக்டர் நீல் டி குரூஸ், சட்டப்பூர்வ முறையில் விலங்குகள் விற்பனை மேற்கொண்டாலும், இது சரியானது அல்ல.  அவை வன விலங்குகள்.  தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்ல என கூறியுள்ளார்.

மனிதர்களின் தனிப்பட்ட இன்பத்திற்காக வேட்டையாடப்படும் இவற்றுக்கும் வாழ்க்கை உண்டு என நினைப்பதில்லையா? என நீல் டி குரூஸ் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுத போர் ஏற்பட்டால் உயிர்ப்பலி - பாதிப்பு யாருக்கு அதிகம்? ஆய்வில் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்,

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக  சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அணுஆயுத போர் ஏற்படும் என எச்சரித்தார். சமீப காலமாக துணைக் கண்டத்தில் அணுசக்தி சொல்லாட்சி அதிக அளவில் கையாளப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே அணு ஆயுத  போர் ஏற்பட்டால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும், யாருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும்  என ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு அணு ஆயுத போர் ஏற்பட்டால் குறைந்தது 5 கோடி முதல்  12.5 கோடி மக்கள் மரணமடைவதோடு  மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுசக்தி பரிமாற்றம், அடுத்தடுத்த காலநிலை பாதிப்புகளால் உலகெங்கிலும் பெரும் பட்டினியைக் கட்டவிழ்த்து விடும். 


இந்த ஆய்வு அறிக்கை  இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான  அணுஆயுத போர்  ஒரு பிராந்திய மற்றும் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகளை முன்வைக்கிறது.

உலகளாவிய வளிமண்டல பேரழிவால் உலகம்  பாதிக்கப்படும் என்று  ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது, இருப்பினும் இந்திய நிபுணர்கள்  அத்தகைய மோதலுக்கான வாய்ப்புகள் மிகக்குறைவே என்று தெரிவித்து உள்ளனர்.

சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

 2025 ஆம் ஆண்டில் இரு  நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுத போர் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில், அதிநவீன உலகளாவிய காலநிலை மாதிரிகளைப் பயன்படுத்தி உருவகப்படுத்தப்பட்ட இந்தியாவும், பாகிஸ்தானும் முறையே 100 மற்றும் 150  அணு ஆயுதங்களை வைத்துள்ளன. இதை பயன்படுத்தினால் 16-36 மில்லியன் டன் சூட் (கருப்பு கார்பன்) புகையை வெளியிடுவதால் அவை மேல் வளிமண்டலத்தில் உயர்ந்து சூரிய கதிர்வீச்சைத் தடுக்கும்.

இது பூமிக்கு வரும் சூரிய ஒளியை   20 முதல் 35 சதவீதம்  வரை குறைத்து, மேற்பரப்பை இரண்டு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை குளிரை கொடுக்கும். கூடுதலாக, கடந்த பனி யுகத்தின் நடுப்பகுதியில் இருந்து பூமியில் காணப்படாத வகையில் வெப்பநிலை குறைந்து வருவதால், கடுமையான குறுகிய கால காலநிலை இடையூறுகள், எரியும் நகரங்களிலிருந்து வரும் புகைகளால் தூண்டப்படும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும்  மக்கள்தொகை அதிகம் கொண்டவை என்பதால், இரு நாடுகளின் நகர்ப்புற மக்கள் தொகையின் அடிப்படையை கொண்டு உயிர் இழப்பு இருக்கும்.  நகர்ப்புற மக்களில் ஒரு சதவீதத்தின் அடிப்படையில்  இருக்கும் பாகிஸ்தானின் இழப்புகள், இந்தியாவிற்கு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.


பாகிஸ்தானை விட இந்தியா இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக உயிரிழப்புகளை சந்திக்கும். ஏனென்றால்  பாகிஸ்தான் இந்தியாவை விட அதிகமான ஆயுதங்களைப் பயன்படுத்தும். ஏனெனில் இந்தியாவில் மிகப் பெரிய மக்கள் தொகை மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் உள்ளன.

பாகிஸ்தானில் அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள் (எஃப் -16 ஏ / பி மற்றும் மிராஜ் III / வி) 2100 கி.மீ வரை உள்ளன. எட்டு வகையான நில அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் 2750 கி.மீ வரை சாத்தியமான வரம்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இரண்டு வகையான கப்பல் ஏவுகணைகள் உள்ளன.  இந்தியா முழுவதையும் மிக நீண்ட தூர விநியோக முறைகளால் அடைய முடியும். 100,000 க்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியாவில் சுமார் 400 நகரங்கள் (7) இருப்பதால், இந்தியாவில் உள்ள அனைத்து மிதமான மற்றும் பெரிய அளவிலான நகரங்களில் மூன்றில் ஒரு பங்கை விட பாகிஸ்தான் அதன் தற்போதைய ஆயுதக் களஞ்சியத்தையும், 2025 ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலான தாக்குதல்களை நடத்தக்கூடும்.

இந்தியாவின் 2018 ஆயுதக் களஞ்சியத்தில் 130 முதல் 140 அணு ஆயுதங்கள் இருப்பதாக கருதப்படுகிறது, இது 2025 க்குள் 200 ஆக விரிவடையும்  என  கிறிஸ்டென்சன் மற்றும் நோரிஸ் என்ற நிபுணர்கள் கூறுகின்றனர்.  இந்தியாவில் அணு ஆயுதங்கள் சேமிக்கப்படக்கூடிய ஐந்து இடங்களை அவர்கள் பட்டியலிடுகின்றனர், ஆனால் அவற்றின் இருப்பிடங்கள் அடையாளம் காணப்படாத இடங்களிலும் இருப்பதாக அவர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்தியாவில் மிராஜ் 2000 எச் மற்றும் ஜாகுவார் ஐஎஸ் / ஐபி உள்ளிட்ட அணுசக்தி திறன் கொண்ட விமானங்கள் உள்ளன. இவை 1850 கி.மீ வரை சென்று தாக்கும்.  இது நான்கு வகையான நில அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. அவை 3200 கி.மீ வரை  பயன்படுத்தப்படும். 

இந்தியாவில் கப்பல் அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும்  இரண்டு நீர்மூழ்கிக் கப்பல் சார்ந்த ஏவுகணைகள் உள்ளன . 100,000க்கும் அதிகமான மக்களை கொண்ட பாகிஸ்தானில் சுமார் 60 நகரங்கள் இருப்பதால், பாக்கிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மிதமான அல்லது பெரிய அளவிலான நகரத்தையும் இந்தியா இரண்டு அணு ஆயுதங்களை கொண்டு அதன் தற்போதைய ஆயுதங்களையும், நான்கு போர்க்கப்பல்களையும் பயன்படுத்தி 2025 க்குள் அதன் ஆயுதங்கள் 250 ஆயுதங்களாக வளர்ந்தால் தாக்கக்கூடும்.

கற்பனை செய்யப்பட்ட சூழ்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் 400 முதல் 500 அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டனர். இது சுமார் ஆறு ஆண்டுகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும்  இருக்கும் அணு ஆயுதமாகும். 

பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா அளவிலான குண்டுகள் (15 கிலோடோன் டி.என்.டி) முதல் சில நூறு கிலோடோன் வெடிக்கும் சக்தியை கட்டவிழ்த்து விடக்கூடிய நவீன ஆயுதங்கள் வரை உள்ளன.  இந்த சூழ்நிலையில் இந்தியா 100 அணு ஆயுதங்களை வைத்துள்ளது. பாகிஸ்தான் 150  ஆயுதங்களை வைத்துள்ளது.

அமெரிக்க  மற்றும் ரஷ்யா தற்போது உலகின் மதிப்பிடப்பட்ட 13,900 அணு ஆயுதங்களில் 93 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

அணு ஆயுதம் 2019*

 நாடு

முகாமில்

முகாமில் இல்லாதது

ராணுவ
கையிருப்பு

மொத்தம்

 ரஷ்யா

 1,600c

0d

 2,730e

4,330

6,500f

 அமெரிக்கா

 1,600g

150h

 2,050i

3,800j

6,185k

பிரான்ஸ்

 280l

n.a.

20l

300

300

சீனா

 0m

?

290

290

290m

இங்கிலாந்து

120n

n.a.

95

215

215n

இஸ்ரேல்

 0

n.a.

80

80

80o

பாகிஸ்தான்

 0

n.a.

140-150

140-150

140-150p

இந்தியான

 0

n.a.

130-140

130-140

130-140q

 வடகொரியா

 0

n.a.

?

20-30

20-30r

அமெரிக்கா:

 ~3,600

~150

~5,555

~9,330

 ~13,890

ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில்  ஆசிரியர்களில் ஒருவருமான ஆலன் ரோபோக் கூறியதாவது;-

அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் மழைப்பொழிவை 3 சதவீத  வரை குறைக்கலாம் மற்றும் தாவரங்கள் ஆற்றலை உயிர்ப்பொருளாக சேமித்து வைக்கும் வீதத்தை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கலாம்.

ஓசோன் குறைவு காரணமாக குளிர்ந்த வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு, குறைந்த சூரிய ஒளி மற்றும் அதிக புற ஊதா கதிர்வீச்சு ஆகியவற்றால் பயிர்கள் பாதிக்கப்படும்.

இதே போன்று ஒரு கால நிலை  இந்தோனேசியாவின் இன்றைய சுமத்ராவில் சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன்பு டோபா வெடிப்பு போன்ற சூப்பர் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு  உடனடி காலநிலை மாற்றம் ஏற்பட்டது. இது பூமியின் மிகப்பெரிய வெடிப்புகளில் ஒன்றாகும்.

கொலராடோ பல்கலைக்கழகத்தின் முதன்மை எழுத்தாளரும் பேராசிரியருமான ஓவன் பி டூன் கூறியதாவது;-

எரியும் நகரங்களிலிருந்து வரும் புகை வான் மண்டலத்தில் உயர்ந்து ஒரு வாரங்களுக்குள் உலக அளவில் பரவும். இதனால் பரவலான விவசாய தோல்விகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறினார்.

இது குறித்து டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பாரத் கர்நாட் கூறியதாவது:-

பகிர்வு கலாச்சாரம் மற்றும் சமூகங்கள் காரணமாக இது  கிட்டத்தட்ட சாத்தியம் இல்லை. இரு நாடுகளும் ஒருபோதும் நிர்மூலமாக்கும் போர்களை நடத்தாது. எனவே போர் ஏற்படும் சூழ்நிலை மிகவும் குறைவாகவே உள்ளன என கூறினார்.

வியாழன், 3 அக்டோபர், 2019

சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம்..!

மொழிப்பெயர்ப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 

பைபிள் மொழிப்பெயர்பாளரான செய்ண்ட் ஜெரோம் என்பவரின் நினைவாக சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.  கடந்த 1953ம் ஆண்டு சர்வதேச மொழிப்பெயர்ப்பாளர்கள் சம்மேளனம் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை கொண்டாட ஆரம்பித்தது. 

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது மட்டுமல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு முதல் செப்டம்பர் 30ம் தேதி சர்வதேச மொழிப்பெயர்ப்பு தினமாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்தது.

மொழிப்பெயர்ப்பாளர்களது வேலை உன்னதமாகவும் பல நாடுகளை இணைக்கும் விதமாகவும் உள்ளதால் அவர்களுக்கான சரியான அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது மொழிப்பெயர்ப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஒரு நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை மற்ற நாடுகளுக்கு எடுத்துச்செல்வதற்கு மொழிப்பெயர்ப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. பைபிள், குரானிற்கு அடுத்ததாக தமிழ் மொழியில் இயற்றப்பட்ட திருக்குறள் அதிக அளவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட நூல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது என்றால், அது மொழிப்பெயர்ப்பாளர்களால் மட்டுமே என்று கூறலாம். 
 

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

கசோகி கொலை : சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஒப்புதல்

உலகையே பரபரப்புக்குள்ளாக்கிய பத்திரிகையாளர் கசோகி கொலை சம்பவத்தில் ஒரு ஆண்டுக்கு பின் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் கட்டுரையாளராக விளங்கியவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஜமால் கசோகி, இவர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக தொடர்ந்து பத்திரிக்கைகளில் எழுதி வந்ததால் சவுதி அரேபியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபுகுந்தார்.

இதனிடையே தன் காதலியைத் திருமணம் செய்து கொள்ள  துருக்கி சென்றிருந்தார் கசோகி. திருமணத்துக்கான ஆவணங்களைப் பெறுவதற்காக இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதியன்று துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் சென்ற நிலையில் மாயமானார். 
அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு கூறியதுடன், இந்த கொலையில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அதிரவைத்தது. இதற்கான ஆதாரங்களை திரட்டி வருவதாகவும் துருக்கி கூறியது.

உலகையே அதிரவைத்த பத்திரிகையாளர் கசோகி கொலை சம்பவத்திற்கும் சவுதி அரேபிய அரசுக்கும் தொடர்பு இல்லை என சவுதி மறுத்தது.

இந்நிலையில் ஐ.நா சபையின் சிறப்பு நிபுணர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு கசோகி கொலை சம்பவம் குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. கசோகி கொலை தொடர்பாக அமெரிக்காவின் புலணாய்வு அமைப்பான CIAவும் விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே கசோகி கொலை தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான Frontline பத்திரிக்கையாளர் மார்டின் ஸ்மித், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேட்டி கண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கசோகி கொலை கொலை சம்பவத்தில் எனக்கு எல்லாப் பொறுப்பும் உள்ளது, இருப்பினும் இக்கொலை எனது கவனத்திற்கு வராமல் நடைபெற்ற ஒன்று என கூறினார் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர்.

கடந்த ஒரு ஆண்டாக கசோகி மரணம் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி வந்த நிலையில், திடீரென இந்த கொலை சம்பவம் குறித்து சவுதி பட்டத்து இளவரசர் ஒப்புதல் தெரிவித்துள்ளது உலக அரங்கை பரபரபாக்கியுள்ளது.

இந்த பேட்டியின் முழுமையான கலந்துரையாடலும் அக்டோபர் 1ம் தேதி இரவு 8 மணிக்கு  PBS Video App வாயிலாக  வெளியிடப்படும் என Frontline தெரிவித்துள்ளது.

கசோகியின் மரணத்திற்கு பிறகு கடந்த டிசம்பர் மாதத்தில் அவரின் சேவையை கவுரவிக்கும் விதமாக 2018ம் ஆண்டின் சிறந்த மனிதர் என அறிவித்ததுடன், கசோகி ‘உண்மையின் காவலன்’ என புகழாரம் சூட்டியிருந்தது நினைவுகூறத்தக்கது.


கஷோகி கொல்லப்பட்ட கதை :


 

சனி, 21 செப்டம்பர், 2019

உலக அமைதி நாள் செப்.21, 2002

ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி அனைத்து ஐநா உறுப்பு நாடுகளிலும் உலக அமைதி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாள் 1981-இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 21-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

போலி செய்திகளை பரப்பி வந்த ஆயிரக்கணக்கான அக்கவுண்டை முடக்கியது டுவிட்டர்

வாஷிங்டன்:

நவீன உலகில் செய்தி ஊடகங்களை காட்டிலும் பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக சமீப காலமாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பரவுவது அதிகரித்து வருகிறது. இந்த போலி செய்திகள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனால் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சில டுவிட்டர் கணக்குகளில் இருந்து இந்திய ராணுவத்தினர் காஷ்மீர் மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக போலியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். குறிப்பாக 'கேம் ஆப் திரோன்ஸ்’ திரை தொடரில் வரும் நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த பெண்ணின் கண் பார்வை இழப்புக்கு காரணம் இந்திய ராணுவத்தினர் என போலியான செய்திகள் பரப்பினர்.

மேலும், அசாம், ஜார்க்கண்ட் உள்பட பல மாநிலங்களில் குழந்தை கடத்தல் சம்பவங்களில் பலர் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் போலியாக பரவிய செய்திகளால் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதுபோன்ற போலி செய்திகள் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு விவகாரங்கள் தொடர்பாக போலி கணக்குகள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த சமூக வலைதள நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் போலி டுவிட்டர் கணக்குகள் மூலம் போலி செய்திகளை வெளியிட்டு வந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் இன்று முடக்கியுள்ளது.

அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து செயல்பட்டு வந்த போலி டுவிட்டர் கணக்குகளை நீக்கியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

2600 ஆண்டுகள் பழமையானது தமிழர் நாகரிகம் - உலகின் மூத்த குடிகள் என நிரூபித்த கீழடி ஆதாரங்கள்!


சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் 47 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கிய அகழாய்வில் இதுவரை பழங்காலக் கோட்டைச் சுவர், உறைகிணறு, பானை, பானை ஓடுகள், மூடிகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில், கீழடியில் செய்யபட்டு வரும் ஆய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடபட்டுள்ளது. கீழடியில் கிடைத்த பொருட்களை, அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வகதில் செய்யபட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

தமிழ்-பிராமி எழுத்து வடிவத்தின் காலம் கிமு.5 ம் நூற்றாண்டு என அழகன் குளம் ,கொடுமணல் , பொருந்தல் அகழாய்வின் படி கருதபட்டு வந்த நிலையில் கீழடி ஆய்வின்படி இன்னும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது.
மேலும் கீழடியில் வாழ்ந்த சங்ககால சமூகம், வேளாண்மையயும் கால்நடை வளர்ப்பையும் முதன்மை தொழிலாக கொண்டிருந்ததாக புனே டெக்கான் கல்லூரியில் எழும்புகளை பகுப்பாய்வு செய்த அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது.
கீழடியில் உள்ள கட்டுமான பொருட்களை ஆய்வு செய்ததில் செங்கற்கள் மற்றும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்திருக்கிறது. இந்த சுண்ணாம்பு சாந்தில் 97% சுண்ணாம்பு காணப்படுவதால் இன்று வரை நீடித்திருப்பதற்கு இதுவே காரணம் என்று சொல்லபட்டு இருக்கிறது.

கீழடியில் உள்ளூர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் மற்றும் சமையலுக்கான பானைகளை தயாரித்துள்ளனர். நெசவு செய்யும் தொழிற்கூடம் இருந்ததை கட்டுமானங்கள் ,தொல் பொருட்கள் உறுதிசெய்துள்ளது.
தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ’குவிரன்’ ’ஆதன்’ போன்ற பெயர்களும் முழுமை பெறாத சில எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. தங்கத்திலான பெண்கள் அணியும் ஏழு தங்க துண்டுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல் மணிகள், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள் ஆய்வில் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட் விளையாட்டு பொருட்கள், 35 காதணிகள்,அணிகலன்கள்,தங்கம்,செம்பு இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைதிருந்தாலும் வழிபாடுகள் தொடர்பான தொல்பொருட்கள் எதுவும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கபெறவில்லை என்று அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது.
இந்த ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் தமிழில் சங்ககாலம் இன்னும் பின்நோக்கி செல்லக்கூடும் என்றும் மிகவும் தொன்மையான நாகரீகம் என்று கருதப்படுகிறது.

#keeladi 

சனி, 7 செப்டம்பர், 2019

தகவல் தொடர்பை இழந்தது விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தலைவர் சிவன்

பெங்களூரு:

இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலாவை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 என்ற விண்கலம் நிலாவுக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நிலாவில் அடுத்தகட்ட ஆய்வு பணிகளை செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்து சந்திரயான்-2 விண்கலத்தை தயாரித்தனர்.

இந்த விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. இந்த 3 பகுதிகளிலும் அதி நவீன கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றை சுமந்து கொண்டு சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணுக்கு புறப்பட்டது.

கடந்த 2-ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் அமைப்பு தனியாக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு விக்ரம் லேண்டர் நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்தது. 2 தடவை விக்ரம் லேண்டரின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டு நிலவுக்கு மிக அருகில் கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்லத் தொடங்கியது. 400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கியதாக தெரிய வந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சிக்னலும் வரவில்லை எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

இதனையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில் விக்ரம் லேண்டர் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது தகவல் துண்டிக்கப்பட்டதாக அறிவித்தார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார்.

India's Chandrayaan-2 Vikram moon lander status a tense mystery