திங்கள், 7 மார்ச், 2011

சர்வதேசப் பெண்கள் தினம்

மார்ச் 8 பெண்கள் தினம் வந்தது எப்படி?
ஆண்டுதோறும், மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பொருளாதாரத்தில், உரிமையில், சமூக அமைப்பு என்று பல வகைகளில் ஆண்களுக்கு அடிமைப்பட்டு, அடைந்து கிடக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டவும், அவர்கள், ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற நிலையை உருவாக்குவதற்காகவுமே சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

முதன் முதலில் 1909ல் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவில் சோஷலிச கட்சி கொண்டு வந்த தீர்மானத்தை பார்லிமென்ட் ஏற்று, தேசிய பெண்கள் தினம் கடைபிடிக்க முடிவு செய்யப் பட்டது. அதன்படி, பிப்ரவரி 28ம் தேதி பெண்கள் தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது.

பிறகு, கோபன்ஹேகனில் 1910ல் நடந்த சர்வதேச மாநாட்டில், பெண்கள் தினம் கொண்டாடுவது பற்றி விரிவாக பேசப்பட்டது. அப்போது, சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடும் பல நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

இந்த வேண்டுகோளின்படி, பல நாடுகள் 1911ல் மீண்டும் விவாதித்தன. முதன் முறையாக, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 19ம் தேதி கொண்டாட முடிவு செய்யப் பட்டது. இதை ஏற்றுக் கொண்ட பல நாடுகளில் அன்றைய தினம், பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அதன்பின், மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் 1913ல் ஒன்று கூடி, மார்ச் 8ம் தேதியை பெண்கள் தினமாக கொண்டாட முடிவு செய்தன. இது பற்றி ஐ.நா., சபையில் விவாதிக்கப்பட்டு, சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி என இறுதி முடிவு எடுக்கப்பட்டது.


சர்வதேசப் பெண்கள் தினம்
---------------------------------
பெண்கள் தினம் என்றால்... தீபாவளி, பொங்கல் தெரியும். அது என்ன பெண்கள் தினம்? என்று உழைக்கும் கீழ்த் தட்டு பெண்கள் வர்க்கம் அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது என்றால் அது மிகையாகாது. சர்வதேசப் பெண்கள் தினம் முகிழ்க்கக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம்தான் காரணம் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!

பெண்கள் தினம்... அதுவும் சர்வதேசப் பெண்கள் தினம்?! இப்படி எல்லாம் ஒரு நாளைச் சொல்லி நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாடவேண்டிய நிலையில் இருக்கிறோம். மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர்தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்? சற்று வரலாறுகளில் வழுக்கிப் பின்னோக்கி நழுவினால் வியப்பூட்டும் பலதகவல்கள் நமக்கு அறியக் கிடைக்கிறது.

White women 1789ம் ஆண்டு ஜூன் 14ம்தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் (அரசனின் ஆலோசனைக் குழுக்களில்) என்று கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப்புரட்சியின்போது பாரீஸில் பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் வேண்டும் என்றும் வேலைக்கேற்ற ஊதியம், எட்டுமணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! கிளர்ச்சிகள் என்றால் ஏனோதானோவென்று இல்லாமல் அடுப்பூதும் பெண்கள், இடுப்பொடியப் பாடுபடும் பெண்கள் கையில் கிடைத்த ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு பாரீஸ் நகரத் தெருக்களில் அணி திரண்டனர். புயலாக கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று கர்ஜித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என அறிவித்தான்.

எதுவரினும் சந்திப்போம் என்று அஞ்சாமல் இரவு முழுக்க தெருக்கூட்டம் நடத்தி காலையில் அரசமாளிகை நோக்கி அணிவகுத்துக் கிளம்பினர் ஆயிரக்கணக்கான பெண்கள் கூட்டம்! அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் ஆயிரக்கணக்கில் கலந்துகொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப் பிளக்க அரசமாளிகை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் ஊர்ந்து சென்றது! அரசமாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்காப்பளர் இருவரையும் திடீரென பாய்ந்து தாக்கி கொன்றனர். இதைக் கேட்ட அரசன் அதிர்ந்துபோனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்திருந்தவர்களைச் சமாதானப்படுத்தினான். இயலாது போக அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்! தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண்பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர்போராட்டங்களில் ஈடுபட.. ஆளும்வர்க்கம் அசைந்து கொடுக்கத் துவங்கியது. அடிக்கிறபடி அடித்தால்தானே அம்மியும் நகரும்; இத்தாலியிலும் பெண்கள் வாக்குரிமை கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில்(Prussian King) இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும்! அந்த மார்ச் 8ம் நாள் தான் சர்வதேச பெண்கள் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்பட வித்தாக அமைந்தது.

நியூயார்க்...

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அகன்றிட உலக அளவில் அனைவரும் ஒருங்கிணைந்து பெண்களின் மேம்பாட்டிற்கான சில பொது நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்ற சிந்தனை உதயமான இடம்... அமெரிக்கா. அமெரிக்காவின் தொழிற்புரட்சி நகர் நியூயார்க். இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணி நேரம் வேலை செய்து குறைவான ஊதியத்தையே பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற்பசிக்கு இணங்கினால்தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

1857ல் நியூயார்க் நகரில் உழைக்கும் பெண்கள் கூடி குரல் எழுப்பினர். பெண்களின் முதல் குரல் ஒலிக்கத் துவங்கிய பொன்னாள்! தொடர்ந்து போராட்டங்கள், பெண்கள் அமைப்புகள் தோன்றின. 1908ல் எங்களுக்கு வாக்குரிமை கிடையாதா? என்று கிளர்ந்து எழுந்தனர். ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டே போராட்டத்தின் தாக்கம் கண்டு குலைந்து போனார். போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது. அதன் விளைவு 1910ல் கோபன்ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு கிளாரா தலைமையில் கூடியது.

மார்ச் 8....!

அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்படது. இந்த அமைப்பின் சார்பில் 1911ம் ஆண்டு மார்ச் 19ம்தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்து கலந்து கொண்ட மகளிர் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர். இந்தக் கூட்டத்தில்தான், அரசன் லூயிச் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ஐ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் நாளை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்! இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய பெண்கள் ஜெர்மனியில் பெண்கள் வாக்குரிமை கேட்டு மில்லியன் துண்டுப் பிரசுரங்களை நாடெங்கும் வினியோகித்தனர். ஜெர்மனியில் மகளிர் துவங்கிவைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்னைகளுக்காக போராடவேண்டும்; போராடினால்தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத் தலைப்பட்டு போராடத் துவங்கினர்! அன்று துவங்கிய போராட்டம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! காலத்தின் தேவைக்கேற்ப அவர்கள் எதிர்கொள்ளும் சவல்களை முன் வைத்துப் போராடி வருகின்றனர்! இன்றைக்கு பெண்கள் இல்லாத துறை உண்டா? மண்ணிலிருந்து விண்ணிற்கும், அலுவலரிலிருந்து ஆய்வாளர் வரையிலும், நிதியிலிருந்து நீதித் துறை வரையிலும் என்று சகலதுறைகளிலும் முகம் காட்டுகின்றனர்! அதிகாரங்களில் தலைமைப் பதவிக்கும் வந்தனர்; ஆண்களுக்கு நிகராக பலதுறைகளில் பிரகாசிக்கின்றனர்; நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்தனர்; ஆட்சியைப் பிடித்தனர்; அப்படி ஆட்சியில் அமர்ந்தாலும் அவர்களாவது அங்காவது பெண்கள சம்பந்தப்பட்ட பிரச்னைகளை முற்றிலுமாக களைந்தார்களா? களைய முடிந்ததா? என்ற கேள்விகள் ஒரு புறம் வலுவாக எழுந்தாலும் அடிநாளில் அவர்கள் மனங்களில் எங்களாலும் முடியும் என்ற விதை இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்றால் மிகையில்லை!

பெண்களுக்கு எதிரி பெண்களேவா?

"சிசு பிறந்ததும், பெண் எனத் தெரிந்ததும் நெல்லோ எருக்கம்பாலோ கொடுத்துக் கொன்றுவிடும் உசிலம்பட்டிக் கொடுமை; கணவன், மாமனார், மாமியார் சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு பெண்ணை சமையலறையில் எரித்துவிட்டு, ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று காவல் துறைப் பதிவேடுகளில் மாறும் அவலம்; சமூகத்திற்கு அரணாக, வேலியாக இருக்கவேண்டிய காவல் நிலையங்களே கற்பழிப்பு மையங்களாகின்ற கொடூரம் - இவைகளெல்லாம் குக்கிராமத்திலிருந்து பெரு நகரம் வரை அன்றாடம் நடைபெறும் செய்திகளாகிப் போய்விட்டன. நாட்காட்டிகள் கிழிபடுகிற ஒவ்வொருநாளும் பெண்கள் கிழிபடுகிற, வதைபடுகிற, சிதைபடுகிற, சின்னாபின்னப்படுகிற செய்திகள் நாளிதழ்களில் இடம் பெறாத நாளுண்டா?

"பெண்களுக்கு குறைவான ஊதியம், பணியிடங்களில் மோசமான முறைகளில் நடத்துதல், பெண்களுக்கு வாக்குரிமை மறுப்பு, துறை அமைச்சர்களே துறைச் செயலாளர்களைத் துயிலுரியத் துணிந்துடும் அவலங்கள்....இப்படி பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள், கொடுமைகள் அகன்றிட, இனி ஒரு நாளும் அனுமதியோம் என்று ஒவ்வொரு ஆணும் ஏன்? ஒவ்வொரு பெண்ணும் கூட சபதம் எடுத்துக்கொள்ள இந்த நாளில் முன்வருவோம்.

ஆணும் பெண்ணும் சமம் என்கிறோம்; சம ஊதியம் உலகில் பெரும்பாலான நாடுகளில் இன்றைக்கும் கூட கிடையாது என்பது வருந்தத்தக்க ஒன்று; ஆண்களுக்கு இணையாக பெண்கள் பல துறைகளில் பிரகாசிக்கின்ற இந்த நாளிலும், இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கிட்டுக்கு ஒருமித்த கருத்து ஏற்பட வழியைக் காணோம் என்பது துரதிர்ஷ்டமானது. பெண்களே, நீங்கள் மூன்றில் ஒரு பங்காக முடங்கிப் போவதில் சம்மதமா? உங்களிடம் என்ன திறமையில்லை? ஆணுக்குப் பெண் ஈங்கு இளைப்பில்லை கண்டீர்..." என்று எங்கும் எதிலும் துளிர்த்திடுங்கள்! ஆண்களுக்கு இல்லாத இட ஒதுக்கீடு, எங்களுக்கு எதற்கு? என்று முரசறைவீர்! புத்துணர்ச்சியோடு புத்துலகம் படைக்கப் புறப்படுங்கள்!!!

ஐக்கிய நாடுகள் அமைப்பு...

உலகில் வறுமைக்கோட்டிற்க்குக் கீழ் உள்ளவர்களில் நூற்றுக்கு 70 சதவீதம் பேர்கள், அதாவது 55 கோடிப் பெண்கள் என்பது கசப்பான உண்மை. உலக உணவுத் திட்ட அமைப்பின் தெற்காசிய பொறுப்பாளர் பெட்ரோ" ஏழை எளியோரின் பொருளாதார மேம்பாட்டுக்கு உணவு உதவியை மகளிரிடம் வழங்கும்போது அது குடும்பத்துக்கு பாதுகாப்பையும், அவர்கள் குழந்தைகளின் எதிர்கால உருவாக்கத்துக்கும் முக்கியமானதாக அமையும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். மீனைச் சாப்பிடக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பதற்கொப்ப பெண்களின் எதிர்கால வழ்வை தொலைநோக்கோடு ஐக்கிய நாடுகளின் அமைப்பு அணுகியுள்ளதை வரவேற்போம்.

68வது இடம்...

ஜெனீவா நாட்டைச் சேர்ந்த, இண்டர் பார்லிமெண்டரி யூனியன் என்ற அமைப்பு, உலகில் நாடுகள் பெண்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவம் குறித்து அந்த நாடுகளின் பாராளுமன்றங்களில் அளித்துள்ள பிரதிநித்துவம் பற்றி ஒரு ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. 177 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவிற்கு 68வது இடம் கிடைத்துள்ளது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு, பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சித் திட்டங்கள் என்று வாய்கிழியப் பேசும் இந்திய அரசியல் வாதிகளுக்கு இந்த ஆய்வறிக்கை ஒரு சவுக்கடி! இந்தியப்பாராளுமன்றத்தில் உள்ள 543 உறுப்பினர்களில் 49 பேர்களே பெண்கள். அதாவது வெறும் 9 சதவிகிதம். இதற்கு அரசியல்வாதிகள் மட்டுமா காரணம்? அரசியலில் பெண்கள் நுழைய தயங்குவது காரணமா? இந்த நிலைமாறிட உலகளாவிய பெண்கள் அமைப்புகள் தங்கள் சிந்தனையைச் செலவிடவேண்டும்.

சமையலறையே...

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் மனித வளத்தைப் பொறுத்தே அமையும். மனித சக்தி வளர்ந்த நாட்டிலும், வளர்ந்து வருகின்ற நாட்டிலும் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது? வளர்ந்த நாட்டில் இல்லாத மனித இனப் பாகுபாடு வளர்ந்து வருகின்ற மற்றும் பின் தங்கிய நாடுகளில் இருப்பதைக் காண்கிறோம். மனித இனத்தில் பாகுபாடு காட்டுவதென்பது மனித சக்திக்குத் தடையாக அமையும். அத்துடன் அது சமூக வளர்ச்சியையும் பாதிக்கும். ஆண் இனத்தவர்கள் பெண் இனத்தின் ஆற்றலையும், செயல்பாடுகளையும் அங்கீகரிக்காமல் இருத்தல், நசுக்குதல், போன்ற செயலில் ஈடுபட்டு ஒரு இனத்தின் சுய முகமே நசுங்கிப் போயிற்று.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று சமையலறையே சம்சாரத்தின் இருப்பிடம் என முகவரி சொல்லிவைத்தோம். ஆண்கள் துணையில்லாமல் பெண்களால் நிமிர முடியாது என முடக்கி வைத்தோம். இது இன்று நேற்று நடப்பதல்ல; சிலபல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகின்ற அவலம் இது! துச்சாதனன் துகிலுரிந்த காலத்திலிருந்து தொடர்கதையாய் தொடர்ந்திடும் பெண்ணினக் கொடுமைகள் வரலாற்றின் வடுக்கள் எனலாம்.

உலகின் முதல் தனியுடமை பெற்ற ஆதிகால மனிதன் முதற்கொண்டு இதை எழுதுகிற நானும் வாசிக்கிற
நீங்களூம் அறிந்தோ அறியாமலோ மலர்ந்த இன வளர்ச்சிக்குத் தடை செய்தவர்கள் என்ற சாதாரண உண்மையை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

கருத்தியல் சிந்தனை...

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா...", என்றோம்; "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்..." என்றோம்; இந்தப் போற்றிப் பாடிய துதிகளுக்கு அப்பால், "வினையே ஆடவர்க்கு உயிரே - மனையுரை மகளிருக்கு ஆடவர் உயிர்," என்றும் "உண்டி சிறுத்தல் பெண்டிற்கழகு" என்றும் இரும்புத்திரைகளை அடுக்கடுக்காய் அடுக்கி வைத்தோம். உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெண்மைக்குள் மென்மையை வலுவில் ஏற்றி அவர்களைக் கற்புக்கனலிகளாக, அழகுப் பதுமைகளாக, சுகம் தரும் நுகர்ச்சிப் பொருளாக, ஆண் உடமைப் பொருளாக ஆக்கி வைத்தோம்.

பெண்ணினத்தைப் பொருளியல் சார்ந்த உழைப்பிலிருந்து பிரித்து வைத்து, பொருளாதார நிலையில் தற்சார்பு நிலையை ஏற்படுத்தி, அறிவுப்பூர்வமாக அவளை முடமாக்கிய ஆணினத்தின் கருத்தியல் சிந்தனை அபார அடக்குமுறை கண்டது என்பதை வரலாற்றில் தெளிவாய்ப் பதியவைத்ததில் ஆணாய்ப் பிறந்த அனைவருக்கும் பங்குண்டல்லவா?

உலகின் சரிபாதிப் பேரின் சிந்தனா வளர்ச்சியை சமயம், தத்துவம், குடும்பம், கலாச்சாரம், ஆகியவற்றினூடாகத் திட்டமிட்டுத் தடை செய்தோரில் ஆண்களாய்ப் பிறந்த அனைவருக்கும் பங்குண்டு என்பதை எவராலும் மறுக்க இயலாது.

பெண்களுக்குப் பெண்களே...

பெண் சமத்துவக் கொள்கையில் சரியாக இருக்கும் நம்மில் பலர் நடைமுறை என்று வருகின்றபோது கோட்டுக்குவெளியே ஓடிப் போகிறோம். முதலில் நம் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்பட்டாகவேண்டும். ஆண் பெண் சமத்துவம் இல்லை என்று பெண்கள் கோஷமிடுகிற அதே நேரத்தில் மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துவது மருமகளை உயிரோடு கொளுத்துவது போன்ற கொடுஞ்செயல்களைச் செய்வதும் பெண்கள்தான். வரதட்சனைக் கொடுமையால் மட்டும் மாமியார்களால் எரித்துக் கொல்லப்படும் இந்திய மருமகள்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 6205 பேர்கள் என்று காவல்துறையின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. காவல் துறையின் கண்களுக்குத் தப்பிய நிழல் நிஜங்கள் எத்தனையோ? எனவே எதிர்காலத்தில் மாமியாராகப் போகும் இன்றைய மருமகள்களும் இந்தப் பாதகங்களைச் செய்யாமலிருக்க உறுதி கொள்ளவேண்டும். பெண்களுக்குப் பெண்களே எதிரிகள் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

தன்னந்தனியராய்...

அடையாறிலிருந்து அண்ணா நகர் வரை பஸ்ஸில் பயணப்படாத பெண்கள் கூட, இன்று அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும், சிட்னியிலும் சிங்கப்பூரிலும் தன்னந்தனியராய்ப் பணி புரிகிற அற்புதம் காண்கிறோம். " ஆணுக்குப் பெண் சளைத்தவர் ஈங்கில்லை கண்டீர் என்கிற கவிஞனின் கனவு நனவாகிற உன்னதம் காண்கிறோம். ஆயினும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, குடும்பங்களில் அடக்கியாளப்படும் தன்மை, ஒரே உழைப்பிற்கு சரி சமமற்ற ஊதியம் பெறும் முரண்பாடுகள், கருவறையிலேயே கல்லறை கட்டப்படும் பெண் சிசு பிரச்னைகள் இன்னும் வெவ்வேறு வகைகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் முடிவடைந்துவிடவும் இல்லை; குறையவுமில்லை. எங்கோ ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு மரண தண்டனையாக மூன்று இளம் பெண்கள் இன்னொரு புறம் எரித்துக் கொன்றுவிட்ட கொடும்பாதகம்; இந்த இளம் மலர்கள் கருக்கப்பட்டு சாம்பலாக்கபப்ட்ட கொடுமை! அதனினும் கொடுமை இந்தக் கொடுமைக்கு நடந்த கொடுமைகள் நீதித்துறையில் படும்பாடும்......நெஞ்சு பொறுக்குதில்லை நமக்கு...!?

யுவன்களும் யுவதிகளும்...

அமெரிக்காவில் மோனிகாவாகவும், தமிழ் நாட்டில் பத்மினியாக, பெங்களூரில் பிரதிபாக்களாகவும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் மீனா போன்றும் பெண்கள் பாழ்படுத்தப்படும் நிலை முற்றிலும் ஒழிய கடுமையான ஆயுள் தண்டனை தான் இதற்குச் சரியான தீர்வாக அமையும். இல்லையென்றால் இன்னும் நூறு நூற்றாண்டுகளுக்கு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடினாலும் மோனிகாக்களும் பத்மினிகளும் பிரதிபாக்களுகளும் மீனாக்களும் தொடர்வதைத் தடுத்து நிறுத்த இயலாது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், இதர தீங்கிழைப்புகளுமான குற்றங்கள் இந்தியக் காவல் துறைப் பதிவேடுகளில் வருடம் டோறும் சராசரியாக பதிவாவது மட்டும் எட்டு லட்சத்து 88 ஆயிரத்து 695 ஆகும். சர்வதேச அளவில் பில்லியன் கணக்கில் பெண்கள் தொடர்பான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அறிவு வளர்ந்திருக்கிறது; அறிவியல் வளர்ந்திருக்கிறது; தாயாய், தாரமாய், சகோதரியாய் பெண்களை பகுத்தறிந்து போற்றும் பண்பு மட்டும் இன்னும்...நம்மிடம்?!

"இளம் பெண் ஒருத்தி உடம்பு முழுக்க தங்க நகைகளை அணிந்துகொண்டு எவ்வித அச்சமுமின்றி நள்ளிரவில் தன்னந்தனியாக வெளியே சென்று பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப முடியும் என்கிற நிலை என்று ஏற்படுகிறதோ, அன்று தான் நாடு உண்மையான விடுதலை அடைந்ததாக அர்த்தம்" என்றார் மகாத்மா. மகாத்மாவின் கனவு நனவாக இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் உலகில் உள்ள ஒவ்வொரு யுவனும் யுவதியும் உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். ஆம்! பிரஞ்சுப் புரட்சியில் கிடைத்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வீறுகொண்டெழுந்து சென்ற பெண்களோடு நாங்களும் உங்களோடு என்று புறப்பட்டுப் போன வேகத்தோடு! யுவதிகள்... மட்டுமல்ல யுவன்களும்!!!

வராலாறுகளில் பெண் ஆட்சியாளர்கள்....!

வடகிழக்கு ஆப்பிரிக்காவின் அன்றைய மெரோவி (Meroe) ராஜ்ஜியத்தை கி.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஷ் (Cush) அரசி ஆண்டிருக்கிறார்! இதன் தலைநகராக குஷிட்டே (Cushite) இருந்துள்ளது. இன்றைக்கு இந்த நாடு சூடான் என்று நம்பப்படுகிறது! இவர்தான் முதல் பெண்ணரசி என்ற பெருமையைப் பெறுகிறார்!

இலங்கை...!

கி.மு.35ல் ஸ்ரீலங்காவை அரசி சிவாலி ஆண்டார்! இவர் தமிழகம் வழிவந்த தமிழ்ப் பெண் என்பாரும், சிங்களவப் பெண்ணரசி என்று சொல்வாரும் உண்டு! இவருக்குப் பின் அரசி அனுலா கி.மு. 42லிருந்து 47வரை ஆட்சி செய்தார்!

ஈழ போராட்டத்திலும் பெண்களின் பங்கு அளப்பெரியது. நிர்வாக துறையில் இருந்து யுத்தகளம் வரை ஆண்களுக்கு நிகரான பாங்கு தமிழ்தேசமெங்கும் வியாபித்திருந்தது. அது போல் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் முற்றாக ஒழிக்கப்பட்டு இருந்தன.

எகிப்து...!

எகிப்தை ஏழாவது கிளியோபாட்ரா (Queen Cleopatra VII ) கி.மு 50 லிருந்து 51 வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பின் கி.மு.80-81ல் பெர்நீஸ் ஆட்சி செய்தார். அரசி அர்சினோவ் (கி.மு.270முதல் 279வரை) அரசி நெ•ப்ரேட்டரி (கி.மு. 1225லிருந்து 1292 ) அரசி நெ•ப்ரேட்டிட்டி (கி.மு 1350-1372 ) அரசி டையீ (கி.மு.1340-1415) அரசி ஹேட்செப்ஸ்ட் (கி.மு.1498-1501) ஆகியோர் எகிப்தை ஆட்சி செய்துள்ள பெண் அரசிகளாவார்கள்!

பிரிட்டன்...!

பிரிட்டனின் அன்றைய இசினியா என்றழைக்கப்பட்ட நாட்டின் அரசன் பிராஸ்டகஸ் கி.பி.60ல் இறந்துவிட 61ல் அவனது மனைவி பொடீசியா ஆட்சிக்கு வந்தார். பின்னர் ரோமானியர்கள் இவளது ஆட்சியைக் கைப்பற்றினர்.

முதல் பெண் பிரதமர்...!

இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேருவின் மகளான இந்திராகாந்தி இரண்டு முறை பதவி வகித்த பிரதமரும் உலகின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார்! (19 ஜன 1966 முதல் 24 மார்ச் 1977 வரையிலும் 14 ஜன. 1980 முதல் 31 Oct 1984 வரை பிரதமராக இருந்தார். பதவியிலிருந்தபோது மெய்க்காப்பாளர்களில் ஒருவனால் சுட்டுக்கொல்லப்பட்டார் இவர்!

இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் கோல்டா மேயர் (1969-1974) உலகில் மூன்றாவது பெண் பிரதமர்!

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பிரதமராக இருந்தவர் எலிசபெத் டோமிட்டின்(1975-1976) பிரிட்டனின் தேர்ந்த்டுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் தாட்சர்!(4 மே1979 முதல் 28நவ.1990 வரை) ஐரோப்பிய நாடுகளிலிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் உடையவர்.

இலங்கையை 1956லிருந்து 1959 வரை பிரதமராக ஆட்சி செய்தவர் சாலமோன் பண்டாரநாயகா. இவர்தான் முதல் பெண் பிரதமர்! அலுவலகத்திலிருக்கும்போது இவர் கொல்லப்பட்டார். இவருக்குப் பிறகு ஸ்ரீமாவோ பண்டாரநாயகா மும்முறை (21 ஜூலை 1960 முதல் 27 மார்ச் 1965, 29 மே 1970 முதல் 23 ஜூலை 1977 மற்றும் 14 நவம்பர் 1994 முதல் 10 ஆகஸ்ட் 2000வரை) இவரின் மகளான சந்திரிகா குமாரதுங்கா தனது தாயாரை பொதுத் தேர்தலில் வென்று பிரதமரானதும் குறிப்பிடத்தக்கது!

ஏஞ்செலா மெர்க்கெல் ஜெர்மனின் கூட்டரசு வேந்தராக 22 நவம்பர் 2005லிருந்து பொறுப்பேற்றுள்ளார். சாவோ டோம் மற்றும் பிரின்சிபே நாட்டின் பிரதமராக மரியா டோ கார்மோ சில்வேரா 8 ஜூன் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முன் மரியா டாஸ் நேவாஸ் செய்டா பேப்டிஸ்ட்டா டி செளஸா 7 அக். 2002 முதல் 16 ஜூலை 2003வரை ஆட்சிப்பொறுப்பிலிருந்தார்.

உக்ரைன் நாட்டின் பிரதமராக யூலியா டிமோஷென்கோ 24 ஜனவரி முதல் அந்த ஆண்டு செப்டெம்பர் 8ம்தேதி வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்தார். ராட்மிலா சேகெரின்ஸ்கா மசிடோனியாவின் பொறுப்பு பிரதமராக 2004ம் ஆண்டு இருந்தார்; லூயிஸா டயஸ் டியாகோ ஆப் மொஸாம்பிக் நாட்டின் பிரதமராக 17 பிப். 2004 லிருந்து பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்று இருந்துவருகிறார்.

பின்லாந்தின் முதல் பெண் பிரதமராக அன்னெலி டுலிக்கி ஜாட்டீன்மாகி 2003ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியிலிருந்து ஜூன் 18ம் தேதிவரை மூன்று மாதங்கள் பதவி வகித்துவிட்டு சொந்தக் காரணங்களால் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். தென்கொரியாவின் பிரதமராக சாங் சேங்கை அந் நாட்டு அதிபர் கிம் 2002ல் நியமித்தார். பாராளுமன்றம் இந்த நியமனத்தை நிராகரிக்கவே பத்துமாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!

செனகல் நாட்டின் பிரதமராகமார்ச் 3 2001 முதல் 2002 நவம்பர் வரை மாமே மாடீயோர் போயி ஆட்சிப் பொறுப்பிலிருந்தார். 1999 டிச.10லிருந்து ஹெலன் எலிசபெத் கிளார்க் நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வருகிறார். இவருக்கு முன் ஜென்னி ஷிப்லே 1997 லிருந்து டிசம்பர் 1999 வரை பிரதமராக இருந்தார். இவரே இந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற தகுதியும் உடையவர்!

கயானா குடியரசின் பிரதமராக 1997ல் ஜேனட் ஜெகன் பதவி வகித்தார். பங்ளாதேசின் பிரதமராக இருந்த சேக் முஜிபுர் ரஹிமானின் மகளான சேக் ஹசீனா வஜெட் 1996லிருந்து 2001 வரை பிரதமராக இருந்தார். காலிடா ஜியா பங்ளா தேசின் பிரதமராக இரு முறை பதவி வகித்த பெண் பிரதமர். இவரும் முஜிபுர் ரஹ்மானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

1995 லிருந்து 1996 வரை ஹாய்ட்டி நாட்டின் பிரதமராக இருந்தவர் கிளாடிட்டே ரிலேய் ஆவார். 1994லிருந்து 1995 வரை பல்கேரிய பிரதமராக இருந்தவர் ரெனெட்டா இண்ட்ஷோழ்வா ஆவார். ரவாண்டா குடியரசின் பிரதமராக 1993-94ல் பதவி வகித்தவர் அகாதே உவில்ஜியிமானா ஆவார். புருண்டியின் பிரதமராக 1993-94ல் இருந்தவர் சில்வி கினிகி. துருக்கி நாட்டின் பிரதமராக டான்சு சில்லர் 1993-1996 வரை இருந்தார். கனடாவின் முதல் பெண் பிரதமராக கிம் கேம்ப்பெல் 1993ல் ஆறுமாதங்களுக்கு குறைவாக இருந்தார். போலந்து நாட்டின் பிரதமராக ஹான்னா சச்சோக்கா 1992-93ல் இருந்தார். பிரான்சின் பிரதமராக ஈடித் கிரஸ்ஸென்னும்(1991-1992)

மங்கோலியா- நையாம் ஓசோரின் டுய்யா 1999லிருந்தும், லிதுவேனியாவில் இரீனா டிகுட்டீன் இருமுறை பொறுப்பு பிரதமராக இருந்திருக்கிறார். 1990 முதல் 1991 வரை கஷிமிரா டாண்ட்டி புருன்ஸ்கினி லிதுவேனியாவின் பிரதமராக இருந்தார்.

பாகிஸ்தானின் பிரதமராக இருந்த புட்டோவின் மகள் பெனாசிர் புட்டோ இரண்டு முறை பிரதமராக பதவி வகித்த இந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. யுகோஸ்லோவியா நாட்டின் பிரதமராக (1982-1986) மில்கா பிளானிக் முதல் கம்யூனிச பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

நார்வே நாட்டின் பிரதமராக மூன்று முறை இருந்த பெருமை குரோ ஹார்லெம் ப்ருண்ட்லாண்டுக்கு உண்டு. இவர் உலக சுகாதார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

டொமினிகா குடியரசு நாட்டின் பிரதமராக மேரி யூஜினா சார்லஸ் (1980-1995) பதவி வகித்து மறைந்தவர்.

போர்ச்சுக்கல்லின் பிரதமராக மரியா டி லூர்து பின்டாசில்கோ 5மாதங்கள் 1979ல் பதவி வகித்தார்.

தமிழ்நாட்டு வீரப் பெண்மணிகள்

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியர்கள் நடத்திய போராட்டம் ஒரு வீர சகாப்தம். அந்த சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட வீரப் பெண்மணிகள் பற்றி உலகப் பெண்கள் தினத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். இது ஒரு முழுமையான பட்டியல் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்துள்ள ஒரு சிலரை இங்கே வரிசைப் படுத்தியுள்ளேன்.

அஞ்சலை அம்மாள்: அஞ்சலை அம்மாள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். இவர் குடும்பமே விடுதலைப் போரில் ஈடுபட்டது. 1931ல் உப்புச் சத்தியாக்கிரகம், 1940ல் தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றில் ஈடுபட்டவர். சென்னையில் தடைவிதிக்கப்பட்ட காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பெண் படையுடன் கைதானவர். சுதந்திரத்திற்குப் பின் ஜில்லா போர்டு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

அசலாம்பிகை அம்மாள்: திருப்பாபுலியூர் அசலாம்பிகை அம்மாள் சிறந்த மேடைப் பேச்சாளர். இந்திய விடுதலை இயக்கச் செய்திகளைக் "காந்தி புராணம்" என்ற பெயரில் எழுதியவர். 19.9 1921ல் கடலூருக்கு காந்தி வந்த போது அவருக்கு வரவேற்புரையைத் தயாரித்துப் படித்தவர்.

கே.பி.ஜானகி அம்மாள்: தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் பாடல்கள் தென் மாவட்டங்களில் பிரபலம். இவர் கணவர் குருசாமியும் சுதந்திரப் போராட்ட வீரர். யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக தண்டிக்கப்பட்டவர். 1992ம் ஆண்டு மறைந்தார்.

சரஸ்வதி பாண்டுரங்கம்: இவர் உப்புச் சத்தியாக்கிரகம் உட்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். மகளிர் உரிமைக்காகப் பாடுபட்டவர். சென்னையில் 'கன்னியா குருகுலம்' என்ற அமைப்பை உருவாக்கி மகளிர் சேவையில் ஈடுபட்டார்.

வேலு அம்மாள்: சிவகங்கை மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த வேலு அம்மாள் ஆகஸ்ட் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் லட்சுமி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவத்தில் பெண் தளபதியாக பணியாற்றியவர். பர்மா காடுகளில் இவரை பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. மருத்துவரான இவர் தற்போது மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு சேவை செய்து வருகிறார்.

ருக்மினி லட்சுமிபதி: 1892ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி சென்னையில் பிறந்தவர். அந்தக் காலத்திலேயே கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். 1937ல் இராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் துணை சபாநாயகராகவும், 1946ல் பிரகாசம் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தவர். முதல் பெண் அமைச்சர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. 1951ல் காலமானார்.

அம்புஜம்மாள்: 1932ல் அந்நியத் துணி புறக்கணிப்பு இயக்கத்தில் தீவிரமாக பயாற்றியவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.

பத்மாசினியம்மாள்: ஒத்துழையாமை இயக்கம் முதல் ஒவ்வொரு போராட்டத்திலும் மறியல்களிலும் கலந்துகொண்டு சிறை சென்றவர். தன் சொத்துக்களைத் தானமாக வழங்கியவர். 1897ல் காலமானார்.

வி.கே.ஏ.பங்கஜத்தம்மாள்: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது ஏழு வயது முதல் பஜனை பாடியும்

மேடைகளில் பேசியும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு பலமுறை சிறை சென்றவர். 1937ல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

லட்சுமி பாரதி: நாவலர் சோம சுந்தரபாரதியின் மகளும் விடுதலைப் போராட்ட வீரர் கிருஷ்ணசாமி பாரதியார் மனைவியுமாவார். 1932ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர். 1937ல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

Indian Woman பத்மாவதி ஆஷா: திருப்பூரில் வாழ்ந்தவர். 1930ல் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்று பல முறை சிறை சென்றவர்.

சகுந்தலா பாய்: திருவெண்ணெய் நல்லூர் அருகே கிருபா ஆசிரமம் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவி ஏழைகளுக்கு கல்வி மருத்துவ சேவையில் ஈடுபட்டார். உப்புசத்தியாக் கிரகம் உட்படபல போராட்டங்களில் ஈடுபட்ட இவர் பல வெளிமாநில போராட்டங்களுக்கும் சென்று போராட்டங்களில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு அம்மாள்: இவர் சிறந்த வழக்கறிஞர். மகளிர் மேம்பாட்டுக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு

விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டவர். சென்னை மாகாண சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தவர்.

அம்மு சாமிநாதன்: 1942ல் நடைபெற்ற ஆகஸ்டு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். பலமுறை சிறை சென்ற இவர் சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் 1946ல் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

அகிலாண்டத்தம்மாள்: இவர் மதுரையைச் சேர்ந்தவர். பல போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்.

பர்வத வர்த்தினி: 1932ல் நடைபெற்ற ஜவுளிக் கடை மறியல் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர். - நன்றி கீற்று ஆல்பர்ட்

வியாழன், 24 பிப்ரவரி, 2011

மாற்றங்களின் நிதர்சனம்

உலக சரித்திர வரலாற்றில் பல அத்தியாயங்கள் நிகழ்கால உலகின் பற்பல மாற்றங்களுக்கு வழிகோலியுள்ளது. மாற்றங்களின் காலக்கணிப்புக்கள் நிமிடங்களாக இருக்கலாம் அல்லது மணித்தியாலங்களாக இருக்கலாம் நாட்கள் மாதங்கள் ஏன்? பல வருடங்களாகக் கூட இருக்கலாம்.

மாறிவரும் உலக ஒழுக்குகளின் சாதக பாதக விடயங்களை நாங்கள் எங்கள் ஏழாவது அறிவுடன் பேசிப்பார்ப்பது இந்த வலைப்பதிவில் நான் எழுதுவது காலக்கிரமத்தின் அடிப்படையில் சிறப்பானது என்று என்னுகின்றேன்

கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் பாரம்பரிய ஆட்சிமுறைகள் மனித உறவு முறைகள், மதவழிபாட்டு அனுஷ்டானங்கள், அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வடிவங்கள் என்பன இந்த மாற்றங்களுக்கூடான வழிமுறையில் உலக ஒழுக்கின் பாதையில் விபத்துக்குள்ளாகி சிக்கி சின்னாபின்னாமாகியன நிதர்சனம்.

ஜரோப்பிய சரித்திரத்தை நோக்கும் போது தற்போதைய மாற்றங்கள் அன்று மறுமலர்ச்சி காலமாக நோக்கப்பட்டது.அன்றைய மறுமலர்ச்சி பல புதிய தலைமுறைக்கான தேர்ந்த களமாக அன்றைய காலச்சூழல் ஒத்துழைத்திருந்தது. அரசாட்சி முறைகள் மதரீதியான அடக்குமுறைகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டமை பிரபுக்களுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான பாரிய வேறுபாடுகள் ஜாதி இன மொழிப் பாகுபாடுகள் என்பன மக்கள் சக்தி மூலம் பாரிய சக்தி வடிவமாக வெளிக்கொணரப்பட்டு மறுமலர்ச்சி என்ற பதத்திற்கு அர்த்தத்தை உருவாக்கி புதிய உலக ஒழுக்கிற்கு வழிகோலியது.

இதுபோல் உலக வாரலாற்றில் பல மாற்றங்களுக்கு பல கால சூழல்கள் தத்தமது பாதைகளை திறந்துவிட்டிருக்கின்றன...

விசேடமாக உலக யுத்தங்களின் பின்னரான பூகோள வரைபடங்களின் மாற்றங்களும் நடவடிக்கைகளும் சர்வதேச கட்டமைப்புக்களில் புதிய கள முனைகளையும் திறந்து விட்டன.

பல்தேசியக் கம்பனிகளின் கூட்டுக்களை போல் ஜக்கிய நாடுகளின் சபை உருவாக்கப்பட்டது வரவேற்கப்பட்டது....அன்று! எழுதியது - Friday, November 13, 2009 (http://amalathaselroyleslee.blogspot.com/2009/11/blog-post.html)


.....................................இன்று........................................
பெய்ஜிங்: துனீசியா, எகிப்தில் தொடங்கிய மக்கள் புரட்சி இப்போது பல நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் தொடங்கிய இப்புரட்சி லிபியாவிலும் அதிபர் கடாபிக்கு எதிரான போராட்டமாக வலுத்துள்ளது.

இந்நிலையில் அண்டை நாடான சீனாவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் உருவானது. ஆனால் காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டினர். கம்யூனிஸ ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் நகரில் திரண்டனர். பெய்ஜிங் நகரில் மெக்டொனால்ட் விடுதிக்கு எதிரில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

இணையதளம் மூலமாக பரப்பப்பட்ட இப்போராட்ட தகவலின் அடிப்படையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு திரண்டனர். வர்த்தகப் பகுதியான வாங்புஜிங் தெருவில் ஒரு சில நிமிஷங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆரம்பத்திலேயே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு காவல்துறையினர் கூட்டத்தினரை விரட்டியடித்தனர். மேலும் சிலரைக் கைது செய்தனர்.

சீன அரசு எதிர்ப்புக் குழு தலைவரான லியு ஜியோபோ-வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பரிசைப் பெற ஆஸ்லோ செல்லவும் அவரை அனுமதிக்கவில்லை. இதை கண்டித்து பெய்ஜிங்கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்த தகவல் முதலில் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா-வில் வெளியானது. பிற்பகல் 2.10 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்களில் 2 பேரை மட்டுமே ரோந்து காவல்துறையினர் கைது செய்து வேனில் கொண்டு சென்றதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல ஷாங்காய் நகரில் மக்கள் நூற்றுக் கணக்கில் திரண்டனர். யுனான் ஷோங் சாலை மற்றும் ஹன்கோ சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தை காவல்துறையினர் தடியடி கலைத்தனர். கூட்டத்திலிருந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர். "மல்லிகைப் புரட்சி' என்று இந்த போராட்டத்துக்கு பெயரிட்டு அதற்காக மக்களை திரட்டும் பணியில் ஈடுபட்டதை அரசு ஓரளவு யூகித்திருந்தது. ஆனால் அது எப்படி நடக்கும் என்பதை தீர்மானிக்கும் முன்பாகவே ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை மிரளச் செய்துவிட்டனர்.

இத்தகைய போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்ய பயன்படும் இணையதளத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை அரசு தடை செய்தது. ஆனால் அமெரிக்காவிலிருந்து செயல்படும் மற்றொரு இணையதளம் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு ஒன்று திரண்டனர். சீனாவில் 45 கோடி பேரிடம் இணையதள இணைப்பு உள்ளது. 5 கோடிக்கும் அதிகமான பிளாக்-குகள் இங்குள்ளன. ஆனால் அதிகாரபூர்வமற்ற வகையில் 10 கோடி பிளாக்-குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

உலகில் மாற்றம் ஒன்றுமட்டுமே மாறிக்கொண்டு இருக்கும்...

நிலமெல்லாம் ரத்தம்

இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அரபு தேசங்கள் என்று தனித்தனியே நாடுகள் கிடையாது. சுமார் 1350 வருடங்கள் ஒட்டாமான், துருக்கியப் பேரரசின் அங்கங்களாகவே இன்றைய அரபு தேசங்கள் அனைத்தும் இருந்தன. அதாவது, அகண்ட இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம். பாலஸ்தீன், ஈராக், ஈரான், லெபனான், சிரியா என்று துண்டு தேசங்கள் உருவானதெல்லாம் இரண்டாம் உலகப்போருக்கும் பிரிட்டன் விடை பெற்றதற்கும் பிறகுதான். அதற்கு முன் ஒரே பேரரசு. அதன்கீழ் பல சிற்றரசுகள். அவ்வளவுதான்.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களை ஒட்டி பல்வேறு அரேபிய தேசங்கள், ஒட்டாமான் சாம்ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து சுதந்திர தேசங்களாயின. பாலஸ்தீனும் அப்படியரு சுதந்திர தேசமாக ஆகியிருக்க வேண்டியதுதான். ஆகமுடியாமல் போனதன் காரணம், பிரிட்டன் உதவியுடன் யூதர்கள் அங்கே ஊடுருவி இடத்தை நிரப்பியதுதான்.

இந்தக் கோபம்தான் அரேபியர்களுக்கு. நியாயமான கோபமே என்றாலும் வேறு வழி இல்லை என்பதால், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கமிட்டியின் பரிந்துரையின் பேரில் ஐ.நா அறிவித்த பாலஸ்தீன், இஸ்ரேல் எல்லைப் பிரிவு நடவடிக்கையை மனத்துக்குள் ஒருவாறு ஏற்றுக்கொள்ளத் தயாராகித்தான் இருந்தார்கள். தமது எதிர்ப்பைப் பதிவு செய்ய யுத்தத்தைத் தொடங்குவது, முடிவு எப்படியானாலும் ஐ.நா. பிரித்துக்கொடுத்த நிலம் எப்படியும் இருக்கத்தானே போகிறது என்று அப்பாவி அரேபியர்கள் நினைத்தார்கள்.

கவனிக்கவும். இவர்கள் புரட்சிக்காரர்கள் அல்லர். கலகக்காரர்கள் அல்லர். அக்கம்பக்கத்து அரபு தேசங்களின் துணையுடன் யுத்தத்தில் பங்குபெறக் களம் சென்றவர்கள் அல்லர். மாறாக, படிப்பறிவோ, அரசியல் எண்ணமோ, வாழ வழியோகூட இல்லாத அடித்தட்டு வர்க்கத்து அரேபியர்கள். இவர்கள்தான் பெரும்பான்மையினர். இவர்களுக்கு உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லவோ, வழிநடத்தவோ, அறிவுரைகள் கூறவோ அன்றைக்கு யாரும் இருக்கவில்லை. அரபு இனத்தலைவர்கள் என்று அறியப்பட்ட ஒரு சிலர் யுத்தம் குறித்துச் சிந்திக்கப் போய்விட்டார்கள். இளையவர்கள் எல்லாரும் கிடைத்த ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு, ‘யூதர்களை ஒழிக்காமல் வரமாட்டேன்’ என்று டெல் அவிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டார்கள். நோயாளிகள், வயதானோர், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கிய இந்தப் பெரும்பான்மை அரபுக்கள், தாம் வசித்து வந்த மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளில் வீட்டுக்குள் பதுங்கியபடியே என்ன ஆகுமோ என்று தமக்குள் எண்ணியெண்ணிப் பயந்துகொண்டிருந்தார்கள்.

பாலஸ்தீன் – இஸ்ரேல் பிரச்னையின் நவீனகால வரலாறு என்பது இந்த இடத்தி¢ல்தான் தொடங்குகிறது.

ஒரு பக்கம் அரபுகள் என்னவாகுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம், இதே அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த இஸ்ரேல் யூதர்களும் இதே போலத்தான் அஞ்சிக்கொண்டிருந்தார்கள். என்ன ஆகுமோ?

பெரும்பான்மை மக்களின் இந்த அச்சத்துக்கும் சிறுபான்மை வீரர்கள் மற்றும் புரட்சிக்காரர்களின் கோபம் மற்றும் துவேஷத்துக்கும் நிறைய இடைவெளி இருந்தது. எப்படி அரேபியப் புரட்சிக்காரர்கள், தமது பெரும்பான்மை மக்களின் மனநிலை என்ன என்பதைக் கேட்டறிந்துகொள்ள விரும்பவில்லையோ, அதே போலத்தான் பெரும்பான்மை யூத மக்களின் கருத்தையும் இஸ்ரேலிய அரசோ, இஸ்ரேல் ராணுவமோ அந்தத் தருணத்தில் பொருட்படுத்தவில்லை.

யுத்தம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அவ்வளவுதான்.

எகிப்து, லெபனான், ஜோர்டன், ஈராக் மற்றும் சிரியாவின் படைகள் ஒரு பக்கம் பாலஸ்தீனப் போராளிகளுக்கு ஆதரவாக நின்றன. எதிர்ப்பக்கம் இஸ்ரேல். அன்று பிறந்த இஸ்ரேல். அதற்கு முன் அவர்கள் தனியொரு தேசத்தைக் கண்டதில்லை. தனியொரு ராணுவத்தை வைத்துப் பயிற்சியளித்துப் பெரும் யுத்தங்களைச் சந்தித்ததுமில்லை. போர்க்கால நடவடிக்கைகள் என்றால் என்ன என்பதையே அந்தப் போரின் இறுதியில்தான் அவர்கள் அறியப்போகிறார்கள்.

யோசித்துப் பாருங்கள். மே 14, 1948 அன்று இஸ்ரேல் பிறந்தது. மறுநாள் அதாவது மே 15-ம் தேதி இந்த யுத்தம் ஆரம்பிக்கிறது. அதுவும் ஒரு நாள், ஒருவார, ஒரு மாத கால யுத்தமல்ல. ஒரு முழு வருடத்தை விழுங்கப்போகிற யுத்தம்.

இத்தனை தேசங்கள் தம்மை ஆதரிப்பதால் எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை, பாலஸ்தீன் போராளிகளுக்கு இருந்தது. தமது குறைந்த போர்த்திறமை, சரியான தலைமை இல்லாமை, வியூகம் வகுக்கத் தெரியாதது போன்ற அத்தனை குறைகளுமே ஒரு பொருட்டில்லாமல் போகும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஒட்டுமொத்த அரபு சமுதாயமும் இஸ்ரேலுக்கு எதிராகத் திரண்டு நிற்கும்போது நேற்று முளைத்த சுண்டைக்காய் தேசத்தால் என்ன செய்துவிட முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது இஸ்ரேலை யுத்தத்தில் தோற்கடிப்பது, ஒரு யூதர் விடாமல் அத்தனை பேரையும் பாலஸ்தீனை விட்டு ஓட ஓட விரட்டுவது. இதுதான் அரேபியர்களின் திட்டம்.

யூதர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தமது ஆண்டாண்டு காலக் கனவான தனிநாடு என்பதை அடைந்துவிட்டிருந்த மகிழ்ச்சி மேலோங்கியிருந்ததால், யுத்தம் குறித்த பயம் அவர்களிடையே பெரிதாக இல்லை. ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி. தமது தேசம் தமக்கு உண்டு என்கிற எண்ணம்தான் அவர்களிடம் இருந்தது. ஒருவேளை யுத்தத்தில் தோற்க நேரிட்டால் இஸ்ரேலின் சில பகுதிகளை இழக்க நேரிடலாம். இருக்கவே இருக்கிறது ஐ.நா. சபை. ‘நீங்கள் வகுத்தளித்த நிலத்தை அபகரித்துவிட்டார்கள்; திரும்ப வாங்கிக்கொடுங்கள்’ என்று கேட்கவும் அவர்கள் சித்தமாக இருந்தார்கள்.

இதென்ன குழந்தைத்தனமாக இருக்கிறதே என்று தோன்றலாம். உண்மை அதுதான். இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்ற டேவிட் பென் குரியனிடம் அவரது அமைச்சரவை சகா ஒருத்தர் இந்த மாதிரியே சொல்லியிருக்கிறார்.

ஆயிற்று. மே 15-ம் தேதி யுத்தம் தொடங்கிவிட்டது. முதல் குண்டு டெல் அவிவ் நகரில் வந்து விழும்போது மணி காலை 9.15. வீசியது ஒரு பாலஸ்தீனப் போராளி. எங்கிருந்து அவர்கள் ஊருக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்பதே முதலில் இஸ்ரேல் ராணுவத்துக்குப் புரியவில்லை. தெற்கிலிருந்து எகிப்துப் படைகள் முன்னேறி வந்துகொண்டிருந்தன. வடக்கிலிருந்து லெபனான் மற்றும் சிரியாவின் படைகள். மேற்கில் டிரான்ஸ்ஜோர்டன் ராணுவம். வடமேற்கிலிருந்து ஈராக் ராணுவம். கிழக்குப் பக்கம் பற்றிக் கவலையே இல்லை. மத்திய தரைக்கடலைக் காட்டிலும் எந்த ராணுவத்தின் பலம் அதிகமாக இருந்துவிட முடியும்?

இஸ்ரேல் முதலில் தற்காப்பு நடவடிக்கைகளாகத்தான் மேற்கொண்டது. முதலில் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் மிகத்தீவிரமாக கவனம் செலுத்தினார்கள். ராணுவத்தின் ஒரு பகுதியைப் பிரித்து எல்லைக் காவலுக்கு அனுப்பிவிட்டு, இன்னொரு பகுதியை டெல் அவிவிலேயே வைத்துக்கொண்டார்கள். மூன்றாவதாக ஒரு பிரிவைத்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தினார்கள்.

இந்த யுத்தத்தில் இஸ்ரேல் எப்படிச் செயல்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம். அமெரிக்கா முதல் பிரிட்டன் வரை, பிரான்ஸ் முதல் பெல்ஜியம் வரை அத்தனை தேசங்களும் அதைத்தான் கவனித்துக்கொண்டிருந்தன. எந்தச் சமயத்திலும் யார் வேண்டுமானாலும் உதவிக்கு வரலாம் அல்லது மௌன சாமியாராகவே இறுதிவரை கூட இருந்துவிடலாம்.

ஆனால் இஸ்ரேல் யுத்தத்தில் வெற்றி பெற்றுவிடுமானால் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் இஸ்ரேல் விஷயத்தில் சற்று அக்கறையுடன் நடந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை அவசியம் வரும். பொருட்படுத்தத்தக்க தேசமாகத் தன்னைக் காட்டிக்கொள்ள இந்த யுத்தம் ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்தார் பென் குரியன். இஸ்ரேல் ராணுவத்தின் வியூகம், அவரது இந்த எண்ணத்தைத்தான் பிரதிபலித்தது.

யுத்தம் சூடுபிடித்தது. இரு புறங்களிலும் மிகக் கடுமையாக தாக்கத் தொடங்கினார்கள். பாலஸ்தீன் போராளிகளைப் பொறுத்தவரை அது வாழ்வா சாவா யுத்தம். ஆகவே தமக்கு ஓரளவு நன்கு தெரிந்த கெரில்லா போர்ப்பயிற்சி முறையையே அவர்கள் அதிகமாகக் கையாண்டார்கள். எதிர்பாராத நேரத்தில், இடத்தில் தாக்குதல் நடத்துவது. கையில் இருப்பது ஒரேயொரு நாட்டு வெடிகுண்டேயானாலும் குறைந்தது ஐம்பது பேரையாவது கொல்லும் வகையில்தான் அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர்கள் மிகவும் உறுதியுடன் இருந்தார்கள்.

உதவிக்கு வந்த படைகளைப் பொறுத்தவரை எகிப்தின் ராணுவம் இருந்தவற்றுக்குள்ளேயே சற்று கட்டுக்கோப்பான ராணுவம் என்று சொல்லவேண்டும். இஸ்ரேல் பயந்ததும் அதற்குத்தான்.

குண்டுகளை வீணாக்காமல் மிகவும் சாமர்த்தியமாக அவர்கள் யுத்தம் செய்தார்கள். அரசுக் கட்டடங்களைத் தாக்குவது, காவல் நிலையங்கள், ராணுவ முகாம்கள், மருத்துவமனைகள் கண்ணில் பட்டால் உடனே அவற்றைத் தாக்கி அழிப்பது என்பதே எகிப்து ராணுவத்தின் முதல் இலக்காக இருந்தது.

ஈராக் படையினர் கண்மூடித்தனமாக முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஒரு பயிற்சி பெற்ற ராணுவம் போல் அல்லாமல், கலவரக்காரர்கள் போல் அவர்கள் தாக்குதலில் ஈடுபட விரும்பினார்கள். சிரியா, லெபனான், ஜோர்டன் படைகள் எப்படியாவது டெல் அவிவ் நகருக்குள் புகுந்து கைப்பற்றிவிட மிகவும் விரும்பி, அதனை ஒட்டியே தமது வியூகத்தை வகுத்திருந்தன.

மறுபுறம், இஸ்ரேல் ராணுவத்தின் ஆள்பலம் குறைவாக இருந்தாலும் யுத்த நேர்த்தி அவர்களுக்கு மிக இயல்பாக வாய்த்திருந்தது. யுத்தங்களைக் கையாளும் முறை, வியூகம் வகுப்பது, ஒற்றறிதல் போன்றவற்றில் இஸ்ரேலியர்கள் இயல்பான திறமை பெற்றிருந்தார்கள். இழப்புகள் அதிகம் இல்லாமல் பார்த்துக்கொள்வதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். இதனைத் தற்காப்பு யுத்தம் என்று சொல்வார்கள். ஓரெல்லை வரை தற்காப்பு யுத்தம் செய்வது, சந்தர்ப்பம் கிடைக்குமானால் புகுந்து புறப்பட்டுவிடுவது.

வானம் புகை மண்டலமாகவும் பூமி செந்நிறமாகவும் ஆனது. யுத்தம் அதன் முழு உக்கிரத்தை அடைந்திருந்தது. நடுக்கடலில் கப்பல்களை குண்டுவீசி அழித்தார்கள். போர் விமானங்கள் தாக்கி வீழ்த்தப்பட்டன. ராணுவ முகாம்களில் எறிகுண்டுகள் வீசி திகுதிகுவென்று எரியச் செய்தார்கள். கொலைவெறி ஒன்று மட்டுமே மேலோங்கியிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் இஸ்ரேலுக்கு இருந்த பயம் விலகிவிட்டது. அவர்கள், தலைநகரை அரவணைத்து நின்று போரிடுவதை விட்டுவிட்டு வெளியேறி, முன்னேறி வந்து படைகளை அடித்து நொறுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஐ.நா. போட்டுக்கொடுத்த எல்லைக் கோடுகளெல்லாம் புழுதிக்கோடுகளாகி, மறைந்தே போயின. எங்கு பார்த்தாலும் குண்டுகள் வெடித்தன. எங்கு பார்த்தாலும் பீரங்கிகள் முழங்கின. எங்கெங்கும் மனிதர்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.

இஸ்ரேலிடம் இத்தனை வீரத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையில் அரபு தேசங்கள் சற்று பயந்துபோயின என்றே சொல்லவேண்டும். எங்கிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வருகின்றன, யார் போர் யுக்திகளை வகுத்துத் தருகிறார்கள் என்பது புரியவில்லை. நேற்று உருவான இஸ்ரேலிய ராணுவத்துக்கே இத்தனை திறமை இயல்பாக இருக்கும் என்று யாரும் நம்பத்தயாராக இல்லை.

ஏதோ ஒரு பெரிய கை உதவுகிறது என்பது மட்டும் புரிந்தது. அது எந்தக் கை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

யுத்தம் அதன் உச்சகட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது ஐ.நா. தலையிட்டது. திரைப்படங்களின் இறுதியில், எல்லாம் முடிந்தபிறகு வரும் போலீஸ்காரர் மாதிரி. போர் நிறுத்தம். அமைதி ஒப்பந்தம். இத்தியாதிகள்.

அந்த அமைதி ஒப்பந்தத்தில்தான் இருக்கிறது விஷயம்.

போர் நிறுத்தம் சரி. ஆனால் எங்கே நிறுத்துவது? நவீன உலகில், எந்த தேசத்தில் எப்போது யுத்தம் நடந்தாலும் இந்த விஷயத்தை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

போர் நிறுத்தம் என்று வந்து, அதை இரு தரப்பினரும் ஒப்புக்கொள்வார்களேயானால், அந்த வினாடி வரை அவர்கள் எதுவரை முன்னேறி வந்திருக்கிறார்களோ, அந்த இடம் வரை சம்பந்தப்பட்ட தேசத்துக்குச் சொந்தம் என்பதுதான் விதி. இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த முதல் யுத்தத்தின்போது இதன் அடிப்படையில்தான் முஸஃபராபாத் உள்ளிட்ட கில்கிட்டைச் சுற்றிய வடபகுதி முழுவதும் பாகிஸ்தான் வசம் போனது. இன்றுவரை நாம் அதை பாகிஸ்தான் அபகரித்த காஷ்மீர் என்றும் அவர்கள் அதனை சுதந்திர காஷ்மீர் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.


இதே மாதிரிதான் அரபு – இஸ்ரேல் முதல் யுத்தத்தின் போதும் ஓர் ஏற்பாடு ஆனது. யுத்தத்தில் முன்னேறி வந்த எகிப்து, அப்போது காஸா பகுதியில் இருந்தது. ஆகவே, காஸா எகிப்துக்கு என்றானது. டிரான்ஸ்ஜோர்டன் ராணுவம், மேற்குக் கரை முழுவதும் வியாபித்திருந்தது. ஆகவே வெஸ்ட்பேங்க் பகுதி ஜோர்டனுக்குச் சொந்தம். இஸ்ரேல் ராணுவமும் ஐ.நா. தனக்கு வகுத்தளித்த பூமிக்கு வெளியே பல இடங்களில் வியாபித்திருந்ததால், அந்தப் பகுதிகளெல்லாம் இஸ்ரேலுடையதாகிவிட்டது.

ஆக, காஸா போயிற்று. மேற்குக் கரையும் போயிற்று. மிச்சமிருந்த கொஞ்சநஞ்சப் பகுதிகளை இஸ்ரேல் விழுங்கிவிட்டது. எனில், பாலஸ்தீன் என்பது என்ன?

அப்படியொரு தேசமே இல்லை என்று ஆனது இப்படித்தான்! நிலமெல்லாம் ரத்தம்

சனி, 12 பிப்ரவரி, 2011

இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.(falklands war)

இரும்புச்சீமாட்டியின் இறுக்கமானபிடியும் போக்லண்ட் யுத்தமும்.(falklands War)
பூமிப்பந்தின் தென் பகுதியின் தென் அட்லாண்டிக் ஆழியில் மிதக்கும் முத்துக்கள்போல ஆர்ஜென்ரீனாவுக்கு கிழக்காக உள்ள, இரு பெரியதீவுகளையும், பல சிறு தீவுக்கூட்டங்களையும் கொண்ட தீவுகளே போக்லண்ட் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

சொரசொரப்பான மெதுமையான மண்ணியல் தன்மைகளையும், பெரிய இலைகளைக்கொண்ட, இளம்பச்சை தாவரங்களையும், வர்ரஜ் என்ற நரியினம், ஸ்ராரா, ரிட்டரா போன்ற பறவை இனங்களை தன்னகத்தே தனித்துவமாக கொண்டுள்ள தீவுக்கூட்டங்கள் இவை. வெதுவெதுப்பான காலநிலை, குளிர்க்காலநிலை என இரு பெரும் காலநிலைகளின் தாக்கங்கள் இந்த தீவுக்கூட்டங்களில் உண்டு.

1880களில் இந்த தீவுக்கூட்டங்கள் பிரித்தானிய ஆளுகைக்குள் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. இதனைத்தொடர்ந்து தென் பிராந்திய யுத்தங்களின்போது பிரித்தானிய “ரோயல்” கடற்படையினரின் முக்கிமான ஒரு வலையத்தளமாக இந்த போக்லண்ட் தீவுகள் பயன்படுத்தப்பட தொடங்கின.
குறிப்பாக ஸ்கொடிஸ் இன மக்கள் இந்த தீவுகளில் குடியேறி பிரித்தானிய முடியாட்சியின்கீழ் வாழ்ந்துவரத்தொடங்கினார்கள்.
ஆனால் ஆர்ஜென்ரீனாவின் எண்ணங்கள், தமது சுதேச நில ஆளுகைகளை எண்ணி விம்மலுடனேயே இருந்து வந்தன. பல சந்தர்ப்பங்களில் இந்த நிலத்திற்கு உரிமை கோரும் வெளிப்பாடுகளை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே ஆர்ஜென்ரீனா வெளிப்படுத்த தொடங்கிவிட்டது.

இரண்டு உலக யுத்தங்களும் முடிவடைந்து, பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடுகள் சுதேசிகளிடமே கையளிக்கப்பட்டு, உலகம் தொழிநுட்பம், விஞ்ஞானம் என்பவற்றில் அதிஉச்சமாக பயணித்துக்கொண்டிருந்த 1980களின் ஆரம்பங்கள்.
உலகம் முழுவதுமே, அதிநுட்ப இலத்திரனியலில் இலகித்துக்கொண்டிருந்த காலங்கள். நாடுகாண் பயணங்களை முடித்துக்கொண்ட மனிதஇனம், கிரகம்காண் பயணங்களை ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருந்த காலங்கள்.
1982 மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்து ஆர்ஜென்ரீன கடற்படையினரின் கடல்ரோந்துகள், இந்த தீவு பகுதிகளில் அதிகரிக்கத்தொடங்கின. அந்த ரோந்துகள் மெல்மெல்ல சவுத் ஜோர்ஜியா தீவுகளை தரைதட்டி கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு சென்றன.

எப்போதுமே நிதானமாக அமைதியாக இருப்பதாக காட்டிக்கொண்டு கண்ணுக்குள் எண்ணை விட்டு கவனித்துகொண்டிருக்கும் வெள்ளைக்காரப்புத்தி இதை கவனிக்காமல் இருக்கவில்லை. மிக நிதானமாக கவனித்துகொண்டுதான் இருந்தது.
மறுபக்கம் 1982ஆம் ஆண்டு, ஏப்ரல் 02ஆம் நாள் ஆர்ஜென்ரீனா மேற்படி போக்லண்ட் தீவுகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை முழுமையாக அரங்கேற்றியது.
தீவுகள் தொடர்பான அதிகார உரிமம் தொடர்பான நூற்றாண்டு சர்ச்சைகளின் உச்சமாக இந்த நடவடிக்கைகள் அமைந்தன. ஆர்ஜென்ரீனா திடீர் என எடுத்த இந்த கைப்பெற்றல் நடவடிக்கையினால் போக்லண்ட், சவுத் ஜோர்ஜியா ஆகிய தீவுகள் ஆர்ஜென்ரீனாவின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டன.
இதை தொடர்ந்து ஆர்ஜென்ரீன வான்படை, மற்றும் கப்பல் படைகளை மேற்படி பிரதேசங்களில் எதிர்த்து முதல் நடவடிக்கையாக பிரிட்டன் பெரும் வான்தாக்குதலை தொடங்கியது.

அப்போது உலகம் இரண்டு வல்லரசுகளின் கைகளில் இருந்தது என்பது அறிந்ததே. இந்த விதத்தில் இந்த நடவடிக்கைகளை விட்டுவிட்டு ஆர்ஜென்ரீனா இதை இராஜதந்திர ரீதியில் அணுகமுன்வரவேண்டும் என்றும், யுத்தம் சரியான முடிவாக இருக்கமுடியாது. இதில் பாதிக்கப்படபோவது ஆர்ஜென்ரீனாவே எனவும், அமெரிக்கா அழுத்தமாக கூறி, ஆர்ஜென்ரீனாவை சமரை நிறுத்திவிட்டு பேச்சுக்களுக்கு வரவேண்டும் என அமெரிக்கா வலியுறத்தியது. ஆனால் ஆர்ஜென்ரீனா அதை மறுத்துவிட்டது.
தமக்கே உரிமையான தமது நிலத்தின்மேல் உள்ள பிரித்தானிய ஆளுகைக்கு எதிரான போர் இது என உலகத்திற்கு ஆர்ஜென்ரீனா அவசரமாக வியாக்கியானம் செய்தது.
மறு கரையில் சோவியத் யூனியன் ஆர்ஜென்ரீனாவின் இந்த நடவடிக்கைகளை மறுத்துவிட்டது. இராஜதந்திர ரீதியிலேயே இதை அணுகப்படவேண்டும் என சோவியத் யூனியனும் உறுதியாகச் சொல்லிவிட்டது.

ஏப்ரல் 05ஆம் நாள் “ரோயல்” கப்பற்படை என்பது எத்தனை எல்லமையானது என்பதை கண்டு ஆர்ஜென்ரீனா மட்டும் அல்ல முழு உலகமும் திடுக்கிட்டது. அட்லாலாண்டிக் சமுத்திரத்தை கிழித்துகொண்டு, பிரிட்டன் ரோயல் கடற்படையினரின் கப்பல்கள், விமானம்தாங்கி கப்பல்கள், ஏவுகணை, நாகசாகி கப்பல்கள் என வந்த கடற்படைகள், தென் சமுத்திரம் தொடங்கும் இடத்தில் இரு பிரிவாக பிரிந்து போக்லண்ட் தீவுகளையும், சவுத்ஜோர்ஜியாத் தீவுகளையும், ஆளுகைக்குட்படுத்திய ஆர்ஜென்ரீன படைகள் மீது தாக்குதல்களை நடத்தியவாறே துரப்புக்களை மள மளவென தரையிறக்கம் செய்தன. அதேவேளை பி.எம்கே, மிராஜ் 3, சொனிக், போன்ற அதிநவீன ரோயல் யுத்த விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்கு பெரும் உதவியை கொடுத்துகொண்டிருந்தன.

1880களின் பின்னர் பிரிட்டன் ஒரு நாட்டின்மீது தனித்து நின்று யுத்தம் செய்த ஒரு வரலாறாக இது பொறிக்கப்பட்டது. அடிக்கு உடனடியாக பெரும் பதிலடி கொடுத்து தான் இரும்புச்சீமாட்டிதான் என்பதை நிரூபித்துக்காட்டினார் அப்போதைய பிரிட்டன் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர்.
இந்த யுத்தம் பற்றி இரு நாடகளுமே எந்தவிதமான முன்னறிவிப்பையும் விடவில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது. அடுத்ததாக முக்கிமான விடயம் இது எந்த நிலத்திற்காக யுத்தமோ அந்த நிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. அதை தவிர நாடுகளின் குரோதங்களை இரு நாடுகளுமே இரு நாடுகளின் வேறு பகுதிகளை தாக்கி காட்டவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டியதே.

ஒரு கட்டம் வரை எதிர்த்த ஆர்ஜென்ரீனாவால் பிரிட்டனின் தொடர்ந்த ஓயாத அதிரடி நடவடிக்கைகளை தாங்கமுடியவில்லை. அத்தோடு பெருமளவிலான ஆர்ஜென்ரீன படையினர் பிரிட்டனின் முற்றுகைக்குள் கொண்டுவரப்பட்டனர்.
ஆர்ஜென்ரீன படைகள் சரணடைவதாக அறிவித்த உடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. பெருமளவிலான ஆர்ஜென்ரீன முப்படையினரும் பிரிட்டன் படைகளிடம் சரண்புகுந்தன.
1982 ஜூன் மாதம் 17ஆம் நாள் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
74 நாள் யுத்தம் என வர்ணிக்கப்படும் இந்த யுதத்தத்தில் 257 பிரித்தானிய முப்படையினரும், 647 ஆர்ஜென்ரீன முப்படையினரும், மூன்று சிவிலியன்களும் இறந்தனர். ஆனால் இங்கு இடம்பெற்ற யுத்தத்தின் தன்மைகள், யுத்தத்தின் மூர்க்கம் என்பவற்றுடன் ஒப்பிடுகையில் இறந்தவர்கள்தொகை குறைவானதே.

மீண்டும் போக்லண்ட் தீவுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த பிரிட்டன் இப்போ நீங்கள் இதை படிக்கும்வரை அதை தனது நிர்வாகத்தின்கீழேயே வைத்திருக்கின்றது. போக்லண்ட் தீவுகளில் வசிப்பவர்கள், பிரிட்டன் பிரஜைகளாகவே கருதுப்பட்டுவருகின்றார்கள். அதேவேளை அவர்கள் ஆர்ஜென்ரீன குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கும் தகுதியும் உள்ளவர்கள்.
போக்லண்ட் யுத்தத்தின் பின்னர் இரு நாட்டு கலாச்சாரத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. முக்கியமாக ஆர்ஜென்ரீன நாட்டு மக்களின் கலாச்சாரம் பெரும் மாற்றத்தை அடைந்தது. அந்த யுத்தத்தின் தாக்கம் பெரிதும் மக்களால் உணரப்பட்டது. இந்த யுத்தம் தொடர்பான திரைப்படங்கள், பாடல்கள், விபரணங்கள் என்பன பெரிதும் வெளிவரத்தொடங்கின.
இன்றும் போக்லண்ட் தீவுகளில் வாழும் மக்களிடையே இந்த யுத்தம் பற்றிய பேச்சு உண்டு.

இந்த யுத்தின் பின்னர் இதுவரை ஆர்ஜென்ரீன இந்த நிலத்தின் உரிமம் தொடர்பான அறிவுப்புக்களை கொண்டுவரவில்லை. ஆனால் இந்த யுத்த வெற்றிமூலம் அதிக அரசியல் லாபம் மட்டும் அடைந்தவராக அன்றி, பிரித்தானிய மக்களால் போற்றப்பட்டார் பிரதமர் மார்க்கிரேட் தட்ஷர். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வெற்றிக்கு அவருக்கு இந்த போக்லண்ட் யுத்தம் பெருமளவில் கைகொடுத்தது.
ஆனால் மறுகரையில் பிரித்தானிய – ஆர்ஜென்ரீன நாடுகளின் இராஜதந்திர உறவில் கரும்புள்ளி விழுந்தது. இருந்தாலும் 1989ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மீண்டும் சீர்அமைக்கப்பட்டன.
ஒரு குடையின் கீழான மாநாடு என்ற தொணியில் முக்கியமான மாநாடு ஒன்றும் இடம்பெற்றது.

இன்று போக்லண்ட் தீவுகள், பெருமளவில் அபிவிருத்தி கண்டு, பிரபலமான உல்லாசவிடுதிகள், உல்லாச மையங்களை கொண்டுள்ளன. உல்லாசப்பிரயாணம், மற்றும் நவீன மீன்பிடி என்பன இந்தப்பிரதேசத்தில் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன. இன்று இந்த பிரதேசத்துடன் ஆர்ஜென்ரீனா மிகவும் சினேகிதமாகவே உள்ளது என்பதும் இந்த கட்டுரையை முடிக்க ஒரு சுபமாக உள்ளது.- janavin

புதன், 9 பிப்ரவரி, 2011

வைரத்தின் வரலாறு - 2

சாலிடேர்(Solitaire) என்றால் என்ன ?

சாலிடேர் என்பது ஒற்றை வைரத்தைக் குறிக்கும் ஆங்கில வார்த்தை, 33 சென்ட் மற்றும் அதற்கு அதிகமான எடையுள்ள வைரங்களைத்தான் சாலிடேர் என்று குறிப்பிடுவார்கள்.

விவிஎஸ் வைரங்கள் என்றால் என்ன ?

விவிஎஸ் (VVS) என்றால் very very small inclusions என்கிற ஆங்கில வார்த்தையின் சுருக்கம். அதாவது மிகச் சிறிய, சாதாரணமாகக் கண்ணுக்குத் தெரியாத, லென்ஸை வைத்துப் பார்த்தால் மட்டுமே தெரியக்கூடிய வைரத்தின் உள்ளேயே இணைந்து வளர்ந்துள்ள கனிம, அல்லது வேதிப் பொருளின் (மிகச்சிறிய) துகள்களோ, துணுக்குகளோ ஆகும். இதனால் வைரத்தின் ஜொலிப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. இது தவிர இன்னும் பெரிய துகள்களை VS1, VS2 என்பார்கள்.

அதன் உள்ளே உள்ள துகள்களின் அளவை பொறுத்து குறியீடுகளும் மாறிக் கொண்டே போகும்.

பூமியில் இருந்து எடுக்கப்படும் எல்லா வைரங்களும் நகை செய்யப் பயன்படுமா?

இல்லை. 40-50 சதவீதம் வைரங்கள் மட்டுமே நகை செய்யப்பயன்படும். அவை 4Cs என்கிற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் தரம் குறைந்த மற்ற வைரங்கள் தொழிற்சாலை உபயோகத்திற்கு பயன்படும். இவை Industrial Diamonds எனப்படும்.

Industrial Diamonds – என்றால் என்ன ?

நகை செய்யப் பயன்படாத வைரங்கள் பலவித தொழிற்சாலை உபகரணங்களுக்கு பயன்படும். ஏனென்றால் அந்த வைரத்தின் தன்மை என்றுமே மாறாது. அவை சாணைக்கல்லில் அடைப்புகளை நீக்கும் கருவிகள் (Dressing Tools), கண்ணாடிகள் வெட்டும் கைக்கருவிகள் (Glass Cutter), லேத்மெஷினில் ஸ்டீல் பாகங்களை வெட்டும் கருவிகள் (Cutting Tools), அறுவை சிகிச்சை செய்யும் கைக்கருவிகள் (Operation Instruments), இன்னும் பலவற்றில் உபயோகிக்கப்படுகிறது. இதன் துகள்களை சாணைக்கல்லில் பதித்து வைரத்தை பட்டை தீட்ட பயன்படுத்தலாம். இப்படி பலவற்றில் பயன் படுத்தலாம்.

4Cs என்றால் என்ன?

பல நாடுகளில் வைரங்களின் தரத்தைக் குறிப்பிட வெவ்வேறுவிதமான வார்த்தைகளை குறிப்பிட்டு வந்தார்கள். உலகளவில் ஒரே தர நிர்ணயம் செய்வதற்காக (நிமிகி) ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடிட் ஆப் அமெரிக்கா 4சி என்கிற முறையை அறிமுகப்படுத்தியது. அது பின்வருமாறு.

1.CLARITY, 2. COLOUR, 3. CAROT, CUT

1.CLARITY (தெளிவு)

வைரத்தை மேலிருந்து உள்ளே பரிசோதித்து பார்க்கும் போது ஏதேனும் வேதிப் பொருள்களோ கனிமப் பொருள்களோ உள்ளடங்கி இருக்கிறதா என்பதை பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படும். அது எந்தவிதத்திலாவது அதன் ஜொலிப்பை பாதித்தால் வைரத்தின் விலை குறையும்.

2. COLOUR (நிறம்)

வைரம் சுத்த வெள்ளையாக அதாவது நிறமற்றதாக (தெளிந்த நீரோடை போல்) இருந்தால் நல்ல தரமானது. நிறம் சற்றே மாறுபட்டு கொஞ்சம் பழுப்பு நிறம் அல்லது மஞ்சள் நிறம் கொண்டதாக இருந்தால் தரம் குறைவாகும். தெளிவான கற்களே சிறந்தவை.

3. CAROT (எடை)

100 சென்ட் = 1 கேரட் இது வைரத்தின் எடையை குறிக்கிறது. வைரக் கல்லின் எடையை பொறுத்து அதன் விலை நிர்ண யிக்கப்படும்.

4. CUT (பட்டை தீட்டப்பட்டுள்ள முறை)

வைரக்கல் எந்த முறையில் பட்டை தீட்டப்பட்டுள்ளதோ அதை பொறுத்து விலை நிர்ணயிக்கப் படும். பட்டை சரியாக தீட்டப் படாமல் இருந்தால் வைரத்தின் விலை குறைந்து விடும்.

இந்த நான்கு C க்கள் (4 Cs ) வைரம் தேர்வு செய்வதற்கான அடிப்படையாகும்.

தங்கக் கேரட் வைரக் கேரட் இரண்டும் ஒன்றுதானா ?

வைரத்தில் கேரட் (CAROT) என்கிற வார்த்தை அதன் எடையைக் குறிக்கும். தங்கத்தில் கேரட்(Karatage) என்கிற வார்த்தை தங்கத்தின் தரத்தைக் குறிக்கும்.

உ.ம் 24 கேரட் என்றால் 100$ சுத்தத் தங்கம் அதே 24 கேரட் வைரம் என்பது அதன் எடையைக் குறிக்கும் இரண்டும் வேறு வேறு பொருள் (Meaning) கொண்டவை.

வைரத்தில் `ரத்தப்பந்து` என்றால் என்ன?

வைரம் வளரும் போது ஆயிரத்தில் ஏதாவது ஒரு கல்லில் அதனோடு சேர்ந்து சிவப்பு நிறத்தில் (மாதுளம் பழத்தின் முத்து நிறத்தில்) கார்னெட் (Garnet) என்கிற ஒருவகை ரத்தின கல்லும் சேர்ந்தே வளரும். வைரத்தை பட்டை தீட்டிய பிறகு இந்த சிவப்பு நிறம் நன்றாக தெரியும். இதை நம் ஊர் வியாபாரிகள் `ரத்தப்பந்து` என்பார்கள்.

டீபியர்ஸ் (De Beers) வைரங்கள் என்றால் என்ன?

1876ம் ஆண்டு ஜோஹன்னாஸ் டீபியர்ஸ் மற்றும் ஆர்ணால்டஸ் டீபியர்ஸ் சகோதரர்களுக்கு சொந்தமான பண்ணை நிலத்தில் ஏராளமான வைரங்கள் கிடைத்தன. ஆப்பிரிக்காவில் இந்த இடத்தை ஸெஸில் ரோட்ஸ் (Cecil Rhodes) என்பவர் வாங்கி வைரங்களை தோண்டி எடுத்து பெரும் செல்வந்தர் ஆனார்.அந்த நிறுவனத்துக்கு டீபியர்ஸ் மைனிங் கம்பெனி என்று பெயரிட்டார். இது 1880 ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி துவங்கப்பட்டது.

இன்று உலக வைர வியாபாரத்தில் 75சதவீதத்திற்கும் மேலாக இந்த நிறுவனம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதில் ஆச்சரியமான தகவல் என்னவென்றால் De Beers சகோதரர்கள் இங்கிருந்து வைரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே இந்த நிலத்தை சுமார் 500 டாலருக்கு விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

ஹார்ட்ஸ் ஆரோஸ் வைரம் (Hearts and Arrows Diamonds) என்றால் என்ன?

சிறந்த பொறியியல் நுணுக்கத்துடன் ஒவ்வொரு பட்டையையும் குறிப்பிட்ட விகிதத்தில் சிறப்பாக தீட்டப்பட்ட வைரத்தை டைமண்ட் ஸ்கோப் என்ற கருவியின் மூலமாக பார்த்தால், அதனுள்ளே இருதயம் போலவும், அம்பு போலவும் துல்லியமாகத் தெரியும். இந்த வைரங்கள் அதிக ஜொலிப்புடன் விளங்கும் அதைத்தான் மேற் கண்டவாறு குறிப்பிடுக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் வைரங்கள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது?

தென் ஆப்பிரிக்காவில் 1866ல் எராஸ்மஸ் ஜேக்கப் என்ற சிறுவனும் அவன் தங்கையும் ஆரஞ்சு நதியின் கரையில் விளையாடும் போது ஒரு பளபளப்பான கல்லைப் பார்த்து, அதை வீட்டுக்கு விளையாட எடுத்துச் சென்றனர். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த போயர் என்ற ஆங்கிலேயர் அவர்களது தாயாரிடம் அந்த கல்லை விலைக்குத் தருவீர்களா? என்று கேட்க, அவளோ பணமெல்லாம் வேண்டாம் என்று இலவசமாகவே கொடுத்துவிட்டாள். பிற்பாடு அதை (Boer)பரிசோதித்ததில் அது மிக அருமையான வைரம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. பட்டைத் தீட்டாத கல்லின் எடை 21.23 காரட் இருந்தது. பட்டை தீட்டியபின் 10.73 காரட்டில் அருமையான வைரமாய் ஜொலித்தது. இதற்கு “யுரேகா” என்று பெயரிட்டனர். (அதாவது புதிய கண்டுபிடிப்பு என்று பொருள்). இது தான் ஆப்பிரிக்காவின் வைரக் கண்டுபிடிப்புக்கு ஆரம்பம் இந்த வைரம் தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லி மிசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

விலைஉயர்ந்த வைரங்கள் வாங்கும் போது தரத்தை எப்படி அறிந்து கொள்வது?

இதற்கென்றே சில சட்ட திட்டங்கள், தரக்கட்டுப்பாடு முதலியவற்றை வகுத்து. அதை தர உறுதி செய்து சர்டிபிக்கேட் கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட கல்லும் முழுவதும் சீல் செய்யப்பட்டிருக்கும். அதில் கல்லுடைய எடை, நிறம், பட்டையின் விகிதம் முதலிய எல்லாமே குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்காக பல அமைப்புகள் உலக முழுவதுமுள்ளன. சான்றிதழ் பெற்ற கல்லை நகையில் வைத்து பதித்த பிறகு, அது அதே கல்தானா, என்று எப்படி அறிவது?

இதற்கும் ஒரு முறை உள்ளது. அந்தக் கல்லின் பட்டையின் மேல் பகுதியும், கீழ்பகுதியும் சந்திக்கும் இடத்தை கர்டில் (GIRDLE)என்று குறிப்பிடுவோம். அந்த இடத்தில் லேசர் கதிரின் (LASER) மூலமாக ஒரு அடையாள நம்பரை எழுதி விடுவார்கள். அதை அழிக்கவே முடியாது. லென்ஸ் வைத்து பார்த்தால் தெரியும்.

தேடல் சாதனங்களில் இது அரசன்

ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனை www.searchko.in என்ற முகவரியில் பெறலாம்.
இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் பெரும்பாலோர் பயன்படுத்தி வருகிறோம். கூகுள் தளத்தில் தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் தேடிப் பெறும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இப்போது தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழில் ஒரு தேடல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி, ஒலியியல் அமைப்பில் கீகளை அழுத்தி, தேடலுக்கான சொற்களை உருவாக்கித் தேடலாம். அல்லது இதில் தரப்பட்டுள்ள விசைப்பலகையை கிளிக் செய்து, அதன் மூலம் சொற்களை டைப் செய்தும் தேடலாம். (கீ போர்டு வழக்கமான கீ போர்டாக இல்லாமல் சற்று மாற்றாக உள்ளது. பழகிவிட்டால் சரியாகிவிடும்)
தேடல், மருத்துவம், இலக்கியம் எனப் பெரிய பிரிவுகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் தேவையானததைத் தேர்ந்தெடுத்து நாம் தேடும் தகவல்களைப் பெறலாம். தினமலர் உள்பட மூன்று தமிழ் தினசரி செய்தித் தாள்களுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து செய்திகள் கிடைக்கின்றன.
இந்த தளத் தேடலில், இயற்கை மொழி ஆய்வில் பயன்படுத்தப்படும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இணைய வெளியில் ஏறத்தாழ ஒரு கோடி தமிழ் ஆவணங்கள் உள்ளன. இவற்றை ஒருமுகப்படுத்தி, தேடலுக்கு உட்படுத்தி, தேடல் தேவைகளை நிறைவேற்றுவதே இந்த தளத்தின் நோக்கம் என இதில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ÷ஷாபா கூறினார்.
ஆங்கிலம்–தமிழ் மற்றும் தமிழ்–ஆங்கிலம் அகராதிகள் தரப்பட்டுள்ளன. இந்த அகராதிகளில் ஏறத்தாழ 1.5 லட்சம் வேர்ச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திச் சொற்களுக்குப் பொருள் தேடிப் பெறலாம்.
இலக்கியப் பிரிவில் தமிழ் இலக்கியங்கள் உள்ள தளங்களின் பட்டியலைப் பெற்று அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தேடுதல் தளம் இன்னும் சோதனைப் பதிப்பு நிலையில் தான் உள்ளது. பிழை திருத்தி போன்றவை விரைவில் சரி செய்யப்பட்டு மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
சரி, அது என்ன “சர்ச் கோ’ என்ற ஐயம் உங்களுக்கு வரலாம். இங்கு “”கோ” என்பது தமிழ்ச் சொல். அரசன் என்ற பொருளைத் தரும். தேடல் சாதனங்களில் இது ஒரு அரசனாக இயங்கும் என்று பொருள் தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் கொண்டு வந்துள்ள இந்த முயற்சியை வரவேற்போம். Thank - (Searchko)

திங்கள், 7 பிப்ரவரி, 2011

உலக கிண்ண கிரிக்கெட் : ஹாட்ரிக் சாதனையாளர்கள்


1975-ல் தொடங்கி 2007 வரையிலான 9 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5 வீரர்கள் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியாவின் சேத்தன் சர்மா, பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக், இலங்கையின் சமிந்தா வாஸ், அவுஸ்திரேலியாவின் பிரட் லீ, இலங்கையின் லசித் மலிங்கா ஆகியோரே அந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள். அதிலும் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியவர் என்ற பெருமை இந்தியாவின் சேத்தன் சர்மாவையேச் சாரும்.

1987-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் நாகபுரியில் நடந்த லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்த போது, சேத்தன் சர்மாவை பந்துவீச அழைத்தார் கபில்தேவ். அப்போது பேட்டிங் செய்த ரூதர் போர்டை கிளீன் போல்டு ஆக்கி வெளியேற்றினார் சர்மா.
அதன் பிறகு வந்த இயன் ஸ்மித்தை கிளீன் போல்டு ஆக்கவே, சேத்தன் ஹாட்ரிக் வாய்ப்பை நெருங்கினார். அடுத்த பந்திலும் விக்கெட் வீழ்த்தி சர்மா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவாரா என்று எதிர்பார்ப்பில் இந்திய ரசிர்கள் உறைந்துபோயிருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

அடுத்து வந்த இவென் ஷட்பீல்டையும் கிளீன் போல்டு ஆக்கி ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார் சர்மா. இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் ஹாட்ரிக் சாதனையைப் படைத்து இந்தியாவுக்கு அவர் பெருமை சேர்த்தார். மூன்று விக்கெட்டுகளையும் போல்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்த ஒரே வீரர் சேத்தன் சர்மா மட்டுமே.

சக்லைன் முஷ்டாக்: 1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். இதன்மூலம் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

40-வது ஓவரை வீசிய சக்லைன் முஷ்டாக், அந்த ஓவரின் முதல் பந்தில் ஹென்றி ஓலங்காவையும், இரண்டாவது பந்தில் ஹக்கிளையும், மூன்றாவது பந்தில் பங்வாவையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இதில் ஓலங்கா, ஹக்கிள் ஆகியோர் அப்போதைய பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் மொயின்கானால் ஸ்டம்ப்டு முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்டனர். பங்வா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

சனி, 22 ஜனவரி, 2011

உலக தொழுநோய் ஒழிப்பு நாள்

உலக தொழுநோய் ஒழிப்பு நாள் - தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கைகள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மத்தியில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும், இந்நோயால் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவோர் இடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்துவதும் இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கமாகும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் சமுதாயத்தில் மரியாதையுடன் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தொழுநோய் ஒழிப்பு தினத்திலும், இந்நோயால் பாதிக்கப்பட்டோரிடையே ஒருங்கிணைப்புக்கு புனிதமான அணுகுமுறையை உறுதி செய்யவும் வலியுறுத்தப்படும்.

தொழுநோய் ஏற்பட்டவர்களுக்கு முகம் பாதிப்புக்குள்ளாவதுடன் தோல், நரம்புகளும் பாதிக்கப்படுவதால் அகோரமான தோற்றம் ஏற்படுகிறது.

சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவரை கண்கள், கைகளும் பாதிக்கப்படுகின்றன. தொழுநோய் என்பது ஒரு தொற்று நோயாகும். மூக்கு, வாய் மூலம் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இந்நோய் தொற்றுநோய் என்பதால், தொழுநோயாளிகளை சமுதாயத்தில் இருந்து புறக்கணிக்கும் நிலை உள்ளது. எனவே தொழுநோய் என்பது அறியப்பட்டவுடன் உடனடி தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்நோய் ஏற்பட்டவர்கள் சிறப்பு உடைகளை அணிவதுடன் பொதுமக்கள் புழங்கக்கூடிய சந்தை, கோயில்கள் போன்ற இடங்களில் அனுமதிக்கப்படுவதில்லை.

உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரையின்படி மல்டி டிரக் தெரபி எனப்படும் சிகிச்சை தற்போது தொழுநோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தொழுநோய் பரவுதல் தடுக்கப்படுகிறது.

துவக்க நிலையிலேயே கண்டறிந்தால், இந்நோயை குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் கை, கால்கள் ஊனம் அடைவதில் இருந்து தடுக்கலாம்.

உலக அளவில் தொழுநோய் பரவு விகிதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4 விழுக்காடு குறைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் தொழுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.

தொழுநோய் ஒழிப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. என்றாலும் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழுநோய் குறித்து மக்கள் உடனடியாக தெரிவிப்பதுடன், இந்நோயை விழிப்புணர்வுடன் இருந்தால் குணப்படுத்தலாம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

தொழுநோயைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், அரசும் பல தடுப்பு மற்றும் குணப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தொழுநோய் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் நோய் குறித்த பிரசாரம் செய்வதுடன் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவதற்கும் விழிப்புணர்வு அவசியமாகிறது.

தொழுநோயை ஒழிக்க நடவடிக்கைகள்:

தொழுநோய் என்பது ஒரு பொது சுகாதார பிரச்சினையாக உள்ள ஊரகப் பகுதிகளில் அரசின் ஆதரவுடன் இந்நோயை ஒழிக்க வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு தொழுநோயாளிக்கும் சிகிச்சை கிடைப்பதற்கு முழு அளவிலான ஒருங்கிணைப்பு தேவை. இதன்மூலம் இந்நோயை முற்றிலுமாக ஒழித்து விட முடியும்.

தொழுநோயை முற்றிலுமாக போக்குவதற்கு, ஆதரவு குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து தங்களின் ஒத்துழைப்பை நல்க வேண்டியது அவசியம்.

தொழுநோய் இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தெரிவிப்பதோடு, விரைவான சிகிச்சை எடுத்துக் கொள்தல் வேண்டும். தொழுநோய் குறித்த கருத்து உலக அளவில் மட்டுமல்லாது, உள்ளூர் நிலையிலும் மாற வேண்டும்.

தொழுநோயை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வதற்குரிய புதிய சூழ்நிலை நோயாளிகளுக்கு ஏற்பட வேண்டியதும் அவசியம்.

மல்டி டிரக் தெரபி சேவைகள் அனைத்து தொழுநோயாளிகளுக்கும் தடையற்ற வகையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். எளிதான, நட்புரீதியான மருந்து டெலிவரியும் அவசியமாகிறது.