வியாழன், 8 மார்ச், 2018

ஆந்திர அமைச்சரவையிலிருந்து பாஜக அமைச்சர்கள் விலகல் சந்திரபாபு நாயுடுவுக்கு பதிலடி

சந்திரபாபு நாயுடுவுக்கு பாரதீய ஜனதா கட்சி பதிலடி கொடுக்கும் விதமாக ஆந்திர அமைச்சரவையிலிருந்து 2 பாஜக அமைச்சர்கள் பதவி விலகி உள்ளனர். #ChandrababuNaidu

கடந்த 2014–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் 2-ஆக பிரிக்கப்பட்டு புதிதாக தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம்–பா.ஜனதா கூட்டணி வென்றது. சந்திரபாபு நாயுடு முதல்–மந்திரி ஆனார். தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா  ராஷ்டிர சமிதி ஆட்சியை கைப்பற்றியது.

ஆந்திரா பிரிக்கப்பட்டபோது செழிப்பான ஐதராபாத் நகரம் தெலுங்கானாவுக்கு சென்றுவிட்டது. மேலும் புதிய தலைநகரை (அமராவதி) உருவாக்கவேண்டிய நெருக்கடியும் ஆந்திராவுக்கு ஏற்பட்டது. இதனால் அப்போதைய தேர்தல் பிரசாரத்தின்போது, நாங்கள் வெற்றி பெற்றால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்போம் என்ற வாக்குறுதி அந்த கூட்டணியின் சார்பில் அளிக்கப்பட்டது. 

மத்திய மந்திரிசபையில் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூவும் (விமான போக்குவரத்து), ஒய்.எஸ்.சவுத்ரியும் (தகவல் தொழில்நுட்பம்) இடம் பெற்று உள்ளனர்.

4 ஆண்டுகள் ஆகியும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக  பா.ஜனதா தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தெலுங்கு தேசம் அதிருப்தி அடைந்தது. 

இதனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சந்திரபாபு நாயுடு நேற்று இரவு விஜயவாடா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது  மத்திய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மந்திரிகள் அசோக் கஜபதி ராஜூவும்,  ஒய்.எஸ்.சவுத்ரியும் வியாழக்கிழமை இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்தார்.

பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகவும் தீர்மானித்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மத்திய மந்திரிசபையில் இருந்து விலகும் முடிவை பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தான் தெரிவிக்க முயன்றதாகவும், ஆனால் முடியவில்லை என்றும் பேட்டியின் போது சந்திரபாபு நாயுடு கூறினார்.

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்த சந்திரபாபு நாயுடுவுக்கு பாரதீய ஜனதா கட்சி பதிலடி கொடுத்து உள்ளது. மத்திய அமைச்சர் பதவி விலகலுக்கு முன்பாக  ஆந்திர அமைச்சரவையிலிருந்து பாஜக அமைச்சர்கள் 2 பேர் பதவி விலகினர்.